Sunday, January 8, 2012

2012 திருவாதிரை சிறப்புப் பதிவு : திருவதிகை வீராட்டனேஸ்வரர்


அஷ்ட வீராட்டனேஸ்வரர் கோவில்களில் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவிலும் ஒன்று. திரிபுரம் எரித்த ஈசனுக்கு பெருமாள் தானே சரமாக/அம்பாக இருந்து தாருகனை அழிக்க உதவியதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்களால் கட்டப்பட்டு, சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் வழிபடப்பட்டு பல நிவந்தங்கள் அளித்து அவ்வப்போது புனரமைத்ததாகச் சொல்லப்படுகிறது. சமீபத்திலும் புனரமைத்திருக்கிறார்கள். மிகப் பெரிய லிங்க ரூபத்தில் ஈசன் அருளுகிறார். அருகிலேயே தனிச்சன்னதியில் அம்பிகை திரிபுரசுந்தரி நின்ற கோலத்தில் காக்ஷியளிக்கிறாள்.
  
முன்பு வாயில் தோற்றம்

கருவறையில் காட்சி அளிக்கும் வீராட்டனேஸ்வரர் 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். லிங்கத் திருமேனிக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, பரமேஸ்வரன் சுதை சிற்பமாக தரிசனம் தருகிறார்கள். கருவறை விமானம் கொள்ளை அழகு, அவ்வளவும் சிற்பங்கள். கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.  இத்தலத்தில் இறைவன் தேரில் வந்து திரிபுரம் எரித்த காரணத்தால் இங்குள்ள கருவறையே தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. இந்த கோபுரத்தை மாதிரியாக்க் கொண்டே தஞ்சை கோபுரத்தை ராஜராஜ சோழன் கட்டியதாகச் சொல்லுகிறார்கள்.  

கருவறை கோபுரம்
முன்-மண்டபத்தை கடந்தவுடன் கொடிமரத்தின் இடதுபுரத்தில் சூலை தீர்த்தக் குளம் இருக்கிறது. அப்பர் இந்த குளத்தில் குளித்துவிட்டுப் பாடல்கள் பாடியதால் சூலை நோய் தீர்ந்த்தாகச் சொல்லுகிறார்கள், ஆகவே இந்தக் குளத்தில் மூழ்கி இறைவனை வணங்குவதால் வயிற்றில் ஏற்படும் வியாதிகள் எல்லாம் நீங்கும் என்கிறார்கள். தற்போது இக்குளத்தில் நீர் இல்லை என்றாலும் பல படிகளுடன் மிகுந்த ஆழ்த்துடன் பார்க்க மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. சமீபத்தில் புனரோத்தாரணம் செய்கையில் நக்ஷத்திர தேவதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கல்வெட்டு செய்திருக்கிறார்கள். இந்த கல்வெட்டுகளில் அந்தந்த நக்ஷத்திரங்களுக்கான தலங்கள், மூர்த்திகள், மரம், ரத்தினம் போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன. கொடிமரத்தின் வலது புரத்தில் நவகிரஹங்களுக்கான மரங்கள் வளர்க்கப்படுகிறது.  இந்த மரங்களுக்கு அருகிலேயே அப்பர் பெருமானுக்கு ஒரு தனி சன்னதி அமைத்திருக்கிறார்கள்.

கோபுர சிற்பங்களில் திரிபுர சம்ஹார கோலம்

அப்பர் ஸ்வாமிகளுக்கு சூலை நோய் தீர்த்த இறைவன் இவர். திருஞானசம்பந்தருக்குத் திருநடனங் காட்டிய திருத்தலம், அதே போல சுந்தரருக்கு இங்கே  திருவடி தீட்சை செய்தருளியதாகவும் சொல்கிறார்கள். சைவ சித்தாந்த மூல நூல்களில் ஒன்றான “உண்மை விளக்கம் என்னும் நூலை அருளிய “மனவாசகம் கடந்தார் அவர்களது ஜனன ஸ்தலம் இதுவே என்று கூறுகிறார்கள்.
 
அப்பர் தனது சகோதரி திலகவதியுடன் இத்தலத்தில் வந்து பிரார்த்தனை செய்து நோய் தீர்ந்த்தாகச் சொல்லப்படுகிறது. அப்பர் ஸ்வாமிகளின் முதல் பதிகமே இங்குதான் பாடப்பட்டிருக்கிறது. அவர் தனது சூலை நோய் நீங்குவதற்காகப் பாடப்பட்ட அப்பதிகங்களில் முதலானது கீழே!








கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பொருள் : கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன்

[பாடலுக்கும், பொருளுக்கும் நன்றி : தேவாரம்.காம்]

உற்சவர் திருமேனி – போருக்கான ஆயுதங்கள் கைகளில்

திருமணத் தடை அகல, எதிரிகள் அகல என்றெல்லாம் பரிகாரம் செய்ய இந்த தலம் சிறப்பானதாகச் சொல்லுகிறார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் “தானே” புயலின் சீற்றம் ஆரம்பமாகியிருந்தாலும் 10-15 பெண்கள் தங்களது பிரார்த்தனையைச் செலுத்த வந்திருந்தார்கள், ஆனாலும் கோவிலில் இறைவன் தனியே இருப்பது போன்ற நினைவினைத் தவிர்க்க இயலவில்லை. இம்மாதிரிக் கோவில்களுக்கு அடிக்கடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிறது.


நமசிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!

Wednesday, January 4, 2012

2012 வைகுண்ட ஏகாதசி: திருவதிகை சர நாராயணப் பெருமாள் தரிசனம்....

ஒருவாரகாலம் கடலூர் மாவட்ட்த்தில் தங்கி அக்கம் பக்கம் கோவில்களுக்குச் செல்வதென முடிவாகி, உடன் செயல்வடிவம் பெற்றது கடந்த வாரம். பல இடங்களுக்கும் சென்றோம். முதலாவதாக திருவதிகை பற்றி சில இடுகைகள் எழுத முயல்கிறேன்.


*********************

சாதாரணமாக வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் சென்று பெருமாள் தரிசனம் செய்வது விசேஷம் என்றாலும் இயலாதவர்கள் அருகிலிருக்கும் பெருமாள் கோவில்களுக்குச் செல்வது வழக்கம். இந்த வைகுண்ட ஏகாதசி விசேஷமாக திருவதிகையில் வீற்றிருந்து நமக்கெல்லாம் வசந்தத்தை அள்ளி அருளும் சரநாராயணப் பெருமாளை தரிசிக்கலாம் வாருங்கள்.

ஆலயத்தின் முகப்புத் தோற்றம்

 கடலூர் – பண்ரூட்டி சாலையில் பண்ரூட்டிக்கு சில கிலோமீட்டர் முன்பாக இருக்கும் சிறு ஊர் திருவதிகை. இங்கு பெருமாள் கோவில்கள் மூன்றும், சிவன் கோவில் ஒன்றும் இருக்கிறது. சிவன் கோவில் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவில், இது பற்றித் தனியாக வேறு ஒரு இடுகையில் காண்போம்.


ஈசனின் வீரம் விளங்கும் தலங்களை வீராட்டனம் என்று அழைக்கின்றனர். அஷ்ட வீராட்டன தலங்கள் என்று எட்டுதலங்களைச் சொல்வர். அந்த தலங்களில் திருவதிகையும் ஒன்று. இங்கே ஈசன் முப்புரங்களை எரித்ததாகச் சொல்லப்படுகிறது. இது தவிர தாருக வதத்தின் போது ஈசனுக்கு உதவியாக எல்லா தேவர்களும் வருகின்றனர். பரமனது தேர் சக்கரமாக சூர்ய-சந்திரர்களும், ப்ரம்மா சாரதியாகவும், பெருமாள் ஈசன் தொடுக்கும் சரமாகவும் இருந்த்தாகச் சொல்லப்படுகிறது.
 


இவ்வாறு சரமாக/அம்பாக இருந்த காரணத்தால் இங்கிருக்கும் பெருமாளது திருநாம்ம் சர நாராயணப் பெருமாள், ஸ்ரீதேவியுடன் திருமணக் கோலத்தில் மூலஸ்தானத்தில் அருள்கிறார். மூலவர் அருகிலேயே மார்கண்டேய மகரிஷியும் காக்ஷி கொடுக்கிறார். இங்கு தனிச்சன்னதியில் அருளும் தேவியின் திருநாமம் ஹேமாம்புஜவல்லித் தாயார். ஹேமாம்புஜ வல்லியார் மார்க்கண்டேயரது மகள், பெருமாளுக்கே தனது பெண்ணை தாரைவார்த்துக் கொடுத்து, அவர்களது கல்யாணக் கோலத்தைக் கண்டுகளிக்கிறார்.





