Friday, December 25, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 4 (கோதாஸ்துதி)


நாகேசய: ஸுதநு பக்ஷிரத: கதம் தே
ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண:!
ஏவம் விதா: ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:
ஸந்தர்சயந்தி பரிஹாஸகிர: ஸகீநாம்!!

அழகிய திருமேனியுடையவளே!, கொடிய பாம்பில் படுப்பதும், பறவையை வாகனமாகவும் கொண்ட முதுமை கொண்ட ஒருவரை நீ உன் மணாளராக எப்படி வரித்தாய்? என்றெல்லாம் தோழிகள் பரிஹாஸம் செய்யும் சொற்களைத் தாண்டி நீ வரித்திருக்கிறாய் என்றால் அது உனக்கு உள்ள காதலையன்றோ காட்டுகிறது.

நேரடிப் பொருள் இப்படியாக இருப்பினும், ஸ்ரீதேசிகர் இங்கே சொல்லியிருப்பது பின்வருமாறு. கோதை நீ உன் பெருமைக்கு ஏற்ற வரனையே வரித்திருக்கிறாய் என்பது தான். எப்போதும் கைங்கர்யம் செய்பவனாகவும், அழகு, குளிர்ச்சி, மேன்மை, மற்றும் உயர்வு பொருந்திய ஆதிசேஷனை படுக்கையாகவும்ம், வேதஸ்வரூபன் என்று கூறப்படும் சகல சக்திகளையும் உடைய கருடனை வாஹனமாகவும் கொண்ட பரம்பொருளை வரனாக வரித்திருக்கிறாய் என்கிறார்.


த்வத் புக்த மால்ய ஸுரபீக்ருத சாருமெளளே:
ஹித்வா புஜாந்தா கதாமபி வைஜயந்தீம்!
பத்யுஸ் தவேச்வரி மித: ப்ரதிகாத லோலா:
பர்ஹாத்பத்ர ருசி மாரசயந்தி ப்ருங்கா:!!

சகல லோகங்களுக்கும் தலைவியானவளே!, பெருமாள் தனது திருமார்பில் வைஜயந்தி என்னும் மாலையை அணிந்திருக்கிறார். அந்த வைஜயந்தியின் நறுமணத்தால் அம்மாலையின் மீது வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்தன. நீ சூடிக்கொடுத்த மாலையை பெருமாள் தனது முடியில் சூடியதால் மணம் மிகுந்த திருமுடிகளாயிற்று. இதன் காரணமாக வைஜயந்தி மாலையைச் சுற்றி வந்த வண்டுகள் அதிலிருந்து அகன்று பெருமாள் தலையில் சூடியிருக்கும், நீ சுடிக் கொடுத்த மாலையைச் சுற்றத் துவங்குகின்றன. அவ்வண்டுகள் அவ்வாறு சுற்றுவது மயில் தோகையால் பெருமாளுக்கு குடை அமைத்தது போல விளங்குகிறது.

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி
ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி!
மெளளி ஸ்ரஜா தவ முகுந்த கிரிடபாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ!!

கோதையே!, பெருமாள் அணிந்திருக்கும் வைஜயந்தி என்னும் மாலையானது எப்போதும் மணம் வீசக்கூடியதுதான், அவனது திருவுளத்துக்கு உவப்பானதுதான், நல்ல செம்மை நிறமும், மென்மையும் உடையதுதான். இத்துணை பெருமையுடயதாக அம்மாலை இருந்தாலும், அது பெருமாளுடைய திருமுடியில் இடம்பெறும் பேறு கிட்டவில்லை. ஆனால் நீ களைந்து கொடுத்த மாலையோ அவனது திருமுடியை அலங்கரித்து வைஜயந்தி மாலையின் தரத்தைத் தாழ்த்திவிடுகிறதே. நீ சூடிக்களைந்த மாலையைத் தலையில் தாங்கி மதிப்பளிக்கிறான் உனது மணாளன்.

த்வந்மெளளி தாமநி விபோ: சிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா:!
மஞ்ஜுஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயாம்வரம் கமபி மங்களதூர்ய கோஷம்!!

பெருமான் தன் தலையில் அணிந்துள்ள, நீ சூடிக் கொடுத்த மாலையை வண்டுகள் சுற்றி வந்து தமது இஷ்டப்படி தேனைக் குடிக்கின்றன. அவ்வாறு அவை மகிழ்ச்சியுடன் தேனைப் பருகி, இனிமையாக ரீங்காரம் பாடுகின்றன. அப்போது அவ்வண்டுகள் ஏற்படுத்தும் ஒலியானது உனது சுயம்வரத்துக்கான மங்கள வாத்தியங்களின் முழக்கமாக இருக்கிறது.

தொடர்ந்து ஸ்துதிப்போம்

Wednesday, December 23, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 3 (கோதாஸ்துதி)




மாத: ஸமுத்திதவதீ மதிவிஷ்ணுசித்தம்
விச்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம்!
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்திமந்யாம்
ஸந்த: பயோதி துஹிது: ஸஹஜாம் விதுஸத்வாம்

தாயே!, நீ சந்திரனது இன்னொரு வடிவமானவள்.நீ விஷ்ணு சித்தரின் மகளாக அவதரித்தாய், சந்திரனோ மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து தோன்றியதாக வேதம் கூறுகிறது. சந்திரன் உலகிலுள்ள எல்லோரையும் மகிழ்விக்கும் ஒளியைத் தருகிறான். நீ உனது வாக்கிலிருந்து வந்த அமுத மொழிகளாலும், உனது அழகிய திருமேனி தரிசனத்தாலும் உலகிலுள்ள எல்லோருடைய ஸம்ஸாரதாபத்தை போக்குகின்றாய். கற்றறிந்த பெரியவர்கள் உன்னை பார்கடலில் உதித்த மஹாலக்ஷ்மியின் சகோதரியாகச் சொல்கின்றனர். பாற்கடலில் பிறந்த சந்திரன் மஹாலக்ஷ்மிக்கு சகோதரன் என்றால் உனக்கும் சகோதரனன்றோ.

தாதஸ் து தே மதுபித: ஸ்துதிலேச வச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிசதை ரநவாப்த பூர்வம்!
தவந்மெளளி கந்த ஸுபகா முபஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம்!!

சிறிதளவே துதித்தாலும் வசப்படும் பெருமாளை, பலரும் செவிக்கு இனிமையான பலநூறு பாடல்கள் பாடி மகிழ்வித்தாலும், உன் தந்தைமட்டுமே 'பெரியாழ்வார்' என்று பெயர் பெற்றார். நீ சூடிக்கொடுத்த மலர் மாலைகளை பெருமாளுக்கு அளித்ததால் அல்லவா, அவருக்கு பெரியாழ்வார் என்ற பெயர் கிடைத்தது. பெருமாளுக்கு உன் மேல் இருக்கும் அன்பாலேயே மற்றவர்களுக்குக் கிடைக்காத அப்பெயரை உன் தந்தை பெற்றார்.

திக் தக்ஷிணாஸபி பரிபக்த்ரிமா புண்ய லப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத்!
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாந பூர்வம்
நித்ராளுநாஸபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:!!

தேவி, தெற்குப் பகுதியில் (ஸ்ரீவில்லிப்புத்தூரில்) நீ அவதரித்ததால் அத்திசை மிகவும் புண்ணியம் செய்ததாக, எல்லாவற்றிலும் மேம்பட்ட திசையாகிறது. ஸ்ரீரங்கப் பெருமான் உலக நன்மையை நினைத்தவாறே உறங்கினாலும், அவன் நீ அவதரித்த தெற்குத் திசையை உற்று நோக்கியவாறே உறங்குகின்றான். உனது அவதாரத்தால்தான் அவனது தெற்கு நோக்கிய பேறு கிட்டியது.

ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்
கோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே!
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதீ ப்ரப்ருதயோசபி பவந்தி புண்யா:!!

விசேஷ காலங்களில் கங்கை போன்ற புனித நதிகள் கோதாவரி நதிக்கு வந்து வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அந்த விசேஷகாலங்களில் கோதாவரி நதி தன்னிடத்தில் கூடும் மற்ற நதிகளை மட்டுமல்லாது உலகத்தையே தூய்மையாக்குகிறது. இவ்வாறு கோதாவரி நதி தூய்மையாக்குவது எங்கனம் என்று பார்த்தால் அது உனது பெயரைத் தாங்கியிருப்பதாலேயே என்று தெரிகிறது. உனது பெயரைத் தரித்ததால்தான் உலகனைத்தையும் தூய்மையாக்கும் சக்தி அந்நதிக்கு வாய்த்தது.

*********ஸ்துதி தொடரும்***********

Monday, December 21, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 2 (கோதாஸ்துதி)


முந்தைய பதிவு இங்கே!

அஸ்மாத்ருசா மபக்ருதெள சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸெள் முகுந்த:!
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மெளளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுரை: ச கிராம் நிகும்பை:!!

தேவி!, சாஸ்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்களைச் செய்வதையே நெடுங்காலமாக கொண்டிருக்கிறோம், இருப்பினும் உனது நாயகனான பெருமாள் எங்களுக்கு அருள்புரிகிறான். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளுவதன் காரணத்தை கவனித்ததில், அதற்கான காரணம் நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிர்ருப்பதே என்று தெரிகிறது. சூடிக்கொடுத்த மாலை மட்டுமின்றி வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழால் பிரபந்தமும் பாடித்துத் துதிக்கிறாய். உனது இந்த பாடல்களாலும், மலர் மாலையாலும் உன்குழந்தைகளாகிய எங்களை தண்டிக்காது அருள்புரிகிறார் பெருமாள்.


சோணாஸ்தரோபி குசயோரபி துங்கபத்ரா
வாசாம் ப்ரவாஹ நிவஹோபி ஸரஸ்வதீ த்வம்!
அப்ராக்ருதைரபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்
கோதபி தேவி கமிதுர் நநு நர்மதாஸி!!

இதுவும் பல நதிகளின் பெயர்களைக் கொண்ட ஸ்லோகமாக இருக்கிறது, சிலேடையாகச் சொல்லியிருக்கிறார் தேசிகர்.

கோதே!, உனது அதரங்கள் செந்நிறமாகவும் (கங்கை), உயர்ந்த கொங்கைகள் உயர்ந்த மிடுக்குடனும் (துங்கபத்ரா), வாக்கில்/சொற்கள் சரஸ்வதியாகவும், உலக பந்தமற்ற பக்தியில் ரஜோ குணமற்றவளாகவும் (விரஜா நதி), நம்பெருமாளுக்கு இயற்கையாகவே உனது சொற்களால் பெருமாளுக்கு பரிஹாசமூட்டுபவளாக (நர்மதை) இருக்கிறாயல்லவா?.

வல்மீகத: ச்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபெளம:!
கோதே கிமத்புதமிதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்த நிபா: ப்ரபந்தா:!!


அம்மா கோதை, பூமியில் உள்ள மண்புற்று பூமாதேவியின் செவி/காது என்று வேதம் சொல்கிறது. நீ பூமிதேவியின் அம்சமாக இருப்பதால் புற்று உனக்கும் காதாகிறது. புற்றாகிய உனது காதில் தோன்றிய வால்மிகி மஹரிஷி அற்புதமான ராமாயணத்தை பாடி கவிச்சக்ரவர்த்தியானார். உனது காதில் தோன்றிய வால்மிகி முதன்மையும், தலைமையும் பெற்றார் என்றால், உனது தாமரையொத்த முகத்தில் தோன்றிய பிரபந்தங்கள் எங்களுக்கு அமிர்தமாக இனிப்பது என்ன ஆச்சர்யம்?.


போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த:!
உச்சாவசைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை:
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா:!!

கோதை, நீ பெண்ணானதால் ஆண்மகனான பெருமாளை பல்வேறு வகைகள் அனுபவித்து மகிழ்வதற்கு உனக்கு உரிமையும், கடமையும், முறையும் இருக்கிறது. ஆனால் உன் தந்தையான பெரியாழ்வார் போன்ற பெரியவர்கள் தாங்களும் நீ பெற்ற அந்த அனுபவங்களைப் பெறவேண்டும் என்றால் இயலுமா?. ஆகவேதான் அவர்கள் தங்களுக்கு இறைவனிடம் இருக்கும் பக்தியையே காதலாக்கி, காதலின் பல்வேறு நிலைகளான பிரிந்து வருதல், கூடுதல், தூதுவிடல் போன்றவற்றை அனுபவித்து அதனை பாடினர். ஆனால் உனது பெருமாளிடத்தான் இயற்கையான காதலின் மூலமாக எழுந்த அனுபவங்களை எங்களால் சொல்ல இயலுமோ?.

Wednesday, December 16, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 1

மார்கழி மாதம் பற்றி 2007ல் 4 பதிவுகள் இட்டேன். அதன் தொடர்ச்சியாக இன்னும் 3 பதிவுகள் இட நினைத்திருந்தேன், ஆனால் சில தவிர்க்க இயலாத காரணங்களால் அதனை அப்போது தொடர இயலவில்லை. தற்போது அதனை தொடர எண்ணம் இருக்கிறது, பார்க்கலாம்.

மார்கழி பற்றிய முந்தைய இடுகைகளின் லிங்க் கிழே!



"ஸ்ரீ தேசிக ஸ்தோத்ரமாலா" என்னும் ஸ்ரீ தேசிகரால் செய்யப்பட்ட ஸ்தோத்ரங்கள் பற்றிய திரட்டு ஒன்றினை நண்பர் ராகவ் உதவியால் படிக்கக் கிடைத்தது. மார்கழியில் கோதையை வழிபடுதல் சிறப்பல்லவா?, அதிலும் ஸ்ரீ தேசிகர் அருளிய ஸ்தோத்ரங்களால் நாச்சியாரை வணங்குதல் விசேஷம் என்று தோன்றுகிறது. ஆகவே "கோதாஸ்துதி" என்ற பெயரில் ஸ்ரீதேசிகர் அருளிய 29 ஸ்லோகங்களைப் ப்ளாக்கில் போடலாம் என்றிருக்கிறேன்.


