Saturday, November 22, 2008

திருநெல்வேலி - பாபநாசம் [நவ-கைலாசங்கள் -2]

நவ கைலாசங்கள் பற்றி ஆகஸ்ட் மாதத்தில் எழுத ஆரம்பித்தேன். ஒரு தொய்வுக்குப் பிறகு மீண்டும் இதனை எழுத தொடங்குகிறேன். இந்த தொடரினை முடிக்க, நவகிரஹங்களும் அருளட்டும். நவகைலாசங்களில் முதலாவதாக வரும் பாபநாசம் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.

நவக்கிரஹங்களில் முதலாவதான சூரியனின் சக்தி அளப்பரியது. சூரியனது இயக்கத்தாலன்றோ பயிர், உயிர் செழிக்கிறது?. சூரியன் இல்லாத ஒரு உலகம் கற்பனை கூடச் செய்ய முடியாதே?. இதே போல ஜோதிஷ சாஸ்திரத்தின்படி, மனித ஆயுளில் ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட காலம் ஆதிக்கம் பெற்று இருக்கும். அந்தந்த திசையில் என்ன பலன்கள், அவற்றின் தாக்கம் மனித வாழ்வில் எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் சுப்பையா வாத்தியார் விரிவாக அவரது வகுப்பறையில் பாடம் நடத்தி வருகிறார். சாதாரணமாக நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு போன்றவற்றிற்கு சூரியனை வழிபடச் சொல்லியிருக்கிறார்கள் ஆன்றோர். சூரியனின் அருள் வேண்டுபவர்கள் இன்றும் ஆதித்திய ஹ்ருதயம் போன்றவற்றை பாராயணம் செய்யக் காண்கிறோம். மேலும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்வதும், விரதமிருப்பதும் இன்றும் பல இல்லங்களில் நடக்கிறது. இவை எல்லாம் சூரிய வழிபாட்டின் ஒர் அங்கம் தான். சூரியனை வழிபடுவதன் மூலம் நவக்கிரஹங்களின் பாதிப்பு குறையும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

இந்த பதிவில் பார்த்தது போல அகஸ்தியர் தாமிரபரணியில் இட்ட முதல் பூ கரை ஒதுங்கிய இடம் பாபநாசம். பாப-விநாசம் என்றும் பாப-நாசம் என்றும் கூறுவதிலேயே இந்த இடத்தின் பெருமை நமக்கு புலனாகிறது. நாம் செய்த பாபங்களை எல்லாம் நாசம்/நசியச் செய்து, நம்மை நல்வழிப்படுத்துகிறார் இங்கிருக்கும் இறைவன். பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி சமவெளியை அடைவது இந்த பாப-விநாசத்தில்தான் என்றும் கூறக் கேட்டிருக்கிறேன்.

இந்த இடத்தில்தான் அகஸ்தியரும் தவமிருந்து அம்மை-அப்பனின் திருமணக் கோலத்தைக் கண்டதாகச் சொல்லப்படுகிறது, அவருக்கு சிறு கோவிலும் இருக்கிறது. சிவ தம்பதியினர் தமது தெய்வீகத் திருமணத்தை அகஸ்தியருக்கு காண்பித்த இடம் பாபநாசம் என்று கூறுகின்றனர். இங்கு சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்து சூரியனை வழிபட்டிருக்கிறார் ரோமசர். இந்த இடத்தில் விராட புருஷன் தவம் செய்து ஈசன் அருள் பெற்றான் என்றும் சொல்கிறார்கள். பொதிகையின் புகழைக் கேள்விப்பட்ட நாரதரும் இங்கு வந்து, முக்களா விருக்ஷத்தின் கீழ் இருந்த சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாக கூறப்படுகிறது. நாரதர் ஒரு சமயம் இந்திர லோகத்தில் இந்திரனிடம் மலைகளின் மகத்துவம் பற்றி பேசுகையில் மேரு போன்ற மலைகள் எவ்வாறு மகத்துவம் பெற்றன என்று இந்திரன் கேட்க அப்போது மலைகள் தவம் புரிந்து ஈசனிடம் அருள் பெற்றன என்றும் அவ்வாறு அருள் பெற்ற மலைகள் மேரு, பொதிகை, கைலாயம் என்று கூறினாராம். மேலும் தேவேந்திரனே தனது பிரம்மஹத்தி தோஷம் தீர பாபநாசத்தில் வழிபட்டதாகக் கூறுகிறார்கள்.

