Sunday, February 22, 2009

மஹா சிவராத்ரி...2009

ப்ருஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம்
ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம்
தத்-பிரணமாமி ஸதாசிவ லிங்கம்

[பிரம்ம தேவனாலும், முரன் என்னும் அசுரனைக் கொன்றவனாலும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும் நன்கு பூஜிக்கப்பட்டதும், அழுக்கற்றதாக ஒளிர்வதும், மனிதப் பிறவியால் ஏற்படும் பலவித துன்பங்களை போக்கி முக்தியை தருவதுமான ஸ்ரீஸதாசிவத்தின் வடிவான சிவலிங்கத்தை நமஸ்காரம் செய்கிறேன்]

நாளை மஹா சிவராத்திரி. ஆதி-அந்தம் இல்லாத ஜோதி வடிவான லிங்கத்தில் இருந்து பரமேஸ்வரன் காக்ஷி தந்த தினம். வராஹ வடிவில் ஸ்ரீவிஷ்ணுவும், அன்ன வடிவில் பிரம்மாவும் பரம்பொருளை, லிங்கோத்பவ மூர்த்தியின் அடி-முடி தேடிய நாள். இன்று பகலில் சுத்த உபவாசமிருத்தல் மிகச் சிறப்பு. இரவு நான்கு ஜாமங்களிலும் சிவ பூஜை செய்து, பஜனைகள் செய்து, சிவகாதைகள் கேட்டு இரவைக் கழித்து மறுநாள் நித்ய கர்மாக்களை முடித்து தம்பதி பூஜை போன்றவை செய்து விரதத்தை முடித்தல் நலம். போன வருடம் சிவராத்திரி சிறப்பாக 3 பதிவுகள் இட்டேன். அவற்றின் லிங்க் இதோ!.

ஸ்ரீ ஆசார்யார் அருளிய சிவானந்த லஹரி, சிவபுஜங்கம் மற்றும் சிவ-பஞ்சாக்ஷர ஸ்தோத்திரங்களை இந்நாளில் படித்து சர்வேசனை, ஸதாசிவனை பூஜித்தல் சிறப்பு. சிவநாமத்தை மனதில் நினைத்தாலேயே எல்லா பாபங்களும் நீங்கி நன்மை உண்டாகும் என்று பகவத்பாதர் கூறுகிறார். இந்த வருட சிவராத்ரி சிறப்புப் பதிவாக ஸ்ரீ ஆசார்யார் அருளிய சிவ-பஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தைப் பார்க்கலாம்.


நாகேந்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய

நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை-ந-காராய நம: சிவாய


சிறந்த சர்பங்களை மாலையாக அணிந்தவரும், மூன்று கண்களை உடையவரும், உடல் முழுவதும் விபூதி பூசியவரும், மஹேஸ்வரரும், அழிவற்றவரும், தூய்மையானவரும், திசைகளை ஆடையாகக் கொண்டவரும் பஞ்சாக்ஷரத்தில் உள்ள முதல் எழுத்தான ந-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.


மந்தாகினீ ஸலிலசந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமதநாத மஹேஸ்வராய

மந்தாரபுஷ்ப பஹுபுஷ்ப ஸுபுஜிதாய தஸ்மை-ம-காராய நம: சிவாய


கங்கா ஜலத்தால் குழைக்கப்பட்ட சந்தனத்தை உடலில் பூசியவரும் நந்திகேஸ்வரர் முதலான பூதகணங்களுக்குத் தலைவரும், மஹேஸ்வரரும், மந்தார புஷ்பம் போன்ற பலவிதனமா புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் இரண்டாவது எழுத்தான ம-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.



சிவாய கெளரிவதனாய அப்ஜப்ருந்த ஸூர்யாய தக்ஷாத்வர நாஸகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை-சி-காராய நம: சிவாய


மங்களமானவரும், பார்வதியின் முகமென்னும் தாமரைக் கூட்டத்தை மலரச் செய்யும் ஸுர்யன் போன்றவரும், தக்ஷன் இறுமாப்புடன் செய்த யாகத்தை நாசம் செய்தவரும், ஆலகால விஷத்தை சாப்பிட்டதால் நீல வர்ணமான கழுத்தை உடையவரும், தர்ம வடிவான வ்ருஷபத்தை கொடியாகக் கொண்டிருப்பவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் மூன்றாவது எழுத்தான-சி-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.