செளந்தர்ய லஹரி போல விளக்கங்கள் சொல்லுமளவுக்கு எனக்கு இதில் பரிச்சயம் இல்லை. புத்தகத்தில் இருப்பதை மட்டும் தட்டச்சு செய்து சற்றே விளக்கங்களுடன் போடப் போகிறேன். மார்கழி 30 நாட்களில் ஒருமுறையானும் இந்த ஸ்லோகங்களை படித்து இறையருளை வேண்டுவோம்.

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்!
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!!

சாதாரணமாக இல்லங்களில் பிறக்கும் குழந்தையை வம்சம் தழைக்க வந்த குலக்கொடி, குலக்கொழுந்து என்றெல்லாம் இன்றும் பெரியவர்கள் சொல்லக் கேட்கிறோம். இங்கு ஸ்ரீதேசிகரும் அதே வார்த்தையைச் சொல்கிறார். பெரியாழ்வார் என்று போற்றப்படும் ஸ்ரீவிஷ்ணு சித்தரது குலக்கொடியாம் கோதை. அதிலும் நந்தன கல்பவல்லி என்று இந்திரனது உத்தியான-வனமாகிய நந்தவனத்தில் உதித்த, கேட்பவற்றையெல்லாம் கொடுக்கும் கற்பகவல்லிக் கொடி என்று நாச்சியாரை விளிக்கிறார். ஸ்ரீரங்க ராஜனையும் அடியாருக்கு எல்லாந்தரும் சந்தனமரம் போன்றவன் என்று கூறி, ஆண்டாள் என்னும் கற்பகவல்லிக் கொடி தவழும் ஹரிசந்தன மரமானது பார்க்கத் திகட்டாத பரிபூரணமாக இருக்கிறது என்று சொல்கிறார். பொறுமைக்கு உதாரணமாக பூமிதேவியைச் சொல்வது வழக்கம். அதையே ஸ்ரீ தேசிகரும், பூமிதேவியே கோதை நாச்சியாராக வந்தாளோ அல்லது ஸ்ரீமஹா லக்ஷ்மியே மற்றொரு திருவுருக்கொண்டு வந்தாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது என்று கூறி, வேறு கதியற்ற நான் கோதை நாச்சியாரைச் சரணடைகின்றேன் என்று கூறுகிறார்.

வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸீநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே!
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மெளநத்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா:!!

கோதே!, வேதங்களும் உனது பெருமையைக் கூறத்தொடங்கி வெற்றியடைய முடியாத அளவு பெருமையுடையவள் நீ. அப்படியான உன் பெருமைகள என் போன்ற சிற்றறிவினர்களது தோத்திரத்தில் கூறயிலாதென்பதை அறிவேன். ஆனாலும் உனது குணாதிசயங்கள் எனது மெளனத்தைக் கலைத்து பேசவைக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது. உனது கல்யாண குணங்கள் எனக்கு வலிமையளித்து உன் புகழைப் பேசவைப்பதால் உன்னைத் துதிக்க முயல்கிறேன்.

த்வத் ப்ரேயஸ: ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
துல்யாம் த்வதீய மணிநூபுர சிஞ்ஜிதாநாம்!
கோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்டவார்ஹாம்
வாசம் ப்ரஸந்ந மதுராம் மம ஸம்விதேஹி!!

கோதையம்பா!, உன்னைப் போற்றிப்பாடும் திறத்தையும் எனக்கு நீயே அருளவேண்டும். நீ நடந்து வருகையில் உன்கால் சிலம்பு ஏற்படுத்தும் ஒலியினால் மகிழும் பெருமாளுக்கு, நீயருளும் அந்த வாக்குத்திறனால் உன்னை நான் பாடுவது திருவமுதாய் இருக்கும். நீயெனக்கு அருளும் வாக்கு கேட்பவர்களுக்கு தெளிவாய், செவிக்கு இனிதாய் இருக்கும்படியாக அருள்வாய்.

க்ருஷ்ணாந்வயேந தததீம் யமுனா நுபாவம்
தீர்த்தைர் யதாவதவ்காஹ்ய ஸரஸ்வதீம் தே!
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாக்ஷாத்
வாச: ஸ்ப்புரந்தி மகரந்தமுசள் கவீநாம்!!

கோதைப் பிராட்டியே!, க்ருஷ்ணனுடைய திருவிளயாடல்களால் பெயர் பெற்றது யமுனை நதி. அந்த கண்ணனின் புகழைப்பாடிய உனது பாடல்கள் (திருப்பாவை, நாச்சியார் திருமொழி), அதே கண்ணனின் சம்பந்தத்தால் பெருமை பெற்று விளங்குகின்றது. உனது பாடல்களின் மூலமாக ஆசார்யர்கள் தத்துவார்த்தங்களை உணர்ந்து அநுபவித்து ஞானம் பெறுகின்றனர். நாவன்மை பெற்ற உனது கடாக்ஷத்தால் ஆசார்யார்கள் சொல்வதில் தேன்-மழை போன்ற கருத்துக்கள் பிறந்து உலகை காக்கின்றன.

**ஸ்துதி தொடரும்**

Saturday, December 12, 2009

ஸ்ரீ மஹா பெரியவாளது வார்ஷிக ஆராதனை..

நடமாடும் தெய்வம், பரமேஸ்வரனின் சமீபத்தைய அவதாரம், அபார கருணா-மூர்த்தி என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் தனது 13ம் வயதில் ஸன்யாசம் பூண்டு உலக மக்களின் நன்மைக்காவே வாழ்ந்தவர். அவரது 100 வருட பூலோக வாசத்தில் பலமுறை ஆஸேது-ஹிமாசலம் பலமுறை நடைப்பயணமாகவே யாத்ரை செய்து, ஆங்காங்கே த்ரிபுர சுந்தரி, ஸ்ரீசந்திர மெளலி பூஜைகள் செய்து இறையருளை பாரதமெங்கும் நிறையச் செய்தவர்.இன்று அவரது ஆராதனை தினம். காலையில் இருந்தே மனது பழைய தரிசனங்களை அசை போடுகிறது.



பெரியவாளை தரிசிக்கச் சென்றால், 2-3 நாட்கள் அவருடனே இருந்து அருள் மழையில் நனைந்து வருபவர் என் தந்தை. 1990க்கு மேலேயே தரிசன நேரத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டார் ஆசார்யாள். முன்பு போல் எப்போதும் அவரருகில் இருக்க இயலவில்லைஎன்று மிகுந்த விசனம் கொள்வார். இடையிடையில் மடத்திற்குச் சென்று வருபவர்கள் அவரது உடல் நிலை பற்றிச் சொல்வதைக் கேட்கும் போதும், ஏதோ நமது இல்லத்தில் ஒருவர் உடல் நலமின்றி வருந்துவது போன்ற மனநிலையை உணர்ந்திருக்கிறேன். 16 வருஷங்களுக்கு முன் தாய்-தந்தையுடன் காஞ்சி சென்று தரிசனம் செய்த பிறகு,ஒரு வருஷமாக பெரியவாளது தரிசனம் வாய்க்கவில்லை. காஞ்சி சென்று 3 நாட்கள் தங்கி தரிசனம் செய்து திரும்பினோம். முதல் நாள் தரிசனம் செய்த போது, காஷ்ட-மெளனத்திலும்,நிஷ்டையிலுமே பெரியவா இருந்ததாகத்தான் தோன்றியதே தவிர, அவருக்கு உடல் நலக்குறைவு என்றோ, தள்ளாமையினால் பேச, உட்கார இயலாது இருக்கிறார் என்றோ தோன்றியது,ஆயிற்று இரண்டாம் நாளும் தரிசனம் செய்து பாத பூஜை, பிக்ஷாவந்தன பிரசாதம் எல்லாம் வாங்கிக் கொண்டு திரும்பினோம். மறுநாள் தரிசனம் முடித்து சாயரக்ஷை கிளம்பி சகோதரியைப் பார்க்கச் செல்வதாக் உத்தேசம். ' நாளைய தரிசனத்தின் போது நம்மிடம் பெரியவா ஒரு வார்த்தையாவது பேசுவாளாடா?, என்னதான் அவாளை த்ருப்தியா தரிசனம் செய்தாலும், அவரது குரலைக் கேட்காது திரும்பிச் செல்ல நேருமோ' என்றெல்லாம் சொல்லியவாறு படுத்தார்.

மறுநாள் தரிசனம் செய்யச் சென்றோம், கூட்டம் அதிகமில்லை. பெரியவா தரிசனத்தின் போது என்-தந்தை கண்களில் நீர் மல்க நிற்கிறார், 'க்ஷேமமாக இருப்பாய்,போய்ட்டு வா' என்று உடைகளுக்குள் இருந்த கைகளை விலக்கி ஆசியளித்தார். இதுவே கடைசி தரிசனம் என்பதை நாங்கள் யாரும் நினைத்தும் பார்க்கவில்லை. பெரியவா ஆசிர்வாதம் செய்தார், 2 வார்த்தைகள் பேசினார் என்கிற பரம-த்ருப்தியுடன் காத்திருந்து தீர்த்தப் பிரசாதம் பெற்றுத் திரும்பினோம்.

1994ம் ஆண்டு, நான் அலுவலக விஷயமாக திருக்கோவிலூருக்குச் சென்றிருந்தேன். அன்று சனிக்கிழமை, அலுவலக வேலைகளை மதியத்துடன் முடித்துக் கொண்டு விழுப்புரம் சென்று பெரியவாளது பூர்வீக இல்லத்தை விட்டு, மறுநாள் ஞாயிறன்று காஞ்சியில் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்திருந்தேன். மாலை 6 மணி சமயத்தி விழுப்புரத்தை அடைந்த நேரத்தில் பெரியவா முக்தியான செய்தியை அறிய நேர்ந்தது. 1994ம் ஆண்டு, உத்தராயண புண்யகாலம், மார்கழி மாதம், க்ருஷ்ண பக்ஷ, சர்வ ஏகாதசி (ஜனவரி 8ம் தேதி), மதியம் 2.50 மணிக்கு ஜகத்குரு என்றழக்கப்பட்ட ஸ்ரீ பெரியவா ஈசனுடன் இணைந்தார். வருஷங்கள் சென்றுவிட்டன, ஆனால், அன்றிரவே காஞ்சி சென்று அவரது திருமேனி தரிசனம் செய்ததும், பின்னர் நடந்த மஹா-அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டதும் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.


முக்தி க்ஷேத்ரமான காஞ்சியில் ஸ்ரீ பெரியவாளது அதிஷ்டானத்தில் இன்று மிக விமர்சையாக ஆராதனை நடக்கிறது. மடத்தின் எல்லாக் கிளைகளிலும் ஆராதனை சிறப்பாக நடைபெறுவதாகத் தெரிகிறது. அருகில் இருக்கும் கிளைகளிலோ, அல்லது அவரவர் இல்லத்தில்பெரியவாளை த்யானித்து சித்த சுத்தியும், ஞான வைராக்யமும் சித்திக்க வேண்டிடுவோம்.


அபார கருணா ஸிந்தும் ஞானதம் சாந்த ரூபிணிம்
ஸ்ரீ சந்திர சேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்



ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர

Wednesday, December 2, 2009

ஸ்ரீ தத்தாத்ரேயர்....

இன்று தத்தாத்ரேய ஜெயந்தி. கலியில் மக்கள் உய்ய வேண்டும் என்பதற்க்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம ஸ்வரூபமே. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு, ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. மார்க்கண்டேயனைப் போல, ஹனுமனைப் போல தத்தாத்ரேயரும் சிரஞ்சீவி. இவரைப் பற்றி சிறிது அறிவோமா?.




அத்ரி என்று ஒரு மஹரிஷி, இவரது மறுபாதியே அனுசூயை. இவர்கள் தமக்கு புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்தனர். அப்போது மும்மூர்த்திகளும் அவர்கள் முன்பு தோன்றி, தாங்கள் மூவரும் அத்ரி-அனுசூயைக்கு மகனாகப் பிறப்பதாக வாக்களிக்கின்றனர். அவ்வாறு தோன்றியவரே தத்தாத்ரேயர். மும்மூர்த்திகளும் தானே வந்து அத்ரி-அனுசூயைக்கு மகனாக பிறந்தமையால் 'த(3)த்த' என்ற பெயர் வந்ததாகச் சொல்வர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார். இவர் பிறந்தது மார்கழி மாதத்து பெளர்ணமி, மிருகசீர்ஷ நக்ஷத்திரம். இந்த அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்றும் கூறப்படுகிறது. ஸ்தானுமாலையனாக இறைவன் இங்கே இருக்கிறார்.

யாயாதி ராஜ வம்சத்தில் வந்த கர்த்தவீர்யார்ஜுனன் தத்தரது சிஷ்யர்களுள் ஒருவன். இவனது குல-குரு கர்க்க மஹரிஷியின் மூலம் தத்தாத்ரேயரைப் பற்றி அறிந்து அவரை நோக்கித் தவமிருந்து வரங்களைப் பெறுகிறான். வரங்களை அளித்து அவனுக்கு தர்மோபதேசமும் செய்விக்கிறார் தத்தாத்ரேயர். இந்த கர்த்தவீர்யார்ஜுனனே பின்னாளில் பரசுராமனால் அழிக்கப்படுபவர். இன்றும் களவு போன பொருட்கள் கிடைக்க கர்த்த வீர்யார்ஜுன மந்திரம் என்ற மந்திரத்தை ஜபம் செய்வர். இந்த மந்திரத்தின் ரிஷி தத்தாத்ரேயரே. தத்தாத்ரேயருக்கு ஆத்ம ஞானமாக விளங்குபவள் அன்னை திரிபுரசுந்தரியே. அவளே தத்தாத்ரேயரின் மூன்று முகங்களாக விளங்குகிறாள். தத்தாத்ரேயர் தான் குருவாக இருந்து பரசுராமருக்கு ஸ்ரீவித்யா உபாசனையை அளித்தவர்.


