Tuesday, December 25, 2007

பரசுராம ஜெயந்தி....



மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் (தசாவதாரம் அப்படின்னு சொன்னா நம்ம மக்கள் கமலஹாசனை தேடக் கூடும்) ஆறாவது அவதாரம் பரசு ராமர் அவதாரம். இன்று அந்த பரசுராமரின் ஜெயந்தி. ஏனோ தெரியவில்லை, கிருஷ்ண ஜெயந்தி போல, ராம நவமி போல இது பிரசித்தமாக கொண்டாடப் படுவதில்லை. நரசிம்ம ஜெயந்தி கூட பல இடங்களில், குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் கொண்டாடுவதை அறிவேன்.


ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் ஐந்தாவது மகனாக பிறந்தவர் பரசுராமன். மிகுந்த பெருமைக்கு உரிய ஸ்ரீவத்ஸ கோத்திர வழக்கப்படி அவருக்கு உபநயனம் மற்றும் வேத அத்யயனம் போன்ற்வை செய்விக்கப்பட்டது. பிருகு முனிவரின் முந்தைய சாபத்தினால் இவரிடம் ஷாத்ர குணம் மேலோங்கி இருந்தது.(இந்த சாபம் இறைவனுக்கு ஏற்பட்டதல்ல, ஆனால் ஜமதக்னியின் தாயால், ஜமதக்னிக்கு அடுத்த தலைமுறைக்கு ஏற்பட்ட சாபம். அந்த தலைமுறையாக ஸ்ரீவிஷ்ணு அவதரிக்கிறார்) அரசர்களுக்கு உரிய எல்லா கலைகளையும் கற்றார். சிவ பெருமானை தினமும் உபாசித்து, தவம் மேற்கொண்டதால், ஈசன் இவரது பக்தியினை மெச்சி தன்கையில் உள்ள மழு என்னும் ஆயுதத்தின் அம்சமாக இன்னொரு மழுவினை தோற்றுவித்து பரசுராமருக்கு தந்தார்.


பதிவிரதைகளில் பரசுராமரின் தாய் ரேணுகாதேவிக்கு தனியிடம் உண்டு. ஆற்றில் குளித்துவிட்டு, அந்த ஆற்று மணலில் குடம் செய்து அதில் நீர் எடுத்து வருவாராம். இவ்வாறான தாய் மீது தந்தைக்கு கோபம் ஏற்பட்டு, தந்தையின் கட்டளையால் தாயைக் கொன்று 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற தர்மத்தை நிலைநாட்டினார். பின்னர் தந்தையின் வரத்தால் தாயை உயிர்பித்தார். தன் தாய் கொல்லப்பட காரணமான சித்ரரதன் என்னும் அரசனையும், அவனது குலத்தை தனது பரசு என்னும் மழூவால் கொன்றார்.


கர்த்தவீர்யார்ஜுனன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாட வருகையில் ஜமதக்னி முனிவரது ஆஸ்ரமத்திற்கு வருகிறான். அங்கு ஜமதக்னியும், ரேணுகாதேவியும் அவனை உபசரிக்கின்றனர். அவர்களிடத்து இருக்கும் காமதேனுவை அபகரிக்கிறான் அரசன். இதனை அறிந்த பரசுராமர், நேராக அரசனிடம் சென்று போரிட்டு கர்த்தவீர்யார்ஜுனனைக் கொன்று காமதேனுவை மீட்டுவருகிறார். கர்தவீர்யார்ஜினனின் மகன்கள் தந்தையை இழந்ததால் பழிக்குப் பழியாக ஜமதக்னியை கொன்றுவிடுகின்றனர். இதன் தொடர்பழியாகத்தான் பரசுராமர் 21 தலைமுறைக்கு க்ஷத்திரிய வம்சம் தலையெடுக்க விடாது அழித்து வந்தது புராணம்.