வஸிஷ்ட கும்போத்பவ கொளதமார்ய முநீந்த்ர தேவார்ச்சித சேகராய

சந்த்ரார்க்க வைஸ்வாநர லோசனாய தஸ்மை-வ-காராய நம:சிவாய


வஸிஷ்டர், அகஸ்தியர், கெளதமர் முதலிய சிறந்த முனிவர்களாலும், அனைத்து தேவர்களாம் பூஜிக்கப்பட்ட சிரஸ்ஸை உடையவரும், சந்திரன், ஸுர்யன், அக்னி ஆகியவர்களை மூன்று கண்களாக உடையவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் நான்காவது எழுத்தான வ-கார வடிவானவரும் மங்களத்தை தருபவருமான சிவனுக்கு நமஸ்கராம்.




யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய பிநாக ஹஸ்தாய ஸநாதனாய

திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை-ய-காராய நம: சிவாய


யக்ஷனான குபேர வடிவத்தில் இருப்பவரும், ஜடைகளைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், பிநாகம் என்னும் வில்லை கையில் வைத்திருப்பவரும், மிக பழமையானவரும், திவ்ய மங்கள வடிவானவரும், தேவருக்கெல்லாம் தேவரும், திசைகளையே ஆடையாகக் கொண்டவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் ஐந்தாவது எழுத்தான ய-கார வடிவானவரும், மங்களத்தைத் தருபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.

பஞ்சாக்ஷர மிதம் புண்யம் ய:படேத் சிவஸன்னிதெள

சிவலோக மவாப்னோதி சிவேன ஸஹ மோததே


இந்த புண்யமான பஞ்சாக்ஷர ஸ்தோத்ரத்தை சிவ ஸன்னிதியில் படிப்பவர்கள், இவ்வுலகில் ஸகல போகங்களையும் அனுபவித்து, பிறகு கைலாஸத்தை அடைந்து ஸ்ரீபரமேஸ்வரருடன் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள்.


சகலருக்கும் சாம்ப பரமேஸ்வரன் நலம் அருளப் பிரார்த்திப்போம்.

Thursday, February 12, 2009

திருநெல்வேலி - கோடகநல்லூர் [நவ-கைலாசங்கள் -4]

நவகைலாயப் பதிவுத் தொடரில் சேரன்மாதேவிக்கு அடுத்து பார்க்க இருப்பது கோடக நல்லூர். நவகிரஹங்களில் ஐந்தாவது இடமான செவ்வாய் கிரஹத்திற்கான திருத்தலம் கோடகநல்லூர். செவ்வாய் திசை என்பது 7 ஆண்டுகள் என்பர் ஜோதிஷ சாஸ்திரத்தில். நமக்கு மிகப் பரிச்சயமான செவ்வாய் தோஷம் போன்றவற்றிற்கு இத்தலமே பரிகாரத் தலம். இது மட்டுமல்லாது, தேசத்தின் வளர்ச்சி, போர்களில் வெற்றி, கடன் தொல்லை போன்ற விஷயங்களுக்கும் செவ்வாய் அதிபதி என்று கூறக்கேட்டிருக்கிறேன்.

இத்தலம் சேரன்மாதேவி-முக்கூடல் போகும் வழியில் தெற்கே அமைந்திருக்கிறது என்று கேள்வி. இதன் பழைய பெயர் கார்கோடக நல்லூர், மறுவி கோடகநல்லூராகி முடிவாக கோடனூர் விட்டதாம். பரிஷித் மஹாராஜாவை தீண்டி உயிர் நீக்கிய கார்கோடகன் என்னும் சர்பம் தனது சாபம் தீர தபஸ் செய்த இடம் என்பதால் இந்த ஊருக்கு கார்கோடக நல்லூர் என்று பெயராம். இப்போதும் இவ்வூரில் நீண்ட கரு-நாகங்கள் அடிக்கடி தென்படுவதாக பெரியவர்கள் கூறுகின்றனர்.