பரபிரம்ம வஸ்துவே மும்மூர்த்திகளாக அருள் புரிகிறது என்பது வேதாந்த சித்தாந்தம். மூன்றாகத் தோன்றிய ஒன்றே ஞான வைராக்கிய சம்பன்னரான ஸ்ரீ தத்தாத்ரேயர். அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாய வஸ்த்ரம் போன்றவை கிடையாது. பாரத்தின் பல இடங்களிலும் பாதுகைகளில் இவரை தியானித்து வணங்கக் கோவில்கள் இருக்கிறது. உத்ரப்பிரதேசத்தில் "குரு மூர்த்தி" என்றாலேயே அது தத்தரைக் குறிப்பதாக இருக்கிறதாம். பிரயாகையில் இவரது கோவில் இருப்பதாக தெரிகிறது. அதேபோல இமாலயத்தில், ஆத்ரேய மலைப்பகுதியில் ஒரு குகையில் பலகாலம் தத்தர் தவம் செய்ததாகவும், அந்த குகையின் பெயரே தத்த குகை என்றும் படித்திருக்கிறேன். இதேபோல ஸஹ்யமலையில் காவிரி உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகிலும், சித்ரதூர்க்கா மலையிலும், குல்பர்கா அருகில் கங்காப்பூர் என்னும் இடத்திலும் இவர் தவம் செய்த குகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே கர்னாடகாவில் நேற்று முதல் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மைசூரில் கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் தமது தத்த பீடத்தில் மிக விமர்சையாக தத்த ஜெயந்தியை கொண்டாடுகிறார்.


தமிழகத்தில் சேந்தமங்கலத்தில் சுயம்பிர்காச அவதூத ஸ்வாமிகள் ஸ்ரீ தத்தரைப் பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டிருக்கிறார், இன்று அந்த இடமே, தத்தகிரி குகாலயம் என்று வழங்கப்படுகிறது. இங்கே விமர்சையாக தத்த வழிபாடு நடக்கிறது. புதுக்கோட்டையில் சாந்தானந்த ஸ்வாமிகள் புவனேஸ்வரி அதிஷ்ட்டானத்திலும், ஸ்கந்தகிரி (சேலம் அருகே) தத்தருக்கு சன்னதி அமைத்திருக்கிறார். இதேபோல செங்காலிபுரத்தில் ராமானந்த பிரம்மேந்திரர் என்னும் யதி, ஸ்ரீ தத்தருக்கு ஆலயம் அமைத்திருப்பதாகத் தெரிகிறது.


நக்ஷத்திரமாலிகா என்ற ஸ்லோகங்களில் இவர் பதினாரு இடங்களில் இருந்தக் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி, கோதாவரிக்கு வடக்கே சிம்ம பர்வதத்தில் ஜனித்து, மாயாபுரியில் நித்திரை செய்து, கங்கையில் ஸ்னானமும், கந்தர்வ பட்டணத்தில் தியானமும், குரு-க்ஷேத்திரத்தில் ஆசமனமும், கர்நாடகத்தில் காலை-சந்தியும், கோலாபுரத்தில் பிக்ஷையும், பாஞ்சாலத்தில் உணவும், தூங்காதீரத்தில் பானமும், பத்ரியில் புராண சிரவணமும், ரைவத பர்வதத்தில் இளைப்பாறுதலும், மேற்குக் கடற்கரையில் சாயரக்ஷை சந்தியும் செய்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ தத்தர் நிர்குண உபாசகர்களுக்கு ஸத்குருவாகவும், யோகிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார். இவரை நினைப்பதாலேயே பக்தர்களின் சங்கடங்கள் விலகியோடும் என்று சொல்லப்படுகிறது. இவரை உபாஸித்தால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடும், தீவிர வைராக்யமும் சித்திக்கும் என்று கூறப்படுகிறது. நாமும் ஞான-வைராக்கியம் சித்திக்க அவரை பிரார்த்திப்போமாக.

கோரக்ஷாத்யை: முய ஸுசிஷ்யை: பரிவீதம்

கோ-விப்ராணாம் போஷணஸக்தம் கருணாப்திம்

கோ-லக்ஷ்மீ சாம்புஜப கிரிஜா ஸகரூபம்

தத்தாத்ரேய ஸ்ரீபாத பத்மம் ப்ரணதோஸ்மி.

கோரக்ஷர் போன்ற முக்கிய சிஷ்யர்களால் சூழப்பட்டவரும், பசுக்களையும், பிரம்மத்தை அறிந்தவர்களையும் காப்பதில் தீவிரமாக இருப்பவரும், கருணைக்கடலாகவும், ப்ரம்ம-விஷ்ணு-சிவனது உருவத்தில் இருப்பவருமான தத்தாத்ரேயரின் பாதகமலங்களை வணங்குகிறேன்.

Monday, November 30, 2009

திருக்கார்த்திகைத் திருநாள்.....

தீபத்திற்கான திருவிழாக்களில் தீபாவளி ஒன்று, மற்றொன்று கார்த்திகை. தமிழகத்தில் தீபத்திருவிழாவாக நாம் கொண்டாடுவது கார்த்திகையே. இந்தப் பண்டிகையின் சிறப்பினையும், இறைவனை தீப-ஜோதியாக பெரியவர்கள் வழிபாடு செய்திட்ட சில நிகழ்வுகளையும் பற்றி இவ்விடுகையில் பார்க்கலாம். எல்லோருக்கும் திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.

எல்லா ஒளியும் இறைவனிடமிருந்தே தோன்றுகிறது என்பதை நிதர்சனமாக காட்டும் விழா கார்த்திகை தீபத் திருவிழா. கார்த்திகை முப்பது நாட்களும் விளக்குகள் ஏற்றி வீட்டின் நிலை/தலை வாசல் அருகே வைப்பது வழக்கம். கார்த்திகை மாதப் பெளர்ணமியன்று கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவது என்பது வழக்கம். விளக்கு ஏற்றும் போதும், சொக்கப்பனை கொளுத்தும் போதும் சொல்லப்படும் மந்திரம், உலகில் அனைவருக்கும் நன்மை ஏற்பட வேண்டும், மங்களம் எங்கும் பரவ வேண்டும் என்பதாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்த சொக்கப்பனையில் எல்லோரும் சிறிதளவு குங்கிலியத்தை சேர்ப்பதன் மூலம் தமது பாபங்களை நீக்கிக் கொள்ளலாம் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.

சிவாலயங்களில் கர்பக்கிரஹத்தின் பின்புறம் லிங்கோற்பவ மூர்த்தியைக் காணலாம். சிவபெருமான் ஜோதிமயமாக நின்றபோது அடியை மஹாவிஷ்ணுவும், முடியை பிரம்மனும் தேடித் தோல்வியுற்றதைக் குறிப்பதே இந்த மூர்த்தி குறிக்கிறது. இதனையே திருநாவுக்கரசர் பின்வருமாறு கூறியுள்ளார்.






நாடி நாராயணன் நான்முகன் என்றிவர்
தேடித் திரிந்தும் காணவல்லதோ
மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத்
தாடிய பாதம் என் நெஞ்சுள் இருக்கவே

ஜோதி ஸ்வரூபனின் திருவடியைத் தேடி மஹாவிஷ்ணு கீழ் நோக்கிச் சென்றார், பிரம்மன் மேல் நோக்கிச் சென்றார். சிவபெருமான் ஜோதி ரூபமாக நின்றதை நினைவூட்டுவதே கார்த்திகைப் பெருவிழா.


திருவண்ணாமலை மற்றும் பல சிவஸ்தலங்களில் கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணியன்று அந்தி சாயும் நேரத்தில் ஒரு பெரிய அகல்-விளக்கினை ஏற்றி சிவபெருமானை அதில் ஆவாஹனம் செய்து அந்த தீபத்தை சுவாமி சன்னதியில் வைத்து பூஜிக்கின்றனர். மறுநாள் சொக்கப்பனையில் இருக்கும் பனைமரத்தின் அடித்துண்டில் அந்த தீபத்தை வைக்கின்றனர். இறைவன் ஜோதி ஸ்வரூபன் என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்யப்படுகிறது. இந்த சொக்கப்பனை ஆந்திரத்தில் "ஜ்வாலா தோரண விழா" என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அந்த பிரதேசத்தில் கூறப்படும் புராணம் வேறு மாதிரியானது.

தமிழகத்தில் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு மலையே சிவஸ்வரூபம். திருவண்ணாமலையை நினைத்தாலேயே முக்தி என்பர். ஜோதி-ஸ்வரூபனின் அடி-முடி தேடிய சம்பவம் நடந்தது இங்கே என்று சொல்லப்படுகிறது. மலைமீது தீபத்திருநாளான இன்று ஒரு பெரிய செப்பு அண்டாவில், 24 முழம் உள்ள துணியில் கற்பூரத்தூளைக் கொண்டு திரியாக்கி நெய்யிட்டு தீபமேற்றுகிறார்கள். இக்கோவிலில் தீப தரிசன மண்டபம் என்றே ஒரு மண்டபம் இருக்கிறது. கார்த்திகையன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகி, இந்த மண்டபத்தில் எழுந்தருளியதும் மலைமீது தீபம் ஏற்றப்படுகிறது.





அண்ணாமலையானுக்கு அரோஹரா..
******************************************************************************
தீபத்தில் இறைவன்

ஜோதிர் மயமான இறைவன் அண்டத்தில் மட்டுமில்லாது பிண்டத்திலும் சுடரொளியாகப் பிரகாசிக்கிறார் என்கிறது வேத வாக்கியம். "தஸ்ய மத்யே வஹ்னிசிகா அநியோர்த்வா" என்பதாக கட்டைவிரல் அளவில் தீப ஜோதியாக பிரம்மம் இதயத்தில் விளங்குகிறது என்பது பொருள். சாக்தத்திலும் தீபத்தில் அன்னையை ஆவாஹித்து வழிபடுவது சிலரது மரபு. இவ்வாறு அம்பிகையை தீபத்தில் பூஜிக்கும் போது சாக்ஷி தீபம் என்று அருகில் இன்னொரு தீபமும் இருக்க வேண்டும் என்பர்.


விளக் கொளியாகிய மின் கொடியாளை
விளக் கொளியாக விளங்கிடு நீயே!
விளங்கிடு மெய் நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளக்கினர் தானே

என்று திருமந்திரத்தில் ஞான விளக்கினைப்பற்றி திருமூலரும்,

"அருள் விளக்கே அருட்சுடரே அருட்ஜோதி சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே"

என்று ராமலிங்க ஸ்வாமிகளும் தமது 'அருட் பெருஞ்ஜோதியில் கூறியிருக்கிறார். இவர் வடலூரில் ஒளி விளக்கிற்கே ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தவர். இன்றும் தை-பூசத்தன்று ஜோதி தரிசனம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. வள்ளலார் ஏற்றிய தீபமும், அன்னதானத்திற்க்காக ஏற்றிய அடுப்பும் அணையாது காப்பாற்றப்படுகிறது.


திருநாவுக்கரசர் பஞ்சாக்ஷர மந்திரமே ஒளி மயமானது என்பதை பின்வரும் பாடலில் கூறியிருக்கிறார்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதியுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயமே

சிவபெருமான் ஜோதியாக விளங்கியது போல மஹாவிஷ்ணுவும் ஜோதி ஸ்வரூபனாக இருந்திருக்கிறார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இதனை உணர்த்தும் கோவில் காஞ்சீபுரத்தில் இருக்கிறது. பெருமாள் திருநாமமே தீபப்பிரகாசர் என்பது. தீந்தமிழில் விளக்கொளிப் பெருமாள் என்று கூறப்படுகிறார். இந்த தலத்திற்கு திருத்தண்கா, தூப்புல் என்று பெயர். பிரம்மா யாகம் செய்கையில் அவர் மனையாள் சரஸ்வதியே அதைத் தடுக்க முயல்கிறாள். அப்போது பெருமாள் ஜோதியாக விளங்கியதாக இத்தலபுராணம் சொல்கிறது. இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார்,
மின்னுருவாய் முன்னுருவில் வேத
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்

என்று கூறியதாக நண்பன் சேஷசாயி சொல்லக் கேட்டிருக்கிறேன். நண்பன் இந்த பாசுரம் தவிர பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் பாசுரங்களையும் சுட்டிக் காட்டினான். அவை கீழே!

வையகம் தகழியாக வார் கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காகச் செய்ய
சுடரொளியின் அடிக்கே சூட்டினேன்
சொல்மாலை இடரொளி நீங்கவே

அன்பே தகழியாக ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.

இவ்வாறாக எல்லா தெய்வங்களும் வாசம் செய்யும் தீபத்தை வணங்குவோம். மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Friday, November 13, 2009

நாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 1

*******************************************************************************
முன்பு ஆசார்ய ஹ்ருதயத்தில் இட்ட இடுகை இது. ஸ்ரீதர ஐயாவாளின் ஜெயந்தியை முன்னிட்டு மீள் பதிவிடுகிறேன் இதன் தொடர்ச்சி இங்கே.
**************************************************************** **************
முன்பே நாம் இங்கே பகவன் நாம போதேந்திரரைப் பற்றி பார்த்தோம். தற்போது திவாண்ணா தனது வலைப்பூவில் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதுவும் இந்த வலைப்பூவில் தொடராக வர இருக்கிறது. இன்று நாம் பார்க்க இருப்பது ஸ்ரீதர ஐயாவாள். சரி, ஸ்ரீதர ஐயாவாளைச் சொல்ல ஆரம்பிக்கும் இந்த இடுகையில் போதேந்திராளைப் பற்றியும், சதாசிவ பிரம்மத்தைப் பற்றியும் ஏன் ஆரம்பிக்கிறேன் என்று தோன்றும். இவர்கள் மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தெரிந்திருக்கலாம். இவர்கள் மூவரும் தான் தென்னாட்டில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நாம சங்கீர்த்தனத்தை பரப்பியவர்கள்.

