
Tuesday, December 25, 2007
பரசுராம ஜெயந்தி....

Friday, December 21, 2007
மார்கழி நீராட்டு....

Wednesday, December 12, 2007
பாவை நோன்பு....


[அன்னை பராசக்தி, காத்யாயன மகரிஷியின் மகளாக பிறந்தாளாம், அப்போது அவளது பெயர் காத்யாயினி. (இதுவே பின்னர் திரிந்து காத்தாயி என்றானதோ?) திருவிழிமிழலை கோவில் அம்பிகை பெயர் காத்யாயினி. அன்னையின் 51 பீடங்களில் இவள் ஒட்டியாண பீடத்திற்கு உரியவளாக சொல்லப்படுவள்]
பாவை நோன்பை பற்றி திருப்பாவையில் நிறைய குறிப்புக்கள் காணக் கிடைக்கிறது. நோன்பிற்கு உரிய செயல்களை "கிரிசைகள்" (கிரியைகள்) என்கிறார் கோதை. நோன்பிற்கான உறுதியாக சில கிரியைகள் ஏற்றுக் கொண்டும், சில கிரியைகளை விடுத்தும் செயல்படுவதாக சங்கல்பம் செய்கிறார். பாவை நோன்பிருக்கையில் கோதை விலக்கியவையாக குறிப்பிடுவது இரண்டாம் பாடலில் வருகிறது.பால், நெய் உண்ணுதல், கண்களுக்கு அஞ்சனமிடுதல், மலரலங்காரம் செய்துகொள்ளல், மற்றும் பிறருக்கு தீமை செய்யாதிருத்தல், சூரிய உதயத்திற்கு முன் நீராடுதல், தான-தருமம் செய்தல் என்று எப்போதும் கடைபிடிக்க வேண்டிய சில நன்நெறிகளையும் சேர்த்து சங்கல்பித்துக் கொள்கிறாள்.
ஆயிற்று நோன்பிற்கான சங்கல்பம், இனி சிரத்தையுடன் தொடர வேண்டுமே?. உடனேயே நோன்பின் பயனை கூறி எல்லோருக்கும் சிரத்தையினை வரவழைக்கிறார் மூன்றாம் பாடலில். என்ன பலனாம்?, நாடெங்கும் தீங்கு இன்றி இருக்கும், மாதம் மும்மாரி பொழியும், செந்நெல் சிறப்பாக விளையும், பசுக்கள் நிரம்பப் பால் கறக்கும், எங்கும் செல்வம் நிறையும் என்று மக்களின் ஜீவாதாரத்திற்கு வேண்டியவற்றை பலனாக கூறி உற்சாகப்படுத்துகிறாள். பின்னர் இருபதாம் பாடலில் நோன்பு முடிக்க வேண்டி பொருட்களான விசிறி, கண்ணாடி போன்றவற்றை பெரிய பிராட்டியிடம் கேட்கிறார். மேலும் இருபத்தாறாவது பாடலில் நோன்பு முடிப்பதை கொண்டாட வெண்சங்கம், பறைகள், மங்கள விளக்கு, கொடி, விதானம் எனப்படும் மேல் கூறை விரிப்பு ஆகியவற்றை கேட்கிறார். பின்னர் 27ஆம் பாடலில் நோன்பின் சன்மானமாக சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் போன்ற பலவிதமான நகையலங்காரங்களும் புத்தாடைகளும் அணிந்து அக்காரவடிசல் எனப்படும் பால்சோறு உண்பார்களாம். அதுவும் எப்படி?, அந்த அக்காரவடிசல் தெரியாதவாறு நெய் மூ(டி)ழ்கியிருக்க, அதனை உண்கையில் அந்த நெய் முழங்கை வரை வழிய உண்பார்களாம். ஆக பாவை நோன்பினை எப்படி கொண்ட வேண்டுமென பாடி, கொண்டாடி காட்டியிருக்கிறாள் கோதை.
இவை தவிர பழங்காலத்தில் பெண்கள் கணவனின் ஆயுள் விருத்திக்காக பல நோன்புகள் நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் குறிப்பாக மார்கழி, தை, மாசி மாதங்களில் நடந்த நோன்புகளாவன; நித்திய சிருங்கார நோன்பு, பொம்மை நோன்பு, அட்லத்தி நோன்பு (தெலுங்கு பேசும் மக்கள் இன்றும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்), சிட்டிப் பொட்டு நோன்பு போன்றவை.
Tuesday, December 11, 2007
மார்கழியின் மகிமை...


Monday, December 10, 2007
மார்கழி திங்களல்லவா.....
பாவை நோன்பிருந்தாளாமே கோதை?...அதென்ன பாவை நோன்பு?
ஆமாம், இரண்டு பாவைகளிலும் இணையான கருத்துகள் என்று ஏதேனும் இருக்கா?
25 முக்தி நிலை / ஜோதியில் கலத்தல்.
பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணத்தை தழுவியே ஆக வேண்டும். இதனை தடுக்க முடியாது. ஆனால் மறுபடி பிறவி ஏற்படாமல் தடுப்பது நம் கையில்தான் இருக்கிறது. முக்தி, பிரம்மத்துடன் இணைவது, ஜோதியில் கலப்பது என்றெல்லாம் சொல்வது நடக்க வேண்டுமானால் இறந்தால்தான் முடியுமா?. உயிருடன் இருக்கும் போதே பிரும்ம ஞானியாக முடியும், அதனையே வள்ளலார் பெருமான் மரணமில்லா பெருவாழ்வு என்கிறார். இதனைத்தான் "பிறவாமை" என்று காரைக்கால் அம்மையாரும், பட்டினத்தாரும் சொல்லியிருக்கிறார்கள். சங்கரர், ரமணர் போன்ற பல முனி ஸ்ரேஷ்டர்களும் இதனைக் விளக்க முற்பட்டுள்ளனர்.
எனக்கு நல்லதோரு தந்தையாக மட்டுமல்லாது, பிரம்மோபதேசம் செய்வித்து குருவாகவும், குப்தமாக ஸ்ரீவித்யா பற்றிச் சொல்லிக் கொடுத்து ஆசானாகவும் என்னை வழிந்டத்தி வ்ந்த என் தந்தை ஸ்ரீ வி.ஆர். கணபதி, இன்று மதியம் 2 மணி அள்வில் ஸ்ரீபுரம் அடைந்தார். அன்னை மீனாக்ஷி அவரது ஆத்மா சாந்தி அடைய அனுகிரக்கட்டும்.
Monday, December 3, 2007
ஹரிவராசனம்

ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
பாடலைக் கேட்க இங்கே சுட்டவும் (பதிவர் திரு. சதங்காவிற்கு நன்றி.)