ஸ்ரீவிஷ்ணுவின் இந்த அவதாரம் 2 யுகங்கள் நிலைத்திருக்கிறது. இராமாவதாரத்தில் ராமச்சந்திர மூர்த்தியால் கர்வபங்கப் படுத்தப்பட்டபின், கிருஷ்ணாவதாரத்தில் கர்ணனுக்கு (அவன் க்ஷத்திரியன் என்று அறியாத வரையில்) வில்வித்தை கற்றுத் தருகிறார். இவர் தனது இறுதிக் காலத்தில் தனது பரசினை தூக்கி எறிந்த இடம்தான் இன்றைய கேரளா. இதனாலேயே கேரளப் பகுதிக்கு பரசுராம க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு. பரசுராமர் பல இடங்களில் கோவில்களைக் கட்டி பூஜித்து தான் செய்த கொலைகளால் தன்னை பிரம்மஹத்தி அண்டாமல் பார்த்துக் கொண்டாராம். அரசர்களை கொன்ற பாவம் தீர மகேந்திர மலையில் தவமிருந்து சிவனிடம் சீரஞ்சீவி வரம் பெற்றாராம்.

எனக்குத் தெரிந்து பரசுராம அவதாரத்திற்கு உண்டான கோவில் என்று ஏதும் தெரியவில்லை. படிப்பவர்கள் யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

Friday, December 21, 2007

மார்கழி நீராட்டு....



பொழுது விடிவதற்கு முந்திய அதிகாலை நேரத்தை பிரும்ம முகூர்த்தம் என்றும் உஷத் காலம் என்றும் சொல்கிறோம். இந்த நேரத்தில் ஸ்நானம்/குளித்தல் என்பது ஆரோக்கியம் என்கிறது ஆயுர்வேதம். ஆயுர்வேதத்திற்கு பெயர் போன கேரளாவில் இன்றும் மக்கள் அதிகாலை நீராடுதலை கடைபிடிக்க காணலாம். விடியலில் நீராட்டுவது சித்தத்தை குளிர வைக்கும், சூடேறிய மூளைப் பகுதி குளிர்ச்சியடைந்தால், சிந்தனை மிக சுறுசுறுப்பாக நடைபெறும். நமது உடலில் ஒன்பது துவாரங்கள் இருக்கிறது. இவை இரவும், பகலும் மலத்தை ஏற்படுத்துகிறது. இரவு உறக்கத்திற்கு பின் உடலை, அதிலிருக்கும் இந்த துவாரங்களைச் சுத்தம் செய்து கொள்ளுதலே இந்த ப்ராத ஸ்நானம். இதனை செய்கையில் அகமர்ஷண சூக்தம் என்னும் பிரார்த்தனை செய்து கொள்ள கூறுகிறார்கள். அகமர்ஷண - என்றால் பாவத்தை ஒழிக்கும் என்று பொருள். இவ்வாறாக உடல் தூய்மை மட்டுமின்றி உள்ளத் தூய்மைக்கும் வழிகாட்டியுள்ளனர் நம் பெரியோர்.



நீராடுதலில் தமிழ் மக்களுக்கு ஒரு விசேஷ விருப்பம் இருந்திருக்கிறது. நெடுங்காலமாக் நீராட்டத்தை தங்கள் இன்ப விளையாட்டுகளில் ஒன்றாக கருதி வந்திருக்கிறார்கள். புது நீராடல், காவிரி ஆடல், கடல் ஆடல் போன்றவை சங்க இலக்கியங்களில் இருப்பதன் மூலமாக அக்கால மக்கள் நீராட்டினை சிறப்பாக கொண்டாடியது தெரியவருகிறது. இக்காலத்தில் நமக்கு ஷெவர் தவிர ஏதும் தெரியாத நிலைக்கு வந்துவிட்டோம். நம்மில் பலருக்கு ஆறு/குளம் போன்றவற்றில் நீராட தெரிவதில்லை. நமக்கு அடுத்த தலைமுறைக்கு, கிணறு என்றாலே என்ன என்று தெரியாது என தொன்றுகிறது. பாவை நோன்பின் பகுதியாக நீராடலும் இருந்திருக்கிறது. இதனை திருவேம்பாவை எப்படிச் சொல்கிறது என்று பார்க்கலாம்.