இக்கோவிலும் தாமிரபரணிக் கரையில் அமைந்த கோவிலே. இங்கே தாமிரபரணி தீர்த்தத்தின் பெயர் மார்க்கண்டேய தீர்த்தம் என்பதாம். மார்க்கண்டேய மஹரிஷி இங்கு வந்து தவமிருந்ததால் இப்பெயர் பெற்றதாகத் தெரிகிறது. இக்கோவிலில் இருக்கும் கல்வெட்டில் இவ்வூருக்கு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் இருப்பதாகச் சொல்கிறார்கள். மருத மரங்கள் நிறைந்த சோலையாக இருப்பதால் கோடை வாச ஸ்தலம் போன்று குளிர்ச்சியான ஊர் என்று கூறுகிறார் எனக்குச் செய்திகள் அளித்த மூதாட்டி.

இங்குள்ள ஈசனது திருநாமம் கைலாசநாதர், அம்பிகை சிவகாமியம்மன். இவ்வூரில் இக்கோவிலைத் தவிர அபிமுக்தீஸ்வரர் என்ற சிவன் கோவிலும், பிரஹன்மாதவர் என்னும் பெருமாள் பூமி தேவி, நீளாதேவியுடன் காக்ஷி கொடுக்கும் திருக்கோவிலும் இருப்பதாகச் சொல்கிறார். இந்த பெருமாள் கோவிலே பெரிய பிரான் கோவில் என்று அழைக்கப்படுகிறதாம். பல நூறு வருடங்களாக சைவ-வைஷ்ண சமயங்கள் இணைந்து தழைத்தோங்கும் திருத்தலம் என்று தெரிகிறது. சிருங்கேரி, மற்றும் ஆண்டவன், அகோபில மடங்கள் இங்கு பல காலமாக இருக்கிறதாம்.

இக்கோவிலில் விநாயகர், வள்ளி தேவ சேனாபதி, நந்தி போன்ற தேவதைகளுடன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமியம்மை தெற்கு நோக்கியும் எழுந்தருளி அருள்கின்றனர். கோவிலுக்கு கொடிமரம் ஏதும் கிடையாதாம். தற்போது ஒரு நேர பூஜை மட்டுமே நடந்து வருவதாகவும், சிவராத்திரி, பிரதோஷம், திருவாதிரை போன்ற விசேஷங்கள் நடப்பதாகவும் தெரிகிறது. நான்கு வேதங்கள் முழங்க இருந்த இவ்வூர் இன்று ஈசனது ஒருகால பூஜையுடன் இருப்பது வருந்த தக்க செய்திதான். திருநெல்வேலியில் இருந்து மிக அருகில் இருக்கும் இந்த சிறப்பான தலத்திற்கு செல்ல முயல்வோம், ஈசனருள் பெறுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!.

பி.கு: கோடகநல்லூர் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் படங்கள் கூகிளாண்டவர் அருளியது. இப்படங்களை இணையத்திற்கு அளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.

Monday, February 9, 2009

சதாசாரம், சிஷ்டாசாரம் அறிமுகம்....


தர்மங்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேதங்களும், வேதாங்கங்களும் என்றே சொல்லியிருக்கிறார்கள். வேதங்களை அறிந்துணர்ந்த ரிஷிகள் அதற்கு கிரந்தங்களை, ஸ்ம்ருதிகளை அளித்துள்ளனர். இவற்றிலேயே அனுஷ்டிக்கும் முறைகளான ஆசாரம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றை கடைபிடிக்கும் மனிதனது ஆசாரம் வெறும் சந்தோஷத்திற்கும், பகட்டிற்கும் மட்டுமல்லாது மனத்தூய்மைக்கும், செயல்களிலும், எண்ணங்களிலும் தவறுகள் வாராது காப்பதற்குமே என்று வகுக்கப்பட்டிருக்கிறது. வேதமறிந்தவர்கள், வேதத்தைப் போற்றுபவர்கள் பின்பற்றும் இவை சதாசாரம் அல்லது சிஷ்டாசாரம் என்று கூறப்படுகிறது.

