Sunday, May 18, 2008

முருகன் தமிழ் கடவுள் மட்டுந்தானா?....



சமிபத்தில் யார் தமிழ் கடவுள் என்று மிகுந்த பரபரப்பான பதிவு ஒன்றை நம் கே.ஆர்.எஸ் எழுதினார். இந்த பதிவினை முடிக்கையில் கந்தன், கார்த்திகேயன் என்றெல்லாம் அழைக்கப்படும் முருகன் மட்டும் தமிழ் கடவுள் அல்ல, மால், ஹரி என்றெல்லாம் சொல்லும் மஹாவிஷ்ணுவும் தமிழ் கடவுளே என்பதற்கு ஏகப்பட்ட தமிழ் இலக்கிய சான்றெல்லாம் தந்து முடித்தார். சாதாரணமாகவே சில தீவிர முருகனடிமைகள், முருகனை ஏதோ வட மொழிக்கு பிடிக்காத தெய்வம் மாதிரி சித்தரித்தும், உச்சரித்தும் மகிழ்வார்கள். வடமொழி முருகனை போற்றவில்லையா?, இவர்கள் சொல்வது போல பார்பன தீவிரவாதத்தால் தான் தெய்வானை என்ற தெய்வமே உருவானதா?. வடக்கில் குமரன், கந்தன் வனங்கப்படுவதில்லையா?.தமிழகத்தில் மட்டும், அதுவும் தமிழ் மட்டுந்தான் முருகனை தெய்வமென போற்றியுள்ளதா?. இதற்க்கெல்லாம் சில குறிப்புக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்வாமி என்பதே சம்ஸ்க்ருதத்தில் சுப்ரமணியரைத்தான் குறிக்கிறது. அமரகோசம் என்று ஒரு நிகண்டு/அகராதி வடமொழியில், அதில் "சுப்ரமணியர்" என்ற பதத்திற்கு "தேவசேனாபதி; சூர; ஸ்வாமி; கஜமுகானுஜ" என்பதாக பொருள் சொல்லப்பட்டிருக்கு. மற்ற தெய்வங்களை சொல்லும் போது இந்த 'ஸ்வாமி' என்ற் ப்ரயோகம் இல்லை. ஆக "ஸ்வாமி" என்பது முருகனை மட்டுமே குறிப்பிடுகிறது.

ஷண்முகனது அவதாரம் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுப்ரமண்ய அவதாரம் என்று சொல்லும் போது, சாந்தோக்ய உபநிஷத் ப்ரம்மாவின் மானச புத்திரான ஸனத்குமாரர் தான் ஸ்கந்தனாக/கந்தனாக அவதரித்தார் என்று சொல்லுகிறது. முருகனின் 'ஞானபண்டிதன்' என்னும் பெயரும் இதை உறுதி செய்வதுபோல் இருக்கிறது. இருள் கடந்த ஓளி ஞானாக்னி என்றெல்லாம் சாந்தோக்யம் கூறுவதாக தெரிகிறது. சுப்ரமண்யர் பற்றி வேதத்தில் இல்லை என்று சொல்லி வருபவர்களுக்காக பரமாச்சார்யார் சில வேத விற்பனர்களை ஆராய வைத்து சொல்லியிருக்கிறார். சிவ புராணத்தில் த்ரிபுர ரஹஸ்யத்தில் ஸனத் குமாரர் சிவ குமரனாக பிறப்பது பற்றிய முழுத்தகவலும் (சரவணப் பொய்கை, கார்த்திகை பெண்கள், ஷண்முக ரூபம் எல்லாம்) இருக்கிறது. இதில் அன்னை பராசக்தியே சரவணப் பொய்கையாக வந்து ஆறு குழந்தைகளைத் தாங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் ஒருவிதத்தில் சரிதானே!, வாயுவாலும் அக்னியாலும், கங்கையாலும் தாங்கமுடியாத ஈசனின் தேஜஸை அம்பிகையால் மட்டுந்தானே தாங்க இயலும். கங்கையால் தாங்கப்பட்டதால் தான் அவன் காங்கேயன். அக்னிச் சுடரில் பிறந்தவர், என்பதையே 'அக்னி பூ' என்று சொல்கிறது அமர கோசம். அதுவும் எப்படி "ஸேநானி; அக்னி: பூ குஹ:" என்று சொல்கிறது. இன்றும் நாம் முருகனை தேவசேனாபதி என்றும் குகன் என்றும் சொல்கிறோம். அக்னிக்கு அதிதேவதையாக ஸ்கந்தனே சொல்லப்பட்டிருக்கிறது.


ரிக்வேத பஞ்ச சூத்திரத்தில் மஹேஸ்வரனை பற்றிச் சொல்லும் போது, "குமாரனை வணங்குகிற பிதா" என்பதாக சொல்லியிருப்பதாக தெரிகிறது, இன்று நாம் சொல்லும் தகப்பன் சாமி எனப்படும் ஸ்வாமிநாதன் தானே இது?. போதாயன மஹரிஷி (இவர் வேதகாலத்து ரிஷி, கர்மாக்களை பிரித்து, அதற்கு மந்த்ர-தந்த்ரங்களை வகுத்தவர்களில் ஒருவர்) தான் எழுதிய தர்ம சூத்ரத்தில் தேவ தர்பணங்களில் ஸ்கந்தனும் அவனது பரிவாரங்களும் இடம் பெறுவதாக தெரிகிறது. பாணினியின் வியாகரணத்திலும், பதஞ்சலி யோக சூத்திரத்திலும் ஸ்கந்தன், விசாகன் என்ற பெயர்களில் முருகனைப் பற்றி விஸ்தாரமாக கூறப்பட்டிருக்கிறதாம்.


கந்தனுக்கு கார்த்திகேயன் என்னும் பெயர் இருப்பது நமக்கு தெரியும், அதன் காரணமும் அறிவோம். கார்த்திகேயன் என்னும் பெயர் வடதேசத்தில் பலகாலமாக வழக்கத்தில் இருக்கிறது. நாம் இங்கு பார்வதி-பரமேஸ்வர குமாரர் என்றால் கணேசனையும் சொல்வோம், முருகனனையும் சொல்வோம். ஆனால் வட தேசத்தில் கார்த்திகேயன் மட்டுமே குமாரனாக கருதப்படுகிறார். வால்மிகி ராமாயணத்தில் வசிஷ்டர் ராம-லக்ஷ்மணர்களுக்கு ஸ்கந்தனது கதையை விரிவாகக் கூறி வேறெங்கும் இல்லாத சிறப்பாக இந்த இடத்தில் ஸ்கந்தனது கதையை கேட்பதால் எற்படும் நன்மைகளுக்கு மட்டும் பலஸ்ருதி சொல்லி அதில், பின்வருமாறு சொல்கிறார், அப்பா, காகுத்ஸா, இந்த லோகத்தில் ஒரு மனுஷன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும், தீர்க்காயுள், புத்ர, பெளத்ராதிகள், எல்லாம் கிடைத்து முடிவில் ஸ்கந்த லோகத்தில் அவருடன் நித்ய வாசமும் செய்யலாம்". இதன் தாக்கத்தாலேயே காளிதாசனும் குமார ஸம்பவம் என்று பெயர் வைத்தார் போல. வட இந்தியாவில் கார்த்திகேயன் பிரம்மச்சாரி. ஆதி சங்கரர் காலத்தில் மீமாம்ஸ கொள்கையில் தீவிரமாக காசியில் வாழ்ந்த குமரில பட்டர் கந்தனின் மறு அவதாரமாகவே போற்றப்படுகிறார். பழங்கால வட இந்தியாவின் கோடிகளில் வாழ்ந்த அரசர்களின் பெயர் "குமார குப்தன்" என்றெல்லாம இருந்திருக்கிறது. குமரனை வெற்றியின் அடையாளமாக வணங்கி அவனது பெயரை தமது சிறப்புப் பெயர்களாக கொண்டுள்ளனர் என்றும், பழங்காலத்தில் ஷண்முகன் மயில் வாகனத்தில் இருப்பது போன்ற நாணயங்கள் (குஷாணர் காலத்தில்) கிடைத்திருப்பதும் தெரிகிறது.


ஆதிசங்கரரது சுப்ரமண்ய புஜங்கமும், அவர் ஸ்தாபித்த ஷண்மதங்களில் கெளமாரமும் ஆதிசங்கரரின் முருக வழிபாட்டிற்கு கட்டியம் கூறுகிறது. அதிலும் அவர் புஜங்கத்தில் 'ந ஜானே ந ஜானே' என்பதாக இன்னொரு தெய்வம் இல்லை, இல்லை என்று இருதரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

________________________________________________________
இன்று (19-05-2008) வைகாசி விசாகம். இவ்வாறாக வேத காலத்திலிருந்தே வணங்கப்பட்ட கந்தக்கடவுள் ஈசனின் தேஜஸிலிருந்து உருவான தினமே வைகாசி விசாகம். 400-450 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய நாட்டில் ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஊரில் சண்முக சிகாமணிக்கும் சிவகாமசுந்தரி என்பவருக்கும் ஒரு ஆண் மகவு பிறந்தது. ஐந்து வயதாகியும் அந்த குழந்தைக்கு பேச்சு வராதது கண்டு பெற்றவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். யாரோ ஒரு யதி அவர்களிடம் திருச்செந்தூர் சென்று ஒரு மண்டல காலம் ஸமுத்ரத்தில் நீராடி செந்திலாதிபனை வணங்கி விரதமிருக்கச் சொன்னார்கள். அவ்வாறு இருந்தும் குழந்தைக்கு பேச வராதது கண்டு வருந்தி, மறுநாள் உஷத் காலத்தில் மகனுடன் கடலில் இறங்கி உயிர்விட முடிவு செய்துவிடுகின்றனர். அன்றிரவு அர்ச்சகர் வடிவில் வந்த குமரன் குழந்தையை தட்டி எழுப்பி அவரது நாவில் ஷடாக்ஷர மந்த்ரத்தை எழுதி, குழந்தாய் சீக்கிரமாக விஸ்வரூப தரிசனம் காண வருமாறு பணித்துவிட்டு செல்கிறார். குழந்தையும் உடனே பெற்றோரை 'அம்மா-அப்பா' என்று அழைத்து எழுப்புகிறது. அவர்களுக்கு தங்கள் அன்பு மகன் பேசுவது கண்டு மிகுந்த வியப்பும், மகிழ்ச்சியும். நடந்ததை குழந்தை தெளிவாகச் சொன்னது. மூவரும் செந்திலாண்டவன் சன்னதிக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் கண்டு விரதம் முடித்து ஊர் திரும்பினர். இந்த குழந்தைதான் பின்னாளில்,

...ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே ......

...சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே ......

என்றெல்லாம் பாடிய குமர குருபரர். இவரது இன்னொரு படைப்பு மீனாக்ஷி பிள்ளைத்தமிழ்.
__________________________________________________________
த்(3)ருஸி ஸ்கந்த மூர்த்தி: ஸ்ருதெள் ஸ்கந்த கீர்த்தி:
முகே(2) மே பவித்ரம் ஸதா தச் சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்(4)ருத்யம்
கு(3)ஹே ஸந்து லீநா: மமாஸேஷ பா(4)வா:


என்னுடைய கண்கள் ஸ்கந்த மூர்த்தியே உங்களையே பார்க்கட்டும், .என் காதுகள் உங்கள் புகழையே கேட்கட்டும். என் நாக்குகள் எப்போதும் உங்கள் புனிதப் புகழ் பாடட்டும். என் கைகள் தங்களுக்கான நற்காரியங்களை செய்யட்டும்! என்னுடல் தங்களுக்கான சேவையில் ஈடுபடட்டும். இது போல என் எண்ணங்களும் எப்போதும் தங்களிடமே உரைந்து போகட்டும்.






வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!


சக்திவேல் முருகனுக்கு அரோகரா!!!

161 comments:

cheena (சீனா) said...

வைகாசி விசாகத்தன்று குமரனைப் பற்றிய ஒரு அருமையான பதிவு. விளக்கமான பதிவு. சக்தி உபாசகனிடமிருந்து நரசிம்மர், குமரன் - என்று மற்ற பதிவுகளும் வருவது மௌலியின் புலமையையும், ஞானத்தினையும், ஆன்ம்மீக ஈடுபாட்டினையும் காட்டுகிறது.

நல்வாழ்த்துகள் மௌலி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அண்ணா
எனக்கு மிக மிகப் பிடித்த பதிவு!
ஏற்கனவே இரன்டு முறை வாசித்து விட்டேன்!
மூன்றாவது முறையும் வாசித்து இதோ வருகிறேன்!

சக்தி வேல் முருகனுக்கு - அரகரோகரா!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சீனா சார்.

நான் அத்வைதி, ஆதிசங்கரர் சொன்ன எல்லாம் எனக்கு தெய்வங்களே!...
இஷ்ட தெய்வம் சக்தி...குலதெய்வம் வேங்கடமுடையான், இல்லத்தில் வணங்குவது பஞ்சாயதம் என்னும் 5 தெய்வங்களை....:)

வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த பதிவில் புலமை.ஞானம் என்றெல்லாம் சொல்ல ஒன்றுமில்லை. நான் படித்தவற்றை சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான்.

மெளலி (மதுரையம்பதி) said...

//அண்ணா
எனக்கு மிக மிகப் பிடித்த பதிவு!
ஏற்கனவே இரன்டு முறை வாசித்து விட்டேன்!
மூன்றாவது முறையும் வாசித்து இதோ வருகிறேன்! //

நீர் 2-3 முறை படிக்கிறீங்கன்னா ஏதோ வில்லங்கமுன்னு தோணுது...

ஏதாச்சும் தப்பாயிருந்தா சொல்லுங்க கே.ஆர்.எஸ் தீர்ப்பை மாத்தி எழுதிடுவோம்...:-)

ambi said...

அப்படி போடுங்க அருவாள! வைகாசி விசாகத்துக்கு சரியான பதிவு.

சபாஷ்! சரியான ... ஹிஹி

ambi said...

// 'ந ஜானே ந ஜானே' என்பதாக இன்னொரு தெய்வம் இல்லை, இல்லை என்று இருதரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.
//

அதானே! இது மட்டுமா!

கோபால கிருஷ்ண பாரதி கூட முருகனின் அப்பாவை பற்றி பாடும் போது "சாபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? தில்லை சபாபதிக்கு..னு அழகா பாடி இருக்கார்.

மஹாராஜபுரம் சந்தானம் அவர்களின் கணீர் குரலில் கேட்டு பாருங்க.

இருந்தாலும் ஒத்துக்க மாட்டேங்கறாங்களே!

நான் பொதுவா தான் சொன்னேன். :p

மெளலி (மதுரையம்பதி) said...

வாய்யா அம்பி...என்ன சுற்றுப்பயணமெல்லாம் ஆச்சா?...சொன்னாரு திரச. :-)

//அப்படி போடுங்க அருவாள! வைகாசி விசாகத்துக்கு சரியான பதிவு.

சபாஷ்! சரியான ... //

ஆரம்பிச்சுட்டீரா கொம்பு சீவ?... :-)

ambi said...

//ஏற்கனவே இரன்டு முறை வாசித்து விட்டேன்!
மூன்றாவது முறையும் வாசித்து இதோ வருகிறேன்!//

@KRS, மூன்று முறை என்ன முப்பது முறை வாசித்தாலும் ஒரே அர்த்தம் தான்!னு மதுரையம்பதி அண்ணா மனசுக்குள்ள சொல்றாரு பாருங்க. :p

@M'pathi, தரவு எல்லாம் ரெடியா இருகுல்ல? எதுக்கும் எடுத்து வெச்சுக்குங்க, பார்ர்டி எந்த நேரம் வேணாலும் பாயலாம். :))

ambi said...

//ஆரம்பிச்சுட்டீரா கொம்பு சீவ?... :-)
//

இல்லீங்கண்ணா! சில பேருக்கு வடைமொழில(பருப்பு வடையா? உளுந்து வடையா?) பாடினா முருகன் சன்னதியில திரை எல்லாம் போடறாங்களாம். அதான் ஏதோ என்னால முடிஞ்சது. :p

மெளலி (மதுரையம்பதி) said...

//தரவு எல்லாம் ரெடியா இருகுல்ல? எதுக்கும் எடுத்து வெச்சுக்குங்க, //

தரவெல்லாம் இல்லையப்பா, சான்றுகள் அதுவும் பரமாச்சார்யார் சொல்லி ஸ்ரீவத்ஸ் சோம வேத சர்மான்னு ஒரு பெரிய பண்டிதர் த்ரிபுர ரஹஸ்யமுன்னே ஒரு புத்தகம் (கையடக்கப் பிரதி, விலை 25ரூ) அந்தக் காலத்துல (1977)போட்டிருக்காரு...அதுல இதெல்லாம் தெளிவாயிருக்கு. இது பற்றி தெய்வத்தின் குரலிலும் லைட்டா சொல்லிச் சென்றிருப்பார் பரமாச்சார்யார்.

எல்லாத்துக்கும் மேலாக, சாந்தோக்யம், படித்து நாமே தெரிந்து கொள்ளலாம். :-)

Geetha Sambasivam said...