குளத்தைக் கண்டதும் ஓசை எழும்படியாக தண்ணிரைக் கையால் அடித்துக் குடைந்து நீராட வேண்டும் என்ற ஆசை அப்பெண்களூக்கு ஏற்படுகிறது. மேலும் நீரில் குடைந்து நீராடும்போது இறைவனைக் குறித்து பாடுகிறார்கள். எந்த காரியம்/வேலை செய்தாலும் ஈசனை மனதில் கொண்டிருக்க வேண்டும் என்பதை இவ்வாறாக சொல்கிறார் மாணிக்க வாசகர். இவர்கள் புனல் பொங்க நீராடுகிறார்களாம்.


பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப கொங்கைகள்
பொங்க குடையும் புனல் பொங்க பங்கயப் பூம்புனல்
பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

இவர்கள் குதித்தபோது தண்ணீர் பொங்குகிறது. மேலும் ஒருத்தி " ஐயோ குளிருமே" என்கிறாள். இன்னொருத்தி 'எப்பெருமான் ஆடும் சிதம்பரத்தை நினைத்துக் கொண்டு நீரில் இறங்கிவிடு, குளிர் தெரியாது" என்கிறாள். "சீதப்புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி" சிற்றம்பலத்தில் ஆடும் பெருமானை வாயாரப் பாடி நீராடினால் குளிருமில்லை நடுக்கமும் இல்லை என்பது குறிப்பு.

தண்ணீரிலே ஒருவிதமாக அடிப்பதன் மூலமாக மிருதங்க சப்தம் போன்ற ஒலி எற்படச் செய்வார்களாம். இந்த அபூர்வகலை பற்றி மேலும் அறிய முய்ற்சிக்கிறேன். பாகவதத்தில் ராசலீலையில் இருப்பதாக தெரிகிறது. பார்க்க வேண்டும்.

இதே போல கோதையும் மார்கழி நீராட்டினை தனது பாவை நோன்பின் ஒரு பகுதியாக கொண்டு, "மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்" என்று மார்கழி நீராட்டுக்கு வேண்டுவனவாக சில பொருட்களை குறிப்பிடுகிறார்.

இந்த மார்கழி நீராட்டினை நினைவுபடுத்தும் விதமாக ஸ்ரீவில்லிப் புத்தூரில் கோதை நாச்சியாருக்கு தைலக் காப்பு உற்சவம் நடக்கிறது. இந்த விழாவினை " தண்டியல் சேவை" என்று கூறுகிறார்கள். திருமுக்குளத்தின் ஒருபகுதியில் நீராட்ட மண்டபம் என்றே ஒரு மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் எழுந்தருளும் ஆண்டாள் ஒரு காலை ஊன்றிக் கொண்டும், மற்றொரு காலை தொங்கவிட்டுக் கொண்டும் நிறைந்த தலை முடியினை விரித்துக் கொண்டு இருப்பதும், அந்த முடிக்கு அர்ச்சகர்கள் நறுமணம் கமழும் தலத்தை தேய்த்துவிடும் அழகே அழகு. இது முடிந்தபின் குளக்கரையில் திருமஞ்சனம் நடக்கும். இவ்வாறாக மார்கழியில் இருதினங்களில் இது நடக்குமென தெரிகிறது.

Wednesday, December 12, 2007

பாவை நோன்பு....




மனதில் ஒர் உறுதி கொண்டு அதை வாக்காலும், உடலாலும் எள் அளவும் தவறாது நிறைவேற்றுவதே நோன்பு. கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு வீடாக சென்று தூங்குபவர்களை எழுப்பி அழைத்துக் கொண்டு நதிக்கரைக்கோ அல்லது குளத்திற்கோ சென்று நீராடிய பின் மண்ணில் பாவை பொம்மை பிடித்து வைத்து பூஜை செய்வார்கள். இதன் தாத்பர்யம் என்ன?. இறைவனை நாயகனாகவும், உயிர்கள் நாயகியாகவும் உருவகம் கொண்டு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்து விடுவித்தலே இந்த் நோன்பு. அதாவது பக்குவப்பட்ட உயிர்கள் முன்பே துயில் நீக்கி, மற்ற உயிர்களின் துயிலுணர்த்தி, இறையருளில் சேர்ப்பித்தலே இந்த பாவை நோன்பு. இந்த நோன்பு/பூஜையில் இப்பெண்கள் பாடும் பாட்டுக்கள் விளையாட்டும், வேடிக்கையுமாக இருப்பினும் ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்தக் கூடியது.

