Wednesday, August 15, 2007

கோதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

பூர்வம் வாரிநிதொள வராஹ லபுஷா மக்னாம் ஸமுத்ருத்ய
மாம் அங்கே நாத நிதாய ஸர்வ ஸீகர :
முக்தே ரூபாயஸ்த்வயா, மாலா கேய சமர்ப்பணம்
மம முநேத் துக்தம் தமே வாதுனா ஜாதாஹம்
புவி தர்சயாமி க்ருபயா த்வம் தேஹ்யனுக்ஞாமிதி.


பூமாதேவி ஆண்டாளாக அவதரித்ததை சொல்லுகிறது மேற்கண்ட சுலோகம். பூமாதேவி பொறுமையுடன் அளவில்லா கருணையும் கொண்டவள். அவள் ஒரு சமயம் தன் பதியான ஸ்ரீமன் நாராணனிடம் "உலகில் ஏன் சிலரைக் கஷ்டப்படச் செய்கிறீர்கள்?,சிலரை ஏன் சுகப்படச் செய்கிறீர்கள்" என்று கேட்டாள்.


"எனக்கு எல்லோரும் ஒன்றுதான், அவரவர் பாவ-புண்ணியத்தின்படி கஷ்டமோ-சுகமோஅனுபவிக்கிறார்கள்" என்றார் நாராயணன்.


"அது எப்படி?"


"நேர்வழியில் போனால் சுகமாக, சுலபமாக போய்ச் சேரலாம். குறுக்கு வழியில் போய் கல்லும்,முள்ளும் குத்தி அவஸ்தையய் வரவேற்றால் அதற்கு யார் பொறுப்பு?" "அவர்கள் நேர்வழி செல்லும்படி எப்படிச் செய்வது?"


"என்னை நினைத்தாலே போதும். என்னை நினைத்து ஒரு பூவைப் போட்டாலும் போதும். என் மீதுஒரு பாமாலை பாடினாலும் போதும். அதைக்கூட பலர் செய்யாமல் இருக்கிறார்களே !" என்றவாறு பூமாதேவிக்கும், ஸ்ரீமந்நாராயணுக்குமான சம்பாஷணை தொடர்கிறது.


இப்போது தாயார்,"நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஒரு பக்தனை சொல்லுங்களேன், கலியில் ஹரி பக்தியின் சிறப்பைபார்க்கலாம்" என்றாள்.


இதற்கு பதிலாக பெருமாள் பின்வரும் லின்க்கினை பூமாதேவிக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். http://madhavipanthal.blogspot.com/2006/11/blog-post_30.html


அந்தப் பதிவினைப் படித்த பூமாதேவி, "புரிந்தது ஸ்வாமி, பாசுரத்தைப் பாடியவனும், அதனை ஒருதடவைகேட்ட பிரம்மராக்ஷஸும் நற்கதி அடைந்ததுதானே இதன் சாரம்" என்றாள்.


"ஆமாம்; நான் ஜீவராசிகளுக்கு இதைவிட சுலபமான வழி என்ன காட்ட முடியும். இதைப் போலவே ஒருபுஷ்பத்தை எடுத்து எனக்கு அர்ப்பணம் செய்தாலும் நான் திருப்தி அடைந்து நற்கதி அளிப்பேன். அதைக்கூட செய்யாமலிருந்தால் நான் என்ன செய்ய?"


பூமாதேவி ஏதோ யோசிக்கத் தொடங்கினாள்


பகவான் அவளைப் பார்த்து, "என்ன தீவிர யோசனை?", என்க,
"ஒன்றுமில்லை ஸ்வாமி, எனக்கொரு ஆசை. அதை நிறைவேற்ற அருள் புரிய வேண்டும்"


"என்னம்மா அந்த ஆசை"


"ஸ்வாமி, நான் ஒரு தடவை பூமியில் பிறந்து பாமாலையினாலும், பூமாலையினாலும் தங்களை அர்ச்சித்து, உலகிற்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டுமென்பதே எனது ஆசை" என்று கூறினாள் பூமாதேவி.


பகவானும் "அப்படியே ஆகட்டும், நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வடபத்ர சாயியாக அர்ச்சையிலிருப்பேன்.அப்போது கருடாழ்வார் விஷ்ணுசித்தராக அவதரித்து திருத்துழாய் கைங்கர்யம் செய்வார். அவரது திருக்குமாரியாக அவரது திருத்துழாய் தோட்டத்தில் நீ தோன்றி பாமாலையும், பூமாலையும் சூட்டலாம்" என்று கூறினார்.