அட, மெளலியா இது?? ஆச்சரியமா இருக்கே? குருவோட மோதக் கிளம்பிட்டாரா? வாழ்த்துகள். சரி, நான் கொடுத்த குறிப்பு உபயோகமா இல்லையா, அதுக்கு முன்னாலேயே ப்ளாகியாச்சா?? உங்களுக்காக அரை மணி நேரம் செலவழிச்சேன், கூகிளாண்டவர் கிட்டே! :P

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா..

//அட, மெளலியா இது?? ஆச்சரியமா இருக்கே?//

ஏன்?...என்ன ஆச்சர்யம்?..
(1)அன்றே இதை அங்கேயே போட்டிருப்பேன்...போட்டிருந்தா எனக்கு இதுக்குள்ள 2-3 பட்டம் கொடுத்திருப்பாங்க....இங்கு லிமிட்டெட் ஆடியன்ஸ்...தவறாக நினைக்க பெயரிட ஆள் கிடையாது அஷ்டே!
(2)அன்று எனக்கு இது எங்கே இருக்குன்னு தெரியுமே தவிர, கரெக்ட்டா இடம் சொல்லுமளவு புத்தகப் பெயர் போன்றவை இல்லை.

//குருவோட மோதக் கிளம்பிட்டாரா? வாழ்த்துகள்.//

குருவா?, யார் கே.ஆர்.எஸ்-ஆ?, உங்களுக்கு அவர் மேல ஏதாச்சும் கோபம் இருந்தா அதுக்காக இப்படியா பழிவாங்கறது...என்னை மாதிரி மக்குகளை அவர் சிஷ்யனா ஏற்பாரா?..
ஏதோ நான் ஏகலைவன் மாதிரி தூரத்துல இருந்து பார்த்தே கற்கிறேன்.

//சரி, நான் கொடுத்த குறிப்பு உபயோகமா இல்லையா, அதுக்கு முன்னாலேயே ப்ளாகியாச்சா?? உங்களுக்காக அரை மணி நேரம் செலவழிச்சேன்//

உங்க குறிப்பு வரும் முன்னரே பப்ளிஷ் பண்ணிட்டேன்...ஆமாம், நான் கூகுளாண்டவரிடம் யாசிக்காமலா உங்களிடம் வருவேன்?. நான் உங்க கிட்ட மெயிலனுப்ப காரணம் நீங்க ஏதும் புத்தகம் வைத்திருப்பீர்கள், அதிலிருந்து வால்மிகியின் ஸ்லோகங்கள் அப்படியே கிடைக்கும் என்று நினைத்தேன்... :)

ambi said...

//ஏதோ நான் ஏகலைவன் மாதிரி தூரத்துல இருந்து பார்த்தே கற்கிறேன்.
//

பாத்து! கட்டை விரலை கேட்க போறாரு. :p

மெளலி (மதுரையம்பதி) said...

//பாத்து! கட்டை விரலை கேட்க போறாரு. //

ஏகலைவன் மாதிரின்னு தான் சொன்னேன்...ஏகலைவன் புத்திசாலி, ஆனா நான் மக்கு...சோ, என்னிடம் கட்டை விரல் கேட்க மாட்டாரு. :)

வல்லிசிம்ஹன் said...

அட, இன்னிக்கு இதைப் படிக்காம விட்டிருப்பேன். நல்ல வேளை கூகிளுக்கு வந்தேன்.
மௌலி பரமாச்சாரியார் எழுதினதை த் திருப்பிப் படிக்கிற மாதிரி இருந்தது. மிகவும் நன்றி. எதோ சொப்பனத்திலிருந்து மீள்வதற்காக விழித்து, ஜயா டிவி போட்டதுதான் தெரிந்தது. ஓஹோ வைகாசி விசாகம் என்று. ஷஷ்டிகவசம் கேட்டதும் மனசு ஒரு நிலைப் பட்டது. இப்போ உங்க பதிவையும் படித்தேன்.நல்ல நாள் தான் இன்று.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க வல்லியம்மா...நீங்க இந்தப்பக்கம் வந்ததே மிக பெரிசு...

அச்சோ ஆச்சார்யாளையெல்லாம் சொல்லாதீங்க...அவர் சொல்லியிருக்கார் இது பற்றி, அதுவும் இங்கு சான்றாக உயயோகம் ஆகியிருக்கு :)

ஆமாம் நேற்றைய பதிவு படிச்சீங்களா?, உங்களுக்கு பிடித்த சிம்மம் பற்றிய பதிவு..:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னைய வச்சி, வடை(மொழி)க்கு மாவாட்டணும்-னா இந்தத் தமிழ் தும்பிக்கு கேக்கவா வேணும்? :-)
ஹா ஹா ஹா!
முருகப் பெருமான் பேரை ஜபிங்கப்பா-ன்னு சொன்னா, பின்னூட்டம் ஃபுல்லா அடியேன் பேரை ஜபிக்கும் அளவுக்குப் போயாச்சா! அடக் கொடுமையே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// உங்களுக்கு அவர் மேல ஏதாச்சும் கோபம் இருந்தா அதுக்காக இப்படியா பழிவாங்கறது...//

அட, கீதாம்மாவுக்கு என் மேல கோபமா! சொல்லவே இல்ல!
அப்படியா கீதாம்மா? :-)

//என்னை மாதிரி மக்குகளை அவர் சிஷ்யனா ஏற்பாரா?//

அப்படிப் போடு! ஆச்சார்ய ஹிருதயம் பதிவைப் பாக்கலையாண்ணா?
நீங்க, கீதாம்மா, திராச-ன்னு மூனு குருவையும் வணங்கித் தானே துவங்கினேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கந்தன், கார்த்திகேயன் என்றெல்லாம் அழைக்கப்படும் முருகன் மட்டும் தமிழ் கடவுள் அல்ல//

சூப்பர்!
முருகன் "மட்டுமே" தமிழ்க் கடவுள் அல்ல! மாலவனும் தமிழ்க் கடவுள்-ன்னு அடியேன் சொன்னதைச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்!

ஆனால் கொம்பு சீவுற சில பேரு தான் முருகன் தமிழ்க் கடவுள் இல்லைன்னு கேஆரெஸ் சொல்லிட்டாரு-ன்னு மாங்கு மாங்கு-ன்னு போங்கு ஆட்டம் ஆடினாங்க!

இருந்தாலும் ஒத்துக்க மாட்டேங்கறாங்களே! நானும் பொதுவா தான் சொன்னேன். :p

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடமொழி முருகனை போற்றவில்லையா?, இவர்கள் சொல்வது போல பார்பன தீவிரவாதத்தால் தான் தெய்வானை என்ற தெய்வமே உருவானதா?//

தெய்வானை பதிவிட்டவர் தான் இதற்கு வந்து விளக்கம் அளித்து இன்னும் தெளிவு காட்ட வேண்டும்!

அதுவரை அடியேன் சொல்ல விழைவது இதுவே!
முருகனை வடமொழி போற்றவே இல்லை என்று யாரும் சொல்லவில்லை! அதான் ஸ்கந்தன் என்று அவன் போற்றப்படுவதாகச் சொல்லி இருக்கிறார்களே! கெளமாரம் என்று தனியான ஸ்தாபிதம் அல்லவா செய்தார் சங்கர பகவத் பாதர்!

ஆனால் முருகன் என்ற பெயர் வடமொழி இலக்கியங்களிலோ சுலோகங்களிலோ இல்லை! வேறு பெயர்களால் தான் அவன் கூறப்படுகிறான்! அதே போல் தான் மாயோனும்!

இதில் மையக் கருத்து என்னவென்றால்
முருகன், மாயோன் (திருமால்) என்பவர் பண்டைத் தமிழர் தெய்வங்கள்! ஸ்கந்தன், விஷ்ணு என்பவர் வடமொழி வழித் தெய்வங்கள்!
இரு பண்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று சேரத் துவங்கிய பின்னர் இது போன்ற வேறுபாடுகள் மறைந்து, முருகன்=ஸ்கந்தன், மாயோன்=விஷ்ணு என்று ஆகிவிடுகிறது! அவ்வளவே!

இதில் தாழ்ச்சி உயர்ச்சி ஏதும் இல்லை!

அவரவர் மொழியில் பண்பாட்டில் தெய்வம் குறித்த தொன்மங்களை அறியும் முயற்சி தான் யார் தமிழ்க் கடவுள் என்ற அடியேன் பதிவு!

No More, No Less!
And Nothing to Fuss! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முருகனைத் தமிழில் அறிந்து மகிழ எனக்கு எவ்வளவு பிடிக்குமோ,
அதே போல் சுப்ரமணியனை வடமொழியில் சுவைத்து மகிழவும் பிடிக்கும்!

குமார சம்பவம் என்ற அழியாத பேரிலக்கியமே இந்தப் பக்திச் சுவைக்குச் சான்று! மெளலி அண்ணா பதிவில் குமார சம்பவத்தைத் சொல்லவில்லை! நானே எடுத்துக் கொடுக்கிறேன்!

//மற்ற தெய்வங்களை சொல்லும் போது இந்த 'ஸ்வாமி' என்ற் ப்ரயோகம் இல்லை//

குமாரஸ்வாமி = ஸ்கந்தன்
பரமஸ்வாமி = சிவபெருமான்
பூவராகஸ்வாமி, லக்ஷ்மீ நரசிம்ம ஸ்வாமி...மிருத்யுஞ்ஜய ஸ்வாமி என்று பல தேவதைகளுக்கும் ஸ்வாமி என்கிற பிரயோகம் உள்ளது!

ஸ்வாமி=தலைவன்/நாதன் என்ற பொருளில் அனைத்து தெய்வங்களுக்கும் ஆகி வரும் சொல்!

//சாந்தோக்ய உபநிஷத் ப்ரம்மாவின் மானச புத்திரான ஸனத்குமாரர் தான் ஸ்கந்தனாக/கந்தனாக அவதரித்தார் என்று சொல்லுகிறது//

சனத்குமாரர் = என்றும் இளமையானவர்.
இவர் தான் குமார ஸ்வாமியாக உருக் கொண்டார் என்பது இந்த ஒரு உபநிடதம் மட்டுமே சொல்வது!
சனத்குமாரர் மகா குரு, ஞான வடிவர்! அதனால் குமாரஸ்வாமியும் ஞான பண்டிதன் என்பது எந்த அளவுக்குப் பொருந்தும் என்பது ஆய்வுக்குரிய விடயம்!

// அக்னிக்கு அதிதேவதையாக ஸ்கந்தனே சொல்லப்பட்டிருக்கிறது.
//

இதை மட்டும் சரி பார்க்கவும் மெளலி அண்ணா!
அங்காரகன் என்னும் செவ்வாய்க்கு அதி தேவதை தான் ஸ்கந்தன். அக்னிக்கு அல்ல என்றே நினைக்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோபால கிருஷ்ண பாரதி கூட முருகனின் அப்பாவை பற்றி பாடும் போது "சாபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? தில்லை சபாபதிக்கு..னு அழகா பாடி இருக்கார்//

தியாகராஜர் "ராம நீ சமானம் எவரோ"-ன்னு பாடி இருக்கார்! ராமா உனக்குச் சமானம் வேறு எவரோ?-ன்னு அதே மகராஜபுரம் சந்தானம் கணீர் குரலில் கேட்டுப் பாருங்க மிஸ்டர் அம்பி! :-)

'ந ஜானே ந ஜானே' என்று சங்கரர் ஸ்கந்தனைப் பாடுகிறார்.

அதே சங்கரர், 'ந சேதேவம் தேவோ' என்று அம்பிகை அவள் இல்லா விடில், சிவபெருமானே "ஜடமாகி" விடுவான் என்கிறார்.
சிவ் சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ
என்று ஜனனீ ஜனனீயில் தொடங்கும்! பொருளை மெளலி அண்ணா கிட்ட கேட்டுக்குங்க! :-)

அதே சங்கரர் 'கோவிந்தம் பஜ மூட மதே' என்கிறார்.
அதே சங்கரர் 'நாராயண பரோவக்யாத் அண்டம் அவ்யக்த சம்பவம்! நாராயணஹ பரஹ!" என்கிறார் பிரம்ம சூத்ர பாஷ்யத்தில்!

//இருந்தாலும் ஒத்துக்க மாட்டேங்கறாங்களே!
//

இப்படி அதி மொக்கைத்தனமான வாதங்களை வைத்து வைத்து
இல்லாத பேதத்தத்தை இருப்பதாகக் காட்டுவதும்
சொல்லாத பேதத்தத்தை சொல்வதாகச் சொல்வதும்
மொக்கைக்குத் தான் பயன்படும்! வேறு எதற்கும் அல்ல! :-)

பத்து முறை ஒருத்தரை முத்திரை குத்தினா, ஒரு முறையாச்சும் விழாதா என்ற நப்பாசை எல்லாம் ஒன்னும் நடக்காது இங்கிட்டு!

யாமும் சிவ தத்துவம் அறிவோம்!
யாமும் வடமொழி அறிவோம்!
அதனால்...
தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா! :-))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனி மீண்டும் பயனுள்ள பேச்சுகள்! வினாக்கள், அறியும் விழைவுடன்.

//ஆனால் வட தேசத்தில் கார்த்திகேயன் மட்டுமே குமாரனாக கருதப்படுகிறார்//

வடதேசத்தில் கார்த்திகேயன் பிரம்மச்சாரியா?
அப்படி என்றால் வள்ளி வடமொழிப் புராணங்களில் சொல்லப்படவில்லையா?
சரி, தேவயானையின் நிலை தான் என்ன?

மெளலி அண்ணா மற்றும் அறிந்தவர்கள் சொல்லி உதவுங்கள்!

//வால்மிகி ராமாயணத்தில் வசிஷ்டர் ராம-லக்ஷ்மணர்களுக்கு ஸ்கந்தனது கதையை விரிவாகக் கூறி//

சரியே! இராமாயணத்தில் ஸ்கந்தப் பெருமான் பேசப்படுவார்!
அதே போல் மகாபாரதத்திலும் ஸ்கந்தன் வருவார்! ஆனால் கொஞ்சம் மாற்றங்களுடன்!

அக்னி-ஸ்வாஹாவின் புதல்வராகவும் ஸ்கந்தன் சொல்லப்படுவாராமே! உண்மையா மெளலி அண்ணா?

//குமரில பட்டர் கந்தனின் மறு அவதாரமாகவே போற்றப்படுகிறார்//

ஆகா!
குமரில பட்டர் தானே சங்கரரை வழியனுப்பி விட்டு, நெல்-தீ மூட்டி தற்கொலை செய்து கொள்வது? அவரா ஸ்கந்தனின் அவதாரம்? புதிய செய்தி தான்!

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அருளிய குமரகுருபரர் கதையைச் சொன்னமைக்கும் நன்றி!
அடியேன் பிள்ளைத்தமிழ் பதிவுகளில், மீனாட்சி அன்னையைக் குமரகுருபரர் தாலாட்டும் காட்சிகளை இங்கு காணலாம்!

குமரன் (Kumaran) said...

//வைகாசி விசாகத்தன்று குமரனைப் பற்றிய ஒரு அருமையான பதிவு. விளக்கமான பதிவு. சக்தி உபாசகனிடமிருந்து நரசிம்மர், குமரன் - என்று மற்ற பதிவுகளும் வருவது மௌலியின் புலமையையும், ஞானத்தினையும், ஆன்ம்மீக ஈடுபாட்டினையும் காட்டுகிறது.//

வழிமொழிகிறேன்.

Geetha Sambasivam said...

//ஆகா!
குமரில பட்டர் தானே சங்கரரை வழியனுப்பி விட்டு, நெல்-தீ மூட்டி தற்கொலை செய்து கொள்வது? அவரா ஸ்கந்தனின் அவதாரம்? புதிய செய்தி தான்!//

@கே ஆர் எஸ், உங்களுக்கு இது தெரியாதுனா ஆச்சரியம் தான், ரா.கணபதி அவர்களின், "ஜெய, ஜெய, சங்கர" தொடரில் விரிவாக குமாரில பட்டர் பற்றிக் காணலாம். பரணீதரனும் ஓரளவு எழுதி உள்ளார். எதிலேனு நினைவில்லை.

//மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அருளிய குமரகுருபரர் கதையைச் சொன்னமைக்கும் நன்றி!
அடியேன் பிள்ளைத்தமிழ் பதிவுகளில், மீனாட்சி அன்னையைக் குமரகுருபரர் தாலாட்டும் காட்சிகளை இங்கு காணலாம்!//

என்ன கொடுமைடா இது சரவணா, "குமரகுருபரரின் திருப்பனந்தாள் காசி மடம்" பற்றிய சிறப்புப் பதிவே போட்டிருக்கேனே, என்னை எல்லாம் மதிச்சு யாராச்சும் வந்தால் தானே அதெல்லாம் தெரியப் போகுது? எல்லாம் ஒரே இடத்தில் "கும்மி" அடிச்சால்????:P

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.com/2006/07/87.html

fyi, kindly look into this for further ingo. thankees.

ஷைலஜா said...

