Tuesday, August 24, 2010

காயத்ரி ஜபம் : "ராமோ விக்ரஹவான் தர்ம:" - பகுதி -2


முன்னர் இங்கே ராமோ விக்ரஹவான் தர்ம" என்கிற தலைப்பில் ஒரு இடுகை இட்டேன். இதன் தொடர்பாக சில குறிப்புக்கள் எடுத்தாலும், அப்போது இத்தொடரை தொடரவில்லை. இன்று காயத்ரி ஜபத்தை முன்னிட்டு தொடர்கிறேன். இன்னொரு பகுதியும் இருக்கிறது. அதனை அடுத்த மாதத்தில் இட முயற்சிக்கிறேன்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ராமாவதாரத்திற்கு என்றும் சிறப்பு அதிகம் என்று சொல்வார்கள். மற்ற எல்லா அவதாரங்களிலும் இல்லாத சிறப்பாக இறைவன் மனிதனாகத் தோன்றி, இறைத்தன்மை ஏதும் காண்பிக்காமல் மனிதனாகவே வாழ்ந்து, நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து கண்பித்த அவதாரம். இந்த இடுகையில் ராமாவதாரத்தில் நித்யகர்மாவிற்கு, ஸந்த்யா உபாஸனைக்கு ராமபிரான் கொடுத்த முக்கியத்துவத்தை பார்க்கலாம்.

பால காண்டத்தில் விச்வாமித்ர மஹரிஷியின் யாகத்தைக் காக்க பயணம் செய்கிறார்கள். சரயூ நதியைக் கடந்தாயிற்று. இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் பிரயாணத்தைத் தொடர முடிவு செய்து ஓய்வு எடுக்கிறார்கள். காலை எழுந்தவுடன் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லுகையில், "ஸ்நாத்வா க்ருதோதகெள வீரெள ஜேபது: பரமம் ஜபம்" [பால காண்டம் ஸர்கம் 23] என்கிறார் வால்மிகி. அதாவது, குளித்து, அர்க்யம் அளித்து உயர்ந்த காயத்ரி ஜபத்தைச் செய்தார்களாம். காயத்ரி மந்திரத்தின் ரிஷியான விச்வாமித்ரர் அருகில் இருக்கையில் ராம-லக்ஷ்மணர்கள் காயத்ரியை ஜபித்தார்களாம். இவ்வாறு விச்வாமித்ரருடன் செல்கையில் வழியில் சந்தித்த பல தவசீலர்களும் சந்தியாவந்தனம் செய்தார்கள் என்பதை "யதார்ஹம் அஜபன் ஸந்த்யாம் ருஷயஸ்தே ஸமாஹிதா" என்று கூறுகிறார் வால்மிகி.

சித்ரகூடம் வந்து, விச்வாமித்ரர் யாகத்தை நடத்துகையில், இரவு முழுவதும் கண்விழித்து யாகத்திற்கு பங்கம் இல்லாது காப்பாற்றினாலும், விடியலில் "ப்ரபாதகாலே சோத்தாய பூர்வாம் ஸந்த்யா முபாஸ்ய ச" என்று கூறுவதன் மூலம், விடியலில் ராம லக்ஷ்மணர்கள் சந்தியாவந்தனம் செய்ததை பால காண்டம், 29ம் ஸர்க்கத்தில் கூறுகிறார். இவ்வாறு சூர்யனைக் காணாமல், கோணாமல், கண்டு கொண்டிருக்கும் நேரங்களில் விடாது ஸந்த்யாவந்தனம் செய்த ராமரை யாகம் முடிந்தவுடன் வானளாவப் புகழந்ததாக மட்டும் வால்மிகி சொல்லவில்லை. ராமரைப் புகழ்ந்த அந்த சந்த்யா காலத்தில் அவருடன் சேர்ந்து சந்த்யாவந்தனம் செய்தார் என்பதை, "ஸ ஹி ராமம் பிரசஸ்யைவம் தாப்யம் ஸந்த்யாம் உபாகமத்" என்று பால காண்டம், ஸர்க்கம் 30ல் சொல்லுகிறார்.

பாலகாண்டத்தில் யாகத்தைக் காப்பாற்றும் இடத்தில் மட்டும்தான் சந்த்யாவந்தனத்தை, காயத்ரி ஜபத்தைச் சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால், யாகம் முடிந்து, ஜனகபுரியை நோக்கிச் சொல்லும் போதும், "க்ருத்வா பூர்வாஹ்நிகம் க்ரியாம்" என்று ராமர் சொல்லுவதாக வருகிறது. இதன் பொருள் என்னவென்றால், காலை வேளையில் செய்ய வேண்டிய கர்மாக்களை எல்லாம் முடித்து நாங்கள் தயாராகிவிட்டோம் என்கிறார்.

அயோத்யா காண்டத்தில் ராமரை துயிலெழுப்பியதைச் சொல்லுகையில், துயிலெழுந்த ராமர் தனது ப்ராத ஸந்த்யையை முடித்த பின்னர் மக்களைக் கண்டதாகச் சொல்லும்படி, "பூர்வாம் ஸந்த்யாமுபாஸீனோ ஜ்ஜாப யதமானஸ:" என்று ஸர்க்கம் 6ல் சொல்லுகிறார். இதேபோல ராமன் காட்டுக்குச் செல்லுகையில், ஸாயங்கால சந்த்யாவந்தனம் செய்ததையும் சொல்லியிருக்கிறார் வால்மிகி. இதே போல பரதன் காட்டில் ராமரைக் காணும் போதும் அதிகாலையில் சந்த்யாவந்தனத்தை முடித்த பின்னரே ராமனைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்.

பின்னர் காட்டு வழி செல்லுகையில் அகஸ்தியர் ஆஸ்ரமத்தை நெருங்குகையில், "ராமஸ்ய அஸ்தம் கத: ஸந்த்யா காலோப்யவர்த்த, உபாஸ்ய பச்சிமாம் ஸந்த்யாம் ஸஹப்ராத்ய யதாவிதி" என்கிறார் ஆரண்ய காண்டத்தில். அதாவது அகஸ்தியரது இல்லத்தை நெருங்கிவிட்டதால் ஏதோ 10 காயத்ரி ஜபத்தைப் பண்ணி, தனது கர்மாவை முடிக்கவில்லையாம். 'யதாவிதி' என்பதாக, அதாவது விதிக்கப்பட்ட விதத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தார் என்று கூறுகிறார்.

இதே ஆரண்ய காண்டத்தில், இன்னொரு இடத்தில், கிழக்கில் உதயமாகும் சூர்யனை வணங்கி, கோதாவரி தீர்த்தக் கரையில் முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும் வழிபாடு [ப்ரம்ஹ யக்ஞம்] செய்ததாகச் சொல்லியிருக்கிறார்.

போர்க்காலத்தில் ராமர் ஸந்த்யாவந்தனம் செய்யாது விட்டிருக்கலாம் என்று நினைக்கக் கூடும், அப்படி நினைத்தால் அது தவறு. ஹனுமன் ஸீதாதேவியைக் கண்டு, சூடாமணியைக் கொண்டு வந்த நேரத்தில், தான் எப்போது ஸீதையக் காண்போமோ என்று தவித்த நேரத்திலும் ராமர் தனது ஸந்த்யாவந்தனம் போன்றவற்றைக் காலம் தவறாது செய்ததாக யுத்த காண்டத்தில் சொல்லுகிறார் வால்மிகி.

இப்படி தனது சிறுவயது முதலாக, ச்ரம-திசையிலும் (மனையாள் இல்லாத வாழ்விலும், போர் முனையிலும்) கூட வழுவாது ஸந்த்யாவந்தனம் செய்த காரணத்திலேயே, "ராமனைப் போல் வாழ வேண்டும்" என்று சொன்னார்கள் நம் பெரியவர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. "ராமோ விக்ரஹவான் தர்ம" என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பது புரிகிறதல்லவா?.

நாமும், ஸந்த்யாவந்தனத்தை விடாது, விதிப்படி செய்வோம். நாளை ஒரு நாளாவது ஸஹஸ்ர ஆவர்த்தி காயத்ரி ஜபத்தினைச் செய்வோம்.

Thursday, August 5, 2010

க்ஷராக்ஷராத்மிகா, க்ஷோபிணீ , ஸூக்ஷ்மரூபிணீ



அம்பிகை நிறை குறைகளற்றவள் என்பதை க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா என்ற நாமத்தின் மூலமாகப் பார்த்தோம். இதைப் போலவே இன்னொரு நாமம், "க்ஷயவினிர்முக்தா". க்ஷயம் என்றால் க்ருஹம்/இல்லம் என்று ஒரு பொருள் இருக்கிறது. அதாவது க்ருஹஸ்த ஆச்ரமத்தில் இருக்கும் உபாசகர்களுக்கும் அன்னை முக்தியை அளிப்பவள் என்பது இதன் பொருள். முமுக்ஷுக்கள் இல்லறத்தை விட்டு விலகியிருந்து முக்தியை அடைகிறார்களென்றால், இல்லறத்தில் இருப்பவ்ர்களுக்கும் அம்பிகை முக்தியை அருள்கிறாள் என்று அவளது உபாசனா மார்க்கத்துப் பலனைச் சொல்கிறது இந்த நாமம். பாஸ்கரர் தமது சிவஸ்துதியிலும், துர்வாசர் செய்த தேவி மஹிம்ந-ஸ்தவத்திலும் இவ்வாறான செய்தியைச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

சர்வலோகங்களிலும் இருக்கும் அழியக்கூடிய மற்றும் அழிவில்லாத பொருட்கள் எல்லாவற்றின் ஸ்வரூபமாகவும் அம்பிகை இருக்கிறாள் என்பதே "க்ஷராக்ஷராத்மிகா". அழிவுக்கு உட்படும் எல்லாவற்றையும் க்ஷரம் என்றும் பரப்ரம்ஹத்தை அக்ஷரம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இப்படி க்ஷரம், அக்ஷரம் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆத்மிகாவாக இருப்பவள் அம்பிகை. இது போன்ற நாமம் ஒன்று ஸ்ரீலலிதா த்ரிசதியிலும் இருக்கிறது. அந்த நாமம், "ஏகானேகாக்ஷராக்ருதி:" என்பது. எண்ணிக்கையற்ற அக்ஷரங்களை ஸ்வரூபமாக உடையவள் என்று சொல்லலாம். இதே பொருள் விஷ்ணு புராணம் மற்றும், கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

இப்படி அழிவுள்ள, அழிவற்ற சகலமுமாக இருக்கும் அம்பிகையே ஜகத் சிருஷ்டி நடக்க வேண்டிய காலத்தில் பரப்ராம்ஹமான ஈச்வரனுடைய மனதில் க்ஷோபத்தை (ஒரு வித உணர்ச்சியை) உருவாக்குகிறாளாம். இவ்வாறு க்ஷோபத்தை உருவாக்குவதால் அவளுக்கு "க்ஷோபிணீ" என்ற நாமத்தால் வணங்குகிறார்கள் வாக்தேவிகள். ப்ரக்ருதி ரூபமான அம்பாள் சிருஷ்டி செய்ய வேண்டிய நேரத்தில் ஒருவித உணர்வை ப்ரம்ஹத்திற்கு உருவாக்கி சிருஷ்டி நடக்கச் செய்கிறாள் என்பது இங்கு சொல்லப்படுகிறது. ப்ரம்ஹம் நிச்சலனமானது, சக்தியில்லையேல் சிவமும் சவமே போன்ற வாக்கியங்கள் இங்கு நினைவிலிருத்திக் கொள்ளவேண்டியவை.

வராஹ புராணத்தில் வரும் ஒரு செய்தியையும் இங்கு சொல்லப்படுகிறது. அம்பிகை வைஷ்ணவியாக தபஸ் செய்த காலத்தில் அவளுக்கு ஒருவித கலக்கம் உண்டானதாம். அந்த கலக்கத்தின் காரணமாக கோடிக் கணக்கில் அழகிய யுவதிகள் உருவானார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, அம்பிகையின் சலனம்/கலக்கம் என்பது சிருஷ்டிக்குக் காரணம் என்பதாகத் தெரிகிறது.

சகலமுமான அம்பிகையை "ஸூக்ஷ்ம-ரூபிணீ" என்கிறார்கள். அதாவது ப்ரக்ருதியில் இருக்கும் எல்லாவற்றிலும் ஸூக்ஷ்ம ரூபத்தில், எளிதில் அறியமுடியாதவகையில் இருப்பவள் என்பது நேரடிப் பொருள். ஸுக்ஷ்மம் என்று ஒருவிதமான ஹோமத்தைச் சொல்வதாகத் தெரிகிறது. அவ்வகை ஹோமத்தின் ரூபமாக இருப்பவள் அம்பிகை என்றும் கூறுகிறார்கள். இதைத் தவிர, அம்பிகையின் ஸ்தூல, ஸூக்ஷ்ம, பர ரூபங்களில் இந்த நாமம் ஸூக்ஷ்ம ரூபத்தைச் சொல்வதாகவும் சொல்லலாம்.

Tuesday, August 3, 2010

க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா, க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா



க்ஷேத்ரம் என்பது இறைவன் இருக்கும் ஊருக்கு, கிராமத்திற்குப் பெயர் என்பதை நாம் அறிவோம். காசி-க்ஷேத்ரம், காஞ்சி-க்ஷேத்ரம் என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கிறோம். தக்ஷப் ப்ரஜாபதியின் யாகத்தை அழித்த பிறகு அன்னையின் சரீரத்தை தனது தோளில் தாங்கி அலைந்ததாகவும், அப்போது பரமசிவனது துக்கத்தை மாற்ற யாருக்கும் ஏதும் தோன்றாது இருக்கையில், ஸதீ தேவியின் சரீரம் இருக்கும் வரையில் பரசிவனது துக்கதை மாற்ற இயலாது என்று உணர்ந்த மஹா-விஷ்ணு,தனது சக்ராயுதத்தால் ஸதீதேவியின் சரீரத்தை துண்டாக்குகிறார். அப்படி துண்டுகளான சரீர பாகங்கள் வீழ்ந்த இடம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு க்ஷேத்ரமாக, அம்பிகையின் பீடங்களாக ஆனது என்பர் பெரியோர். இந்த் க்ஷேத்ரங்களில் ஸ்வரூபமாக இருப்பவள் அம்பிகை என்பதே "க்ஷேத்ர ஸ்வரூபா".