இந்த மூவரையும் உற்று நோக்கினால் இன்னும் சில ஆச்சர்யமான விஷயங்களைப் பார்க்க முடியும். போதேந்திரர் சன்யாஸி, பிரம்மேந்திரர் அவதூதர், ஸ்ரீதரர் கிருஹஸ்தாச்ரமத்தில் இருந்தவர். போதேந்திரர் 'ராம நாம' மகிமையையும், ஸ்ரீதர ஐயாவாள் 'சிவ-நாம' மகிமையினையும், பிரம்மேந்திரர் 'ப்ரம்ஹைவ அஹம்' என்னும் அத்வைத நிலையுமாக கொண்ட வெவ்வேறான ஆச்ரமிகளானாலும், முடிவாக இவர்கள் உலகிற்கு பிரச்சாரம் செய்தது நாம சங்கீர்த்தனமே. ப்ரம்மேந்திரரும், போதேந்திரரும் தமது தவத்தால் அடைந்த யோக, போக சக்திகளை ஸ்ரீதர ஐயாவாள் எளிய பக்தி வழியில் அடைந்திருக்க்கிறார் என்றால் மிகையாகா. நாம சங்கீர்த்தனம் என்று கூறப்படும் பஜனை மார்க்கத்தின் இரண்டாம் குருநாதர் என்று இன்றும் ஸ்ரீதர ஐயாவாளை கூறுகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த மத்யார்ஜுனம் என்று போற்றப்படும் திருவிடைமருதூர் என்னும் சிறப்பான க்ஷேத்திரத்திற்கு அருகில் இருக்கும் திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் தோன்றியவர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் ஆந்திரத்திலிருந்து வந்து குடியமர்ந்த காகர்ல என்னும் வம்சத்தைச் சார்ந்தவர். இவரது குலப் பெயரே ஸ்ரீதர என்பது. வெங்கடேசன் என்பது இவரது பெயர். ஆனால் பிற்காலத்தில் ஐயாவாள் என்றாலே அது இவரைத்தான் குறிப்பிடுவதாக ஆயிற்று. இவரது குடும்பம் சிவ ஆராதனை செய்து வேத விற்பனர்களாக திகழ்ந்தனர். குடும்பத்தின் மூலமாக இவரிடம் வளர்ந்த சிவபக்தியானது, சிவனை ஏகாக்ரமான சிந்தனையில் பூஜிக்கச் செய்து சிவ தரிசனத்திற்கு வழிசெய்ததாகக் கூறப்படுகிறது. திருவிடைமருதூர் மஹாலிங்க மூர்த்தியை நித்யம் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். அந்த மூர்த்தியே இவருக்கு பிரத்யக்ஷ தெய்வம்.

இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ண த்வாதசமஞ்சரி, ஸ்தோத்ர பத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லக்ஷணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா என்று பல பக்தி நூல்களை எழுதியிருக்கிறார். இவரது சிவபக்தி, சிவ நாமஜபம், கீர்த்தனம் போன்றவையே இவரைப் பெருமைப் படுத்தியதாக அவரே சொல்லியிருக்கிறார் என்கின்றனர். பக்திக்கு இலக்கணமான சகல உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு தனக்கென ஏதும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் சிவார்பணம் செய்து பிறருக்கு அளித்துவிடுவாராம். தனது ஏழ்மை நிலையிலும் ஸ்வதர்மத்துடன் கூடிய கிருஹஸ்த தர்மத்தை விடாது, சிவார்ப்பணம் செய்து பற்றற்றவராக விளங்கினார். இதனாலேயே பண்டிதர்களும், பாமரர்களும் இவர் மீது மிகுந்த பக்தி கொண்டனர்.

ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார். சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை. மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர். ஐயாவாள் தமது கர்மா நிறைவடைவதற்காக கூர்ச்சங்களில் மூதாதையர்களை வரித்து சிராத்தத்தை நடத்தி முடிக்கிறார். ஆனால் அன்று மாலை மஹாலிங்கத்துக்கு பூஜை செய்ய நடை திறந்த அர்ச்சகர்கள், சன்னதியில் புலையன் வைத்திருக்கும் சில பொருட்களையும், புது வஸ்த்ரம், வெற்றிலை பாக்கு (ஐயாவாள் சிராத்தத்தில் அளித்தவை) போன்ற இருந்ததைக் கண்டு தெளிகின்றனர்.


இறைவனே தெரிய வைத்த பின்னரும், ஊரார் விருப்பப்படி கங்கையில் ஸ்நானம் செய்து பிராயச்சித்தம் செய்ய எண்ணி, கங்காஷ்டகம் என்று ஒரு ஸ்லோகம் இயற்றி கங்கையை வழிபட்டு தமது இல்லத்தில் இருக்கும் கிணற்றில் கங்கையைப் பிரவாகிக்க வேண்டுகிறார். அவரது வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் விதமாக கங்கை அவர் வீட்டின்பின் இருக்கும் கிணற்றில் பொங்கிப் பெருகி அந்த சிறு கிராமம் முழுவதும் நீராக ஓடியதாம். அந்த நீரில் ஐயாவாளும், அவருக்கு கட்டளையிட்டவர்களும் ஸ்நானம் செய்து கொண்டனராம். இன்றும் கார்த்திகை மாச அமாவாசை தினத்தில் திருவிசைநல்லூரில் இருக்கும் ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை வருவதாக நம்பிக்கை. அந்நாளில் வெளியூர்களிலிருந்து மக்கள் சென்று வழிபடுகின்றனர்.


அடுத்த வாரம் கிருஷ்ண த்வாதசமஞ்சரி, தயாசதகம் போன்ற நூல்கள் தோன்றக் காரணமான பகுதியையும், ஐயாவாள் இறைவனுடன் கலந்ததையும் பார்க்கலாம்

ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்
ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே

[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன். ]

நாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 2


***************************************************************************
முன்பு ஆசார்ய ஹருதயத்தில் இட்ட இடுகை, ஸ்ரீதர ஐயாவாளின் ஜெயந்தியை முன்னிட்டு மீள் பதிகிறேன்.
***************************************************************************

ஐயாவாள் திருச்சிராப்பள்ளியில் வசித்த காலத்தில், தினம் மாத்ரு பூதேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாலை தரிசனம் முடிந்தபின் தமது இல்லத்திலேயே ராமாயணம், பாகவதம், பாரதம், சிவபுராணம், என்று சிவ-வைஷ்ணவ பேதமில்லாது ப்ரவசனங்களைச் செய்துவந்தாராம். அப்போது திருச்சியை ஆண்ட நாயக்க வம்சத்து அரசர் வைஷ்ணவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், சமஸ்த ஜனங்களையும் அனுசரித்து ராஜ்யாதிபத்யம் செய்து வந்திருக்கிறார். அப்போது சிலர் அரசரிடம் நல்மதிப்பைப் பெறுவதற்காக மைசூர் சமஸ்தானத்தில் இருந்து வந்த ஐயாவாள் சைவ மதப்பிராசாரம் செய்வதாகவும் வைஷ்ணவத்தை இகழ்வதாகவும் சொல்கின்றனர். நிலையை அறிந்த அரசர் தமது உளவுப் பிரிவின் மூலம் ஐயாவாளைப் பற்றிய உண்மையை அறிகிறார். பின் தம்மிடம் தவறான செய்தியைச் சொன்னவர்களும் ஐயாவளை பற்றி அறியவும், தமது அரசுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மஹானை எல்லோருக்கும் உணர்த்தவும் உறுதி கொள்கிறார். நேரடியாக ஏதும் சொல்வதோ அல்லது ஐயாவாளை சொல்லச் சொல்வதோ நல்லதல்ல என்று தீர்மானித்து, ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தினை அலங்கரித்து வீதிவலம் வரச் செய்கிறார். ஐயாவாள் தமது பூஜையை முடித்து தியானத்தில் இருக்கையில் வீதியில் இறைவனது ஊர்வலம் வருகிறது. நாத-வாத்யங்களின் சப்தத்தால் தியானம் கலைந்த ஐயாவாள், வாசலுக்கு வந்து மலர்களும், நிவேதனமும் அளித்துப் பணிகிறார். ஸ்ரீ ஐயாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு வித்யாசம் ஏதும் இல்லாது ஸ்தோத்திரம் செய்கிறார்.


அநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:
ஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:
ஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா




என்று ஸ்தோத்திரம் செய்கிறார். அதாவது உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும், கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும், என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும், பிறர் தோஷங்களை அறியாதவனாகவும், எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும், பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும், உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும் எப்போது நான் மாறுவேன் க்ருஷ்ணா என்று கேட்பதாகப் பாடுகிறார். இவ்வாறாக இந்த நேரத்தில் அவர் க்ருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் "க்ருஷ்ண த்வாதச மஞ்சரி" என்று கூறப்படுகிறது. அங்கு இருந்த ஊரார் இவரது ஸ்தோத்திரங்களை கேட்டு, அவரது, வினயம், பக்தி போன்றவற்றைப் பார்த்து, அரசர் உட்பட, வைஷ்ணவத்தைப் பழிப்பதாகச் சொன்னவர்கள் உட்பட எல்லோரும் அவரது உன்னத பக்தியினை உணர்ந்து அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினராம்.




இதே போல திருவிசைநல்லூரில் வசிக்கையில் அங்கிருந்த பண்டிதர்களுக்கு ஐயாவாளிடம் பொறாமை உண்டாகியிருக்கிறது. ஒரு கோகுலாஷ்டமி தினத்தில் விழாவிற்க்கு ஐயாவாளையும் அழைத்திருக்கின்றனர். ஆழ்ந்த பக்தி இல்லாது வெறும் டாம்பீகமான விழாவாக தோன்றியதால் ஐயாவாள் அதில் பங்கேற்காது விட்டு விடுகிறார். வாசலில் க்ருஷ்ணன் ஊர்வலமாக வருகையில் ஐயாவாள் இறைவனை வணங்க வருகிறார். ஆனால் விழாவை நடத்தினவர்கள் கோபித்துக் கொண்டு, உமக்கோ க்ருஷ்ண பக்தி கிடையாது, இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் என்று மறுத்துப் பேசுகின்றனர். ஐயாவாள் அவர்களிடம் தனது க்ருஷ்ண பக்தியை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்று உள்ளே சென்றுவிடுகிறார். உடனே தன் கண்களையே க்ருஷ்ணனின் தோழியாக பாவித்து கோபிகா பாவத்தில் க்ருஷ்ணனனை நினைத்து, "என் ப்ரியசகியான த்ருஷ்டியே, நீலோத்பலம் போன்ற அழகிய காந்தியுடையவனும், சந்த்ர பிம்பத்தைவிட அழகான முகமுடையவனும், நந்தகோபன்-யசோதையின் ஆனந்தத்திற்கு காரணமான கருணாமூர்த்தியான க்ருஷ்ணனை அனுபவி என்று பாடுகின்றார். திடிரென ஊர்வலத்தில் இருந்தவர்கள், தமது விக்ரஹத்தின் பீடம் மட்டும் இருப்பதை காண்கின்றனர். அதே சமயத்தில் ஐயாவாள் பாடுவதும் காதில் விழ, அவர்கள் ஐயாவாள் இல்லத்திற்குள் சென்று பார்த்தால் அங்கு விக்ரஹம் இருக்க ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருப்பதை கண்டு பிரமிக்கின்றனர். அவரது பக்தியை உணர்ந்த பண்டிதர்கள், தமது ஊர்வலத்தை விட்டு அங்கேயே இரவு முழுவதும் நாமசங்கீர்த்தனம் செய்து ஐயாவாளிடம் மன்னிப்பும் கேட்டனர். இந்த நிகழ்வின் போது ஐயாவாள் பாடியதுதான் "டோலோ நவரத்ன மாலிகா" என்று சொல்லப்படுகிறது.



திருவிசநல்லூரில் இருந்த காலத்தில் தினம் திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை தவறாது தரிசனம் செய்தார். ஒருநாள் அதிக மழையின் காரணமாக அவர் காவிரியைக் கடந்து கோவிலுக்கு செல்ல இயலாது தவித்து தாம் ஏதோ சிவாபராதம் செய்திருப்பதாக கலங்குகிறார். அப்போது அவர் செய்த ஸ்தோத்திரம் தான் "ஆர்த்திஹர ஸ்தோத்திரம்" என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கோவில் அர்ச்சகர் தோற்றத்தில் ஈஸ்வரனே வந்து பிரசாதம் அளித்ததாக சொல்லப்படுகிறது. மறுநாள் கோவிலுக்குச் சென்று அந்த அர்ச்சகரிடம் பேசுகையில் அவர் வரவில்லை என்றும் வந்தது சர்வேஸ்வரனே என்று உணர்ந்து, ஈசனது தயை போற்றும் விதமாக செய்ததே "தயா சதகம்" என்னும் 100 ஸ்லோகங்கள்.



இவ்வாறாக திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை அர்த்த ஜாம பூஜையில் தரிசிப்பதை வழக்கமாக கொண்ட ஐயாவாள், ஸம்சாரம் என்னும் விசாலமான நாடகமேடையில் எல்லா ரூபங்களும் தரித்து ஆடிப்பாடி களைத்து விட்டேன். சர்வக்ஞனும், தயாபரனுமான நீ போதும் என்று கூறி என்னை ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் என்று கூறி குமுறிக் குமுறி அழுகிறார். மற்றவர்களுக்கு ஐயாவாள் அழுவதன் காரணும் ஏதும் அறியவில்லை என்றாலும் அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அப்போது ப்ரேம பக்தியில் உன்மத்தமான ஐயாவாள் தீடீரென கர்ப்பகிரஹத்தை நோக்கி சென்று மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய முற்பட்டு, அப்படியே ஜோதிவடிவில் பரமேஸ்வரனை அடைந்தார் என்று கூறப்படுகிறது.


ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்

ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே


[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன்]



கலியில் நாம ஸ்மரணைதான் சுலபம், அதனை விடாது செய்து, எல்லாம் வல்ல இறையினை உணர இந்த மஹான் அருளட்டும்.

Friday, October 16, 2009

தீபாவளித் திருநாள்..



அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


சாதாரணமாக தமிழகத்தில் தீபாவளி என்பது நரக-சதுர்தசி மட்டுமே. ஆனால் அண்டை மாநிலங்களில், அடுத்து நாளான அமாவாசை, மற்றும் பிரதமை வரை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. "தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா" என்று பல பெரியவர்களும் சொல்லக் கேட்டிருப்போம். அதாவது நரக-சதுர்தசியன்று அதிகாலை நேரத்தில் எண்ணை தேய்த்து, வென்னீரில் குளித்து, புத்தாடைகள் அணிந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. இந்த தினத்தில் இல்லத்தில் இருக்கும் எண்ணையில் லக்ஷ்மியும், தண்ணீரில் கங்கையும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விழாவிற்கான காரணம் பூமாதேவி தனது மகன் நரகாசுரனை அழித்த ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டதே காரணம் என்பர். கங்காஸ்நானமும் அன்னபூரணி தரிசனமும் இந்த நன்நாளில் மிக விசேஷம். இந்த நாளில் தான் காசியில் தங்க அன்னபூரணி லட்டுகளால் செய்யப்பட்ட தேரில் நகர்வலம் வருகிறாள்.



அடுத்த நாள் அமாவாசை, வட தேசங்களில் ஸாத் பூஜா என்று பெண்கள் தமது இல்லத்தில் இருக்கும் ஆண்கள் நலனுக்காகச் செய்யும் பூஜை. இதே போல நம் பக்கமும் பல இல்லங்களில் அவரவர் இல்லத்துப் பழக்கங்களின்படி கேதார கெளரீ விரதம் என்று விமர்சையாக விரதமிருந்து மாங்கல்ய பலனுக்காக செய்யப்படுகிறது. பல இல்லங்களில் அமாவாசை தினத்தன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜையும் செய்யப்படுகிறது.




ப்ரதோஷ சமயே லக்ஷ்மீம் பூஜயித்வா தத: க்ரமாத்
தீப வ்ருக்ஷாஸ்ச தாதவ்யா: சக்த்யா தேவக்ருஹேக்ஷுச
ஸ்வலங்க்ருதேந போக்தவ்யம் ஸ்த-வஸ்த்ரோப ஸோபிநா

என்பதாக, மாலை வேளையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் குபேரரையும் பூஜிப்பது சில இல்லங்களில் பரம்பரையாக வழக்கம். இவ்வாறு லக்ஷ்மி-குபேர பூஜை செய்யும் போது குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை உடுத்தி, சர்வாபரணங்களும் அணிந்து கொண்டு பூஜிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த பூஜை செய்யும் இடத்திலும், செய்பவருக்கும் லக்ஷ்மி கடாக்ஷம் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. வட இந்தியாவில் வர்த்தக நிறுவனங்களில் தீபாவளியன்று புதுக்கணக்கு ஆரம்பித்தல் இன்றும் நடைமுறையில் இருப்பது இதனாலேயே.



இந்த தூலா/ஐப்பசி மாத அமாவாசை கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் மிக பிரசித்தம். முன்னொரு காலத்தில் ஒரு வைணவர் திருமணம் செய்யாது ப்ரம்மச்சரியத்தில் இருந்து கொண்டு ஸ்ரீ சாரங்கனனுக்கு கைங்கர்யம் செய்து வந்தாராம். அவரது உறவினர்கள் அவரை திருமணம் செய்து கொள்ள நிர்பந்தித்து, அவ்வாறு செய்து கொள்ளாவிடில் பிற்காலத்தில் அவருக்கு அந்திமக் கிரியைகள் செய்யவும் ஆளின்றி அநாதையாக போகும் நிலை வரும் என்றேல்லாம் சொல்லுகின்றனர். அப்போது அந்த வைணவர் தமக்கு திருமணம் வேண்டாம் என்றும் தமது அந்திமக் கிரியைகளை சாரங்கனே செய்வான் என்றும் கூறுகின்றார். இந்த பெரியவர் கட்டிய கோபுரந்தான் சாரங்கபாணி கோவில் ராஜ கோபுரம். காலங்கள் உருண்டோட, அந்த வைணவர் தூலா மாத அமாவாசையன்று வைகுந்த பதவியை அடைகிறார். அன்று தீபாவளி, எனவே யாரும் அவருக்கு அந்திம சம்ஸ்காரம் செய்ய முன்வரவில்லை. அப்போது எங்கிருந்தோ ஒரு வைணவ பிரம்மச்சாரி வந்து பெரியவரின் அந்திமக் கிரியைகளைக் குறைவின்றிச் செய்துவிட்டுப் போகின்றார். அவரை யார் என்று விசாரிக்கத் தேடியபோது காணவில்லையாம். அப்போதுதான் ஊர் மக்கள் அப்பெரியவர் சொன்னபடி பெருமாளே வந்து அந்திம சம்ஸ்காரம் செய்ததை உணர்கின்றனர். அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளி அமாவாசையன்றும் சாரங்கபாணிக்கு கையில் பித்ரு காரியத்துக்கு உபயோகிக்கும் பவித்திரம் அணிவித்து சிராத்த சமையல் செய்து நிவேத்யம் செய்கின்றனர். அத்துடன் நில்லாது, பெருமாள் பெயரில் இரு வைணவப் பெரியவர்களை வரித்து சிராத்தமும் நடக்கிறது.

கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் பலிபாட்டிமை என்று பிரதமை தினமும் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறாக பல விதங்களில் கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில் நாமும் அவரவர் இல்லத்து வழக்கத்தின்படி இறைவனை வணங்கி இனிமையாகக் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Tuesday, October 6, 2009

விதுர நீதி...

10 நாட்கள் முன்பு இல்லத்திற்கு அருகில் இருக்கும் ராகி-குட்டா கோவிலில் ஒரு பிரசங்கத்தைக் கேட்க நேர்ந்தது. அங்கே ராமசந்த்ர பட் என்பவர் விதுர நீதி பற்றி ரொம்பவும் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். கன்னடத்தில்தான் பேசினார் என்றாலும் அவரது பிரசங்கம் நன்றாகப் புரிந்தது. அந்த பிரசங்கம் முடிந்தபின்னர் அவருடன் சிறிது நேரம் பேசினேன். அந்தப் பிரசங்கமும், அவருடன் தனியாக பேசியதுமே இந்த இடுகை.


மஹாபாரதத்தின் இறுதிப் பகுதியில் 3 உபதேசங்கள் நடைபெறுகின்றது. ஒன்று நாம் மிகவும் அறிந்த(?) கீதோபதேசம், இன்னொன்று பீஷ்மர் தருமருக்கு அம்புப் படுக்கையில் இருந்தவாறு உபதேசித்த அறிவுரைகள் மற்றும் சஹஸ்ரநாமம். மூன்றாவதாக வருவது விதுரர் திருதராஷ்டிரருக்குக் கூறிய ஆலோசனைகள், இதுவே விதுர நீதி என்று போற்றப்படுகிறது. பாரதத்தைக் கதையாகச் சொல்லுகையில் சுவாரஸ்யக் குறைவு ஏற்படாதிருக்க இந்த மூன்று உபதேசங்கள் விரிவாகச் சொல்லப்படுவதில்லை, அதிலும் குறிப்பாக விதுரரது உபதேசங்கள் 2-3 வரிகளிலேயே அடங்கிவிடுகிறது. ஆனால் மஹா-பாரதத்தில் இந்தப் பகுதி 605 ஸ்லோகங்களாக, 1200க்கும் மேற்பட்ட வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

குருஷேத்திரப் போரை தடுக்க முயலும் திருதராஷ்டிரர் முதலில் சஞ்சயனைத் தூது அனுப்பி பாண்டவர்களிடத்துப் பேசி போரைத் தவிர்க்க முயல்கிறார். சஞ்சயன் பாண்டவர்களிடத்துப் பேசியதும், அப்போது தருமர் அளித்த பதிலும் நாம் அறிந்ததே. இந்த உரையாடல் முடிந்து இரவு நேரத்தில் ஹஸ்தினாபுரம் திரும்பிய சஞ்சயன், தான் தருமரை சந்தித்துவிட்டு திரும்பி விட்டதாகவும், மறுதினம் அரசவையில் தூதுச் செய்திக்கான தருமரது பதிலைக் கூறுவதாகவும் திருதராஷ்டிரருக்குச் செய்தி அனுப்புகிறான். சஞ்சயன் என்ன பதிலைக் கொண்டு வந்திருப்பானோ என்ற கவலையில் இரவு நித்திரை வராது தவிக்கிறார் திருதராஷ்டிரர். நித்திரையில்லா அந்த இரவை பேசிக் கழிக்க முடிவு செய்து, பேசத்துணையாக விதுரரை அழைத்துவரச் செய்கிறார். இந்த நேரத்தில் திருதராஷ்டிரருக்கும் விதுரருக்கும் ஏற்பட்ட சம்பாஷணையே விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது.

விதுரர் வந்து அரசரை/திருதராஷ்டிரரை வணங்குகிறார். அச்சமயத்தில், திருதராஷ்டிரர் விதுரரிடம், "இனியவனே, நம்மில் நீதான் சாஸ்திரங்களையும், புனித நூல்களையும் நன்கு படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறாய். சஞ்சயன் நாளை அரசவையில் சொல்லக்கூடிய செய்தி என்னவாக இருக்கும்என்பதை நினைத்து எனக்கு உறக்கம் வரவில்லை. உடல் முழுதும் தகிப்பாகவும், உதறலாகவும் இருக்கிறது. அவன் என்ன செய்தி கொண்டுவந்துள்ளானோ?, தருமபுத்திரனின் விருப்பம் என்னவாக இருக்கும் என்பதும் உன்னால் மட்டுமே ஊகித்துச் சொல்ல முடியும் என்று தோன்றியதால் உன்னை இங்கு அழைத்தேன். உனது எண்ணங்களைச் சொல்வாயாக" என்று கூறுகிறார்.

இந்த இடத்தில் திருதராஷ்டிரருக்குப் பதிலாக விதுரர் கூறுவதாக இருப்பதுதான் விதுர நீதி என்று போற்றப்படுகிறது. இந்தப் பகுதி கேள்வி-பதிலாக இருந்தாலும், பெரும்பாலும் விதுரர் தமது பதிலில் அரசன் செய்ய வேண்டிய கடமைகளையும், அறநெறி வழுவாத அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாகஎடுத்தியம்புகிறார். அரசர் பாண்டவர்களையும் தன் மக்களாகவே கருத வேண்டும் என்றும், பாண்டவர்களுக்கு அரசுரிமை அளிக்க வேண்டும் என்பதை தர்ம-சாஸ்திரம் மற்றும் வேதகால ரிஷிகளது கதைகளையும் உதாரணமாகக் காட்டி விளக்குகிறார். இந்த சம்பாஷணையை விதுரர் பின்வருமாறு ஆரம்பிக்கிறார்.

பலகீனர்கள், வாழ்க்கைக்கான சாதனங்கள் அற்றவர்கள், சொத்தை இழந்தவர்கள், காதலிப்பவர்கள், திருடர்கள் இவர்களுக்கே இரவில் உறக்கம் வராது என்று கூறி, நீங்கள் மேற் சொன்ன எதிலும் அடங்காதவராயிற்றே!, மற்றவர்கள் சொத்தை அபகரிக்கும் பேராசை அற்றவராயிற்றே,பிறகு ஏன் கலங்குகிறீர்கள் என்று கூறி, ஞானி என்பவர் யார்?, அறிஞர் என்பவர் யார்?, அவர்களது செயல்பாடு எப்படி இருக்க வேண்டும், அறிவிலியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், பொறுமையின் மாண்பு என்று பல விஷயங்களைப் பட்டியலிட்டு பதிலுரைக்கிறாராம்.

சில-பல வருஷங்கள் முன்பு வரை கர்நாடகாவில் பள்ளிகளில் விதுர நீதி பாடமாக இருந்ததாம். விதுர நீதி தனியாக தமிழில் புத்தகங்கள் ஏதும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை, ஸ்ரீ ராமசந்த்ர பட் அவர்கள் கன்னட புஸ்தகம் வைத்திருந்தார், கன்னடம் எழுத-படிக்கத் தெரியாததால் இரவல் வாங்க இயலவில்லை :-). தமிழில் ஏதும் புத்தகம் இருந்து, இதைப் படிப்பவர்கள் யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள்.

Saturday, September 26, 2009

தேவி பாகவதம்-புவனேஸ்வரி தரிசனம்-பகுதி-3- *நவராத்திரி சிறப்பு இடுகை - 9*

விஷ்ணு, பிரம்ம-ருத்ரர்களைப் பார்த்துச் சொல்கிறார். இவள்தான் நமக்கெல்லாம் காரணமாயிருப்பவள். எங்கும் நிறைந்தவளாகவும், வேதங்களுக்கு உற்பத்திஸ்தானமாகவும், சகல ஜகத் காரணங்களுக்கும் காரணியாக விளங்கும் ஈஸ்வரி. ஜகத் பிரளயத்தில் இவள் சமஸ்தானமான பிரபஞ்சத்தை சம்ஹரித்து தன்னிடத்து ஒடுக்கிக் கொண்டு விளையாடுகிறாள். இப்போது நாம் தரிசிக்கும் தேவி சர்வ பிஜாக்ஷர ஸ்வரூபிணி, அவள் பக்கத்தில் சர்வாபரண பூஷிதைகளாக இருக்கும் சக்திகள் அனைவரும் அவளது அம்சம். பூர்வ-ஜென்மத்தில் நமது நற்-கர்மங்களினால் அவளைத் தரிசிக்கும் உயர்வினைப் பெற்றோம் என்று கூறுகிறார். மூவரும் அவளருகில் சென்று நமஸ்கரிக்க எண்ணம் கொண்டு விமானத்திலிருந்து இறங்கிச் செல்ல ஆயத்தமாகையில் முற்றிலும் பெண்கள் இருக்கும் இடத்திற்கு ஆண்களாகிய தாம் எப்படிச் செல்வதென்ற எண்ணம் தோன்ற, அப்போது தேவி தன் பார்வையாலேயே அவர்கள் மூவரையும் ஸ்திரீ ரூபமுடையவர்களாக மாற்றினாள். பின்னர் எந்த சங்கோஜமும் இன்றி அவர்கள் தேவியின் சன்னிதானத்தை அடைந்து அவளை நமஸ்கரிக்கின்றனர்.