இந்த நோன்பின் பயனாக இப்பெண்கள் வேண்டுவது யாது?. இவர்கள் இரு பயன்களை முன்னிட்டு பாவை நோன்பிருக்கிறார்கள். ஒன்று நாட்டில் நல்ல மழை பொழிந்து செழிக்க வேண்டும் என்றும் இன்னொன்று நல்ல கணவனை அடைய வேண்டும் என்பது. (இப்போது தெரிகிறதா ஏன் தற்காலத்தில் பாவை நோன்பு இல்லை என்று?) இவ்விரண்டினையும் பெறுவதற்கு இறையருள் அவசியம் என்று உணர்ந்ததால் அவர்கள் இந்த நோன்பிருந்து வழிபட்டனர்.

பாவை நோன்பை பற்றி சங்க இலக்கியத்திலும் (பரிபாடலில்) அம்பா ஆடல் என்று கூறப்பட்டிருக்கிறதாம். வயது முதிர்ந்த பெண்கள் நோன்பு நோற்கும் சடங்கு முறையினை சொல்லிக் கொடுக்க அதன்படி சிறியவர்கள் ஒரு தவமாக இதனை செய்தார்களாம். மார்கழி மாதத்தில் நிறைமதி நாளாகிய திருவாதரையில் இத்திருவிழா தொடங்குகிறதாகவும், வைகை ஆற்றங்கரையில் நோன்பிருந்ததாகவும் பரிபாடலில் சொல்லப்பட்டுள்ளதாக அறிகிறோம். பரிபாடலின் காலம் ஆண்டாள், மாணிக்கவாசகருக்கும் முந்தையது என்பதால் இந்த நோன்பு அவர்களுக்கும் முன்பிருந்தே இருப்பது புலனாகிறது. (நன்றி: நடராஜன் எழுதிய "பாவை நோன்பு", பிரதிபா பிரசுரம்)
காத்யாயினி நோன்பு என்பது பற்றி ஸ்ரீமத் பாகவத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. கோகுலத்து குமரிகள் ஹேமந்த ருதுவின் முதல் மாதத்தில் அதாவது மார்கழியில், சூரிய உதயத்திற்கு முன் எழுந்து யமுனையில் நீராடி, அங்குள்ள ஈரமணலில் அம்பிகையின் பாவை உருவமைத்து காத்யாயினி விரதத்தை நடத்தினார்களாம்.

[அன்னை பராசக்தி, காத்யாயன மகரிஷியின் மகளாக பிறந்தாளாம், அப்போது அவளது பெயர் காத்யாயினி. (இதுவே பின்னர் திரிந்து காத்தாயி என்றானதோ?) திருவிழிமிழலை கோவில் அம்பிகை பெயர் காத்யாயினி. அன்னையின் 51 பீடங்களில் இவள் ஒட்டியாண பீடத்திற்கு உரியவளாக சொல்லப்படுவள்]

பாவை நோன்பை பற்றி திருப்பாவையில் நிறைய குறிப்புக்கள் காணக் கிடைக்கிறது. நோன்பிற்கு உரிய செயல்களை "கிரிசைகள்" (கிரியைகள்) என்கிறார் கோதை. நோன்பிற்கான உறுதியாக சில கிரியைகள் ஏற்றுக் கொண்டும், சில கிரியைகளை விடுத்தும் செயல்படுவதாக சங்கல்பம் செய்கிறார். பாவை நோன்பிருக்கையில் கோதை விலக்கியவையாக குறிப்பிடுவது இரண்டாம் பாடலில் வருகிறது.பால், நெய் உண்ணுதல், கண்களுக்கு அஞ்சனமிடுதல், மலரலங்காரம் செய்துகொள்ளல், மற்றும் பிறருக்கு தீமை செய்யாதிருத்தல், சூரிய உதயத்திற்கு முன் நீராடுதல், தான-தருமம் செய்தல் என்று எப்போதும் கடைபிடிக்க வேண்டிய சில நன்நெறிகளையும் சேர்த்து சங்கல்பித்துக் கொள்கிறாள்.

