Saturday, December 31, 2011

ராமானுஜருக்கு உகந்த திருப்பாவைப் பாடல்




கடந்த 5 நாட்களில் கும்பகோணத்தைச் சுற்றியிருக்கும் பல கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்த்து. அதில் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநாரையூரும் ஒன்று. அங்கிருக்கும் பட்டர் ஒருவரிடத்துப் பேசிய போது கிடைத்த தகவலே இந்த பதிவு.

திருப்பாவைப் பாசுரங்கள் ராமானுஜருக்கு மிகவும் உகந்தவை என்று கூறி, ஆண்டாள் தமது பாடலில் கூறிய 100 தடா அக்காரவடிசலை பெருமாளுக்குப் படைத்தவர் ராமானுஜர் என்று கூறினார். ராமானுஜர் பிக்ஷைக்குச் செல்லும் போது பாசுரங்களைப் பாடியவாறு செல்வாராம். இவ்வாறு பிக்ஷைக்குச் செல்லுகையில் ஒருநாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியவாறு சென்றிருக்கிறார். அப்போது அவர் பெரியநம்பி அவர்களது வீட்டு வாசலில் பிக்ஷை கேட்கிறாராம். பெரியநம்பியின் மகள் அத்துழாய், பிக்ஷை இடுவதற்காக தமது இல்லத்தின் வாசலுக்கு வருகிறார். அத்துழாயின் வருகையைக் கண்ட ராமானுஜர் அவள் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.


ராமானுஜரைப் பற்றி முன்னரே அறிந்திருந்த அத்துழாய், அவர் தன்னை வீழ்ந்து வணங்கியது கண்டு அதிர்ச்சி அடைகிறாள், பின்னர் தனது தந்தையான பெரிய நம்பியிடம் நடந்த நிகழ்வினைக் கூறுகிறாள். இதைக் கேட்ட நம்பி, வீழ்ந்து வணங்கும் போது ராமானுஜர், “உந்து மதகளிறு” பாசுரம் பாடினாரா? என்று தனது மகளைக் கேட்கிறார். அத்துழாயும் ‘ஆம்’ என்று பதிலளிக்கிறாள். அப்போது அத்துழாய்க்கு சற்றுப் புரிந்திருக்கிறது.

“செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப, வந்து திறவாய் மகிழ்ந்தலோரெம்பாவாய்” என்ற இட்த்தைப் பாடியபோது அத்துழாய் தனது இல்லத்துக் கதவைத் திறந்து வெளியே வந்திருக்கிறாள். பாடிய பாசுரத்தில் தன்னை மறந்த ராமானுஜர், நம்பியின் இல்லத்துக் கதவைத் திறந்தது பாடலில் சொல்லிய நப்பின்னை தேவியே என்பதாக அத்துழாய்யை வீழ்ந்து வணங்கியிருக்கிறார். அதாவது அத்துழாய் ராமானுஜரது கண்களில் நப்பின்னையாகவே தோன்றியிருக்கிறாள். இந்த நிகழ்ச்சியைக் கொண்டு, இப்பாடாலை ராமானுஜருக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறுகிறார்கள்.

பிராட்டியை முன்னிட்டே பெருமாளைச் சரணடைய வேண்டும் என்பது வைஷ்ணவ சம்பிரதாயக் கோட்பாடு. அதனால்தான் இந்தப் பாடலில் நப்பின்னையைத் துயிலெழுப்புவதன் மூலமாக பெருமாளைச் சரணடைகிறாள் ஆண்டாள். இன்றும் இந்தப் பாசுரத்தைப் பாடும் போது இதை இரண்டு முறை ஓதுவார்களாம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, December 19, 2011

ஆழ்வார்களைத் துயிலெழுப்பும் ஆண்டாள்...




பல மாதங்களுக்குப் பிறகு நண்பன் சேஷசாயி 2-3 நாட்கள் முன்னர் தொலைபேசியில் பேசினான். அப்போது, அவன் மூலம் அறிந்த சில செய்திகளே இந்த இடுகை.



திருப்பாவை முதல் பத்து பாடல்களில் ஆண்டாள், ஆழ்வார்களைத் துயில் எழுப்பியிருக்கிறாள் என்பதாக ஒரு தாத்பர்யம் இருக்கிறதாம். அதாவது திருத் தொண்டர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் துயிலெழுப்பி, அதன் பின்னர் நப்பின்னையான தாயாரை முதற்க் கொண்டு பெருமாளை சரணடைகிறாளாம் கோதை. எந்தப் பாடல்களில் எந்த ஆழ்வாரைக் குறிப்பிட்டிருக்கிறாள் என்பதைப் பார்க்கலாம்.



“புள்ளும் சிலம்பின காண்” என்னும் பாசுரத்தில், ‘பிள்ளையே எழுந்திராய்’ என்று கூறியிருப்பது பொய்கை ஆழ்வாரைக் குறிப்பதாகச் சொல்லுகிறார்கள். பொய்கையார் பிள்ளைப் பிராயத்திலேயே இறையனுபவம் பெற்றிருந்தவராம்.



“கீசு கீசு என்றெங்கும்” என்ற பாசுரத்தில், ‘பேய்ப் பெண்ணே’ என்று வருவது பேயாழ்வாரைக் குறிக்கிறது என்றும், “கீழ்வானம் வெள்ளென்று” என்கிற பாசுரத்தில், ‘கோதுகுலமுடைய பாவாய்’ என்பது பூத்த்தாழ்வாரைக் குறிப்பது என்றும் சொல்லுவார்களாம். பூதத்தாழ்வார், திருமல்லையில் சயனித்திருக்கும் பெருமாளைப் பாடும் போதெல்லாம் மிகுந்த குதுகலம் அடைவாராம். ஆகவே அந்தக் குறியீட்டின் மூலமாக பூத்த்தாழ்வாரைக் குறிப்பிட்டுச் சொல்லுவதாகத் தெரிகிறது.



“தூமணி மாடத்து” என்கிற பாசுரத்தில், ‘மாமன் மகளே’ என்றது திருமழிசை ஆழ்வாரைக் குறிப்பதாம். ப்ருகு முனிவரின் புத்ரியாக அவதரித்தவள் பார்கவி என்றழைக்கப்படும் ஸ்ரீ தேவியான மஹாலக்ஷ்மி. ப்ருகு முனிவரின் புத்ரர் பார்க்கவர். இந்த பார்கவரின் புத்ரராம் திருமழிசையாழ்வார். ஆகவே ஆண்டாள் 'மாமன் மகளே' குறிப்பிடுவது திருமழிசைபிரானை என்கிறார்கள்.





“நோற்று சுவர்க்கம் புகுகின்ற” என்னும் பாசுரத்தில், ஆற்ற அனந்தனுடையார்” என்பது ஆற்றுக் கொண்ட குலசேகராழ்வாரைக் குறிப்பதாம். இவருக்கு ராமனிடத்தான ஈடுபாடு அசாத்யம். ராமாயண காவியத்தைப் கேட்கும் போது தன்னை மறந்து ராமனுக்கு உதவக் கிளம்பிடும் அளவு ஆற்றங் கொண்டவர் என்பதால் இவரைக் குறிப்பிடுகிறது என்கிறார்கள்.



“கற்றுக்கறவை” என்னும் பாசுரத்தில், ‘குற்றமொன்றில்லாத கோவலர்: என்பதாகச் சொல்லுவது பெரியாழ்வாரை. அதாவது ஆசாரம், நியம-நிஷ்டையில் வழுவாதவரான பெரியாழ்வாரே இங்கு குற்றமில்லாத கோவலர் என்று கூறுகிறார்கள்.



“களைத்திளங் கற்றெருமை” என்பதில், ‘நற்செல்வன் நங்காய்” என்பது தொண்டரடிப் பொடியாரைக் குறிப்பதாகவும், “எல்லேஇளங்கிளியே” எனும் பாசுரத்தில், ‘கிளியே’ என்பது திருமங்கையாரைக் குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறதாம். திருமங்கையார் கிளியைத் தனது பாடல்களில் அடிக்கடிச் சொல்லியிருக்கிறதால் இவ்வாறாகச் சொல்லப்படுகிறதாம்.


“புள்ளின்வாய் கீண்டானை: என்ற பாசுரத்தில், ‘போதரிக் கண்ணினாய்’ என்றது திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறதாம். “அமலாதிபிரான்” என்று தொடங்கும் பாசுரம் முதலாக பல பாசுரங்களில் பெருமாளின் கண்ணழகை மிகவும் வர்ணித்தவராம் திருப்பாணாழ்வார். ஆகவே இந்த்ப் பாடல் அவரைக் குறிப்பதாகச் சொல்லுகிறார்கள் போல.



“உங்கள் புழக்கடை” என்னும் பாசுரத்தில், ‘நங்காய்’ என்பது நம்மாழ்வாரைக் குறிப்பதாம். நம்மாழ்வாரது தாயார் பெயர் நங்காய் என்பதால் இந்தக் குறியீடு அவரையே குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.



....................................................................................2011 மார்கழிப் பதிவுகள் தொடரும்

Saturday, December 10, 2011

திருக்கார்த்திகை - தீப கைங்கர்யச் செம்மல்கள்...




திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் 2 நாட்கள் முன்னரே கார்த்திகை தீபத் திருநாள் முடிந்துவிட்டது. கார்த்திகை நக்ஷத்திரத்தை அடிப்படையாகக் கொண்டாடப்பட்டது அது. இன்றுதான் கார்த்திகைப் பெளர்ணமி, சர்வாலய தீபம். அதாவது தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் வரும் பெளர்ணமியும், அந்த பெளர்ணமியன்று இருக்கும் நக்ஷத்திரங்களும் சிறப்புடன் ஆலயங்களில் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். உதாரணமாக, சித்திரா பெளர்ணமி, வைகாசி விசாகம் (வைகாசி பெளர்ணமி, ஆவணி அவிட்டம், ஐப்பசி அன்னாபிஷேகம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை பெளர்ணமி நாட்களே). இது போன்றே கார்த்திகையில் பெளர்ணமியன்று கார்த்திகை நக்ஷத்திரம் வரும். ஆனால் இந்த வருஷம் கார்த்திகை நக்ஷத்திரம் பெளர்ணமிக்கு இருதினங்கள் முன்னதாக வந்திருக்கிறது. ஆகவே பெளர்ணமியை அடிப்படையாகக் கொண்ட சர்வ ஆலய தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷமான நாளில் தீபத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டாடிய சிலரை நாமும் நினைவுக் கொண்டு வந்து அவர்கள் போன்று தீபத்தை வணங்கலாம் வாருங்கள்.


கலிநாயனார் என்பவரைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இவர் எண்ணெய் வியாபாரம் செய்தாலும், திருவெற்றியூர் கோவிலில் தீபமேற்றும் பணியைச் செய்து வந்தவர். காலக் கிரமத்தில் தனது வியாபாரம் நொடித்துப் போன போதிலும் கோவிலில்தீபமேற்றுவதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஒரு சமயத்தில் வறுமை முற்றி தன்னால் விளக்கு ஏற்ற எண்ணைய் வாங்கவும் இயலாத நாளில் தனது ரத்தத்தையே விளக்கிற்கு எண்ணையாக்க முயல்கிறார். அந்த சமயத்தில் ஈசன் அவருக்கு தரிசனம் தந்து கலிநாயனாரைகாப்பாற்றியதாகச் சொல்லப்படுகிறது. தனது உடலை வருத்தி தீபம் ஏற்றத் துணிந்த கலிநாயனாருக்கு இறைதரிசனம் கிட்டியிருக்கிறது.


கலிநாயனார் போன்ற இன்னொருவர் கணம்புல்லர் என்பவர் இவரைப் பற்றி சேக்கிழார் குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறியிருப்பதாகத் தெரிகிறது.

அணங்குமைபாகம் ஆக அடக்கி ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல்வருந் தவத்த
கணம் புல்லார்க்கு அருள்கள் செய்து காதமால் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பார் போலும்


கணம்புல்லர் என்பது இவரது தொழிலை அடிப்படையாகக் கொண்ட பெயரெனத் தெரிறது. நித்தமும் காட்டிற்குச் சென்று கணம்புல்லை சேகரித்து அதை கிராமங்களில் விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிதம்பரம் ஆலயத்தில் விளக்கேற்றி வந்தவர்.சில காலமாக இவர்விற்று வந்த புல்லை யாரும் வாங்காத காரணத்தால் எண்ணெய் வாங்க இயலாது தவிக்கிறார். கோவிலில் தீபமேற்ற இயலாது வருந்தியவர், ஆத்மஹத்தி செய்து கொள்ள தீர்மானித்து தீ மூட்டி அதில் குதிக்க முயல்கிறார், அப்போது அவருக்கு இறைதரிசனம் கிட்டுகிறது என்பது சேக்கிழார் பெருமானது வாக்கு.


மூன்றாவதாக வருபவர் நமிநந்தி அடிகளார். இவர் திருவாரூரில் விளக்கேற்றும் திருப்பணி செய்தவர். இவருக்கும் ஒரு சமயத்தில் விளக்குக்கு எண்ணெய் கிடைக்காத நேரத்தில் சமணர்கள் இவரிடத்தில் 'உங்கள் தெய்வத்திற்கு நெய் விட்டு விளக்கேற்றத்தான் வேண்டுமோ?,தண்ணீரை விட்டு விளக்கேற்ற உங்கள் தெய்வம் அருளாதா?' என்று பரிகசித்ததாகவும், மனம் நொந்து, இறைவனைப் பணிந்த அடிகளார் குளத்து நீரை விட்டு விளக்கேற்றியபோது அவை பிரகாசமாக ஒளிர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவரது தொண்டை அப்பர் பாடுகையில்பின்வருமாறு பாடிச் சிறப்பித்திருக்கிறார்.