இந்தப்பதிவிற்கு நேற்றே நான் அளித்த பின்னூட்டம் காற்றில் மாயமாய் மறைந்ததென்னே?!
சங்கம் வளர்த்த ஊர்க்காரருக்கு அழகான தமிழில் அழகன் முருகனைப்பற்றி எழுதவும் சொல்லித்தரணுமோ?தன்னை
அடக்கமாய் சொல்லிக்கொண்டாலும் மௌலியின் புலமை நமக்குப்புலப்படாமலா போய்விடும்?சாட்சி இந்தப்பதிவு!

வடநாட்டில் என்றால் பூனாவில் ஒருகோவிலில் இருந்த முருகன் சந்நிதிக்குப்பெண்கள்போகக்கூடாதாம்! கேட்டால் அவர் பிரம்மச்சாரி என்கிறார்கள்! அங்கே வினாயகருக்கு திருமணம் ஆகி சம்சாரியாக இருக்கிறார்...'நோ ஐயாம் ஸாரி 'என்று ஏதோ சொல்ல அங்கே வாயெடுத்தேன்..அப்றோம் எதுக்கு வம்புன்னு விட்டுட்டேன்.பம்பாய் செம்பூர்ல முருகன் கோயிலில்தமிழ்தான்முழங்குகிறது!
கர்நாடகாவில் சுப்ரம்ணயா என்கிறார்கள்.பெயர்கள் மாறினாலும் இறைவன் ஒன்றே அந்தமுருகன் நமக்கு தம்ழிக்கடவுளே!
ரவியின் விளக்கம் இங்கு பின்னூட்டத்தில் மிகவும் அருமை.

Geetha Sambasivam said...

//பாத்து! கட்டை விரலை கேட்க போறாரு. //

ஏகலைவன் மாதிரின்னு தான் சொன்னேன்...ஏகலைவன் புத்திசாலி, ஆனா நான் மக்கு...சோ, என்னிடம் கட்டை விரல் கேட்க மாட்டாரு. :)//

மறந்துட்டேன் சொல்ல, கட்டைவிரல் இல்லைனாலும், வில்லில் அம்பைக் கோர்த்து, மற்ற விரல்களால் அம்பைச் செலுத்த முடியும், இது நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான பூர்வமான உண்மை. இந்த ஏகலவ்யன் விஷயம் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன், எந்த அளவுக்கு நிஜம்னு! பார்க்கலாம்.

Geetha Sambasivam said...

அடுத்த விவாதத்தை ஆரம்பிச்சு வச்சுட்டேனோ? :P

Kavinaya said...

அருமையான பதிவு. பின்னூட்டங்களும் அருமை. எங்க ஊர்லல்லாம் நிறைய வடநாட்டாருக்கு கார்த்திகேயனைத் தெரிவதில்லை. அவனுக்காக அவங்க கோவிலுக்கு வரதுமில்லை.

//முருகப் பெருமான் பேரை ஜபிங்கப்பா-ன்னு சொன்னா, பின்னூட்டம் ஃபுல்லா அடியேன் பேரை ஜபிக்கும் அளவுக்குப் போயாச்சா! அடக் கொடுமையே!//

ஏன் ரவி, நீங்கதானே முருகனுக்கும் உங்களுக்கும் பேதமில்லைன்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க. அதான் அப்படி :)

ambi said...

//என்னை எல்லாம் மதிச்சு யாராச்சும் வந்தால் தானே அதெல்லாம் தெரியப் போகுது? எல்லாம் ஒரே இடத்தில் "கும்மி" அடிச்சால்????://


@geetha madam, ஹஹா! சபாஷ்! இத, இத இத தான் நான் எதிர்பார்த்தேன். :p

நான் தவறாமல் உங்கள் பதிவுக்கு வந்து இருக்கிறேன் என்பதை இந்த தருணத்தில் சொல்லி கொள்கிறேன். :))

ambi said...

//யாமும் சிவ தத்துவம் அறிவோம்!
யாமும் வடமொழி அறிவோம்!
அதனால்...
தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!//

ஷாந்தி! கேஆரெஸ் அண்ணா ஷாந்தி!

உங்க வாயை கிளறினா இன்னும் நிறைய தகவல்கள் வெளிய வரும்னு தான் நின் தமிழோடு கொஞ்சம் விளையாடினோம். :p

(யாருடா அந்த ஷாந்தி?னு எல்லாம் கேக்கபடாது!) :))

ambi said...

//கட்டைவிரல் இல்லைனாலும், வில்லில் அம்பைக் கோர்த்து, மற்ற விரல்களால் அம்பைச் செலுத்த முடியும், இது நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான பூர்வமான உண்மை. இந்த ஏகலவ்யன் விஷயம் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன், //

@geetha madam, சபாஷ்! என்னே உங்க ஆராய்ச்சி!

அதுக்காக சாம்பு மாமா தலைல ஆப்பிள் வெச்சு கட்டை விரல் இல்லாம நீங்க குறி பாத்து வில் விடுற வேலை எல்லாம் வேணாம். அவர் பாவம். :p

ambi said...

//சிவ் சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ
என்று ஜனனீ ஜனனீயில் தொடங்கும்! பொருளை மெளலி அண்ணா கிட்ட கேட்டுக்குங்க!//

அண்ணாத்தே! அதை இளைய ராசா எழுதியதில்லை. சங்கரர் தான் அருளியது.
பொருள் தானே? தம்பியுடையான் படைக்கு அஞ்சான். பாஷ்யமே இருக்கு. படிச்சுக்குறேன். :p

ஷைலஜா said...

ambi said...
!

//உங்க வாயை கிளறினா இன்னும் நிறைய தகவல்கள் வெளிய வரும்னு தான் நின் தமிழோடு கொஞ்சம் விளையாடினோம். :p>>>>

அம்பி! கொஞ்சமென்ன நிறையவே விளையாடுங்க ரவியின் இதயசுரங்கத்தில் தான் எத்தனை எத்தனை தகவல்புதையல்கள்!

//(யாருடா அந்த ஷாந்தி?னு எல்லாம் கேக்கபடாது!) :))>>>

யாருடான்னு கேக்கல யாருங்க அந்த ஷாந்தி? (என் நெருங்கிய தோழி பேரு சாந்தி தான் அம்பி! கேஆரெஸ் இங்க வந்தபோது அந்த சாந்திய நான் கண்ல காட்டலயே?:)( உம்மாச்சி பதிவில ஊர்வம்பான்னு ஓனர் கத்தப்போறார் ஜூட்ப்பா:)

மெளலி (மதுரையம்பதி) said...

//யாருடான்னு கேக்கல யாருங்க அந்த ஷாந்தி? (என் நெருங்கிய தோழி பேரு சாந்தி தான் அம்பி! கேஆரெஸ் இங்க வந்தபோது அந்த சாந்திய நான் கண்ல காட்டலயே?:)( உம்மாச்சி பதிவில ஊர்வம்பான்னு ஓனர் கத்தப்போறார் ஜூட்ப்பா:)//

உங்க தோழியா, சரி, சரி....:))

மெளலி (மதுரையம்பதி) said...

//அம்பி! கொஞ்சமென்ன நிறையவே விளையாடுங்க ரவியின் இதயசுரங்கத்தில் தான் எத்தனை எத்தனை தகவல்புதையல்கள்!//

ஆமாம் கே.ஆர்.எஸ், நீங்க எப்போ மைன்ஸ் ஆனீங்க? :)

மெளலி (மதுரையம்பதி) said...

முதல்ல அம்பிக்கும் , கேயாரெஸ்க்கும் ஒரு பெரிய நன்றி...என் பதிவுகள்ள கும்மி/கோவிந்தா எல்லாம் ஆரம்பிச்சு இத்தனை பின்னூட்டம் என்பது இந்த பதிவில் மட்டுமே :)..

மெளலி (மதுரையம்பதி) said...

//பொருள் தானே? தம்பியுடையான் படைக்கு அஞ்சான். பாஷ்யமே இருக்கு. //

என்னது உங்க தம்பி பாஷ்யம் எழுதியிருக்காரா?, சொல்லவே இல்லையே...கணேசாஆஆஆஆஆஆ

மெளலி (மதுரையம்பதி) said...

//பொருளை மெளலி அண்ணா கிட்ட கேட்டுக்குங்க!//

அண்ணாத்தே! அதை இளைய ராசா எழுதியதில்லை. சங்கரர் தான் அருளியது.
பொருள் தானே? தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.//

ஏன் அம்பி, நான் சொன்னா கேட்டுக்க மாட்டீங்களா?... :)))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிநயா...

//அருமையான பதிவு. பின்னூட்டங்களும் அருமை. எங்க ஊர்லல்லாம் நிறைய வடநாட்டாருக்கு கார்த்திகேயனைத் தெரிவதில்லை.//

நன்றி...ஆமாம் நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க?

மெளலி (மதுரையம்பதி) said...

//மறந்துட்டேன் சொல்ல, கட்டைவிரல் இல்லைனாலும், வில்லில் அம்பைக் கோர்த்து, மற்ற விரல்களால் அம்பைச் செலுத்த முடியும், இது நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான பூர்வமான உண்மை. இந்த ஏகலவ்யன் விஷயம் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன், எந்த அளவுக்கு நிஜம்னு! பார்க்கலாம்.//

வாங்க கீதாம்மா...ராமாயணம் தொடருக்கடுத்த உங்க ப்ளாக் அவதாரத்தை கோடிட்டு காட்டியமைக்கு நன்றி... :))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஷைலஜா...

/இந்தப்பதிவிற்கு நேற்றே நான் அளித்த பின்னூட்டம் காற்றில் மாயமாய் மறைந்ததென்னே?!
சங்கம் வளர்த்த ஊர்க்காரருக்கு அழகான தமிழில் அழகன் முருகனைப்பற்றி எழுதவும் சொல்லித்தரணுமோ?தன்னை
அடக்கமாய் சொல்லிக்கொண்டாலும் மௌலியின் புலமை நமக்குப்புலப்படாமலா போய்விடும்//

தெரியல்ல, என்ன ஆச்சு உங்க பின்னூட்டமுன்னு...

அட ஏங்க எனக்கு இலக்கியத்தமிழ், இலக்கணத் தமிழ் ரெண்டும் தெரியாது.... ஏதோ சந்துல சிந்து பாடிக்கிட்டு இருக்கேன். :)

மெளலி (மதுரையம்பதி) said...

//"குமரகுருபரரின் திருப்பனந்தாள் காசி மடம்" பற்றிய சிறப்புப் பதிவே போட்டிருக்கேனே, என்னை எல்லாம் மதிச்சு யாராச்சும் வந்தால் தானே அதெல்லாம் தெரியப் போகுது? எல்லாம் ஒரே இடத்தில் "கும்மி" அடிச்சால்????:P

http://sivamgss.blogspot.com/ //

சரி, சரி ரென்ஷன் ஆகாதீங்க கீதாம்மா :))

படிக்கிறோம், படிச்சோம், படிப்போம். :))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்...நன்றி...:))

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆனால் முருகன் என்ற பெயர் வடமொழி இலக்கியங்களிலோ சுலோகங்களிலோ இல்லை! வேறு பெயர்களால் தான் அவன் கூறப்படுகிறான்! அதே போல் தான் மாயோனும்! //

முருகன் அப்படிங்கறது முழுத்தமிழ் வார்த்தை...அதை வட(டை) மொழில தேடினா எப்படி கண்டுபிடிக்க முடியும்?..முருகன், மாயோன் மட்டுமில்லை, உளுந்துவடை கூட அதே பெயர்ல இருக்காது... :)

மெளலி (மதுரையம்பதி) said...

//குமார சம்பவம் என்ற அழியாத பேரிலக்கியமே இந்தப் பக்திச் சுவைக்குச் சான்று! மெளலி அண்ணா பதிவில் குமார சம்பவத்தைத் சொல்லவில்லை! நானே எடுத்துக் கொடுக்கிறேன்!//

ராமாயணத்தைச் சொல்லிவிட்டு அடுத்தாக இதை ஒரு வரியில் தொட்டுச் சென்றிருக்கேன் //இதன் தாக்கத்தாலேயே காளிதாசனும் குமார ஸம்பவம் என்று பெயர் வைத்தார் போல.//

ஆமாம், அதென்ன ""நானே எடுத்துக் கொடுக்கிறேன்"? நீங்க என்ன என் கருத்துக்கு எதிர் கருத்தா கொண்டிருக்கீங்க?...இல்லையே,
பின்ன எதற்கு நானே?...ஓ குரு ஆகிய நானே சிஷ்யனுக்கு எடுத்துக் கொடுக்கிறேன் அப்படிங்கறீங்களா?...அப்படின்னா சரி.. :))

//மற்ற தெய்வங்களை சொல்லும் போது இந்த 'ஸ்வாமி' என்ற் ப்ரயோகம் இல்லை//

//குமாரஸ்வாமி = ஸ்கந்தன்
பரமஸ்வாமி = சிவபெருமான்
பூவராகஸ்வாமி, லக்ஷ்மீ நரசிம்ம ஸ்வாமி...மிருத்யுஞ்ஜய ஸ்வாமி என்று பல தேவதைகளுக்கும் ஸ்வாமி என்கிற பிரயோகம் உள்ளது!

ஸ்வாமி=தலைவன்/நாதன் என்ற பொருளில் அனைத்து தெய்வங்களுக்கும் ஆகி வரும் சொல்!//

மறுக்கவில்லை கே.ஆர்.எஸ், நான் சொல்லியது (அ) சொல்ல நினைத்தது 2000 வருடங்களுக்கு முந்தைய அமரகோசம் என்னும் நிகண்டில் ஸ்வாமி பதம் முருகனுக்கு மட்டுமே இருப்பதாக படித்தேன் என்பது மட்டுமே.

//சனத்குமாரர் = என்றும் இளமையானவர்.
இவர் தான் குமார ஸ்வாமியாக உருக் கொண்டார் என்பது இந்த ஒரு உபநிடதம் மட்டுமே சொல்வது!//

இது ஒன்றுல மட்டும் இருக்கறதால ஏற்க சங்கடமாயிருக்கறாப்போல தெரியுதே?, மற்ற எல்லாம் எல்லா உபநிஷத்திலும் இருக்கா?... :))


//சனத்குமாரர் மகா குரு, ஞான வடிவர்! அதனால் குமாரஸ்வாமியும் ஞான பண்டிதன் என்பது எந்த அளவுக்குப் பொருந்தும் என்பது ஆய்வுக்குரிய விடயம்!//

அப்பனே ஞானபண்டிதா! என்று இன்றும் முருகனை விளிப்பவர்கள் (கடவுளே/ராமா அப்படின்னு கூப்பிடறது மாதிரி) இப்போதும் இருக்காங்க கே.ஆர்.எஸ்.
என்ன ஆய்வு செய்ய வேண்டும்?,
புதசெவி..

// அக்னிக்கு அதிதேவதையாக ஸ்கந்தனே சொல்லப்பட்டிருக்கிறது.
//

//இதை மட்டும் சரி பார்க்கவும் மெளலி அண்ணா!
அங்காரகன் என்னும் செவ்வாய்க்கு அதி தேவதை தான் ஸ்கந்தன். அக்னிக்கு அல்ல என்றே நினைக்கிறேன்!//


எங்க படித்தேன்னு நினைவில்ல
கொஞ்ச நாள் டயம் குடுங்க... :)
தரவிடறேன்..

//சிவ் சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும் //
இது தவறு...இந்த சிவன் சவமாகிறது வேற ஸ்லோகத்தில்...அதுவும் ஆச்சார்யார் செளந்தர்ய லஹரில சொல்றதில்லை. :)

//யாமும் சிவ தத்துவம் அறிவோம்!
யாமும் வடமொழி அறிவோம்!
அதனால்...
தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!//

அட நீங்க எல்லாம் அறிந்தவர் அப்படிங்கறதாலே தானே நான் குருவா ஏத்துக்கிட்டேன்.. :))

மெளலி (மதுரையம்பதி) said...

//வடதேசத்தில் கார்த்திகேயன் பிரம்மச்சாரியா?
அப்படி என்றால் வள்ளி வடமொழிப் புராணங்களில் சொல்லப்படவில்லையா?
சரி, தேவயானையின் நிலை தான் என்ன?
மெளலி அண்ணா மற்றும் அறிந்தவர்கள் சொல்லி உதவுங்கள்!//

அங்கு முருகன் ப்ரம்மச்சாரி, அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்...அங்கு வள்ளியும் இல்லை தெய்வானையும் இல்லை. :))

ஆமாம் அதென்ன வடமொழிப்புராணம், தமிழ் மொழிப்புராணம்?....
புதசெவி :))
ஏதேது இறைவனிடத்தில் மொழிச்சண்டை வேண்டாமுன்னு சொல்ல வந்தா புராணத்துக்கு மொழிச்சண்டை கிளைவிடும் போலிருக்கு...இல்லை நானில்லை.... :))


//மகாபாரதத்திலும் ஸ்கந்தன் வருவார்! ஆனால் கொஞ்சம் மாற்றங்களுடன்!//

அப்படியா?, தெரியாதே!!, எங்க எப்படின்னு கொஞ்சம் கோடி காமிங்களேன்.

