Tuesday, September 30, 2008

ஸ்ரீ பாத ஸப்ததி - *நவராத்திரி சிறப்பு இடுகை - 3*


நாரயாண பட்டத்திரி நாம் எல்லாம் அறிந்த ஒருவர். ஆம்!, குருவாயுரப்பனை போற்றி ஸ்ரீ நாராயணீயம் எழுதியவர் தான். அவர் எழுதிய நாராயணீயத்தை குருவாயூர் கிருஷ்ணனே ஆமோதித்து அவரது ரோகத்தையும் தீர்த்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. பட்டத்திரி நாராயணீயம் எழுதிப் பலகாலம் கழிந்த பிறகும் மனச் சாந்தியில்லாது தத்தளித்த காலகட்டத்தில் ஸ்ரீ குருவாயுரப்பனே அவர் கனவில் தோன்றி முக்திஸ்தலம் என்னும் க்ஷேத்திரத்தில் இருக்கும் ஸ்ரீ துர்க்கையை தரிசித்து ஸ்தோத்திரம் செய்தால் மனசாந்தி கிடைக்கும் என்று கூறினாராம். அதன்படி, தற்போது குக்போளக்கா என்றழைக்கப்படும் இடம் சென்று துர்க்கையின் ஸ்ரீபாதார விந்தங்களை "ஸ்ரீபாத ஸப்ததி" என்கிற 70 ஸ்லோகங்களை பாடி பிரார்த்தித்து மனநிறைவினையும் அங்கேயே முக்தியையும் பெற்றதாக தெரிகிறது. இவ்வாறாக பத்யம் என்று கூறப்படும் இலக்கிய கட்டுப்பாடிற்கு உட்பட்ட வகையில் 70 ஸ்லோகங்கள் மிக அருமையாக எழுதி அன்னையின் அருளில் அவர் மூழ்கியிருக்கிறார். பத்யம் என்றால் நான்கு வரிகளைக் கொண்டது என்று பொருள். இந்த ஸ்லோகங்களில் வார்த்தைகள் யோகரூடம் என்னும் முறையில் உள்ளது. அதாவது வார்த்தைக்கு இரு முறையான அர்த்தங்களைத் தரும் சொற்களை யோகரூடம் என்று சொல்வது வழக்கம்.

இந்த 70 ஸ்லோகங்களில் அன்னை பராசக்தியின் பாத வர்ணனை, நகங்களது சோபை, இந்திராதி தேவர்கள், ஆதி-சேஷன் பூஜித்த மஹிமை, மகிஷாசுர, சும்ப-நிசும்ப வதங்கள், ஹிமாசலத்தில் பால-லீலைகள், அன்னையின் திருமணக்கோலம், பக்த வாத்ஸல்யம் போன்றவற்றை அனுபவித்துப் பாடியிருக்கிறார். ஸ்ரீ பாத பக்தியானது சரணமடைந்தவர்களிடத்து மிகுந்த கருணையுடன் ஆட்கொண்டு மோக்ஷ சாம்ராஜ்யத்தையே தரவல்லது. இந்த ஸ்லோகங்களைப் படிக்கையில் பல செளந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் மனதில் தோன்றக் கூடும். அப்படிப்பட்ட ஸ்ரீபாதத்தைப் போற்றிய ஸப்ததியிலிருந்து சில ஸ்லோகங்களை மட்டும் இன்று காணலாம்.

ஸேவந்தே குலஸம்பதே நகமயா: சீதாம்சவஸ்த்வத்பதம்
தத்பாகோ நநு வீஷ்யதேஹி நிதாமன்யேக்ஷு சீதாம்கஷு
ஏகோ பாலக ஏவ மெளலிமயி தே யாதோ லலாடாத்மதா
மன்யோ நிர்மல மண்டல தசாமன்யெள து தன்யெள கதெள

பகவதியே!, குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உன் பாத நகங்களாக இருந்து கொண்டு உன் பாதங்களைப் பஜித்ததால் தன் குல விருத்தியை அடைந்தான். சந்திரன் பாதங்களை பஜித்ததால் அவன் உன் சிரசிலும் இருக்கிறான், மற்றும் உனது நெற்றியாகவும், கன்னங்களாகவும் தெரிகிறான். அவர்கள் பாக்கியசாலிகள். அதாவது பாதத்தை பூஜித்ததால் சந்திரனது சந்ததிகளுக்கு பிற்காலத்தில் அன்னையின் சிரசிலும், நெற்றியிலும், கன்னங்களிலும் வாசம் செய்யும் பேறு கிட்டியது என்கிறார்.

ராகத்வேஷமுகா ஹி விப்ரமபரா நச்யதி விச்வேச்வரி
த்வத்ஸங்கதிதி முக்திதேசநிலயே மித்யா ஜனை:கத்யதே
உத்யத்வேஷ முதாரவிப்ரமதரம் காத்ரம் ததத்யா த்வயா
ராகோபி த்ரியதேதிகம் சரணயோ: சோணாம்புஜச்சாயயோ.