ஆராய்ந்தடித் தொண்டர் ஆணிப்பொன் ஆரூரகத்தடங்கி

பாரூர் பரிப்புத்தகம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்

ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி

நீராற் திருவிளக்கிட்டமை நாடறியுமன்றே


வள்ளலார் ஸ்வாமிகளும் அருட்பெருஞ்சோதியாகவே இறைவனை வழிபட்டவர் என்பது நாம் அறிந்ததே!.


தமிழகத்திலிருக்கும் பல கோவில்களின் வரலாற்றைச் சொல்லும் கல்வட்டுக்களிலும் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு என்றே நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். கோவிலில் ஒரு விளக்கு எரிக்க நிவந்தம் அளிக்கையில் அதற்கு விளக்கு மட்டும் கோவிலுக்கு அளிக்கவில்லைநம் பெரியோர்கள். அந்த விளக்கெரிக்கும் செயல் தொடர்ந்து நடைபெறுவதற்கும் வைப்புநிதியாக பசுக்கள், ஆடுகள் போன்றவற்றை அளித்திருக்கிறார்கள். அவ்வாறு ஆடு/பசுக்களை அளிக்கையில் அவை பல்கிப் பெருகிட கிடாய்/எருது போன்றவற்றையும் சேர்த்து அளித்திருப்பதாகக் கல்வெட்டுக்கள்தெளிவாகச் செய்தி பகர்கின்றன.


இவ்வாறு நம் முன்னோர்கள் போன்று நாமும் நம்மால் இயன்ற அளவு தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்வோம், குறிப்பாக திருக்கார்த்திகை தீபத்தினை சிறப்பாகக் கொண்டாடுவோம், தீப ஒளி எங்கும் வீசட்டும், அவ்வொளி நமக்கு ஞானஒளியாக திகழட்டும்.


தீப மங்கள ஜ்யோதி நமோ நம:

வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம:

Monday, November 21, 2011

அவ்யாஜ பக்தி.....

இன்றைக்கு நமக்கெல்லாம் பக்தி என்பது என்பது கோவில்களுக்குச் செல்வது, பகவானுக்கு மலர் மாலைகள், வஸ்த்ரங்கள் சாற்றுவது, அபிஷேகத்திற்குக் கொடுப்பது அல்லது வைதீகர்களை அழைத்து ருத்ர பாராயணம் செய்வது, ஹோமாதிகள் செய்வது என்று இருக்கிறது. வீட்டில் ஹோமம் செய்து சில-பல வருஷங்கள் ஆயிற்று, ஏதும் செய்யவில்லை, ஆகவே வைதீகரைக் கூப்பிட்டு ஒரு கணபதியும், சுதர்சனமும் பண்ணச் சொன்னேன் என்று கூறுபவர்களைப் பார்க்கிறோம். நல்லதுதான், வேதம், மற்றும் ப்ரயோகம் தெரிந்த வைதீகர்களை அழைத்து அவர்களால் சில ஜப,ஹோமங்கள் செய்வது நன்றே.இவற்றை நாம் அனைவரும் செய்கிறோம், இவையெல்லாம் நன்மையே. ஆனால் இவற்றைச் செய்யும் போது நமது சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்பதே இந்த இடுகையின் சாரம்.



பக்தர்களுக்கு இறைவனிடத்தில் ப்ரீதி என்பதே ஆத்மானுபவத்தின் முதல்படி என்கிறார்கள் பெரியோர். இதைச் சொல்லுகையில், கோபிகைகளின் பக்தி பற்றிய ஒரு ஸ்லோகம் சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது. அந்த ஸ்லோகம்,


விரேது காமாசில கோபபாலா

முராரி பாதார்பித சித்த வ்ருத்தி:

தத்யாதிகம் மோக வசாதவோசது

கோவிந்த தாமோதர மாதவேதி.


கோபிகைகள் தங்கள் தலையில் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றினைச் சுமந்து கொண்டு சென்று வியாபாரம் செய்வார்களாம். அப்போது அவர்கள் தங்களிடத்து இருக்கும் பொருட்களின் பெயர்களைக் கூவி விற்பதை விட்டுவிட்டு, "கோவிந்த, தாமோதர, மாதவ" என்று கூறிக்கொண்டு சென்றார்களாம். அதாவது தாம் செய்ய வேண்டிய வியாபாரத்தில் அவர்களது நாட்டம் இல்லை என்று பொருளல்ல. ஆனால் அவர்களையும் மீறி அவர்களிடத்தான க்ருஷ்ணனிடத்தான ப்ரேமை, பக்தி அவர்களை வியாபாரம் செய்யும் பொருட்களை விடுத்து கடவுள் பெயரைச் சொல்லுவதில் செலுத்தியிருக்கிறது. அன்றாட கார்யங்கள் அனைத்திலும் பரம்பொருளது நினைவும், செயலும் இருப்பது என்பது இது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இவ்வகையான நிலையை எய்தவே கர்மானுஷ்டானங்கள், ஜப-ஹோமங்கள், பூஜைகள் எல்லாம் என்பதை நாமெல்லாம் உணரவேண்டும்.


"பத்ரம் புஷ்பம், பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி", பக்தன் மிகுந்த பக்தி-சிரத்தையுடன் ஒரு சிறு இலை, பூ, பழம் போன்றவற்றைத் தந்தாலும் அதை நான் ஸ்வீகரிப்பேன் என்கிறான். நமது பக்தி, வழிபாடு போன்றவை இவ்வாறாக இருக்கிறதா என்பதை நாம் அவ்வப்போது சோதித்துக் கொள்ள வேண்டும். டாம்பீகமான பூஜைகளும், ஹோமங்களும் நமக்காக என்று இல்லாது லோகஷேமார்த்தமாக, ஈஸ்வரார்த்தமாக இருக்குமானால் அவற்றை பகவான் ஏற்றுக் கொண்டு எல்லோருக்கும் நன்மை செய்வான், ஆத்மானுபவமும் கிட்டும்.



ஆதி சங்கரரது பால்யத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் தந்தை பூஜித்து வந்த பகவதி அம்மனுக்கு ஆசார்யார் ஒருமுறை பால் சமர்ப்பித்துப் ப்ரார்த்தனை செய்கிறார். அப்போது அம்பிகை அந்தப் பாலை ஸ்வீகரிக்கவில்லை. இதனால் ஆசார்யாளது மனது க்லேசம் அடைகிறது, அழவும் தொடங்கிவிடுகிறார். இது கண்ட பகவதி அவளுக்கேயான மாத்ரு வாத்ஸல்யத்துடன் பாலை ஸ்வீகரித்துக் கொள்ளுகிறாள். அம்பிகைக்குத் தான் செய்த நிவேதனத்தை அவள் ஏற்க வேண்டும் என்பது மட்டுமே அந்த சங்கரக் குழந்தையின் எதிர்பார்ப்பு. இந்த சந்தவேசத்தில் அவருடைய பக்தி மற்றும் சிரத்தை மட்டுமே இருக்கிறது. மேற் சொன்ன இரண்டு உதாரணங்கள் பிரதிபலனற்ற [அவ்யாஜ] பக்திக்கு உதாரணம்.

எத்தனையோ ஜன்மாக்கள் எடுத்து,எத்தனையோ கர்மாக்களைச் செய்து,அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக் கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்வதும்,ஸத் வாஸனைகளைப் பெருக்கிக்கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும், துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு கர்மா தானே நின்று போகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் 'வெறும்' சடங்கு என்று சொல்கிற கர்மாகள், பூஜை எல்லாம் நமக்குரொம்பவும் அவசியமானவையே" என்கிறார் பரமாசார்யார்.

ஆகவே நான் இந்த பூஜை செய்கிறேன், இந்த ஜபம் செய்கிறேன், இத்தனை கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். இவ்வளவு கோவில்களுக்குச் செய்திருக்கிறேன் என்று எண்ணவும் செய்யாது அனுஷ்டானங்களை, பக்தியைச் செய்யத் தலைப்படுவோம்.

Monday, November 14, 2011

ஆகார நியமம் - பகுதி -2


காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் உற்சவத்தின் பகுதி
 அத்திகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி
 யாலரசு நறுவிலிபுங் காயி லாரை
புத்திகொல்லி குறிஞ்சிதான்றி குசும்பை வேளை
 புனமுருங்கை முருங்கைசுக முளரி யுள்ளி
சிற்றவரை கொம்மட்டி பண்ணை தொய்யில்
 சீங்காடன் றேறலூவை பனைம யூரன்
சுத்தியிலா நிலத்திலவை கடம்பு காளான்
 சுரைபீர்க்குச் சணந்தின்னார் சுருதி யோரே.


அத்திவகைகள் , பேரார்க்கு (?), இறலி, வெள்ளைக்கத்தாரி, ஆல், அரசு, நறுவிலி, புங்கு, ஆயில், ஆரை, பூண்டு, குறிஞ்சி, தான்றி, குசும்பை, வேளை, முருங்கை,தாமரைக்கிழங்கு, உள்ளி, சிறிய அவரை, தும்மட்டி, பண்ணைக்கீரை, தொய்யிற்கீரை, சீங்காடன், தேறற்காய், ஊவைக்காய், பனை, நாயுருவி, கடம்பு, நாய்க்குடை, சுரைக்காய், பீர்க்கு, சணற்கீரை, மற்றும் அசுத்தமான நிலத்தில் பயிராகும் வகைகளை உணவில் தவிர்க்க வேண்டும் என்கிறார் தேசிகர்.

சாதாரணமாக கத்தரியில் முழுவதும் பச்சை நிறத்தாலானதும், வெளீர் நிறத்தாலானதும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும், ஊதா நிறத்திலான கத்தரி முழுவதுமாக விலக்கப்பட வேண்டும் என்பார்கள்.

 ***

சிறுகீரை செவ்வகத்தி முருக்கி ரண்டுஞ்
 சிறுபசளை பெரும்பசளை யம்ம ணந்தாள்
பறித்தொருவர் கொடாதிருக்கத் தானே சென்று
 பாய்ந்தெடுத்துக் கொள்ளுமவை பகிராக் கூறுங்
குறித்தாலுந் தின்னவெணாக் கைப்பு வர்ப்புங்
 கூர்க்குமவை யழமுமவை கொடும்பு ளிப்புங்
கறிக்காகா விவையென்று கண்டு ரைத்தார்
 கார்மேனி யருளாளர் கடகத் தாரே.

சிறுகீரை, முருக்கை, சிவந்த அகத்தி, பசளை வகைகள், பிறர் தோட்டத்திலிருந்து அனுமதியின்றிப் பறித்தவை, பலருக்காகவும் சமைத்த உணவை எல்லோருக்கும் பரிமாறும் முன்னர் தனக்கென எடுத்து வைத்துக் கொள்ளுதல், உண்ண முடியாத அளவுக்கு கசப்பாகவும், மிகுந்த காரமானவையும், கொண்ட பண்டங்கள் உண்ணத் தக்கதன்று.

 ***

மாலமுது செய்யாமல் வந்த வெல்லாம்
 வருவிருந்தில் வழங்காமல் வைத்த வெல்லாங்
காலமிது வன்றென்று கழித்த வெல்லாங்
 கடையின்வருங் கறி முதல கழுவா வெல்லா
நூலிசையா வழிகளினால் வந்த வெல்லா
 நுகராத துடன்பாகஞ் செய்த வெல்லாஞ்
சீலமில்லாச் சிறியோராக் கினவு நல்லோர்
 செலமலங்கள் பட்டனவுந் தின்னார் தாமே.

பெருமாளுக்கு நிவேதனம் செய்யாதது, அதிதிகளுக்கு அளிக்காது தவிர்த்த உணவு, குறிப்பிட்ட காலங்களில் உண்ணக் கூடாது என்று கூறப்பட்டவை [சாதூர்மாஸ்ய காலங்களில் விலக்கப்பட்டது என்று தோன்றுகிறது], கடையில் வாங்கிய காய் வகைகளை கழுவாமல் செய்த உணவுப் பொருட்களும், சாஸ்திரங்களில் சொல்லப்படாத விதத்தில் சம்பாதித்த உணவுப் பொருட்களும், ஆசாரமற்ற, ஜலமலங்களுடன் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உண்ணக் கூடாது.

***
தேவர்களுக் கிவையென்று வைத்த வெல்லாஞ்
 சிவன்முதலாத் தேவர்களுக் கிட்ட வெல்லா
மாவிமுத லானவற்றுக் காகா வெல்லா
 மதுவிதுவென் றறியவரி தான வெல்லா
நாவிலிடு வதற்கரிதா யிருப்ப வெல்லா
 நன்றென்று தம்முள்ள மிசையா வெல்லா
மோவியநா ளோவாத பூவுங் காயு
 முத்தமர்க ளட்டுப்பு முகவார் தாமே.

தேவர்களுக்கு என்று செய்தவை, சிவன் முதலானவர்களுக்கு நிவேதனம் செய்தவை [ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பரதாயத்தில் சிவப் பிரசாதம் விலக்கப்பட வேண்டியது என்பது இங்கே சுட்டப்படுகிறது], ப்ராணன் மற்றும் மற்ற இந்திரியங்களுக்கு கெடுதியானவையும், எதனால் சமைக்கப்பட்டது என்று அறிய முடியாத பொருட்களும், நாவு தாங்க முடியாத உஷ்ணம், காரம் போன்றவையும், மனது ஏற்காத உணவினையும், தூய வெண்மையின்றி அழுக்கு நிறத்தாலான உப்பும் விலக்கத்தக்கது.