Monday, November 19, 2007
அந்திரி சூட்டக் கனாக் கண்டேன்....

இந்திரன் உள்ளிட்ட தேவர்குழாம் எல்லாம்
வந்திருந்தென்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்.
"சத்" என்பது சகலத்துக்கும் சத்தியமாக உள்ள பரமாத்மா. இந்த பரமாத்மாவுடன் 'சித்' இணைந்து கிடைக்கும் ஆனந்தமே சச்சிதானந்தம். சித் என்பதே சைதன்யம். அதாவது ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் பரமாத்ம ஸ்வருபமாக இருப்பது. இந்த சத்-சித்-ஆனந்த நிலையினை கூறும் அன்னையின் நாமா, "சிதக்னி குண்ட சம்பூதா". அதாவது நமது 'சித்'திலே நாம் அவளை நினைத்துச் செய்கின்ற பிரார்த்தனை எனப்படும் யாகத்தில் தோன்றுபவள் சிதக்னி குண்ட சம்பூதா. இவ்வாறாக தோன்றியவள் நமக்கு தேவ உணர்வினை, அதாவது சத்-சித் ஆனந்தத்தை அளிப்பதால் தேவ-கார்ய-சமுத்யதா.
பண்டாசுர வதம் நடப்பதற்காக தேவர்கள் அன்னையை வழிபட்டனர். அப்போது தேவர்களை பண்டாசுரனிடமிருந்து காக்கும் பொருட்டு (தேவகார்ய சமுத்யதா), அன்னை அந்த தேவர்கள் செய்த யாக குண்டத்திலிருந்து வந்தாளாம். அதுவும் வரும் போதே 16 வயது இளமங்கையாக வந்தாளாம்.
இதனாலும் அவள் "சிதக்னிகுண்ட சம்பூதா - தேவகார்ய சமுத்யதா"
இதில் சிதக்னிகுண்ட சம்பூதா என்பது ஒரு நாமா, தேவ-கார்ய சமுத்யதா என்பது அடுத்த நாமம்.
Monday, October 29, 2007
சதுர்பாஹு சமன்விதா

பாசம் என்றால் கயறு. எமன் கையில் பாசம் இருக்கிறது என்று சொல்லாது பாசக் கயறு இருக்கிறது என்று கயற்றினை அழுத்தமாக இருதரம் உறைக்கிறோம். பாசம் என்றால் கட்டுவது, உலகியல் பந்தாத்தால் ந்ம்மை கட்டுகிறாள் அன்னை. அந்த பந்ததை எப்படி விலக்குவது?, அதற்குத்தான் அங்குசம் அந்த அங்குசம் எப்படிப்பட்டதாம்?, ஜ்வலிஜ்வலிக்கும் அங்குசமாம். எப்போதும் பளபளப்பான ஆயுதம் என்பது நன்கு தீட்டப்பட்டதாகத்தான் இருக்கும். எனவே உஜ்வலமான அங்குசம். சரி, குரோதம் எப்படி வந்தது?, எந்த பந்தமும் குரோதம் உருவாவதால் அழிந்துவிடும். எனவே நம் அன்னை மாயயையால் வரும் பந்தத்தை குரோதத்தால் அழித்து நம்மை வழிப்படுத்த அங்குசத்தை கொண்டிருக்கிறாளாம்.
ஆக இந்தப் பதிவில் அன்னையின் 5 நாமங்களைப் பார்த்துவிட்டோம். அன்னை ஏன் அபய-வர முத்திரைகளை காட்டவில்லை என்பதை ஆதிசங்கரர் செளந்தர்யலஹரி 4ஆவது ஸ்லோகத்திலேயே சொல்லிவிட்டார்.
Sunday, October 28, 2007
ஸ்ரீ மஹாராக்ஞி

Friday, October 26, 2007
ஸ்ரீ மாதா

லலிதா சஹஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகம் ஆரம்பிப்பதே "சிந்துராருண விக்ரஹாம் த்ரிநயனாம்" என்று ஆரம்பிக்கிறது. அதாவது அன்னையை சிந்துர வர்ணத்தினள் என்று குறிப்பிடுகிறது. சிந்துர விக்ரஹாம் என்று இல்லாது சிந்தூராருண அதாவது சிந்தூர அருண விக்ரஹாம். அதாவது "உதிக்கின்ற செங்கதிர்" என்பதைத்தான் சிந்தூராருண விக்ரஹாம் என்று குறிப்பிடுகிறார்கள் இங்கே.
அன்னையைப் பலவிதங்களில் நமக்கு தெரியும், இவற்றையெல்லலம் மூர்த்தங்கள் என்போம். காமாக்ஷி, மீனாக்ஷி, தாக்ஷாயினி, அன்னபூர்ணேஸ்வரி என்பதாக பல மூர்த்தங்கள்/ரூபங்கள். இந்த ரூபங்கள் எல்லாமே பராசக்தி என்றாலும் இந்த மூர்த்தங்களுக்கென்று ஆயுதங்கள், நிறம் எல்லாம் தனியாக இருக்கிறது. மீனாக்ஷி என்றால் அவள் மரகத நிறத்தவள் என்றும் அன்ன பூரணி ஸ்வர்ண நிறத்தவள் என்றும், காமாக்ஷி சிவந்த நிறமென்றும் கூறப்படுகிறது.
அன்னை, தக்ஷனின் மகளாக தாக்ஷாயினி என்று சொல்லப்படும் போது அவள் உமாதேவி என்ற விதத்தில் கரிய நிறத்தவளாக அறியப்படுகிறாள். லலிதா, காமாக்ஷி, ராஜராஜேஸ்வரி போன்ற ரூபங்கள் சிவந்த ரூபமாக அறியப்படுகிறது. இதற்கான காரணத்தை பகவத்பாதர் "ஜகத் த்ராதும் கருணா: கசித் அருணா:" என்கிறார். அதாவது உலகைக் காக்க வந்தவள், அந்த செயலைச் செய்ய கருணையுடன் அருண ஸ்வருபமாக தன்னை காணச் செய்தாள் என்கிறார்.
கலர் ஆப் ஜெனிஸிஸ் என்பதன்படி பார்த்தோமானாலும் பல இடங்களில் தோற்றம் என்பதன் நிறமாக கொள்வது சிவப்பு நிறத்தைத்தான். சூரியன் உதிக்கும் நேரத்தில் சிவப்பாக இருப்பான். அந்த நேரத்தில் அந்த கிரணங்கள் பட்டு பூமியும் ஒருவிதமான இளஞ்சிவப்பினை தரும். இதையே பாலா திருபுர சுந்தரியின் தியான ஸ்லோகத்தில் "அருண கிரண ஜாலை:" என்பதாகச் சொல்கிறார்கள். அதாவது அருணனின் கிரணங்கள் போன்ற நிறத்தவள் என்பதாக. மஹா விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா, இருக்கும் அந்த கமலத்தின் நிறமும் இளஞ்சிவப்பே. (வெள்ளைத்தாமரை சரஸ்வதிக்காக, ஞானத்தின் நிறமாக)பிரம்மனின் வேலை படைப்புத்தொழில் என நாமறிவோம்.
