சில நேரங்களில் நம்மை நோக்கி வரும் கேள்விகள், எதிர்பார்ப்புக்கள் நம்மை திகைக்க வைத்துவிடும். அதுபோன்ற ஒன்றே இந்த 32 கேள்விகள் என்று தோன்றுகிறது. அதிலும் இந்தத் தொடரில் என்னை இணைத்திட அழைத்தவர்கள் குமரன் மற்றும் கபீரன்பன். என்னையும் நினைவிலிருத்தி, இம்மாதிரியான தொடர்பில் இணையக் கேட்ட அவர்களுக்கு முதலில் நன்றி.
******************************************************************************
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?
சாதாரணமாக வீட்டுப் பெரியவர்களது பெயரை குழந்தைக்குச் சூட்டுவதை வழக்கமாகக் கொண்ட குடும்பத்தில் என் பெயர் சற்றே மாறுபாடானது தான். அன்னையின் கருவறையில் 8 மாதங்கள் முடிந்த நேரத்தில், அப்போது மதுரைக்கு வந்த பரமாசார்யார் என் தாய் தந்தையர் நமஸ்கரிக்கையில் ஆசிர்வாதம் செய்து புத்ரன் பிறப்பான், சந்திர மெளலி என்று பெயர் வைக்கச் சொன்னாராம் . அதனால் இந்தப் பெயர். சங்கராசார்ய சம்பந்தம் உள்ள பெயர் என்பது மட்டுமல்லாது, ஆசார்யாரே வைத்த பெயர் என்பதால் எனக்கு இந்தப் பெயரும் பூர்வ ஜென்ம பலனே என்று நினைப்பதுண்டு.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சில மாதங்களுக்கு முன்னர் மிக அரிதான நட்பாக நான் நினைத்த ஒரு தொடர்பு பொய்த்துப் போன பொழுதில் மனத்தில் மிகுந்த பாரமும், வேதனையும் அடைந்தேன். யாராகிலும் நோயாலோ,மன வேதனையாலோ கஷ்டப்படுவதைப் பார்க்க நேர்ந்தால் எனக்கும் கண்கள் கலங்கிடவிடும்.
3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
அவ்வளவாக அழகானது கிடையாது எனது கையெழுத்து, ஆனால் பிடிக்கவில்லை என்று பிரயாசை செய்து மாற்றிக் கொள்ள வேண்டிய அளவில் அசிங்கமாக இல்லாததால் அப்படியே விட்டாயிற்று.
4. பிடித்த மதிய உணவு என்ன?
சேப்பங்கிழங்கு/சிறுகிழங்கு ரோஸ்ட், மணத்தக்காளி கீரையை தேங்காய்+சீரகம் அரைத்து விட்டு மசியல், சுண்டைக்காய் வத்தல் குழம்பு, எலுமிச்சை ரசம், மோர்/தயிர் சாதத்திற்கு மாகாணிக் கிழங்கு போன்றவை முன்பு பிடித்த உணவு. கடந்த சில வருஷங்களாக உணவில் நாட்டம் இருப்பதில்லை, பசியெடுக்கும் போது வீட்டில் கொடுப்பதைச் சாப்பிடுவது என்ற பழக்கத்திற்கு வந்துவிட்டேன்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கண்டிப்பாக. நட்பில் தராதரம் பார்ப்பதில்லை.
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
நான் ஒரு தீர்த்தக்-கரைப் பாவி. ஆமாம், எனக்கு நீச்சல் தெரியாது, ஆகவே கடல்/பெரிய நதி போன்றவற்றைப் பார்க்கையில் பயம் உண்டு. ஆனாலும் புண்ய நதிகளைக் காணும் போது விடாது கரையோரத்தில் நின்றுஅவசர-அவசரமாக மூழ்கி எழத் தவறுவதில்லை.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள் - அதுவே பேசும் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை சொல்லிவிடும் என்று நம்புகிறேன்.
8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம்: நேரிடையான சொல்/செயல்பாடுகள்.
பிடிக்காத விஷயம் : சட்டென வரும் கோபம் .
9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?
அவர் ப்ளாக்கர் இல்லை, நான் இடும் இடுகைகளைபயும் படிப்பவரல்ல. ஆகவே இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் தந்தை...தந்தையாக மட்டுமல்லாது குரு, ஆசான் என்று பல விதங்களில் என்னைப் புடம் போட்டவர். கற்க அவரிடம் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், சொல்லித்தர அவரில்லை என்பது அவ்வப்போது வருத்தம் தருகிறது.
11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
சிகப்பு கோடுகள் போட்ட நிற சட்டையும், வெள்ளை வேஷ்டியும்.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
"பராத்பரா பரமேஸ்வரா, பார்வதி பதே, பர-பசுபதே" என்னும் பகுளி ராகத்தில் அமைந்த தீக்ஷதர் க்ருதியை எம்.எஸ் அம்மா பாடுவதைக் கேட்டுக் கொண்டே இதை இதை எழுதுகிறேன்.
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?
கருநீலம் என்றும் எனது பிடித்தமான கலர்.
14. பிடித்த மணம்?
பூஜை அறையில் பூஜையை முடித்து ஆபீஸ்/வெளியில் கிளம்புகையில் பூஜையறைக்குச் சென்று வணங்கிய பின்பே கிளம்புவது வழக்கம். அவ்வாறு செல்கையில் உணரும் கலவையான மணம். அரைத்த சந்தனம், சாம்பிராணி/பத்தி மற்றும் நறுமண மலர்கள் எல்லாவற்றிலிருந்தும் வரும் மணங்களின் கலவை.