ஸ்த்துக்கள் மிகுந்த ஆசாரம் ஸதாசாரம். சிஷ்டர்கள் தமது குருவினிடமிருந்து கைக் கொண்டதால் சிஷ்டாசாரம். பொதுவாக ஆசாரத்தை தர்மம் என்று கூறினாலும், தர்மத்திற்கு ஸஹாயமான உபதர்மங்களை சதாசாரம் என்றும் கூறியிருக்கின்றனர். உதாரணமாக, ஸந்தியாவந்தனம் என்பது நித்ய கர்மா, அதுவே வேதியருக்கு தர்மமும். அதனை செய்ய ஸ்நானம், கச்சம் அணிவது, புண்ட்ரமிட்டுக் கொண்டு செய்வது என்பது ஆசாரம். ஆசாரமில்லாதவனை வேதம் கூட சுத்தமாக்காது என்று எனது இல்லத்தில் அடிக்கடிக் கூறித்தான் வளர்த்தார்கள்.

ஆசாரத்தைப் பற்றி ஸ்ரீவத்ஸ சர்மா [பரமாச்சாரியாரிடத்து அதிக தொடர்பில் இருந்தவர்] அவர்கள் கூறும்போது, கர்மா அல்லது தர்மம் என்பது பாபம் என்னும் நோயை அகற்றும் மருந்து என்றும், இம்மருந்துடன் இருக்க வேண்டிய பத்தியமே ஆசாரம் என்றும் அழகாகக் கூறியுள்ளார். ஒவ்வொரு யுக/மன்வந்திரங்களும் முடிந்து, பிரளயம் ஏற்பட்டு பின்னர் மீண்டும் சிருஷ்டி ஏற்படும் போது வேதம் ஓதுபவர்கள், முந்தைய யுகத்தில்/மன்வந்திரத்தில் வேத அத்யய்னம் செய்தவர்கள் அனுசரித்தவற்றை போன்றே தொடர்வதே சிஷ்டாசாரம் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.

மத்ஸய புராணத்தில் சிஷ்டாசாரம் என்பதற்கு எட்டு குணங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவையாவன:

1. தானம் - நல்லவழியில் சம்பாதித்த பொருளை பிறர்க்கு, யாருக்கு அப்பொருள் தேவையிருக்கிறதோ அவர்களுக்கு அளித்தல்

2. சத்யம் தவறாமை - தான், கண்டு, கேட்டு உணர்ந்ததை உள்ளது உள்ளபடி உரைத்தல். தனக்கு ஏற்றபடி மாற்றிக் கூறாதிருத்தல்

3. தபஸ் - இந்திரியங்களை அடக்கி வசப்படுத்தல், ஏகாதசி போன்ற உபவாசம் இருத்தல், மெளனம் பழகுதல் போன்றவை

4.லோபமின்மை - நேர்மையான வழியில் சம்பாதித்ததை மட்டும் அனுபவித்தல், பிறரை மிரட்டி, தட்டிப் பறித்து, வஞ்சித்து பொருள் சேர்க்காமை

5. வித்யை - தபஸை அடிப்படையாகக் கொண்டு மனோ நாசம் ஏற்பட, பிரம்ம ஞானத்திற்கான வித்யையில் இடுபடுதல்

6. யாகம் போன்ற சத்கார்யத்திற்கு உதவுதல், ஹவிஸுக்கு செலவு செய்தல், வேதாத்யனம் செய்பவர்களுக்கு தக்ஷிணை அளித்தல், வேதங்களைக் கற்றல்

7. பூஜனம் - இஷ்ட, குல தெய்வங்களை ஆராதித்தல், அதிதி சத்காரம், தேவ, பித்ரு, பூத திருப்தி செய்தல்

8. இந்திரிய நிக்ரஹம் - தனக்காகவோ, பிறருக்காகவோ பஞ்ச இந்திரியங்களை விஷய வஸ்துக்களில் பிரவர்த்திக்காது இருத்தல்.