//அக்னி-ஸ்வாஹாவின் புதல்வராகவும் ஸ்கந்தன் சொல்லப்படுவாராமே! //

நானும் படித்திருக்கேன், ஆனா எங்கன்னு நினைவில் வரவில்லை...இப்போ நீங்க இதச் சொன்னதும் அதி தேவதையா இதுவான்னு குழப்பம் வந்துடுத்து...பார்த்து/கேட்டு கன்பார்ம் பண்றேன்.. :)

//குமரில பட்டர் தானே சங்கரரை வழியனுப்பி விட்டு, நெல்-தீ மூட்டி தற்கொலை செய்து கொள்வது? அவரா ஸ்கந்தனின் அவதாரம்? புதிய செய்தி தான்//

ஆமாம், அவரேதான்...வடக்கே இந்த கதை ரொம்பவே இருக்கிறதா கேள்வி.

இதுபோலவே இன்னொருவரையும் சொல்வதுண்டு...யார் கண்டுபிடிங்க :)

ambi said...

//என் நெருங்கிய தோழி பேரு சாந்தி தான் அம்பி! கேஆரெஸ் இங்க வந்தபோது அந்த சாந்திய நான் கண்ல காட்டலயே?:)//

@shailaja akka, ஆஹா! இனிமேலயும் காட்டாதீங்க. :))

அவங்க வீடு உங்க வீட்டு பக்கமா? இல்ல சும்மா தான் கேட்டேன். :p

ambi said...

ஐம்பது அடிச்சு ரொம்ப நாள் ஆச்சு! :)

பழனி மலை முருகனுக்கு கோவிந்தா! கோவிந்தா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

moi-endraal 51/- aa vaikkanum!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

52. Ithu kooda theriyala intha ambi-kkuu!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ambi
//உங்க வாயை கிளறினா இன்னும் நிறைய தகவல்கள் வெளிய வரும்னு தான் நின் தமிழோடு கொஞ்சம் விளையாடினோம். :p//

வாயைக் கிளறினா ரேவதி மாதிரி காத்து தான் வரும்!
நெஞ்சைக் கிளறினாத் தான் தகவலும், அகவலும், வடமொழிப் புகவலும், மிகவலும் மிகுத்து வரும்! :-)

//(யாருடா அந்த ஷாந்தி?னு எல்லாம் கேக்கபடாது!) :))//

சரி...
யாருடீ அந்த ஷாந்தி?
:-)))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அண்ணாத்தே! அதை இளைய ராசா எழுதியதில்லை//

நாங்க மட்டும் என்ன இளையராஜா எழுதினாரு-ன்னா சொன்னோம்! ஜனனீ ஜனனீயில் தொடங்கும் சுலோகம்-ன்னு தான் சொன்னோம்! இதுக்குத் தான் பதிவைப் படிக்கலைன்னாலும் பின்னூட்டத்தையாவது படிச்சி, பின்னூட்டம் போடணும்-னு சொல்லுறது! ஒழுங்கா தம்பி கணேசன் பேச்சைக் கேளு! நல்ல புள்ளையா மாறிடுவ! :-)))))))

அது செளந்தர்யலஹரி - முதல் சுலோகம்! மெளலி அண்ணாவே இதுக்கு பாஷ்யம் எப்பவோ எழுதிட்டாரு! போய் அதை மொதல்ல படிச்சிட்டு வா அம்பி!

@Shyls
Better late than never!
Adutha visit-la enakku intro kodukaatheenga! Shanthi-kku intro kodunga, krs pathi! :-)))

@மெளலி
//என் பதிவுகள்ள கும்மி/கோவிந்தா எல்லாம் ஆரம்பிச்சு இத்தனை பின்னூட்டம் என்பது இந்த பதிவில் மட்டுமே :)..//

கோவிந்த ராசன் கும்மி-ன்னு ஒரு பதிவு ரெடியாயிக்கிட்டே இருக்கு! கும்மிக்கொரு கோவிந்தா கோவிந்தா! கும்மி மலை ஸ்வாமிக்கு அரோகரா! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அண்ணாத்தே! அதை இளைய ராசா எழுதியதில்லை//

நாங்க மட்டும் என்ன இளையராஜா எழுதினாரு-ன்னா சொன்னோம்! ஜனனீ ஜனனீயில் தொடங்கும் சுலோகம்-ன்னு தான் சொன்னோம்! இதுக்குத் தான் பதிவைப் படிக்கலைன்னாலும் பின்னூட்டத்தையாவது படிச்சி, பின்னூட்டம் போடணும்-னு சொல்லுறது! ஒழுங்கா தம்பி கணேசன் பேச்சைக் கேளு! நல்ல புள்ளையா மாறிடுவ! :-)))))))

அது செளந்தர்யலஹரி - முதல் சுலோகம்! மெளலி அண்ணாவே இதுக்கு பாஷ்யம் எப்பவோ எழுதிட்டாரு! போய் அதை மொதல்ல படிச்சிட்டு வா அம்பி!

@Shyls
Better late than never!
Adutha visit-la enakku intro kodukaatheenga! Shanthi-kku intro kodunga, krs pathi! :-)))

@மெளலி
//என் பதிவுகள்ள கும்மி/கோவிந்தா எல்லாம் ஆரம்பிச்சு இத்தனை பின்னூட்டம் என்பது இந்த பதிவில் மட்டுமே :)..//

கோவிந்த ராசன் கும்மி-ன்னு ஒரு பதிவு ரெடியாயிக்கிட்டே இருக்கு! கும்மிக்கொரு கோவிந்தா கோவிந்தா! கும்மி மலை ஸ்வாமிக்கு அரோகரா! :-)))

Geetha Sambasivam said...

உளுந்துவடை கூட அதே பெயர்ல இருக்காது... :)

வடைக்கு வட(டை)மொழியிலும் வடா என்ற பெயரே என்று அறியவும். எல்லாம் சாந்தி, ஷாந்தினு அலைஞ்சா இதெல்லாம் எங்கே கவனம் வரப்போகுது????:P

Geetha Sambasivam said...

வடநாட்டில் கார்த்திகேயன் பிரம்மசாரி, சில ஊர்களில் அவன் கோயிலில் குடி இருக்கும் இடங்களில் பெண்கள் நுழைய அனுமதியும் இல்லை. அதே சமயம் விநாயகர் இரு மனைவியும், மகன்களும் ஒரு பெண்ணும் உள்ளவர், குடும்பஸ்தர், விநாயகரின் பெண்ணே சந்தோஷி மாதா. தன் சகோதரர்களுக்காகவே விரதம் இருந்ததாயும் சொல்லப் படுகின்றது.ராக்கி என்னும் சகோதரர்களைச் சிறப்பிக்கும் பண்டிகையின் மூலக் கதையும், அதில் இருந்து வந்ததாய் வட நாட்டில் ஒரு சாரார் கூற்று

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முருகன் அப்படிங்கறது முழுத்தமிழ் வார்த்தை...அதை வட(டை) மொழில தேடினா எப்படி கண்டுபிடிக்க முடியும்?..//

மாயவன், மாதவன், கண்ணா என்ற சொல் மட்டும் எப்படித் தமிழ், வடமொழி ரெண்டிலும் இருக்காம்?

சிவன் என்ற சொல் மட்டும் எப்படித் தமிழ், வடமொழி ரெண்டிலும் இருக்காம்?

//உளுந்துவடை கூட அதே பெயர்ல இருக்காது...//

உளுந்து வடைக்கு என்ன பேருன்னா வடமொழியில?
மாஷாபூபம் தானே? :-)
அம்பி ஆஷா பூபம்-ன்னு படிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்பனே ஞானபண்டிதா! என்று இன்றும் முருகனை விளிப்பவர்கள்//

அதில் ஒன்றும் மறுக்கவில்லை!
ஆனா ஞான பண்டிதன் என்பதற்கும், சனத் குமாரர் என்பதற்கும் என்ன தொடர்பு?
சனத் குமாரர் ஞான குரு தட்சிணாமூர்த்தியின் நான்கு சீடர்களில் ஒருவர்! அந்த ஒரே ஞானத் தொடர்புக்காக, அவர் தான் ஞான பண்டிதன் என்று கொள்ள ஏதுவாகுமா? அதான் ஆய்ந்து அறிய வேண்டும் என்று சொன்னேன்!

Geetha Sambasivam said...

அட,கே ஆர் எஸ் சொல்லி இருக்கிறது, சம்ஸ்கிருதம், நான் சொன்னது ஹிந்தி, தப்பாய்ப் புரிஞ்சுக்காதீங்க.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது தவறு...இந்த சிவன் சவமாகிறது வேற ஸ்லோகத்தில்...அதுவும் ஆச்சார்யார் செளந்தர்ய லஹரில சொல்றதில்லை. :)//

சரி, ஆனந்த லஹரியில்!
நீங்க எழுதினதை நீங்களே மறுத்தா எப்படிண்ணா?
//அவ்வாறு உன்னூடன் சிவன் இல்லாவிடில்(ந சேத்) சிவனே சலனமற்று, அசைவற்ற (குசல:) ஜடமாகிடுவான் (ஸ்பந்திது-மபி).//

இந்தாங்க சுட்டி!
http://sowndharyalahari.blogspot.com/2007/10/1-2.html

//யாமும் சிவ தத்துவம் அறிவோம்!
யாமும் வடமொழி அறிவோம்!
அதனால்...
தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!//
அட நீங்க எல்லாம் அறிந்தவர் அப்படிங்கறதாலே தானே நான் குருவா ஏத்துக்கிட்டேன்.. :))//

ஆகா! இது வேறயா?
சாட்சாத் சரஸ்வதீ தேவி சொல்கிறாள் கற்றது கைம்மண்ணளவு என்று!
உற்ற கலை மடந்தை ஓதுகிறாள்!
அடியேன் பொடியேன்! மற்றே ஒன்று அறியேன்! மாயவனே எங்கள் மாதவனே!

இந்த தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா என்று வரும் சுலோகத்தை/கதையை ஜீவா போன்ற தத்துவ விசாரகர்கள் எழுதணும் என்பது அடியேன் ஆவல்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அங்கு முருகன் ப்ரம்மச்சாரி, அங்கு வள்ளியும் இல்லை தெய்வானையும் இல்லை. :))//

VERY IMPORTANT QUESTION!
மெளலி அண்ணா, மற்றும் அறிந்தவர்கள் உதவ வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!

தேவானை ஸ்கந்த புராணத்தில் வருகிறாள் அல்லவா? தேவ சேனாபதிக்கு மணம் முடித்துத் தந்ததாக!

அதே போல் வள்ளி பற்றி ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கா? இல்லை பதினெண் புராணங்களில் வள்ளிக்கான குறிப்புகள் இருக்கா?

வடமொழியில் வள்ளியும் குறிப்பிடப்படுகிறாள் என்ற செய்தி பல தமிழ் அன்பர்களுக்கும்,
குறிப்பாக முருகத்தமிழ் அன்பர்களுக்கும் மனதைக் குளிர்விக்கும் செய்தியாக அமையும்!


முடிந்தால் தேடி, அனைவரும் அறியத் தர முடியுமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆமாம், அவரேதான்...வடக்கே இந்த கதை ரொம்பவே இருக்கிறதா கேள்வி.

இதுபோலவே இன்னொருவரையும் சொல்வதுண்டு...யார் கண்டுபிடிங்க //

ஞான சம்பந்தப் பெருமானை முருகனின் அம்சமாகவும் சொல்வதுண்டு! அவர் கையிலும் ஒரு வேல் இருக்கும்!

திருமங்கை மன்னனின் கவித்திறத்தில் மயங்கி, சம்பந்தப் பெருமான் அந்த வேலினை ஆழ்வாருக்கே அளித்ததாகவும் சொல்லப்படுகிறது!

Kavinaya said...

//ஆமாம் நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? //

உங்க குரு வசிக்கிற நாடுதாங்க. ஊரு ரிச்மண்ட்.

மெளலி (மதுரையம்பதி) said...

//நெஞ்சைக் கிளறினாத் தான் தகவலும், அகவலும், வடமொழிப் புகவலும், மிகவலும் மிகுத்து வரும்! :-)//

எப்படிங்க கே.ஆர்.எஸ்? ஹனுமனுக்கு சீதா-ராமர் தெரியறமாதிரியா? :-)
இல்லையே?... :))வேற யார்/யாரோ குருப்பா தெரியுறாங்களே !!!!

மெளலி (மதுரையம்பதி) said...

//அது செளந்தர்யலஹரி - முதல் சுலோகம்! மெளலி அண்ணாவே இதுக்கு பாஷ்யம் எப்பவோ எழுதிட்டாரு! போய் அதை மொதல்ல படிச்சிட்டு வா அம்பி!//

ஹல்லோ!!! பாஷ்யமெல்லாம் நான் எழுதல்லப்பா, பலருடைய பாஷ்யங்களை தொகுத்துச் சொல்றேன்னு வேணாச் சொல்லலாம்...

மெளலி (மதுரையம்பதி) said...

//கோவிந்த ராசன் கும்மி-ன்னு ஒரு பதிவு ரெடியாயிக்கிட்டே இருக்கு! கும்மிக்கொரு கோவிந்தா கோவிந்தா! கும்மி மலை ஸ்வாமிக்கு அரோகரா! :-)))//

சீக்ரமா போடுங்க, அங்க வந்து ஹரஹர மஹாதேவா சொல்லி நம்ம சைவ-வைணவ-கெளமார-சாக்த-காணாபத்ய-செளர சன்மார்க்கத்தை வளர்க்கலாம்.. :-)..

அப்படியே முடிஞ்சா வடமொழி-திராவிடமொழிக்கும் பாலம் போடலாம் :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//சில ஊர்களில் அவன் கோயிலில் குடி இருக்கும் இடங்களில் பெண்கள் நுழைய அனுமதியும் இல்லை. அதே சமயம் விநாயகர் இரு மனைவியும், மகன்களும் ஒரு பெண்ணும் உள்ளவர், குடும்பஸ்தர், விநாயகரின் பெண்ணே சந்தோஷி மாதா. தன் சகோதரர்களுக்காகவே விரதம் இருந்ததாயும் சொல்லப் படுகின்றது.ராக்கி //

வாங்க கீதாம்மா....ஆமாம், நான் வடதேசத்துக்காரன் ஆனா நீங்க வடதேசத்துல அதிகநாள் இருந்தவரும் கூட...நீங்க சொன்னா சரிதான் :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//எல்லாம் சாந்தி, ஷாந்தினு அலைஞ்சா இதெல்லாம் எங்கே கவனம் வரப்போகுது????://

நல்லாச்சொன்னீங்க கீதாம்மா..இந்த ரெண்டு பசங்களும் (கே.ஆர்.எஸ், அம்பி) ரொம்பவே விணாப்போகுதுங்க...கொஞ்சம் கண்டிச்சு வைங்க... :-)

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
//எல்லாம் சாந்தி, ஷாந்தினு அலைஞ்சா இதெல்லாம் எங்கே கவனம் வரப்போகுது????://

நல்லாச்சொன்னீங்க கீதாம்மா..இந்த ரெண்டு பசங்களும் (கே.ஆர்.எஸ், அம்பி) ரொம்பவே விணாப்போகுதுங்க...கொஞ்சம் கண்டிச்சு வைங்க... :-)

>>>>ஹலோ மதுரை! ஷாந்திய உங்களுக்கே முதல்ல அறிமுகப்படுத்தறேன் அதுக்காக என் அன்புச்செல்லத்தம்பிங்களை கண்டிக்கல்லாம் சொல்ல வேண்டாம்...ஏனு கொத்தாயித்தா?:):)
அ து!

ஷைலஜா said...

ambi said...
//என் நெருங்கிய தோழி பேரு சாந்தி தான் அம்பி! கேஆரெஸ் இங்க வந்தபோது அந்த சாந்திய நான் கண்ல காட்டலயே?:)//

@shailaja akka, ஆஹா! இனிமேலயும் காட்டாதீங்க. :))

அவங்க வீடு உங்க வீட்டு பக்கமா? இல்ல சும்மா தான் கேட்டேன். :p

>>>>>சாந்தி பத்தி மேலும் இங்குசொன்னால் மதுரை(யம்பதி)மனச் சாந்தியை இழந்துவிடக்கூடும் ஆகவே சனிகிழமை நேரில் சாந்தமா இதுபத்தி பேசிக்லாம் அம்பி சரியா?:):)

மெளலி (மதுரையம்பதி) said...

//உளுந்து வடைக்கு என்ன பேருன்னா வடமொழியில?
மாஷாபூபம் தானே? :-)
அம்பி ஆஷா பூபம்-ன்னு படிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை! :-)//

கலக்கிட்டீங்கய்யா கே.ஆர்.எஸ்...மாஷாபூபமே தான்...
அப்படியே அப்பம், அவல், தயிர் சாதம், புளியோதரை, சக்கரைப/வெண் பொங்கல், சுண்டல் எல்லாத்துக்கும் சொல்லுங்க பார்க்கலாம்?.. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//மாயவன், மாதவன், கண்ணா என்ற சொல் மட்டும் எப்படித் தமிழ், வடமொழி ரெண்டிலும் இருக்காம்?