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
அன்பில் திளைக்க வைக்கும் சொற்களுக்குச் சொந்தக்காரர் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள். பேசுவதிலேயே அஅன்பை வாரி-வழங்கிடும் பெருமாட்டி.
மரியாதைக்குரிய திரு திராச அவர்கள். இவர் பதிவுகள் போட்டு ரொம்ப நாட்களாயிற்று. இதனை வைத்தாவது ஆரம்பிக்கிறாரா என்று பார்க்கலாம்.
திவாண்ணா என்று நான் அழைக்கும், பெருமதிப்பிற்கும், அன்புக்கும் உரிய மருத்துவர் தி.வாசுதேவன்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
இத்தொடருக்கான அழைப்பை எனக்கு குமரன் மற்றும் கபீரன்பன் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய வரிசையிலேயே இந்த கேள்விக்கான பதிலையும் சொல்லிவிடுகிறேன்.
கடந்த 2.5 வருடங்களாக குமரன் எழுதும் எல்லா இடுகைகளையும் படித்து வருகிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின் கஷ்டமே!. ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல. நான் மிக ரசித்தது என்றால் அவர் கூடலில் எழுதிய "புல்லாகிப் பூண்டாகி" கதையும், கோதைத் தமிழ் வலைப்பூவும்.
கபீரன்பன் அவர்களும் என்னை இந்த தொடருக்கு அழைத்ததால் அவரது இடுகைகளையும் சொல்லிவிடுகிறேன். கபீரன்பன் அவர்கள் எழுதிய எழுதிவரும் கபீர்தாஸ் தோஹா தொடர்கள் மிகவும் விரும்பிப் படிக்கும் ஒன்று. ஒவ்வொரு இடுகையிலும் எடுத்துக் கொள்ளும் தோஹாவுக்குத் தொடர்பான உதாரணங்கள் மற்றும் மற்ற விளக்கங்கள் எப்போதும் வியக்கச் செய்வன.
17. பிடித்த விளையாட்டு:
பெரிதாக ஏதுமில்லை
18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம், கண் விழித்திருக்கும் முழுநேரமும் கண்ணாடியுடனேயே!. சமீபத்தில் கண் மருத்துவர் லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாமே என்ற போதும் எனக்கு எனது கவசங்களான கண்ணாடியை இழக்க மனமில்லாததால் வேண்டாமென்று மறுக்குமளவுக்கு இது என் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்று.
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
லாரல் அண்ட் ஹார்டி,சார்லி சாப்ளீன் படங்கள், சந்திர பாபு நடித்த படங்கள் மற்றும் கார்டூன்கள்.
20. கடைசியாகப் பார்த்த படம்?
அயன் - 5-6 வருடங்கள் கழித்து தியேட்டருக்குச் சென்று பார்த்த படம் இதுதான்.
21. பிடித்த பருவகாலம் எது?
வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
செளந்தர்ய லஹரி முடிந்த பின்னர், சிவானந்த லஹரீ ஸ்லோகங்களுக்கும் பொருள் எழுதவேண்டும் என்று தோன்றியது. அதற்காக மீண்டும் மீண்டும் அதைப் படித்துப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன். சமீபத்தில் திரு சுந்தரண்ணா அளித்த தேசிகர் அருளிய ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகத்தையும் அவ்வப்போது படித்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மிக அரிதாகவே, மாதக்கணக்கில் அது அப்படியே இருக்கும். அவ்வாறு மாற்றினாலும் மாதங்கியே மீண்டும் வேறு ஒரு உடையில் வருவாள் :)
24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : என் அலுவலகத்தில் எனது அறைக்குப் பின்னால் உட்கார்ந்து கத்தும் குருவி மற்றும் அணில்களின் சப்தம். இவற்றை ஈர்ப்பதற்காக வீட்டிலிருந்து அரிசி, மற்றும் பழங்கள் கொண்டுவந்து ஜன்னல் சுவற்றில் வைத்து வருகிறேன்.
பிடிக்காதது : டிராபிக் ஜாமில் கேட்கும் பல ஹாரன்களது சேர்ந்த சப்தம்.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா - அமெரிக்காவின் மற்ற இடங்கள் இதை விடக் குறைந்த தொலைவு என்றே நினைக்கிறேன்.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படி ஏதும் இருக்கறதாகத் தெரியல்லையே?. சுலபமாக ஏமாறுவது ஒரு திறமையாக இருப்பின் அது இருக்கிறது அளவுக்கதிகமாகவே!.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பிறரது மனதை வருத்துவது.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அவ்வப்போது புகையிலை/ஜர்தா பீடா போட்டச் சொல்லும் எண்ணம்.
29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
சுற்றுலாத் தலம் என்று இல்லாவிடினும் எனது பூர்வீகர்கள் வசித்த சின்னமன்னூர் (கம்பம்- தேனி அருகில்).ஆஸ்டிரேலியா நான் போகாத ஒரு கண்டம், அதனால் மட்டுமல்லாது கங்காரு மீது ஒரு காதல், ஆகவே அங்கு செல்ல விருப்பம் இருந்தது சில-பல வருஷங்கள் முன்பு. பசுமையான வயல்வெளிகளுக்கு இடையில் இருக்கும் புராதனக் கோவில்கள், அதிலும் விழா இல்லாத காலங்களில்.
30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?
வேதம் பயின்று (குறிப்பாக சுக்ல யஜுர்வேதம்), அதன் வழி வாழ ஆசை
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!