இங்கு இருக்கும் ஈசனுக்கு முக்காளா-லிங்கர், பரஞ்சோதி-லிங்கர், பழமறை நாயகர், வைராச லிங்கர் பாபவிநாசேஸ்வரர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகிறது. இந்த கோவில் பாண்டியர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு மீன் இலச்சினை பொறிக்கப்பட்ட கல் மண்டபங்களும், பாண்டியன் விக்கிரம சிங்கன் கல்வெட்டுக்களும் இருப்பதாக தெரிகிறது. சுமார் 80 அடி உயரமுடைய ராஜ கோபுரம், கர்பகிரஹத்தைச் சுற்றி மூன்று பிரகாரங்களும், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், திருமண மண்டபம் போன்றவற்றுடன் கூடிய ஆகம விதி வழுவாது கட்டப்பட்டிருக்கும் கோவில் என்று கூறுகின்றனர். இந்தக் கோவிலைக் கட்டிய பாண்டியன், விக்ரமசிங்கனது பெயரில் இந்த ஊர் விக்ரமசிங்க புரம் என்றும் அழைக்கப்பட்டதாம்.


பிற்கால பாண்டிய அரசர்களில் ஒருவர் சமணமதத்தை சார்ந்தவராக இருந்து சைவ பக்தர்களை மிகுந்த அல்லலுக்கு உள்ளாக்கினாராம். அப்போது சமணத்தை ஏற்காத, மிகுந்த சிவபக்தி உடைய குடும்பம் ஒன்று ஊரை விட்டு வெளியேறுகிறது. குடும்பத்தவர் பல இடங்களுக்குச் செல்லுகையில் குழந்தைகளான அண்ணன், தங்கை பிரிந்து விடுகின்றனர். பலகாலம் கழித்து காசியில் அவர்கள் சந்திக்கையில் கவரப்பட்டு தமது உறவுமுறை அறியாமல் அறியாமல் திருமணமும் முடித்துவிடுகின்றனராம். மணமான பிறகு தமது உறவின் முறையினை அறிந்து வருந்தி ஈசனிடம் முறையிட, அசிரீரியாக அவர்களுக்கு பாபவிமோசனம் சொல்லப்படுகிறது. அந்த அசிரீரியின் கூற்றுப்படி இருவரும் கரிய நிறத்தாலான ஆடை அணிந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்றும், எந்த தீர்த்தத்தில் நீராடுகையில் அவர்களது கரிய நிற ஆடை வெண்மை அடைகிறதோ அப்போது அவர்களது பாவம் விலகும் என்றும் அறிகின்றனர். இதன்படி எல்லா தீர்த்தங்களிலும் நீராடி வருகையில் பாபநாசத்தில் அவர்கள் கோவிலுக்கு எதிரில் உள்ள படித்துறையில் நீராடி எழுகையில் தமது ஆடைகள் வெண்மை அடைந்ததைக் கண்டு தமது பாபங்கள் நீங்கப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

இங்கு சித்திரைத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரிகிறது. ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பின்னர் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. கோவில் எதிரில் இருக்கும் படித்துறையில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் என்று கூறுகின்றனர் பெரியோர். சிவராத்திரியும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.