நமஸ்கரிக்கயில் அவளது திருவடியை நோக்கிய சமயத்தில் கண்ணாடி போன்ற அவளுடைய நகத்தின் மத்தியில் கோடி பிரம்மாண்டங்களையும், அதனதன் திரிமூர்த்திகளையும், திக்-பாலகர்களையும், சப்தசராசர்ங்களையும், சகல கந்தர்வர்கள், கின்னரர்கள், அஸ்வினி தேவதைகள், வசுக்கள், சித்தர்கள், பிதுர் தேவதைகளையும், ஆதி சேஷன் போன்ற மஹா நாகங்களையும் கண்டனர். சிருஷ்டிக்கு உட்பட்ட எல்லாவற்றையும் பார்த்தார்கள். இவற்றைக் கண்டு ஆச்சர்யமுற்று தேவியே எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள் என்று அறிந்து ஆனந்தமடைந்தனர். அக்கோலமே புவனேஸ்வரி கோலம். மும்மூர்த்திகளும் தனித்தனியாக அவளை பலவாறு துதித்து வணங்குகின்றனர்.


நவாக்ஷர ரூபமான தேவியை இவ்வாறு வணங்கிய மும்மூர்த்திகளைப் கடைக்கண்ணால் பார்த்து புன்னகைச் செய்தவளாய் பின்வருமாறு சொல்கிறாள். ஹே, தேவர்களே நானே பராசக்தி, எனக்கும் பரமசிவத்துக்கும் எந்த பேதமும் இல்லை. சர்வசம்ஹார காலத்தில் எல்லாம் என்னிடம் ஒடுங்கும். உத்பவ காலத்தில் புத்தி, சம்பத்து, தைரியம், கீர்த்தி, நினைவாற்றல், சிரத்தை, தீர்க்காலோசனை, தயை, நாணம், பசி, தாகம். பொறுமை, தேஜஸ், சாந்தி, இச்சை, நித்திரை, சோம்பல், நரை, திரை, மூப்பு, ஞானம், அஞ்ஞானம், ஆசை, அபேக்ஷை, பலம். பலவினம். உதிரம், சருமம், நேத்ரம், வாக்கு, பொய், மெய், நாடிகள் என்று புத்தியால் கற்பிக்க்கப்படும் பேத ரூபங்களாக எல்லாமும் நானாகவே இருந்து, அதனதன் செயல்களையும், பலனையும் செய்பவளாக இருக்கிறேன். உலகில் பலஹீனமாயிருப்பவனை அசக்தன் என்று கூறுவது அதனால்தான். என்னிடத்திருந்து பிரிந்திருந்தால் உங்களால் ஏதும் செய்ய இயலாது. இவ்வாறாக கூறி செளந்தர்யவதியாகவும், வெண்மையான ஆடை உடுத்தியவளாகவும் ரஜோ குணத்தை கொண்டவளாகவும் உள்ள மஹாசரஸ்வதி என்னும் சக்தியை தன்னிலிருந்து பிரித்து பிரம்மனுக்கு அளித்து, இச்சக்தியை உன் மனைவியாகக் கொண்டு அவளை உன் மனையாளாக மட்டும் நடத்தாது என் அம்சம் என்று நினைத்து இவளுடன் சத்ய லோகத்தில் சிருஷ்டியை தொடங்க பணிக்கிறாள்.

இவ்வாறே உத்தமமான மஹாலக்ஷ்மியை அழைத்து விஷ்ணுவிடம் சேர்பித்து, என்னுடைய நிமித்தமாக கொடுக்கப்பட்ட இவளை மனைவியாகக் கொண்டு லக்ஷ்மி நாராயணனாக வைகுந்தத்தில் வசிக்கப் பணிக்கிறாள். பின்னர் பிரும்மனைப் பார்த்து, ஹே பிர்ம்மனே, மஹா-விஷ்ணு உன்னால் வணங்கப்படுபவனாக இருக்கட்டும். இவன் சத்வகுண சம்பன்னன் ஆகவே உன்னிலும் மேம்பட்டவன். உலகில் சத்ரு பயமும், அசுர பயமும் ஏற்பட்டும் காலங்களில் இவன் பல ரூபங்களெடுத்து உலகின் கஷ்டங்களை போக்குவான் என்றாள். பின்னர் ருத்திரரைப் பார்த்து மனோகரையாகவும், மஹாகாளியாகவும் விளங்கும் கெளரியை ஏற்றுக் கொண்டு தமோ-குணத்தை பிரதானமாகக் கொள்ளச் செய்து கைலாசத்தில் வாழப் பணிக்கிறாள்.


பின்னர் அவர்களைப் பார்த்து நீங்கள் மூவரும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் முத்தொழிலுக்கு கர்த்தாக்களாக விளங்கி அதனையே ப்ராதான்யமாகக் கொள்ள வேண்டும் மகா சம்ஸ்கார காலத்தில் அண்ட சராசரங்களும் அழியும் காலத்தில் நீங்களும் என்னில் ஐக்கியமடைவீர்கள் நான் ஒடுங்கத் தக்கவள் அல்ல, குணங்களோடு கூடிய காலத்தில் சகுணையாகவும். குணங்கள் விலகிய காலத்தில் நிர்குணையாகவும் விளங்குகிறேன். தத்துவங்களுக்கு எல்லாம் மகத்தான சிவ ஸ்வரூபம் நானே. ஆதியில் நான் அகங்கார தத்துவத்தை உருவாக்கி அதிலிருந்து சத்வம் போன்ற முக்குணங்களையும், மகதத்துவமாகிய புத்தியையும் உருவாக்கினேன். பஞ்ச பூதங்களையும் அவற்றிலிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்களிலிருந்து ஐந்தும், மகத்தும் சேர்ந்த பதினொன்றே பரமசிவம் என்னும் ஆதி புருஷர். அவர்க் நிர்குணமாக எங்கும் வியாபித்தவர்காக இருப்பார். இப்போது நீங்கள் உங்கள் இடங்களுக்குச் செல்லலாம். எப்போது என்னை தியானிக்கிறீர்களோ அப்போது நான் உங்கள் முன்பு பிரசன்னமாவேன் என்று கூறுகிறாள். அக்கணமே அவர்களுக்கான சக்திகளைத் தவிர அந்த தீவே மறைந்துவிடுகிறது. இவர்கள் தங்கள் லோகங்களை அடைந்திடுகின்றனர்.


இந்த தரிசனத்தை பற்றி பிரம்மா நாரதரிடம் கூறி, அன்னையின் அந்த ரூபமே புவனேஸ்வரி ரூபம் என்று கூறியிருக்கிறார். இவ்வாறாக ஆரம்பிக்கும் தேவி பாகவதம், அம்பிகையின் பல திருவிளையாடல்களையும் சொல்கிறது. ஆனால் இந்த நவராத்திரிச் சிறப்பு இடுகைகளில் இத்துடன் தேவி பாகவதம் முடிவுபெறும். பின்னர் வேறொரு சமயத்தில் மற்றதைப் பார்க்கலாம்.



ஸ்ரீ புவனேஸ்வரி மாதா கீ ஜெ!!!

Friday, September 25, 2009

தேவி பாகவதம்-புவனேஸ்வரி தரிசனம்-பகுதி-2- *நவராத்திரி சிறப்பு இடுகை - 8*


பல வருட காலங்கள் கழிந்த பின்னர் அவர்களது மன உறுதியை மெச்சிய பராசக்தி அசரீரியாக அவர்களிடம் தோன்றி அவர்களது கோரிக்கை என்ன என்று கேட்டாள். அசுரர்கள் இருவரும் அவளை வணங்கி தங்களது மரணம் அவர்கள் விரும்பும்போது மட்டுமே நடக்கவேண்டும் என்று கேட்க, அன்னையும் அவர்களுக்கு அந்த வரத்தையும், யாராலும் ஜெயிக்க முடியாத பராக்ரமத்தையும் அளித்தாள். இதன் காரணமாக மது-கைடபர்கள் மிகுந்த கர்வத்துடன் வலம் வருகையில் பிரம்மா தாமரைத் தண்டின் வழி வந்து இவர்களை சந்திக்கின்றார். பிரம்மாவிடம் இருக்கும் தாமரை மலரைக் கண்ட அவர்கள், அதை தமக்கு தருமாறு வற்புறுத்துகின்றனர். வாதம்-விவாதம் தொடருகையில் பிரம்மா தமது சக்தியால் மது-கைடபர்களது பிறப்பினைப் பற்றியும், அவர்களுக்கு அன்னை அருளியது பற்றியும் அறிகிறார். அவர்களை தன்னால் சமாளிக்க முடியாதென முடிவெடுத்து நாராயணனது உதவியினைப் கோரவும் இயலாது அவர் யோக நித்திரையில் இருப்பதால் அவரது உதவி கிடைப்பது தாமதமாகலாம் என்று உணர்ந்து அனைத்துலகுக்கும் மூலகாரணமான பரசாக்தியைத் துதிக்கிறார்.

பிரம்மன்னுடைய பிரார்த்தனையால் மகிழ்ந்த தேவி அவருக்கு அனுக்கிரகிக்கும் எண்ணத்துடன் தமது தாமஸ ரூபமான நித்திராசக்தியை நாராயணனுடைய திருமேனியில் இருந்து விலகச் செய்ய, நாராயணன் கண்விழித்து பிரம்மனின் நிலையினை உணர்ந்து அவருக்கு அபயமளித்து, பிர்மமனே அஞ்சவேண்டாம், நான் அவ்விரு அசுரர்களையும் வதம் செய்கிறேன் என்றார். பின்னர், அசுரர்களைப் பார்த்து யுத்தம் செய்ய வருமாறு கூறுகிறார். மது-கைடபர் ஆகிய இருவரும் விஷ்ணுவுடன் சண்டையிடுகிறார்கள். மாறி-மாறி தாக்கிக் கொண்டதில் 5000 வருடங்கள் கடந்ததாம். பின்னரும் சண்டை ஒரு முடிவுக்கு வராத காரணத்தால் நாராயணன் அவர்களைத் தந்திரத்தால் கொல்ல நினைத்து அவர்களிடம், நீங்கள் இருவரும் மாறி மாறி என் ஒருவனைத் தாக்குவதால் நான் சற்று களைப்புற்றிருக்கிறேன். சற்றே இளைப்பாறி பின்னர் போரைத் தொடரலாம் என்றார். அசுரர்களும் அதற்கு இணங்கினர். இந்த நேரத்தில் பரந்தாமன் யோகத்தில் ஆழ்ந்து அசுரர்களுக்கு தேவி அளித்துள்ள வரங்களைப் பற்றி அறிகிறார். இதன் பின்னர் அவர் பராசக்தியின் துணைநாடி தவமிருக்கிறார். அம்பிகையும் நாராயணன் முன் தோன்றி தமது மாயாசக்தியில் மது-கைடபர்களை மயக்குவதாகவும், அவ்வாறு மயங்கிய நிலையில் அவர்களிடம் அவர்கள் சாவுக்கு வரம் வாங்கிவிடவும் சொல்கிறாள். பின்னர் தமது மாயா சக்தியை அழகிய பெண்ணுருக் கொள்ளச் செய்து, அவளை அசுரர்களிடத்து அனுப்புகிறாள். அப் பெண்ணைக் கண்ட மதுகைடபர்கள் அவளை அடைய எண்ணுகையில் நாராயணன் அவர்களிடம் போருக்கு வரச் சொல்ல, அசுரர்கள் மாயாசக்தியான பெண்ணின் அழகால் வந்த பிரமிப்பில் போருக்கு வர மறுக்கின்றனர். அப்போது நாராயணனிடம் அவ்வசுரர்கள், நாராயணா, இதுவரை தோல்வியடைந்த உனக்கு நாங்கள் வரம் தருகிறோம், வேண்டியதை கேட்டு வாங்கிக் கொண்டு இவ்விடத்தை விட்டு அகல வேண்டும் என்று கூறுகின்றனர். அத்தருணத்தை எதிர் நோக்கியிருந்த நாராயணன் மிகவும் சந்தோஷித்து அசுரர்களிடம், தம் கையால் அவர்களை கொல்வதே தமக்கு வரமாக வேண்டும் என்கிறார்.


இக்கட்டான சூழ்நிலையினை உணர்ந்த அசுரர்கள் இருவரும், தமது தவற்றை உணர்ந்தாலும் ஹரியிடம் பின்வருமாறு கூறுகின்றனர், வரம் என்று கேட்டுவிட்டதால் எங்களைக் கொல்ல அனுமதிக்கிறோம், ஆனால் எங்களைக் கொல்லும் இடமானது பல யோஜனை பரப்புள்ள, நீரில்லாத இடமாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களது சூழ்ச்சியை உணர்ந்த பரந்தாமன் மெல்லச் சிரித்தவாறு தமது உருவத்தை பெரிதாக்கி தமது துடைகளை இரண்டாயிரம் யோஜனை உடைய நீரில்லா இடமாக காண்பித்து அங்கு அவர்களை இருத்தி கொன்றார். அசுரர்கள் உடல் பாற்க்கடலில் பரவிய இடமெல்லாம் பூமியாகியதாம். அதனால்தான் பூமிக்கு மேதினி என்று பெயர் என்று கூறுகிறது தேவி பாகவதம்.