முக்தி-க்ஷேத்திரத்தில் வசிக்கும் தேவியான ஈஸ்வரியே!, உன் பாதார-விந்தங்களை சேவிப்பதால் ராகத்-வேஷம் நீங்கிவிடும் என்று ஜனங்கள் கூறுகிறார்கள். ஆனால் உன்னுடைய சரீரமே பார்ப்பவர்களுக்கு மன மயக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அதைவிட சிறந்த சிவப்பு நிறமுடைய (ராகம் = சிவப்பு) உன்பாதங்களிடத்து உன் சரீரமே துவேஷத்தைக் கொண்டும் இருக்கிறது. சரீரத்திலேயே ராகம், துவேஷம் ஆகியவற்றை வைத்திருக்கும் உன்னை நமஸ்கரிப்பவர்களுக்கு இந்த இரண்டிலுமிருந்து எவ்வாறு விடுதலை கிடைக்கும் என்று நிந்தா ஸ்துதியாக சொல்கிறார். அன்னையின் பாதங்கள் இவ்விரண்டையும் போக்கவல்லது என்பதை இவ்வாறு கூறியிருக்கிறார். இதே கருத்துடைய ஸ்லோகம் மூக-பஞ்சசதீயிலும் காணலாம்.
த்ரைலோக்யம் வசயந்தி பாபபட லீமுச்சாடயந்த்யுச்சகைர்
வித்வேஷ ஜனயந்த்ய தர்மவிஷயே ப்ரஸ்தம்பயந்த்யாபதம்
ஆகர்ஷந்த்யபி வாஞ்சிதானி மஹிஷஸ்வர்வைரிணோ மாரணாஸ்
சித்ரம் த்வத்பதஸித்த சூர்ணநிவஹ: ஷட்கர்மணாம் ஸாதகா:

அம்பிகே!, உன் திருவடித்துளியை (அம்பாளின் பாத தூளி பற்றி செளந்தர்ய லஹரியிலும் பார்த்திருக்கிறோம்) சிரசில் தரிக்கும் பக்தர்கள் ஆறு கர்மங்களையும் சாதித்துவிடுகின்றனர். ஆறு கர்மங்களாவது, வச்யம், உச்சாடனம் (இது மந்திர உச்சாடனம் என்ற பொருளில் அல்ல, விரட்டுவது என்னும் பொருளில், அதாவது கெட்டவற்றை விலக்குவது/விரட்டுவது என்று கொள்ள வேண்டும்), வித்வேஷணம் (வெறுப்பினை உருவாக்குவது), ஸ்தம்பனம் (ஸ்தம்பிக்க வைப்பது), ஆகர்ஷணம், மாரணம் (மரணம்) என்பவை. இதே போல மூகரும் அன்னை காமாக்ஷியை நமஸ்கரித்தலால் கிடைக்கும் மந்திரார்த்தங்களைப் பாடியிருக்கிறார்.

நாமும் இந்த நன்னாளில் அன்னையின் பாதாரவிந்தங்களில் வணங்கி அவள் அருளைப் பெறுவோமாக.

Monday, September 29, 2008

நவராத்திரி விரதம் சில குறிப்புகள் - *நவராத்திரி சிறப்பு இடுகை - 2*


நவராத்திரி என்பது சாதாரணமாக ஆவணி கடைசி அல்லது புரட்டாசியில் வருவது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் அம்பிகையை வழிபட நான்கு நவராத்திரிகள் உண்டென்பது தெரியுமா?. புரட்டாசியில் வரும் (இன்று ஆரம்பிப்பது) சரன் நவராத்ரி என்று பெயர். இது போலவே வசந்த காலத்தில் ராம நவமிக்கு முன் வருவது வசந்த நவராத்த்ரி என்பர். இது போலவே மற்ற இரு ருதுக்களிலும் நவராத்ரி உண்டு. அது பற்றி பின்னர் வேறு இடுகையில் காணலாம். இன்று நாம் காண இருப்பது புராணங்களில் பலரால் செய்யப்பட்ட நவராத்திரி விரதங்களும் அதன் பலனாக அவர்கள் அடைந்தவைகளும் மட்டுமே. கீழே கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தேவி பாகவதத்தில் வேத வியாசர் கூறியவை

இராமாயணத்தில் நவராத்ரி:
வனவாசத்தில் சீதா தேவியை இழந்த ராமர் சுக்ரீவனுடன் எற்பட்ட தொடர்பில் சுக்ரீவனது உதவியை நாடி, அவனுக்காக வாலியை வதம் செய்கிறார், பின்னர் சுக்ரீவனுக்கு அரசுப்பட்டத்தை அளிக்கிறார். அவ்வாறு அரசுரிமை பெற்ற சுக்ரீவன் ராமனுக்கு செய்ய வேண்டிய உதவியினை மறந்து சுக போகங்களில் மூழ்கிவிடுகிறான். அப்போது ராமர் வருந்தியிருக்கையில் அங்கு வந்த நாரதர் ராமனது கலக்கத்தை போக்கும் விதமாக அவனிடத்திலே தேவியின் நவராத்ரி விரதத்தை கடைபிடித்து வெற்றியை கைப்பற்ற கூறுகிறார். ராமனோ, தானிருப்பதோ கானகம், அங்கே எப்படி இம்மாதிரி விரதம்/விழா போன்றவற்றை கடைபிடிக்க இயலும் என்று கேட்க, நாரதர் 'வன்ய நவராத்ரி' பற்றி கூறி அதனை கடைபிடிக்க கூறுகிறார். வனத்தில் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு செய்வது வன்ய நவராத்திரி என்று பெயர். கூறியதுடன் நில்லாத நாரதர், தாமே முன்னிருந்து அவ்விரத பூஜைகளை ராமனுக்கு செய்து கொடுக்கிறார். இந்த நவராத்திரி விரத பலனே ராமனுக்கு ஊக்கம் அளித்ததாம். இதன் பிறகே லக்ஷ்மணனை அனுப்பி சுக்ரீவனுக்கு தனது நிலையினை எடுத்துரைக்க வைத்து அவனது முயற்சியை பெறுகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