தாமிர பரணி மஹாத்மியத்தில் இந்த கோவிலுக்கு எதிரில் இருக்கும் படித்துறைக்கு பெயர் "இந்திர கீல தீர்த்தம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. சித்திரை மாதத்தில் இங்கு முறைப்படி நீராடுபவர்களுக்கு ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்குமாம். தென் தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கான சூரியனார் கோவிலாகத் திகழ்கிறது இந்த க்ஷேத்திரம் என்றால் மிகையில்லை.

இந்த ஊரின் சிறப்பாக எனக்கு கூறப்பட்டதை எழுதியிருக்கிறேன். படங்கள் கூகிளாண்டவரிடமிருந்து பெறப்பட்டவை, இணையத்தில் இவற்றை அளித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்தவர்கள் இன்னும் அதிக செய்திகளை அளித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

Friday, November 14, 2008

துலா மாத காவிரி நீராடல், கடைமுகம், முடவன் முழுக்கு

மேஷம் முதல் தொடங்கும் பன்னிரண்டு ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும் நாட்களை 12 மாதங்களின் பெயராகச் சொல்வது வழக்கம். அதில் துலா மாதத்தில் சூரியன் சஞ்சரிப்பதை துலா மாதம் என்கிறோம். இந்த மாதத்தில் தான் கங்கை, யமுனை, நர்மதா, சிந்து போன்ற நதிகள் எல்லாம் நமது காவேரி நதிக்கு வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதாக ஐதீஹம். ஒரு முறை கங்கா நதி பிரம்மாவிடம், எல்லோரும் தன்னிடம் வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதுபோல தான் எங்கே போய் தனது பாபங்களைப் போக்குவது என்று கேட்க, பிரம்மாவும், கங்கை முதலான எல்லா நதிகளும் துலா மாதத்தில் காவிரிக்குச் சென்று தமது பாபங்களை களையலாம் என்று கூறினாராம்.

இந்த ஐப்பசி மாதத்தில் மஹா நதிகளுக்கெல்லாம் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாப-விமோசனம் அருளுகிறாள் காவிரி. இந்த மாதத்தில் காவிரி நதியில் குறைந்த பக்ஷமாக மூன்று நாட்களாவது ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலனைத் தரும் என்று கூறியுள்ளனர் ஆன்றோர். காவேரி மஹாத்மியத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.


ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு. தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கூட, காவேரிக்கரை சார்ந்த க்ஷேத்திரங்களுக்குச் சென்று சில தினங்கள் தங்கி இந்த ஸ்நானத்தை சங்கல்பத்துடன் செய்வது வழக்கம். பிரயாணிக்க இயலாத பெரியோர்கள் தங்கள் தினமும் நீராடும் நீர்நிலைகளில் காவிரியை பிரார்த்தித்து எழுந்தருளச் செய்து நீராடுகின்றனர். ஐப்பசி கடைசி நாளில் (நாளை), ஸ்நானம் செய்வதை "கடைமுழுக்கு/கடைமுகம்" என்கிறார்கள். மாயவரம் என்று கூறப்படும் மயிலாடுதுறையில் இருக்கும் சைவ-வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகளும் கடைமுகத்தன்று தீர்த்தவாரி செய்தருளுகிறார்கள்.




ஒருசமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடத்து வருந்தி பிரார்த்திக்கிறான்.


அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கி, "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசிரீரியாக அருளுகிறார். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அனுக்ரஹிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" என்ற பெயர் பெற்றது.


மருத் வ்ருதே! மஹாதேவி மஹாபாகே மநோஹரே
ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் மம பாபம் வ்யபோஹய


[பரமேஸ்வரனின் சிரஸில் இருர்ந்து பூமிக்கு வந்த மஹா பாக்யம் உடையவளே, பார்க்கப் பார்க்க தெவிட்டாத உருவம் கொண்டவளே, ஹே காவேரி! உன்னை நமஸ்கரிக்கிறேன், எனது பாபங்களைப் போக்கியருள்வாய்]

என்பதாக பிரார்த்தனை செய்து நாமும் முடிந்தால் ஒரு தினமாவது, அதுவும் இயலாத பக்ஷத்தில் மனதால் காவேரி நதியில் நீராடி இறையருளைப் வேண்டுவோமாக.