இந்தப் பாடலில் சிவப் பிரசாதம் உண்ணத்தக்கதல்ல என்று இருப்பதை ஏதோ பெரிய தவறாகக் கொள்ளத் தேவையில்லை. ஸ்ரீ வைஷ்ணவத்தில் வந்த வேதாந்த தேசிகர் தமது வழக்கத்தை சேர்த்திருக்கிறார் என்பதைத் தவிர இதை ஏதும் பெரிதாகக் கொள்ளத் தேவையில்லை. வீர சைவ மரபினருக்கும் இது போல பழக்கங்கள் இருப்பதால் இவற்றை அக்காலத்து வழக்கமாகவும், அந்ததந்த சமயத்து வழிமுறைகள் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

***

கிளிஞ்சின்முதல் சுட்டசுண் ணாம்பு தானுங்
 கிளர்புனலி லெழுங்குமிழி நுரைக டாமும்
விளைந்ததனின் முதன்மாலுக் கீயா வெல்லாம்
 விளைந்தநில மறுகாம்பென் றெழுந்த வெல்லாங்
களைந்தமனத் தார்மற்றுங் கழித்த வெல்லாங்
 கடியமுதி மியமத்தார் கழித்த வெல்லாந்
தெளிந்தபுனற் றிருவேங்க டத்து மாறன்
 றிருவாணை க்டவாதார் தின்னார் தாமே.

கிளிஞ்சலைச் சுட்டு எடுத்த சுண்ணாம்பு, நுரை, குமிழிகளுடனான நீர், நிலத்தில் விளைந்தவற்றில் இறைவனுக்குச் சமர்ப்பிக்காதவை, பலன் கொடுத்த பின்னர் அதே காம்பு/கொழுவில் இருந்து வளர்ந்தவை [அரைக்கீரை - போன்றவை], பெரியோர்களும், ஆகார நியமத்தைக் கடைப்பிடிக்கும் மற்றோரும் கழித்தவை ஆகியவற்றை நாமும் நமது உணவிலிருந்து நீக்கிட/விலக்கிட வேண்டும் என்கிறார்.

             ..........................................தேசிகர் தொடர்வார்

Saturday, November 12, 2011

ஆகார நியமம் - பகுதி -1

சில மாதங்கள் முன்னர் குழுவில் உணவருந்துதல் பற்றிய கேள்வி வந்தது. அன்றிலிருந்து இந்த இடுகையை இட நினைத்தாலும், நேரமின்மையால் தள்ளிக் கொண்டே வந்தேன். இன்று இதைப் பற்றி நண்பர் ஒருவர் நேரில் பார்க்கும் போது கேள்வி எழுப்பினார். அதன் விளைவே இந்த இடுகை. "ப்ராணே சரீரம் ப்ரதிஷ்டிதம். சரீரே ப்ராண: ப்ரதிஷ்டித:" என்கிறது தைத்ரீயம். நாம் உண்ணும் உணவுக்கும் ப்ராணனுக்கும் தொடர்பு இருக்கிறது. உண்ணும் முறை பற்றிச் சொல்லுகையில் தர்ம சாஸ்த்ரத்தில் பின்வருமாறு சொல்லியிருக்கிறார்கள்.

த்வெளபாகம் பூரயேதன்னம்
தோயெனைகம் ப்ரபூரயேத்
மாருதஸ்ய ப்ரசாரார்த்தம்
சதுர்த்தம் அவசேஷயேத்

அதாவது உணவு உண்ணும் போது அரை வயிற்றுக்கு உண்ணும், கால் வயிற்றுக்கு நீரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.மிச்சமிருக்கும் கால்வயிறு வாயுவிற்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு உண்பதையே ப்ராணாக்னி ஹோத்ரம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எவ்வாறான உணவினை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும், எது உணவாக எடுத்துக் கொள்ளத் தக்கது, எதை உணவாகக் கொள்ளக் கூடாது என்பதை ஆயுர் வேதம் நிர்ணயம் செய்து கொடுத்திருக்கிறது. இதே போல எதை எப்படி உண்ண வேண்டும என்ற முறையையும் ல்லியிருக்கிறார்கள் ஆன்றோர். எந்த உணவை எப்படிச் சமைக்க வேண்டும், அவ்வாறாக முறையாகச் செய்த அன்னத்தையும், அன்ன சுத்தி, பரிசேஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்து உண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

உணவு சமைப்பவரது மனநிலைக்கு ஏற்ப சமைக்கப்பட்ட உணவின் தன்மை மாறும் என்று கூறியிருக்கிறார்கள். சமைப்பவர் எப்படி இருக்கவேண்டும், என்றும் நியமங்கள் வரையறுத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நமது இல்லங்களில் செயற்படுத்திடுவோமானால் நமது சிந்தனையும், இறையனுபவமும் இன்னும் எளிதாகும் என்பதனாலேயே இவ்வளவு சிரத்தையாக எல்லாவற்றையும் நமக்குத் தந்திருக்கின்றனர் பெரியோர்.


முன்னொரு காலத்தில் அஜகரன் என்பவன் சாத்வீகமான உணவுவகைகளை மட்டுமே உண்டு அதன் மூலமாக தனது சரீரத்தை ரக்ஷித்து பின்னாளில் இறையருள் பெற்றான் என்கிறது கதை. அஜகரன் என்றால் மலைப் பாம்பு என்று பொருள். மலைப்பாம்பானது உணவினைத் தேடிச்செல்லாது, அதனருகில் வருவனவற்றை மட்டுமே உண்டு வாழுமாம். அதுபோல விவேகமுள்ளவர்கள் தங்களது உணவில் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் பெரியோர்.



சரி இதெல்லாம் ஸம்ஸ்கிருதத்தில் யாரோ யாருக்கோ எழுதியது, நமக்கேன் என்று விட வேண்டியதில்லை. வேதாந்த தேசிகர் எல்லோருக்கும் எளிதாக தெள்ளு தமிழில் ஆகார நியமம் என்று 20 பாடல்களாகச் சொல்லியிருக்கிறார். இப்பாடல்களில் முதல் 9 பாடல்கள் உணவில் விலக்க வேண்டியதும், சேர்த்துக் கொள்ளத்தக்கதும் பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார். இப்பாடல்களை பலருக்கும் உபயோகமாகும் என்ற எண்ணத்தில் இங்கு 3-4 இடுகைகளாக இடுகிறேன். பாடல்களது பொருள் விளங்கினாலும், சரியாகப் பதம் பிரிக்கத்  தெரியாத காரணத்தால் அப்படியே தட்டச்சியிருக்கிறேன். தேசிகப் பிரபந்தம் என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு இதை எழுதியிருக்கிறேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். 

வாயிலல்லா வாயினால் வந்த சோறும்
 வரகுமுத லாகாதென் றுரைத்த சோறும்
வாயினின்றும் விழுமவைதாம் பட்ட சோறும்
 வாய்க்கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்
தீயவர்கண் படுஞ்சோறுந் தீதற் சோறுஞ்
 சீரையுரை தும்மலிவை பட்ட சோறு
நாய்முதலா நவைபார்க்குந் தீண்டுஞ் சோறு
 நாடூய்தல் லாச்சோறு நண்ணாச் சோறே.

நேர்வழியில்லல்லாது புழக்கடை முதலான வழிகளால் கொண்டுவந்த உணவும், வரகு முதலான தான்யங்களால் ஆக்கியது, வாயில் போட்டுக் கொண்டது போக மீந்து கையில் இருப்பது, கொடியவர்கள் கண்களில் பட்டது, தீய்ந்து போனது, வஸ்த்ரம், எச்சில், தும்மல் போன்றவை பட்டது, நாய் முதலியவற்றால் பார்க்கப்பட்டது அல்லது அவை முகர்ந்தது, தொட்டது மற்றும் ஏகாதசி போன்ற வ்ரத தினத்தில் சமைத்த உணவுகளை உண்ணக்கூடாது என்கிறது இப்பாடல்.


மனிசர்பசு முதலனோர் மோந்த் சோறு
 மனிசர்தமி லாகாதார் தீண்டுஞ் சோறு
மினிமையுட னாதரமில் லாதார் சோறு
 மீப்புழுநூன் மயிருகிர்க ளிருக்குஞ் சோறு
முனிவரெனுந் துவறவறத்தோ ரீந்த சோறு
 முனிவர்தங்கள் பாத்திரத்திற் பட்ட சோறு
மனிசரெலி குக்குடங்கள் காகம் பூனை
 வாய்க்கொண்ட கறிசோறு மருவாச் சோறே.
மனிதர், பசு ஆகியோர் முகர்ந்தது, தொடத் தகாதவர் (ரோகிகள், அசுத்தமானவர்கள்) ஸ்பரிசித்தவை, ஆதுரத்துடன் இனிமையாகப் பேசாதவர்கள் அளித்தது, புழுக்கள், மயிர், நகம் போன்றவை இருப்பது ஆகிய உணவு வகைகளை உண்ணக்கூடாது. ஸந்யாஸி அளித்தது, ஸந்யாஸியின் பாத்திரத்தில் இட்டது போன்றவற்றை உண்ணக் கூடாது. இதில் ஸந்யாஸி அளித்த உணவு என்பது தற்கால மடங்களில் உணவளிப்பதல்ல. மற்றும் ஸந்யாஸிகள் தரும் பிரசாதமான பழங்கள் போன்றவை அல்ல. மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியவை வாயினால் தீண்டிய உணவுகளையும் உண்ணக் கூடாது.


        .............................................தேசிகர் தொடர்வார்

Thursday, November 10, 2011

அன்னாபிஷேகம்





பல விசேஷ தினங்களிலும் ஈசனுக்கு பலவித அபிஷேகங்கள் நடந்தாலும், அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி-பெளர்ணமியில் மட்டுமே செய்யப்படுகிறது. நானறிந்தவரையில் தமிழகத்திலுள்ள எல்லாக் கோவில்களிலும் இன்று மட்டுமே அன்னாபிஷேகம்.

அபிஷேகப்ரியனான ஈசனுக்கு எழுபது விதமான பொருட்களால் அபிஷேகம் செய்யச் சொல்லப்பட்டிருக்கிறது, அதில் அறுவடையாகி வரும் நெல்லை அரிசியாக்கி, அதனைச் சமைத்து சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் ஒன்று. இதனால் உணவுத் தட்டுப்பாடு இல்லாது இருக்கும் என்று கூறுகிறார்கள். வெகுசில இல்லங்களில் கூட, தங்களது இல்லத்தில் வழிபடப்படும் சிவலிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள்.


அன்னாபிஷேகத்தை தரிசிப்பதன் மூலம் அன்று கோடிலிங்கதரிசனம் செய்த பலன் என்று கூறியிருக்கிறார்கள் பெரியவர்கள். அதாவது அன்னாபிஷேகத்தின் போது அதற்கு உபயோகமாகும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் சிவலிங்கமாகிறதாம், ஆகவே அபிஷேகத்தின் போது பார்க்கும் அன்னங்கள் எல்லாம் சேர்ந்து கோடி லிங்கங்களை தரிசித்ததாகிறதாம்.


மதுரையில் அன்னாபிஷேகம் செய்து முழுப் புடலங்காயை வேகவைத்து அதனையே மாலையாக அணிவித்திருப்பார்கள். புரட்டாசி கடைசியில் நவராத்ரி வந்து, ஐப்பசியில் ஒரே பெளர்ணமி வருமாயின் மதுரையில் அம்பிகைக்கு சாந்தாபிஷேகமும், சுந்தரேசனுக்கு அன்னாபிஷேகமும் ஒரே நாளில் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறேன். இல்லங்களிலிருந்து அன்னாபிஷேகத்திற்கு அரிசியும், சாந்தாபிஷேகத்திற்கு இளநீர், அரைத்த மஞ்சள் போன்றவை கொடுப்பது மதுரைக்காரர்களுக்கு வழக்கம். சாந்தாபிஷேகம் என்பது நவராத்ரியில் அசுரர்களை வதை செய்து கோபத்தில் இருக்கும் அம்பிகையைக் குளிர்விப்பதற்காக என்று கூறுவார்கள்.

சாதாரணமாக சாயரக்ஷை பூஜையின் முடிவில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கமானாலும், தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரத்து ஈசன் போன்றவர்களுக்கு உச்சிகால பூஜை ஆனவுடனேயே அன்னாபிஷேகம் செய்யப்படுவதாகத் தெரிகிறது. 

அன்னாபிஷேகத்தின் முடிவில் ஈஸ்வரனது மேல் சாற்றியிருக்கும் அன்னதை ஆறு, குளம், கடல்களில் கறைத்தும், கருவறைப் படிகள் மற்றும் இறைவன் முன்னால் படைக்கப்பட்ட அன்னம் மற்றும் காய்கள்,பக்ஷணங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் அளிக்கிறார்கள்.  இந்தப் பிரசாதத்தை ஸ்வீகரிப்பதன் மூலம் குழந்தை பாக்யம் கிட்டும் என்பது நம்பிக்கை.

"சோறு கண்ட இடம் ஸ்வர்கம்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம், அது சோற்றால் அபிஷேகம் செய்த சிவனை தரிசிப்பதால் ஸ்வர்கம் என்பதே என்கிறார்கள்.

 ஐப்பசி பெளர்ணமியாகிய இன்றைய நன்னாளில் நாமும் அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அன்னாபிஷேகத்தை தரிசிப்போம், இறையருளைப் பெறுவோம்.

Sunday, October 30, 2011

ஸ்கந்த சஷ்டி - 2011....

ஸ்ரீ சங்கர பகவத் பாதர் 72 விதமான மதங்களை கண்டித்து ஷண்மதங்களை ஸ்தாபித்து இந்து சமயத்தை புனருத்தாரணம் செய்தார் என்பதை நாமறிவோம். ஷண்முகனைப் பற்றிச் சொல்லுகையில் "முக்திதான ஈச ஸூனோ" என்ற வாக்யத்தைச் சொல்லுகிறார் சங்கரர். அதாவது ஜீவனானது பிறப்பு-இறப்பினைக் கடந்து முக்தியை அளிக்கவல்ல தெய்வமாக ஷண்முகனைக் கூறுகிறார்.