க்ஷேத்ரம் என்பதற்கு ப்ரதிவீ போன்ற முப்பத்தாறு தத்வங்கள் அடங்கிய உடலையும் பொருள் சொல்லலாம். உடலில் இருக்கும் ஜீவனை க்ஷேத்ரக்ஞன் என்றும் புருஷன் என்றும் சொல்வது. இப்படி சகல் ஜீவராசிகளிலும் இருக்கும் பரமாத்மா ஸ்வரூபமே அம்பிகை என்றும் சொல்லலாம் என்கிறார்கள் பெரியோர். இப்படி க்ஷேத்ரக்ஞனாக இருக்கும் பரமாத்மாவின் பத்னீ என்பதால் அம்பிகையை "க்ஷேத்ரேசீ " என்று அடுத்த நாமத்தில் சொல்லிவிடுகிறார்கள். இப்படி க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் ஆகிய இருவரையும் காப்பவள் என்பதால் "க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினீ".

இப்படி க்ஷேத்ரக்ஞனான பரமாத்மாவின் பத்னி எப்படிப்பட்டவளென்றால், அவள், குறை-நிறை ஏதுமில்லாது இருக்கிறாள் என்கிறார்கள் "க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா" என்னும் நாமத்தில். "க்ஷயம்" என்றால் குறை, "வ்ருத்தி" என்றால் அதிகம். இந்த பாவங்கள் ஏதுமில்லாதவள் அம்பிகை என்பது சிறப்புத்தானே?.

இப்படி நிறை-குறைகளற்ற அம்பிகையை காக்கும் க்ஷேத்ர பாலனால் வணங்கப்படுபவள் என்பதே "க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா". யாகம் செய்யும் இடத்திற்கும் க்ஷேத்ரம் என்று பெயர். யாகங்களைக் காக்கும் இறைவனை க்ஷேத்ரபாலன் என்பார்கள். அப்படியான க்ஷேத்ரபாலனால் வணங்கப்படுபவள் அம்பிகை என்கிறார்கள். தாருகனை அழித்த தேவி, தனது கோபம் தணியாது இருக்கையில், ஈசன் சிறு பாலகனாக வந்து அவளது ஸ்தனங்கள் மூலமாக பானம் செய்து அவளது கோபத்தைத் தணித்தானாம். இப்படி அம்பிகைகயின் கோபத்தை அடக்கிய ஈசனுக்கு, க்ஷேத்ரபாலன் என்று பெயர். அன்னையினிடத்து தணியாத பக்தியுடையவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையெல்லாம் தகர்ப்பதால் இந்த க்ஷேத்ரபாலகன் விசேஷம். அப்படியான க்ஷேத்ர பாலனே வணங்கும் தேவி என்பது சிறப்பு.

Friday, July 30, 2010

சிரஸ்த்திதா, ஹ்ருதயஸ்த்தா, ரவிப்ரக்யா


பரப்ரம்ஹத்தை சிவசக்தி ஐக்ய ஸ்வரூபமாகச் சொல்வது வழக்கம். அதாவது அம்பிகை வேறு, பரமசிவன் வேறு அல்ல, இருவரும் ஒன்றே என்றே சொல்லுகிறது சாக்தம். இந்தப் பொருளைச் சொல்வதே "காமகோடிகா", அதாவது பரசிவனுடன் இணைந்தவள் என்பது பொருள். இவளைச் சூழ்ந்திருக்கும் பல கோடிக்கணக்கிலான லக்ஷ்மிதேவிகளால் சேவிக்கப்படுகிறாள் என்று சொல்லுவது "கடாக்ஷ கிங்கரீபூத கமலாகோடி ஸேவிதா" என்னும் அடுத்த நாமம்.

(கிம் கரோதி) என்ன செய்ய வேண்டும் என்று எஜமானனுடைய கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஸேவகனுக்கு கிங்கரன் என்று பெயர். அம்பிகையின் கடாக்ஷத்தால் அனுக்ரஹம் பெற்ற பக்தனை, கோடிக்கணக்கான ஸ்ரீதேவிகள் ஸேவிக்கக் காத்திருக்கிறார்கள் என்றும் பொருள் சொல்லுவதுண்டு. இந்த கோடிக்கணக்கான தேவிகள் அம்பிகையை வணங்கி, அவளது அருளாணைக்குக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

இப்படி சேவிக்கப்படும் அம்பிகை எங்கு, எப்படி இருக்கிறாளாம்?, அம்பிகையைச் சிரஸில் இருப்பவளாக "சிரஸ்த்திதா" என்று சொல்லுகிறார்கள் வாக்தேவிகள். தந்திர மார்க்கத்தில் குருவை சிரஸில் வைத்து த்யானிப்பது வழக்கம். சிரஸ்த்திதா என்பதன் மூலமாக அங்கே அவளே குருவாக இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள். அங்கு அவள் சந்திரனைப் போன்ற காந்தி/ஒளியுடன் இருக்கிறாளாம், இப்படிச் சொல்லுவது "சந்த்ர நிபா" என்னும் நாமம். அதாவது சஹஸ்ராரத்தில் அம்ருதத்தை வர்ஷிக்கும் சந்திரனது காந்தியாக அம்பிகையைச் சொல்லப்படுகிறது.

'ப்ரோவோர் மத்யே சஹஸ்ராக்ஷி' என்று சொல்வதை, அதாவது புருவ மத்தியில் சஹஸ்ர கலைகளுடன் இருப்பவள் என்னும் வாக்யத்தை நினைவுபடுத்தும் விதமாக நெற்றியில் இருப்பவள் என்னும் பொருளில் "பாலஸ்த்தா" என்கிறார்கள் அடுத்த நாமத்தில். இந்த இடத்தில் அம்பிகை எப்படி இருக்கிறாளென்பதாக அடுத்த நாமத்தில், "இந்த்ர-தனுஷ் ப்ரபா" என்கிறார்கள். அதாவது இந்திரனது தனுஷ் போன்று வளைந்த ப்ரபைகளுடன் இருக்கிறாளாம். அதாவது அவள் அர்த்த சந்திர ரூபத்தில் இருக்கிறாள் என்கிறார்கள்.

இறைவனை நாம் மனத்திலிருத்தி தியானம் செய்ய வேண்டும் என்பது பெரியோர் வாக்கு. அவ்வாறு த்யானம் செய்யப்படுபவள் என்பதே "ஹ்ருதயஸ்த்தா". உபநிஷதங்களை, ப்ரமேஸ்வர ஹ்ருதயம் என்பார்கள். அந்த பரமேஸ்வரனுடன் இரண்டறக் கலந்தவளாயிற்றே அம்பிகை, ஆகவே உபநிஷதங்களில் அந்தர்யாமியாக இருப்பவளை, ஹ்ருதயத்திலிருப்பவள் என்னும் நாமம் சொல்வதாகவும் கொள்ளலாம். ஹ்ருதயத்தில் ஸுர்யமண்டலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கு அம்பிகை இருப்பதை "ரவிப்ரக்யா" என்று கூறுகிறார்கள் அடுத்த நாமத்திலேயே!. இதன் பொருள், ஸுர்யனது ஒளி பொருந்தியவள் என்பதாகச் சொல்லப்படுகிறது.

மூலாதாரத்தில் அக்னியும், ஹ்ருதயத்தில் ஸுர்யனும், ப்ரம்ஹரந்திரம் என்னும் நெற்றியில் சந்திரனும் இருப்பதாக தந்திர சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இந்த மூன்றையும் ஸ்ரீவித்யையின் மூன்று கண்டங்களாகச் சொல்லி, அவற்றின் நடுவில் தீபமாக ஜ்வலிப்பவள் என்று சொல்வதே "த்ரிகோணாந்தர தீபிகா" என்னும் நாமம். இதையே இன்னொரு விதத்தில், மூலாதாரத்தில் இருக்கும் அக்னியின் சக்ரமான த்ரிகோணத்தின் நடுவில் இருப்பவள் என்றும் சொல்லுகிறார்கள்.

சிரஸ், நெற்றி, குண்டலினீ என்று யோக முத்ரைகளை நினைவுபடுத்தும் விதமாக இருக்கும் நாமங்களில் சிலவற்றை இன்று பார்க்கலாம். அம்பிகையை தந்திர சாஸ்திர விதிகளின் மூலமாக வழிபடுவது சாக்தர்கள் வழக்கம். இன்று கூறப்படும் நாமங்கள், அவற்றின் பொருள் எல்லாம் மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறேன். தகுந்த குருவிடத்து கற்கவேண்டியவை இவை. இவை தந்திர ராஜம் என்னும் நூலில் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லுவார் எனது குரு.

Tuesday, July 27, 2010

பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீ , ஸுதா தாராபி வர்ஷிணீ



ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், ஸதாசிவன் ஆகிய ஐவரை பஞ்ச ப்ரம்ஹா என்பார்கள். இந்த ஐவரும் தங்களுடைய சக்திகளுடன் இல்லாவிடில், செய்வதற்கு ஏதுமின்றி பிரேதம் போன்றிருப்பதாக லலிதோபாக்யானம் கூறுகிறது. இந்த ஐவரில், முதல் நால்வர் கால்களாகவும், ஸதாசிவன் பலகையாகவும் கொண்ட மஞ்சத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாளாம். இப்படி, சக்திகள் இல்லாத பஞ்சப்ரம்ஹாக்களினாலான மஞ்சத்தில் வீற்றிருக்கும் அவளை, "பஞ்சப்ரேதாஸனாஸீனா" என்கிறார்கள் வாக்தேவதைகள். பஞ்சப்ரம்ஹங்களினாலான மஞ்சம் என்பதால் பஞ்சப்ரம்ஹாசனம் என்றும் அதில் அமர்ந்திருக்கும் அம்பிகையை "பஞ்ச ப்ரம்ஹாஸந ஸ்திதா" என்றும் கூறுகிறார்கள். மஞ்சத்தின் பலகையாகச் சொல்லப்படும் ஸதாசிவன், தத்வங்களுக்கு எல்லாம் மஹத்தான தத்துவமாக இருக்கிறானாம்.

இந்த பஞ்ச ப்ரம்ஹாக்களை பஞ்ச ப்ரம்ஹங்கள் என்றும் கூறுவதுண்டு. பரப்ரம்ஹத்தின் மாயா வினோதத்தால் பரப்ரம்ஹத்தின் ஐந்து தோற்றங்கள் போல இவர்கள் தோன்றுவதால் இவர்களை இப்படிக் கூறுகிறார்கள். இந்தக் கருத்தைக் கூறுவதே "பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீ" என்னும் நாமம். இந்த நாமத்திற்கு பெரியோர்கள் பல விதத்தில் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் பார்த்திடலாமா?

பரசிவனுடைய பஞ்ச முகங்களாகிய ஈசானன், தத்புருஷன், வாம தேவ, அகோர, ஸத்யோஜாதன் ஆகிய ஐவரையும் பஞ்சப்ரம்ஹாக்கள் என்று கூறி, அவர்களது தோற்றத்தில் இருப்பதும் அம்பிகையே என்பர். இதே போல ஸ்பர்சம், சப்தம், ரூபம், ரஸம், கந்தம் ஆகியவற்றை ப்ரம்ஹ ஸ்வரூபமாகச் சொல்வதுண்டு. இவற்றிலிருந்தே பஞ்சபூதங்களான ப்ருத்வீ, அப்பு, வாயு, தேஜஸ் போன்றவைகள் தோன்றுவதாகவும், இந்த ரூபங்கள் எல்லாம் அம்பிகையின் ரூபங்களே என்று கூறுகிறார்கள்.

இப்படி பஞ்சப்ரம்ஹாஸனத்தில் இருப்பவளான அம்பிகையை இன்னொரு இடத்தில் கணக்கற்ற தளங்களை உடைய பத்மத்தின் மேல் எழுந்தருளியவளாகச் சொல்வதுதான் "ஸஹஸ்ராராம்புஜாரூடா" என்னும் நாமம். எண்ணிக்கையில் அடங்காத அளவு இதழ்களை/தளங்களை உடைய தாமரை என்பது சஹஸ்ராரத்தைக் குறிப்பது. அங்கு இருக்கிறாள் என்று கூறி, அந்த பத்மத்தின் நடுவில் இருக்கும் சந்த்ர மண்டலத்தில் இருந்து அம்ருதத்தை சகல நாடிகளிலும் பெருகச் செய்கிறாளாம், இதைக் குறிப்பதே "ஸுதா தாராபி வர்ஷிணீ". இந்த நாமத்தை "ஸுதா தாராபிவர்ஷிணீ என்றும் கூறலாம் என்கிறார்கள் பெரியோர்.

Friday, July 23, 2010

ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்த்தா, ஸ்ரீமன் நகர நாயிகா


அம்பிகையின் வாசஸ்தலத்தை ஸுமேரு அதாவது என்பது மேருமலை என்பர். அந்த மேரு பர்வதத்தின் நடுவில்/உச்சியில் மங்களமாக இருப்பவள் என்பதே "ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்த்தா". இந்த மேரு மலை எங்கே, எப்படி இருக்கிறது, யாரெல்லாம் இம்மலையில் இருக்கிறார்கள் என்பதை, துர்வாசர் தனது லலிதா ஸ்தவ ரத்னம் என்ற க்ரந்தத்தில் சொல்லியிருக்கிறார், அதைக் கொஞ்சம் பார்க்கலாம். மேரு மலையானது கைலாஸத்திற்கும் அப்பால் இருப்பதாகவும், இது முழுவதும் ஸ்வர்ண மயமானது என்று கூறுகிறார். இம்மலைக்கு நான்கு உச்சிகள் இருப்பதாகபும் இதன் மூன்று உச்சிகளில் ப்ரம்ஹ, விஷ்ணு ருத்ரர்கள் வாசம் செய்வதாகவும், நான்காவது உச்சியில் நானூறு யோஜனை உயரத்தில் இருக்கும் நகரத்தில் அம்பிகை இருப்பதாகச் சொல்கிறார்.