Wednesday, November 5, 2008

சமர்த்த ராமதாஸர் - 1

கலியுகத்தில் பக்தி மார்க்கத்தை கொண்டு இறைவனடி சேர்வதே எளிதென்று பல மஹான்களும் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொல்லியதால் மற்றவை பயனற்றது என்று பொருளல்ல. இந்த யுகத்தில் கர்ம-ஞான மார்க்கங்கள் எளிதில் பின்பற்றக்கூடியவையாக இருக்காது என்பதால் மட்டுமே கலியில் பக்தியை அடிப்படையாக வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்வகர்மாவினை விடாது செய்து அத்துடன் பரம பவித்ரமான பக்தியை ஆஸ்ரயிக்க வேண்டும் என்பதுதான் பெரியவர்கள் சொல்லிச் சென்றது. இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே போதேந்திரர், திருவிசை ஐயாவாள் என்று சில நாம பக்தி சிரோன்மணிகளை இங்கு கண்டோம். இன்று நாம் காண இருப்பது சமர்த்த ராமதாசர். தியாகராஜர், திருவிசையார், போதேந்திரர், மற்றும் சதாசிவ பிரம்மேந்திரர் போன்றே இவரும் ராம பக்தியில் திளைத்தவர். ராமநாமத்தை பலகோடி முறை ஜபித்து அதன் மூலம் ராமசந்திர மூர்த்தியைப் பிரத்யக்ஷமாக கண்டவர். அவரது வரலாற்றினை அறியாலாமா? [ராமதாஸர் பற்றி திராச எழுத ஆரம்பித்து அப்படியே வைத்திருக்கிறார். அவர் ராமதாசர் பாடல்களை/பஜனைகளைப் பற்றி எழுத இருக்கிறார் என்றே நினைக்கிறேன், இது ராமதாசர் வரலாறு மட்டுமே]



பாரதத்தை அன்னியர்கள் ஆக்ரமித்த 17ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் ராமதாஸர். இவர் மஹாராஷ்ட்ராவில் உள்ள சதாரா என்னும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஜம்ப் என்னும் கிராமத்தில் பிறந்தவர். சூர்யாஜி பந்த்-ரேணுபாய் என்னும் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1605ஆம் ஆண்டு ராமநவமி தினத்தில் பிறந்தவர். தாய்-தந்தையர் இவருக்கு வைத்த பெயர் நாராயணன் என்பது. சிறுவயதில் இவரது உடலில், பின்பகுதி சற்று நீண்ட வால் போன்ற பாகம் இருந்ததாம்.ன் பின்னர் வயதான போது அது மறைந்துவிட்டதாக கூறுப்படுகிறது. பிற்காலத்தில் இவரை ஸ்ரீ ஹனுமானது அம்சம் என்று கூற இதுவும் ஒரு காரணம். சிறு வயதில் தந்தையை இழந்தாலும், அவரது தாயும் அண்ணனும் இவருக்கு காலத்தில் உபநயனம் போன்றவற்றைச் செய்து வைத்து வளர்த்து வந்தனர்.

சிறுவயதிலேயே தமக்கு காயத்ரி மந்திரம் தவிர வேறு ஏதேனும் ஒரு மந்திரம் உபதேசம் செய்து வைக்க வேண்டும் என்று தனது அண்ணாவிடம் கேட்க, அவரும் காலம் வருகையில் உபதேசம் செய்து வைப்பதாகக் கூறியிருக்கிறார். தனது மன உந்துதலால் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஹனுமன் கோவிலில் நாட்கணக்கில் அன்ன-பானம் ஏதும் இன்றி தியானத்தில் அமர்ந்து விடுகிறார். அப்போது ஹனுமனது தரிசனம் மட்டுமன்றி அவரிடமிருந்தே ஸ்ரீராம மந்திரம் உபதேசமாகிறது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் நாராயணனது செயல்களில் அதிக மாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது.