சிவன் என்ற சொல் மட்டும் எப்படித் தமிழ், வடமொழி ரெண்டிலும் இருக்காம்?//

மாதவா சரி, சிவ: சிவம் இருக்கலாம்..
மாயவன், கண்ணன், சிவன் எக்ஸாக்டா அப்படின்னு வடமொழில இருக்கா?, எங்க?..சான்று ப்ளிஸ்.. (நான் தரவு கேட்கல்ல) :)

மெளலி (மதுரையம்பதி) said...

/ஞான பண்டிதன் என்பதற்கும், சனத் குமாரர் என்பதற்கும் என்ன தொடர்பு?
சனத் குமாரர் ஞான குரு தட்சிணாமூர்த்தியின் நான்கு சீடர்களில் ஒருவர்! அந்த ஒரே ஞானத் தொடர்புக்காக, அவர் தான் ஞான பண்டிதன் என்று கொள்ள ஏதுவாகுமா? //

திரிபுரா ரஹஸ்யம் என்பது 2 புராணங்களில் வருது. ஒன்றில் ஸ்கந்தனது பிறப்பை ஜெனரலாக சொல்லிச் செல்கிறது.இன்னொன்று ஸனத்குமாரர் தான் என்று தெளிவாச் சொல்லியிருக்கு...

மெளலி (மதுரையம்பதி) said...

//சரி, ஆனந்த லஹரியில்!
நீங்க எழுதினதை நீங்களே மறுத்தா எப்படிண்ணா?//

ஆமாம். தவறு என்னிடம்தான்...நாந்தான் என்னுடைய முந்தைய பதிலில் தப்பாச் சொல்லியிருக்கேன்...

இந்த சிவம் சவமாவது தேவி பாகவதத்திலும் வருகிறது.... "சிவோபிசவதாம்.."என்பதாக...

மெளலி (மதுரையம்பதி) said...

//சாந்தி பத்தி மேலும் இங்குசொன்னால் மதுரை(யம்பதி)மனச் சாந்தியை இழந்துவிடக்கூடும் ஆகவே சனிகிழமை நேரில் சாந்தமா இதுபத்தி பேசிக்லாம் அம்பி சரியா?:):)//

அம்பி ஜாக்கரதை, சாந்திங்கறது யாராவது ஒரு மாமியா இருக்கும்...(சித்ரா மாமி மாதிரித்தானே ஷைலஜா :))

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
//சாந்தி பத்தி மேலும் இங்குசொன்னால் மதுரை(யம்பதி)மனச் சாந்தியை இழந்துவிடக்கூடும் ஆகவே சனிகிழமை நேரில் சாந்தமா இதுபத்தி பேசிக்லாம் அம்பி சரியா?:):)//


//அம்பி ஜாக்கரதை, சாந்திங்கறது யாராவது ஒரு மாமியா இருக்கும்...(சித்ரா மாமி மாதிரித்தானே ஷைலஜா :))//

அட்டட்டா!

:):):)>>..உம்மாச்சி பதிவுல சாந்தி சித்ரா மாமின்னு ச்சேச்சே அபச்சாரம் பண்றேளே!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கலக்கிட்டீங்கய்யா கே.ஆர்.எஸ்...மாஷாபூபமே தான்...
அப்படியே அப்பம், அவல், தயிர் சாதம், புளியோதரை, சக்கரைப/வெண் பொங்கல், சுண்டல் எல்லாத்துக்கும் சொல்லுங்க பார்க்கலாம்?.. :-)//

வடமொழி எனக்குத் தெரியாதுன்னு வடையை வச்சி கொக்கி போடப் பாத்தீங்களா? இப்ப பாத்துக்கட்டீங்கல்ல? :-)

எதுக்கு நானே எல்லாத்தையும் சொல்லணும்?
மொதல்ல இந்த ஐட்டம் அத்தனையும் கண்ணுல காட்டுங்க! அப்பறம் சொல்லுறேன்!

இப்போதைக்கு மைசூர்பாக்குக்கு மட்டும் வேணும்னா வடமொழிப் பெயரைச் சொல்லுறேன்! (எங்க ஷைல்ஸ் அக்காவுக்காக, ஒங்களுக்காக இல்ல!)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மாயவன், கண்ணன், சிவன் எக்ஸாக்டா அப்படின்னு வடமொழில இருக்கா?, எங்க?..சான்று ப்ளிஸ்.. (நான் தரவு கேட்கல்ல) :)
//

கண்ணன்=khanna
சிவன்=சிவ
மாயவன்/மாயோன்=மாயம், விஷ்ணு மாயை
மாதவன்=மா+தவம்
(வேர்ச் சொற்களை மட்டும் ஒப்பிட்டுப் பாருங்க)

மெளலி (மதுரையம்பதி) said...

//வடமொழி எனக்குத் தெரியாதுன்னு வடையை வச்சி கொக்கி போடப் பாத்தீங்களா? //

குருவை சோதிக்கும் அளவு மோசமானவனா நான்? :)

//இப்போதைக்கு மைசூர்பாக்குக்கு மட்டும் வேணும்னா வடமொழிப் பெயரைச் சொல்லுறேன்! (எங்க ஷைல்ஸ் அக்காவுக்காக//

சரி, உங்க ஷைல்ஸ் அக்காவுக்காக சொல்லுங்க மைசூர்பாகுக்கான வடமொழிப் பெயரை.. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//மாயை
மாதவன்=மா+தவம்
(வேர்ச் சொற்களை மட்டும் ஒப்பிட்டுப் பாருங்க)//

இந்த வேர்ச்சொல், வினைச்சொல் எல்லாம் எனக்கு அம்புட்டு தெரியாதுன்னு தானே இப்படி?..

நான் எங்க வீக்குன்னு தெரிஞ்சு அடிக்கிறீங்க..சரி, சரி...ஜூட்.

குமரன் (Kumaran) said...

என்னங்க இது? பின்னூட்டங்கள் வந்துகிட்டே இருக்கு? முதல் பத்து பின்னூட்டங்கள் தான் படிச்சிருக்கேன். மத்தது வந்து படிக்கலாம்ன்னு பாத்தா தினம் தினம் எண்ணிக்கை ஏறிக்கிட்டே போகுது?

குமரன் (Kumaran) said...

இருக்கிற பின்னூட்டத்தை எல்லாம் படிச்ச பின்னாடி சொல்றது இது. யாரு எதைச் சொன்னாங்களோ அவங்க வந்து பதில் கருத்து சொன்னாலும் சரி, மத்தவங்க சொன்னாலும் சரி.

பரமஸ்வாமி என்றால் சிவபெருமானா? நான் அழகர் கோவில் மூலவரின் பெயர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்து பரமேஸ்வரன் தான் சிவபெருமான். பரமஸ்வாமி என்ற பெயர் அவருக்குக் கேள்விபட்டதில்லை.

மௌலி சொன்னது போல் விதப்பாக ஸ்வாமி என்பது சுப்ரமண்யருக்கே இருந்து பின்னர் அது பொதுப்பெயராகி எல்லோருக்கும் (மற்ற கடவுளர்கள், மனிதர்கள்) ஆனது. ஸ்வம் என்றால் சொத்து; ஸ்வாமி சொத்தினை உடையவன். அந்தப் பொருளில் யாரையெல்லாம் பெருமைபடுத்தணுமோ அவர்களை எல்லாம் ஸ்வாமி என்று அழைக்கத் தொடங்கிவிட்டோம். ஸ்வாமி தேசிகன், சத்ய சாய் பாபாவை ஸ்வாமி என்பதும் இந்த வகையில் வரும். அதே போன்றது தான் பரமஸ்வாமி, பூவராகஸ்வாமி, ம்ருத்யுஞ்ஜய ஸ்வாமி போன்றவை எல்லாம்.

குமாரஸ்வாமியை அக்னி உருவாகவே சொல்வது வழக்கம். உபநிடதங்களிலிருந்து பாரதி வரை இதை சொல்லியிருக்கிறார்கள். நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிதேவதை முருகன் தான். அதே போல் தேவர்களின் அக்னிக்கு அதிதேவதை முருகன். சிவபெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய ஆறு சுடர்களை அக்னி (வாயுவோடு) ஏந்திச் சென்றதால் முருகனுக்கு ஆக்னேயன் என்ற பெயரும் உண்டு. கார்த்திகேயன், சரவணபவன் என்றாற்போல. அந்த வகையில் அவன் வாயு புத்திரனும் ஆவான். அக்னிக்கும் அவன் மனைவி ஸ்வாஹா தேவிக்கும் பிறந்த மகன் முருகன் என்றொதொரு கருத்தும்/தொன்மமும் உண்டு. மௌலியும் இடுகையில் 'அக்னி பூ' என்ற பெயரைச் சொல்லியிருக்கிறாரே.

பூனாவில் மட்டுமில்லை வங்காளத்திலும் அப்படித் தான் என்று நினைக்கிறேன். ஆறேழு வருடங்களுக்கு முன்னர் முருகனைப் பற்றி ஒரு வங்காள நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் முருகன் பிரம்மச்சாரி என்று சொன்னார். அது மட்டுமில்லாமல் முருகன் 'கள்ளர்களின் தலைவர்; கடவுள்' என்றார். மேலும் விசாரித்ததில் வங்காளத்தில் நம்மூர் கள்ளர்கள் போல் ஒரு சாதியினரால் முருகன் விரும்பி வழிபடப்படுகிறாராம்.

மாயோன், மாயவன், மாதவன், கண்ணன், சிவன் போன்ற பெயர்களை ஒட்டிய பெயர்கள் வடமொழியிலும் இருப்பதால் இவையே அங்கிருக்கின்றன என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது. வேர்ச்சொல் ஆராய்ச்சியும் அவ்வளவாக உதவாது.

மாயோன் என்ற தமிழ்ச்சொல் மை என்ற கருநிறத்தைச் சொல்லும் அடிச்சொல்லில் இருந்து வந்த பெயர். செம்மை என்ற நிறச்சொல்லிலிருந்து சேயோனும் (சிவன், முருகன்) சேயோளும் (இலக்குமி) மை என்ற நிறச்சொல்லிலிருந்து மாயோனும் (திருமால்) மாயோளும் (கொற்றவை) வருகிறார்கள்.

மாயா என்ற தோற்ற மயக்கத்தைச் சொல்லும் வடசொல்லுக்கும் மாயோன் என்ற தமிழ்ச்சொல்லுக்கும் தொடர்பு இல்லை. மாயைகள் வல்லவன், மாயை என்னும் சக்தியை உடையவன் (விஷ்ணு மாயை) என்ற பொருளில் இருபிறப்பியாக (வடசொல் அடிப்படையில் தமிழ்ச்சொல்) மாயவன் என்ற பெயர் அவனுக்கு வந்தது.

மாதவன் என்ற பெயரும் வடசொல்லே. மாதவ என்றால் திருமகள் கேள்வன் என்று பொருள். அது திருமாலின் வடமொழிப் பெயர். அது தமிழிலும் மாதவன் என்று பயில்கிறது. அச்சுதன், இருடிகேசன் என்ற பெயர்களைப் போல. இந்தப் பெயர்களுக்குப் பொருள் சொல்ல வடசொற்களின் பொருள்களைத் தான் சொல்லவேண்டும். தமிழில் இவற்றிற்குத் தனித்த பொருள் இல்லை.

தமிழில் செம்மை என்ற நிறச்சொல்லிலிருந்து சேயோன் பிறந்து அது சிவன் என்று மாறியது. சிவன் என்றால் தமிழில் சிவந்தவன் என்றே பொருள். வடமொழியில் சிவ என்ற சொல் நிறப்பொருளைத் தராமல் மங்கலவுருவானவன், மங்கலம், மகிழ்ச்சி, அருள், கருணை, நட்பு போன்ற பொருட்களைக் காட்டும். இந்தப் பொருட்களின் அடிப்படையில் சக்திதேவிக்கு சிவா என்றொரு பெயரும் உண்டு. அவள் கருநிறம் கொண்டவள் என்றே பெரும்பாலும் அறியப்படுவதால் தமிழில் சிவன் எந்தப் பொருளில் வழங்கப்படுகிறதோ அதுவே வடமொழியிலும் வழங்கப்படுகிறது என்பது பொருந்தாது; அவள் நிற அடிப்படையில் ஸ்யாமளா தான் - மாயோள் தான்.

kanhaa என்ற சொல் வடமொழியில் இல்லை. அது ஹிந்திச் சொல். கண்ணன் என்பது தமிழில் அழகிய கண்களை உடையவன், கண்ணுக்கு அழகானவன் என்ற பொருட்களைத் தர kanhaa என்பது அன்பிற்குரியவன் என்ற பொருளைத் தருகிறது. அன்பரை கண்ணா என்று அழைப்பது தமிழிலும் இருக்கிறது - கோவைப்பக்கம் 'கண்ணு' என்று எல்லோரையும் அழைப்பது போல - ஆனால் அது பிற்காலப் பழக்கமோ என்று தோன்றுகிறது.

கண்ணனை வடக்கே khannaa என்று அழைப்பார்களா என்ன? கேட்டதில்லையே?!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்...லேட்டஸ்டா வந்து எனக்கு கை கொடுத்ததுக்கு நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்...லேட்டஸ்டா வந்து எனக்கு கை கொடுத்ததுக்கு நன்றி.

//பரமஸ்வாமி என்றால் சிவபெருமானா? நான் அழகர் கோவில் மூலவரின் பெயர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்து பரமேஸ்வரன் தான் சிவபெருமான். பரமஸ்வாமி என்ற பெயர் அவருக்குக் கேள்விபட்டதில்லை. //

ஆமாம், பரமஸ்வாமி அப்படிங்கறதே ஒரு போதுப் பெயர்தான்...சிவன் பெயர் என்பதெல்லாம் பாலகுமாரன் கதையில் மட்டுமே :)

விதப்பாவா? அப்படின்னா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பரமஸ்வாமி என்றால் சிவபெருமானா?//

ஆம்! தஞ்சைப் பெருவுடையாரைப் பரமசுவாமி என்று தான் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன!
ஈஸ்வரன், சுவாமி என்ற பொதுச் சொற்கள் போலவே பரமேஸ்வரன், பரமசுவாமி!


//மௌலி சொன்னது போல் விதப்பாக ஸ்வாமி என்பது சுப்ரமண்யருக்கே இருந்து பின்னர் அது பொதுப்பெயராகி எல்லோருக்கும் (மற்ற கடவுளர்கள், மனிதர்கள்) ஆனது//

இதை மறுக்கிறேன் குமரன், மெளலி அண்ணா!
எதை வைத்து சுவாமி என்று சுப்ரமணியரை மட்டும் முதலில் குறித்தார்கள்? சொல்ல முடியுமா?

சுவாமி நாத சுவாமி என்கிறார்களே! சுவாமிக்கே நாதனான சுவாமி என்னும் போது சிவபெருமானும் சுவாமியாகி விடுகிறாரே!

திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ்கரிணியை - இதே ஸ்வாமி என்று பெயர் வருவதால், தலம் முருகனின் தலம் என்ற மொக்கையான ஒரு வாதம் வைக்கப்பட்ட போது, அதை இராமானுசர் மறுத்து வாதிட்டார். அப்போது சுவாமி என்பது முருகப் பெருமானைக் குறிக்கும் ஆதிச் சொல் அல்ல என்பதை அவர் நிறுவுவார்!

//நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிதேவதை முருகன் தான். அதே போல் தேவர்களின் அக்னிக்கு அதிதேவதை முருகன்//

இதையும் மறுக்கிறேன்!
முருகப் பெருமான் அக்னிப் பிழம்பானவன்! அக்னியில் தோன்றியவன்! ஆனால் அதை வைத்து அதி தேவதை என்று சொல்ல முடியாது!

அஷ்டதிக் பாலகர்களில் அக்னி ஒருவன்! பஞ்சபூதங்களிலும் ஒருவன்! அக்னியே சூரியனுக்கு அதிதேவதையாய் இருக்கிறான்! அவனுக்கு இன்னொரு அதி தேவதை கிடையாது!

இந்திரன், அக்னி, வருணன், வாயு, குபேரன் போன்ற திக்பாலகர்க்கு அதிதேவதைகளோ, பிரத்யதி தேவதைகளோ இல்லை! நவகிரங்களுக்கு மட்டுமே இவ்வழக்கம்!