ஆக, படைப்பு என்ற தொழிலுக்கான நிறம் சிவப்பு, அதிலும் இளஞ்சிவப்பு என்பதாகக் கொண்ட காரணத்தால்தான் இவ்வாறாக சிந்தூராருண விக்ரஹாம் என்று கூறினார்கள். எனவேதான் அன்னை சிருஷ்டிக்கான வடிவில் வரும் சமயத்தில் கருமை நிறத்தில் வராமல் (கருமை என்பது அறியாமை மற்றும் தாமசத்திற்கான நிறம்) பூலோகத்தில் ஒவ்வொரு ஜிவனுக்கும் தாய் என்பவள் போல உலகிற்கெலாம் தாயாக இருந்து படைத்துக் காப்பதால் இளஞ்சிவப்பு நிறத்தில் படைத்துக் காக்க வருகிறாள். இவ்வாறாக சர்வ உலகங்களுக்கும் தாயாக இருப்பதை குறிப்பதாகவே சஹஸ்ரநாமத்தில் முதல் நாமமாக 'ஸ்ரீ மாதா' என்று ஆரம்பிக்கிறது.
இவ்வளவு தீர்க்கமாக சிந்தித்து இந்த சஹஸ்ர நாமத்தை எழுதியவர் யார் என தெரியுமா?....வசினி எனப்படும் வாக் தேவதைகள் தான் அன்னை லலிதாவின் ஆணைப்படி சஹஸ்ரநாமத்தை எழுதியவர்கள். இந்த வசினி தேவதைகள் அன்னையுடன் நித்ய வாசம் செய்பவர்கள். இதனை அகத்தியர் மூலமாக நமக்கு அளித்தவர் ஹயக்ரீவர்.
Thursday, October 25, 2007
கடை விரித்தேன் கொள்வாரில்லை....
பிளாக் டெம்லேடையும் மாற்ற உத்தேசம் இருக்கிறது, ஆனால் நேரமில்லை. எது பெஸ்ட் டெம்லேட் என்பது பற்றி பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இதுபற்றி யாரேனும் ஏதேனும் சஜெஸ்ட் பண்ணினால் தன்யனாவேன்.
செளந்தர்ய லஹரி எழுத ஆரம்பித்துள்ளேன், 5 பதிவுகள் ஆயிற்று. எழுதும் போதுதான் புரிந்தது, அன்னையின் ஆயிரம் நாமங்களை இல்லாவிடினும் சில பல முக்கிய நாமங்களையும் எழுதுவது தேவையென்று. எதற்காக இது என்றால், அன்னையின் அழகை வர்ணிக்கும் ஸ்லோகங்கள் எடுத்தாளும் நாமங்கள் பலவற்றை சஹஸ்ர நாமத்தில் காணக் கிடைக்கிறது.
எனவே இந்தப் பதிவில் அன்னையின் ஆயிரம் நாமங்கள் என்ற தொடராக சில நாமங்களை எனது புரிதலின்படி எழுத உள்ளேன். ஆஸ்திக மஹா ஜனங்கள் படித்து எனது புரிதலில் உள்ள சரி-தவற்றினை திருத்த வேண்டுகிறேன்.
Wednesday, October 17, 2007
ஸ்ரீ மூகபஞ்ச சதீ அருளிய மூக சங்கரர்....
சக்திபீடங்களில் முதன்மையான ஸ்ரீகாஞ்சீ க்ஷேத்திரத்தில் ஓர் அந்தண குடும்பத்தில் ஊமையாக பிறந்தார் காளிதாஸர். மூகர் என்ற பெயருடன் பால்யத்திலிருந்தே ஸ்ரீகாமாக்ஷி சன்னதியில் எப்போதும் அமர்ந்திருப்பார். பக்கத்திலேயே ஒருஸ்ரீவித்யா உபாஸகரும் வாக்ஸித்தியை வேண்டி வழிபட்டு வந்தார். ஓரு நாள் அந்த உபாஸகரைக் கடாஷிக்கும் பொருட்டுஅன்னை அவர் முன் பாலையாக தோன்றுகிறாள். அம்பிகையின் ஸெளந்தர்யத்தைக் கண்ட மூகர், தான் முன் ஜென்மாவில்செய்த சியாமளா தண்டகம் போன்ற கவிதைகளின் நினைவால் உந்தப்பட்டு, தேவியைப் பாட வாய் திறந்து 'பே,பே' என்றுசப்தமிடுகிறார். ஊமைச் சிறுவனின் உளறல் சப்தம் கேட்டு கண்விழித்த உபாஸகர், ஊமையின் அலறலுக்கு இந்த சிறுமியே காரணமென்று அவளை அந்த இடத்தைவிட்டு அகலுமாறு கத்துகிறார்.
"சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்வலா" என்பதான சுத்த வித்தையே போன்ற பல்வரிசைகளில் ஊறி வந்ததாம்பூல ரஸத்தை தேவி மூகரின் வாயில் சேர்த்துவிடுகிறாள். உடனடியாக மூகருக்கும் வந்தது யார் என்பது முதலாக தனதுபூர்வ ஜென்ம தொடர்புகளெல்லாம் புரிகிறது. மேலும் அவர் பேசும் சக்தி மட்டுமல்லாது பாடல்களும் புனையக் கூடிய கவிதாவிலாஸம் சித்தியாகிறது. இவர் ஸ்ரீகாமாக்ஷி மீது பாடிய 500 ஸ்லோகங்களே மூக பஞ்சசதி என்று போற்றப்படுகிறது. இந்த ஸ்லோகங்களானது ஸ்ரீவித்யா மந்திரமே மாற்று உருக்கொண்டதாக சொல்லும்படியான விசேஷ அமைப்புடன் விளங்குகிறது. இந்த மூகரே பிற்காலத்தில் (கி.பி 398) காஞ்சி காமகோடி பீடத்தின் 20ஆவது ஆச்சாரியராக பட்டமேற்று 39 ஆண்டுகள் கழித்து கி.பி 437 ஆம் வருடம் ஸித்தி அடைந்தார்.