ஆயிற்று நோன்பிற்கான சங்கல்பம், இனி சிரத்தையுடன் தொடர வேண்டுமே?. உடனேயே நோன்பின் பயனை கூறி எல்லோருக்கும் சிரத்தையினை வரவழைக்கிறார் மூன்றாம் பாடலில். என்ன பலனாம்?, நாடெங்கும் தீங்கு இன்றி இருக்கும், மாதம் மும்மாரி பொழியும், செந்நெல் சிறப்பாக விளையும், பசுக்கள் நிரம்பப் பால் கறக்கும், எங்கும் செல்வம் நிறையும் என்று மக்களின் ஜீவாதாரத்திற்கு வேண்டியவற்றை பலனாக கூறி உற்சாகப்படுத்துகிறாள். பின்னர் இருபதாம் பாடலில் நோன்பு முடிக்க வேண்டி பொருட்களான விசிறி, கண்ணாடி போன்றவற்றை பெரிய பிராட்டியிடம் கேட்கிறார். மேலும் இருபத்தாறாவது பாடலில் நோன்பு முடிப்பதை கொண்டாட வெண்சங்கம், பறைகள், மங்கள விளக்கு, கொடி, விதானம் எனப்படும் மேல் கூறை விரிப்பு ஆகியவற்றை கேட்கிறார். பின்னர் 27ஆம் பாடலில் நோன்பின் சன்மானமாக சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் போன்ற பலவிதமான நகையலங்காரங்களும் புத்தாடைகளும் அணிந்து அக்காரவடிசல் எனப்படும் பால்சோறு உண்பார்களாம். அதுவும் எப்படி?, அந்த அக்காரவடிசல் தெரியாதவாறு நெய் மூ(டி)ழ்கியிருக்க, அதனை உண்கையில் அந்த நெய் முழங்கை வரை வழிய உண்பார்களாம். ஆக பாவை நோன்பினை எப்படி கொண்ட வேண்டுமென பாடி, கொண்டாடி காட்டியிருக்கிறாள் கோதை.

இவை தவிர பழங்காலத்தில் பெண்கள் கணவனின் ஆயுள் விருத்திக்காக பல நோன்புகள் நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் குறிப்பாக மார்கழி, தை, மாசி மாதங்களில் நடந்த நோன்புகளாவன; நித்திய சிருங்கார நோன்பு, பொம்மை நோன்பு, அட்லத்தி நோன்பு (தெலுங்கு பேசும் மக்கள் இன்றும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்), சிட்டிப் பொட்டு நோன்பு போன்றவை.

Tuesday, December 11, 2007

மார்கழியின் மகிமை...








மாரி வேந்தனை வென்று பனியரசன் ஆட்சி ஆரம்பிப்பதை கட்டியங் கூறிக் கொண்டு வருகிறது மார்கழி. அவ்வரசனது வெற்றியினை கொண்டாடும் விதமாக கரும்பு செழிக்கிறது, அவரை முகை அவிழ்க்கிறது. மலர்கள் மட்டுமின்றி மக்கள் மனதிலும் ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறது. எலும்பை உருக்கும் பனியிருந்தாலும், அதனை பொருட்படுத்தாது, இம்மாதத்தின் ஒவ்வொரு நாளையும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.