இந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்ற போது பகல் பத்து முடிந்து பட்டர் விச்ராந்தியாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் ஏதுமில்லை. திருமங்கையாழ்வார் அலங்காரம் கலைத்து எதாஸ்தானத்திற்கு ஏளப்பண்ணிக் கொண்டிருந்தார் பட்டரின் உதவியாளர்.

நாங்கள் உள்ளே நுழைந்த்தும் பட்டர் வந்து தரிசனம் செய்து வைத்து பெருமாள் சரமாக வந்துதவிய வரலாற்றைக் கூறினார். பெருமாள் தரிசனம் முடிந்து தாயார் சன்னதிக்குத் திரும்புகையில் அவரே எங்களை அழைத்து, தாயார் சன்னதிக்குச் செல்லும் முன்னர் இந்தக் கோவில் சிறப்பினை காணவேண்டாமா என்று கேட்டவாறு இன்னொரு சன்னதிக்கு அழைத்தார்.

பெருமாள் சன்னதிக்கு வலது புறத்தில் கதவுகள் மூடியவாறு இருந்த அந்த சன்னதியைத் திறந்து விளக்குகளை ஏற்றிக் கொண்டே எங்களிடத்தே பின்வரும் கேள்வியும் கேட்டார். “மாரி மழை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் என்று வரும் திருப்பாவை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். எனது சகோதரி, உடனடியாக அந்தப் பாசுரத்தை பாட/சொல்லத் தொடங்கிவிட்டார். இந்தப் பாசுரத்தில் “மன்னிக் கிடந்துறங்கும் சிங்கம்  இங்கே இருக்கிறார் பாருங்கள். இவரைத்தான் கோதை திருப்பாவையில் சொல்லியிருக்கிறார் என்று கூறி அங்கிருந்த சயன கோலத்தைக் காண்பித்தார். அப்போதுதான் கவனித்தோம் அங்கே சயனித்திருப்பவர் நமது சிங்கமுகப் பெருமாள் என்று.  4-5 அடிகளுக்குள்ளான நீளத்தில் சிங்கப் பெருமாள் சயனத்தில் இருக்கிறார், அருகில் தேவியும் இருக்கிறார்.



பார்கடலில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட பெருமாளை ஸ்ரீரங்கம் முதலான பல திவ்யதேசங்களில் தரிசித்திருக்கிறோம். ஆனால் நமது நரசிம்ஹன் இங்கு மோகனமாக பள்ளி கொண்டிருப்பது இங்கு மட்டுமேயான விசேஷம் என்று கூறினார். அழகு என்றால் அது அந்த அர்ச்சாவதாரம்தான். என்னையாட்கொண்ட எம்பெருமான் என்று நான் இப்போதும் நினைக்கும்படியான திவ்ய கோலம். திகட்டா தீங்கரும்பு இவர். அந்த சன்னதியை விட்டு அகல மனமில்லை. ஆனால் பட்டர் தாயார் சன்னதிக்கு அழைத்த்தால் அவரை விட்டு அடுத்த சன்னதிக்குச் சென்றோம்.


ஆயிரம் வருஷங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட்து, பல்லவ, பாண்டிய, சோழ அரசர்கள் நிவந்தங்களும் புனருத்தாரணமும் செய்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வூரிலேயே இன்னொரு சயனப் பெருமாளும் இருக்கிறார். இக்கோவில் இரண்டாம் குலோத்துங்கன் கட்டியது என்று கூறினார் அங்கிருக்கும் பட்டர்.

இந்த இரு பெருமாள் கோவில்கள் தவிர ஒரு வரதராஜர் கோவிலும் இருப்பதாகத் தெரிகிறது. தேமேன்னு கோவிலுக்கு வந்த எங்களை காற்றும், மழையுமாய் “தானேவந்ததால் அந்தக் கோவிலுக்குச் செல்ல இயலவில்லை.  

இப்பதிவைப் படிக்கும் அன்பர்கள் என்றேனும் ஒருநாள் இந்தக் கோவிலுக்குச் செல்ல சங்கல்பித்துக் கொள்ளுங்கள், அவனருளால் செல்லும் பாக்கியம் கிட்டும். அந்த மோகன ரூப நரசிம்ஹனை கண்ணாரக் காணுங்கள்.
கோவிந்த நாம சங்கீர்த்தனம்!

கோவிந்தா! கோவிந்தா!

 
                                                                     
                                        அடுத்து திருவாதிரைச் சிறப்பாக "வீராட்டனேஸ்வரர்"