அன்னை காஞ்சி ஸ்ரீகாமாக்ஷியை கிருத யுகத்தில் 2000 ஸ்லோகங்களால் துர்வாச முனிவரும், திரேதாயுகத்தில் 1500 ஸ்லோகங்களால் பரசுராமரும், த்வாபர யுகத்தில் 1000 ஸ்லோகங்களால் தெளம்ய மகரிஷியும், கலியுகத்தில் மூக சங்கரர்500 ஸ்லோகங்களாலும் போற்றியுள்ளனர்.
Saturday, September 29, 2007
திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -3

பாடல் - 7
வெந்த நீறு மெய்பூசிய வேதியன்
சிந்தைநின்ற வருள் நல்கிய செல்வத்தன்
கந்தமெளவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே.
நிலையாமையை உணர்த்தும் திருநீற்றை பல்வேறு சமயத்தாரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். திருமாலடியார்களும் திருநீற்றின் சிறப்பினைப் போற்றியுள்ளனர். "கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரியகோலத்தடங்கண்ணன்" என்று திருவாழ்மொழியிலும் இருப்பதாக அறிகிறேன்.
கந்தம் - சந்தனம்/வாசனை ; மெளவல் - முல்லை ;
பாடல் - 8
பண்ணினேர் மொழியாளையொர் பாகனார்
மண்ணு கோலம்முடையம் மலரானொடும்
கண்ணனேட வரியார் கருகாவூர் எம்
அண்ணல்வண்ணம் அழலும் அழல்வண்ணமே.
இன்னிசை பாடுதல் போல இனிய மொழி பேசும் உமையவளை தனது திருமேனியில், வாம பாகத்தில் கொண்டு விளங்குபவரும், தாமரையில் அமர்ந்து படைப்புத் தொழிலியற்றும் ப்ரம்மாவும், திருமாலும் தேடிக் காண்பதற்கரிய மூர்த்தியாய் நின்றவரும், கருகாவூரில் கோயில் கொண்டுள்ளதலைமையுடைய எம் அண்ணலாகிய சிவபிரானின் நிறம் சுடர்விட்டுக் கனன்று எரியும் தழலின் நிறம் போன்ற செந்நிறமாகும்.
மலரான் - பிரம்மன்; மண்ணுக்கோலம் - படைப்புத்தொழில்; வாம பாகத்தில் அன்னை உமையாளைக் கொண்ட திருக்கோலந்தான் அர்த்தநாரிசுவரர். அடி-முடி காண சென்ற பிரும்மா, திருமால் முயன்றதையும் இங்கு குறிப்பிடுகிறார்.
போர்த்தமெய்யினர் போதுழல் வார்கள் சொல்
தீர்த்தமென்று தெளிவீர் தெளியேன்மின்
கார்த்தண்முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆர்த்தர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.
பாடல் - 10
கலவமஞ்ஞை யுலவும் கருகாவூர்
நிலவுபாடல் உடல்யான்றன் நீள்கழல்
குலவுஞான சம்பந்த்தன் செந்தமிழ்
சொலவலாரவர் தொல்வினை தீருமே.
கலவம் - கலாபம் - மஞ்ஞை - மயில்; நிலவு பாடல் - நான்மறை; குலவு - வணங்கி போற்றும்; தொல்வினை - முற்பிறப்பின் பாவம்
Tuesday, September 25, 2007
திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -2
பொடிமெய்பூசி மலர்கொய்து புணர்ந்துடன்
செடியரல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள்முல்லை கமழும் கருகாவூரெம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே.
மெய்யில்/உடம்பில் திருநீறு பூசிக்கொண்டு, நன் மலர்களைக் கொண்டு தன்னை வழிபாடு செய்வாருடைய உள்ளத்திலுள்ள துன்பங்களை நீக்கிஅருள் நெஞ்சமுடையவராகச் செய்யும் பெருங்குணமுடையவரும், மணம் பரப்பும் முல்லை மலர்கள் எங்கும் திகழும் கருகாவூரில் எழுந்தருளி இருக்கும் எங்கள் அடிகளாகிய இறைவனின் நிறம், கனன்று எரியும் அனலின் செக்கர் நிறமாகும்.
செடியர் - துன்பமுடையவர்; கடி - மணம்; இறைவன் யோக நிலையில் இங்கு குடிகொண்டுள்ளதால் அடிகள் என்று அழைக்கப்படுகிறார்.
பாடல் - 5
மையலின்றி மலர்கொய்து வணங்கிடச்
செய்ய உள்ளம் நல்கிய செல்வத்தர்
கைதண் முல்லை கமழும் கருகாவூரெம்
ஐயர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.
அறியாமை அகன்று அழகிய மலர்களைக் கொய்து தன்னை வணங்குபவர்கட்கு ஞானம் பொருந்திய நீதிசேர்ந்த உள்ளைத்தை அளித்த அருட்செல்வராகியவரும், தாழையின் மீதும் படர்ந்த முல்லை மலர்கள் மணம் பரப்பும் கருகாவூரின் கண் விளங்குபவருமாகிய எம் தலைவரான இறைவனின் திருமேனியின் நிறம் கனன்று விளங்கும் அனலின் நிறம் போன்ற சிவந்த நிறமாகும்.
மையல் - அறியாமை; செய்ய உள்ளம் - நீதிநிறைந்த உள்ளம்; கைதை - தாழை; இறைவன் உண்டு என்ற ஞானநிலையே மையல் இல்லாத நிலையாகும். பந்த-பாச உணர்விலிருந்து விலகிய நிலையினையும் குறிக்கும்.
பாடல் - 6
மாசிறொண்டர் மலர்கொண்டு வணங்கிட
ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று குற்றங்களையும் நீக்கிய தொண்டர்கள், அழகிய மலர்கள் கொண்டு அர்ச்சித்து வணங்க, அவர்களுடையவிருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றி திருவருள் பாலிப்பவரும், மிகுந்த சினத்துடன் விளங்கும் ரிஷபத்தை வாகனமுமாக கொண்ட எம் கருவூர் பெருமானாகிய ஈசரின் திருமேனியின் நிறம் எரிகின்ற தழலைப் போன்ற செம்பவள நிறமாகும்.
மாசு - முக்குற்றம் ; ஆசையார அருள் நல்கிய - நெஞ்சத்து ஆசையெல்லாம் பூர்த்தி செய்கின்ற; விடை - ரிடபம்/தரும தேவதை ; ஈசன் - எல்லோருக்கும் ஆதாரமான தன்மையைக் குறிக்கும்.