மஹாபாரதத்தில் நவராத்ரி:
சியமந்தக மணியினை திருடியதாக ஸ்ரீ கிருஷ்ணர் மீது குற்றம் சாட்டப்பட்ட போது கிருஷ்ணர் அந்த மணியினை மீட்பதற்காக காட்டில் இருக்கும் ஜாம்பவானுடன் போருக்குச் செல்கிறார். அப்போது கிருஷ்ணனின் தந்தையான வசுதேவர் தமது மகனது முயற்சி வெற்றியடைய நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார். ஒன்பது நாட்களிலும் அன்னைக்கு ஒன்பது விதமான ஆபரண-அலங்காரங்கள், நிவேதனங்கள் என்று செய்து அவளருளை வேண்டிப் பிரார்த்திக்கிறாராம். அவற்றின் பலனாக கிருஷ்ணன் ஜாம்பவானை வென்று சியமந்தக மணியினை திரும்ப பெற்றதுடன் இல்லாது ஜாம்பவானின் புத்ரியான ஜாம்பவதியை திருமணமும் செய்து கொள்கிறார். மீட்ட சமந்தக மணியின் உரிமையாளரான சத்ரஜித்திடம் அதை ஒப்படைக்கையில் அவனும் தமது தவறை உணர்ந்து தனது மகளான சத்ய பாமாவை கிருஷ்ணருக்கு மணம் செய்விக்கிறான். இதெல்லாம் நவராத்ரி விரத்த்தை ஆரம்பித்த வசுதேவர் அதை முடிக்கும் 9 தினங்களுக்குள்ளாக நடந்ததாகவும், கிருஷ்ணர் திரும்புகையில் விஜய தசமி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

சுசீலனது கதை:
முன்னொரு காலத்தில் கோசல தேசத்தில் சுசீலன் என்று ஒரு வியாபாரி இருந்தான். அவன் தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை அடைந்து வறுமையால் வருந்தினான். அவன் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்கவும் இயலாது இருக்கும் காலத்தில் கூட அவன் கர்மானுஷ்டானங்களை விடாது செய்து வந்தான். வறுமையால் வரும் அசுயை, சபலம் போன்றவை நெருங்காது தர்ம சிந்தனையுடன் இருந்தான். ஒருநாள் தமது குடும்பம் உண்ண எப்பொருளையும் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கையில் ஒரு அந்தணனை காண நேர்கிறது. அப்போது சுசீலன் அந்த அந்தணரிடம் தனது குறைகளைச் சொல்லி தமது குடும்பத்துக்கு உணவு பற்றாக்குறை தீரவும், திருமண வயதை நெருங்கும் தனது பெண் குழந்தைக்கு காலத்தே விவாஹம் நடக்கவும் ஏதேனும் விரதம், பூஜை, தவம் போன்றவை இருக்கிறதா என்று அறிய விரும்புவதாக கூறுகிறான். அப்போது அந்தணர் அவனுக்கு நவராத்திரி விரதத்தைப் பற்றிச் சொல்கிறார். இவ்விரதத்தை பக்தி-சிரத்தையுடன் கடைப்பிடிப்பவன் வாழ்வில் வறுமை நீங்கி சகல சம்பத்துக்களையும் பெற்று வாழலாம் என்று கூறுகிறார். சுசீலனும் அவ்வாறே பக்தி சிரத்தையுடன் நவராத்திரி விரதமிருந்து ஒன்பதாம் நாள் அன்னையின் தரிசனம் கிடக்கப் பெற்று அவனுக்கு தீர்க்க ஆயுளும், சகல-சம்பத்துக்களையும் அருளினாள்.

நவராத்திரியில் ஒன்பது தினங்களும் பூஜிக்க வேண்டிய அன்னையின் சக்திகள் பின்வருமாறு. குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா. இவர்களைப் பூஜிக்கையில் இந்த சக்திகளுக்கு மூலகாரணியான பராம்பிகையை உரிய தியான ஸ்லோகங்களால் தியானித்து பின்னர் பூஜை, ஜபம், ஹோமம் போன்றவற்றை இந்த சக்திகளுக்குச் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த 9 சக்திகளின் தியான ஸ்லோகத்தையும் அதன் பொருளுடனும் இப்பதிவினை நிறைவு செய்வோம்.
குமாரரூய ச தத்வானி யாரூ ருஜத்யயி லீலாய
காதிநபிச தேவாம்ரூதான் குமாரிம் பூஜயாம்யஹம்

குழந்தையினுடைய விளையாட்டுக்களைப் போல் எவள் செய்கிறாளோ, பிரம்மன் முதலான தேவர்கள் எந்த சக்தியின்லீலையால் சிருஷ்டி-ஸ்திதி-சம்ஹாரங்களைச் செய்கிறார்களோ அந்த சக்தியான குமாரியை நான் பூஜிக்கிறேன்

சத்யரதிபிரூ த்ரிமூர்த்திர் யாத்தர்ஹி நாநாரூவரூபிணி
த்ரிகால வ்யாபிநி சக்திரூ த்ரிமூர்த்திம் பூஜயாம்யஹம்

சத்வம் முதலான குணங்களால் அநேக ரூபங்களாகவும், ஸ்ருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் போன்ற செயல்களாகவும், காலை, உச்சி, மாலை போன்ற காலங்களாகவும் வியாபித்திருக்கும் சக்தியான த்ரிமூர்த்தியை பூஜிக்கிறேன்.
கல்யாண காரிணீ நித்யம் பக்தானாம் பூஜிதாநிசம்
பூஜயாமி சதாம் பக்த்யா கல்யாணீம் சர்வகாமதாம்

பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு, அவர்களுக்கு எந்த சக்தியால் மங்களங்களை அருளுகிறாளோ அந்த சக்தியைக் கல்யாணியை வணங்குகிறேன்.
ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம சஞ்சிதாநிவை
யாதேவீ சர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம்
பல பேதங்களுடைய சகல பிராணிகளின் பூர்வ ஜென்ம கர்மங்களாகிய பாபங்களை எந்த சக்தியால்நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியான ரோஹிணியை நான் பூஜிக்கிறேன்.
காளிகாலயதே சர்வம் பிரஹ்மாண்டம்ஸ சராசரம்
கல்பாந்த சமயேயாதாம் காளிகாம் பூஜயாம்யஹம்

மஹா-பிரளய காலத்தில் அண்ட-சராசரங்களையும் எந்த சக்தியால் சம்ஹரிக்கின்றாளோ அந்தசக்தியான காளியை பூஜிக்கிறேன்.
சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்ட முண்ட விநாசிநீம்
தாம்சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம்
சண்ட-முண்டர்களை வதைத்து அதன் மூலமாக பாதகங்களை தவிர்த்திட எந்த சக்தியானவள் காரணமாகிறாளோ அந்த சக்தியான சண்டிகாவைப் பூஜிக்கிறேன்.