சாதாரண மனிதர்களுக்கு நான்கு வகையான நிலைகள் உண்டு, அவை: பால்யம், கெளமாரம், யெளவனம், வார்த்திகேயம் என்பதாகும். இவற்றில் முதல் மூன்று மட்டுமே தேவர்களுக்கு உண்டாம், அதாவது அவர்களுக்கு மூப்பு என்பதே கிடையாது. நமது ஷண்முகனோ என்றும் பதினாராக இருப்பவன், ஆகவே அவனது வழிபாட்டு முறைக்கு கெளமாரம் என்று கூறுகிறார்கள் என்று தோன்றுகிறது. ப்ரம்மம் என்பது காலத்திற்கு அப்பாற்பட்ட மாறுபாடற்ற உண்மை, அதை குமரனாகக் கொள்ளூம் சமயத்தை கெளமாரம் என்றால் சரிதானே?.


சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லை

ஸுப்ரமண்யனுக்கு மிஞ்சின தெய்வமில்லை


என்பது பல காலமாக சாதாரணர் முதல் கற்றுணர்ந்த பெரியோர்வரை பலரும் கூறும் சொலவடை.இதையே ஸனத்குமார ஸம்ஹிதையில், கலியுகத்தில் ஸுப்ரமண்ய பூஜை ப்ரதானமாகவும், அவனே ப்ரம்மம் என்றும் கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஸுப்ரமண்யன் ப்ரணவஸ்வரூபியாக இருப்பதால் ப்ரணவத்தை முதலாகக் கொண்ட எல்லா மந்த்ரங்களும் குமரனை வழிபடுவதாகச் சொல்லும் வழக்கம் இருக்கிறது. மந்திர சாஸ்திரத்தில், பிரணவமற்ற மந்திரங்கள் ஏதுமில்லை. எந்த பீஜாக்ஷரங்கள் இணைந்த மந்திரமானாலும் முதலில் ப்ரணவம் சேர்த்தே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. "சுக்ல வர்ணா ஷடாநனா" என்னும் லலிதா சஹஸ்ர நாமம் இந்த இடத்தில் நினைவில் வருகிறது.


ஷண்மதாசார்யரான பகவத்பாதர், ஏன் பஞ்சாயதன பூஜை என்று செய்திருக்கிறார்கள்?. அதிலேன் ஸுப்ரமண்யத்தை சேர்க்கவில்லை என்று சிந்திக்கையில் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. ஷண்முகனது இன்னொரு பெயர் குஹன் அல்லவா?. இதயமாகிற குகையில் எப்போதும் விற்றிருக்கும் அவனுக்கு பஞ்சாயதனத்தில் இடம் கொடாது, அந்த பஞ்சாயதன பூஜை தொடங்கும் முன்னரே, அவனைப் பூஜிக்க 'ஆத்ம பூஜை' என்ற ஒன்றை முதலில் செய்யச் சொல்லியிருக்கிறார் என்று தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், பஞ்சாயதனம் மட்டுமன்றி எல்லா வித பூஜைகளின் போதும், கணபதி பூஜையும், ஆத்ம பூஜையும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே குஹனாக ஒவ்வொரு ஜீவனுள்ளும் மறைந்திருக்கும் ஸுப்ரமண்யனுக்கு பஞ்சாயதன பூஜையில் மட்டுமல்லாது எல்லா பூஜைகளின் ஆரம்பத்திலும் வரும் ஆத்ம பூஜையில் அவனை வழிபட்டச் சொல்லியிருக்கிறார் என்று தோன்றுகிறது.


கெளமாரத்தைப் பின்பற்றும் பலரும் தமது பூஜையில் ஸுப்ரமண்யனது வேலுக்கே பலவித உபசாரங்களும் செய்வதைப் பார்த்திருக்கிறோம். ஆறுபடைகளில் முதலான திருப்பரங்குன்றத்தில் அபிஷேக ஆராதனைகள் எல்லாம் வேலுக்கே. ஸுப்ரமண்யனுக்கு இணையானது அவன் கையில் இருக்கும் வேல் என்றால் மிகையல்ல. 'கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய் மனமே' என்று அருணகிரிநாதர் சொல்வதிலிருந்து பார்த்தால் முருகனது கழலடிகளைப் பணிவதற்கு முன்னராக அவனது கையிலிருக்கும் வேலைப் பணியவேண்டும் என்பது தெரிகிறது. வேலைப் பணிவதே என் வேலை என்று சொல்லுவதன் பொருள் புரிகிறதன்றோ?. இந்த வேல் சக்தியின் அம்சம் என்பார்கள். இன்றும் ஷண்முக ஸ்தலங்களில், அவர் தன் அன்னையிடம் வேல் வாங்கும் படலம் விழாவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம். இதையே புஜங்கத்தில் சங்கரரும் எறும்பு முதல் ப்ரும்மாவரையிலான அனைத்துயிரையும் ஈன்ற அன்னை பராசக்தியே முருகனின் கைவேலாக இருப்பதாகச் சொல்லுகிறார். இந்த வேலுக்காக என்றே ஆதிசங்கரர் ஒரு ஸ்லோகம் செய்திருக்கிறார். அது,



சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்

ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்ந

மோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே

பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸந்நிதத்ஸ்வ

[சக்தியான வேலே, ஜகத்திற்குத் தாயும், ஸுகத்தைக் கொடுப்பவளும், நமஸ்கரித்தவர்களுடைய மனோ வியாதியைப் போக்குபவளுமான உன்னை வணங்குகிறேன். ஸ்ரீ குஹனின் கைக்கு அலங்காரமான சக்தியே!, தங்களுக்கு பல நமஸ்காரங்கள். என்றும் என் ஹ்ருதயத்தில் இருக்க வேண்டும்]


ஸுப்ரமண்ய புஜங்கம் என்று செந்திலாதிபன் மேல் முப்பது மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறார் ஆதி சங்கரர். அதிலிருந்து 6 ஸ்லோகங்களையும், திரு.அ வெ.ரா கிருஷ்ணசாமி ரெட்டியாரது தமிழாக்கத்தையும் பார்க்கலாமா?


ஸதா பாலரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ

மஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா

விதீந்த்ரா திம்ருக்யா கணேசாபிதாமே

விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி:


என்றும் இளமை எழிலன் எனினும்
இடர்மா மலைக்கே இடராவான்

துன்றும் கரிமா முகத்தோன் எனினும்

சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்

நன்றே நாடி இந்திரன் பிரமன்

நாடித் தேடும் கணேசனெனும்

ஒன்றே எனக்கு சுபம் திருவும்

உதவும் மங்கள மூர்த்தமதே.

****

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே

முகாந்நிஸ்ஸரந்தே கிராஸ்சாபி சித்ரம்


சொல்லுமறியேன் சுதி அறியேன்

சொற்கள் சுமக்கும் பொருளறியேன்

சொல்லைச் சொல்லும் விதி யறியேன்

எல்லை யிலாதோர் ஞான வொளி

இதயத் தமர்ந்து அறுமுகமாய்

சொல்லை வெள்ள மெனப் பெருகும்

தோற்றம் கண்டேன் சுடர் கண்டேன்.

****

மயூராதிரூடம் மஹாவக்ய கூடம்

மனோஹாரிதேஹம் மஹச்சித்த கேஹம்

மஹீதேவதேவம் மஹாதேவ பாவம்

மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்


மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் பொதிந்து

மனத்தைக் கவரும் உடலான்

பயில்வோர்கள் உள்ளக் குகைக்கோவில் தங்கி

பார்ப்பவர் தெய்வ மானான்

உயிராகும் மறையின் பொருளாகி நின்று

உலகைப் புரக்கும் பெருமான்

கயிலாய மேவும் அரனாரின் செல்வக்

கந்தன் பதம் பணிகுவாம்.


****
யதா ஸந்நிதானம் கதாமானவா மே

பாவம் போதிபாரம் கதாஸ்தே ததைவ

இதி வ்யஞ்ஜயன்ஸிந்து தீரேய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்


என்றன் சந்நிதி யடையும் மனிதர்

எப்போ தெனினும் மப்போதே

இந்தப் பிறவியின் சாகரக் கரையை

எய்திக் களித்தோ ராகின்றார்

மந்தரு மறிய மறையை விளக்கிச்

செந்தில் சாகரக் கரையதனில்

கந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்

தூயன் பாதம் துதிக்கின்றேன்.


****
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா:

ததைவாபத: ஸந்நிதெள ஸேவதாம் மே

இதீவோர்மிபங்க்தீர் ந்ருணம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்


கடலில் தோன்றும் அலையும் அழிந்து

காட்சி மறைவது போல்

திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார்

தீமை யழிந்து படும்

படமாய் மனதில் பதியச் செய்ய

பரவைக் கரையில் குகன்

இடமே யமர்ந்தான் இதயமலர் மேல்

ஏற்றித் தியானம் செய்கின்றேன்.


****
கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா:

ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா:

இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூட:

ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து


என்றன் இருக்கை யறிந்தே யெவரும்

இம்மலை ஏறி வரின்

எந்தைக் கயிலை மலை மீதேறும்

இனிய பலன் கொள்வார்

கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்

கந்தமான கிரிமேல்

சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்

திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.


****
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!

சக்தி வேல் முருகனுக்கு அரோஹரா!
ஞான வேல் முருகனுக்கு அரோஹரா!

Monday, October 17, 2011

ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகள்....



இரு வருஷங்கள் முன்னர் ஒரு பிரதோஷகாலத்தில், நண்பர் ஒருவரிடத்தில் நான் கேட்டிருந்த ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது வரலாறு புத்தகவடிவில் கிடைத்தது. இந்த புஸ்தகம் முழுவதுமே திகட்டாத விருந்து என்றால் மிகையல்ல. புஸ்தகம் முழுவதிலும் ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது திருஷ்ட, ஸுக்ஷ்ம விசேஷங்களை ஆசார்ய பக்தியில் சிறந்த ஸ்ரீ ஆர்.கிருஷ்ணஸ்வாமி என்பவர் எழுதியிருக்கிறார். இவ்வாசிரியர் பிற்காலத்தில் சிருங்கேரி ஆசார்யர்களிடம் ஸன்யாசம் பெற்று ஸ்ரீ ஞானாநந்த பாரதீ என்ற தீக்ஷா நாமத்துடன் விளங்கியவர் என்று தெரிகிறது.


இந்த இடுகை ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய ஸ்ரீ குருகிருபா விலாஸம் என்னும் நூலில் இருந்து படித்த ஒரு விஷயமே இங்கு நமது சிந்தனைக்காக. புஸ்தகத்தைப் படிக்கத் தந்த நண்பருக்கும், இந்த புஸ்தக வெளியீட்டாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு சமயம், ஸ்ரீ சந்திர சேகர பாரதீ அவர்களின் தரிசனத்திற்கு வந்த பக்தர், தமது லோகாயதமான கர்மாக்கள் எல்லாம் முடிந்துவிட்டதாகவும், நிறைய நேரம் இருப்பதாகவும் அதை நல்ல வழியில் செலுத்த, தமக்குத் தோன்றும் பல வழிகளைக் கூறி போது ஜனங்களுக்கிடையே அவற்றைச் செயல்படுத்த பெரியவாளது ஆசிகள் வேண்டும் என்று விஞ்ஞாபிக்கிறார். ஆசாரியார் பல வித கேள்விகள் கேட்ட பின்னர், 'உங்களுக்கோ குடும்ப விஷயமான கவலையில்லை என்று தெரிகிறது. நமது சமயத்தில் தீவிரமான சிரத்தையும், அவகாசமும் இருக்கிறது என்றும் தெரிகிறது. இந்த காலத்தை உபயோகித்துக் கொண்டு நீங்கள் மேன்மேலும் பலவித கர்மானுஷ்ட்டானங்களைச் செய்து கொண்டு, இன்னும் உங்களை மேம்படுத்திக் கொள்ளலாமே?. அதில் அக்கறை செலுத்தாமல் ஊரார் விஷயமாகப் பிரவிருத்தி செய்வதில் என்ன அர்த்தம்?'. என்று கூறுகிறார். மேலும், ஜன சமுதாயம் என்பது தனித் தனி ஜனங்களின் சேர்க்கையே. அவை ஒவ்வொரு மனுஷனும் தமது ஸ்வதர்மத்தை அனுஷ்டித்துத் தனக்கு இருக்கிற அக்ஞானத்தைப் போக்கடிக்க பிரயத்தனப்பட்டானேயானால் அதுவே சமுதாயத்தின் உன்னத கதிக்கு காரணமாகும். இதை விட்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யத் தலைப்பட்டால் அவை பிரயோஜனம் இன்றி வீண் வியவஹாரங்களையும், மனஸ்தாபத்தையுமே ஏற்படுத்தும். நம்மை உத்தாரணம் செய்து கொள்வதற்கே எத்தனையோ ஜன்மங்கள் தேவையாக இருக்கிறது, இதில் மற்றவர்களை உத்தாரணம் செய்ய நினைப்பது கொஞ்சமேனும் நியாயமும் இல்லை, ஸாத்தியமும் இல்லை.


"நாப்ருஷ்ட: கஸ்யசித் ப்ரூயாத்" என்பதாக 'கேட்காமல் இருக்கும்போது யாருக்கும் சொல்லாதே' என்று சொல்லப்பட்டிருக்கிறது. கேட்கிற விதமும் வெறும் குதுகலத்தினால் இல்லாமல் அத்யாத்மப் பசியாக இருந்தால் மட்டுமே சொல்லப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 'தத்வித்தி ப்ணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா:" என்பதாக நன்கு நமஸ்கரித்து சேவை செய்து, திரும்பத் திரும்ப கேட்டு அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தால் மட்டுமே உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று கீதையில் கூறப்பட்டுள்ளது.