அம்பிகை வசிக்கும் நகரத்தின் பெயரே ஸ்ரீமன் நகரம், இதைச் சொல்லும்போது 'ஸ்ரீமன் நகர நாயிகா' என்கிறார்கள் வாக் தேவதைகள், அதாவது லக்ஷ்மீகரமான நகரத்தின் நாயகி என்று பொருள் சொல்லலாம். ஸ்ரீவித்யா நகரம் என்பதையே இப்படிச் சொல்லுவதாகச் சொல்கிறார்கள் பெரியோர். இந்த நகரமானது இரண்டு இடங்களில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1. லலிதா ஸ்தா ரத்னில் சொன்னது போல, ஸுமேரு மலையில்; 2. எல்லா பிரம்மாண்டங்களுக்கும் வெளியில், ஸுதா சமுத்ரத்தின் மத்தியில் இருக்கும் மணித்விபத்தில் இருப்பதாக ருத்ரயாமளம் எனும் நூலில் சொல்லபடுகிறது. ஸ்ரீமன் நகரம் என்பதே ஸ்ரீசக்ரந்தான் என்பது தீக்ஷதரது உரையில் சொல்லப்பட்டிருக்கீறது.

ஸ்ரீமன் நகரத்தில் இருக்கும் நாயகி, ஸ்ரீசக்ர நாயகியின் இல்லத்திற்கு சிந்தாமணி-க்ருஹம் என்று பெயர். மஹா-பாரதத்தில் சிந்தாமணியின் சிறப்பினை நாம் அறிவோம். சிந்தாமணி ரத்னத்திற்கு ஆகர்ஷண சக்தியும், கேட்டதைக் கொடுக்கும் சக்தியும் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. அது போன்ற சிந்தாமணி ரத்னங்களால் நிர்மாணிக்கப்பட்ட இல்லமாம் அது. ஆகவே அவள் "சிந்தாமணி க்ருஹஸ்த்தா". அதாவது சிந்தாமணிகளால் நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் வசிப்பவள் என்று பொருள். மந்திரார்த்தமாகப் பொருள் சொல்லுகையில், அம்பிகையின் மந்திரங்களே சிந்தாமணிகள் என்றும் அவற்றில் வாசம் செய்பவள் என்றும் பொருள் கூறுவார்கள் சாக்த நெறியாளர்கள்.


சிந்தாமணி க்ருஹத்தில் இருக்கும், பெரிய தாமரைப் புஷ்பங்கள் நிறைந்த காட்டில் அம்பிகை இருக்கிறாள் என்கிறார்கள் "மஹா பத்மாடவீ ஸம்ஸ்த்தா" என்னும் அடுத்த நாமத்தில். க்ருஹத்தில் ஏது குளம், தாமரைக் காடு?. சாதகம் செய்பவர்களது ஸஹஸ்ராரம் என்னும் இடமான புருவ மத்தியில் இருக்கிறாள் என்பதே பொருள். சாதனையாளர்களது சஹஸ்ராரத்தில் என்பதையே தாமரைகள் நிறைந்த காடு என்கிறார்கள். ருத்ரயாமளத்தில் இந்த பத்மாடவீ யானது, ஸுதா சமுத்ரத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.இதனை அடுத்த நாமத்தின் மூலம் இன்னும் தெளிவாக அறியலாம்.

யோக சாஸ்திரத்தில் ஸஹஸ்ராரத்தை அடையும் குண்டலினீயானது அம்ருத தாரையில் நனையும் என்றும், அதுவே சிவ-சக்தி ஐக்ய பாவத்தை உணர்த்துவது என்று கூறுவார்கள். ஸஹஸ்ராரம் என்பது ஆயிரம் இதழ்கள் கொண்ட பத்மம், அங்கு சந்த்ர கலை அம்ருதமாக வர்ஷிக்கும் இடத்தில் அம்பிகை இருக்கிறாள் என்பதை, "ஸுதா ஸாகர மத்யஸ்தா" என்கிறார்கள். இந்த சஹஸ்ரதள பத்மத்தில் வசிப்பவள் என்பதை "ஸஹஸ்ரதள பத்மஸ்த்தா" என்னும் நாமமும் சொல்லுகிறது.

"யோவைதாம் ப்ரும்ஹணோ வேத அம்ருதேனோவ்ருதாம் புரிம்" என்று ச்ருதி வாக்கியமும், "பிந்துஸ்தானம் ஸுதாஸிந்து:" என்று ருத்ரயாமளமும் கூறுவது இந்த ஸுதா ஸாகரத்தையே. இதையே செளந்தர்ய லஹரியில், "ஸுதா ஸிந்தோர் மத்யே ஸுரவிடபிவாடீ பரிவ்ருதே" என்னும் ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார் ஆசார்யாள்.

Tuesday, July 20, 2010

பக்த ஸெளபாக்ய தாயினீ , பக்திப்ரியா, பக்திகம்யா, பக்திவச்யா


மனிதர்கள் அம்பிகையை பக்தியுடன் வழிபட்டால், அவளுக்கு வழிபடுபவர்களிடத்து ப்ரியம் ஏற்படுமாம், இதைச் சொல்வதே "பக்திப்ரியா" என்னும் நாமம். பக்தி என்பது முக்கியம், இதை இருவகையாகச் சொல்கிறார்கள். ஒன்று ஸாமான்ய பக்தி, அதாவது கெளண பக்தி என்பர், இன்னொன்று சித்தத்தில் என்றும் இறையைப் பற்றி இருப்பது. அதாவது அழிஞ்சில் மரத்து விதை எப்படி மரத்துடனேயே ஒட்டிக்கொள்ளுமோ அது போலவும், பதிவிரதைகள் தனது பதியுடன் இருப்பதையும், நதியானது ஸமுத்ரத்தையும் அடைவதையும் போல மனமானது பரமாத்மாவுடன் இணைவதையே பக்தி என்று பகவத் பாத சங்கரர் சிவானந்த லஹரியில் கூறியிருக்கிறார். இவ்வகையான பக்தியையே பக்தி ஸுத்ரமும் சொல்லியிருக்கீறது. ஸாமான்ய பக்தி என்பது ஸேவாரூபமானது. இதுவே ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம் போன்ற எட்டு விதமாக பாகவதத்தில் சொல்லப்படுவது.

இப்படி பக்தியுடன் உபாசித்தால் என்ன ஆகிறதாம்?, அம்பிகையே ப்ரத்யக்ஷம் ஆகிவிடுகிறாளாம். அதாவது பக்தி மார்க்கத்தால் அடையத்தக்கவள் என்பதே பொருள். ச்ருதியில் கூட, பரமாத்மாவை நேரடியாகப் பார்க்க இயலாவிடினும், பக்தி மூலமாக பரமாத்மாவின் ஸ்வரூபத்தை பார்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறதாகச் சொல்லுவார் எனது குரு. பக்தி மார்க்கத்தில் போனால் அவ்வழியில் அடையக்கூடிய அம்பிகையை 'பக்தி கம்யா' என்கிறார்கள்.

பக்தி என்பதற்கு 'லக்ஷணம்' என்று ஒரு பொருள் சொல்கிறார்கள். இதைக் கொண்டால், நேரடியாகப் பார்க்க முடியாவிடினும், அவளது ஸ்வரூபத்தை லக்ஷணங்களின் மூலமாக உணரலாம் என்கிறார்கள். லலிதா த்ரிசதியில் 'லக்ஷண கம்யா' என்று ஒரு நாமம், பரப்ரம்ஹமான அம்பிகையின் உண்மையான ரூபத்தைச் சொல்ல இயலாவிடினும், அதன் லக்ஷணங்களைச் சொல்வதாக இங்கு பொருள்.

கம்யா என்கிற பதத்திற்கு ப்ரத்யக்ஷமாதல், அடையப்படுகிறவள், அறியப்படுகிறவள் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. பக்தியால் ப்ரத்யக்ஷமாகும் அம்பிகையை, பக்தியால் அடையப்படுபவளை பக்திகம்யா என்று கூறுவது சரிதானே?. இப்படி, பக்தியின் மூலம் ப்ரத்யக்ஷமாகும் அம்பிகை , பக்திக்குக் கட்டுப்பட்ட்வள், அல்லது பக்திக்கு வசமாகுபவள் என்பதைச் சொல்லுவதுதான் "பக்திவச்யா" என்னும் நாமம். பக்தி செய்வது என்பதற்கு நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உதாரணம் கண்ணப்ப நாயனார். ஆசாரக் குறைவுகள் இருந்தாலும், கண்ணப்பர் தனது பக்தியில் நிறைவாக இருந்தமையால் அவருக்கு ஈசனது அனுக்ரஹம் கிடைத்தது. பக்தி என்றால் அது கண்ணப்பரது பக்தி போல இருப்பின், அம்பிகை நம்மிடத்தும் வசமாகிடுவாள் என்பதே இந்த நாமம் சொல்வது.

இப்படி நம்மிடத்து வசமாகும் அம்பிகை மங்கள ரூபமானவள் என்பதே 'பத்ர மூர்த்தி' என்னும் நாமம் சொல்லுவது. இவள், தனது பக்தர்களுக்கு மங்களத்தை அருள்வதால் 'பத்ரப்ரியா'. அதாவது மங்களங்களில் ப்ரியமுள்ளவளாக இருப்பதால், தன்னைத் துதிக்கும் ஜனங்களுக்கு மங்களங்களை அருள்கிறாள். இப்படி தனது பக்தர்களுக்கு சகல விதமான ஸெளபாக்யங்களும் அருளுகிறாள் என்பதாலேயே, அவள் "பக்த ஸெள்பாக்ய தாயினீ".

Monday, July 12, 2010

ஸுகாராத்யா,சிவாராத்யா, சுபகரி, சிவதூதீ, சிவமூர்த்தி



ஸுகாராத்யா என்றால் சுகமாக வழிபடத்தக்கவள் என்று பொருள். உபவாசம், ஆவரண பூஜை, ஜபம், நியாஸங்கள், தர்ப்பணம் மற்றும் பல புரச்சரணங்கள் ஏதுமில்லாமல் வழிபட்டாலும் அருளுபவள். உலகிற்கே மாதாவான அவளை, குழந்தைகள் எப்படி அழைத்தாலும் வந்தருள்வாள். பொங்கலிட்டுக் கூழ் வார்த்தாலும் சரி, சஹஸ்ர-சண்டி மஹாயாகம் செய்தாலும் சரி அவள் இரண்டுக்கும் இரங்குவாள். ஸுகமாக சகல ஆபரணங்களையும் அணிந்து அலங்கரித்துக் கொண்டு பூஜிக்கலாம். இவ்வாறு சுலபமாக தன்னை ஆராதிக்கும் வழிகளை தனது பிதாவான ஹிமவானுக்கு அம்பிகையே அருளியதாகச் சொல்லுகிறது கூர்மம்.

நியம நிர்பந்தகள் இல்லாத பிறவியாக இருப்பினும் அம்பிகை அவர்களது ஆராதனையில் மகிழ்ந்து எல்லா சுபங்களையும்/மங்களங்களையும் அருளுவதால் அவளை "சுபகரி" என்று அடுத்த நாமத்திலேயே சொல்லிவிடுகிறார்கள் வாக்தேவதைகள்.

சாமீப்யம், சாரூப்யம், மோக்ஷம் என்றெல்லாம் சொல்லப்படுபவையாகவும் அம்பிகையே இருக்கிறாள், மேலே கூறிய ஸுகாராத்யா என்றபடியாக எளிதில் வழிபடக்கூடியவளாகவும் இருக்கிறாள். மோக்ஷம் போன்றவற்றை சோபனம் என்கிறார்கள் பெரியோர். ஸுலபமாக பூஜிக்கத்தக்கவள், சோபனம் போன்றவற்றை அடையச் செய்பவள் என்பதே "சோபனா ஸுலபா கதி:" கதி என்றால் சென்றைடையக்கூடிய இடம் என்று பொருள். இந்த நாமத்தை மூன்று பதங்களாகப் பிரித்தால், சோபனாயை, ஸுலபாயை கதி என்று வரும். இந்த நாமத்தைச் சொல்லி அர்சிக்கையில் சோபனாயை-ஸுலபாயை கத்யை நம: என்று கூற வேண்டும்.


பிறருக்கு ஒரு செய்தியை கொண்டு சென்று சொல்பவனை தூதன் என்கிறோம். சிவனையே தூதுவனாக அனுப்பியவள் பராம்பிகை. அதனாலேயே அவளுக்கு "சிவதூதீ" என்று பெயர். சும்ப-நிசும்பர்களுடன் போரிடும் முன்பாக சிவனை தூதுவனாக அனுப்பியதாக தேவி பாகவதம் கூறுகிறது. அந்த நிகழ்வை குறிப்பிடுவதுதான் இந்த நாமம். பத்ம புராணத்திலும் இந்த நாமாவை அம்பாளுக்குச் சொல்லியிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.


சிவனால் ஆராதிக்கப்படுபவள் "சிவாராத்யா". அன்னையின் முதல் 12 பக்தர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் பரமசிவனே முதலாவதாகச் சொல்லப்படும். காஞ்சி க்ஷேத்திரத்தில் பரமசிவனே காமாக்ஷியை முதலில் பிரதிஷ்ட்டை செய்து, பிற்காலத்தில் துர்வாசராக வந்து அந்த க்ஷேத்திரத்திற்கான பூஜா கல்பத்தையும் அளித்ததாகச் சொல்வர். பரமசிவன் அம்பிகையை ஆராதித்தே அர்த்தநாரீச்வரனாக ஆகியதாக பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படுகிறது.