பிரம்மாவின் மானஸ புத்ரர்களான பிருகு, அத்ரி, அங்கிரஸ், வசிஷ்டர், புலஸ்தியர், மரீசி, புலஹர், க்ரது, மனு, தக்ஷன், போன்றவர் இவ்வாறான ஆசாரங்களைப் பின்பற்றினராம். மூன்று வர்ணத்தாருக்கும் ஆசார, அனுஷ்டானங்கள் கூறப்பட்டிருக்கிறது. இன்று செய்பவர் குறைந்து அல்லது வழக்கொழிந்ததால் அவை ஏதோ வேதியருக்கு மட்டும் என்ற தோற்றம் நிலவுகிறது. இவற்றை சிறிதளவேனும் நாமும் பின்பற்றி ஜன்மத்தைக் கடைத்தேறுவோம்.

Saturday, February 7, 2009

எம்பாரைப் போற்றுவோம்...


இன்று ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களுள் ஒருவரான எம்பார் திரு நக்ஷத்திரம், தை புனர்வசு. சதா சர்வ காலமும் தமது ஆசார்யரது (உடையவர்) நிழலாக வாழ்ந்தவர் எம்பார் ஸ்வாமிகள் என்று துறவற நாமம் பெற்ற கோவிந்தப் பெருமாள். இவர் அவதரித்த ஊர் ஸ்ரீ பெரும் புதூருக்கு அருகில் இருக்கும் மதுர மங்கலம் என்னும் ஊர். இவரது தாய்-தந்தையர் பெயர் முறையே, பெரிய பிராட்டி, கமலநயன பட்டர் என்பதாம். எம்பார் முதலில் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறார். அவரை ஸ்ரீ-வைஷ்ணவத்தை, குலாசாரத்தினை பின்பற்ற வைத்த பெருமை பெரிய திருமலை நம்பிகளைச் சாரும் என்று படித்த நினைவு. பெரிய திருமலை நம்பிகளுடன் வாழ்ந்து எல்லா சாஸ்திர்னக்களையும், திவ்யப்ரபந்தங்களையும் கற்றவராம்.



இவரது இரக்க குணத்திற்க்கு ஈடாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்கின்றனர். ஒரு சமயம் நந்தவனத்தில் புஷ்ப கைங்கர்யத்திற்க்காக பூக்களைக் கொய்து கொண்டு இருந்த பொழுது ஒரு பாம்பு தனது நாவினை வெளியே நீட்டிக்கொண்டு மிகுந்த வேதனையுடன் இருப்பதைக் கண்டாராம். அந்த அரவத்தின் நாவில் முள் தைத்திருப்பதால் அது வேதனையுடன் இருப்பதை அறிந்த ஸ்வாமிகள், அம்முள்ளை எடுத்து அப்பாம்பின் வேதனையைத் தீர்த்தாராம். இவரது ஜீவ காருண்யத்திற்கு இதைவிட ஒர் உதாரணம் சொல்ல முடியுமா என்ன?


ஒருமுறை உடையவர் ஸ்ரீரங்கத்தில் ராமாயணப் பிரவசனத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புகையில் திருமலை நம்பிகளிடத்து விடைபெறுகிறார். அப்போது திருமலை நம்பிகள், உடையவரிடம் பிரவசனத்தின்னை நடத்திக் கொடுத்தமைக்கு நன்றி பகன்று, இவ்வரிய பிரவசனத்திற்கு சம்பாவனை தர தன்னிடம் ஏதும் இல்லையே என்று வருந்தினாராம். அப்போது உடையவர், அவ்வாறு சம்பாவனை தருவதாக இருந்தால், 'திருத்திப் பணி கொண்ட கோவிந்தனை' தன்னுடன் அனுப்பித் தாருங்கள் என்று கேட்டாரம். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, இன்று முதல் உடையவரை தானாக (நம்பிகளாக) நினைத்து இருப்பீராக என்று கூறி அனுப்பியதாகச் செய்தி.


சிறு வயதில் யாதவப் பிரகாசரது குருகுலத்தில் உடையவருடன் கல்வி கற்றிருக்கிறார் கோவிந்தப் பெருமாள். அப்போது உடையவருக்கு தீங்கு விளைவிக்க முயன்றபோது, அதிலிருந்து காப்பாற்றியவர். பிற்காலத்தில் உடையவரை விட்டகலாது, நிழல் போல் தொடர்ந்ததால் இவருக்கு 'ராமானுஜ பதச்சாயா' அதாவது ராமனுஜரின் நிழல் என்று போற்றப்படுகிறார்.