ஆகவே பசிப்பவன் தானே உணவினை தேடிக்கண்டு பிடிப்பான் என்று கூறுகிறார். ஆகவே, நாமும் நல்ல குரு கிடைக்கவும், குரு கிடைத்துவிட்டால் அவரிடத்தில் முழுமையாக சரணாகதி செய்து உய்யத் தலைப்படுவோம்.


[ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது பீடாதிபத்யத்தின் ஆரம்ப காலத்திலேயே ஸ்ரீ பரமாசாரியார் காம கோடி மடத்தின் பீடாதிபத்யம் ஏற்றவர். ஸ்ரீ சந்திர சேகர பாரதி ஸ்வாமிகள் பீடாரோஹணம் 1912 முதல் 1954 வரையில். பரமாசாரியார் தனது பால்ய காலத்தில், சில விஷயங்களை சந்திர சேகர பாரதி ஸ்வாமிகளிடம் தமது சிஷ்யர்களை அனுப்பி தெளிவு செய்துகொண்டதாகச் சொல்வார்கள். இவர் துங்க பத்ராவில் ஜல சமாதியானவர். நரசிம்ஹ வனத்தில் துங்கா நதிக்கரையில் இவர் நீரில் அமிழ்ந்த இடத்தில் ஓர் மண்டபமும், அவரது பூத உடல் நரசிம்ஹ வனத்தில் அவரது குருவின் அதிஷ்ட்டானத்தருகிலேயே வைத்து பிருந்தாவனம் கட்டப்பட்டு இருக்கிறது]

Tuesday, October 4, 2011

2011 நவராத்ரி : கொலுப் படங்கள்.....

பெங்களூர் அல்லாத மற்ற இடங்களில் வசிக்கும் சில நண்பர்கள், சுண்டல்தான் இல்லை, கொலு படங்களையாவது காண்பிக்கக்கூடாதா என்று கேட்டதன் விளைவாக, இந்த வருஷத்தைய கொலுவிலிருந்து சில படங்கள் கிழே!.

[நேரமின்மையின் காரணமாகவும், சரியான ஸ்டில் காமரா இல்லாத காரணத்தாலும் செல் போனில் எடுத்த படங்கள்.....அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.]














கீழே இருக்கும் கோதண்ட ராமர் மற்றும் லக்ஷ்மியின் வயது 70+















மேலே இருக்கும் படத்தில் உள்ள கஜ லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி பொம்மைகளது வயது 85க்கும் மேலே.


கோலாட்டக் குச்சியின் வயது 52




பித்தளை சாமான்கள் வயது 110க்கும் மேலே!.

Friday, September 30, 2011

2011 - நவராத்ரி: குலாம்ருத ரசிகா, கெளலின்யா, குல சங்கேத பாலின்யா...




சாதாரணமாக இல்லங்களிலும், கோவில்களிலும் ஸ்ரீ சக்ரங்கள் வைத்துப் பூஜை செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவ்வாறு படம், கடம், சக்ரம், சிலை போன்றவற்றில் இறைசக்தியை இருத்தி வழிபடும் முறை பாஹ்யம் என்பார்கள். அதாவது வெளிப்படையாக ஸ்ரீசக்ரத்தை வைத்துப் பூஜிப்பது என்பது பாஹ்யாகாசம் என்றும், ஹ்ருதயத்தில் மானசீகமாக ஸ்ரீசக்ரத்தை உபாசிப்பதை தகராஹாசம் என்றும் கூறுகிறார்கள். மானசீகமான ஸ்ரீசக்ரத்தை வியத் (வியத்=ஆகாசம்) சக்ரம் என்கிறார்கள். இவ்வாறு மனசீகமாக செய்யப்படும் பூஜைக்கு "ஸமயம்" என்று சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு மானசீகமாக அம்பிகையை வழிபடுவதாலேயே அவளுக்கு "ஸமயாந்தஸ்தா" என்று ஒரு நாமம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருக்கிறது. வசிஷ்ட்டர், சனகர், சனந்தனர், சனத்குமாரர், சுகர் போன்ற மஹரிஷிகள் அம்பிகையை இவ்வாறு வழிபட்டதாகத் தெரிகிறது. இவ்விதமான பூஜாமுறையை ஸமய பஞ்சகம் என்கிறார்கள். இவ்வாறு, ஆறாதாரம் முதலான பாவனையான பூஜையில் சந்தோஷமடைபவள் என்பதைக் குறிக்கும் நாமமே "சமயாசார தத்பரா" என்பது.




முந்தைய பதிவில் நாம் ஆறாதாரங்களில் அம்பிகையின் லீலாவினோதங்களை அறிந்தோம். மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியே ஒரு சக்தி ரூபம்தான் என்றும் நாமறிவோம். இந்த குண்டலினி சக்திக்கு குலஸ்திரீ என்று ஒரு பெயர். குலம் என்றால் குடும்பம் என்ற பொருள் நாமறிவோம். இதைத் தவிர குலம் என்று ஸுஷும்னா மார்க்கத்தினையும் சொல்லியிருக்கிறார்கள். யோகிகள் குலத்தைக் காப்பாற்று என்று வேண்டியிருப்பதெல்லாம் தங்களது குண்டலினி யோக முயற்சியைக் காத்து வெற்றியடையச் செய்யப் பிரார்த்தித்தலே. இந்த குலம் என்ற பதத்தினைக் கொண்டு ஸ்ரீ லலிதாம்பிகைக்கு பல நாமங்கள் சஹஸ்ரநாமத்தில் இருக்கிறது. அவற்றைப் பார்க்கலாமா?.

குலாம்ருத ரசிகாயை (90) - சஹஸாரத்தினை குண்டலினி சக்தி எட்டும்போது ஏற்படும் அம்ருத தாரையில் ரசனையுடையவள் என்று பொருள்.

குலசங்கேத பாலின்யை (91) - குல சம்பந்தமான ரகசியங்களைக் காப்பவள். அதாவது வேதம், பூஜை, மந்திரம், சக்ரம் போன்றவற்றில் இருக்கும் ரகஸியங்களைக் காப்பவள். அம்பிகையின் உபாசனா முறைகள் குரு-சிஷ்ய சம்பிரதாயத்தையொட்டி வருவது. இவ்வாறான உபாசனா முறையை ரகஸியமாகக் காப்பவள் அம்பிகை.

குலாங்கனாயை (92) - குலஸ்த்ரீ போன்றவள். சரீரத்திற்கு குலம் என்று ஒரு பொருள், அதன்படி குலஸ்திரீயாக சரீரத்திற்குள் இருப்பதாகப் பொருள்.

குலாந்தஸ்தாயை (93) - இந்த நாமத்தில் குலம் என்பது நகரம், வீடு, தேகம், வம்சம் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் வசிப்பவள் குலாந்தஸ்தா.

கெளலின்யை (94) - குல என்றால் சக்தி; அகுல என்றா சிவன். கெளலின்யை என்பது சிவ-சக்தி சேர்ந்த ரூபம்.

குலயோகின்யை (95) - குலத்துடன் சம்மந்தமுடையவளாக, குலத்தை இயக்குபவளாக இருப்பவள் குலயோகின்யா

அகுலாயை (96) - குலத்துக்கு மேலாக இருப்பவள். சரீரத்தில் குண்டலினியின் இருப்பிடமான மூலாதாரத்திலும், மேலே சஹஸ்ராரத்திலும் பத்மங்கள் இருக்கின்றன. இதில் அடிப்பாகத்தில்/மூலாதாரத்தில் இருக்கும் பத்மத்தை அகுலம் என்றும், மேல் பாகத்தில் இருப்பதை குலம் என்று சொல்கிறது ஸ்வச்சந்த சங்கிரகம் என்னும் நூல்.

Wednesday, September 28, 2011

2011 - நவராத்ரி: தேகம் முழுவதும் தேவி...






நமக்கெல்லம் ஆறு ஆதாரங்கள் பற்றித் தெரியும். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவையே அந்த ஆதாரங்கள். இந்த ஆதாரங்களில் அம்பிகையை எப்படி வழிபட வேண்டும் என்பதை பெரியோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இந்த ஆறு சக்ரங்கள் ஒவ்வொன்றிலும் தேவி தன் நாயகனுடன் இணைந்து எவ்வாறு செயல்படுகிறாள் என்பதை ஆதிசங்கரர் நமக்கு செளந்தர்யலஹரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். சாதகன் இந்த சக்ரங்களின் ஒவ்வொரு நிலையை அடையும் போதும் அவனால் இவற்றை உணர முடியும் என்கிறார்கள் பெரியோர். முந்தைய பதிவில் நாம் பார்த்த அக்னி கூடம்ம், சூர்ய கூடம், சோம கூடம் என்பதெல்லாம் இந்த ஆறாதாரங்களே.

மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் அக்னி கண்டமாகவும், மணிபூரகம், அனாகதம் ஆகியவை சேர்ந்தது சூர்ய கண்டமாகவும், விசுக்தி மற்றும் ஆஜ்ஞை சேர்ந்தது சோம/சந்த்ர கண்டம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி கண்டத்திற்கும் சூர்ய கண்டத்திற்கும் இடையில் வருவது பிரம்ம கிரந்தி என்றும், சூர்ய கண்டத்திற்கும், சோம கண்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி விஷ்ணுக்ரந்தி என்றும், சோம கண்டத்திற்கு மேற்பட்ட சஹஸ்ராரம்-த்வாதசாந்தம் என்பதற்கு இடைப்பட்டது ருத்ரக்ரந்தி என்றும் கூறப்படுகிறது. இங்கே கண்டம், கூடம், மண்டலம் என்பதெல்லாம் அந்தந்தச் சக்ரங்களைக் குறிக்கும் வேறு பெயர்களாகக் கொள்ள வேண்டுகிறேன். கிரந்தி என்பது நாடிக்களின் முடிச்சையும், அந்த நாடிகளில் ஏற்படும் ஜென்ம வாசனையால் ஏற்படும் சிக்கல்கள் எனக் கொள்ளலாம்.

பிரம்மக்ரந்தியை கடப்பதன் மூலம் சிருஷ்டி வாசனையும், விஷ்ணுக்ரந்தியைக் கடப்பதன் மூலமாக ஸ்திதி வாசனையினையும், ருத்ரக்ரந்தியைக் கடப்பதன் மூலமாக் சம்ஹார வாசனையும் விலகுவதாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இந்த மூன்று கண்டங்களிலும் அம்பிகை இருப்பதையே லலிதா சஹஸ்ர நாமத்தில் "வஹ்னிமண்டல வாஸினி, பானு மண்டல மத்யஸ்த்தா, சந்திர மண்டல மத்யகா" என்னும் மூன்று நாமங்கள் குறிப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறார் எனது குரு. இதையே வேறொரு இடத்தில் வாக்தேவிகள், சிரஸில் சந்திரனைப் போன்ற வெண்மையாக அம்பிகை இருக்கிறாள் என்பதை, "சிர: ஸ்திதா சந்த்ர நிபா" என்றும், புருவ மத்தியில் "பாலஸ்தேந்த்ர தநு: பிரபா" என்பதாக வானவில்லை ஒத்த நிறங்களுடன் இருப்பதாகவும், ஹ்ருதயத்தில் வசிக்கையில் சூர்யன் போன்ற பிரகாசிப்பதை"ஹிருதயஸ்தா ரவிப்பிராக்யா" என்றும் கூறுகிறார்கள்.

மூலாதாரத்தில் தனுஸ், புஷ்பபாணம், அபய, வரத ஹஸ்தத்துடன் செம்பருத்தி மலர் போன்ற செந்நிறத்தினளாக, தேவியை த்யானம் செய்ய வேண்டும் என்கிறது ருத்ர யாமளம். இதே போல ஸ்வாதிஷ்ட்டானத்தில் நிலைத்த மின்னல் போன்ற வடிவில் இருப்பதாகவும், அவள் பிரம்மக்ராந்தியைப் பிளந்து செல்லுகையில் அக்னி போன்ற காந்தியுடன் இருப்பதாகவும், அவளே அனாகதத்தை தாண்டி விஷ்ணுக்ரந்தியைக் கடக்கையில் சூரியனது ஒளியை விஞ்சுவதாகவும், ஆக்ஞையைக் கடக்கையில் மின்னல் கொடி போன்று விளங்குவதாகவும் த்யானிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.


மூலாதாரத்தில் பஞ்சதசியாகவும், ஹ்ருதயத்தில் சியாமா/தருணியாகவும், ஆக்ஞாவில் வாராகியாகவும், ஸஹஸ்ராரத்தில் மஹா ஷோடசியாகவும், த்வாதசாந்தப் பெருவெளியில் பரா என்னும் முதிர்ந்த சுவாசினியாகவும் த்யானிக்கப்பட வேண்டும் கூறப்பட்டுள்ளது. ஆகவே நாமும் அவளை த்யானிப்போம், அவளை உணரத் தலைப்படுவோம்.

துர்கா - லக்ஷ்மி - சரஸ்வதி ஸஹித ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தர்யை நம:

Tuesday, September 27, 2011

2011 - நவராத்ரி: சர்வ மங்களா






அண்ட சராசரங்கள் அனைத்தையும் பலவித சக்திகள் இயக்குகின்றன. ஸ்தூல ரூபமான பெளதிக சக்திகளை ஸூக்ஷ்ம ரூபிணிகளான சக்தி தேவதைகளே ஆள்கிறார்கள்.இந்த சக்தி தேவதைகளையே நாம் பலவிதங்களில் பூஜிக்கிறோம். இந்த சக்தி தேவதைகளோ, மஹான்களது மனத்தை தமது இருப்பிடமாகக் கொண்டு லோக க்ஷேமார்த்தமான பல காரியங்களை நடத்துகின்றனர். இந்த சக்தி தேவதைகளே பாரதத்தின் பல இடங்களில் பல ரூபங்களாக வழிபடப்படுகின்றனர். இவ்வாறான சக்தி தேவதைகளின் மஹோன்னதத்தை சிறப்பித்து வழிபடவே நவராத்ரி. இந்த நவராத்ரிகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்தி தேவதைக்கு சிறப்புத்தந்து வழிபடுகிறோம்.