//இவையே அங்கிருக்கின்றன என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது. வேர்ச்சொல் ஆராய்ச்சியும் அவ்வளவாக உதவாது//

உதவுமா இல்லையா என்பதை ஆய்ந்த பின்னர் தான் சொல்ல முடியும்! இவையே அவை என்று சொல்ல முடியாவிட்டாலும், அதே பொருளை, அதே சொல்லைக் கொண்டு குறிப்பது எப்படி இரு மொழியிலும் சாத்தியம் ஆயிற்று? அகத்தியர் "நைசா" ஆக்கிட்டாரா என்ன? :-)

//மாயோன் என்ற தமிழ்ச்சொல் மை என்ற கருநிறத்தைச் சொல்லும் அடிச்சொல்லில் இருந்து வந்த பெயர். செம்மை என்ற நிறச்சொல்லிலிருந்து சேயோனும்//

பண்டைத் தமிழர்கள் நிற வேற்றுமையின் அடிப்படையில் தான் தெய்வங்களைக் கண்டார்களா குமரன்? பழந்தமிழருக்கு நிற வெறியா? :-))

//மாயா என்ற தோற்ற மயக்கத்தைச் சொல்லும் வடசொல்லுக்கும் மாயோன் என்ற தமிழ்ச்சொல்லுக்கும் தொடர்பு இல்லை//

மாயை, மாயம் என்பதே கருமை (மை) நிறமாகத் தான் காட்டப்படுகிறது!
மேலும் அம்பாளின் மாயா ரூபம் தான் விஷ்ணு என்று சாக்தமும் பேசும்!

நீங்களும் போதாக் குறைக்கு மாயன், மாயோள் இருவருமே தொடர்புடைய அதே மைநிறம் என்கிறீர்கள்! எப்படி எல்லாமே இரு மொழிகளிலும் பொருந்தி வருகிறது?

மாயம் தமிழ்ச் சொல் இல்லை என்கிறீர்களா? வள்ளுவத்தில் வடமொழிப் புழக்கம் இல்லை! ஆனால் ஐயன் "மாய மகளிர்" என்கிறார்! அப்போ இங்கே மாயம் என்றால் என்ன?
மாயம்=மயங்கல்!
மால்=மயங்கல்! (மால் கொள்ளுதல்)

ஆக, மாயன்=மாலன் என்று தொடர்புகள் விரியும் குமரன்! அப்படியே மாயோன்=மாலவன்!
மை நிறம் என்பதால் மட்டுமே மாயோன் இல்லை! மயக்கும் (மால்)குணத்தாலும் மாயோன்!

//மாதவன் என்ற பெயரும் வடசொல்லே
தமிழில் இவற்றிற்குத் தனித்த பொருள் இல்லை. //

பெருந் தவ குணத்தானை மா+தவன் என்று சொல்லலாமா
கல்யாண குணங்கள் என்று வடமொழி சொல்வது!
மா+தவன் என்று தமிழும் சொல்கிறதா?

@குமரன், மெளலி அண்ணா
வேர்ச்சொல் ஆய்வு உதவுமா உதவாதா என்பதே ஆய்வில் தான் தெரிய வரும்! எனவே உதவாது என்று புறந் தள்ளுதல் தான் உதவாது :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ்கரிணியை - இதே ஸ்வாமி என்று பெயர் வருவதால், தலம் முருகனின் தலம் என்ற மொக்கையான ஒரு வாதம் வைக்கப்பட்ட போது, அதை இராமானுசர் மறுத்து வாதிட்டார். அப்போது சுவாமி என்பது முருகப் பெருமானைக் குறிக்கும் ஆதிச் சொல் அல்ல என்பதை அவர் நிறுவுவார்!//

பூனைக்குட்டி வெளில வந்துடுச்சு.. :-)
நாங்க யாரும் இங்க அந்த அர்த்தத்துல சொல்லலை.. :)

அமரகோசத்தில் ஏன் அப்படிப் போட்டிருக்குன்னு எனக்கு தெரியாது...அதுக்கு மிக பழமையானது (ஆதிசங்கரர் காலம்)என்பதால் அதனை இங்கு சொன்னேன்..

மெளலி (மதுரையம்பதி) said...

//இதையும் மறுக்கிறேன்!
முருகப் பெருமான் அக்னிப் பிழம்பானவன்! அக்னியில் தோன்றியவன்! ஆனால் அதை வைத்து அதி தேவதை என்று சொல்ல முடியாது!

அஷ்டதிக் பாலகர்களில் அக்னி ஒருவன்! பஞ்சபூதங்களிலும் ஒருவன்! அக்னியே சூரியனுக்கு அதிதேவதையாய் இருக்கிறான்! அவனுக்கு இன்னொரு அதி தேவதை கிடையாது!

இந்திரன், அக்னி, வருணன், வாயு, குபேரன் போன்ற திக்பாலகர்க்கு அதிதேவதைகளோ, பிரத்யதி தேவதைகளோ இல்லை! நவகிரங்களுக்கு மட்டுமே இவ்வழக்கம்!//

இது நானாகச் சொன்னதில்லை..எங்கோ படித்தது...அதன் மூலத்தை நினைவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன்... :(

அதே சமயத்தில், நவகிரஹங்களுக்கு மட்டுமே அதி தேவதை என்பதை நானும் மறுக்கிறேன். மற்ற பல தேவதைகளுக்கும் அதி தேவதை இருக்கிறது சாக்தத்தில்.

மெளலி (மதுரையம்பதி) said...

//மாயா என்ற தோற்ற மயக்கத்தைச் சொல்லும் வடசொல்லுக்கும் மாயோன் என்ற தமிழ்ச்சொல்லுக்கும் தொடர்பு இல்லை. மாயைகள் வல்லவன், மாயை என்னும் சக்தியை உடையவன் (விஷ்ணு மாயை) என்ற பொருளில் இருபிறப்பியாக (வடசொல் அடிப்படையில் தமிழ்ச்சொல்) மாயவன் என்ற பெயர் அவனுக்கு வந்தது.

மாதவன் என்ற பெயரும் வடசொல்லே. மாதவ என்றால் திருமகள் கேள்வன் என்று பொருள். அது திருமாலின் வடமொழிப் பெயர். அது தமிழிலும் மாதவன் என்று பயில்கிறது.//

ஆம் குமரன் நானும் இப்படித்தான் அறிந்திருக்கிறேன்.

'காமாஷி' என்பதில் மா என்பது திருமகளைக் குறிப்பது..அது இங்கும் நீங்க சொல்வது போல திருமகள் கேள்வன் என்பது போலதான் மாதவ என்னும் ப்ரயோகம்.

மெளலி (மதுரையம்பதி) said...

//பண்டைத் தமிழர்கள் நிற வேற்றுமையின் அடிப்படையில் தான் தெய்வங்களைக் கண்டார்களா குமரன்? பழந்தமிழருக்கு நிற வெறியா? :-))//

இதெல்லாம் கரட்டு வாதம்...ஏதும் சொல்றதுக்கில்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

/வேர்ச்சொல் ஆய்வு உதவுமா உதவாதா என்பதே ஆய்வில் தான் தெரிய வரும்! எனவே உதவாது என்று புறந் தள்ளுதல் தான் உதவாது :-)//

எனக்கு தெரியாதுன்னேன், குமரன் முழுதாக முடிவு செய்யமுடியாதுன்னாரு...

யாரும் புறந்தள்ளினமாதிரி தெரியல்ல.. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பூனைக்குட்டி வெளில வந்துடுச்சு.. :-)
நாங்க யாரும் இங்க அந்த அர்த்தத்துல சொல்லலை.. :)//

பூனைக்குடியும் வெளில வரல, எலிக்குட்டியும் வெளில வரல!

நீங்க அந்த அர்த்தத்துல தான் சொன்னீங்க-ன்னு நானும் சொல்லலையே!

ஸ்வாமி என்ற ஆதிச்சொல்லுக்குப் பொருள் என்ன என்பதை முன்னரே பலரும் விளக்கி இருப்பதைத் தான் எடுத்துக் காட்டினேன்! அம்புட்டு தான்! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

கே.ஆர்.எஸ்,

இன்னும் ஒரு விஷயம் நீங்க கவனியாதது என்னன்னா, இராமானுஜருக்கும் முந்தியது அமரகோசம்....அமரேசன் என்னும் அரசன் பெளத்த/சமண மத அரசனால் செய்யப்பட்டது அந்த அகராதி...அவன் ஆதிசங்கரரிடத்தில் வாதத்தில் தோற்கிறான்...அவ்வாறு தோற்றதால் தான் செய்த எல்லா மத நூல்களையும் எரித்துக்கொண்டிருக்கையில் அவனை தட்டுத்து இந்த நிகண்டினை சங்கரர்/மற்றவர்கள் ஏற்பதாகச் சொல்லப்படுகிறது...

மெளலி (மதுரையம்பதி) said...

//ஸ்வாமி என்ற ஆதிச்சொல்லுக்குப் பொருள் என்ன என்பதை முன்னரே பலரும் விளக்கி இருப்பதைத் தான் எடுத்துக் காட்டினேன்! அம்புட்டு தான்! :-)//

முன்னமேன்னு நீங்க சொன்னது ராமானுஜரை அப்படின்னா, அமரகோசம் அதற்கும் முந்தியது....

இராமானுஜருக்கு சுவாமி புஷ்கரிணியினையும், சுவாமி வேங்கடவனையும் வைணவத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியது இருந்ததால் அவர் சுவாமி என்பதற்கு பல அர்த்தங்களை சொல்லியிருக்கலாம்...ஆக அதை மட்டும் ஒரு வாதமாக ஏற்கச் சொல்வது முறையல்ல.. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//அதே போல் வள்ளி பற்றி ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கா? இல்லை பதினெண் புராணங்களில் வள்ளிக்கான குறிப்புகள் இருக்கா?

வடமொழியில் வள்ளியும் குறிப்பிடப்படுகிறாள் என்ற செய்தி பல தமிழ் அன்பர்களுக்கும்,
குறிப்பாக முருகத்தமிழ் அன்பர்களுக்கும் மனதைக் குளிர்விக்கும் செய்தியாக அமையும்!//

என்னிடம் ஸ்கந்த்புராணம் மூலம் இல்லை...ஆனால் ஸ்கந்த புராணத்தில் தமிழ் பதிப்பு இருக்கு. அதில் வள்ளியின் பிறப்பு, திருமுருகனுடன் திருமணம் போன்ற எல்லாம் அழகாகச் சொல்லப்பட்டிருக்கு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்னும் ஒரு விஷயம் நீங்க கவனியாதது என்னன்னா, இராமானுஜருக்கும் முந்தியது அமரகோசம்//

அமரகோசம் என்னும் நூலின் காலம் என்ன? ஏன் வடமொழியில் இவ்வளவு பெரிய நிகண்டினை,
மற்ற நூல்களோ வேறு அறிஞர்களோ, ஒரு referenceஆக பயன்படுத்தவில்லை? அமரகோச நூலில் இருந்து ஸ்வாமி என்று வரும் வரியைத் தர முடியுமா?

//சுவாமி என்பதற்கு பல அர்த்தங்களை சொல்லியிருக்கலாம்...ஆக அதை மட்டும் ஒரு வாதமாக ஏற்கச் சொல்வது முறையல்ல.. :)//

உங்களை ஏற்கச் சொல்லவில்லை!
இராமானுசருக்கு வைணவத்தில் வேங்கடவனை நிலைநாட்ட வேண்டிய அவசியமும் இல்லை! அவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கர பகவத் பாதர், திருமலை யாத்திரை மேற்கொண்டு, வேங்கடவன் பெருமாளே என்று நிலைநாட்டி பாதாதி கேச ஸ்தோத்திரம் பாடியும் சென்று விட்டார்! :-)

ஸ்வாமி என்ற சொல் முருகனை மட்டுமே குறிக்கும் என்ற வாதம் வைக்கப்பட்டதால், அதற்குப் பதில் தான் கொடுத்தாரே அன்றி, அவர் எதையும் தானாக நிலைநாட்டவில்லை! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்னிடம் ஸ்கந்த்புராணம் மூலம் இல்லை...ஆனால் ஸ்கந்த புராணத்தில் தமிழ் பதிப்பு இருக்கு//

இல்லை!
அமரகோசம் சொல்பவர், இதையும் அப்படி வடமொழியில் இருந்தே சொல்லுங்களேன்!

தமிழ் பதிப்பு கதை வடிவமாய் இருந்தால், அதில் வள்ளியைப் பற்றிக் கதையில் யார் வேன்டுமானாலும் சொல்லலாம்!

ஆனால் தமிழ்ப் பெண், தமிழ்க் குறமகள் வள்ளியைப் பற்றிக் கூறும் வடமொழி ஸ்லோகம் என்ன?
அதைச் சொல்லுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யாரும் புறந்தள்ளினமாதிரி தெரியல்ல.. :)//

--வேர்ச்சொல் ஆராய்ச்சியும் அவ்வளவாக உதவாது--

--இந்தப் பெயர்களுக்குப் பொருள் சொல்ல வடசொற்களின் பொருள்களைத் தான் சொல்லவேண்டும். தமிழில் இவற்றிற்குத் தனித்த பொருள் இல்லை--

இதுக்கு எல்லாம் என்ன பொருள் மெளலி அண்ணா? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

////பண்டைத் தமிழர்கள் நிற வேற்றுமையின் அடிப்படையில் தான் தெய்வங்களைக் கண்டார்களா குமரன்? பழந்தமிழருக்கு நிற வெறியா? :-))//

இதெல்லாம் கரட்டு வாதம்...ஏதும் சொல்றதுக்கில்லை.
//

அதான் சிரிப்பான் போட்டேனே!
அப்பறம் எப்படி கரட்டு வாதம்? ஒன்லி விரட்டு வாதம்! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

100 - கோவிந்தா கோவிந்தா!
:-)))

மருகனுக்கு மாமனின் பரிசு! - 100!

மெளலி (மதுரையம்பதி) said...

//அமரகோசம் என்னும் நூலின் காலம் என்ன? ஏன் வடமொழியில் இவ்வளவு பெரிய நிகண்டினை,
மற்ற நூல்களோ வேறு அறிஞர்களோ, ஒரு referenceஆக பயன்படுத்தவில்லை? அமரகோச நூலில் இருந்து ஸ்வாமி என்று வரும் வரியைத் தர முடியுமா?//

அமரகோசம் என்பது ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்த அமரசிம்மனது படைப்பாகையால் அமர கோசம்.

நமக்கு தெரியவில்லை, கேள்விப் படவில்லை என்பதால் வேறு எந்த அறிஞர்களும் பயன்படுத்தவில்லை என்பது தவறு.

நீங்கள் உங்களுக்கு தெரிந்த சம்ஸ்கிருத வித்வான்களிடம் அல்லது உங்களது குருவிடம் கேளுங்கள். அமர கோசம் பற்றி சொல்வார்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

அமரகோசத்தில் வரும் வரி,

"தேவஸேனாபதி; சூர ஸ்வாமி கஜமுகாநுஜ"

இதே போல ஈஸ்வரனைப் பற்றி சொல்லும் போது,

"சம்பு;ஈசு; பசுபதி; சிவ:சூலி மஹேஸ்வர:
ஈஸ்வர: சர்வ ஈசான: சந்த்ரசேகர:
பூதேச: கண்டபரசு: கிரீசோ கிரீசோ ம்ருட:
ம்ருத்யூஞ்ஜய: க்ருத்திவாஸா: பினாகீ ப்ரமாததிப:"

ஒரு அஷ்டோத்திரம் போலவே இருக்கும். இதில் இலக்குமி மற்றிச் சொல்லும் போது,

"இந்த்ரா லோகமாதா மா க்ஷிரோததனயா ரமா
பார்கவீ லோகஜனனீ க்ஷீரஸாகரகன்யகா
லக்ஷிமீ: பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீ: ஹரிப்ரியா"

என்று சொல்லப்படுகிறது. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//அவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கர பகவத் பாதர், திருமலை யாத்திரை மேற்கொண்டு, வேங்கடவன் பெருமாளே என்று நிலைநாட்டி பாதாதி கேச ஸ்தோத்திரம் பாடியும் சென்று விட்டார்!//

போகிறது, ஆதிசங்கரரை பல ஆண்டுக்கு முந்தையவர் என்பதையாவது ஏற்க முடிகிறதே :-).
ஆடு பகை குட்டி உறவு என்னும் பழமொழியை நினைவுபடுத்துகிறது.. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//அமரகோசம் சொல்பவர், இதையும் அப்படி வடமொழியில் இருந்தே சொல்லுங்களேன்!//

:-), மேலே இருப்பதற்கு நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

//தமிழ் பதிப்பு கதை வடிவமாய் இருந்தால், அதில் வள்ளியைப் பற்றிக் கதையில் யார் வேன்டுமானாலும் சொல்லலாம்!//

ஆமாம், எல்லா புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும், தலவரலாறுகளுக்கும் இது பொருந்தும். :-)

நான் தமிழில் வைத்திருப்பது எனக்கு நம்பகமான ஒருவர் எழுதியது தான். ஆனால் நான் அதை இங்கு சொல்லி அது திரிபு வாதமாக வேண்டியதில்லை என்பதால் அவரைப் பற்றி இங்கு சொல்ல விரும்பவில்லை.