இவ்வாறாக மது-கைடபர்கள் அழிந்த நேரத்தில் அங்கே ருத்திரரும் தோன்ற, அப்போது தேவி அசிரீரியாக "நீங்கள் மூவரும் உங்களுக்கு உரிய தொழில்களான சிருஷ்ட்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் மேற்கொண்டு உங்கள் பதவிகளில் சுவஸ்த சித்தர்களாக இருங்கள்" என்று கூறுகிறாள்.

மூவரும் குரல் வந்த திசையினை வணங்கி, ஹே! அம்பிகே எங்கு பார்க்கிலும் ஒரே ஜல மயமாக இருக்கிறதே நாங்கள் எங்கள் தொழிலை எப்படி, எங்கே நடத்துவது, பிரஜைகள் எங்கே?, நாங்கள் அசக்தர்களாக இருக்கிறோமே? எங்கள் கர்மாகக்களை நடத்த சக்தியில்லையே என்று கூறினர். அப்போது அவர்கள் அருகே ஒர் அழகிய விமானம் தோன்றி அருகே வந்து நிற்க, அசரீரி அவர்களை அதில் ஏறிக்கொள்ள சொன்னதன் படி அவர்கள் மூவரும் அதில் ஏறுகின்றனர். வானில் கிளம்பிய விமானம் சற்று நேரம் பறந்த பிறகு ஒரிடத்தில் இறங்கியது. அங்கே அடர்ந்த வனங்களும், தடாகங்களும், உத்தியான வனங்களும் இருந்தது. அவ்வனத்தில் பலவகைப்பட்ட மிருகங்களும், மக்களும் ஆங்காகே வாசம் செய்வதை கண்டு மும்மூர்த்திகள் வியப்படைந்தனர்.

மீண்டும் விமானம் கிளம்பி இன்னொரு இடத்திற்கு சென்று இறங்க, அதனைக் கண்டவுடன் அது தேவலோகம் என்று அறிந்தனர். அப்ஸரஸ்கள், கந்தர்வர்கள், தச-திக்பாலகர்கள் ஆனந்தமாக இருந்து வந்தனர். மறுபடி விமானம் பறக்கையில் அவர்கள் கண்ட இன்னொரு இடம் பிரம்மனை திடுக்கிடச் செய்தது. ஆம்!, அது சத்ய லோகம், அங்கே ஒரு சத்ய ஸ்வரூபியாக நான்முகன் தாமரையில் அமர்ந்திருக்க, முனிவர்கள் பலவிதமாக ஸ்தோத்திரம் செய்வதைக் கண்டனர். அவர் ஆச்சர்யத்துடன் சிந்திக்கையில் விமானம் நகர்ந்து இன்னொரு இடத்திற்கு சென்றது. அங்கே புலித்தோலணிந்த பரமன் நந்திகணங்கள் சூழ இருப்பதைக் கண்டனர். இதே போல வைகுந்தத்தில் சர்வாபரண பூஷிதராக லக்ஷ்மி-நாராயணனைக் கண்டனர். இவற்றையெல்லாம் பார்த்து வியந்தவாறு இருக்கையில் விமானம் அவர்களை ஒர் அலைகள் மிகுந்த கடலுக்குக் கொண்டு சென்றது. கடலின் நடுவில் ஒர் தீவு. அத்தீவில் பலதரப்பட்ட மனிதர்கள் இருந்தனர். பழங்கள் நிறைந்த மரங்களும், வாசனை நிறைந்த மலர்களும் பூத்துக் குலுங்கியது. அங்கே இருக்கும் அழகிய உத்தியான வனத்தின் நடவுல் ரத்தினங்களால் இழைக்கப்பட்டு எல்லாத் திசைகளிலும் ஒளி வீசும் அழகிய கட்டில் ஒன்று சிறந்த வேலைப்பாடுகளுடன் இருந்தது. அக்கட்டிலில் சர்வாலங்கார பூஷிதையாக ஓர் மாது வீற்றிருந்தார். அவரைக் கண்டதும் மனதில் ஒர் நிம்மதியும், நிறைவும், மகிழ்வும் உருவாவதை உணர்ந்தனர் மும்மூர்த்திகள். அஷ்ட கோண வடிவான ஸ்ரீசக்ர பீடத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஆபரணங்களிலிருந்து வெளிப்படும் ஒளியானது அவளுடைய முக காந்தியை வெளிப்படுத்துவதாக இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கையில் அவள் அநேக முகங்களையும், கை-கால்களையும் கொண்டு விசுவரூபமாகத் தெரிந்தாள். அவள் யார் என்று தெரியாது மும்மூர்த்திகள் சிந்தித்துக் கொண்டிருக்கையில் முதலில் விஷ்ணுவிற்கு தெளிவு பிறக்கிறது.


Thursday, September 24, 2009

தேவி பாகவதம்-புவனேஸ்வரி தரிசனம்-பகுதி-1 - *நவராத்திரி சிறப்பு இடுகை - 7*

பரிக்ஷித் மஹாராஜனை தக்ஷகன் கொன்றதால் பரிஷித்தின் மகன் ஜனமேஜயன் தக்ஷகனை கொல்வதற்கு சர்ப்ப யாகத்தை ஆரம்பிக்கிறான். ஈரேழு உலகிலும் இருக்கும் சர்ப்பங்களை மந்திரத்தால் வரவழைத்து ஆகுதியாகச் செய்கையில் அஸ்திகர் என்னும் முனிவர் யாகசாலைக்கு வருகிறார். [இந்த அஸ்திகர் பற்றிய வரலாறு பிறகு பார்க்கலாம் ]அவரை வரவேற்று உபசரித்த ஜனமேஜயன், தன்னால் முனிவருக்கு ஆகக் கூடிய காரியம் ஏதாகிலும் இருக்குமானால் செய்ய காத்திருப்பதாக கூறுகிறான். முனிவரும் தமக்கு மகிழ்ச்சியளிக்கும் செயலைச் செய்தல் என்றால் அது சர்ப்ப யாகத்தை அப்போதே பூர்த்தி செய்வதேயாகும் என்று கூற, அரசன் அதிர்ந்தாலும் கொடுத்த வாக்கை காப்பற்றும் பொருட்டு யாகத்தை அத்துடன் நிறுத்திவிடுகிறான்.

யாகத்தை நிறுத்தினாலும் தமது குலத்திற்கு விரோதியான சர்ப்ப குலத்தை அழிக்க முடியவில்லையே என்று மனமுடைந்தான் ஜனமேஜயன். அப்போது வைசம்பாயனர் என்றழைக்கப்படும் வியாசர் ஜனமேஜயனது வருத்தத்தை போக்கவும், அவனது சந்ததியினர் அடைந்திருக்கும் களங்கம் நீங்கவும் தேவிபாகவதம் என்னும் உத்தம புராணத்தை அவனுக்குச் சொல்கிறார். அப்போது, அவர் ஜனமேஜயனிடம், "தேவியினால் மஹாவிஷ்ணுவுக்குச் சொல்லப்பட்ட இந்த புராணத்தை கேட்பதால் உன் தந்தை நல்ல கதி அடைவார், இது கேட்பவரை பரிசுத்தமடையச் செய்யும், ஜனன-மரண துக்கங்களில் இருந்து விடுவிக்கும்" என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட ஜனமேஜயன், தமக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, "சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எனப்படும் முத்தொழிலுக்கும் ஆதாரமாக இருப்பவர்களும், சகுண ஸ்வருபமானவர்களுமான பிரம்மா, விஷ்ணு, ருத்திரர் ஆகிய மூவரும் தேவர்களில் சிறந்தவர்கள் என்றும் சச்சிதானந்த ஸ்வரூபிகள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவர்களுக்கும் மரணம், சுக-துக்கம் போன்றவை உண்டா?, நித்திரை போன்ற அவஸ்தைகள் உண்டா?, இவர்களுக்கு உதிரம் போன்ற சப்த தாதுக்களுடன் கூடிய தேகம் உண்டா?, அவர்களது குணங்கள் என்ன?. அவர்களது வசிப்பிடம் எப்படி இருக்கும், அவர்களது லீலாவினோதங்கள் போன்றவை பற்றி எல்லாம் கூறுங்கள்" என்று பணிவுடன் கேட்கிறான்.



இக்கேள்விகளைக் கேட்ட வியாசர் பெரிதும் மகிழ்ந்து, 'அரசே, நீ கேட்டவை எல்லாம் மிக அரிய விஷயங்கள். இவற்றையெல்லாம் நானும் முன்பு நாரத மஹரிஷியிடம் கேட்டேன். அப்போது அவர் சிரித்தவாறு சில செய்திகளை சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் ஒருமுறை மீண்டும் வற்புறுத்திக் கேட்ட சமயத்தில் எல்லாவற்றையும் கூறினார். அவற்றை உனக்கு கூறுகிறேன் கேள்" என்று கூறி நாரதர் தமக்கு கூறியதை பின்வருமாறு கூறுகிறார். நாரதர், தமக்கும் இக்கேள்விகள் எழுந்ததாகவும், தமது ஐயங்களை தன் தந்தையான பிரம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும். தற்போது சொல்வது பிரம்மனது வாக்கு என்று கூறித் தொடர்கிறார். ஒருமுறை பிரளய வெள்ளத்தில் எல்லாம் அழிந்து பிரம்மன் ஒருவனே இருந்தாராம். அப்போது அவர் தம்மைப் பற்றிச் சிந்தித்தாராம். எங்கும் நீர் மயமாக இருக்கையில் தாம் யாரால் உருவாக்கப்பட்டார்?, தன்னை ஒடுக்குபவர் யார்?. என்றெல்லாம் யோசித்தக் கொண்டிருக்கையில் தாம் அமர்ந்திருக்கும் தாமரை எதனை ஆதாரமாக கொண்டிருக்கிறது...அது ஏதோ ஒர் இடத்தில் நிலை பெற வேண்டுமெ என்று உணர்ந்து, அந்த தாமரையின் தண்டுடன் கீழ் நோக்கிச் செல்கிறார். அத்-தண்டின் அடிப்பகுதியில் ஓர் அத்புதமான காட்சியைக் கண்டார். மேக-சியாமள வர்ணத்தில், பீதாம்பரதாரியாக, சதுர்புஜங்களில் சங்கு-சக்ர, கதா-பத்மங்களைத் தாங்கியவராக மஹாவிஷ்ணு யோக நித்திரையில் இருப்பதையும், அங்கு இரு அசுரர்கள் நீர்பரப்பில் இருப்பதையும் கண்டார்.

மஹா-விஷ்ணு ஆதிசேஷன் மீது சயனித்து உறக்கத்தில் இருந்த போது அவரது காதுகளில் இருந்த அழுக்கானது வெளிவந்து இரு அசுரர்களாக ஆகினர். அவர்கள் பெயர் மது, மற்றும் கைடபர் என்பதாகும். இவர்கள் பார்கடலில் பரந்தாமன் காதிலிருந்து வெளிவந்து அந்த கடலிலேயே விளையாடி வந்தனர். இவர்களைத்தான் பிரம்மன் பார்க்கிறார். ஒருசமயம் இவர்களுக்கு சந்தேகம் வந்தது. எந்த பொருளும் ஆதாரம் இல்லாது இருக்க முடியாது. மிக பெரியதாகவும், நீர் மயமாகவும் இருக்கும் இக்கடலுக்கு ஆதாரம் எது?, இதைப் படைத்தது யார்?. இக்கடலில் இருக்கும் தாம எப்படி தோன்றினோம். என்றெல்லாம் எண்ணினர். அவற்றிற்கு பதிலை தேடிய போது தம்மை ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது என்றும் அந்த சக்தியே அவர்கள் விளையாடும் கடலையும் தாங்குகிறது என்ற முடிவுக்கு வந்தனர். அப்போது வானத்தில் ஏதோ ஒரு பேரொளி மற்றும் சப்தம் தோன்றி மறைகிறது. அதை கவனித்த மது-கைடபர்களுக்கு அது சாதாரண விஷயமாகத் தெரியவில்லை. தம்மை இயக்கும் சக்தியே அந்த சப்தமாகவும், பேரொளியாகவும் வந்ததாக உணர்ந்து, அச்சக்தியை தரிசிக்க எண்ணினர். பேரொளியுடன் வந்த சப்தத்தையே ஆதாரமாகக் கொண்டு அதை தியானித்து புலன்களை அடக்கி தியானம் செய்தனர்.

Wednesday, September 23, 2009

மஹாலக்ஷ்மியை வணங்குவோம் - *நவராத்திரி சிறப்பு இடுகை - 6*




பாற்கடலில் மறைந்த செல்வங்களையும், அமிர்தத்தையும் பெற வேண்டி அதைக் கடைவதென்ற முடிவுக்கு வந்தனர் தேவர்கள். பாற்கடலைக் கடைவது தேவர்களால் மட்டும் ஆகாத செயல் என்று கூறி அசுரர்களது வலிமையையும் பெற யுக்தி கூறுகிறார் பிரம்மா. அதன்படியே தேவ-அசுரர்கள் இணைந்து, மந்திர மலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி, கடல்வண்ணன் கூர்மாவதாரமெடுத்து மத்தைத் தாங்க பாற்கடல் கடையப்பட்டது. வலி-தாங்காத இயலாத வாசுகி விஷத்தைக் கக்க, அதை உண்ட பரமன் நீலகண்டன் ஆனார். இவ்வாறு கடைந்த பாற்கடலில் இருந்து முதலில் உச்சைஸரவஸ் என்ற விசேஷக் குதிரை வந்ததாம், பிறகு காமதேனு, கற்பக விருக்ஷம், ஐராவதம், சுரா பானம், சந்திரன் போன்றவை தோன்றியது. இவற்றிற்கு பிறகு தகடையும் தேவாசுரர்கள் வியக்கும் விதமாக மிகுந்த பிரகாசத்துடன், சுகந்தமும், சோபையும், பொருந்திய யுவதி தோன்றினாள். கைகளில் தாமரையுடன் தோன்றிய அவள் அங்கிருந்த பரந்தாமனருகில் சென்று தன்னை அவனுடன் இணைத்துக் கொண்டாள். இவ்வாறு இணைந்த பிறகே தேவர்களுக்கும் தெரிந்தது. நாராயணனைப் பிரிந்த மஹா-லக்ஷ்மிதான் மீண்டும் வந்து அவருடன் இணைந்திருக்கிறார் என்று. ஏன் பிரிந்தார் என்னும் கதை பிறகு ஒருமுறை பார்க்கலாம்.