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை: பரிகீர்த்திதா
யஸ்யாஸ்தாம் சுகதாம் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம்
பரபிரம்மத்தின் விருப்பப்படி எந்த சக்தியினால் திருவுருவங்களை உருவாக்குகிறாளோ அந்தசக்தியான சாம்பவியை நான் பூஜிக்கிறேன்.
துர்க்காத்ராயதி பக்தம்யா ஸதா துர்க்கதிநாசினீ
துர்ங்ஞேயா சர்வ தேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம்
துர்க்கதியை நீக்குபவளாய், தேவர்களாலும் காணப்படாதவளாகவும், பக்தர்களின் துயர் துடைப்பவளாகவும்எந்த சக்தி இருக்கிறாளோ அந்த சக்தியை துர்க்காவாக பூஜிக்கிறேன்.

சுபத்ராணி ச பக்தானாம் குருதே பூஜிதாசதா
அபத்ரநாசிநீம் தேவீம் சுபத்ராம் பூஜயாம்யஹம்

தனது பக்தர்களுக்கு மங்களங்களைத் தருபவளும், அமங்கலத்தைப் போக்குபவளுமான சக்தியைசுபத்ரா என்ற பெயரில் பூஜிக்கிறேன்.
இவ்வாறு தேவியை ஒவ்வொரு நாளும் மேலே சொன்ன விதத்தில் தியானித்து, சகல உபசாரங்களும் செய்து பூஜிக்க வேண்டும். நவராத்ரி ஒன்பது நாட்களும் பூஜை செய்ய இயலாவிட்டால், சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று தினங்களிலாவது செய்யலாம். தினம் பூஜை செய்ய இயலாதவர்கள் இந்த மூன்று நாட்கள் செய்தாலே 9 நாட்கள் செய்த பலனை அடைவார்களாம்.

Sunday, September 28, 2008

நவராத்திரி-கொலு பார்க்கலாம் வாங்க -- *நவராத்திரிச் சிறப்பு இடுகை -1*


"சரத்காலே மஹாபூஜா க்ரிய தே யா ச வர்ஷி'கீ, தஸ்யாம் மமைதத் மஹாத்ம்யம் ச்ருத்வா பக்தி சமன்வித: ஸர்வ பாதா விநிர்முக்தோ தன-தான்ய ஸுதான்வித:" என்பது தேவி மஹாத்மியத்தில் அம்பாள் சொல்வது. அதாவது, சரத்க்காலத்தில் எனக்கு மஹா பூஜை செய்து, மஹாத்மியத்தைப் படிப்பது மிகுந்த பலனைத் தருவேன் என்பது பொருள். சரத்க்காலத்தில் வரும் நவராத்திரி தான் சரத் நவராத்திரி என்று பெயர்.

தேவி-மஹாத்மியம் என்பது பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்கண்டேய புராணத்தில் வரும் 700 ஸ்லோகங்கள். இந்த 700 ஸ்லோகங்களே மந்திரங்களாக, தேவி சப்தசதீ என்று சொல்லப்படுகிறது. இந்த நவராத்திரியில் இதனை பாராயணம் செய்வதாலும், பாராயணம் செய்வதை கேட்பதாலும் அன்னையின் அருளுக்கு பாத்திரமாவது உறுதி. இந்த மஹாத்மியம் எல்லோரும் பாராயணம் செய்ய அனுமதியில்லை. நவாக்ஷரி போன்ற மந்திர உபதேசங்களைப் பெற்றவர்களே செய்ய தக்கவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. நமக்கு அதிகாரம் இல்லையெனில், அதனை பாராயணம் செய்யத்தக்கவர்களைக் கொண்டு பாராயணம் செய்ய வைத்து கேட்கலாம். இது நவராத்திரியில் ஒன்பது நாட்கள், தினம் ஒருமுறை பாராயணம் செய்தால் நவ-சண்டீ பாராயணம் என்றும் நூறு முறை பாராயணம் செய்தால் சத-சண்டீ என்றும் கூறுவர். நவராத்திரி சமயத்தில், இல்லத்தில் கட-ஸ்தாபனம் செய்து காலை-மாலை இருவேளைகளும் சஹஸ்ரநாமா, த்ரிசதீ போன்றவற்றை பாராயணமாகவோ இல்லை அர்ச்சனையாகவோ செய்து வழிபடுவது, கொலு வைத்து பூஜிப்பது, ஸுவாஸிநி, கன்யா பூஜை போன்றவை மிகுந்த விசேஷம்.


வியாசரால் எழுதப்பட்ட புராணங்கள் 18. இவற்றுக்கு உப-புராணங்களாக 18 எழுதியுள்ளார். இந்த உப புராணங்களில் ஒன்று தேவி பாகவதம். வியாசர் தனது புத்திரரான சுகரைத் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்திய போது, திருமணத்தை மறுத்த சுகருக்கு இந்த புராணத்தைக் கூறி தேவியை வழிபடப் பணிக்கும் சமயத்தில் அங்கிருந்து கேட்ட சூத முனிவர் இந்த புராணத்தை சனகாதியருக்கு உபதேசித்தார். அதி-விசேஷமான இந்த புராணத்தை நவராத்ரி ஒன்பது தினங்களில் பாராயணம் செய்வதுண்டு.