சிவனுக்கும் அம்பிகைக்குமான பேதத்தை போக்கும் நாமா "சிவமூர்த்தி". அதாவது சிவனாக வணங்கப்படுபவள் என்று பொருள். இதையே சிவம் என்றால் மங்களம் என்னும் பொருளால், இன்னொரு விதத்தில் மங்களமான மூர்த்த்ம் அவள் என்றும் கூறலாம். சிவ என்றால் மோக்ஷம் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் மோக்ஷத்தையே ரூபமாகக் கொண்டவள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

Thursday, July 8, 2010

நடேச்வரீ, நந்திவித்யா, முக்திரூபிணீ




ஈசனின் நடராஜ ஸ்வரூபத்தை நாம் நன்கறிவோம். அந்த நடராஜரின் அருகில் இருக்கும் அம்பிகையை சிவகாமி என்பதையும் அறிவோம், அவள் கையில் ஒரு மலரை வைத்தபடி ஈசனது நடனத்தில் ஆழ்ந்திருப்பாள். இந்த சிவகாமியை நினைவுபடுத்தும் ஒரு நாமமே "நடேச்வரீ", அதாவது நடேச்வரரின் பத்னீ. மதுரை போன்ற சில இடங்களில் அம்பிகையும், ஈசனுடன் நடனமாடும் சிலா ரூபங்களைக் காண்கிறோம். ஆக ஈசனுடன் நடமாடுவதாலும் அவள் நடேச்வரீ. இவளது உபாசகர்களில் சிறப்பான பன்னிருவரில் நந்திகேச்வரும் ஒருவர். நந்திகேச்வரரால் உபாசிக்கப்பட்ட முறைக்கு நந்தி வித்யை என்று பெயர். அப்படியான நந்திவித்யை மூலம் அடையப்படுபவள் "நந்தி வித்யா" என்று கூறுகிறார்கள் வாக்தேவதைகள்.

தன்னை உபாசிப்பவர்களுக்கு முக்தியைத் தருவதால் அவளை "முக்திதா" என்கிறார்கள்.கூர்ம புராணத்தில் "தஸ்மாத் விமுக்திமன்விச்சன் பார்வதீம் பரமேச்வரீம், ஆச்ரயேத் ஸர்வபூதானாம் ஆத்மபூதாம் சிவாத்மிகாம்" என்று கூறியிருக்கிறது. அதாவது சிவாத்மிகையான பார்வதீ முக்தியைத் தருகிறாள் என்பதான பொருள். அவித்யையிலிருந்து விடுபட்டு ஆத்மஸ்வரூபத்தில் அம்பாளிருப்பதைச் சொல்வதே "முக்திரூபிணீ" என்கிறார்கள். அதாவது முக்தி என்பதே அம்பிகையின் ரூபம் என்பது பொருள். இவள் ரம்பை முதலான அப்ஸர ஸ்த்ரீகளால் வணங்கப்பட்டவள் என்பதைக் குறிக்கும் நாமாவே "ரம்பாதி வந்திதா".

ஸம்ஸாரத்தில் உழலும் என்னை அம்பிகை கைவிட்டுவிடுவாளோ?, என்று பல நேரங்களில் பயம் வருகிறது. இப்படியான நேரங்களில் நான் மனதில் நினைத்துக் கொள்ளும் நாமம், "பவதாவ ஸுதாவ்ருஷ்டி:" என்பது. அதாவது ஸம்ஸாரமாகிற காட்டுத்தீக்கு அம்ருதவர்ஷமாக இருப்பவள் என்பது பொருள். அதாவது காட்டுத்தீ எப்படி பரவினாலும், அவற்றை மழை எப்படி அணைக்கிறதோ, அது போல ஸம்ஸாரமான காட்டுத்தீயை அணைப்பதற்கான அம்ருத மழை போன்றவளாக அம்பிகை இருக்கிறாளாம். இந்த நாமத்தை மூன்று பதங்ககளாக, அதாவது, பவதா, வஸுதா, வ்ருஷ்டி: என்று பிரித்துச் சொல்வதும் உண்டு. பவ என்றால் சிவன், வஸு என்பது ரத்னம், ஐச்வர்யம். தனது பக்தர்களுக்கு சிவ சாயுஜ்யத்தையும், ஐஸ்வர்யத்தையும் வர்ஷிப்பவள் என்பதாகவும் பொருள் சொல்வார்கள் பெரியோர்.

Monday, July 5, 2010

சிந்தனை செய் மனமே....ச்ரத்தை

காதில் கேள்விப்படும் கோவில்களுக்கெல்லாம் செல்கிறேன். தினமும் இத்தனை முறை மந்திர ஜபம் செய்கிறேன்,வருஷத்தில் ஒரு முறை பெரிய ரித்விக்குகளைக் கூப்பிட்டு சாஸ்திரத்தில் சொல்லிய விதவிதமான ஹோமங்களைச் செய்யவிக்கிறேன். தினமும் 2 மணிநேரம் பூஜை செய்கிறேன், ஆனாலும் இறைவன் எனது இன்னல்களைப் போக்கவில்லை, எனக்கு தரிசனம் தரவில்லை. இவ்வாறான சிந்தனை இன்று நம்மிடையே பலருக்கும் இருக்கிறது.

பல நேரங்களில் நமது வழிபாடுகள், உடல் வலிமைக்காகவும், செல்வச் செழிப்புக்காகவும் என்றே இருந்தாலும், சில நேரங்களில் பிறரை வருத்தவும் கூட இறையருளை நாடுவதும் நடக்கத்தான் செய்கிறது. இறையனுபூதியை விடுத்து வேறு சில காம்யார்த்தமான பலன்களை நோக்கிச் செய்யும் கர்மாக்களை தவறு என்கிறார்கள். கர்மாக்களைச் செய்ய மட்டுமே நமக்கு அதிகாரம், அதன் பலா-பலன்களை இறையிடத்தில் விட்டுவிடவேண்டும். நமக்கு எதைக் கொடுப்பது, எப்படிக் கொடுப்பது, எப்போது கொடுப்பது என்பதை அவனறிவான் என்கிற எண்ணத்தை மனதில் வேரூன்றச் செய்ய வேண்டும்.

சாஸ்திரங்கள் நமக்குச் சொல்லியிருப்பதைச் செய்கிறோம் என்பதிருக்கட்டும், அவ்வாறு செய்வது எதற்காக?, எப்படிச் செய்வது? என்பதில் கவனம் இருப்பதில்லை. இதன் காரணமாகவே இவ்வளவு செய்தும் இறையருளைப் பெறுவதில்லை என்றால் மிகையல்ல. அவரவர் செய்த கர்மாக்களுக்கு ஏற்ற பலன் இல்லை என்றால் சாஸ்திரத்தில் சொல்லப்படுவது பொய்யாகாது. பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக நமது பெரியவர்கள், செயல்படுத்தி, பலன்களை அனுபவித்து அதனையே தர்ம-சாஸ்திரமாக நமக்கு அளித்திருக்கிறார்கள். ஆகவே தர்ம சாஸ்திரம் பொய்க்காது. இங்குதான் கீதையில் பகவான் சொல்லியதை நினைவில் கொண்டு வரவேண்டும்.

அச்ரத்தையா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம்ச யத்
அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ

இதன் பொருள், சிரத்தையில்லாமல் செய்யும் கர்மா, பலன் தராது என்பதுதான். ஆக சாஸ்திரம் என்றும் பொய்க்காது, நாம் செய்யும் கர்மாக்களை ச்ரத்தையில்லாது, மற்றவர்களது பாராட்டுக்காகவும், சமூகத்தில் நமது பெருமையை பறைச்சாற்றுவதற்காகவும் மட்டுமே பூஜை-புனஸ்காரங்களை, நாம பாராயணத்தை, கர்மாக்களைச் செய்வது என்று இருப்பதால்தான் பலன் ஏதும் கிடைப்பதில்லை. இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். தக்ஷ-பிரஜாபதி மிகப் பெரிய யாகத்தைத்தான் செய்தான், ஆனால் அவனது அச்ரத்தை, அஹங்காரம் போன்றவை அவன் செய்த யாகத்தை முற்றிலும் தகர்த்ததை நாம் அறிவோம்.

பகவத்பாத சங்கரர், சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய ஸத்யபுத்யாவதாரணா, ஸா ஸ்ரத்தா கதிதா ஸத்பிஹி: என்று கூறுகிறார். அதாவது, சாஸ்திரத்திலும், குருவின் வாக்யத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் சிரத்தையுடன் செய்யும் காரியங்களே பலனைத்தரும் என்பது தான் அவர் சொல்லியிருப்பது. இதையேதான் கீதையிலும், "ஸ்ரத்தாவான் லபதே ஞானம்" என்கிறார் பரமாத்மா. அதாவது ச்ரத்தையுள்ளவனே ஞானம் பெறுகிறான் என்று பொருள். அதாவது குருவினிடத்தில் சிரத்தையுடன் உபதேசம் பெறுபவனே ஞானம் அடைவான் என்பது மறைபொருள்.

கைவல்ய உபநிஷத் என்னும் க்ருஷ்ண யஜுர் வேதத்தில் "ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாதவைஹி" என்று சொல்லியிருப்பதாகச் சொல்வர் பெரியோர். அடிப்படையாக ச்ரத்தையையும், அத்துடன் கூட பக்தி மற்றும் த்யானம் ஆகிய இரண்டையும் கலந்து பண்ணுவதே - த்யான யோகத்திலேயே பக்தி பாவத்தையும் கரைத்துப் பண்ணுவதே - முமுக்ஷுவாக இருப்பவன் முக்தியைப் பெறுவதற்கான ஹேது/உபாயம் என்று கூறியிருக்கிறார்கள். இதில் முக்யமாக நாம் பார்க்க வேண்டியது பக்தி, த்யானம் என்பதற்கெல்லாம் முதலாகச் சொல்லியிருக்கும் அடிப்படை விஷயமான 'ச்ரத்தை' என்பதே.

ஆக, நாம் பயணம் செய்வது கர்ம, பக்தி, ஞான யோகங்களில் எந்த வழியிலாக இருந்தாலும் அதற்கு அவசியமானது ச்ரத்தை. இப்படியான மிக அவசியமான விஷயத்தை மனதில் கொள்வோம், நாம் செய்யும் எல்லாவற்றையும் ச்ரத்தையுடன் செய்வோம், இறையருள் வேண்டுவோம்.

Saturday, July 3, 2010

மஹநீயா, தயா மூர்த்தி, ஆத்ம வித்யா. மஹா வித்யா


ஆத்மாவே ப்ரம்ஹம் என்று கூறும்படியான ஞானம் வரச்செய்பவள் பராசக்தி. ஆகவே அம்பிகையை ஞான ஸ்வரூபமானவள் எனலாம். இதைச் சொல்லும் நாமமே "ஆத்ம வித்யா". அத்வைத சித்தாந்தத்தை சூக்ஷ்மமாகச் சொல்லும் நாமம். இதையே ஆத்மாஷ்டாக்ஷர மந்த்ர ரூபிணி என்றும் கூறலாம் என்று கூறுகிறார் பாஸ்கரர். இப்படியான ஆத்மவித்யையே ப்ராதான்யமானவள் என்பதாகச் சொல்வதே "மஹா-வித்யா" என்னும் நாமம். 'மஹதீ'யாகவும், வித்யா ரூபிணியாகவும் இருக்கும் அம்பிகையை மஹா வித்யா என்பது பொருத்தம் தானே?. வன துர்கையை துதிக்க என்றே ஒரு வித்யை சொல்லப்பட்டிருக்கிறது, அதற்கான பெயர் மஹா வித்யை என்கிறார்கள் ஆன்றோர்.

வித்யை நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை, யக்ஞ-வித்யா (கர்மாக்களைப் பற்றியது), மஹாவித்யா (உபாசனையைப் பற்றியது), குஹ்ய-வித்யா (மந்த்ரவித்யை), ஆத்ம-வித்யா (ப்ரம்ஹ வித்யை) ஆகியவை. இந்த நான்கு வித்யைகளும் சேர்ந்ததே பஞ்சதசீ என்னும் "ஸ்ரீவித்யா".

இந்த நான்கு வித்யைகளும் அம்பிகையே என்பதை விஷ்ணு புராணத்திலும் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பஞ்சதசீ என்பது 15 அக்ஷரங்களைக் கொண்ட அம்பிகைக்கான மந்திரம். இதற்கும் அடுத்த நிலையே ஷோடசீ எனப்படும் மஹா மந்திரம், இதுவே மந்திரங்களில் மஹோன்னதமானது.இதன் உபதேசம் ஆகி, பின்னர் பூர்ணாபிஷேகம் செய்யப்பட்டால் மட்டுமே ஆவரண பூஜைகள் செய்ய தகுதி.இந்த மஹா ஷோடசி மந்திர வித்யையை, "ஸ்ரீ ஷோடசாக்ஷரீ வித்யா" என்கிறார்கள் வாக் தேவதைகள். இந்த மஹா ஷோடசியையு,ம் ஸ்ரீவித்யை என்று கூறுவார்கள்.

"மனு-சந்த்ர-குபேரச்ச லோபாமுத்ரா ச மன்மத:" என்று வரும் அம்பிகையின் முதல் பன்னிரு பக்தர்களில் மன்மதனுக்கும் இடமுண்டு. அவனால் வணங்கப்பட்ட முறையை அனநங்க வித்யா அல்லது காதி வித்யா என்று தனித்துக் கூறப்படும் அவன் சிறந்த பக்தர்களில் ஒருவன். இவ்வாறு மன்மதனால் வணங்கப்பட்ட தேவியைக் குறிக்கும் நாமமே, "காம சேவிதா" என்பது. காமனால் சேவிக்கப்பட்டவள் ஸ்ரீ ஷோடசீ என்பது பொருள்.