இந்த சக்தி தேவதைகளே 51 சக்தி பீடங்களில் போற்றப்படுகிறார்கள். இவ்வாறான 51 பீடங்களில் நான்கு பீடங்களை மட்டும் மந்த்ர பீடங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் பெரியோர். அவை, காமகிரி பீடம், ஜலாந்த்ர பீடம், பூர்ணகிரி பீடம், மற்றும் ஒட்டியாண பீடம் என்பன. வேதத்திற்கு ப்ரணவம் எத்தனை முக்கியமானதோ, அது போன்றது சாக்தத்தில் 'ஹ்ரீம்' என்னும் அக்ஷரம். இந்த அக்ஷரமானது நான்கு பகுதிகளை உடையது. இந்த நான்கையும் ஸ்தூல ப்ரணவ பீடம், ஸூக்ஷ்ம ப்ரணவ பீடம், காரண பிரணவ பீடம் மற்றும் மகா காரண ப்ரணவ பீடம் என்று நான்காகச் சொல்லியிருக்கிறார்கள்.


சரி, இந்த நான்கு பீடங்கள் என்பன முன்பு இங்கு சொல்லியது போன்று உருவான பீடங்களில் உள்ளவை அவ்வளவுதானே?, என்றால் அதுதான் இல்லை. இவை நமது உடலிலும் இருக்கின்றன. அக்னி கூடம் எனப்படுவது அடி வயிறு, சூர்ய கூடம் எனப்படும் ஹ்ருதயம், சோம கூடம் எனப்படுவது முகம், மற்றும் சஹஸ்ரார கூடம் எனப்படுவது உச்சந்தலை. இவற்றில் அக்னி கூடம் என்பது காமகிரி பீடம், சூர்ய கூடம் எனப்படுவது ஜலாந்த்ர பீடம், சோம கூடம் எனப்படுவது பூர்ணகிரி பீடம், கடைசியாக சஹஸ்ரார கூடம் என்பது ஒட்டியாண பீடம். இந்த நான்கு பீடங்கள்/கூடங்களிலும் உள்ள தேவதைகள் பல நாமங்களில் இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்றும் பார்த்துவிடுவோம்.


காமகிரி பீடத்தில் வாகீஸ்வரி ஸ்வரூபத்தில் மஹா காமேஸ்வரீ, ஜலாந்த்ர பீடத்தில் காமகலா ஸ்வரூப மஹா வஜ்ரேஸ்வரீ, பூர்ணகிரி பீடத்தில் பராபர சக்தி ஸ்வரூப மஹா பகமாலினி, கடைசியாக ஒட்டியாண பீடத்தில் பரபிரம்ம ஸ்வரூபத்தில் ஸ்ரீ மஹா த்ரிபுரசுந்தரி. இவளே ச்ர்வ மங்களா என்று சஹஸ்ர நாமத்தில் 200ஆவது நாமமாகச் சொல்லப்படுபவள். கும்பகோணத்தில் கும்பேஸ்வரரின் பத்னியாக கொலு வீற்றிருக்கும் அம்பிகையின் பெயர் மங்களாம்பிகை என்பதாகும். இவள் எழுபத்து மூன்று அக்ஷரங்களால் ஆன பீடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த எழுபத்து மூன்று என்னும் எண்ணானது [பிந்துவுடன் சேர்த்து] ஸ்ரீசக்ரத்தைக் குறிப்பதே ஆகும்.


ஆகவே, சர்வ மங்களத்தையும் அருளும் ஜகன்மாதா ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரசுந்தரியை நவராத்ரி நாட்களில் துர்கா-லக்ஷ்மி-சரஸ்வதியுடன் சேர்த்து பூஜிப்போம்.


துர்கா - லக்ஷ்மி - சரஸ்வதி ஸஹித ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தர்யை நம:

Sunday, September 18, 2011

மஹாளய பக்ஷம் : "ராமோ விக்ரஹவான் தர்ம:" பகுதி-3


முன்னர் "ராமோ விக்ரஹவான் தர்ம" என்கிற தலைப்பில் இரண்டு இடுகைகள் இட்டேன். இதன் தொடர்பாக சில குறிப்புக்கள் எடுத்தாலும், அப்போது இத்தொடரை தொடரவில்லை. இந்த இடுகை அதன் தொடர்ச்சி. முந்தைய பகுதிகளுக்கான உரல் கீழே!

பகுதி -1
பகுதி -2

ராமபிரானது பித்ரு வாக்ய பரிபாலனம் நாமெல்லாம் அறிந்ததே!. தந்தை சொல்லுக்கு மறுபேச்சில்லை என்று கானகம் சென்றார். சித்ரகூடத்தில் பர்ணசாலை அமைத்து இருந்த காலத்தில் பரதன் புடைசூழ வந்து மீண்டும் நாடாள அழைக்கையில் தந்தையின் மறைவினைச் கேள்விப்படுகிறார் ஸ்ரீராமர்.


தனது பிரிவால் தந்தை உயிர் நீத்ததை அறிந்து பல்வாறு புலம்பியழுகிறார், பின்னர் தசரதருக்கு மகனாக தான் செய்ய வேண்டிய கர்மாக்களை முறையாகச் செய்தார் என்கிறார் வால்மிகி மகரிஷி. அயோத்யா காண்டத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.

ஆநயேங்குதி பிண்யாகம் சீரமாஹர சோத்தரம்
ஜலக்ரியார்த்தம் ததாஸ்ய கமிஷ்யாமி மஹாத்மந:

இந்த வாக்யம் ஸீதையைப் பார்த்து ராமர் சொல்வதாக அமைந்திருக்கிறது. ஸீதே! உனது மாமனார் இறந்துவிட்டார். அவருக்கு நான் தர்ப்பண்ம், பிண்டதானம் போன்றவை செய்யவேண்டும், அதற்கு தேவையான பிண்டங்களை தயார் செய்ய இங்குதீ மரத்தில் உள்ள பழங்களை பிண்டமாக உருட்டிக் கொண்டு வா! என்று கூறுகிறார்.

தந்தையின் மறைவால் மிகுந்த வருத்தமடைந்தாலும், மகனாக, மறைந்த தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமகிரியைகளை செய்யத் தொடங்குகிறார். இவ்வாறு செய்ய ஆற்றங்கரைக்குச் செல்கையில் முதலில் ஸீதையும், பின்னர் லக்ஷ்மணனும் செல்ல, கடைசியாக ராமர் சென்றாராம். வனவாசம் செல்வதைச் செல்லுகையில், முதலில் ராமனும், பின்னர் ஸீதையும், கடைசியாக லக்ஷ்மணனும் வருவதாகச் சொன்ன வால்மிகி, குறிப்பாக இந்த இடத்தில் மாற்றிச் சொல்கிறார், இதன் காரணமென்ன?. ஸம்ஸ்காரத்திற்குச் செல்லும் போது சிறியவர்கள் முதலிலும், பின்னர் பெரியவர்கள் என்பதாக மூத்தவர் கடைசியில் செல்ல வேண்டும் என்ற தர்ம சாஸ்த்ர விதியை ராமர் கடைப்பிடித்ததை குறிப்பாகச் சொல்லியிருக்கிறார்.

இதற்கடுத்த ஸ்லோகத்தில் (அயோத்யா காண்டம்,102) இராமர் இன்றுவரையில் பிண்டப்பிரதானத்திற்குச் சொல்லப்படும் மந்திரத்தைச் சொல்லி தனது தந்தைக்கு பிண்டதானம் செய்ததாக, மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் வால்மிகி மஹரிஷி. இவ்வாறு சொல்லிய பின்னர், இந்த பிண்டதானத்திற்கு உபயோகம் செய்த பொருட்கள் என்ன என்பதையும் சொல்லியிருக்கிறார். அதில், இலந்தைப் பழத்துடன் கூடிய ஐங்குதீ பழங்களால் ஆன பிண்டத்தை தர்பத்தில் வைத்து மந்திரம் சொன்னதாகச் சொல்லுகிறார். என்று இக்கர்மாவைச் செய்யும் பலருக்கும், அதென்ன பழத்தாலான பிண்டம்?, நாமெல்லாம் அன்னத்தாலான பிண்டமல்லவா வைத்துச் செய்கிறோம்? என்று தோன்றலாம்.

கர்மா செய்பவர் என்ன உணவினை உண்ணுகிறாரோ, அதனாலேயே பிண்டம் செய்ய வேண்டும் என்பது தர்ம சாஸ்த்ர விதி, அதனால்தான் தனது உணவான ஐங்குதீ, மற்றும் இலந்தைப் பழத்தாலான பிண்டத்தைச் செய்து அக்கர்மாவைச் செய்ததாகச் சொல்லுகிறார் வால்மிகி.

இங்கு இன்னொரு விஷயம் கவனிக்கத்தக்கது. தசரதரது மறைவினையொட்டி பரதன் மற்றும் சத்ருக்னன் தமது தந்தையின் ப்ரேத மற்றும் பித்ரு கார்யங்களைச் செய்தாலும், ராமபிரானும் தனது தந்தையின் மறைவு கேட்டவுடன் கர்மாவைச் செய்யத் தலைப்படுகிறார். அதான் தனது தம்பிகள் செய்துவிட்டார்களே, நான் ஏன் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. சாஸ்த்ரவிதிப்படி தான் செய்யவேண்டியதைச் செய்யத் தயாராகிறார். அதனால்தான் ராமரை தர்ம தேவதையின் உருவமாகச் சொல்லுகிறார்கள். இதே போல பின்னர் ஆரண்ய காண்டத்தில் ஒருமுறை ப்ரத்யாப்திக சிராத்தம் செய்ய வேண்டிய நாளில் ராம-லக்ஷ்மணர்கள் தமது குடில்களிலிருந்து சென்றவர்கள் அபரான்ன காலத்தில் குடிலுக்கு திரும்பாததால் சீதா தேவியே பிண்டகளை இட்டதாகவும், அதை தசரதர் ஏறதாகவும், பின்னர் அசரீரியாக ஸ்ரீராமருக்குத் தெரிவித்ததாகவும் சொல்லியிருக்கிறார் வால்மிகீ.

இவற்றின் மூலமாக பித்ரு கர்மா என்பது எத்துணை முக்கியம் என்று தெரிகிறது. தற்போது மஹாளய பக்ஷம் நடக்கிறது. இக்கர்மாவிற்கு அதிகாரம் உள்ளவர்கள் பக்ஷிய மஹாளயமாக 16 நாட்களோ அல்லது 15 தினங்களில் ஒருநாள் பார்ணவ சிராத்தமாகவே அல்லது ஹிரண்யமாகச் செய்து உணவிடுதலோ செய்யவோம். இவ்வாறு ஏதும் செய்ய இயலாத சூழ்நிலை இருக்குமானால் தனது தாய்/தந்தையினருக்கான திதியன்று மட்டுமாவது தில தர்பண ரூபமாக சிராத்தம் செய்யத் தலைப்படுவோம். இந்த 15 தினங்களில் செய்யப்படும் சிராத்தங்களானது நமது பித்ருக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியதெனச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பதினைந்து தினங்களில் ஒவ்வொரு நாளன்று செய்யப்படும் தர்பணங்களுக்கும், ஒவ்வொரு விசேஷ பலன்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பதினைந்து தினங்களில் மட்டுமே நமது பித்ரு வர்க்க, மாத்ரு வர்க்க பித்ருக்களைத் தவிர மற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள், குரு போன்றவர்களுக்குத் தர்பணம் செய்யும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வோம்.

Saturday, August 13, 2011

காயத்ரி மந்த்ர ஜபம் - சிறப்பும், செய்முறைகளும்




காயத்ரி ஜபத்தின் சிறப்பையும், அதனைச் செய்யும் விதிகள் சிலவும் இப்பதிவில் பார்க்கலாம். இங்கு சொல்லப்பட்ட சில செய்திகள் எனது குரு மற்றும் வடுவூர் வேதவல்லி கனபாடிகள் சொல்லியதின் சாரம்.

தினமும் காயத்ரி ஜபம் செய்வதால் என்ன பலன் என்பதற்கு வேதத்திலேயே சொல்லப்பட்டிருப்பதை முதலில் காண்போம்.