வேத பாராயணம், போன்ற நேரங்கள் போக மற்ற நேரங்களில் ஹனுமன் சன்னதியில் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதும், எப்போதும் ராமநாம ஜபமுமாக இருப்பதைக் கண்ட சகோதரர் நாராயணனுக்கு திருமணம் செய்விக்க முடிவு பண்ணுகிறார். அண்ணனின் மனத்தில் இருக்கும் எண்ணத்தை அறிந்த நாராயணன் வீட்டை விட்டு முழுதாக வெளியேறி நாஸிக் அருகில் ஒரு கிராமத்தில் குடில் அமைத்துக் கொண்டு, பிக்ஷை எடுத்து வாழத் தொடங்குகிறார்.





இவ்வாறு தீவிர பிரம்ஹசரிய வாழ்கை வாழும் காலத்தில் மஹாமந்திரமான காயத்ரியையும், ஸ்ரீராம த்ரயோதசாக்ஷரி (ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்) மந்திரத்தையும் முன்று கோடி முறை ஜபித்து அதன் மூலம் ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் பெறுகிறார். ஸ்ரீ ராமரின் உத்தரவின் பேரிலேயே பாரதம் முழுவதும் பயணப்பட்டு த்ரயோதசாக்ஷரி மந்திரத்தை பரப்ப முடிவு செய்கிறார். இந்த தரிசனத்துக்குப் பின்னரே அவருக்கு சமர்த்த ராமதாஸ் என்ற பெயர் வழங்கலாயிற்று. தனது குருவான ஸ்ரீ ஹனுமனுக்கு கோவில் கட்டி அதனருகிலேயே தங்கி வந்தார்.


இவர் யாத்திரையில் இருந்த போது ஒரு கிராமத்தில் ஒரு வாலிபன் அகால மரணமடைகிறான். அவன் மனைவி ராமதாசரை கண்டு கண்ணீருடன் வணங்க, இவரும் அவளது நிலையறியாது அவளுக்கு பிள்ளைப் பேற்றினை ஆசிர்வாதிக்கிறார். திகைத்துப் போன பெண் தன் நிலையைக் கூறி தாம் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறவே சென்றுகொண்டு இருப்பதாகக் கூறுகிறாள். ஸ்வாமிகளோ, ஸ்ரீ ராமர் அருளால், இந்த ஜன்மத்திலேயே உனக்கு பிள்ளை பிறக்கும் என்று கூறுகிறார். பின்னர் அந்த பெண்ணுடன் தானும் சுடுகாட்டுக்குச் சென்று மந்திர உச்சாடனம் செய்து தீர்த்தத்தை சடலத்தின் மீது தெளிக்கிறார். அந்த ஆண்மகன் தூக்கத்தில் இருந்து முழிப்பது போல எழுகிறான். இருவரும் ராமதாசரை வணங்கிச் செல்கின்றனர். இவர்களுக்குப் பிறக்கும் மகனே பிற்காலத்தில் உத்தவர் என்ற பெயர் பெற்று ராமதாசரின் முதன்மைச் சீடராகிறார்.

Sunday, November 2, 2008

பாலசுப்ரமண்யம் பஜேஹம்.....