இந்த நவராத்திரிக்கு எழுதும் பதிவுகள் பெரும்பாலும் இதனை அடிப்படையாக கொள்ள இருக்கிறேன். நவராத்ரியில் கருணாமூர்த்தியான அம்பாளை முதல் மூன்று நாட்கள் துர்காவாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜா முறைகள் பற்றி பல புத்தகங்களில் பலவாறு எழுதப்பட்டிருக்கிறது. அவரவர் இல்லத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கமே ப்ராதான்யமாக கொண்டு செய்தல் நலம்.


இந்த 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம். கொலுவானது 9 படிகளாக வைப்பதே வழக்கம். ஆனால் காலப் போக்கில் அவரவர் இடம்/பொருள் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் இருந்தால் போதும் என்று மாற்றிக் கொண்டுவிட்டனர். இப்படிகளில் பொம்மைகளை வைக்க முறையும் இருக்கிறது. மேலிருந்து வருகையில் முதல் படியில் மரப்பாச்சி, கலசம், இறை உருவங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். இன்று மரப்பாச்சி பொம்மைகளுக்கு மவுசு இல்லை. ஆனால் அவை கதிரம் என்று கூறப்படும் கருங்காலி மரத்தால் ஆனது. இம்மரம் அக்னி ஸ்வரூபமாக கருதப்படுகிறது. இது இருக்கும் இடத்தை தீய சக்திகள் அணுகாது என்பர்.


ஒன்பது படிகள் என்பது நவ-ராத்ரிகளையும், உடலில் இருக்கு நவ துவாரங்களையும், ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நவ கோணங்களையும், நவ கண்டங்களையும் குறிப்பது என்று சொல்வதுண்டு. இந்த ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. அம்பாளை வழிபடுபவர்கள் நற்கதி அடைதலை சோபான பதவி என்பர். இந்த சோபான பதவி அடைய 9 படிகளைக் கடக்கவேண்டும் என்ற தத்துவமும் உண்டு. அந்த 9 படிகளாவது, விவேகம், சலிப்பு/நிர்வேதம், விரக்தி/தாபம். பீதி, நல்வழி, எண்ணங்களில் உயர்வு, ரூப வழிபாடு, க்ஷேத்ர வழிபாடு, பகவத் அனுபவம் ஆகியவை.


நவராத்ரி பூஜை 9 நாட்கள் என்றாலும் இதை செய்பவர்கள் மேற்ச் சொன்னபடி கலசத்தில் அம்மனை ஆவிர்பஹித்தல், கொலு வைத்தல் ஆகியவற்றை அமாவாசையன்றே ஆரம்பிப்பது வழக்கம். அது போல அமாவாசையாகிய இன்று, இந்த இடுகையுடன் மதுரையம்பதியில் நவராத்ரி ஆரம்பிக்கிறது. முப்பெருந்தேவியர் அருள்வேண்டி, இன்று முதல் தினம் ஒரு இடுகை இந்திய நேரப்படி மாலையில் இங்கே இடப்படும்.

பராம்பிகை திருவடிகளே சரணம்.

Wednesday, September 24, 2008

நாத ரூபா, நீல சிகுரா



ஸவ்ய-அபஸவ்ய மார்க்கஸ்தா என்று சஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு ஒரு நாமம். இதன் பொருளைப் பார்க்கலாம். ஸவ்யம் -வலது; அபஸவ்யம் - இடது. மார்கஸ்தா - எந்த மார்க்கத்திலும் வழிபடப்படுபவள். தன்னை வழிபடுபவர்களது வலது-இடது புறங்களில் இருந்து வழி நடத்துபவள் என்று பொருள் கொள்ளலாம். வேதவழியில் செய்யும் வழிப்பாட்டிற்கு ஸவ்யம் என்று சொல்வது வழக்கம். அஸவ்யம் என்பது தாந்திரிக வழிபாடு. ஆக, இந்த இரு முறைகளில் வழிபட்டாலும் அன்னையை அடையலாம் என்றும் பொருள் கொள்ளலாம். இன்னும் சொன்னால் பண்டிதர்கள் செய்யும் வழிபாடு ஸவ்யம், என்னைப் போல பாமரர்கள் செய்யும் வழிபாடு அஸவ்யம். ஆக எப்படி வழிபட்டாலும் அருளுபவள் அம்பிகை. இங்கு வழிபாடுதான் முக்கியமாக கொள்ள வேண்டியது. எந்த முறையில் வழிபாடு என்பது முக்கியமல்ல. பாஸ்கர ராயர் என்று ஒரு மஹான், மராட்டிய தேசத்தவர், ஆனால் காவிரிக்கரையில் வாழ்ந்தவர். [இப்போதும் பாஸ்கர ராய புரம் என்ற ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கிறது] பெரிய சக்தி தாசர். அவர் சஹஸ்ர நாமாவுக்கு பாஷ்யம் எழுதுகையில் அம்பிகையே கிளியாக வந்து அவர் தோளில் அமர்ந்து கேட்டு, சரி பார்த்ததாகச் சொல்வர். இவர் செய்த வழிபாடு ஸவ்ய-மார்க்கம் ஆனால் காளிதாசன் அம்பிகையை வழிபட்ட முறையோ அபஸவ்ய மார்க்கத்தில் என்பார்கள். ஆக, எவ்வழியில் சென்றாலும் அன்னையின் அருளுண்டு.