Saturday, September 22, 2007
திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -1

பாடல் - 1
முத்திலங்கு முறுவல் லுமையுஞ்சவே
மத்தயானை மறுகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூரெம்
அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே
தன்னுடைய முத்துப்போன்ற பற்கள் ஒளி வீசுமாறு புன்முறுவல் பூத்து அருகில் வீற்றிருக்கும் உமாதேவியார், அச்சம் அடையும்படி மதங்கொண்டு வந்த யானையை நிலைகுலையும்படி வீழ்த்தி, அதன் தோலை உரித்து அந்த கனத்த தோலைப் போர்வையாக போர்த்திக் கொண்ட கருகாவூர் கடவுளாம் எந்தையின் திருமேனி நிறம்சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பு போன்ற சிவந்த நிறமாகும்.
கயாசூரன் என்பவன் நான்முகனிடம் வரம் பெற்று, எல்லாத் தேவர்களையும் வென்றபின் காசியை அடைந்தான். முனிவர்களும், பக்தர்களும் அவன் வரவுகண்டு அஞ்சி மணிகர்ணிகை கட்டத்தில் எழுந்தருளியிருக்கும் விச்வேச்வரரை வணங்கி நின்றனர். அவர்களைக் கொல்வதற்கு முற்பட்ட கயாசூரனை தனது கோடி சூரியப்பிரகாசத்துடன் பேருருத்தாங்கி நின்று தம் திருவடியால் உதைத்து வீழ்த்தினார். யானையுருக் கொண்ட கயாசூரனைத் தன் திருக்கரங்களின் நகங்களால் கீறி அவன் தோலை உரித்தார். அப்போது ஈசனின் திருமேனிப் பிரகாசத்தைக் கண்ட உயிரினங்கள் கண்பார்வையிழந்தன. எனவே பெருமான் அவர்களது கண்ணொளி மங்கியதைப் போக்க உரித்த தோலை தன்மேல் போர்வையாக அணிந்தார் என்கிறது புராணம்.
பாடல் - 2
விமு தவல்ல சடையான், வினையுள் குவார்க
கமுத நீழல் அகலாதோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.
மனதால் நினைத்தவரும், கண்ணால் காண்பவரும் விம்மும்படியான திருச்சடையுடைய பெருமானுக்கு திருத்தொண்டு இயற்ற எண்ணினாலே அவனுடைய திருவடி நிழலில் அமர்ந்திருக்கும் பெரும் புண்ணியம் உண்டாகும். அப்பெருமையுடைய திருவடிகளையுடைய, மணம் கமழுகின்ற அழகியமுல்லை மலர் நிறைந்த கருகாவூர் அமுதரின் திருமேனியின் நிறம், சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பினது சிவந்த நிறமாகும்.
பழகவல்ல சிறுத்தொண்டர் பாவின்னிசைக்
குழகரென்று குழையா வழையாவரும்
கழல்கொள்பாட லுடையார் கருவூரெம்
அழகர்வண்ணம் அழலும் அழல்வண்ணமே.
இடைவிடாது வழிபட்ட சிறுதொண்டர் இன்னிசைப்பாட்டின் தன்மையாக இருப்பவன் என்று உள்ளம் உருகப் பாடி அழைக்க, அவர் முன் தோன்றி காட்சியளித்தவரும், பாமலர் சூடிய திருவடிகளையுடையவருமான கருகாவூரில் விளங்கும் எனது அழகிய பெருமானின் திருமேனியின்நிறம், கனன்று எரியும் நெருப்பினது சிவந்த நிறம் போன்றது.
முதலடியில், நல்ல இசைப்பாணர் ஒருவர் இன்னிசையால் மனமுருகிப்பாடி, திருக்கருக்காவூர்ப் பெருமானை அழைத்தபோது பெருமான் அவருக்குக் காட்சியளித்ததை குறிக்கின்றது. அழகென்பது அகம்-புறம் எல்லாம் இனிமையாக இருத்தல், இறைவடிவே அழகின் வடிவம். கழல்கொள் இடல் பாடல் உடையார் - பக்தர்கள் மலர் கொண்டும், பாமாலை கொண்டும் செய்யும் அர்ச்சனையாவையும் ஈசன் திருவடிக்கே.
Friday, September 14, 2007
வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
கீழே உள்ளது கணேச ருணஹர ஸ்துதி. யார் இயற்றியது என்பது தெரியவில்லை. சிறிய வயதில் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.
ஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன்.
ஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பல ஸித்தயே
திரிபுர சம்ஹாரத்திற்குப் போகும் முன்பு பரமேஸ்வரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
ஹிரண்ய கசிப்வாதீநாம் வதார்த்தே விஷ்ணுநா அர்ச்சித:
ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்களை வதிக்கும் முன்பு மஹாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
மஹிஷஸ்ய வதே தேவ்யா கணநாத: ப்ரபூஜித:
மகிஷாசுரனை ஸம்ஹரிக்கும் முன் பார்வதீ தேவியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
தாரகாஸீரனை வதைக்கும் முன், ஸ்ரீ சுப்ரமண்யரால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ய ஸ்வஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (6)
சூரிய தேவனால் தனது கார்ய ஸித்திகாக நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
சசிநா காந்தி விருத்யர்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (7)
தனது அழகு நன்கு வளர்வதற்காக சந்திரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
பாலநாய ச தபஸாம் விஸ்வாமித்ரேண பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (8)
தனது தபஸ்ஸைக் காப்பாற்றிக்கொள்ள விஸ்வாமித்த்ர மஹர்ஷியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன்கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
இதம் த்வ்ருணஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாசனம்ஏகவாரம் படேந் நித்யம் வர்ஷ மேகம் ஸமாஹித:தாரித்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேர ஸமதாம் வ்ரஜேத்.
இந்த ஸ்தோத்திரம் கடுமையான ஏழ்மையைப் போக்க வல்லது.
Thursday, September 6, 2007
கனவுகளே,கனவுகளே காலமெல்லாம் வாரீரோ?...
கல்லூரி காலங்களில் நண்பர்கள் பலரும் கதை போல தங்களது கனவுகளை பகிர்ந்து கொள்வோம். ஆனால் இன்று ஏதும் நினைவில் இல்லை. ஒரு சிலவற்றைத் தவிர.
எனக்கு ஏதேனும் உடல் உபாதை உள்ள காலங்களில் எப்போதும் ஒரே கனவு ரிப்பீட்டாகிறது. அதாவது நான் ஒரு மலை உச்சியில் தனியாக இருப்பது போலவும், எப்படி இறங்குவது என்பதற்கு வழிகாட்ட யாரும் வருவார்களா என்று நான் எதிர்பார்ப்பதாகவும் இருப்பதுதான் அந்த கனவு. இதனை கண்ட உடன் முழிப்புத் தட்டி, உறக்கத்திலிருந்து எழுந்து விடுவேன். சமிப காலங்களில் சில பல வியாதிகள் வந்தாலும் இந்தக் கனவு ஏனோ மிஸ்ஸிங். :-)
இன்னொரு கனவு 2002-ல் கண்டது.....இதில் நான் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன் படிகளில் ஏறும் சமயத்தில் வழுக்கி விழுகிறேன். கால் முட்டியில் சிறு பிராக்சர் ஆகிறது. பெற்றோருக்குத் தெரிவிக்காது பெங்களுரிலேயே வயித்தியம் பார்த்துக் கொள்வதாக கனவு. சரியாக 3 மாதங்களில் இந்த கனவு நினைவாகியது. ஆம்!, நண்பன் ஒருவனது நிச்சயதாம்பூலத்திற்காக கருர் சென்று திரும்புகையில் சேலத்தில் டிரெயினைப் பிடிக்கச் செல்கையில் கீழே விழுந்தேன். கனவில் கண்ட அதே நிகழ்ச்சி.