அதன்படி ஆடிமாதம், சுக்லபக்ஷ சதுர்த்தியும், பூர நக்ஷத்திரமும் கூடிய செவ்வாய்க் கிழமையன்று, பெரியாழ்வார்திருத்துழாய் பறிக்கும் நந்தவனத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தாள்.


இன்று ஆடிப்பூரம். அன்னை பூமாதேவி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக அவதரித்த தினம்.

Saturday, August 11, 2007

மதுரையிலேயே பெரிய வீடு - 1

மதுரை என்ற உடன் மனதில் நினைவிலாடுவது 2 விஷயங்கள்.ஒன்று மீனாட்சி, இன்னொன்று மதுரை மல்லிகை பூ. இன்றும் மதுரையிலிருந்துதான் உலகுக்கெலாம் மல்லிகை ஏற்றுமதியாகிறது. இதுபோலவே சக்தி பீடங்களில் மதுரை முக்கிய இடம்வகிக்கிறது, சக்தி வழிபாட்டில் மதுரைக்கு ராஜமாதங்கி சியாமளா பீடம் என்று பெயர்.


இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது, அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர்.மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவதுஇந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை/அதை காத்துகுஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருட்கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்.


சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பல நூறு கோவில்களில் இதுவே முதன்மையானது. சுடலையாண்டி, ருத்திரன் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவன், பாண்டிய ராஜ குமாரியை (மீனாட்சி) மணக்க வருகையில் அழகிய வடிவெடுத்து வந்தாராம். அந்த சுந்தர வடிவால் அவருக்கு சுந்தரன் என்றும், சொக்க வைக்கும் அழகால் சொக்கன் என்றும் பெயர். இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்குஎதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட டுப்ளிகேட் லிங்கம் இன்றும் காட்சிக்கு உள்ளது.


குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் ஸ்வயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் நிர்மாணித்ததாக வரலாறு. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.


விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தைபூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவரை விமானங்கள், இந்திர விமானம்என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகிறது.



ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சன்னதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கிறது. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை, கிருதமால் நதிகள். இன்று கிருதமால் நதி என்பது பல ஆக்ரமிப்புக்களுக்கிடையே, வெறும் கழிவுநீர்க்கால்வாயாக உள்ளது. பலநூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக்குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரையாதினத்தில் வழிபாட்டில் உள்ளது.
மற்ற எல்லா இடங்களிலும் இடதுகாலைத் தூக்கி நனடமாடும் நடராஜர், இங்கு வலதுகாலைத் தூக்கிவைத்து நடனமாடுகிறார். இந்தசன்னதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது.

Friday, August 10, 2007

காமாக்ஷி - கடாக்ஷி - 4ஆவது ஆடிவெள்ளி சிறப்புப் பதிவு

சில மாதங்க்ளுக்கு முன் "காமாக்ஷி" பெயர்க்காரணம் கேட்டிருந்தார் கே.ஆர்.எஸ். எனக்கு தெரிந்ததை தந்துள்ளேன் கீழே.

காமாக்ஷி பற்றி சொல்லப்பட்ட புராணங்கள் பின்வருமாறு.
1. மார்க்கண்டேய புராணத்தில் 'தேவீ மகாத்மீயத்தை அடுத்ததாக வரும் "ஸ்ரீ காமாக்ஷி விலாஸம்".
2.பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக உள்ள லலிதோபாக்யானம்.
3, ஸ்காந்த புராணத்தில் ஸநத்குமார ஸம்ஹிதையிலுள்ள 'காஞ்சீ மஹாத்மீயம்' மற்றும் அதில் வரும் 'தக்ஷ காண்டத்தில்'.
4. மற்றும் பல வடமொழி, தென்மொழி புராணங்கள், செவிவழிக் கதைகள்.

தேவியின் பல வடிவங்களுள், நாற்கரம் கொண்டு, அவற்றில் கரும்புவில், மலரம்பு, பாச-அங்குசம் தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பவளே காமாக்ஷி மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ராஜராஜெஸ்வரி. மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம். ஆக மொத்தமாக மந்த்ரங்களில் சிறந்த ஸ்ரீவித்யாவால் காட்டப்பட்ட ஸ்ரீ மாதாவின் ரூபம் காமாக்ஷீ.

இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?. பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்காரத்தின் ஒலியின் அலைகளான இருபத்துநான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள். ஆம்! அந்த இருபத்துநான்கு சப்தங்களை, இருபத்துநான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள். அதென்ன 24?, 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது ஏன் 24?. காயத்ரீ மஹாமந்திரம் இருபத்திநாலு அக்ஷரம் கொண்டது, அதன் மஹிமையைத்தான் நமக்கு அவ்வாறு விளக்குகிறாள் ஸ்ரீமாதா.தற்போதும் காஞ்சீயில் காமாக்ஷி கொலுவிருக்கும் மண்டபம் காயத்ரீ மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது.

சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. 'அ' என்பது சிவனின் பெயர். 'அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக.பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம் (லிங்கோத்ப்வ தத்வம்). 'ம' என்பது நாராயணனைக் குறிப்பது. எப்படி? 'மா' என்றால் லக்ஷ்மி, இதெப்படியெனில் அவளின் கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள். ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).

"ஸசாமர ரமா வாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா" என்கிற லலிதையின் நாமா என்ன சொல்கிறதென்றால், வாணியும், ரமாவும் (லக்ஷ்மி), அன்னைக்கு இருபுறங்களிலும் சாமர சேவை செய்வதாக வருகிறது. ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் தமது பாடலில் "சாரதா ரமா நயநே' என்று போற்றுவதிலிருந்து காமாக்ஷியின் கண்களாக கலைமகளும், அலைமகளும் இருப்பதாகவும் கொள்ளலாம். இதையே, சிவப்பிரகாச ஸ்வாமிகள், "நின் திருமுக பங்கயத்தில்கண்ணாயினர் உனக்கு அவ்வலைமாதும், கலைமகளும் பெண்ணார் அமுதனையாய்" என்கிறார்.

அடுத்ததாக பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப்பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது.

Thursday, August 9, 2007

ஸ்ரீ சரபேஸ்வரர்

திருமதி கீதா அவர்கள் சரபர் பற்றி தனது சிதம்பர மகாத்மீயம் தொடர் பதிவில் எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக சரபர் பற்றி மேலும் சில தகவல்கள் இங்கே.


அவரது பதிவின் லின்க் கீழே.


http://aanmiga-payanam.blogspot.com/2007/08/blog-post_05.html


ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம உத்ர பாகத்தில் சரபர் பற்றி பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.


எவர் ஒருவர் ஸ்ரீ லலிதாசகஸ்ர நாமத்தை பக்தியோடு பாராயணம் செய்கிறார்களோ அவர்களது சத்ருக்களை சரப மூர்த்தி நாசம் செய்து காப்பார்.

இன்றும் நடக்கும் பில்லி-சூன்யம் போன்றவற்றை நீக்குவதற்கும், நாரசிம்ஹ மந்திரத்தால் கட்டப்பட்ட பிரயோகங்களை நீக்குவதற்கும் சரப சாளுவங்கள் என்ற் பிரயோகம் தந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மகா உக்கிரமான நாரசிம்ஹத்தை அடக்கியதிலிருந்து சரப மூர்த்தியே மாரக பிரயோகங்களுக்கு மிக உத்தமமானவர் என்று சொல்லப்படுகிறது. (அப்போ வல்லியம்மா நீங்க சரப உபாசகராகத்தான் இருக்க முடியும், ஏன்னா நீங்களும் ஒரு சிம்ஹத்தை பல வருடங்களாக அடக்கியாள்கிறீர்கள் அல்லவா)



ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரஸிம்மத்தின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் அந்த உக்கிரம் உலகத்தை பாதிக்காது தவிற்க்க தேவர்கள், முனிவர்கள் சிவனை பிரார்த்திக்க, சிவபிரானும் வீரபத்ரரை அனுப்புகிறார். ஆனால் வீரபத்ரரையும் கட்டி வைத்து ஆட்டுகிறார் நரஸிம்மர். அப்போது வீரபத்திரர் பிரார்த்தனையால் சிவன் விரபத்திர வடிவிலிருந்து உருமாறி சரப உருக்கொண்டு நரஸிம்மத்துடன் 16 நாட்கள் போர் நடக்கிறது. 17ஆம் நாள் சரபர் நரஸிம்மத்தை தன் கரங்களால் தொட, அந்த ஹஸ்த தீக்ஷையானது நரஸிம்மத்தை தெளியவைக்கிறது. தனது செயலுக்காக வருந்திய நரஸிம்மர் 16 ஸ்லோகங்களால் சிவபெருமானை வழிபட்டார். (இந்த 16 ஸ்லோகங்களிலேயே சரபரின் 108 அஷ்ட்டோத்திர நாமாவாக உள்ளது) சரபர் நரஸிம்மத்துடன் இணைந்து இரண்டறக்கலந்தபின் தேவர்களையும், முனிவர்களையும் பார்த்து 'நீரும், நீரும், பாலும், பாலும் கலந்தால் எப்படி வேறுபடுத்த முடியாதோ, அது போல விஷ்ணுவும் சிவனும் ஒருவரே. எங்களை வேறுபடுத்திப்பார்க்கத்தேவையில்லை. என்று சொல்கிறார்.



சரபதத்துவம் என்னவென்றால், உபாசகன் இந்திரியங்களை அடக்கி அதன் வழியாக கார்யசித்தி அடையத்துவங்கும் காலத்தில் உபாசகனுக்கு கர்வமும் "தான்" என்ற மமதையும் இருக்கும். (இந்திரிய ஒடுக்கமே ஹிரண்ய வதம்) என்னதான் இந்திரியக் கட்டுப்பாடு இருந்தாலும் மனது அடங்காததால் அளவிற்கு மீறிய கோபம். இந்த அகங்காரத்தை ஒடுக்கிய சக்தியே சரபர்.



மான், மழு, சர்பம், தீ போன்றவற்றை ஆயுதமாக கொண்டிருக்கிறார் சரபர். இதில் அகந்தையை ஒழிக்கக் கூடியது மழு. மான் எப்போதும் சஞ்சலப் பார்வையுடையது, அதனை அடக்கி மனதை ஒருமுகப் படுத்தல் வேண்டும். குண்டலினிக்கு சாட்சியாக பாம்பும், தீயானது ஞானாக்னிக்கு சாட்சியாகவும் சொல்லப்படுகிறது. சரப மூர்த்திக்கு ஆதாரம் பல இடங்களில், குறிப்பாக ரிக் வேதம், தைத்ரீகம், ஸ்கந்த புராணம், காளிகா புராணம், பிரும்மாண்ட புராணம், சிவ பராக்ரமம் போன்றவை.



நல்லது செய்வதாகட்டும், அசுர சக்திகளை நாசம் செய்வதாகட்டும் இறைவனுக்கு உதவியாக பல சக்திகள் வந்துள்ளன. இங்கு சரபருக்கு இரு விதமான சக்திகள் உதவியுள்ளனர். ஒன்று மிக உக்ரமான பத்ரகாளி எனப்படும் பிரத்யங்கரா, இன்னொன்று சூலினி எனப்படும் துர்கா. புற சம்பந்தமான பாவங்களையெல்லாம் அழிப்பவள் துர்க்கா. அக சம்பந்தமான பந்தத்திலிருந்து நீக்கி முக்தியளிப்பவள் பிரத்தியங்கரா. சுருக்கமாகச் சொன்னால் இம்மைக்கு சூலினியும், மறுமைக்கு பிரத்யங்கராவும் அவசியம். இந்த இரு சக்திகளும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்யங்கரா தேவியின் மந்திரங்களை கண்டறிந்து சொன்னவர்கள் அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்பவர்கள். இவளது மந்திரத்தை சாதகம் செய்பவர்களை துவேஷிக்கக் கூடாது. இவள் இறைவனது கோபத்திலிருந்து உதித்ததால்தான் "குரோத சம்பவாய" என்கிற நாமம் அன்னைக்கு ஏற்பட்டது.



சரபர் ஸிம்ஹ ரூபமுள்ளவரை அடக்கியதால் "ஸிம்ஹக்னர்" என்றும் சாலுக்கியர் வழிபட்டதால் "சாலுவேசர்" என்றும் அழைக்கப்படுகிறார். சாலுக்கியரில் இரு பிரிவுகளுண்டு. மேலை சாளுக்கியர், கீழை சாளுக்கியர் என்பதே அவை. இதில் கீழை சாளுக்கியர் சரபேஸ்வரரை குலதெய்வமாகவும் மேலை சாளூக்கியர்கள் நரஸிம்மத்தையும் வழிபட்டு வந்தனர். இவர்களுக்கும் சோழர்களுக்கும் இருந்த உறவின் முறையால் தமிழகத்தில் சரபர் வழிபாடு நிலைபெற்றிருக்கலாம்.



திரிபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட ஆலயம் தவிர மதுரை, சிதம்பரம், காரைக்குடி போன்ற சில இடங்களிலும் சரப வழிபாடு உண்டு. சரப வழிபாட்டிற்காக பல ஸ்லோகங்கள், நாமாவளிகள் உண்டு, அவை சரப அஷ்டகம், கவசம், சஹஸ்ர நாமம், அஷ்ட்டோத்திரம் போன்றவை. யாருக்கேனும் தேவையிருப்பின் பின்னூட்டமாக தெரிவியுங்கள், தருகிறேன்.

Sunday, August 5, 2007

சில விசேஷ கணபதி க்ஷேத்ரங்கள்....

கணபதியை ப்ராதான்யமாக வழிபடுபவர்கள் காணாபத்யர் எனப்படுவர். இவர்களுக்கு கைலாசம் போன்றது மயூரேசம் என்ற தலம். இது பூனா-பெங்களூர் ரயில் பாதையில் ஜெஜீரி ரயில் நிலையத்தருகில் இருக்கிறது. இங்குள்ள விக்னேஸ்வரருக்கு "ஸ்வானந்தேசர்" என்று பெயர். இவர் சுயம்பு மூர்த்தியானாலும் அருகில் பஞ்சலோகத்தில் சித்தி-புத்தி தேவிகள் இருக்கிறார்கள். இந்த ஆலையத்தில் திசைக்கு ஒருவராக எட்டு கணநாயகர்கள் (வக்ரதுண்டர், ஏகநாதர், மகோதரர்,கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், தூம்ரவர்ணர்) இருக்கிறார்கள். இதனால் இது விநாயகருக்கான அஷ்டகாய ஷேத்திரமாக கருதப்படுகிறது. ஆதிசங்கரர் தனது குரு கோவிந்த பாதரை சந்திக்கும் முன்பும், பாரத தேச பாதயாத்திரையின் முன்பும் இந்த மயூரேச கணபதியை ஆராதித்ததாக கூறப்படுகிறது. அஷ்ட கணபதி ஷேத்ரங்களாவன,
1.மயூரேசம் (மேலே கூறப்பட்ட இடம்) - ஸ்வானந்தேசர்
2.ஹளபேடு (கர்னாடகா) - நர்த்தன கணபதி
3.காசி - டுண்டி விநாயகர்
4.பாலி - கல்லாள கணபதி
5.விஜயபுரி - விக்னராஜர்
6.தேவூர் - பிரும்ம வரதர்
7.மட் - வரத வினாயகர்
8.சிக்தடேக் - மதுகைடப வரதர்
இவைதவிர, திருநாரையூர் தலத்தில் உள்ள வினாயகர்தான் நமக்கு நம்பியாண்டார் நம்பி மூலமாக தேவாரப்பதிகங்களை மீட்டுத்தந்தவர்.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், சேரமான் பெருமாளுக்கும் முன்னதாக ஓளவையாரை கைலாசத்தில் சேர்ப்பித்த வினாயகர் சேலத்தில் காந்திபாலம் அடியில் இருக்கும் பஞ்சாஷர கணபதி.
ராவணன் காலத்து வினாயகர் கோவில் இலங்கையில் திருக்கோணேஸ்வ்ரத்திற்கு அருகில் இருப்பதாக தெரிகிறது, இவரும் பஞ்சாஷர கணபதிதான். இக்கோவில் ராவணனால் கட்டப்பட்டதாக வரலாறு.
தஞ்சைக்கருகில் நன்னிலம் அருகில் திருச்செங்காட்டங்குடியில் உள்ள வாதாபி கணபதியைத்தான் சிறுதொண்டர் வாதாபி யுத்தத்தில் வெற்றி பெற்று, அங்கிருந்து கொண்டுவந்து இங்கு பிரதிஷ்ட்டை செய்துள்ளதாக வரலாறு. இந்த வாதாபி வினாயகரை பரஞ்சோதி முனிவர் பிரதிஷ்ட்டை செய்த சமயத்தில் அங்கிருந்த பல்லவ அரசன், வினாயகர் அழகில் வியந்து அமைத்ததுதான் ந்மது பிள்ளையார்பட்டி கற்பகவினாயகர். காவிரிக்கரையோரமாக கும்பகோணம்-திருவையாறு வழியில் உள்ள கணபதி அக்ரகாரத்தில் இருக்கும் வினாயகர் அகத்தியரால் பூஜிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
உருவத்தில் பெரிய வினாயகர் பல தமிழகத்தில் கோவில்களிலும் காண முடிகிறது. அவை, மதுரையில் முக்குறுணி விநாயகர், மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஊர்த்வ விநாயகர் (இரண்டுமே நாயக்கர் காலத்தில் வந்தவை), திருவண்ணாமலை செங்காவி விநாயகர், லால்குடி-அன்பில் உள்ள செவிசாய்த்த வினாயகர், திருவாருர் மாற்றுரைத்த வினாயகர், திருவானைக்கா அன்னைக்கெதிர்லிருக்கும் வினாயகர் (இது ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது), திருச்செந்தூரிலுள்ள விநாயகர் போன்றவை.
மலைமேல் பிள்ளையார் கோவில்கள் இரண்டு இடங்களில் உள்ளது, அவை திருச்சி மலைக்கோட்டையும், உறையூருக்கருகில் சோழன் பாறையில் உள்ள முக்தி கணபதியுமே. இன்னும் பல வரலாற்றுச் சிறப்புள்ள கோவில்களில் தலபுராணத்தில் பங்கு கொண்ட வினாயகர் சன்னதிகள் இருக்கிறது.