இவ்வாறு மஹாலக்ஷ்மி வந்த பிறகு தன்வந்திரி தேஜோ ரூபமான அம்ருத கலசத்தை கையில் ஏந்தி பாற்கடலில் இருந்து வெளி வந்தார். இதன் பிறகு மோகினி அவதாரத்தை அறிவோம். தேவர்கள் அம்ருதம் கிடைத்தபின் எல்லாப் போர்களிலும் அசுரர்களை வென்றனராம். இவ்வாறு தேவர்கள் வெற்றிக்கு காரணம் மஹா-லக்ஷ்மி என்று உணர்ந்து அவளைப் பணிந்து போற்றுகிறான். அவ்வாறு தேவேந்திரன் போற்றிய ஸ்லோகத்தை (மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்) இன்று முதல் பாராயணம் செய்து மஹாலக்ஷ்மியை வணங்குவோம்.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாமாயையாக ஸ்ரீ பீடத்தில் வாஸம் செய்பவளும், தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும், சங்கு, சக்ரம், கதை போன்றவற்றை கையில் தாங்கியவளுமான மஹாலக்ஷ்மி தங்களுக்கு நமஸ்காரம்.






நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

கருடவாஹனத்தில் அமர்ந்தவளும், கோலாஸுரனுக்குப் பயத்தைக் கொடுப்பவளும், அனைத்து பாபத்தையும் போக்குபவளுமான மஹாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும், எல்லோருக்கும் விரும்பிய வரங்களைத்தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும், அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே மஹாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

அணிமா போன்ற ஸித்திகளையும், நல்ல புத்தியைக் கொடுப்பவளும், தேவியும், போகம், மோக்ஷம் ஆகியவற்றைத் தருபவளும் மந்த்ர வடிவானவளும், எப்போதும் பிரகாசிக்கின்றவளுமான மஹாலக்ஷ்மித் தாயே!, உங்களுக்கு நமஸ்காரம்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆதியும், அந்தமும் இல்லாதவளும், முழுமுதற் சக்தியும், மாஹேஸ்வரியும், யோகத்தினாலுண்டானவளும்,யோகத்திற்கு பலமுமான அன்னை மஹாலக்ஷ்மியே உங்களுக்கு நமஸ்காரம்.


ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூலமாகவும், ஸுக்ஷ்மமாகவும், மிக பயங்கரமாகவும், மஹா சக்தியாகவும், விசாலமான வயிற்றையுடையவளும்,மஹா-பாபங்களையும் போக்குபவளுமான தேவியே, மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸனத்தில் அமர்ந்த தேவி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணியும், பரமேஸ்வரியும், உலகிற்குத் தாயுமான மஹாலக்ஷ்மி தேவியே உங்களுக்கு நமஸ்காரம்.


ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

வெண்மையான ஆடையுடுத்திக் கொண்ட தேவி, பற்பல விதங்களி அலங்கரிக்கப்படவளும்,உலகனைத்தும் உள்ளவளும், உலகிற்குத் தாயுமான தாயே!, மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.


மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

எவன் பக்தியுடன் மஹாலக்ஷ்மி அஷ்டகம் என்னும் இந்த ஸ்தோத்திரத்தைப் படிக்கிறானோ!, அவன் அனைத்து ஸித்தியையும், ராஜ்யத்தையும் அடைவான்.


ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:


இந்த ஸ்தோத்ரத்தை தினம் ஒரு முறை சொல்வதால் மஹா-பாபங்களும் விலகும். ஒரு நாளில் இரண்டு முறை சொல்வதால் தனம், தான்யம் முதலியவை உண்டாகும்.

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

இந்த ஸ்தோத்ரத்தை தினசரி காலை, மதியம், மாலை என மூன்று காலமும் படித்தால் மிகப் பெரிய சத்ருக்களையும் வெல்லலாம். எப்போதும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸந்தோஷத்தோடு, கேட்கும் வரங்களையும் மங்களங்களையும் தருபவளாக இருப்பாள்.




கோல்ஹாபூர் தேவீ கீ ஜே!

Tuesday, September 22, 2009

தேவீ-மஹாத்மியம் (அறிமுகம்-2) - *நவராத்திரி சிறப்பு இடுகை - 5*



தேவி-மஹாத்மியத்தை முதலில் படிக்கையில் நமக்கு தோன்றுகிறது என்றால், என்னதிது? அம்பிகையை எதிர்க்கும் அளவுக்கு இந்த மஹிஷன், சும்ப-நிசும்பர்கள் பராக்கிரமம் நிறைந்தவர்களா? என்று. அவர்களுடைய சேனாபதிகளின் பலத்தை பார்தாலே தெரியும். முன்பே கூறியது போல ரக்தபீஜன் எனும் சேனாபதி மிகப்பெரிய பராக்கிரமசாலி, மாத்ருகா தேவிகளையே சேனாபதிகளாக உடைய தேவியின் படைக்கு மிகப்பெரும் சவாலாக ரக்தபீஜன் அமைந்தான். வைஷ்ணவி-தேவியும், கெளரியும் சரமாரியாக வாளால் வெட்டியும், சூலத்தால் குத்தியும் அவனை மாய்க்க முயன்றும் முடியவில்லை காரணம், ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தமும் அவனுடலில் இருந்து சிந்தும் போது இன்னொரு ரக்தபீஜனாக எழுந்தனர். கோடிக்கணக்கில் உருப்பெற்றவர்களை கண்டு தேவியின் படையானது திகைத்து நின்றது. சும்ப நிசும்பர்களோ தேவியே திணறும் அளவுக்கு ஆக்ரோஷமாக போர் புரிந்தனர். மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு பராசக்தியிடமிருந்து அன்னை காளிகாதேவி தோன்றி அவனது ரத்த்தை முழுவதும் பானம் பண்ணிதாலேயே அவனை வேரோடு மாய்க்க முடிந்தது. இவளது வாஹனமான சிம்மமோ உறக்க கர்ஜனை செய்து கொண்டும் பிடரி மயிற்றைச் சிலிர்த்துக் கொண்டும் சத்ருக்களின் உடலில் உயிரைத் தேடுவது போல் காணப்பட்டது. இவ்வாறாக 14 படைத்-தலைவர்களையும் நாரஸிம்ஹி, நாராயணி, சிவதூதி, ஐந்தரி போன்ற சக்திகளாக தோன்றி வெவ்வேறு பாணங்களால், வெவ்வேறு நிலைகளில் வீழ்த்தினாள் அன்னை.


யுத்த பூமியெங்கும் ரத்த ஆறும், உடல்களாலான சகதியுமாக காக்ஷியளித்தது. அம்பிகை மிகப்பெரும் பராக்கிரமசாலிகளான சண்ட முண்டர்களையும் வதம் செய்த பின்னர் அந்த கோபம் கண்களில் கொப்பளிக்க "ஸோபி கோபான் மகாவீர்ய குரஸுண்ண மகீதல: ச்ருங்காப்யாம் பர்வதானுச்சாம்- ச்சிஷேப ச நனாத ச" என்பதாக (மகாவீர்யம் உடையவனும்,பூமியை பிளப்பவனும், கொம்புகளால் உயர்ந்த மலைகளை தூக்கி எறிபவனாகவும்) கோபத்துடன் கர்ஜித்தவாறு வறண்ட பாலைவனத்தின் நடுவே இமய மலையென மகிஷன் வந்து நின்றான். எதிரிகளை உதிரிகளாக்கி புழுதியில் புரட்டியெடுக்கும் எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தான். அவன் படைகளோ பக்தியில்லாத மனத்தில் சூழ்ந்து நிற்கும் இருள் போல் பூமியெங்கும் வியாபித்து இருந்தனர். மாத்ருகா தேவியரின் படையோ வானத்து நட்சத்திர கோட்டம் போல் எண்ணில் அடங்காமல் இருந்தனர், அதன் நடுவே கோடி சூரிய பிரகாசத்துடன் சிம்மவாகினியாய் காலில் தண்டையும், இடுப்பில் யானைத்தோலும், பரசு, பாசாங்குசம், டமருகம், திரிசூலம், சாபம், பாணம், புசுண்டி, சங்கு, சக்கரம், கதை,வில், அக்னிசட்டி என எல்லா ஆயுதங்களையும் தாங்கி கழுத்தில் கபால மாலையும் அணிந்து வெற்றி தேவதையாக காட்சியளித்தாள் சண்டிகை. சண்டிகை லலிதா த்ரிபுரசுந்தரியின் சதுரங்க சேனையின் ப்ரதான தேவதை.


எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் படைத்தவள். இவளே அபராஜிதா (தோல்வியே இல்லாதவள்) என்றும் அழைக்கப்படுபவள். தேஜோவதியின் சிம்மவாகனமானது தனது கர்ஜனையால் நூற்றுக்கணக்கில் அசுர சேனையை கொன்று குவித்தது. அம்பிகையின் ஆர்ப்பரிக்கும் தாக்குதலில் இந்திரியங்கள் இயக்கம் மறந்து அரக்கர்களின் ஈரக்குலை நடுங்க உயிருக்கு பயந்து ஊதப்பட்ட பஞ்சாய் எரிமலையில் விழுந்த புழுவாய் ஏற்றத்தில் இரங்கும் யானையாய் ஜம்புலங்களும் ஒடுக்கம் பெற்று சிங்கத்தை எதிர்த்த ஓநாய்களாக அரக்கர் படையும் அதன் தலைவனும் ஒழிந்து போனார்கள்.


இவ்வாறாக மஹிஷனை ஸம்ஹரித்த தேவியை போற்றி தேவர்கள் துதிக்கிறார்கள், அதிலிருந்து சிலவற்றை கீழே பார்க்கலாம்.

யஸ்யா: ப்ரபாவ-மதுலம் பகவானனந்தோ ப்ரம்மா ஹரச்ச ந ஹி வக்து-மலம்
பலஞ்ச ஸா சண்டிகாகில-ஜகத்பரிபாலனாய நாசாய சாசுப-பயஸ்ய மதிம் கரோது


எவளுடைய அளப்பதற்கரிய பெருமையையும், பலத்தையும் ப்ரம்மா-விஷ்ணு-சிவனாலும் வர்ணிக்க இயலாதோ அந்த சண்டிகை அசுபத்தினால் எற்படும் பயத்தைப் போக்கி அகில உலகையும் பரிபாலிக்க திருவுள்ளம் கொள்ள வேண்டும்.

ஹேது: ஸமஸ்த-ஜகதாம் த்ரிகுணாபி தோஷைர்ந ஜ்ஞாயஸே ஹரிஹராதிபி-ரப்யபரா
ஸ்ர்வாச்ரயாகில-மிதம் ஜகதம்சபூத-மல்யாக்ருதா ஹி பரமா பரக்ருதி ஸ்த்வமாத்யா

உலகனைத்துக்கும் காரணம் நீ; முக்குண வடிவங்கள் உடையவளானாலும் குணத்வேஷம் இல்லாதவள் நீ; ஹரி-ஹரன் போன்ற தேவர்களுக்கும் எட்டாதவள் நீ;எல்லோருக்கும் புகலிடம் நீ;உலகெலாம் தோன்றியது உன்னுடைய அம்சத்தால்; முதன்மையானதும், மாறாததும், உயர்ந்ததுமான மூலப் பிரகிருதி நீ.

மேதாஸி தேவி விதிதாகில சாஸ்த்ர ஸாரா துர்காஸி துர்க பவஸாகர நெளரஸங்கா
ஸ்ரீ: கைடபாரி க்ருதயைக க்ருதாதிவாஸா கெளரீ த்வமேவ சசிமெளலி க்ருத ப்ரதிஷ்டா

ஸகல சாஸ்திரங்களையும் உண்ர்ந்த புத்தி ரூபம் நீ, விஷ்ணுவின் இதயத்தில் வாசம் செய்யும் நீ, சந்திர சேகரனோடு உறையும் கெளரியாகவும் இருக்கிறாய்.

இவ்வாறாக, சப்தஸதியில் உள்ள ஸ்துதிகள் அளவிடாத பலனை தரவல்லது. 5 - வது அத்தியாயத்தில் "யாதேவி ஸர்வ பூதேஷு"- எனத்தொடங்கும் பகுதியால் செய்யப்படும் நமஸ்காரங்கள் பிறப்பில்லா நிலையை தரும் என்று சொல்லப்படுகிறது.

"பலிப்ப்ரதான பூஜாயா மக்னி கார்யே மகோத்ஸவே சர்வம் மமைதஸ்சரித முச்சார்யம்ச்ராவ்யமேவச" - என்பதாக தேவியே சொல்கிறாள். (பலிப்ப்ரதானத்திலும், அக்னிகார்யத்திலும், மகாஉற்சவங்களிலும் இந்த என் சரிதம் வாசிக்கப்பட வேண்டும்) இதனால் தான் எந்த கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் சண்டி பாராயணம் செய்யப்படுகிறது. இந்த பாராயணத்தின் பலனாக அம்பிகை நம் மனதில் உள்ள காம,க்ரோத,மத,லோப,மாச்சர்யங்களை ஒழித்து எல்லா செல்வங்களையும் அருளட்டும்.

யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸ்ம்ஸ்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:



------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: மேலே சொல்லியது மஹிஷ வதம் மட்டுமே, இது போலவே இன்னும் பல அசுரர்களை அன்னை மாய்த்ததும், அப்போது தேவர்கள் அன்னையை துதித்ததும் மஹாத்மியத்தில் இருக்கிறது. அதனை பிறகு ஒரு சமயம் கணேசன் நமக்காக எழுத வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.