மற்றபடி எனக்கு பெரிய எதிர்பார்ப்புக்கள்/கனவுகள் ஏதும் இதுவரை இருக்கவில்லை. எனது கர்மாவினை தர்மத்திற்கு விரோதமின்றிச் செய்தலே சிறப்பென்று வளர்க்கப்பட்டேன். இந்த வளர்ப்பினால் இன்றுவரை எந்த ஏமாற்றத்தையும் நான் காணவில்லை. கடந்த சில வருடங்களாக கனவுகளே வருவதில்லை. என்னமோ தெரியவில்லை, ஆழ்ந்த உறக்கமே இருப்பதில்லை என்று அர்த்தமா, இல்லை ரொம்பவே திக் ஸ்கின்னா மாறிவிட்டேனா?. ஒன்றும் புரியவில்லை.
Wednesday, August 15, 2007
கோதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
மாம் அங்கே நாத நிதாய ஸர்வ ஸீகர :
முக்தே ரூபாயஸ்த்வயா, மாலா கேய சமர்ப்பணம்
மம முநேத் துக்தம் தமே வாதுனா ஜாதாஹம்
புவி தர்சயாமி க்ருபயா த்வம் தேஹ்யனுக்ஞாமிதி.
பூமாதேவி ஆண்டாளாக அவதரித்ததை சொல்லுகிறது மேற்கண்ட சுலோகம். பூமாதேவி பொறுமையுடன் அளவில்லா கருணையும் கொண்டவள். அவள் ஒரு சமயம் தன் பதியான ஸ்ரீமன் நாராணனிடம் "உலகில் ஏன் சிலரைக் கஷ்டப்படச் செய்கிறீர்கள்?,சிலரை ஏன் சுகப்படச் செய்கிறீர்கள்" என்று கேட்டாள்.
"எனக்கு எல்லோரும் ஒன்றுதான், அவரவர் பாவ-புண்ணியத்தின்படி கஷ்டமோ-சுகமோஅனுபவிக்கிறார்கள்" என்றார் நாராயணன்.
"அது எப்படி?"
"நேர்வழியில் போனால் சுகமாக, சுலபமாக போய்ச் சேரலாம். குறுக்கு வழியில் போய் கல்லும்,முள்ளும் குத்தி அவஸ்தையய் வரவேற்றால் அதற்கு யார் பொறுப்பு?" "அவர்கள் நேர்வழி செல்லும்படி எப்படிச் செய்வது?"
இப்போது தாயார்,"நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஒரு பக்தனை சொல்லுங்களேன், கலியில் ஹரி பக்தியின் சிறப்பைபார்க்கலாம்" என்றாள்.
இதற்கு பதிலாக பெருமாள் பின்வரும் லின்க்கினை பூமாதேவிக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். http://madhavipanthal.blogspot.com/2006/11/blog-post_30.html
அந்தப் பதிவினைப் படித்த பூமாதேவி, "புரிந்தது ஸ்வாமி, பாசுரத்தைப் பாடியவனும், அதனை ஒருதடவைகேட்ட பிரம்மராக்ஷஸும் நற்கதி அடைந்ததுதானே இதன் சாரம்" என்றாள்.
"ஆமாம்; நான் ஜீவராசிகளுக்கு இதைவிட சுலபமான வழி என்ன காட்ட முடியும். இதைப் போலவே ஒருபுஷ்பத்தை எடுத்து எனக்கு அர்ப்பணம் செய்தாலும் நான் திருப்தி அடைந்து நற்கதி அளிப்பேன். அதைக்கூட செய்யாமலிருந்தால் நான் என்ன செய்ய?"
பூமாதேவி ஏதோ யோசிக்கத் தொடங்கினாள்
பகவான் அவளைப் பார்த்து, "என்ன தீவிர யோசனை?", என்க,
"ஒன்றுமில்லை ஸ்வாமி, எனக்கொரு ஆசை. அதை நிறைவேற்ற அருள் புரிய வேண்டும்"
"என்னம்மா அந்த ஆசை"
"ஸ்வாமி, நான் ஒரு தடவை பூமியில் பிறந்து பாமாலையினாலும், பூமாலையினாலும் தங்களை அர்ச்சித்து, உலகிற்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டுமென்பதே எனது ஆசை" என்று கூறினாள் பூமாதேவி.
பகவானும் "அப்படியே ஆகட்டும், நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வடபத்ர சாயியாக அர்ச்சையிலிருப்பேன்.அப்போது கருடாழ்வார் விஷ்ணுசித்தராக அவதரித்து திருத்துழாய் கைங்கர்யம் செய்வார். அவரது திருக்குமாரியாக அவரது திருத்துழாய் தோட்டத்தில் நீ தோன்றி பாமாலையும், பூமாலையும் சூட்டலாம்" என்று கூறினார்.
அதன்படி ஆடிமாதம், சுக்லபக்ஷ சதுர்த்தியும், பூர நக்ஷத்திரமும் கூடிய செவ்வாய்க் கிழமையன்று, பெரியாழ்வார்திருத்துழாய் பறிக்கும் நந்தவனத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தாள்.
இன்று ஆடிப்பூரம். அன்னை பூமாதேவி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக அவதரித்த தினம்.
Saturday, August 11, 2007
மதுரையிலேயே பெரிய வீடு - 1
இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது, அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர்.மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவதுஇந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை/அதை காத்துகுஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருட்கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்.
சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பல நூறு கோவில்களில் இதுவே முதன்மையானது. சுடலையாண்டி, ருத்திரன் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவன், பாண்டிய ராஜ குமாரியை (மீனாட்சி) மணக்க வருகையில் அழகிய வடிவெடுத்து வந்தாராம். அந்த சுந்தர வடிவால் அவருக்கு சுந்தரன் என்றும், சொக்க வைக்கும் அழகால் சொக்கன் என்றும் பெயர். இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்குஎதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட டுப்ளிகேட் லிங்கம் இன்றும் காட்சிக்கு உள்ளது.
குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் ஸ்வயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் நிர்மாணித்ததாக வரலாறு. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.
விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தைபூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவரை விமானங்கள், இந்திர விமானம்என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகிறது.
Friday, August 10, 2007
காமாக்ஷி - கடாக்ஷி - 4ஆவது ஆடிவெள்ளி சிறப்புப் பதிவு
காமாக்ஷி பற்றி சொல்லப்பட்ட புராணங்கள் பின்வருமாறு.
1. மார்க்கண்டேய புராணத்தில் 'தேவீ மகாத்மீயத்தை அடுத்ததாக வரும் "ஸ்ரீ காமாக்ஷி விலாஸம்".
2.பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக உள்ள லலிதோபாக்யானம்.
3, ஸ்காந்த புராணத்தில் ஸநத்குமார ஸம்ஹிதையிலுள்ள 'காஞ்சீ மஹாத்மீயம்' மற்றும் அதில் வரும் 'தக்ஷ காண்டத்தில்'.
4. மற்றும் பல வடமொழி, தென்மொழி புராணங்கள், செவிவழிக் கதைகள்.
இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?. பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்காரத்தின் ஒலியின் அலைகளான இருபத்துநான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள். ஆம்! அந்த இருபத்துநான்கு சப்தங்களை, இருபத்துநான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள். அதென்ன 24?, 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது ஏன் 24?. காயத்ரீ மஹாமந்திரம் இருபத்திநாலு அக்ஷரம் கொண்டது, அதன் மஹிமையைத்தான் நமக்கு அவ்வாறு விளக்குகிறாள் ஸ்ரீமாதா.தற்போதும் காஞ்சீயில் காமாக்ஷி கொலுவிருக்கும் மண்டபம் காயத்ரீ மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது.
சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. 'அ' என்பது சிவனின் பெயர். 'அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக.பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம் (லிங்கோத்ப்வ தத்வம்). 'ம' என்பது நாராயணனைக் குறிப்பது. எப்படி? 'மா' என்றால் லக்ஷ்மி, இதெப்படியெனில் அவளின் கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள். ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).
"ஸசாமர ரமா வாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா" என்கிற லலிதையின் நாமா என்ன சொல்கிறதென்றால், வாணியும், ரமாவும் (லக்ஷ்மி), அன்னைக்கு இருபுறங்களிலும் சாமர சேவை செய்வதாக வருகிறது. ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் தமது பாடலில் "சாரதா ரமா நயநே' என்று போற்றுவதிலிருந்து காமாக்ஷியின் கண்களாக கலைமகளும், அலைமகளும் இருப்பதாகவும் கொள்ளலாம். இதையே, சிவப்பிரகாச ஸ்வாமிகள், "நின் திருமுக பங்கயத்தில்கண்ணாயினர் உனக்கு அவ்வலைமாதும், கலைமகளும் பெண்ணார் அமுதனையாய்" என்கிறார்.
அடுத்ததாக பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப்பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது.
Thursday, August 9, 2007
ஸ்ரீ சரபேஸ்வரர்
திருமதி கீதா அவர்கள் சரபர் பற்றி தனது சிதம்பர மகாத்மீயம் தொடர் பதிவில் எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக சரபர் பற்றி மேலும் சில தகவல்கள் இங்கே.
அவரது பதிவின் லின்க் கீழே.
http://aanmiga-payanam.blogspot.com/2007/08/blog-post_05.html
ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம உத்ர பாகத்தில் சரபர் பற்றி பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.
எவர் ஒருவர் ஸ்ரீ லலிதாசகஸ்ர நாமத்தை பக்தியோடு பாராயணம் செய்கிறார்களோ அவர்களது சத்ருக்களை சரப மூர்த்தி நாசம் செய்து காப்பார்.
இன்றும் நடக்கும் பில்லி-சூன்யம் போன்றவற்றை நீக்குவதற்கும், நாரசிம்ஹ மந்திரத்தால் கட்டப்பட்ட பிரயோகங்களை நீக்குவதற்கும் சரப சாளுவங்கள் என்ற் பிரயோகம் தந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மகா உக்கிரமான நாரசிம்ஹத்தை அடக்கியதிலிருந்து சரப மூர்த்தியே மாரக பிரயோகங்களுக்கு மிக உத்தமமானவர் என்று சொல்லப்படுகிறது. (அப்போ வல்லியம்மா நீங்க சரப உபாசகராகத்தான் இருக்க முடியும், ஏன்னா நீங்களும் ஒரு சிம்ஹத்தை பல வருடங்களாக அடக்கியாள்கிறீர்கள் அல்லவா)
ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரஸிம்மத்தின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் அந்த உக்கிரம் உலகத்தை பாதிக்காது தவிற்க்க தேவர்கள், முனிவர்கள் சிவனை பிரார்த்திக்க, சிவபிரானும் வீரபத்ரரை அனுப்புகிறார். ஆனால் வீரபத்ரரையும் கட்டி வைத்து ஆட்டுகிறார் நரஸிம்மர். அப்போது வீரபத்திரர் பிரார்த்தனையால் சிவன் விரபத்திர வடிவிலிருந்து உருமாறி சரப உருக்கொண்டு நரஸிம்மத்துடன் 16 நாட்கள் போர் நடக்கிறது. 17ஆம் நாள் சரபர் நரஸிம்மத்தை தன் கரங்களால் தொட, அந்த ஹஸ்த தீக்ஷையானது நரஸிம்மத்தை தெளியவைக்கிறது. தனது செயலுக்காக வருந்திய நரஸிம்மர் 16 ஸ்லோகங்களால் சிவபெருமானை வழிபட்டார். (இந்த 16 ஸ்லோகங்களிலேயே சரபரின் 108 அஷ்ட்டோத்திர நாமாவாக உள்ளது) சரபர் நரஸிம்மத்துடன் இணைந்து இரண்டறக்கலந்தபின் தேவர்களையும், முனிவர்களையும் பார்த்து 'நீரும், நீரும், பாலும், பாலும் கலந்தால் எப்படி வேறுபடுத்த முடியாதோ, அது போல விஷ்ணுவும் சிவனும் ஒருவரே. எங்களை வேறுபடுத்திப்பார்க்கத்தேவையில்லை. என்று சொல்கிறார்.
சரபதத்துவம் என்னவென்றால், உபாசகன் இந்திரியங்களை அடக்கி அதன் வழியாக கார்யசித்தி அடையத்துவங்கும் காலத்தில் உபாசகனுக்கு கர்வமும் "தான்" என்ற மமதையும் இருக்கும். (இந்திரிய ஒடுக்கமே ஹிரண்ய வதம்) என்னதான் இந்திரியக் கட்டுப்பாடு இருந்தாலும் மனது அடங்காததால் அளவிற்கு மீறிய கோபம். இந்த அகங்காரத்தை ஒடுக்கிய சக்தியே சரபர்.