இவர் திருமணமானவராகிலும், இல்லற தர்மத்தில் நாட்டமில்லாது, எப்போதும் ஆசார்யரது திருவடியில் இருந்திருக்கிறார். இச்சமயத்தில் தமது தாயின் கட்டாயத்தினால் தனது மனைவியை சந்தித்து அந்தர்யாமியான இறைவனது குண விசேஷங்களை எடுத்துரைத்துள்ளார். இவரது வைராக்கியத்தை அறிந்த உடையவர், கோவிந்தப் பெருமாளுக்கு துறவறம் அளித்து தனது பெயரைச் சுருக்கி 'எம்பார்' என்று துறவற நாமம் கொடுத்தாராம். இவர் எப்போதும் ஆசாரியானே சர்வம் என்றும், பெருமாளது லீலாவிபூதிகளே வாழ்க்கை என்று காட்டியிருக்கிறார். இவரது நன்னாளான இன்று இவரைப் பணிவோம். இறைவன் இவரைப் போன்ற குருபக்தியை நமக்கும் அளிப்பாராக.


சில வருடங்கள் முன் ஸ்ரீ ஏ.எம்.ஆர் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையே இவ்விடுகைக்கு ஆதாரம். படித்ததில் நினைவு இருந்ததை வைத்து எழுதியிருக்கிறேன். தவறுகள் இருந்தால் அது எனது நினைவாற்றல் குறைவே.

Friday, February 6, 2009

பாலா திரிபுர சுந்தரி - வாலைக் குமரி

பாலை என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டில் முதற்படி என்பர். ஸ்ரீ வித்யையில் "பாலா" மந்திரத்துடன் பெரும்பாலோர் நின்றுவிடுவது வழக்கம். இதனால் தானோ என்னவோ இம்மந்திரத்திற்கு "லகு ஸ்ரீ வித்யா" என்றே பெயர் இருக்கிறது. அன்னையை இந்த ரூபத்தில் ஆராதிக்க என்றே தனியாக கட்கமலா மற்றும் ஆவரண பூஜைகள் எல்லாம் இருக்கிறது. குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை பாலையாக பூஜிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.


அம்பிகையின் 9 வயது ரூபமே பாலா திரிபுர சுந்தரி என்பர். ஆனால் லலிதோபாக்யானத்தில் பாலா என்னும் சக்தி அன்னையின் ப்ரியத்தை பரிபூரணமாகப் பெற்ற தனி சக்தியாகவே கூறுவர். பாலாம்பிகையின் அனுக்ரஹம் கிடைத்தால், பராம்பிகை அனுக்ரஹம் சுலபமாகுமாம்.

ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், 'நித்ய யெளவனா' என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன் அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின் தென் மூலையில் காணலாம் என்றாராம். அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம் என்று கூறிக் கேட்டிருக்கிறேன். லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள "தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா" என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள், நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள் என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது. பாலாவிற்கு இன்னும் சில கோவில்களில் தனி சன்னதி உண்டு, அவை திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருக்கடையூர், சென்னை கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகிறது.

சித்தர்கள் சிலரும் இந்த அன்னையை பலவாறாகப் பாடியுள்ளனர். திருமூலர் தனது திருமந்திரத்தில்,

சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை (1199)
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்


ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை (1073)
நீங்காத பச்சை நிறம் உடையவள்
ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தானே

என்பதாக கூறியிருக்கிறார். கருவூரார் கூறுகையில்,

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு

என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார். இவர் போன்றே கொங்கண சித்தர் பாடியது வாலைக்கும்மி என்னும் பாடல் தொகுப்பு. அதிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.


முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை
அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே (54)
காலனை காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த
மானுடன் கோட்டை பிடித்தவளாம் (57)


இடுகையின் ஆரம்பத்தில் சொல்லியது போல, ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் பொருளாவது; சிவந்த நிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத் திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும்.



அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும், மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலது முறையே அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும். குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர். அம்பிகைக்கு சிறப்பான நாளான இந்த 4ஆம் தைவெள்ளியில் அவளைப் போற்றி வணங்கிடுவோம்.