//ஆனால் தமிழ்ப் பெண், தமிழ்க் குறமகள் வள்ளியைப் பற்றிக் கூறும் வடமொழி ஸ்லோகம் என்ன?
அதைச் சொல்லுங்கள்!//

வடமொழி புத்தகம் என் நண்பர்கள் குழுவில் யாரிடமாவது இருக்கிறதா என தேடிப் பார்க்கிறேன்.
வடமொழி ஸ்லோகம் தெரிந்தபின் தெரிவிக்கிறேன். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//100 - கோவிந்தா கோவிந்தா!
:-)))

மருகனுக்கு மாமனின் பரிசு! - 100! //

என் பதிவுகளுக்கு 100 மிக மிக அறிதானது தான்...முக்கால் வாசி பதிவுகள் 5-10 கமெண்ட் மட்டுமே இருக்கும். ஆனாலும் நான் எனது வாசிப்பினை, அறிதலை எழுதி வைக்க மட்டுமே உபயோகிக்கிறேன்....இன்னும் சொல்லப் போனால் இப்படி செய்தாலாவது படிப்பது மனதில் பதிகிறதா என்று பார்க்கிறேன். இதனால் ஒரு போதைக்கு ஆளாக விருப்பம் இல்லை. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//போகிறது, ஆதிசங்கரரை பல ஆண்டுக்கு முந்தையவர் என்பதையாவது ஏற்க முடிகிறதே :-)//

உண்மையை எப்பவுமே உள்ளப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது என்பது என் சுபாவம் அண்ணாச்சி!

சத்யம் பரம் தீமஹி!
சத்யஸ்ய சத்யம், ஹிருத சத்ய நேத்ரம், சத்யாத்மகம், த்வாம் சரணம் பிரபந்ந:

எனக்குப் பிடித்தமான ஒன்று என்பதற்காக சத்யத்தை வளைப்பது எனக்கு அறவே பிடிக்காது! அதே போல் சத்யத்தைக் காட்டினால் என் கருத்து தவறு என்றவுடன் திருத்திக் கொள்ளத் தயங்கவும் மாட்டேன்! திருத்திக் கொண்டேன் என்று சொல்லக் கூச்சமும் பட மாட்டேன்! -அது சத்யமாக இருக்கும் பட்சத்தில்!!

சங்கரர் இராமானுசருக்கு காலத்தால் முந்தியவர் என்பது சத்யம்! வரலாறு! அதை ஏற்க நான் மறுப்பேன் என நீங்கள் நினைத்தது தான் "புரிதல்" என்பது! :-)))

சங்கரர் கி.மு என்பது மட்டும் வரலாற்றுப் பூர்வமானது இல்லை! அவ்வளவே! இராமானுசருக்கு இரு நூற்றாண்டுக்கு முந்தியவர் என்பது வரலாற்று நூல்களின் அடிப்படை!

//ஆடு பகை குட்டி உறவு என்னும் பழமொழியை நினைவுபடுத்துகிறது.. :-)//

ஆடாவது, குட்டியாவது!
எல்லாம் ஆத்ம சொரூபம் தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நமக்கு தெரியவில்லை, கேள்விப் படவில்லை என்பதால் வேறு எந்த அறிஞர்களும் பயன்படுத்தவில்லை என்பது தவறு//

எனக்குத் தெரியவில்லை என்பதால் பிற அறிஞர்கள் அதைச் சுத்தமாகப் பயன்படுத்தலை-ன்னு சொல்லலையே!

தொல்காப்பியம் பற்றி, பின்னர் வந்த இலக்கிய நூல்களும், இலக்கண நூல்களும் சொல்கின்றன! அதே போல் அமரகோசத்தை ஏன் பிற வடமொழி நூல்கள் சொல்லவில்லை என்று தான் கேட்டேன்! :-)

பாணிணியின் இலக்கணம் பற்றிக் காணப்படும் குறிப்புகள் போல், அமரகோசத்துக்கு இல்லையே! அது தான் நான் முன் வைத்தது!

மெளலி (மதுரையம்பதி) said...

//சங்கரர் கி.மு என்பது மட்டும் வரலாற்றுப் பூர்வமானது இல்லை! அவ்வளவே! இராமானுசருக்கு இரு நூற்றாண்டுக்கு முந்தியவர் என்பது வரலாற்று நூல்களின் அடிப்படை!//

எல்லா சங்கர விஜயங்களையும் படித்தவர்களிடம் கேட்டு அறியுங்கள். நான் எனது முந்தைய ஒரு பதிவிலும் இது பற்றி சொல்லியிருக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தேவஸேனாபதி; சூர ஸ்வாமி கஜமுகாநுஜ"//

//ஒரு அஷ்டோத்திரம் போலவே இருக்கும்//.

டியேன் கேட்டதற்குத் தேடிப் பிடித்து எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிண்ணா!
ஆமாம், நீங்களே சொன்னது மாதிரி அஷ்டோத்திரம் போல் தான் இருக்கு!

ஆனால் இது எப்படி ஸ்வாமி என்றால் முருகன் "மட்டுமே" என்று குறிக்கிறது?
தேவசேனாபதி ஓக்கே!
கஜமுகாநுஜ ஓக்கே!
சூர ஸ்வாமி = சூரனின் ஸ்வாமி! அது குமார ஸ்வாமி!

நீங்கள் வாதிட்டது போல், ஆதியில் குமாரஸ்வாமி ஒருவரே ஸ்வாமி என்றெல்லாம் இதில் இல்லையே! :-)

அப்படிப் பார்த்தால் அதே அமரகோசத்தில் நீங்கள் குறிப்பிட்ட லக்ஷ்மீ சுலோகத்தில் //லோகமாதா// என்று வருகிறது! அதனால் லஷ்மீ ஒருத்தியே லோகமாதா என்று அமரகோசம் சொல்கிறது என்று வாதிட முடியுமே! :-)

பயப்படாதீங்க! அப்படிச் செய்ய மாட்டேன்! ஒரு ஒப்புமைக்கு மட்டுமே சொன்னேன்! நோ கரட்டு வாதம்ஸ்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தமிழ் பதிப்பு கதை வடிவமாய் இருந்தால், அதில் வள்ளியைப் பற்றிக் கதையில் யார் வேன்டுமானாலும் சொல்லலாம்!//

ஆமாம், எல்லா புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும், தலவரலாறுகளுக்கும் இது பொருந்தும். :-)//

நிச்சயமா!
தல வரலாற்றுக்கு புராணப் பிரமாணங்களைக் காட்டலாமே!
புராணத்தில் வரும் ஸ்லோகத்தை சொல்லலாமே!
அதான் கதையாய் இல்லாமல், அதே போல், தமிழ்க் குறமகள் வள்ளி பற்றிய புராண சுலோகத்தை எடுத்துத் தருமாறு வேண்டிக் கொண்டேன்!
அதுவும் உங்கள் கட்சி வாதத்துக்கு வலு சேர்க்கத் தான்!
முருகனை வடமொழி புகழ்ந்துள்ளது போல், தமிழ்மகள் வள்ளியையும் வடமொழி புகழ்ந்துள்ளது என்பது உங்களின் இந்தப் பதிவுக்கு மேலும் வலு சேர்க்கும் அல்லவா!

அடியேனைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்! கரட்டு வாதமாய்க் கேட்கவில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என் பதிவுகளுக்கு 100 மிக மிக அறிதானது தான்....இன்னும் சொல்லப் போனால் இப்படி செய்தாலாவது படிப்பது மனதில் பதிகிறதா என்று பார்க்கிறேன். இதனால் ஒரு போதைக்கு ஆளாக விருப்பம் இல்லை. :-)//

கண்டிப்பாக பின்னூட்ட போதைக்கு ஆட்படவே கூடாது மெளலி அண்ணா! பதிவின் சுய சாராம்சம் போய் விடும்!

இங்கே பின்னூட்டக் கணக்கைக் கூட்ட ஜல்லியோ, கும்மியோ செய்யவில்லை பாருங்கள்! அத்தனையும் நல்ல வாதங்கள்/பதில்கள்! அதனால் இது போன்ற approach இருந்தால் அதிகமான பின்னூட்டங்களும் ஓக்கே தான்! :-)

தொடர்ந்து எழுதுங்கள்! எழுதி வைக்கும் இடமாக மட்டுமன்றி, நண்பர்கள் ஒன்று சேர்ந்து விவாதித்தும் தெளிவு பெற்றும்,
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் போல் உங்கள் பதிவுகள் அமையட்டும்!
அடியேன் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//அதுவும் உங்கள் கட்சி வாதத்துக்கு வலு சேர்க்கத் தான்!
முருகனை வடமொழி புகழ்ந்துள்ளது போல், தமிழ்மகள் வள்ளியையும் வடமொழி புகழ்ந்துள்ளது என்பது உங்களின் இந்தப் பதிவுக்கு மேலும் வலு சேர்க்கும் அல்லவா!//

பார்க்கலாம், தெரிந்த சிலரிடம் சொல்லியிருக்கிறேன். கிடைத்தவுடன் பதிவிடுகிறேன். மற்றபடி யாருக்கும் எதையும் தெளிவாக்க/மாற்ற முடியும் என்று பெரிய நம்பிக்கையுடன் எல்லாம் நான் இங்கு ஏதும் எழுதவில்லை...

முன்பே சொன்னது போல, நான் படித்ததை, கேட்டதை, புரிந்துகொண்டதை மட்டுமே எழுதுகிறேன். பெரிதாக மனனம் செய்து நினைவிருத்திக் கொள்ளவும் விழைவதில்லை.

எங்கேனும் என்பதிவில் எதையேனும் நிலைநிறுத்துவது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்குமாயின் அதற்காக வருந்துகிறேன். அது போன்ற எந்த ஹிட்டன் அஜெண்டாவும் எனக்கு இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன். :-)

sury siva said...

முருகா, கந்தா, குமரா, கார்த்திகை பாலா, கடம்பா
வேலா, ஷண்முகா, சுப்பிரமணிய, ஸ்வாமினாதா,
மயில் வாகனா, வள்ளி நாயகா, பழனி ஆண்டவா
இடும்பனை அழித்த வஜ்ரவேலா வெற்றி வேலா
நான்முகனும் போற்றிய ஆறுமுகனே, ஆறுபடை வீட்டோனே
தந்தைக்கு உபதேசம் செய்தவனே

இந்த வலைக்கு வந்த அனைவருக்கும்
தந்தருள்வாய் இன்றே
தனித்தனியே உபதேசம்

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: உங்கள் பதிவுக்கு வரவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.
வந்தேன். பக்தர் கூட்டமதில் நசுங்கிப் போனேன்.
மூச்சு முட்டிவிட்டது.

மெளலி (மதுரையம்பதி) said...

//சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: உங்கள் பதிவுக்கு வரவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.
வந்தேன். பக்தர் கூட்டமதில் நசுங்கிப் போனேன்.
மூச்சு முட்டிவிட்டது.//

வாங்க சுப்பு ரத்தினம் சார். நீங்க வந்தது மிகப் பெரிய மகிழ்ச்சி...:)

அட பக்தர் கூட்டமாயிருந்தா என்ன, ஒரு தகவல் குடுத்திருந்தா நானே சிறப்பு தெரிசனம் செய்துவைத்திருப்பேனே :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அட பக்தர் கூட்டமாயிருந்தா என்ன, ஒரு தகவல் குடுத்திருந்தா நானே சிறப்பு தெரிசனம் செய்துவைத்திருப்பேனே :-)//

சிறப்புத் தரிசனமா?
மெளலி அண்ணா வேணாம்...சொல்லிபுட்டேன்! :-)

sury siva said...

சிறப்பு தரிசனமா ? எனக்கா ?
முருகா ! சிவ குமாரா !
என்னே உன் கருணை !
வந்தேன். ஆஹா ! என்ன ஆனந்தம்!!
இதோ உன் சன்னதியில் பாட்டு கூட கேட்கிறதே !
ஸ்ரீ வள்ளி தேவஸேனாபதே !

சம்ஸ்க்ருத மொழியில் நடபைரவி ராகத்தில்
நித்ய ஸ்ரீ யின் குரல்
பாபனாசம் சிவன் இயற்றியது அல்லவா இது !

http://ww.smashits.com/music/carnatic/play/songs/149/s-nithyasree/6660/Sri_Valli_Devasenapathe.html

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

மெளலி (மதுரையம்பதி) said...

//சிறப்பு தரிசனமா ? எனக்கா ?
முருகா ! சிவ குமாரா !
என்னே உன் கருணை !
வந்தேன். ஆஹா ! என்ன ஆனந்தம்!!
இதோ உன் சன்னதியில் பாட்டு கூட கேட்கிறதே !
ஸ்ரீ வள்ளி தேவஸேனாபதே !

சம்ஸ்க்ருத மொழியில் நடபைரவி ராகத்தில்
நித்ய ஸ்ரீ யின் குரல்
பாபனாசம் சிவன் இயற்றியது அல்லவா இது !//


வாங்க சூரி சார்,

மிக அழகா

ஸ்ரீ வள்ளி தேவஸேனாபதே
ஸ்ரீ சுப்ரம்மண்யா நமோஸ்துதே


என்று தீக்ஷதர் பாடலைப் பாடியவாரே வந்து சிறப்பு தரிசனம் செய்தீர்கள் போல.. :-)
நான் சுதா பாடிய இந்த பாடலைக் கேட்டிருக்கிறேன். கேட்கையில் எதிரே சுப்ரமண்யன் காட்சியளிப்பது சுலபமாக நடக்கும் என்னும் நம்பிக்கையை கொடுக்கும் அளவு பாடியிருப்பார். :-)

மற்றபடி எப்போது வந்தாலும் உங்களுக்கு சிறப்பு தரிசனம் பண்ணிவைக்க நான் ரெடி...அதுவும் இவ்வாறு பாடலுடன் வந்தால் டபுள் ஓகே. :-)

குமரன் (Kumaran) said...

பரமஸ்வாமி என்பது சிவபெருமான் பெயர் என்பது பாலகுமாரன் கதையில் மட்டும் தான் என்று சொல்லியிருக்கிறீர்களே மௌலி. எந்த கதையில் அப்படி சொல்கிறார்? உடையாரில் என்றால் இரவி சொல்வது போல் அது பெருவுடையாரின் திருப்பெயரென்பதால் சரி தான்.

விதப்புன்னா என்னன்னு அகரமுதலியைப் பாத்து தெரிஞ்சுக்கிட்டீங்களா?

குமரன் (Kumaran) said...

இரவி,

ஈஸ்வரன், ஸ்வாமி என்பது பொதுவான பொருளில் பொது தான். ஈஸ்வரன் என்பது விதப்பா சிவபெருமானைக் குறிப்பது போல் அமரகோச காலத்தில் ஸ்வாமி என்பது விதப்பா சுப்ரமணியரைக் குறித்திருக்கிறது. அப்படித் தான் அமரகோசத்தைப் பார்த்தால் தெரிகிறது. நீங்கள் அந்தச் சொற்களின் பொதுப்பொருளை வைத்துக் கொண்டு மறுத்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை. நானும் ஸ்வாமி என்பது எப்படி சொத்தினை உடையவன் என்ற பொருளில் எல்லோருக்கும் உரிய பொருள் என்று சொல்லியிருக்கிறேன். அது பொதுவான பொருள்.

எதை வைத்து சுப்ரமண்யரை மட்டுமே 'ஸ்வாமி' என்று அமரகோசம் குறித்தது என்று எனக்குத் தெரியாது. அதே போல் எதனை வைத்து 'ஈஸ்வர' என்ற பெயர் சிவனுக்கு விதப்பாக அமைந்தது என்றும் எனக்குத் தெரியாது. அப்படியே 'விஷ்ணு', 'கேசவ', 'அச்யுத', 'சிவ', 'சங்கர' போன்ற எல்லா திருப்பெயர்களின் பொதுப்பொருளையும் வைத்து எல்லோரையும் கூப்பிடலாம்; ஆனால் ஏன் அது வழக்கில் ஒருவரை மட்டுமே குறிக்கும் திருப்பெயர்களாக அமைந்தன என்று தெரியாது. (நான் பட்டியலிட்ட ஐந்து திருப்பெயர்களும் திருமாலின் ஆயிரம் திருப்பெயர்களில் வருகின்றன என்பதும் ஆனால் வழக்கில் சிவ, சங்கர என்ற திருப்பெயர்கள் விதப்பாக சிவபெருமானையே குறிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும்). விதப்பாக சுப்ரமண்யரை ஒரு காலத்தில் 'ஸ்வாமி' என்ற திருப்பெயர் குறித்தது என்று சொன்னால் அதனுடைய பொதுப் பொருளை வைத்து வாதிடுவது வெவ்வேறு நிலைகளில் நின்று பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.