இப்படி ஸ்ரீவித்யாவாக இருப்பவள் தயை மிகுந்தவளாக இருப்பதால் அவளை "தயாமூர்த்தி" என்கிறார்கள். தயையே மூர்த்தியாகக் கொண்டவள் தானே நமது அம்பிகை, அவளை தயா ஸ்வரூபம், தயா மூர்த்தி என்பது சரியே!. இப்படியான தயா மூர்த்தியை எல்லோரும் பூஜிக்கத்தக்கவளாக இருப்பதால்தான் "மஹநீயா" என்று கூறுகிறார்கள்.

Monday, June 21, 2010

ஸத் சங்கம்....

உறவுகள், பிரிவுகள், நினைவுகள், அதன் தொடர்பான சிந்தனைகள் என்று, காலத்தின் கோலத்தில் அனைத்தும் அசைவுகளே!. சலனம் என்ற ஒன்று இருப்பது, இயற்கையை எப்போதும் உணர்த்துவதற்காகவே என்று தோன்றுகிறது. ஆக, ஆடும் மனத்தை எப்படி சமனப்படுத்துவது?. இதற்காக பிரயாசை செய்யதாலொழிய சாத்தியமாகாது. மனதை வசப்படுத்துதல் என்பதில் எப்போதும் கவனம் வைத்துக் கொள்ள வேண்டும்.எப்படியான சூழ்நிலையிலும்,மனதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழகவேண்டும். சரி,மனதை அடக்க/பழக்க என்ன செய்யவேண்டும்?. நம்மைச் சுற்றியிருக்கும் இருப்பவர்களை விலக்கி விட்டால் மன மயக்கம் தீர்ந்திடுமா?.

குளத்தில் தாமரைக் கொடி வளர்கிறது, மலரையும் தருகிறது. அக்கொடியை தண்ணீரிலிருந்து எடுத்து நிலத்தில் வைத்தால் வளருமா?. தண்ணீரில் இருந்தாலும் அதன் இலைகள் நீரில் பட்டும் படாமல் இருக்கிறதே?, அது போன்ற வாழ்வு வாழ வேண்டும் என்கிறார்கள் பெரியோர். தாமரை நீரை விட்டுச் சென்றால் வளராது, அது போல நாமும் நமது சுற்றத்தை விட்டு சென்றால் மட்டும் மனதை வெல்ல முடியாது. நமது கடமைகளை விலக்கி காட்டுக்குச் செல்லுதல் என்பது தாமரைக் கொடியை மண்-தரையில் நடுவது போன்றது என்கிறார்கள். ஆகவே, நாம் எப்படி இருக்க வேண்டும் என்றால், உலகியலில் இருந்து விலகுதல் என்று இல்லாது, தாமரை இலைத் தண்ணீர் போல இருக்க வேண்டும் என்கிறார்கள்.

மனதில் ஆயிரம் அபிலாஷைகளை வைத்துக் கொண்டு, வெளியில் எனக்கு ஏதும் வேண்டாம், நான் ஈச்வரனிடத்தில் மட்டுமே பந்தம் என்று இருக்கிறேன் என்றால் அது எப்படி சரியாகும்?. பாடும் பாடலென்னவோ "பிறவா வரம் தாரீர் பெம்மானே" என்பதாக இருந்தாலும், மனதென்னவோ மயக்க நிலையினை விட்டு வெளியில் வருவதில்லையே?. மரணத்தின் வாயில் கண்முன் வந்தாலும், மனமென்னவோ பண்பற்ற நிலையிலேயே இருக்கிறதே?...எப்போது தெளிவடையும் இந்த மனம் ?.

மகிழ்ச்சியாகட்டும், துக்கமாகட்டும் எல்லாம் மனதின் கல்பிதம் என்ற எண்ணத்தை எப்போதும் நினைவில் இருத்திக் கொண்டால் மனது தானாக அடங்கிவிடும் என்கிறார்கள் பெரியோர். இவ்வாறான நிலை எப்படி, எப்போது ஏற்படும்?. இதற்க்கான வழியைத்தான் பகவத்பாதர் "ஸத்சங்கத்வோ நிஸ்சங்கத்வம்" என்கிறார். அதாவது ஸத்புருஷர்களது [இங்கு புருஷர்கள் என்பது ஆண்களை மட்டும் குறிப்பதல்ல] தொடர்பில் இருக்க வேண்டும் என்கிறார். ஸத்புருஷர்களின் தொடர்பில் இருந்தால் மனதை நிலையாக இறையிடத்தில் செலுத்த முடியும் என்று கூறுகிறார், இந்த ஸத்-தொடர்பே ஸத்-சங்கம். தொடர்ந்து ஆன்மீகப் பெரியவர்களது நிழலில் இருந்து, அவர்களது சொல்-செயல் போன்றவற்றை கவனித்து, அதன்படி வாழ்ந்தால் மனதை தன்வயப்படுத்தலாம், இதுவே ஸத்-சங்கத்தின் பெருமை.

ஸத்-புருஷர்களுடைய தொடர்பால் நமக்கு நல்ல பழக்கங்கள் வரும். இரு நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவன், தினம் கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்வது, எளியவருக்கு உதவுவது போன்றவற்றைச் செய்பவன் என்றால்,அவனுடன் தொடர்பில் இருக்கும் மற்றொருவனுக்கும், பக்தி, பரோபகாரம் போன்றவை தானாக வந்துவிடும். இதுதான் ஸத்சங்கத்தின் பயன். இவ்வாறு பக்தி இருக்கும் இடத்தில் வேதம், புராணம், சாஸ்திரம் போன்றவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படும். ஆக, ஸத்-சங்கம் என்பதன் மூலமாக ஆன்மீகத்தின் அடிப்படை அமையும் என்பது தெளிவாகிறது.

சரி ஸத் புருஷர் என்பவர் யார்? என்ற கேள்விக்கான விடையையும் பார்த்துவிடலாம். எவனுக்கு ஈச்வரனிடத்தில், வேத, தர்ம சாஸ்தரத்திடத்தில் அசையாத நம்பிக்கை இருக்கிறதோ அவரே ஸத்-புருஷர் என்கிறார் ஆதி-சங்கரர். ஆகவே நாமும் ஈச்வரனைப் பிரார்த்திப்பது மட்டுமின்றி வேத-வேதாந்தங்களிடத்தும், தர்ம சாஸ்திரங்களிடத்தும் நம்பிக்கை வைத்து நல்ல ஸத்-சங்கத்தை வேண்டுவோம். நம்மிடையே மறைந்திருக்கும் ஸத்-புருஷர்களது சகவாசத்தால் நாமும் நன்னெறிகளைப் பற்றிக் கொள்ள பராசக்தி அருளட்டும்.

ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!

Friday, June 11, 2010

மஹா காளீ, மஹா யோகேஸ்வரேஸ்வரீ




காலத்தை முடிவு செய்பவள் என்பதாகவும், காலனான ம்ருத்யுவுக்கும் முடிவு ஏற்படச் செய்பவள் என்பதால் காளீ என்ற பெயர் அம்பாளுக்கு. உஜ்ஜயினீ பீடத்தில் இருக்கும் சிவனது பெயர் மஹாகாளர், அவருடைய பத்னி "மஹாகாளீ". இவள் எப்படிப்பட்டவளென்றால், ப்ரபஞ்சத்தையெல்லாம் தன்னுள் அடக்கி இருப்பவள் என்பதாக "மஹாக்ராஸா" என்று உடனேயே சொல்கிறார்கள். க்ராஸா என்றால் பிடி என்று பொருள். அதாவது ப்ரபஞ்சத்திற்கு மிகப்பெரிய பிடிப்பாக இருப்பவள். அந்தர்முகமாக இருக்கும் போது ப்ரபஞ்சம் முழுவதையும் தன்னுள் அடக்கியிருக்கும் அவளது ஆஹாரமும் மிகப் பெரியதாகத்தானே இருக்க முடியும்?. அதைச் சொல்லுவதாக "மஹாசனா". மஹாசனா என்பது இங்கே ப்ரபஞ்சத்தையே ஒரு கவளம் ஆகாரமாகக் கொள்பவள் என்ற பொருளில் சொல்லியிருக்கிறார்கள்.

இதே மஹாசனா என்னும் நாமத்திற்கு மிகப் பெரிய ஆசனத்தை உடையவள் என்றும் பொருள் உண்டு. யாரை தெரிந்துவிட்டால்/உணர்ந்துவிட்டால் தெரியவேண்டியது வேறு ஏதும் இருக்காதோ, அவருக்கு மஹதீ என்று பெயர். அப்படியான மஹத்தான புத்தியைத் தரும் அம்பிகையை "மஹாபுத்தி:" என்று சொல்லி, இப்படிப்பட்ட மஹத்தான புத்தியை அருள்பவளே மஹத்தான ஸித்தியையும் அருளும் அவளே "மஹாஸித்தி".

ஸித்திகள் என்பவை நாம் அறிந்த அணிமா, மஹிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, ப்ராகாம்யம், ஈசித்வம், வசித்வம், என்ற அஷ்டமாசித்திகள் தாம். இவற்றையெல்லாம் தனது ப்ரசாதமாக அருள்கிறாளாம். இந்த சக்திகளைப் பெற்றவர்கள் யோகேச்வரர்கள் என்று அழைப்போம். அவ்வாறான கேச்வரர்களுக்கெல்லாம் தலைவியாக ஈச்வரியாக இருக்கிறாள் அம்பிகை, அதைச் சொல்வதே "மஹாயோகேச்வரேச்வரீ" என்னும் நாமம்.

இவளது தந்திர சாஸ்திரங்களையும், யந்திரத்தையும் மஹத்தானதாகவே இருப்பதாகச் சொல்லி, அவற்றை உடையவள் என்பதே முறையே "மஹா தந்த்ரா", "மஹா யந்திரா" என்று கூறுகிறார்கள். இவளது மந்திரமும் மஹத்தானது, அந்த சிறப்பான மந்திரத்தை உடையவள் "மஹா மந்த்ரா" எனப்படுகிறாள்.

Wednesday, June 9, 2010

பரமாணவே, பராத்பரா, பாசஹஸ்தா, பாசஹந்த்ரீ


இன்று பிறந்தநாள் கொண்டாடும் நமது நண்பர் திராச அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள். இந்த பதிவினை அவரது பிறந்தநாள் பரிசாக்குகிறேன்.


அம்பிகையை நிலவுடன் ஒப்பிடும் நாமங்கள் சிலவற்றை முன்னரே பார்த்தோம், இப்போது அவளே ஜ்யோதி ஸ்வரூபம் என்னும் நாமம்.ச்ருதியில் ப்ரம்ஹமே ஸுர்யன் முதலானவர்களுக்கு ப்ரகாசத்தை அருளுவதாகச் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட ஜ்யோதி ஸ்வரூபமான பரம்பொருளே அம்பிகை என்பதை "பரம்ஜ்யோதி" என்று கூறுகிறார்கள். "தாம" என்றால் தேஜஸ், நிலை, இருப்பிடம் ஆகிய அர்த்தங்கள் உண்டு. நிறைந்த விசேஷமான நிலையில் இருப்பவள் என்றோ, அல்லது நிறைந்த தேஜஸுடன் இருப்பவளென்றும் சொல்லும்படியான நாமமே "பரம்தாம" என்பது. அம்பிகை ஸர்வ்வோத்தம பதமாக இருப்பவள் என்றும் சொல்லலாம். ப்ரயோகத்தில்/நாமாவளியாகச் சொல்லுகையில், பரஸ்மை ஜ்யோதிஷே நம: என்றும் பரஸ்மை தாம்னே நம: என்றும் கூறவேண்டும்.

இப்படி ஜ்யோதிஸ்வரூபமாகவும், நிறைந்த தேஜஸுடனும் இருப்பவளை அணுவாகவும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் வாக்தேவதைகள். மிக ஸூக்ஷ்மமான பொருளான அணுவாகச் சொல்லியிருப்பதே "பரமாணு:" என்பது. அதாவது அறிவதற்கு முடியாத ரூபத்தை உடையவளாம். இன்றைய விஞ்ஞானமும் அணுவை ஏதேதோ கருவிகளைக் கொண்டே உணர்கிறார்களே தவிர சாதாரணக் கண்களால் காண இயலவில்லையே?...உணர்வால் அறியப்படுபவள் என்பதான பொருள் சரிதான். இப்படி அணுவாக இருப்பவளே பரம ஸ்ரேஷ்டமாகவும் இருக்கிறாள். திரிமூர்த்திகளைவிட ஸ்ரேஷ்டமானவர் என்பதாக "பராத்பரா" என்பதற்குப் பொருள் சொல்லுகிறார் பாஸ்கரர்.இதையே இன்னொருவிதத்திலும் சொல்லலாம். ப்ரம்ஹாவின் ஆயுளைக் குறிக்கும் சொல் பரம் என்பது. அவ்வாறான பரம் என்பதையும் விஞ்சிய, அதற்கு மேற்பட்டவள் அம்பிகை என்றும் கூறலாம்.

அம்பாள் தனது ஒரு கையில் ராகஸ்வரூபமான பாசத்தை இடது கையில் வைத்திருப்பதால் அவள் "பாசஹஸ்தா", இதையே பாசத்தை தன்கையால் விலக்குபவள் என்றும் கூறலாம். இவ்வாறு பாசத்தை, அவித்யைகளைப் போக்குபவள் என்பதே "பாசஹந்த்ரீ". அனிருத்தன் பாணாசுரனது நாக பாணத்தால் கட்டுண்டு இருந்த சமயத்தில் அம்பாளுடைய அனுக்ரஹத்தால் அவன் விடுவிக்கப்படுகிறான், இதை இந்த நாமவுக்குப் பொருளாகச் சொல்லியிருக்கிறார் கணேசய்யர். இவள் தனது பக்தர்களின் எதிரிகளது மந்திரங்களை சிறப்பாக விலக்குகிறாளாம், ஆகவே அவளை "பரம் மந்த்ர விபேதினீ" என்று சொல்கிறார்கள் தேவதைகள். பிறரால் ஆபிசாரம் போன்ற தவறான விஷயங்களுக்கு ப்ரயோகம் செய்யும் மந்த்ரங்களை நாசம் செய்து, அவை தனது பக்தர்களை தாக்காது காப்பவள் என்றும் கூறலாம். பரமான (சிறப்பான) மந்த்ரமாகிய பஞ்சதசி என்னும் தனது மந்திரத்தை தனது உபாசகர்களுக்கு பலவிதமாகச் சொல்லுபவள் என்றும் சொல்லலாம்.