ஸ்ரீ முத்துஸ்வாமி திக்ஷிதர் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். அவருக்கு முருகப் பெருமானிடமான பக்தி சிறப்பானது. சுப்ரமண்ய-ஸ்வாமியே தீக்ஷதருக்கு ஷோடசி உபதேசம் செய்து வைத்ததாக கூறுவர். தீக்ஷதரது "ஸ்ரீ சுப்ரம்மண்யாய நமோஸ்துதே" என்னும் க்ருதி நாமறிந்ததே. இந்த வரிசையில் தீக்ஷதர் பண்ணிய இன்னொரு க்ருதி "பாலசுப்ரமண்யம் பஜேஹம்" என்னும் சுருட்டி ராகத்தில் அமைந்த க்ருதியை இன்று பார்க்கலாம். குஹனை தமது குருவாகக் கொண்ட தீக்ஷதர், கமலாம்பா நவாவரண க்ருதிகள் பண்ணும் போது விநாயகரை வணங்கி "மகாகணபதி வரதுமாம்" என்று யானை முகத்தானை வணங்கியபின் தமது குரு வணக்கமாக பாலசுப்ரமண்யம் பஜேஹம் என்று தொடங்கும் இந்த க்ருதியை பண்ணியதாக அறிகிறோம். இந்த வடமொழி க்ருதியையும் அதன் பொருளையும் பார்க்கலாமா?

பாலசுப்ரமண்யம் பஜேஹம் பக்தகல்பபூருஹம்
ஸ்ரீ பால சுப்ரமண்யம் பஜேஹம்

[பால சுப்ரமண்யனை பஜனை செய்கிறேன். பக்தர்களுக்கு கல்பவ்ருக்ஷத்தை போல வேண்டியதெல்லாம் தருபவரான ஸ்ரீ பாலசுப்ரமண்யனை பஜனை செய்கிறேன்]

நீலகண்டஹ்ருதாநந்தகரம் நித்யஸுத்தபுத்த முக்தாம்பரம்
ஸ்ரீபால சுப்ரமண்யம் பஜேஹம்

[நீலகண்டனான பரமசிவனது மனதில் ஆனந்தத்தை உருவாக்குபவரும், நித்யமானதும் (நித்ய), பரிசுத்தமானதும் (ஸுத்த), அறிவுமயமானதும் (புத்த), தளைகளற்றதும் (முக்தம்), ஆகாச வெளியாகவும் (அம்பரம்) விளிக்கப்படும் பரபிரம்மான பாலசுப்ரமண்யனை பஜனை செய்கிறேன்]


வேலாயுததரம் ஸுந்தரம் வேதாந்தார்த போதசதுரம்
பாலாக்ஷகுருகுஹாவதாரம் பராசக்தி ஸுகுமாரம்தீரம்

[வேல் என்னும் ஆயுதத்தை ஏந்தியவரும், வடிவழகரும், வேதங்களின் மூலப்பொருளான ப்ரணவ மஹா-மந்திரத்தை உபதேசிக்கக்கூடிய நிபுணத்துவம் உடையவரும், பரமேஸ்வரனது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி குரு குஹனாக அவதாரம் செய்தவரும், அன்னை பராசக்தியின் அழகிய திருக்குமரனும், வீர-தீர பராக்ரமம் கொண்டவரான பாலசுப்ரமண்யனை பஜிக்கிறேன்]

பாலிதகீர்வாணாதி ஸமூஹம் பஞ்சபூதமய மாயாமோஹம்
நீலகண்டவாஹம் ஸுதேஹம் நிரதிசயாநந்த ப்ரவாஹம்


[தேவர்கள் முதலான நல்லோர்களைக் காப்பாற்றுபவரும், பஞ்சபூதங்கள் என்ற மாயையால் ஜீவர்களை மயங்கச் செய்பவரும், மயிலை வாஹனமாகக் கொண்டவரும், அழகிய மேனியுடையவரும். நிகரில்லாத பரமானந்தப் பெருவெள்ளத்தை பெருக்கெடுக்கச் செய்பவருமான சுப்ரமண்யனை பஜிக்கிறேன்]

ராகம் : சுருட்டி : ஆதி தாளம் : பாடியவர் சீதா ராஜன் அவர்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA



சுப்ரம்மண்யோஹம்!
சுப்ரம்மண்யோஹம்!
சுப்ரம்மண்யோஹம்!.