முன்னொரு காலத்தில் ராக்ஷஸர்கள் கடுமையாகத் தவம் செய்த சமயத்தில் ப்ரஜாபதி ப்ரத்யக்ஷமாகி ராக்ஷஸர்களுக்கு வரமளிக்க முன்வருகிறார். அப்போது ராக்ஷஸர்கள் தங்களுக்கு சூர்யனை எதிர்க்கும் சக்தி வேண்டும் என்று வரம் கேட்கின்றனர். ப்ரஜாபதியும் அவ்வரத்தைக் கொடுத்துவிடுகிறார். இவ்வரத்தின் காரணமாக நித்ய சஞ்சாரம் செய்யும் சூர்யனது சஞ்சாரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. உதயத்தின் போதும், அஸ்தமனத்திலும் அஸுரர்கள் சூர்யனை எதிர்க்கத் தொடங்குகின்றனர். இவ்வாறு சூர்யனுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க தேவர்கள் ஒர் உபாயத்தைச் செய்கின்றனர், அதுவே சந்த்யா வந்தனம். இதில் செய்யப்படும் ஜபமானது சூர்யனுக்கு, ராக்ஷசர்களை எதிர்க்கும் பலத்தைக் கொடுப்பதுடன், சந்த்யாவந்தனத்தில் அவனுக்குக் கொடுக்கப்படும் அர்க்யமானது வஜ்ராயுதமாகி ராக்ஷஸர்களை அழிப்பதாகவும் சொல்லுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு சந்த்யா காலத்திலும் சூர்யனை எதிர்க்கும் ராக்ஷஸர்கள் இந்த ஜபத்தால் மந்தேஹாருணம் என்னும் தீவிற்கு தள்ளப்படுகிறார்கள். ராக்ஷஸர்கள் அத்தீவிலிருந்து வெளியேறி சூர்யனை எதிர்க்க இயலாவாறு மீண்டும் மீண்டும் செய்யப்படும் காயத்ரி ஜபத்தின் காரணமாக சூர்யனுடைய சஞ்சாரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாது இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு சூர்யனுக்கே ரக்ஷையான காயத்ரியை அதிக அளவில் ஜபம் செய்பவர்களுக்கு எவ்வித பலன்கள் கிடைக்கும் என்பதை அளவிடவும் முடியுமோ?


காயத்ரி மந்த்ரமானது வேதங்களின் ஸாராம்சம் என்றால் மிகையாகா. காயத்ரியின் முதல் பாகமான ப்ரணவம் மூன்று எழுத்துக்களால் ஆனது. அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்றும் மூன்று வேதங்களிலிருந்து எடுத்து ஒன்றாக்கியது. இதே போல காயத்ரியின் இரண்டாம் பாகமான வ்யாஹ்ருதிகள் மூன்றும், மூன்று வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டதாம். இதே போல, மந்த்ரத்தின் முதல் பாதமான 'தத்ஸவிதுர் வரேண்யம்' என்பது ரிக் வேதத்திலிருந்தும், 'பர்க்கோ தேவஸ்ய தீமஹி' என்பது யஜுர்வேதத்தில் இருந்தும், தியோயோந: ப்ரஜோதயாத்' என்பது ஸாம வேதத்திலிருந்தும் எடுத்து ஒரே மந்த்ரமாக அருளப்பட்டிருக்கிறது. ஆகவே ஒருவன் செய்யும் காயத்ரி ஜபமானது மூன்று வேதத்தையும் அத்யயனம் செய்த பலன் தருவதாக மனு கூறுகிறார்.

வேத வியாஸர் காயத்ரி ஜபத்தின் சிறப்பைச் சொல்லுகையில், இந்த ஜபத்தை பத்து முறை ஜெபிப்பதால் மூன்று நாட்கள் செய்த பாபங்கள் போவதாகவும், நூறு முறை ஜபம் செய்வதால் செய்பவனது பாப கூட்டமே விலகிவிடுவதாகவும், ஆயிரம் முறை ஜபம் செய்வதால் உபபாதகம் எனப்படும், கோவதம், காலாகாலத்தில் உபநயனம் செய்யாதது, சம்பளம் கொடுத்து வேதம் கற்றல், அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம் செய்யாததால் ஏற்படும் பாபங்கள், செய்நன்றி மறத்தல் போன்ற பாபங்கள் நீங்குவதாகவும் கூறுகிறார். மேலும், கோடி ஆவர்த்தி ஜபம் செய்பவனுக்கு தேவர்- கந்தர்வர்களாகும் வாய்ப்பும் உண்டென்று கூறுகிறார்.

காயத்ரி மந்த்ரத்தின் ரிஷியான விச்வாமித்ரர் இம்மந்த்ர ஜபத்தின் பலனைக் கூறுகையில், ஸப்தவ்யாஹ்ருதிகளுடன் கூடிய ப்ரணவ ஸஹித காயத்ரியை உச்சாரணம் செய்பவனுக்கு ஒரு போதும் பயம் என்பதே இருக்காது என்கிறார். மேலும் சொல்கையில், இந்த மந்த்ரத்துக்கு ஸமமானது நான்கு வேதங்களிலும் ஏதும் இல்லை என்றே கூறுகிறார். ஒருவன் வேத அத்யயனம் செய்ய முடியாவிடினும், தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்ய இயலாவிடினும், காயத்ரி ஜபத்தை விடாது செய்வானாகில், அவனுக்கு
எவ்வித இடையூறும் இல்லாது நிர்பயமாக வாழ்வான் என்கிறார். எத்தனை முறை ஜபம் செய்ய வேண்டும் என்பதையும் விச்வாமித்ரர் சொல்லியிருக்கிறார். அதாவது, உயர்ந்த பக்ஷமாக ஆயிரத்து எட்டு முறையும், மத்யமமாக நூற்றெட்டு முறையும், அதம பக்ஷமாக பத்து முறையும்செய்ய வேண்டும் என்கிறார். இதையே பரத்வாஜர் சொல்லுகையில் அதமமாக இருபத்து எட்டு முறை ஜபம் செய்ய வேண்டும் என்கிறார். இந்த அதம பக்ஷம் என்பது ஆசொளச காலம் மட்டுமே!. மற்ற நேரங்களில் மத்யமமாகவாவது செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.


காயத்ரி மந்த்ரம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. அவை, ஏகப்ரணவ ஸஹித காயத்ரி, ப்ரணவ ஸம்புடித காயத்ரி, ஷடோங்கார காயத்ரி என்பதாம். இவற்றில் பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன் ஆகியோருக்கு ஏகப்ரணவ காயத்ரியும், ஸம்புட காயத்ரி வானப்ரஸ்தர்களுக்கும், யதி ஸ்ரேஷ்டர்களுக்கு ஷடோங்கார காயத்ரியும் சொல்லப்பட்டிருக்கிறது. இம்மூன்றுக்குமான வித்யாசங்கள் இங்கே தேவையில்லை, அவை குருமூலமாக அறியவேண்டியது. ஜபம் செய்யும் வேளைக்கு ஏற்றவாறு காயத்ரி தேவி பெயராலும், உருவத்தாலும் வேறுபடுவதாகச் சொல்லியிருக்கிறார் யஜ்ஞவல்க்யர். ப்ராத காலத்தில் காயத்ரியாகவும், மாத்யான காலத்தில் ஸாவித்ரியாகவும், ஸாயங்காலத்தில் சரஸ்வதியாகவும் த்யானிக்க வேண்டும். இந்த மூன்று ரூபங்களும் ப்ரம்ஹ, ருத்ர, விஷ்ணு ரூபமானதாகச் சொல்லி அவ்வாறே த்யானிக்க வேண்டும் என்கிறார்.

மேலும் யஜ்ஞவல்க்யர் இது பற்றிச் சொல்லுகையில், கிருஹத்தில் ஜபம் செய்கையில் என்ன பலனோ அதை விட இருமடங்கான பலன் நதி போன்ற தீர்த்தகரையில் செய்கையில் கிடைப்பதாகவும், மாட்டுக் கொட்டிலில் செய்கையில் பத்து மடங்காகவும், அக்னி சாலையில் செய்கையில் நூறு மடங்காகவும், ஆலயங்களில், ஸ்ரீ விஷ்ணு ஸந்நிதியில் கோடிக்கணக்கான மடங்கும் அதிகரிக்கும் என்கிறார். ஜபம் செய்யும் முறை பற்றி வியாசர் குறிப்பிடுகையில், மந்த்ரத்தை பாதம், பாதமாக பிரித்து ஜபிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாது ஜபம் செய்கிறவனுக்கு ரெளரவம் அன்னும் கொடிய நரகத்தை அடைய வேண்டியதிருக்கும் என்கிறார். மூன்று பாதங்களாகப் பிரித்து ஜபம் செய்பவனுக்கு ப்ரம்ம ஹத்தி முதலான அனைத்துப் பாப கூட்டங்களும் நீங்குவதாகச் சொல்லியிருக்கிறார். இவ்வாறு பாதங்கள் பிரிப்பதைக் கொண்டு, இந்த மந்திரம் அஷ்டாக்ஷர காயத்ரி, சதுர்விம்சத்யாக்ஷர காயத்ரி என்று இருவகை சொல்லப்படுகிறது, இவையும் குருவின் மூலமாக அறியவேண்டியதே!.

காயத்ரி மட்டுமல்லாது, மற்ற எந்த மந்த்ரமானாலும் ஜபம் செய்யும் விதம் பற்றிச் சொல்லுகையில், மூன்றுவிதமாகச் சொல்லுகிறார்கள். வாசிகம், உபாம்சு, மானஸம் என்பவை அந்த மூன்று விதங்கள். இவற்றில் வாசிகம் என்பது மந்த்ரத்தை வாய்விட்டு, பிறருக்குக் கேட்குமளவில் சொல்வது, சப்தமில்லாது, உதடுகளை அசைத்தவாறு சொல்வது உபாம்சு, உரக்கச் சொல்லாமல், உதடுகளும் அசையாது, மனதளவில் மந்த்ரத்தைச் சொல்லுவது மானஸம். இவற்றில் மானஸம் உத்தமம், உபாம்சு மத்யமம், வாசிகம் அதமம்.

வியாஸர் ஜப அனுஷ்ட்டானத்தினை விவரிக்கையில் காலையில் ஜபம் செய்கையில் இரு கைகளையும் மூக்கிற்கு நேராகவும், மாத்யான காலத்தில் ஹ்ருதயத்திற்கு நேராகவும், ஸாயங்காலத்தில் தொப்புளுக்கு நேராகவும் கைகள் இரண்டையும் வைத்துக் கொண்டு சோம்பலின்றி ஜபம் செய்ய வேண்டும் என்கிறார்.ஆசாரம், மெளனம், நிலையான மனநிலை ஆகியவற்றுடன் மந்த்ரார்த்ததை நினைத்தவாறு ஜபம் செய்ய வேண்டும். ஜபம் செய்கையில் கனைத்தல், கொட்டாவி விடுதல், தூக்கம், சோம்பல், பசி, ஆகியவை கூடாது.



ஜபத்தின் மத்தியில் ஆசார்யரோ, அல்லது வேறு பாகவதோத்தமர்களோ வந்தால் ஜபத்தை நிறுத்தி அவர்களுக்கு பதிலளித்தல் அவசியம், அவர்களை வழியனுப்பிய பின்னர் ஜபத்தைத் தொடர வேண்டும்.

மேற்கூறியவை தவிர சில-பல நியமங்கள் குரு முகமாகச் சொல்லப்பட்டிருக்கலாம், அவற்றை முதலாகவும், மேலே சொன்னவற்றையும் கவனத்துடன் மேற்கொண்டு காயத்ரி ஜபத்தைச் செய்வோம்.

அனுதினமும் சந்த்யாவந்தனம், காயத்ரி ஜபம் செய்பவர்களுக்கும், குறிப்பாக திவாண்ணா மற்றும் அவருடன் இணைந்து ஒவ்வொரு வருஷமும் லக்ஷ ஆவர்த்திக்கும் மேலாக காயத்ரி ஜபம் செய்யும் பெரியோர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

Friday, August 5, 2011

ரஹோயாக-க்ரமாராத்யா, ரஹஸ்தர்பண தர்பிதா, ஸாக்ஷிவர்ஜிதா


நவாவரண பூஜை மற்றும் இவற்றையொட்டிய மந்திர ஜபங்கள் போன்றவை மோக்ஷ சாம்ராஜ்யத்தை அருளுவன. இந்த மார்க்கமானது மிக ரஹஸ்யமாகச் செய்யப்படுவது. இந்த மார்க்கத்திலேயே பல விதங்கள் இருக்கிறது., இவை அவரவர் குலாசாரம், உபதேசிக்கும் குருவின் மார்க்கம் போன்றவற்றையொட்டி வருவது. உதாரணமாக காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி சன்னதியில் செய்கிற பூஜைமுறைகளும், மற்ற கோவில் மற்றும் இல்லங்களில் செய்கிற ஸ்ரீசக்ர பூஜை முறைகளுக்கும் வேறுபாடு உண்டு. இதே போன்று, ஸன்யாசிகள் மற்றும் க்ருஹஸ்தர்களது ஸ்ரீ சக்ர பூஜை முறைகளில் வேறுபாடு உண்டு. இந்த பூஜை முறைகளை என் போன்ற சாதாரணர்கள் பார்க்கும் போது எவ்வித வித்யாசங்களும் தெரியாது. இவ்வாறு வித்யாசங்களை அறிய முடியாத வகையில் அம்பிகையை ரஹஸ்யமாக ஆராதிப்பதால் ரஹோயாகக்ரமாராத்யா என்கிறார்கள் வசின் தேவதைகள். இந்த நாமத்தை, ரஹோயாக + க்ரமாராத்யா என்று பிரிக்க வேண்டும். ரஹோயாகம் என்றால் ரஹஸ்யமாகச் செய்யப்படும் யாகம் என்றும் க்ரமாராத்யா என்றால் குறிப்பிட்ட க்ரமத்தைக் கொண்டு ஆராதிப்பவள் என்றும் பொருள். ரஹஸ்யமான யாகக் க்ரமத்தால் வழிபடப்படுபவள் என்பது பொருள்.

யோக மார்க்கத்தில் குண்டலி சக்தியை சஹஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று அங்கே பரமசிவத்துடன் சேர்த்து உபாசனை செய்வது என்பது ஏகாந்தமாக , ரஹஸ்யமாகச் செய்யப்படும் ஆராதனை. இதையே செளந்தர்ய லஹரியில் ஆசார்யார், 'ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே' என்று கூறுகிறார்.