லலிதா சஹஸ்ர நாமங்களை சற்றே உற்று கவனித்தவர்களுக்கு பின்வரும் செய்தி தெரிந்திருக்கும். சஹஸ்ர நாமம் ஆரம்பிக்கையில் அன்னையின் தோற்றம், பதவி, பண்டாசுர வதம், குண்டலினி சக்தி பற்றிச் சொல்லி, பிறகு தேவியின் நிர்குண வர்ணனை வரும். ஆனால், இந்த நிர்குண வர்ணனை வருகிற போதே ஒரு நாமம், நீல சிகுரா என்று. அப்படின்னா என்ன?. கருமையான கூந்தலை உடையவள் என்று அர்த்தம். அன்னையின் முன்பு சஹஸ்ரநாமத்தை அரங்கேற்றும் சமயத்தில் வசிநீ-வாக் தேவதைகள் நிர்குணத்தை போற்றுகையில் அம்பிகையை பார்த்த போது அவளது கருங்கூந்தலில் தமது மனதைப் பறிகொடுத்து சகுணத்தைப் போற்றும்படியாக நீல-சிகுரா என்றனராம்.

திருக்கோலக்கா என்று ஒரு ஊர், தஞ்சாவூர் ஜில்லாவில் (இன்று பல மாவட்டங்கள் பிரிந்ததால் சரியாக தெரியவில்லை)இருக்கிறது. அங்கு அன்னைக்கு "ஓசை கொடுத்த நாயகி" என்று பெயர். அதென்ன இப்படி ஒரு பெயர்?, இங்குதான் திருஞான சம்பந்தருக்கு அம்பாள் தாள-வாத்யம் கொடுத்தாளாம். (கையில் வைத்துக் கொண்டு பாட்டிற்கு தாளம் போடுவது, ஜால்ரா தானா, இல்லை சிப்ளா கட்டையா என்று தெரியல்ல, ஆனா படங்களில் ஜால்ரா தான் அவர் கையில் இருக்கிறது). இந்தக் கதையால் வந்த நாமம் தான் அங்குள்ள அம்பிக்கைக்கு அப்பெயர் வரக் காரணம். இதற்கு இணையான ஒரு நாமம் "நாத ஸ்வரூபா" என்பது. அன்னை நாதமாக, லயத்துடன் கூடிய ஸப்தமாக இருக்கிறாளாம். குண்டலினி யோகம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு சக்ரத்திலும் ஒவ்வொரு வித நாதம் எழுமாம். அன்னைக்கே குண்டலினீ என்று பெயர் என்பது அறிந்ததே!. பாரதியும் "நாத வடிவானவளே!, நல்லுயிரே கண்ணம்மா" என்று கூறியிருக்கிறார்.

ஆனந்தலஹரியின் கடைசி சில ஸ்லோகங்களில் மஹா-பைரவ, பைரவி ஐக்கியத்தைப் பார்த்தோம். சிவ-சக்தி ஐக்கிய ஸ்வரூபிணி என்பது சஹஸ்ர நாமத்தில் ஒரு நாமம். அதாவது சிவன், சக்தி ஆகியோர் இணைந்த கோலத்தில் இருப்பவள். சக்தியில்லையேல் சிவமில்லை என்பார்களே, அதுதான். அந்த சக்தி-சிவத்துடன் கூடிய ஐக்கிய ஸ்வரூபம். இந்த இணைந்த கோலத்தை திருவெம்பாவையில் மாணிக்க வாசகர் பொய்கை வடிவில் கண்டதாக கூறுகிறார். பராசக்தியிடத்து தோன்றியதுதான் எல்லா சக்திகளும். அது எப்படி என்று நவராத்ரி பதிவில் காண்போம்.

Thursday, September 18, 2008

நீலகண்ட தீக்ஷதர்....

அப்பைய தீக்ஷிதர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது தம்பியின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர். இவர் மதுரையில் நாயக்க அரசுகள் இருந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். அப்பைய தீக்ஷதர் 72 வயது வரை வாழ்ந்தவர், அப்போது நீலகண்ட தீக்ஷிதரது வயது 8. அப்பைய தீக்ஷதருக்கு குழந்தை நீலகண்டன் மிது அலாதி ப்ரியம்.அப்போதெல்லாம் ஸம்ஸ்கிருதம் சிறுவயதிலிருந்தே கற்று தரப்பட்டு, அதிலேயே பேசுவது வழக்கமாயிருந்த காலம்.

தீக்ஷதர் தனது கடைசிக் காலத்தில் குழந்தையிடம் விளையாட்டாக "ஆபதி கிம்கரணீயம்" என்று கேட்டாரம். அதற்கு பதிலாக நீலகண்ட குழந்தை, "ஸ்மரணாயாம் சரண யுகளம் அம்பாயா" என்று சொன்னதாம். "ஆபதி கிம்கரணீயம்" என்றால் "ஆபத்து வந்தால் என்ன செய்ய வெண்டும் " என்று அர்த்தம். இதற்கு குழந்தை சொன்ன பதிலின் பொருள் என்னவென்றால், 'பரதேவதையின் பாதாரவிந்தத்தை நினைக்க வேண்டும்' என்பது. இத்துடன் நின்றதா இந்த சம்பாஷணை என்றால் இல்லை. அடுத்ததாக அப்பையர் "தத் ஸ்மரணம் கிம் குருதே" என்று கேட்கிறார், அதாவது 'அப்படி நினைத்தால் என்ன பலன்'. அதற்கு குழந்தை 'ப்ரும்மாதீன பி இங்கரீ குருதே' அதாவது பராம்பிகையின் பாதாரவிந்தத்தை ஸ்மரணித்தவனுக்கு ப்ரும்மாதி தேவர்கள் சேவகர்கள் ஆகிறார்கள்' என்று பொருள். இவ்வாறாக சிறு குழந்தைப் பருவத்திலேயே அம்பிகையருளால் வாக்விலாஸத்தைப் பெற்றவர் நீலகண்ட தீக்ஷதர்.