முன்பெல்லாம் மார்கழி மாதமென்றால் விடியற்காலை மூன்று மணியிலிருந்தே சிறுமிகள் தெருவினை அடைத்து கோலம் போடவும், அதற்கு வண்ணந்தீட்டுவதும், மலரலங்காரம் செய்வதும். வாசலில் விளக்கு ஏற்றுவதுமாக இருப்பர். நாலு, நாலரை மணிக்கு இல்லத்திலிருக்கும் ஆண்கள், சிறுவர்கள் குளியல் முடித்து ஜப-தபங்களை செய்து பின் ஓரிடத்தில் கூடி ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தபடி வீதி வலம் வருவதும் தினம் நடக்கும்.



சந்திரனின் சுழற்சியினை கொண்டு சொல்லப்படும் சாந்திரமான பஞ்சாங்கத்தில் மார்க்க சீர்ஷம் என்றும், செளரமானத்தில் தனுர்மாதம் என்றும் இம்மாதம் வழங்கப்படுகிறது. சாந்திரமானத்தின்படி பார்த்தால் அமாவாசைக்கு அடுத்த நாளே மாதம் பிறந்துவிடுகிறது. (அப்பாடி தப்பித் தவறி யாராவது படித்து ஏன் இவ்வளவு சீக்கிரமா மார்கழி பதிவுன்னு கேட்டால் சொல்ல பதில் ரெடி). ஆன்மிக வழியில் செல்ல தலைமையான மாதம் (மார்க்க - வழி; சீர்ஷம் - தலைமையானது) இது. நமக்கு உத்தராயணம் என்று சொல்லப்படும் 6 மாதங்களும் தேவர்களுக்கு ஒரு பகல் என்றால் தக்ஷிணாயினத்தின் (இரவு) கடைசி மாதமான மார்கழி அவர்களுக்கு உஷத்/அருணோதய காலம் அல்லவா?. இந்த மாதத்தில் செய்யப்படும் பூஜை, ஜபம், பஜனை போன்றவற்றிற்கு இருமடங்கு பலன் என்று கூறப்படுகிறது.



இம்மாத திருவாதிரையன்று தான் வியாக்ர பாதருக்கும், பதஞ்சலிக்கும் சிவபெருமான் நடராஜ கோலத்தை அருளி இருக்கிறார். திருமால் கண் விழிக்கும் வைகுண்ட ஏகாதசி இந்த மாதம் தான். இராப்பத்து-பகற்பத்து உற்சவங்களும் இந்த மாதமே நடை பெறுகிறது. கீதையில் கிருஷ்ணன், தான் மாதங்களில் மார்கழியாக இருப்பதாக என சொல்லியிருக்கிறான். இராமாயணத்திலும் மார்கழி மாதச் சிறப்பு சொல்லப்படுகிறது. ராமன் காட்டிற்கு வந்து, பஞ்சவடியில் இருக்கும் காலத்தில் சரத் ருது முடிந்து ஹேமந்த ருது ஆரம்பிக்கிறது. ராமன், சீதை, லக்ஷ்மணனுடன் கோதாவரிக்கு நீராட செல்கிறான். அந்த சமயத்தில் லக்ஷ்மணன் ஹேமந்த ருதுவினையும், மார்கழி மாதத்தையும் புகழ்கிறான். இந்த வர்ணனையை ஆரம்பிக்கும் வால்மிகி 'பகவானான ஸ்ரீ ராமசந்திரனுக்கு மிக பிடித்த ஹேமந்த ருது வந்தது' என்கிறார்.



தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், இயற்பகை நாயனாரும், நந்தனாரும் அவதரித்த மாதம் இந்த மாதமே.


சாந்திரமான பஞ்சாங்கத்தின்படி பார்த்தால் இன்று மார்கழி 3ஆம் நாள். செளரமானத்தின்படி பார்த்தால் வரும் திங்கள் (17-12-2007) கிழமை மாதம் பிறக்கிறது.

Monday, December 10, 2007

மார்கழி திங்களல்லவா.....

எல்லா மாதங்களும் வருகின்றது, நாமும் அந்தந்த மாதத்தில் வரும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம். மார்கழி பிறக்கப் போகிறது. நம் மனத்திலும் பல கேள்விகள்.


அதென்ன எல்லா மாதங்களை விட மார்கழி உசத்தி?. பரந்தாமன் மாதங்களில் நான் மார்கழி என்றதால் மட்டுமா?.