மான், மழு, சர்பம், தீ போன்றவற்றை ஆயுதமாக கொண்டிருக்கிறார் சரபர். இதில் அகந்தையை ஒழிக்கக் கூடியது மழு. மான் எப்போதும் சஞ்சலப் பார்வையுடையது, அதனை அடக்கி மனதை ஒருமுகப் படுத்தல் வேண்டும். குண்டலினிக்கு சாட்சியாக பாம்பும், தீயானது ஞானாக்னிக்கு சாட்சியாகவும் சொல்லப்படுகிறது. சரப மூர்த்திக்கு ஆதாரம் பல இடங்களில், குறிப்பாக ரிக் வேதம், தைத்ரீகம், ஸ்கந்த புராணம், காளிகா புராணம், பிரும்மாண்ட புராணம், சிவ பராக்ரமம் போன்றவை.
நல்லது செய்வதாகட்டும், அசுர சக்திகளை நாசம் செய்வதாகட்டும் இறைவனுக்கு உதவியாக பல சக்திகள் வந்துள்ளன. இங்கு சரபருக்கு இரு விதமான சக்திகள் உதவியுள்ளனர். ஒன்று மிக உக்ரமான பத்ரகாளி எனப்படும் பிரத்யங்கரா, இன்னொன்று சூலினி எனப்படும் துர்கா. புற சம்பந்தமான பாவங்களையெல்லாம் அழிப்பவள் துர்க்கா. அக சம்பந்தமான பந்தத்திலிருந்து நீக்கி முக்தியளிப்பவள் பிரத்தியங்கரா. சுருக்கமாகச் சொன்னால் இம்மைக்கு சூலினியும், மறுமைக்கு பிரத்யங்கராவும் அவசியம். இந்த இரு சக்திகளும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்யங்கரா தேவியின் மந்திரங்களை கண்டறிந்து சொன்னவர்கள் அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்பவர்கள். இவளது மந்திரத்தை சாதகம் செய்பவர்களை துவேஷிக்கக் கூடாது. இவள் இறைவனது கோபத்திலிருந்து உதித்ததால்தான் "குரோத சம்பவாய" என்கிற நாமம் அன்னைக்கு ஏற்பட்டது.
சரபர் ஸிம்ஹ ரூபமுள்ளவரை அடக்கியதால் "ஸிம்ஹக்னர்" என்றும் சாலுக்கியர் வழிபட்டதால் "சாலுவேசர்" என்றும் அழைக்கப்படுகிறார். சாலுக்கியரில் இரு பிரிவுகளுண்டு. மேலை சாளுக்கியர், கீழை சாளுக்கியர் என்பதே அவை. இதில் கீழை சாளுக்கியர் சரபேஸ்வரரை குலதெய்வமாகவும் மேலை சாளூக்கியர்கள் நரஸிம்மத்தையும் வழிபட்டு வந்தனர். இவர்களுக்கும் சோழர்களுக்கும் இருந்த உறவின் முறையால் தமிழகத்தில் சரபர் வழிபாடு நிலைபெற்றிருக்கலாம்.
திரிபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட ஆலயம் தவிர மதுரை, சிதம்பரம், காரைக்குடி போன்ற சில இடங்களிலும் சரப வழிபாடு உண்டு. சரப வழிபாட்டிற்காக பல ஸ்லோகங்கள், நாமாவளிகள் உண்டு, அவை சரப அஷ்டகம், கவசம், சஹஸ்ர நாமம், அஷ்ட்டோத்திரம் போன்றவை. யாருக்கேனும் தேவையிருப்பின் பின்னூட்டமாக தெரிவியுங்கள், தருகிறேன்.
Sunday, August 5, 2007
சில விசேஷ கணபதி க்ஷேத்ரங்கள்....
கடல் கடந்த கணபதி வழிபாடு.....
Saturday, August 4, 2007
இவருக்கு மேல இன்னுமொரு நாயகன் இல்லை.....
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் வேந்தனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து....
- நம்பியாண்டார் நம்பி.
வி-நாயகன் அதாவது தனக்கு மேல் தன்னை நடத்துவிக்கும் நாயகர் இல்லாதவர் என்று அர்த்தம். 'அநீஸ்வராய' என்பதும் இந்த அர்த்தத்தில் வருவதே. இதை ஆதி சங்கரர் தனது கணேச பஞ்சரத்னத்தில், அநாயக ஏக நாயகம் (முதாகரார்த்த மோதகம் என்று ஆரம்பிக்கும்) என்கிறார். ஆதிசங்கரர் கணேச புஜங்கமும் எழுதியவர். பஞ்சரத்தினம் கைலாயத்தில் கணபதியை தரிசித்து அங்கு நடந்தவற்றை எழுதியது பஞ்சரத்தினம் என்பதால் இதை முக்தி கணேச ஸ்தோத்திரம் என்கிறார்கள்.
நாலு வேதங்களிலும் விக்னேஸ்வரரைப் பற்றி பலவாறு சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்ச உபநிஷதங்கள் இவரை பூஜிக்கும் முறையை விளக்குகிறது, கணேச, முத்கல புராணங்கள் இவரை பற்றி விரிவாக சொல்லியிருக்கிறது.
கணபதியை உபாஸிக்கும் பக்தர்களுடைய மனதில் 'நீர்-நிலம்-விசும்பு-தீ-காற்று என்ற் பஞ்ச ரூபங்களின் அதிபதியாகவும், நிர்க்குண பிரும்மத்தின் வடிவமாக 'ஓம்;கார ஸ்வருபமாக இருப்பதாக காணாபத்தியம் சொல்கிறது.
ஓம் என்ற பிரணவ ரூபமான விநாயகரை அவர் பரபிரம்மமாக இருப்பதால் தான் எந்த கர்மாவிற்க்கான சங்கல்பத்திலும், முதலில் ' ஓம் சுக்லாம் பரதரம்'
என்று ஆரம்பிக்கும்படியாக வைத்துள்ளார்கள்.
இவவாறாக பலவிதங்களிலும் இறைவழிபாட்டில் முதலிடம் பெற்ற கணநாதனை வணங்கி இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன். இங்கு எனக்கு தெரிந்தவற்றை/படித்தவற்றை பகிர்தல் மட்டுமே இலக்கு. நானாக எந்த திரட்டியிலும் சேர்க்கும் எண்ணமும் இல்லை. ஏதேனும் தவறு இருப்பின் சுட்டிக்காட்டி வழிப்படுத்த் அன்பு நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன்.