இவர் ஆனந்த ஸாகரஸ்தவம் என்று மீனாக்ஷியம்மன் மேல் ஒர் ஸ்லோகம் பண்ணியிருக்கார். அதிலே, "த்வத் பாதபக்தி ரஹிதோம் மம மாஸ்து வம்ச: த்வத் சேவயா விரஹிதம் மம மாஸ்து சாயு" என்று சொல்கிறார். இதன் பொருள்,அம்பிகே!, அடுத்ததாக எனக்கு எந்த பிறவி வேண்டுமானாலும் வரலாம், எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம், அது என் கையில் இல்லை.ஆனால் ஒரேயொரு வேண்டுகோள் என்று சொல்லி, 'உன்பாதார விந்தத்தில் பக்தியில்லாத வம்சத்தில் எனக்கு அடுத்த பிறவி வேண்டாம்' என்கிறார். இவர் சாக்தர், ஆயினும் பராசக்தியை மட்டுமில்லாது எல்லா தெய்வங்ளையும் போற்றி ஸ்லோகங்கள் செய்திருக்கிறார். ஒரு இடத்தில் அம்பாளை தாயாராக விளித்து, உனக்கும் எனக்கும் தாய்-குழந்தை என்ற சம்பந்தம் இருக்கிறது. நான் என்ன தவறு செய்தாலும், அசட்டுத்தனமாக, அ-விவேகமாக உன்னை நினைக்காதிருந்தாலும் நீ என் காதைப் பிடித்து இழுத்து உன்பக்கதிருத்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் சொல்கிறார்.


மதுரையை நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்தில், மந்திரியாக பணியாற்றிய சமயத்தில் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டதுதான் புதுமண்டபம். இங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாட்டினை உடையவை. சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையிம் தமது துணைவியார் சிலைகளையும் தாம் நிவந்தமளித்து சிறப்புச் செய்யும் கோவில்களில் நிறுவது வழக்கம். அது போல புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க உத்தரவிடுகிறார் அரசர். [இன்றும் இச்சிலைகளை அங்கே காணலாம்]. தலைமை சிற்பியே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் முழங்காலுக்கு மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது. மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். மேற்பார்வை பார்க்க வந்த நீலகண்ட தீக்ஷதர், இதை அறிந்து சிலையினை பார்த்த பின், சிற்பியிடம் அரசிக்கு அங்கு மச்சம் இருப்பது உண்மைதான், எனவே அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார். அரசர் சிலையை பார்வையிட வருகையில் இச்செய்தி சொல்லப்பட்டு அரசியின் சிலையாக பின்னப்பட்ட அச்சிலையே இருக்கலாமா என்று கேட்க, அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் நீலகண்டர் மீது மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவரான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு வரவழைக்கிறார்.

சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் அவர் நித்ய-பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, அவன் தரும் தண்டனைக்கு சமமாக தாமே தமது பூஜையில் இருக்கும் சுடரொளியால் தமது கண்களை அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களுடன் அரசவை வருகிறார். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக அரசனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட அரசன், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறான். அப்போது தீஷதர் அன்னை சன்னதிக்குச் சென்று பாடியதுதான் ஆனந்த ஸாகர ஸ்தவம். பாடி முடித்தபின் அன்னை மீனாக்ஷியருளால் தமது பார்வை கிடைக்கப் பெற்றார் தீக்ஷதர்.


வெளியில் அதிகம் தெரியாதவாறு இருப்பினும் இவரது சாக்த குரு பரம்பரை இன்னும் தொடர்கிறது. தமது அமைச்சுப்பதவியை துறந்து, இறுதிக் காலத்தில் திருநெல்வேலி அருகில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார் என்று சொல்கின்றனர்.

Tuesday, September 2, 2008

விநாயகர் - சில செய்திகள்...

நான் இந்த வலைப்பூவில் பதிவுகள் போட ஆரம்பித்த போது விநாயகரை பற்றி 3 இடுகைகள் இட்டேன். பிறகு கணேச ருணஹர ஸ்தோத்திரப் பொருளை போன வருட விநாயக சதுர்த்தியன்று பதிந்தேன். இந்த வருட பிள்ளையார் சதுர்த்தி சிறப்பாக ஒரு இடுகை இட தோன்றியது. அதன் விளைவே இந்த இடுகை. இது விநாயகர் சம்பந்தமான சில செய்திகள் தொகுப்பாக இருக்கும்.

கணபதி, விநாயகர், என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ஏன் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்? பொதுவாக கிராமங்களிலும், சிற்றூர்களிலும் ஊரின் பெரிய குடும்பத்து/செல்வாக்கான குடும்பத்து தலைவரை, ஐயா, எஜமான் என்று குறிப்பிடுவதும், அவரது குடும்பத்து பிள்ளையை பெரியவீட்டுப் பிள்ளை, சின்ன எஜமான் என்றெல்லாம் குறிப்பிடுவது வழக்கம். [இன்றும் கிராமத்துக் கதையைக் கொண்ட சினிமாக்களில் இந்த முறைகளைப் பார்க்க முடிகிறது] இந்த முறையிலேயே அகில-உலகங்களுக்கும் தாய்-தந்தையான பார்வதி-பரமேஸ்வரனின் புத்திரனான கணபதியும் 'பிள்ளை' என்று அழைக்கப்பட்டு, அந்த பிள்ளைக்கு மரியாதை தரும் விதமாக ('அவர்' என்பது போல) 'யார்' சேர்த்து 'பிள்ளையார்' என்று வழங்கப்படுகிறார் என்று பரமாச்சார்யார் சொன்னதாக படித்த நினைவு. வேறு ஏதேனும் காரணங்களும் இருக்கலாம். தெரிந்தவர் பகிர்ந்தால் நலம்.