Sunday, May 30, 2010

மஹா பெரியவரும், எனது மாதாமஹரும்....

நேற்று மஹா பெரியவரது ஜெயந்தி, வைகாசி அனுஷம். நேற்று எழுத ஆரம்பித்தாலும், முடிக்க நேரமில்லை, ஆகவே இன்று இடுகிறேன்.

காசியாத்திரை கிளம்பி, ராமேஸ்வரம் செல்லும் வழியில் காரைக்குடி வழியாக வந்த பரமாசார்யார், காரைக்குடி, சாக்கோட்டை, இளையாற்றங்குடி போன்ற இடங்களில் தங்குகிறார். அவ்வாறான நேரத்தில் நகரத்தார் பகுதியில் பரமாசார்யார் பயணம் செய்யும் காலத்தில், ஸ்ரீமடத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய, ராமஸ்வாமி ஐயர் என்னும் பெரியவரைப் பணிக்கின்றனர் நகரத்தார்.

அப்போது முதல் பரமாசார்யாரின் அத்யந்த சிஷ்யராக விளங்கி, பரமாசார்யார் பெயர் சொல்லி விளிக்கும் பாரிஷதர்களில் ஒருவரானார் பெரியவர் ராமஸ்வாமி. ஆசார்ய ஸ்வாமிகள் நகரத்தார் எல்லையைத் தாண்டிய பின்னரும் அவருடன் ராமேஸ்வரம் வரையில் சென்று பின்னர் காரைக்குடிக்கு வருகிறார் பெரியவர் ராமஸ்வாமி.

இதன் பின்னர், ஒரு சில முறை பரமாசார்யாரை சோழ தேசத்தில் தரிசித்தாலும், கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு பெரியவர் ராமஸ்வாமிக்கு மீண்டும் ஜகத்குருவின் தரிசனமும், அருளும் மீண்டும் கிடைக்கும்படியான ஒரு வாய்ப்பை அருளுகிறாள் கொப்புடையாள்.

மனைவி திடமாக இருக்கும் போதே மூத்த பெண்ணை நல்ல வசதியான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தாயிற்று. வேலையின் காரணமாக மூத்தவன் சென்னையிலும், இளைய மகன் சிங்கப்பூரிலும் இருக்கிறார்கள். தனது ஜேஷ்ட புத்திரனுக்கும் மணமாயிற்று. ருதுவாகும் முன்னர் திருமணம் செய்து வைக்கும் காலம் அது. தனது 5ம் வயதிலேயே தாயை இழந்த கடைசிப் பெண்ணை எப்படி நல்ல வரன் பார்த்துக் கல்யாணம் செய்து வைப்பதென்று கவலையில் காரைக்குடியில் கொப்புடைநாயகியின் கோவில் பேஷ்காராக இருக்கிறார் பெரியவர் ராமஸ்வாமி.

கவலைகள் நீங்க இறைவனை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுதல் ஒன்றே வழி என்பது இயல்பாக இருந்த காலமது. பெரியவரும் தனது கடைக்குட்டிப் பெண்ணின் திருமணம் நல்லபடி நடக்க வேண்டுமே என்ற கவலையை கொப்புடையாளின் பாதத்தில் சமர்பித்து, அனுதினமும் வேத விதிப்படி அனுஷ்ட்டானங்களைச் செய்து, பராசக்தியை வழிபட்டு வருகிறார்.


நமது ஸ்ரீ சரணருக்கு பீடாரோகணப் பொன்விழா நடத்த பக்தர்கள் முடிவு செய்து நாளும் குறித்திருக்கும் செய்தி தெரியவருகிறது. குல குருவான காமகோடி பெரியவரின் பீடாரோகணப் பொன்விழா தரிசனத்திற்காக காரைக்குடியில் இருந்து கலவையை (அப்போது ஸ்ரீசரணர் காம்ப் கலவையில்) நோக்கிச் செல்கிறார் பெரியவர் ராமஸ்வாமி. செல்லும் வழியிலேயே பெரியவர் தனக்கு கனாகாபிஷேகத்தை மறுத்து ஸ்ரீசங்கர பகவத்பாதருக்குக் கனகாபிஷேகத்தைச் செய்யச் சொன்னதும், ஸ்ரீ சரணர் கலவையை விட்டுக் கிளம்பி காஞ்சிபுரத்தை அடுத்திருக்கும் ஊர்களில் இருப்பதாகவும் தெரியவருகிறது. பெரியவரும் தனது பயணத்தை திசை திருப்பி காஞ்சியை அடைகிறார்.

காஞ்சியில் ஆசார்ய ஸ்வாமிகளின் தரிசனம் ஆயிற்று. ஸ்ரீமடத்திலேயே நான்கு நாட்கள் தங்கியிருக்க உத்தரவாகிறது. நான்காம் நாள் காரைக்குடி திரும்ப முடிவு செய்து ஆசார்யரது உத்தரவு பெறச் செல்கிறார் பெரியவர். ஸ்ரீ சரணரும், பெரியவரது மனத்தில் இருந்த கவலையை உணர்ந்தவராக," சீக்ரமாகவே பெண்ணின் திருமணம் நடைபெறும், தேடி வந்து பெண் கேட்பார்கள், நல்ல வரனாக அமையும்" என்று ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

காஞ்சியிலிருந்து வந்தவுடனேயே பெண் கேட்டு வந்தவர்கள், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். அன்று முதல் மீண்டும் விசனத்தில் மூழ்கியவாறு ஒரு வருஷம் கழிகிறது. முன்பு பெண்ணை வேண்டாம் என்று சொன்னவர்களே தங்களது முடிவினை மாற்றிக் கொண்டு மீண்டும் பெண் கேட்டு அனுப்ப, உடனடியாகத் திருமணம் நிச்சயமாகிறது. நடமாடும் தெய்வமான ஸ்ரீ சரணரின் ஆசிகள் மெய்யான சந்தோஷத்தில், பெரியவர் தனது பெண்ணின் திருமணம் முடிந்தவுடன் சென்னைக்கு தம்பதியை அழைத்துச் சென்று சாதுர்மாஸ்ய பிக்ஷைக்கு ஏற்பாடு செய்து அவர் அருளைப் பெறச் செய்கிறார்.

அன்று முதல் ஸ்ரீசரணர் சென்னையில் இருந்த காலம் முழுவதும் அவருடனே இருந்த பெரியவர், பின்னர் புதுக்கோட்டை வந்து தனது மூத்த மகளது இல்லத்தில் தங்குவதும், சென்னையில் தனது ஜேஷ்ட புத்ரனது இல்லதிலுமாக இருந்து வந்தார்.

பலவருஷங்கள் கழிகிறது, நமது ஆசார்யாள் காஞ்சியில் இருக்கும் போது, அவருக்கு, பெரியவர் காலம் ஆன தகவல் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மடத்து சிப்பந்தி ஒருவரைப் புதுக்க்கோட்டை அனுப்பி, பெரியவருடைய பதிமூன்று நாள் காரியங்களையும் வைதீக விதிப்படி நடத்தித் தர உத்தரவிடுகிறா. அதே போல, காஞ்சியில் இருக்கும் கோவில்களில் பதிமூன்றாம் நாள் மோக்ஷதீபம் ஏற்றவும் உத்தரவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இவ்வாறாக தனது சிஷ்யர்களது மனக்கிலேசத்திற்கு ஒளஷதமாக மட்டுமல்லாது, அவர்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் அடைய அருள் புரிந்திருக்கிறார் நமது ஸ்ரீ சரணர்.

இங்கு கூறப்பட்ட பெரியவர் ராமஸ்வாமி, எனது தாயின் தந்தை. மஹா பெரியவர் அருளாசி வழங்கியது எனது தாயின் திருமணத்திற்கு. பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறி பின்னர் அதே பெண்ணை ஒரு வருஷம் கழித்து திருமணம் செய்தவர் எனது தந்தை என்பதைக் கூறவும் வேண்டுமா? :-)

இந்த நிகழ்ச்சி எனது தாய், தந்தை மற்றும், பெரியம்மா, ஆகியோரால் எனக்குச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு.

Wednesday, May 19, 2010

சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு 3 : சங்கரரும் சாரதையும்

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

தெய்வங்கள் மற்றும் மஹான்களின் ஜனன தினத்திற்கு முன்னர், பின்னர் என்று ஏதேனும் ஒரு பத்து நாட்களோ, அல்லது 4 நாட்களோ பெரும் விழாவாகக் கொண்டாடுவது மரபு. இதில் ஜனன-தினத்திற்கு முந்தைய விழாவை கர்போத்ஸவம் என்றும், ஜனனத்திற்குப் பின்வரும் விழா நாட்களை ஜனனோத்ஸவம் என்றும் கூறுகிறார்கள்.

இதைப் போலவே நாமும் சங்கர பகவத் பாதரின் கர்போத்ஸவதையும் ஜனனத்தையும் கொண்டாடிவிட்டோம். அவரது ஜனன தினத்தின் அடுத்த நாளான இன்று இந்தப் பதிவின் மூலமாக அவரது ஜ்னன உத்ஸவத்தையும் கொண்டாடி அவரது அருளை வேண்டிடுவோம்.

மஹான்களது ஜெயந்தியைக் கொண்டாடுவது என்பது அவர்கள் சொல்லிய வழியைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவே!. இன்று நாம் சங்கர பகவத் பாதர் செய்த சாரதா புஜங்கத்தைப் பொருளுடன் பார்த்து, அந்த சாரதையின் அருளுக்குப் பாத்திரமாகி, ஞான வைராக்யத்தை வேண்டுவோம்.




ஸுவக்க்ஷோஜகும்பாம் ஸதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதாவலம்பாம் ப்ரபுபுண்யவலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதா நோஷ்ட பிம்பாம்
பஜே சரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்!

தனது ஸ்தனங்களில் அருளைக் கொண்டவள், அமுத கலசத்தைக் கையில் ஏந்தியவள், கருணையுடன் காத்திடும் அம்பிகை. புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே அறியமுடிந்தவள், நிலவைப் போன்று ஒளிர்பவள், காருண்யம் தோய்ந்த புன்முறுவலுடைய எனதன்னை சாரதாம்பாளை இடைவிடாது துதிக்கிறேன்.

கடோக்ஷேதயார்த்ராம் கரே ஞானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபை: ஸுபத்ராம்
புரஸ்த்ரிம் விநித்ராம் புரஸ்துங்க பத்ராம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்!

கடைக்கண் பார்வையாலேயே கருணையை அருள்பவள். கரத்தில் ஞான முத்ரையைக் காட்டுபவள். கலைகளின் இருப்பிடம் அவளே!. ஸ்வர்ணமயமான ஆபரணங்களுடன், விழி மூடாது உலகை ரக்ஷிப்பவள். துங்கா நதிக்கரையில் வாசம் செய்யும் எனதன்னை சாரதாம்பாளை வணங்குகிறேன்.

லலாமாங்கபாலாம் லஸத்கானலோலாம்
ஸ்வ்பக்த்தைக பாலாம் யச: ஸ்ரீகபோலாம்
கரே த்வக்ஷமாலாம் கனத் ப்ரத்னலோலாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

ஒளிரும் நெற்றிச் சுட்டியை உடையவள், சங்கீத சேவையால் கவரப்படுபவள். தனது பக்தர்களைக் காப்பதில் கீர்த்தி பெற்றவள். புனிதமான கன்னங்களூடன் கையில் அக்ஷமாலையைக் கொண்டவள். கண்ணைக் கவரும் அணிமணிகளுடன் ஒளிர்பவள். அந்த அன்னை சாரதையை இடைவிடாது வணங்குகிறேன்.

ஸுஸீமந்தவேணீம் த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத் வஜ்ரபாணிம்
ஸுதா மந்த்ரஸ்யாம் முதாசிந்த்ய வேணீம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

முன்வகிட்டுடன் கூடிய பின்னலில் குஞ்சலங்களை உடையவள். மருண்ட மான் போன்ற விழியினை உடையவள். கிளியுடன் பேசி மகிழ்பவள், இந்திராதியரால் வணங்கப்படுபவள். புன்னகையுடன் கூடிய வசீகர முகலாவண்யம் உடையவள். அலையலையாப் புரளும் கூந்தலுடையவள்.அந்த என் அன்னை சாரதையை வணங்குகிறேன்

ஸுசாந்தாம் ஸுதேஹாம் த்ருகந்தேக சாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனஸ்தாம சிந்த்யாம்
ஸ்ம்ருதாம் தாபனஸ: ஸர்கபூர்வஸ்திதாம் தாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

காருண்யம் மிக்க பேரழகி, கொடி போன்ற மேனியளாக ஜொலிப்பவள். நிர்மலமான குணமுடைய நித்யகல்யாணி. தவமுனிவர்களும் தொழும் பிரபஞ்சத்தின் முதலானவள். அந்த என் அன்னை சாரதையை வணங்குகிறேன்

குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே மஹோக்ஷேதி ரூடாம்
மஹத்யாம் நவம்யாம் ஸதாஸாம ரூபாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

மகா-நவமி காலங்களில் மான், அன்னம், சிங்கம், யானை, குதிரை, காளை, கழுகு ஆகிய வாகனங்களில் அழகாக வந்து பக்தர்களுக்கு அருள்பவளும், எப்போதும் அமரிக்கையானவளுமான எனது அன்னை சாரதையை வணங்குகிறேன்.