கடல் கடந்த கணபதி வழிபாடு.....

விநாயகர் வழிபாடு நம் நாட்டில் மட்டுமன்றி கடல் கடந்தும் பரவியிருக்கிறது. இந்திய நாகரிகம் பரவிய இடங்களிலெல்லாம் இவரது வழிபாட்டினை உணரமுடிகிறது. இந்திய வியாபாரிகள் (முக்கியமாக தமிழர்) கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் காலத்தே அவர்கள் தமது வழித்துணையயக விநாயகர் உருவத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற கணபதி அந்தந்த நாடுகளில் குடியேறியுள்ளார்.


திரு சமன்லால் எழுதியுள்ள 'இது அமெரிக்கா' நூலில் மெக்ஸிக்கோ, பெரு போன்ற நாடுகளில் பழங்காலத்திலிருந்தே விநாயகர் வழிபாடு இருந்ததாகவும், இந்நாடுகளில் இவர் அறுவடைத் தெய்வமாக போற்றுவதாக பல ஆதாரங்களைத் தந்துள்ளார். சர் மோனிர் வில்லியம்ஸ் என்பவர் ரோம் நாட்டுக் கடவுளுக்கும் நமது விநாயகருக்கும் பல ஒற்றுமை இருப்பதாக கூறியுள்ளார். பெளத்த மதத்தில் விநாயகரை அருசுக் கடவுள் என்று கூறியுள்ளனர். மகாயான புத்த மதத்தில் விநாயகர் ஒரு முக்கிய தெய்வமாக விளங்குகிறார் எனத்தெரிகிறது. இவ்வாறாக பெளத்த மதத்துடன் விநாயகர் வழிபாடு பல இடங்களுக்கு பரவியிருக்கலாம்.


கி.மு 3ஆம் நூற்றாண்டில் அசோகரது மகன் விநாயகர் வழிபாட்டை நேப்பாளத்தில் பரவச்செய்ததாக தெரிகிறது, மேலும் இலங்கையில் உள்ள அசோக ஸ்தூபியில் விநாயக உருவம் செதுக்கப்பட்டுள்ளது. திபெத்திலும் நேப்பாளத்திலும் பல நர்த்தன விநாயகர் உருவங்கள் உள்ளன. நேப்பாளில் இவரை "டஸாகஸ் ப்டாக்' என்றழைக்கின்றனர். பர்மாவில் கணபதிக்கு 'மகாபைனி' என்று பெயர். கம்போடியாவில் இவருக்கு "பிரஹ் கணேஷ்" என்றே பெயர்.