ஏன் திருப்பாவை-திருவெம்பாவையினை இந்த மாதத்தில் பாராயணம் செய்கிறோம்?.


குறிப்பாக அருணோதய வேளையில் இந்த பாசுரங்களை பாட/பஜீக்க வேண்டிய அவசியம் யாது?


பாவை நோன்பிருந்தாளாமே கோதை?...அதென்ன பாவை நோன்பு?

வல்லியம்மா கூட ஏதோ G-சாட் மெசெஜ் குடுத்திருக்காங்களே 'மார்கழி ஆராட்டு'ன்னு அதென்ன?


ஆமாம், இரண்டு பாவைகளிலும் இணையான கருத்துகள் என்று ஏதேனும் இருக்கா?

கே.ஆர்.எஸ் ஏற்கனவே கேட்டிருக்கிறார் என்ன பதிவுகள் வருமென. எவ்வளவு எழுத முடியுமோ தெரியவில்லை. பராம்பிகை அருளிருந்தால், மேலே சொன்ன சில கோர்வையான எண்ணங்களை எழுதலாம் மார்கழித் தொடராக.

25 முக்தி நிலை / ஜோதியில் கலத்தல்.



பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணத்தை தழுவியே ஆக வேண்டும். இதனை தடுக்க முடியாது. ஆனால் மறுபடி பிறவி ஏற்படாமல் தடுப்பது நம் கையில்தான் இருக்கிறது. முக்தி, பிரம்மத்துடன் இணைவது, ஜோதியில் கலப்பது என்றெல்லாம் சொல்வது நடக்க வேண்டுமானால் இறந்தால்தான் முடியுமா?. உயிருடன் இருக்கும் போதே பிரும்ம ஞானியாக முடியும், அதனையே வள்ளலார் பெருமான் மரணமில்லா பெருவாழ்வு என்கிறார். இதனைத்தான் "பிறவாமை" என்று காரைக்கால் அம்மையாரும், பட்டினத்தாரும் சொல்லியிருக்கிறார்கள். சங்கரர், ரமணர் போன்ற பல முனி ஸ்ரேஷ்டர்களும் இதனைக் விளக்க முற்பட்டுள்ளனர்.


மானிட பிறப்பு முக்திநிலை அடைய ஆத்மா-அனாத்மா விவேகம் வேண்டும். இந்த விவேகம் கிட்டுவதற்கோ குருவின் அருளும் அருகாமையும் அவசியம். "ஈசனருள் நமக்கே" என்றிருப்பவர்களுக்கு இறைவன் அருள் செய்கிறான். குருவுக்காக காத்திருத்தலும், கிடைத்தபின் அவரை சரணடைதலும் மிக முக்கியம். ஒரு ஜீவனுக்கு நல்ல குரு கிடத்தல் என்பதே பூர்வ ஜென்ம பலத்தால்தான். அண்டத்தில் நடக்கும் அருணோதயம் எவ்வாறு இருள் நீக்குகிறதோ, அதுபோல பிண்டத்திற்குள்ளிருக்கும் அறியாமை என்னும் இருள் நீக்க வரும் அருணோதயமே குரு.

எனக்கு நல்லதோரு தந்தையாக மட்டுமல்லாது, பிரம்மோபதேசம் செய்வித்து குருவாகவும், குப்தமாக ஸ்ரீவித்யா பற்றிச் சொல்லிக் கொடுத்து ஆசானாகவும் என்னை வழிந்டத்தி வ்ந்த என் தந்தை ஸ்ரீ வி.ஆர். கணபதி, இன்று மதியம் 2 மணி அள்வில் ஸ்ரீபுரம் அடைந்தார். அன்னை மீனாக்ஷி அவரது ஆத்மா சாந்தி அடைய அனுகிரக்கட்டும்.

Monday, December 3, 2007

ஹரிவராசனம்




ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,
தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாடலைக் கேட்க இங்கே சுட்டவும் (பதிவர் திரு. சதங்காவிற்கு நன்றி.)