ஜ்வலத் காந்தி வஹ்னீம் ஜகன் மோஹனாங்கீம்
பஜே மானஸாம்போஜ ஸுப்ராந்த ப்ருங்கீம்
நிஜ ஸ்தோத்ர ஸங்கீத ந்ருத்ய ப்ரபாங்கீம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

ஜ்வலிக்கும் அனல் போன்ற ஜோதி ரூபமானவள். அனைத்து உலகையும் தன்வசப்படுத்தியவள். அடியவர்களின் இதயத்தாமரையில் வண்டாக ரீங்கரிப்பவள். இயற்கையான நாதம், நடனம், ஸ்தோத்திரம் போன்றவற்றின் உள்ளொளியானவள். அவ்வாறான எனது சாரதாம்பாளை வணங்குகிறேன்.

பவாம் போஜ நேத்ராப்ஜ ஸம்பூஜ்யமாணாம்
லஸன் மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சிஹ்நாம்
சலச்சஞ்சலாசாரு தாடங்க கர்ணாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

முக்கண்ணன், மாதவன் போன்றோரால் வணங்கப்படும் பெருமையுடையவள். ஒளிவீசும் புன்-முறுவலுடையவள், அவளது காது குண்டலங்கள் அசைந்து-அசைந்தாடுவது அழகுக்கு அழகு சேர்க்கும். இப்படியான என் அன்னை சாரதையை எப்போதும் முழுமனதுடன் வணங்குகிறேன்.

ஸ்ரீ சங்கரரும், ஸ்ரீ சாரதாம்பிகையும் எல்லோருக்கும் அவரவர் மனோபீஷ்டங்களை நிறைவேற்றி அருளட்டும்.


ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

Tuesday, May 18, 2010

சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு 2 : சங்கரருக்கு பராசக்தி தரிசனம்

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

இன்று சங்கர ஜெயந்தி, அவரது பிறந்த தினமான வைசாக சுத்த பஞ்சமி. இந்த நன்னாளில், அவருக்கு முதன்முதலில் கிட்டிய இறை-தரிசனத்தைப் பார்ப்போமா?.

சிறப்புப் பதிவு-1 இங்கே!



ஒருநாள் சிவகுரு அவர்களால் பூஜை செய்ய இயலாத நிலை, ஆகையால் தாய் ஆர்யாம்பாள் குழந்தை சங்கரரரிடம் பாலைக் கொடுத்து அனுப்பி அம்பிகைக்கு நிவேதனம் செய்யச் சொல்லுகிறார். சங்கரரும் கோவிலை அடைந்து அம்பிகையின்முன் பாலை வைத்துவிட்டு அம்பிகையை நோக்கி 'என் தந்தைக்கு பதிலாக நான் வந்திருக்கிறேன், எப்போதும் போல இன்றும் நீ பாலை கொஞ்சம் அருந்தி, மீதத்தை எனக்குத் தா" என்று பிரார்த்தனை செய்கிறார். குழந்தை சங்கரரின் பரிசுத்தமான பிரார்த்தனைக் கேட்ட அம்பிகை, அவர் கொண்டுவந்த பாலை எடுத்து அருந்துகிறாள். அப்போது தன் முன்னால் இருக்கும் குழந்தையின் சிறப்பினை நினைத்தவாறு முழுவதையும் அருந்திவிடுகிறாள்.

தனக்கு மீதம் ஏதும் வைக்காது பால் முழுவதையும் அருந்தியதைக் கண்ட பாலகர் வருத்தமுற்று அழ ஆரம்பித்துவிடுகிறார். அப்போதுதான் அம்பிகைக்கு தனது செயல் புரியவருகிறது. கருணா ரூபமான அவள் தனது செல்லக் குழந்தை, ஈச்வரனதுஅம்சமான அக்குழந்தையின் அழுகையை சகியாது, குழந்தை சங்கரரை தனது மடியிலிருத்தி, தனது ஸ்தனத்திலிருந்து பாலைத் தருகிறாள். பின்னர் குழந்தையை கொஞ்சி, இல்லத்திற்கு அனுப்புகிறாள். இல்லம் திரும்பிய பாலகர் தனது தாயிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார் என்பது மாதவீய சங்கர விஜயத்தில் கூறப்பட்டிருப்பது.

இந்த நிகழ்வினை செளந்தர்யலஹரியிலும் சொல்லியிருக்கிறார் ஆசார்யார்.
அந்தப் பாடல்,

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா (75)

[அம்பிகே!, உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும், ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ!. ]

விநயம் என்பதின் பொருளான ஆசார்யாள், தம்மைத் தாமே இப்படி சிறந்த கவியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. சரி, இது சம்பந்தரைக் குறிப்பது என்று எடுத்துக் கொள்வதானால் இருவருக்கும் உண்டான காலம் வேறுபடுவது மிகத் தெளிவு. செளந்தர்ய லஹரியை அளித்தது அவர் ஹிமாசலம் சென்று ஈச்வர தரிசனம் பெற்ற பிறகே, அதற்கு முன்னரே அவர் பல ஸ்லோகங்கள், பாஷ்யம் போன்றவற்றைச் செய்துவிடுகிறார். அவ்வாறு பல நூல்களையும் படைத்ததால் உலகம் அவரைக் கொண்டாட, அந்தக் கொண்டாட்டத்தை, உலகம் புகழ்ந்ததன் காரணத்தை இந்த ஸ்லோகத்தில், அன்னையின் ஸ்தனங்களது விசேஷத்தைப் பற்றிச் சொல்லுகையில் சொல்வதாகச் சொல்லுகிறார்கள் பெரியவர்கள்.



இரண்டாவதாக சங்கரரருக்குக் கிடத்ததும் அம்பிகையின் தரிசனமே!, இது எல்லா சங்கர விஜயங்களில் மற்றும் பெரியோர்களால் ஏற்கப்பட்ட ஒன்று. பிரம்ஹச்சார்யத்தின் பகுதியாக பிக்ஷை எடுக்கையில் ஏழைக் குடும்பத்தின் வறுமையை நீக்கப் பாடிய போது,மஹா-லக்ஷ்மி அவருக்கு மட்டும் தெரியுமாறு தோன்றி அந்த வறியவர் குடும்பத்திற்கு அருளினாள். இந்த சந்தர்ப்பத்தில் பாடியதே "கனகதாரா ஸ்தோத்ரம்". முதலில் பகவதி தரிசனம், பின்னர் லக்ஷ்மியும் தரிசனம். அடுத்து சரஸ்வதி தரிசனம் தந்ததும் நமக்குத் தெரிந்தது தான்.

மண்டனமிச்ரருடன் வாதம் செய்கையில் அவருடைய பத்னியாக வந்தது சரஸ்வதி. மண்டன மிச்ரருடன் (பிரம்ஹாவின் அவதாரம்) வாதத்தில் வென்ற பின்னர் கற்பில் சிறந்த அவருடைய மனையாள் உபய பாரதி, தனது பதியின் தோல்வியைச் சகியாது, சங்கரருடன் வாதம் செய்ய ஆரம்பித்து, அவளும் தோல்வியடைவதும், அவ்வாறு தோல்வியடைந்த பின்னர் மண்டன மிச்ரர் வாதத்தின் ஆரம்பத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி சன்யாஸம் ஏற்கிறார். அப்போது உபய-பாரதி,அந்தர்யாமியாகிறார். ஜகதகுரு தனது யோக சக்தியின் மூலமாக வந்தது யார் என்று அறிவதாகச் சொல்கிறது சங்கர விஜயம்.

ஆக சங்கரருக்கு முதலில் அனுக்ரஹம் செய்தது பராசக்தியே என்று தெரிகிறது. பிற்காலத்திலேயே மற்ற ரூபங்களின் தரிசனம் கிட்டியிருக்கிறது.
இந்த நான்னாளில் பரம பூஜ்யரான சங்கர பகவத்பாதர் பதம் பணிவோம்.


ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

Monday, May 17, 2010

சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு -1 : ஆதிசங்கர பகவத்பாதர் வைஷ்ணவரா?, சைவரா?,சாக்தரா?...

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர


நாளை சங்கர ஜெயந்தி. இதையொட்டி இன்று, நாளை, நாளைய மறுநாள் என மூன்று இடுகைகள் இட இருக்கிறேன். முதல் இடுகை கீழே!

சங்கரர் என்னும் பதத்தை சம்பு: + கரர் என்று பிரித்துச் சொல்லுவார்கள். சம்பு என்பது ஈசனைக் குறிப்பது, "சம்பு:" என்றால் மங்களம் என்றே பொருள, "கரர்" என்றால் கார்யம் செய்பவர். ஆக, சங்கரர் என்றால் மங்களத்தைச் செய்பவர். சர்வ லோகங்களுக்கும் மங்களத்தை அருளுபவன் சங்கரன். நமக்கெல்லாம் ஆசார்யராக, பரம பூஜ்யராக இருந்து வேத வேதாங்கங்களையும், பக்தியையும் புனரோத்தாரணம் செய்த பகவத் பாதருக்கு சங்கரர் என்ற பெயர் மிகச் சரிதான். ஏன் ஆதி சங்கரர் என்று சொல்கிறோம்?, அவர் காட்டிய வழியில் வந்து கொண்டிருக்கும் பல ஆசார்யர்களுக்கும் 'சங்கர' என்ற பதமே பெயரில் இருப்பதால், இந்த பரம்பரையின் முதலாவதானவர் என்று குறிக்க ஆதி சங்கரர் என்று குறிப்பிடுவதாகிறது. பகவத்பாத சங்கரரை ஈசனின் திரு அவதாரமாகவே சொல்கிறோம். அதை நமக்கு அவ்வப்போது நினைவுபடுத்தி, அதன் மூலமாக குருவும், தெய்வமும் ஒன்றே என்பதாகவும் கொள்ளலாம்.


ஆதிசங்கரரைப் பற்றிச் சொல்லுகையில், "அந்த: சாக்தோ, பஹி: சைவ:, வ்யாவஹாரே து வைஷ்ணவ:" என்பது வழக்கம். அதாவது, உள்ளுக்குள் சக்தியான அம்பிகை, வெளியுருவத்தில் சிவச் சின்னங்கள் அணிந்த சைவர், செயல்பாட்டில் மஹாவிஷ்ணு என்பது பொருள். ஈஸ்வரனுடைய க்ரியா சக்தியே அம்பிகைதான். இங்கே ஈச்வரனே அவதாரம் செய்திருக்கிறார் என்றாலும், அவதாரக் கோலமோ, சன்யாச கோலம். ஆகவே இந்த அவதாரத்தில் வெளியில் செய்யும் கார்யங்களை அம்பிகையின் புருஷ ரூபமான நாராயணனை முன்னிருத்தி நாராயணபரமாக எல்லாச் செயல்களையும் செய்திருக்கிறார். இதனால்தான் இன்றும், ஸ்ரீமடங்களின் பீடாதிபதிகள் எல்லாம் அனுக்ரஹ பாஷணத்தின் போது நாராயண ஸ்ம்ருதி செய்வதே வழக்கம். இவ்வாறு புறத்தே நாராயணனைச் சொல்லிய அவதாரமாக இருந்தாலும், தனது அவதாரத்தில் அவர் காட்டிய கருணை, அம்பிகையின் கருணைக்கு ஈடானது. மனதுள் அம்பிகையைக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட கருணை, ஆகவே தமது உள்மனத்தில் அம்பிகையைக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறது இந்த ஸ்லோகம். பாரத தேசம் முழுவதும் யாத்ரை செய்து பல சாக்தக் கோவில்களிலும் உக்ரமான தெய்வங்களை சாந்த ஸ்வரூபமாக்கி, மக்களை ஆகர்ஷித்து அருளும் தெய்வங்களாகச் செய்தும், பாதாதி கேச, கேசாதி பாத ஸ்தோத்ரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் என இவர் ஸ்தோத்ரம் பண்ணாத தெய்வமில்லை. எழுபத்தியிரண்டு மதங்களால், இறை நம்பிக்கையில் பல்வேறு த்வேஷங்களுடன் இந்து மதம் சிதறுண்டு இருந்த நேரத்தில், ஷண்மத ஸ்தாபனம் பண்ணி பக்தர்களையும், இறைவனையும் இணைத்தவர் நமது பகவத்பாதர்.



சரி, ஞான குருவான தக்ஷிணா மூர்த்தியே மனித ரூபத்தில் சங்கரராக அவதாரம் செய்துவிட்டார். சரி, மனித ரூபம் என்று எடுத்துக் கொண்ட பிறகு வாழ்ந்து காட்டுவது தானே முறை. ஆகவே நற்காரியங்களை பெரியவர்கள் செய்து காட்டினால்தானே சிறியவர்கள் செய்வார்க்ள் என்பதை புரிய வைக்க குருவின் மூலம் ஞானம் பெறுவதுதே முறை என்று தனக்காகவே நர்மதா நதி தீரத்தில் காத்திருக்கும் கோவிந்த பகவத் பாதரை அணுகுகிறார் நமது ஆதி-பரமாசார்யார். கோவிந்த பகவத் பாதர் யார் என்று பார்த்தால் அவரே பதஞ்சலி. பூர்வீகத்தில் சிதம்பரத்தில், திரைக்குப் பின்னால் வியாக்ரண பாடம் நடத்தி, அந்த நிகழ்வில் குரு வாக்யம் மீறப்பட்டதால், அங்கு பாடம் நடத்திய குருவான பதஞ்சலியே வேறு பிறவியெடுத்து சந்திர சர்மாவாக வந்தவர். பதஞ்சலி யார்?, என்றால் அவர் ஆதிசேஷனின் அவதாரம். ஆக, இந்த சனாதனத்தையும், அத்வைதத்தையும் நமது ஆசார்யாளிடம் அளிக்க பல ரூபங்களில் ஆதிசேஷனே வந்திருக்கிறான்.