கி.பி 414-ஆம் ஆண்டிலேயே ஜாவா, பாலி தீவுகளில் விநாயக வழிபாடு இருந்ததாக சீன யாத்திரிகர் பாகியான் தனது பிரயாண குறிப்பில் கூறியுள்ளார். ஜப்பானியர் கணபதியை மங்கள மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் தமது மொழியில் 'ஷோ-டென்' என்ற பெயரில் வழிபடுகிறதாக அறிகிறோம். ஜப்பானில் இரட்டை விநாயகர் சிலைகள், ஒன்றையொன்று தழுவிய நிலையில் உள்ளது. இதற்கு 'குவான்ஷி தியென்' என்றும் 'கங்கி-தென்' என்றும் பெயராம்.


சீனாவில் குங்-ஷிங் என்ற இடத்தில் உள்ள விநாயகர் சிலை கி.பி 531-ல் செதுக்கப்பட்டதாக கண்டறிந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் காபூலுக்கு அருகில் ஸகர்தார் என்ற இடத்தில் பல இந்து தெய்வ சிலைகள் கிடைத்துள்ளன அதில் விநாயகர் சிலையும் கிடைத்துள்ளது. மேலும் குப்தர் கால விநாயகர் சிலைகள் கிடைத்துள்ளதாக தெரிகிற்து. இச்சிலைகள் தற்போதைய அரசியல் மாற்றங்களில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை.


அடுத்த பதிவில் சில சிறப்பான விநாயக க்ஷேத்திரங்களைக் காணலாம்.

Saturday, August 4, 2007

இவருக்கு மேல இன்னுமொரு நாயகன் இல்லை.....


விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் வேந்தனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து....


- நம்பியாண்டார் நம்பி.



வி-நாயகன் அதாவது தனக்கு மேல் தன்னை நடத்துவிக்கும் நாயகர் இல்லாதவர் என்று அர்த்தம். 'அநீஸ்வராய' என்பதும் இந்த அர்த்தத்தில் வருவதே. இதை ஆதி சங்கரர் தனது கணேச பஞ்சரத்னத்தில், அநாயக ஏக நாயகம் (முதாகரார்த்த மோதகம் என்று ஆரம்பிக்கும்) என்கிறார். ஆதிசங்கரர் கணேச புஜங்கமும் எழுதியவர். பஞ்சரத்தினம் கைலாயத்தில் கணபதியை தரிசித்து அங்கு நடந்தவற்றை எழுதியது பஞ்சரத்தினம் என்பதால் இதை முக்தி கணேச ஸ்தோத்திரம் என்கிறார்கள்.

நாலு வேதங்களிலும் விக்னேஸ்வரரைப் பற்றி பலவாறு சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்ச உபநிஷதங்கள் இவரை பூஜிக்கும் முறையை விளக்குகிறது, கணேச, முத்கல புராணங்கள் இவரை பற்றி விரிவாக சொல்லியிருக்கிறது.

கணபதியை உபாஸிக்கும் பக்தர்களுடைய மனதில் 'நீர்-நிலம்-விசும்பு-தீ-காற்று என்ற் பஞ்ச ரூபங்களின் அதிபதியாகவும், நிர்க்குண பிரும்மத்தின் வடிவமாக 'ஓம்;கார ஸ்வருபமாக இருப்பதாக காணாபத்தியம் சொல்கிறது.

கணபதியை வணங்குபவர் மற்ற தெய்வங்களை துதித்துப் பின் இவரை துதிப்பதில்லை, ஆனால் மற்ற தெய்வங்களை துதிக்கையில் கணபதியைப் முதலில் பூஜிக்க வேண்டும். இது இவருக்கான தனிச்சிறப்பை உணர்த்துகிறது.


ஓம் என்ற பிரணவ ரூபமான விநாயகரை அவர் பரபிரம்மமாக இருப்பதால் தான் எந்த கர்மாவிற்க்கான சங்கல்பத்திலும், முதலில் ' ஓம் சுக்லாம் பரதரம்'
என்று ஆரம்பிக்கும்படியாக வைத்துள்ளார்கள்.


இவவாறாக பலவிதங்களிலும் இறைவழிபாட்டில் முதலிடம் பெற்ற கணநாதனை வணங்கி இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன். இங்கு எனக்கு தெரிந்தவற்றை/படித்தவற்றை பகிர்தல் மட்டுமே இலக்கு. நானாக எந்த திரட்டியிலும் சேர்க்கும் எண்ணமும் இல்லை. ஏதேனும் தவறு இருப்பின் சுட்டிக்காட்டி வழிப்படுத்த் அன்பு நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன்.