ரஹஸ்யமான முறையில் ஜப, யோக முறைகள் செய்தாலும், அவற்றின் புரச்சரணமாக தர்பணம் செய்யவேண்டும். இந்த தர்பணமும் ஆராதனையே!. தர்பணம் என்ற சொல் நமக்குத் தெரிந்ததே. த்ருப்தி தரும் கர்மாவே தர்பணம். அம்பிகைக்குத் த்ருப்தி தரும் ரஹஸ்ய தர்பணத்தால் வழிபட்டு அவளை த்ருப்தி செய்தல் என்பதே ரஹஸ்தர்பண தர்பிதா. மந்த்ரத்தின் பொருளை அறிந்து சாதகம் செய்வதே அம்பிகையை த்ருப்தி செய்யும். இவ்வாறு பொருளை அறிந்து செய்யும் பிரயோகத்தையும் ரஹஸ்தர்பணம் என்கிறார்கள் பெரியோர். சில நேரங்களில் குலாசார முறையில் முதலில் மந்த்ர ஜபம் போன்றவை முதலில் நடந்தாலும், பின்னர் ரஹஸ்யமாக மந்த்த்ரங்களின் பொருள் கூறப்படுகிறது. இவ்வாறு பொருள் அறிந்த பின்னர் செய்யப்படுவது அம்பிகைக்கு மிகுந்த த்ருப்தியைத் தருவது, இதுவே 'ரஹஸ்தர்பண தர்பிதா'. மேற்கூறியவாறு, ரஹோகக் க்ரமத்திலும், ரஹஸ்யதர்பணங்களிலும் வழிபாடு செய்ப்யும் போது அம்பிகை உடனே அனுக்ரஹம் செய்கிறாளாம், ஆகவே அவளை 'ஸத்ய: ப்ரஸதினி' என்கிறார்கள்.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஆரம்பமே 'விச்வம் விஷ்ணும் வஷட்காரோ' என்று ஆரம்பிக்கிறது. ஸகல உலகங்களிலும் நடக்கும் செயல்களுக்கும் அம்பிகை சாக்ஷியாக இருக்கிறாள் என்பதால் அவளை 'விச்வஸாக்ஷிணீ' என்கிறார்கள் வாக்தேவதைகள். விச்வம் என்ற பதத்திற்கு ஜகத், ஸகலம்/எல்லாமும் என்று பொருள் சொல்லலாம். இப்படி எல்லாச் செயல்களுக்கும் சாக்ஷியாக இருப்பவளுக்கு எந்த சாக்ஷியும் கிடையாது. அவரவர் அனுபவத்தால் மட்டுமே அறியப்படுபவள் இவள். ஆகவே இவளை 'ஸாக்ஷிவர்ஜிதா', அதாவது தனக்கு சாக்ஷி ஏதும் இல்லாதவள் என்ற பதத்தில் கூறப்படுகிறாள்.

Monday, August 1, 2011

ஸ்ரீவத்ஸம் -1 [ப்ருகு / பார்கவர்]


கோத்ரம் ப்ரவரம் ஓர் அறிமுகம் என்னும் பதிவின் தொடர்ச்சியாக இந்த இடுகையில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தின் மூல ரிஷிகள் பற்றி ஒவ்வொருவராகப் பார்க்கலாம். முதலில் பார்கவர் எனப்படும் ப்ருகு.

'மஹரிஷீணாம் ப்ருகுரஹம்' [மஹரிஷிகளில் நான் ப்ருகுவாக இருக்கிறேன்] என்று பகவான் ஸ்ரீக்ருஷ்ணரால் பகவத் கீதையில் சொல்லப்பட்ட ப்ருகு [பார்கவர்] மஹரிஷிகள் ஸ்ரீவத்ஸ கோத்ரத்து ரிஷிகளில் முதலானவர்.இவரது பிறப்பு பற்றி வேதத்தில் இருவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. அவை:

1. இவர் பிரபஞ்ச ஸ்ருஷ்டியின் போது பிரம்மாவின் தோலில் இருந்து வந்தவர்
2. ஹோமத்தில் அக்னி ஜ்வாலையில் இருந்து தோன்றியவர். [ஹோமத்தின் போது ஜ்வாலை தணிந்த பின்னர் இருக்கும் நெருப்புத் தணல் அங்கீரஸ மஹரிஷி; தணல் சாந்தமான போது அத்ரி மஹரிஷி]

அக்னியிலிருந்து பிறந்ததால் இவர் அக்னிக்குச் சகோதரன் என்றும் கூறப்பட்டிருக்கிறார். வேத காலத்தில் அக்னி நீரினுள் ஒளிந்திருந்த்தாகவும், மஹரிஷி ப்ருகு அக்னியை நீரின் வெளியே கொண்டுவந்ததாகவும் சொல்லியிருக்கிதாகத் தெரிகிறது.

ப்ருகுவிற்கு பல மனைவிகள், அவற்றில் ஒருவரான க்யாதி என்னும் ரிஷி பத்னிக்கு மகளாகப் பிறந்த காரணத்தால் மஹாலக்ஷ்மிக்கு 'பார்கவி' அதாவது பார்கவரின் புத்ரி என்ற பெயர் என்று சொல்லுகிறார்கள். ஸ்ரீய: பதி என்று மஹாவிஷ்ணுவைக் குறிப்பிடுவது இந்த பார்கவியானவள் மார்பினில் இருப்பதாலேயே. ப்ருகுவின் மகளாகப் பிறந்து பரந்தாமனை மணாளனாக அடைந்த்த காரணத்தால் அந்த லோக நாயகனுக்கே மாமனாராகிறார் ப்ருகு.

மஹரிஷி ப்ருகுவின் இன்னொரு மனையாள் பெயர் 'புலோமா' என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு சமயம் இவளை கவர்வதற்க்காக ஒரு ராக்ஷஸன் முயல்கிறான். இதனை அறிந்த மஹரிஷி அக்னியை தனது மனயாளான புலோமாவுக்குக் காவல் வைத்துவிட்டு நதிக்கரையோரம் அனுஷ்டானத்திற்குச் செல்லுகிறார். அச்சமயத்தில் ராக்ஷஸன் புலோமையை கவர, அக்னி தடுக்கிறான். அந்த ராக்ஷஸனோ, தானே புலோமையின் கணவனாக இருந்திருக்க வேண்டும் என்றும், சிறுவயதில் புலோமையின் பெற்றோர் ராக்ஷஸனை காட்டியே வளர்த்தனர் என்றும், தனது மனையாளாக வேண்டிய புலோமையை ப்ருகு கவர்ந்திருக்கிறார் என்று கூறி அக்னியிடத்திருந்து புலோத்தமையை கவர்ந்து செல்கிறான். இவ்வாறு கவர்ந்து செல்கையில் பத்து மாத கர்பிணியான புலோத்தமை பரசவமாகி பிரசவத்தில் தேஜஸ் மிகுந்த குழந்தை பிறக்கிறது. அந்த குழ்ந்தையின் தேஜஸே அந்த அசுரனை எரித்து விடுகிறது. அனுஷ்ட்டானம் முடிந்து வந்த மஹரிஷி நடந்ததை அறிந்து அக்னியின் மேல் கோபம் கொள்ளூகிறார். தான் இட்ட பணியைச் சரிவரச் செய்யாத காரணத்தால் அக்னியை ஸர்வ பக்ஷகனாகச் சபித்துவிட்டார். இந்த சாபத்தின் காரணமாகவே அக்னி எல்லாவற்றையும் எரிக்க முற்படுகிறதாகச் சொல்லுகிறார்கள்.


ப்ருகு என்பதற்கும் காயத்ரி மந்த்ரத்தில் வரும் "பர்க:" என்பதற்கும் ஒப்புமை உண்டு. சூர்யன் தனது தேஜஸால் ப்ரகாசத்தை தருபவன், ப்ருகு ப்ரம்ம தேஜஸால் ப்ரகாசிப்பவர். இவரால் பல நூல்கள் எழுதப்பட்டிருப்பதாகவும், ஆயுர் வேதத்திலும் இவர் சிறந்தவர் என்று கூறப்படுகிறது. பொருட்களை நீரால் சுத்தி செய்கிறோம். அந்த நீரைச் சுத்தி செய்வது மந்திரத்தால் சுத்தி செய்கிறோம். இவ்வாறு நீரை சுத்தி செய்யும் மந்த்ர த்ருஷ்ட்டாக்களில் ப்ருகுவும் ஒருவர். ஸ்ரீவத்ஸத்தைப் போலவே, இன்னும் 6 கோத்ரக்காரர்களுக்கு இவர் ரிஷி, ஆக இந்த 7 கோத்ரக்காரர்களுக்குமாக 'பார்க்கவகணத்தினர்' என்று ஒரு பெயர் உண்டு. அடுத்த பதிவில் நாம் ச்யவனரைப் பார்க்கலாம்.

Friday, July 29, 2011

புண்யகீர்த்தி; முக்தா; லீலா விக்ரஹ தாரிணீ; பக்தநிதி



தேவீ பாகவதம், செளந்தர்ய லஹரி போன்றவை அம்பிகையின் கீர்த்தியைச் சொல்வதாக இருக்கும் முக்கிய நூல்கள். இவற்றில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகங்களும் நமது நியாயமான விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடியதாக இருக்கிறதாலேயே ஒவ்வொரு ஸ்லோகங்களுக்கும் உரிய பலன்களைத் தனியாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இந்த ஸ்லோகங்களில் என்ன இருக்கிறது என்று பார்த்தோமானால் அவை அம்பிகையின் கீர்த்தியைப் செல்லுவதே. இந்தக் கீர்த்திகளைப் பாராயணம் செய்வதால் நமக்கு புண்யத்தை, முக்தியை அருளுபவள் என்பதாகத் தெரிகிறது. இவ்வாறு புண்யத்தை அருளும் கீர்த்தியுடையவள் புண்ய கீர்த்தி.


இன்றும் நாம் சர்வாலங்காரங்களுடன் இருக்கும் பெண்களை மஹாலக்ஷ்மி போல் இருக்கிறாள் என்றும் அம்பாளே நேரில் வந்தது போல இருக்கிறது என்றும் கூறுவதைப் பார்க்கிறோம், சில பெண்களைப் பார்த்தவுடன் கை கூப்பி வணங்குகிறோம், முக்தா என்றொரு நாமம், முக்தா எனறால் செளந்தர்ய ஸ்வரூபமானவள் என்று பொருள், இதே முக்தா என்னும் நாமத்திற்கு மூடன் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. முன்பு க்ஷயவினிர்முக்தா என்றொரு நாமத்தைப் பார்த்தோம், இந்த நாமத்தின் அடுத்ததாக வருவதே முக்தா. தொடராக இந்த இரண்டையும் அடுத்தடுத்துச் சொல்லுகையில் '(க்ஷயவினிர்முக்தா-முக்தா' என்கையில்), இந்த நாமத்தை "அமுக்தா" என்பதாகப் பிரித்துச் சொல்லுவது ஒருமுறை. இவ்வாறு அம்பிகையை வணங்காதவர்களை அமுக்தர்களாக, மூடர்களாகச் சொல்லுகிறார்கள் சில பெரியவர்கள்.

ஜனனம் என்று ஒன்று இருந்தால்தானே மரணம்?, அம்பிகையை அஜா, அதாவது ஜனனமற்றவள் என்று கூறுகிறது இன்னொரு நாமம். க்ஷயவினிர்முக்தா என்றால் மரணமில்லாதவள் என்றும் பொருள். அப்படியென்றால் பல சரீரங்களில் ஸதியாக, காளி,மாரி கெளமாரி போன்ற சப்தமாதர்களாக எல்லாம் தோன்றியிருக்கிறாளே என்றால், அது அவளது லீலைகள். மிகச் சுலபமாக பல லீலைகளைச் செய்வதற்கு ஏற்ப அவதாரங்கள் எடுக்கிறாள். இப்படி பல லீலா வினோதங்களுக்கு ஏற்ப அவதரிக்கிறாளே,அந்த மரணமில்லா மஹாசக்தி, அவளை லீலா விக்ரஹ தாரிணீ என்கிறார்கள் வசின் தேவதைகள். இந்த நாமத்தைப் பற்றி யோக வாசிஷ்ட்டத்தில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

உபாசகர்களுக்கு, பக்தர்களுக்கு இவளே சர்வ நிதியும், ஆகவேதான் இவளை பக்தநிதி என்கிறார்கள். இவள் பக்தர்களை மட்டுமல்லாது சகல ஜீவராசிகளுக்கும் வழிகாட்டியாக இருப்பதால் நியந்த்ரீ, அதாவது வழிகாட்டி. அகில உலகத்திற்கும் இவளே ஈச்வரி. நிகிலம் என்றால் பிரபஞ்சம் என்று பொருள். நிகிலேச்வரி என்பது பிரபஞ்சத்திற்கு ஈச்வரி என்பதாகச் சொல்வது.

Monday, July 25, 2011

கோத்ரம் & ப்ரவரம் - ஒர் அறிமுகம்......

சமீபத்தில் உபநயனம் செய்வித்த ஒரு சிறுவன் தனது பெற்றோரிடத்தில் ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் என்னிடம் கேட்கப்பட்டது. இது பலருக்கும் உபயோகம் ஆகும் என்று தோன்றியதால் அங்கு டைப் செய்ததை இங்கும் இடுகிறேன். முதலில் கேள்விக்கான பதில் பிறகு அறிமுகம்.


அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாதா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரவர் குல முதல்வர்கள் என்னும்படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.

அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.

சாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.

நம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.



"ரிஷி" என்ற சொல்லுக்கு 'பார்ப்பவர்' என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.


அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.

ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.

'அபிவாதயே' என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம், அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.



ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.

கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.

திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் 'இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.

இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;

1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது - திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.



2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது


3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.


4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.


5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.

எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;

1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்



2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.


3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.


4. தம்பதிகளில் பெண்க்ளுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.


5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்.