கோவிந்த பகவத் பாதரும், நமது ஆசார்யாளுக்காகவே காத்திருக்கிறார். ஏனப்படிக் காத்திருக்க வேண்டும்?, வேறு சிஷ்யர்கள் யாருக்காவது உபதேசத்தைப் பண்ணியிருக்கலாமே?. பத்ரிகாச்ரமத்தில் வியாசரின் தரிசனம் கிட்டிய போது, வியாசர் கூறியபடி நமது ஆசார்யாளின் வருகைக்காகக் காத்திருக்கிறார். சரி, கோவிந்த பகவத் பாதரை சந்தித்தாயிற்று, ஆனால் கோவிந்த பகவத் பாதருக்கோ வந்திருப்பவர்தான் வியாச பகவான் கூறிய சங்கரர் தானா? என்ற கேள்வி எழுகிறது. யார் நீ? என்று தனது குகையிலிருந்து வெளியில் வராமலே கேள்வியெழுப்புகிறார். அப்போது நமது ஆசார்யாள் பத்து ஸ்லோகங்களால் தன்னை தெரிவிக்கிறார். இந்த பத்து ஸ்லோகங்களும் "தசச்லோகி" என்று அழைக்கப்படுகிறது.


இறைவன் மனிதப் பிறவி என்று எடுத்தாலும் சில நேரங்களில் தனது ஸ்வய ரூபத்தை பூடகமாக வெளிக்காண்பிப்பது உண்டு. அதைப் போன்றே நமது ஆசார்ய ரூபத்தில் வந்த ஈசவரனும், "தானே சிவம் வந்திருக்கிறேன்" எனும்படியாக முடியுமாறு பத்து ஸ்லோகங்களில் சொல்கிறார். அஹம் பிரம்மாஸ்மி, சிவோஹம் என்று சொல்வது போல, இந்த பத்து ஸ்லோகங்கள் ஒவ்வொன்றின் முடிவிலும், நானே சிவம் என்று முடிக்கிறார் சங்கரர். இந்த குறிப்பை உணர்ந்த கோவிந்த பகவத்பாதர் நமது ஆசார்யாரை சிஷ்யராக ஏற்கிறார். இதே முறையில் தான் பிற்காலத்தில் நமது ஆசார்யர், ஹஸ்தாமலகரைப் பார்த்து 'நீ யார்' என்று கேட்ட சமயத்தில், பத்து ஸ்லோகங்களைச் சொல்லி தன்னை பிரம்ம ஞானி என்று அறிமுகம் செய்து கொள்கிறார். இந்த பத்து ஸ்லோகங்களுமே ஹஸ்தாமலகீயம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. சாதாரணமாக குருவின் படைப்புக்களுக்கு சிஷ்யர்கள் வார்த்திகம்/விளக்க நூல் எழுதுவார்கள். ஹஸ்தாமலகீயத்திற்கு ஆதிசங்கரரே வார்த்திகம் செய்ததாகச் சொல்லுகிறார்கள். அந்த 10 ஸ்லோகங்களத்தனையும் அத்வைத தத்துவங்களால் நிரம்பப் பெற்றது என்பதால் அதற்கு விளக்கம் பரம-தயாளுவான நமது ஆசார்யாரே எழுதினார் என்பது பொருத்தம் தானே?.

ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.

[ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் சாஸ்திரங்களுக்கும், புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நமஸ்கரிக்கிறேன்.]



ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

Monday, May 10, 2010

மந்த்ரிண்யம்பா விரசித விஷங்க வத தோஷிதா


பண்டாஸுரனுடைய ஸைன்யத்தை வதம் செய்வதில் முயற்சியுடைய சக்திகளின் பராக்ரமத்தால் ஸந்தோஷம் அடைந்தவள் என்பதே 'பண்டஸைன்ய வதோத்யுக்த சக்தி விக்ரம ஹர்ஷிதா' என்னும் நாமத்தின் பொருள். பண்டாஸுரனுடைய படைகளை வதம் செய்வ முயலும் சக்திகள் யார்?, எல்லாம் அம்பாளின் ரூபங்களான, வாராஹீ, நாரஸிம்ஹி, நகுலி, தூமாவதி, மந்திரிணி, தந்திரிணி போன்ற சக்திகள் தாம், இந்த சக்திகளின் பராக்ரமத்தால் பண்டனுடைய படைகளை சிதறடிக்கச் செய்வதால் மகிழ்கிறாளாம் அன்னை. பண்டன் என்பதே ஜீவாத்மா, அவனுடைய படைகளை (அதாவது பேத பாவத்தை) நாசம் செய்யும் சக்திகளைக் கண்டு சந்தோஷப்படுபவள் என்று பாஸ்கரர் சொல்லுகிறார்.

பண்டாசஸுரனுடைய படைத் ஸேனாபதி/தளபதிகளான தமனகன், சித்ரகுப்தன் போன்றோர் இரவு நேரத்தில் அன்னையின் சக்ரராஜத்தை சூழ்ந்து கபட யுத்தம் செய்ய முயலுகின்றனர். அப்போது திதி நித்யா தேவதைகள் அம்பிகைக்கு முன்னர் தங்களது வீரத்தை வெளிப்படுத்தி அசுர தளபதிகளை வீழ்த்துகின்றனராம். அதைக் கண்ட அம்பிகை மிகுந்த மகிழ்வடைகிறாள், இதைச் சொல்வதே 'நித்யபராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா'. அதாவது நித்யா தேவதைகளது பராக்ரமத்தைப் பார்ப்பதில் மகிழ்பவள். ஜீவாத்மாவிடத்திருக்கு சாஸ்வதமான ஆத்ம சக்தி அதிகரித்து வருவதைக் கண்டு ஸந்தோஷிப்பவள். திதி நித்யா தேவதைகள் சேனாதிபதிகளை வீழ்த்தியது போல மந்த்ரிணி என்றழைக்கப்படும் ச்யாமளா தேவியானவள், விஷங்கன் என்கிற பராக்ரமம் மிகுந்த அசுரனை (இவன் பண்டனுக்கு சஹோதரன்) வதைக்கிறாள். விஷங்கனது வதத்தால் மகிழும் அம்பிகையைச் சொல்வதுதான் "மந்த்ரிண்யம்பா விரசித விஷங்க வத தோஷிதா".

மந்த்ரிணியம்பா விஷங்கனை வதைத்தது போலவே வாராஹி விசுக்ரன் என்னும் அரக்கனை வதம் செய்கிறாள். இந்த அசுரனும் பண்டனுக்குச் சகோதரனே. விசுக்ரனது ப்ராணனை போக்கடித்த வாராஹியின் வீரத்தால் மகிழ்ந்தவள் என்பதைக் குறிக்கும் நாமாவே, 'விசுக்ர-ப்ராண-ஹரண வாராஹீ வீர்ய நந்திதா' என்பது.

இந்த விஷங்கன், விசுக்ரன் இருவரும் பண்டனுடைய புஜங்களிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த கடைசி இரண்டு நாமங்களும் லலிதோபாக்யானத்தில் கொஞ்சம் வேறுபட்டுக் காணப்படுகிறது. அதாவது விஷங்கனை வாராஹி வதம் செய்ததாகவும், விசுக்ரனை மந்த்ரிணி வென்றதாகவும் சொல்லியிருக்கிறது. ஆனால் வாக்தேவதைகள் சொல்லிய சஹஸ்ரநாமமே ப்ரமாணம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

Saturday, May 8, 2010

ஆசிரியர்-மாணவர்-சீக்ஷாவல்லி...

பலவருடங்களுக்கு முன்னர் நான் மதுரையில் படித்து வருகையில் அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் இருந்த ஸ்வாமிகளை பார்க்கும் வாய்ப்பு சில நாட்கள் முன்னர் கிடைத்தது. நான் அவரை கிட்டத்தட்ட 18 வருஷங்கள் கழித்துச் சந்தித்தேன். அவரும், மதுரையிலிருந்து பல இடங்களுக்கு மாறுதலாகி, கடைசியாகத் தற்போது பெங்களூர் வந்திருந்தார். அவரும், அவருக்குத் தெரிந்த 3 ஆன்மிக நண்பர்களும் சந்தித்துக் கொண்டோம், அதன் ஜிஸ்ட் இங்கே. இன்றைக்கு பள்ளிகளில் ஆசிரியர்-மாணாக்கர் தொடர்பு பற்றிப் பேச ஆரம்பித்து, அது சீக்ஷாவல்லியில் முடிந்தது. கீழே இருப்பது நாங்கள் சந்தித்த யதியின் சொற்கள், எழுத்து வடிவம் மட்டுமே என்னால் செய்யப்பட்டது.

******

பணம், புகழ் போன்ற எல்லாம் சந்ததித் தொடர்பின் மூலம் வரலாம் அல்லது தானே முயன்று சம்பாதிக்கலாம், அவையெல்லாம் அழிந்திடக்கூடியது, ஆனால் குரு/ஆசிரியர் மூலமாகப் பெறப்படும் ஞானமே அழிவில்லாதது என்று சொல்லி இருக்கிறார்கள். பகவத்பாதர் தனது ப்ரச்னோத்ர மாலிகாவில் 'எது விஷம்' என்ற கேள்விக்கு பதிலாக, குரு/ஆசிரியர்களுக்குச் செய்யும் அவ-மரியாதையைச் சொல்லியிருப்பதன் மூலம் தெளிவாகிறது.

நமது வேதங்களில் ஆசிரியர்-மாணவன் தொடர்பு பற்றியும், ஒரு ஆசிரியருக்குக் கொடுக்கப்படும் மரியாதையும், முக்கியத்துவமும், மாணவர்களின் கடமை போன்றவை மிக அழகாக, விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ண பரமாத்மாவே குருகுலம் சென்று பயின்றதும், குருவே கற்றுத்தர மறுத்தாலும், மானசீகமாக வில்வித்தை பயின்ற ஏகலைவனையும் கண்டிருக்கிறோம். ஆசிரியருக்கு இணையாக த்ரிமூர்த்திகளையும் சொல்லி இருக்கிறார்கள் நமது பெரியவர்கள்.

கல்வி கற்பதில் நேர்மை வேண்டும், மாறாத உறுதியும், அறிவுக் கூர்மையும், ஆசிரியன் மீது அசையாத நம்பிக்கை ஆகியன மாணாக்கருக்கு இருக்க வேண்டியவை என்றும், அதே போல ஆசிரியனும் மாணவனிடத்தில் அன்பு கொண்டு இருக்க வேண்டும் என்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு ஆசிரியர் தனது சீடனுக்கு/மாணவனுக்கு அஞ்ஞான இருளை நீக்கி ஞானத்தின் மூலமாக பிரம்மத்தின் பாதையைக் காண்பிக்கிறாரோ, அவரே 'ஸத்குரு' என்று போற்றப்பட்டிருக்கிறார்.

கல்வி பயில்வதில் மூன்று நிலைகளைச் சொல்கிறார்கள், அவை, கேட்டல், கேட்டதை மனதில் வாங்கி ஆராய்தல், அறிந்ததை தியானத்தின் மூலமாக நிலைத்திருக்கச் செய்தல் என்பன. இதுவே சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாஸனம் என்று சொல்லப்படுவது. ஆதி சங்கர் விவேகசூடாமணியில் உண்மையான சீடனின் கடமைகள், ஆசிரியரின் பங்கையும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதில் (விவேக சூடாமணி) ஆசிரியர்/குரு தனது சிஷ்யனுக்கு ஞானத்தை ஊட்டுவது என்பது, இயற்கையானது வசந்தகாலத்தில் எப்படி நம்மிடமிருந்து எந்த் எதிர்பார்ப்பும் இல்லாது நமக்கு இனிமை அளிக்கிறதோ அதுபோன்றது என்று கூறி ஆசிரியர்/குரு தன்னலமற்று இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.

தைத்ரீயோபநிஷதத்தின் முதல் பகுதி சீக்ஷாவல்லி. இதில் குருகுலத்தில் பயில வேண்டிய முறை, உபாசனை, தியானம், கல்வி கற்றபின் உலகத்தில் எப்படி வாழ்வது போன்றவற்றைச் சொல்லியிருக்கிறது. குருகுல வாசத்தின் முடிவில், குருகுலத்தை விட்டுச் செல்லும் மாணவனுக்கு ஆசார்யனால் பல அறிவுரைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அறிவுரைகள் ஒருவனது வாழ்வு முழுவதும் பின்பற்றத்தக்கதாக இருப்பது சிறப்பு. அவற்றில் சிலதைப் பார்க்கலாமா?

ஸத்யான்ன ப்ரமதி தவ்யம் - சத்யத்திலிருந்து எப்போதும் தவறக்கூடாது.

தர்மான்ன ப்ரமதி தவ்யம் - தர்ம நெறியில் எப்போதும் இருக்க வேண்டும்.

ஸ்வாயாயப்ரவசநாப்யாம் ந ப்ரமதி தவ்யம் - கற்றைதை பயிற்சி செய்யவும், பிறருக்குக் கற்றுத் தரவும் வேண்டும்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ - பெற்ற தாயும், தந்தையும் கடவுளாக வணங்கப்படத்தக்கவர்

ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ - கல்விக் கண் திறந்த ஆசார்யனும், விருந்தினரும் கடவுளுக்கு ஒப்பாகக் கொள்ள வேண்டும்.

தேவ பித்ரு கார்யாப்யான்ன ப்ரமதி தவ்யம் - தேவ, பித்ரு கர்மாக்களைத் தவறாது செய்ய வேண்டும்.

இவற்றை மனதில் நிறுத்திக் கொண்டு, நாம் செய்யும் எல்லாவற்றிலும் தர்மத்தையும், சத்யத்தையும் கடைபிடித்தால் அதுவே தர்ம வாழ்கை என்று முடித்தார் அந்த யதி.