பிள்ளையாரை எல்லோருக்கும் பிடிக்கும். பார்த்த மாத்திரத்தில் மனதில் ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவும். இதற்கு காரணம் அவருடைய யானை முகம். சாதாரணமாகவே நமக்கு யானை, கடல், சந்திரன் போன்றவற்றை எத்துணை முறை பார்த்தாலும் அலுப்பே தோன்றாது. பிள்ளையார் நன்கு வளர்ந்த குழந்தை, அதுவும் பரமாச்சார்யார் சொன்னது போல, பெரிய வீட்டுப் பிள்ளைக்கு ஊரிலிருக்கும் எல்லோரும் சக்தியான உண்பண்டங்களை கொடுத்து இன்புற, அவரும் அவற்றை எல்லாம் செரித்து கொழு-கொழுவென பெருத்த சரீரத்துடன், மந்தகாச புன்னகை வீசிக் கொண்டிருப்பது நமக்கும் மகிழ்ச்சியை தருகிறது என்றால் அது சரிதானே?

இந்த திருமேனியானது தியானிப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தக் கூடியது, தத்வார்த்தமானது. யானை முகமானது விநாயகர் பிரணவ ஸ்வரூபி என்பதை குறிப்பது. ஐங்கரங்கள் பஞ்சகிருத்தியங்களின் உள்ளடக்கத்தையும், மூன்று கண்கள் [இன்று நாம் வாங்கும் விநாயகர் சிலைகளில் மூன்றாம் கண்ணை பார்க்க இயலாது] சோம, சூர்ய, அக்னியையும், விசாலமான இரு காதுகள் ஆன்மாக்களை வினை என்னும் வெப்பத்தால் தாக்காது காக்கவும், உண்மையின் விளக்கமாகவும், அண்ட-சராசரங்களின் அடக்கமாகவும் பெரு-வயிறும் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. காணாபத்திய முறையில் உபாசிக்கும் அடியவர்கள் கணநாயகனின் உருவில் எல்லா தெய்வங்களையும் வணங்கிடுவதாகச் சொல்லப்படும். அது எப்படியென்றால்,

"அவ்யாக்ருத ப்ரும்மணோ கணேசஸ்ய சரீரே,
நாபிர்-பிரும்மா, முகம் விஷ்ணு; நேத்ரம் ருத்ர:
வாமபார்ச்வம் சக்தி; தக்ஷிணம் சூர்ய: ஆத்மா ஸ்மிதா மய:


அதாவது, கணபதியின் நாபி பிரும்மாவாகவும், முகம் விஷ்ணுவாகவும், கண்கள் ருத்திரனாகவும், இடதுபாகம் சக்தியாகவும், வலது பாகம் சூர்யனாகவும் இருப்பதாக மேலே இருக்கும் ஸ்துதி கூறுகிறது. இது காணாபத்தியத்திய வழிபாட்டில் வரும் ஒரு முக்கிய தியான ஸ்லோகம். எல்லா தெய்வங்களும் கணபதியை ஏதோ ஒரு சமயத்தில், ஏதேனும் ஒரு காரணத்திற்காக வணங்கியதாக புராணங்களில் படித்திருக்கலாம். உதாரணத்திற்கு லலிதையின் பண்டாசுர வதத்தில் ஒருநாள் அன்னையின் சக்தி சேனை தோல்வியை சந்திக்கும் நிலை, அம்பாள் அந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்று ஆராய்ந்ததில், பண்டாசுரனது சைன்யத்தில் இருந்த விசுக்ரன் என்பவன் யுத்தகளத்தில் அமைத்த விக்ன யந்தரம் என்று அறிந்து, கணபதியை தொழுது அதை தகர்த்ததாக தெரிகிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில், "மஹா-கணேச நிர்ப்பின்ன விக்னயந்திர பிரஹர்ஷிதா" என்பது இதைக் குறிக்கும் நாமாவளி. இதே போல் திரிபுர சம்ஹாரத்தின் முன்பாக பரமசிவன் விநாயகரைத் தொழுததாக கணேச புராணத்தில் இருக்கிறது.

விநாயகர் பிரம்மச்சாரி என்பது எல்லோரும் அறிந்தாலும், சில ஆலயங்களில் அவர் ஒரு மனைவியுடனோ அல்லது இரண்டு மனைவியருடனோ காக்ஷி அளிப்பதைப் பார்த்திருக்கலாம். அப்படியானால் அவர் எப்படி பிரம்மச்சாரி என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சித்தி-புத்தி விநாயகர் என்ற பெயரில் இரு தேவிகளாக இருப்பது இச்சா சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும், விநாயகரோ பிரம்ம ஸ்வரூபம். ஆக இச்சையும், கிரியையும் வைத்து ஞானத்தால் சிருஷ்டி பரிபாலனம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சம் ஒடுங்கும் போது இந்த இரு சக்திகளையும் தன்னுள்ளேயே லயப்படுத்திக் கொண்டு ஞானமயமாகிறார்.

உலகில் முதலில் எழுத்துருவை ஏற்படுத்தியவர் விநாயகர்.
மஹாபாரத்தை தனது தந்தம் கொண்டு எழுதியவர். அதனால்தான் இன்றும் பெரியோர் எழுத ஆரம்பிக்கும் முன் பிள்ளையார் சுழியினை போடுகிறார்கள். தற்போதைய குழந்தைகளுக்கு இவை சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். மஹாபாரத்தை எழுத தனது ஒரு தந்தத்தை இழந்ததால் ஏக தந்தர் என்ற பெயர் பெற்றார்.


முடிந்தால் இன்னும் சிலவற்றை நாளை பதிவிடுகிறேன்...

எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...