திருமுருகனின் இன்னொரு பெயரான ஸ்வாமிநாதன் என்ற பெயர் ஸ்வாமியைப் பற்றி எழுதும் போதே நினைவிற்கு வந்தது. அந்தத் திருப்பெயர் ஸ்வாமியின் பொதுப் பொருளில் தகப்பனுக்கு ஆகி இங்கே தகப்பன் ஸ்வாமியைக் குறித்தது போலும். (சுவாமியைப் பாடும் வாயால் தகப்பன் சுவாமியைப் பாடுவேனோ - நினைவிற்கு வருகிறதா? :-) )

ஸ்வாமி புஷ்கரிணி என்னும் போது ஸ்வாமி என்ற சொல் திருமாலைத் தான் குறிக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழிலும் ஆழ்வார்கள் அழகாக திருக்கோனேரி என்று சொல்லிவிட்டார்களே. அப்போது ஸ்வாமி என்பதன் பொதுப் பொருளான கோன் என்பதை புழங்கியிருக்கிறார்கள். (பக்கவாட்டுச் சிந்தனை: கோனேரி என்பது தான் அந்தத் திருக்குளத்தின் தொன்மைப் பெயராக இருந்து அது வடமொழியில் ஸ்வாமி புஷ்கரிணி என்று மொழிப்பெயர்க்கப்பட்டு பின்னர் திருமுருகன் கோவில் என்ற வாதத்திற்கு பயன்பட்டது போலும்). தலம் முருகனின் தலம் என்பது மொக்கையான வாதமா? ஸ்வாமி புஷ்கரிணி என்பதால் இது முருகனின் தலம் என்று இரணடையும் இணைத்துச் சொன்னது மொக்கையான வாதமா? தெளிவாகச் சொல்லிவிடுங்கள். இண்டு இடுக்கு கிடைத்தாலும் நுழைந்து வருவதற்கு நண்பர்கள் உண்டு. :-)

உடையவரின் வாதத்தைப் பற்றி மேலும் சொல்லுங்கள்.

அக்னி - அதிதேவதை என்பதைப் பற்றி படித்தவற்றை நினைவிலிருந்து சொன்னேன் இரவிசங்கர். ஏரணத்திற்கு ஒத்து வரவில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் அப்படியே விட்டுவிடலாம். ஆனால் வடமொழி சமய இலக்கியங்களில் தேவதைகளைப் பற்றி சொல்லப்படும் உருவக முறைகளைப் பொறுத்து அக்னிக்கு அதிதேவதையாக சுப்ரமண்யன் அமைவது ஏரணத்திற்கு ஏற்றதாகத் தான் அடியேனுக்குத் தோன்றுகிறது.

மாயை, மாயா, மாயோன், மாயவன், மால், மயக்கம், மாலவன் - இந்த கருத்தை இன்னும் நன்கு விரித்து விரைவில் ஒரு இடுகை இடுங்கள் இரவிசங்கர். அண்மையில் ஒரு பழந்தமிழ் பாடலைப் படிக்கும் போது 'மால்' என்ற சொல்லுக்கே கரிய என்ற பொருளைத் தான் பழைய உரையாசிரியர்கள் சொல்லியிருப்பதைக் கண்டேன். மால்வரை என்ப்தற்கு கரியமலை என்ற பொருள் சொல்லியிருந்தது. அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாதவர் என்ற சொல்லை இருடிகளைக் குறிக்க கம்பர் பயன்படுத்தியிருப்பதைப் படித்திருக்கிறேன். அப்போது பெரும் தவத்தவர் என்ற பொருளை அங்கே கொள்கிறார். ஆனால் மாதவன் என்று திருமாலைக் குறிக்கும் எந்த இடத்திலுமே, இரு மொழிகளிலும், பெருந்தவத்தவன் என்ற பொருள் கொள்ளப்படுவதில்லை - அங்கெல்லாம் திருமகள் கேள்வன் என்ற பொருளே கொள்ளப்படுகிறது. சரி தானா? பெருந்தவத்தவர் என்ற பொருளில் மாதவர் என்ற சொல் தமிழில் இருப்பதால் அதே சொல் வடமொழியிலும் மாதவ என்று பெருமாளைக் குறித்தது என்றால் எப்படி?

மாதவன் என்ற சொல்லில் குணங்கள் எங்கு வந்தது? அப்படி இரு மொழிகளில் எங்காவது வந்திருந்தால் அது கல்யாணகுணங்களைச் சொல்கிறது என்று சொல்லி பெருமாளுக்கு பெருந்தவத்தோன் என்ற பொருள் கொண்ட பெயரையும் சூட்டலாம். ஆனால் இரு இடங்களிலும் அப்படி வந்ததாகத் தெரியவில்லையே?

இன்னும் இரு கேள்விகள்: மா என்பது பெருமையைக் குறிக்கும் தனித்தமிழ் சொல்லா அன்றி மஹா என்பதன் தமிழ்வடிவமா? தவ என்பது தவத்தைக் குறிக்கும் தனித்தமிழ் சொல்லா அன்றி தபஸ் என்பதன் தமிழ்வடிவமா?

வேர்ச்சொல் ஆராய்ச்சியை நானும் புறந்தள்ளவில்லை. ஆனால் வேர்ச்சொல்லாக இல்லாததை எல்லாம் இழுத்துப் பொருள் சொல்வது இங்கே உதவாது என்று தான் இப்போதும் சொல்கிறேன். அப்படிச் செய்யும் வேர்ச்சொல் ஆராய்ச்சி இங்கே உதவாது. :-)

மற்ற பின்னூட்டங்களையும் நேரம் கிடைக்கும் போது படித்து சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//விதப்பாக சுப்ரமண்யரை ஒரு காலத்தில் 'ஸ்வாமி' என்ற திருப்பெயர் குறித்தது என்று சொன்னால் அதனுடைய பொதுப் பொருளை வைத்து வாதிடுவது வெவ்வேறு நிலைகளில் நின்று பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது//

குமரன்
பொதுப்பொருளை வைத்து நான் வாதிடவில்லை! அடுத்து இன்னொன்றும் கேட்டிருக்கேன் பாருங்க!

அமரகோசத்தில் சூர ஸ்வாமி என்று அஷ்டோத்திரம் போலத் தான் வருகிறது! அதைப் போய்ச் சொல்லுக்குப் பொருளாக எப்படிக் கொள்ள முடியும் என்று தான் தெரியலை!

மேலும் அமரகோசத்தில், லோக மாதா என்று லட்சுமிக்கும் வருகிறது! அப்படி என்றால் லோகமாதா என்பது மகாலட்சுமியை மட்டுமே குறிக்குமா? சொல்லுங்கள்! உங்கள் வாதப்படி பார்த்தால் உலக அன்னை என்பது முதலில் அவள் மட்டும் தானா? பின்னர் தான் எல்லாருக்கும் அப்பெயர் வழங்கலானதா?

//தலம் முருகனின் தலம் என்பது மொக்கையான வாதமா? ஸ்வாமி புஷ்கரிணி என்பதால் இது முருகனின் தலம் என்று இரணடையும் இணைத்துச் சொன்னது மொக்கையான வாதமா? தெளிவாகச் சொல்லிவிடுங்கள். இண்டு இடுக்கு கிடைத்தாலும் நுழைந்து வருவதற்கு நண்பர்கள் உண்டு. :-)//

ஹிஹி
ஸ்வாமி புஷ்கரிணி என்பதால் இது முருகனின் தலம் என்று இரணடையும் இணைத்துச் சொன்னது மொக்கையான வாதம் என்று தான் தெளிவாகச் சொல்லி இருந்தேனே! அப்புறம் என்ன இந்த ஐயம்? ஒரு கால் அறிந்த ஐயமோ? :-))
//திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ்கரிணியை - ***இதே ஸ்வாமி என்று பெயர் வருவதால்*** - தலம் முருகனின் தலம் என்ற மொக்கையான ஒரு வாதம் வைக்கப்பட்ட போது//

ஆனால் நீங்க சொன்ன முதல் வாதம் கூட மொக்கை போலத் தான் தோன்றுகிறது! ஹா ஹா ஹா!

//அக்னி - அதிதேவதை என்பதைப் பற்றி படித்தவற்றை நினைவிலிருந்து சொன்னேன் இரவிசங்கர். ஏரணத்திற்கு ஒத்து வரவில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் அப்படியே விட்டுவிடலாம்//

அப்படி என்றால் மற்ற அஷ்டதிக் பாலகரின் அதி தேவதைகள் யார் யார் குமரன்?

//மால்வரை என்ப்தற்கு கரியமலை என்ற பொருள் சொல்லியிருந்தது//

மடப்பிடி கண்டு வயக்கரி மால் உற்று என்று பரிபாடல் சொல்கிறது!
இங்கே மால்=மயக்கம்/மாயை/Illusion!

மால், மாலை, மயக்கும் மாலைப் பொழுதே என்றெல்லாம் விரியும்!
மாலுதல் என்றால் மயங்கல் என்றே பொருளும் வரும்!

மால் வரை = கரிய மலை என்பதும் பொருந்தும். மால்வரை நிவந்த சேணுயர் வெற்பு - திருமுருகாற்றுப்படை!

இப்படி மால் என்பது கருமை, மயக்கும் தன்மை என்று இரண்டுமே இயைந்து தான் வருகிறது மாயோன் என்ற சொல்லுக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மா என்பது பெருமையைக் குறிக்கும் தனித்தமிழ் சொல்லா அன்றி மஹா என்பதன் தமிழ்வடிவமா? தவ என்பது தவத்தைக் குறிக்கும் தனித்தமிழ் சொல்லா அன்றி தபஸ் என்பதன் தமிழ்வடிவமா?//

மா, தவம் இரண்டும் பழந்தமிழ்ச் சொற்கள்.

சால உறு தவ நனி கூர் கழி மிகல் என்பதில் தவ என்பதை மறந்தது நம் குமரனோ? :-)

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின் என்று குறளும் தவம் பற்றிச் சொல்கிறதே!
தவம் என்பது பழந்தமிழ்ச் சொல்லே!

தபஸ், டவுன் பஸ் எல்லாம் அடியேனுக்குத் தெரியாது! :-)
வடமொழி விற்பன்னர்கள், வாகாம்ருத வர்ஷீக்கள் தான் வந்து சொல்லனும்!

மெளலி (மதுரையம்பதி) said...

//அமரகோசத்தில் சூர ஸ்வாமி என்று அஷ்டோத்திரம் போலத் தான் வருகிறது! அதைப் போய்ச் சொல்லுக்குப் பொருளாக எப்படிக் கொள்ள முடியும் என்று தான் தெரியலை!//

சூர ஸ்வாமி இல்லை, சூர: ஸ்வாமி...முருகனையே சூரன்ன்னு சொல்லி அப்பறமா ஸ்வாமின்னு சொல்லறது.


//மேலும் அமரகோசத்தில், லோக மாதா என்று லட்சுமிக்கும் வருகிறது! அப்படி என்றால் லோகமாதா என்பது மகாலட்சுமியை மட்டுமே குறிக்குமா? சொல்லுங்கள்! உங்கள் வாதப்படி பார்த்தால் உலக அன்னை என்பது முதலில் அவள் மட்டும் தானா? பின்னர் தான் எல்லாருக்கும் அப்பெயர் வழங்கலானதா?//

அந்த காலகட்டத்தில் அப்படி இருந்திருக்கலாம் யார் கண்டது...ஸ்வாமி எப்படி முருகனுக்கு மட்டும் இருந்திருக்கலாம் என்றேனோ அதே போல லோகமாதான்னு ஸ்ரீ மட்டும் குறிப்பிட்டிருக்கலாமே?..

மெளலி (மதுரையம்பதி) said...

குமரன்,

முதலில் ஒரு தெலுங்கு அரசிதான் ஏழுமலையான் கோவிலை செப்பனிட்டு ஆராதனை ஆரம்பித்ததாக படித்த நினைவு. அப்போ அந்த ராணி காலத்துல புஷ்கரிணி இல்லையா?. இந்தம்மா ஆழ்வார்களுக்கு முன்பா இல்லை பின் வந்தவரா?. இந்த கோனேரி என்பது தான் கோவிலுக்கு நீர் ஆதாரமா?, ஏதோ ஆகாஸ கங்கை இருக்கு, அங்க இருந்துதான் பெருமாள் திருமஞ்சனத்துக்கு நீர் வருதுன்னெல்லாம் சொல்றாங்களே அது எப்போதிருந்து?.

மெளலி (மதுரையம்பதி) said...

//தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின் என்று குறளும் தவம் பற்றிச் சொல்கிறதே!
தவம் என்பது பழந்தமிழ்ச் சொல்லே! //

இன்னைக்கு நாம தரவு, உசாத்துணைன்னெல்லாம் சொல்றமாதிரி அன்றே தவம் தபஸிலிருந்து வந்திருக்க கூடாதா?...

Anonymous said...

ஜாதகத்திலே ஒருவருக்கு லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் செவ்வாய் அமர,
செவ்வாய் கிரகத்தை, லக்னத்திற்கு 5ம் இடத்தில் இருந்து குரு பார்த்தாலும், செவ்வாய்
தன் சொந்த வீடு (மேஷம், விருச்சிகம் ) அல்லது உச்சத்தில் (மகரம் ) இருந்து குருவினால்
பார்க்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு முருகப் பெருமானின் பரிபூரண அருள் உண்டு.

தற்போது செவ்வாய் கிரகம் கடகத்தில் நீசனாய் இருப்பதாலும் அந்த கிரகத்தை அமெரிக்க‌
நாட்டு லேன்டர் ஒன்று அடைந்து அங்கே மண்ணை எல்லாம் தோண்டுவதாலும் தான்
இப்படிப்பட்ட சர்ச்சைகள் தொடர்கின்றன என்று நினைக்கிறேன். ஆனி மாதம் 5 தேதி
வரை இது தொடரலாம்.

மேஷ, விருச்சிக, மகர ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை அன்று எதற்கும் நவக்ருஹத்தில்
செவ்வாய் கிரஹத்திற்கு அர்ச்சனை செய்யவும்.

சுந்தர கனபாடிகள்
சென்னை.

Anonymous said...

Sarvesham
எல்லோருக்கும் இதோ ஒரு சம்ஸ்க்ருதத்தில் ஸ்ரீ சுப்ரமண்ய கத்யம். (வல்லின்னு வந்திருக்கு )

ஓம். புரஹர நந்தன ரிபுகுல பஞ்சன தினகர கோடி ரூப
ஹரி க்ருத லோக தாப சீகீந்தர வாஹன மஹேந்திர பாலன‌
வித்ரும ஸகல புவன மூல விதுத நிகலதனுஜதூல தாபஸ
ஸமாராதிக், பாபஜ விகாராஜித, தாருண்ய விஜித மாராகார‌
காருண்ய ஸஸில பூராதஸ்ர, மயூர வாஹன, மஹேந்திர கிரி கேதன‌
பக்தி பர கம்ய, ஸ்க்திகாரம்ய, பரிபாலித நாக புரசாஸன பாக‌
நிக லோக தாயக, திரி விதாரிஸாயஹ, மஹாதேவ பாகதேய
மஹாபுண்ய நாமதேய வி நதசோக வாரண விவித லோக காரண
ஸுர வைரி கால, புர வைரி பால, பல பந்த, விமோசன‌
தளதம்பு விலோசன, கருணாம்ருத ரஸ ஸாகர, தருணாம்ருத
கரஸேகர,

வல்லிமான ஹரிவேஷ, மல்லிமால பாரிகேச,

பரிபாவித் விபுல லோக பரிகரலி, தவிந்த சோக, முக விஜித சந்த்ர‌
நிகல குண மந்த்ர, பானுகோடி ஸத்ரு ஸரூப, பானுகோப‌
பயத சாப, பித்ரு மனோஹாரி, மந்த ஹாஸ , ரிபு ஸிரோதாரி,
சந்த்ர ஹாஸ ஸ்ருதி ஹலித மணிகுண்ட ருசிவிஜிதரவி
மண்டல புஜவர விஜி வஸால பஜனபம் ரனுஜபால நலவீர‌
சம்சேவித ரணதீர ஸம்பாவித மனோஹரரிஸீல மஹேந்திரார்
கீல குஸுமல விஸ்தஹாஸ் குலஸிகரி நிவாஸ் விஜி தகரண‌
முனிஸேவித விஹித மரண ஜனிபாஷித ஸ்கந்த புர நிவாஸ
நந்தன க்ருத விலாஸ கமலான வி நத சதுராகம வினுத‌
கலிமல விஹீன க்ருத ஸேவன ஸரஸிஜ நிகரஸ ஸுத
லோசன அஹார்ய வர தீர அனார்ய நா தூர விதானித‌
ரோக ஜால விரசித்த போகமூல போகீந்த்ர பரவித‌
யோகீந்த்ர பாவித் பாகஸ ஸ நபரி பூஜித நாகவாஸி நிகர‌
ஸேவித விதரு வித்யா தர வித்ரும ஹ்ருதாயதர, தலித்தனுஜ‌
வேதண்ட விபுதவரத் கோதண்ட பரிபாலித் பூஸுர‌
மணிபூஸன பாஸுர அக்ரம்யஸபாவ ஸ்ருதிகமய‌
ஹரிபாவ லீலாவிஷேஷ, தோஷிதங்கர, ஹேலாவிசேஷ‌
கலித சங்கர ஸம்ஸுரதன ஸஸதர வதன விஜயீபவ‌
விஜயீ பவ.
ஓம். தேவ தேவாத் உத்தமா தேவதா ஸார்வபெளமா
அகிலாண்ட கோடி பிருமாண்ட நாயகா,
ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி விஜயி பவ விஜயி பவ.
சரணம் சரணம்
சரவண பவாம்.

எல்லோரும் செவ்வாய்க்கிழமையன்று இதைச்சொல்லி
பயன் பெறுக.

சுந்தர கனபாடிகள்.

sury siva said...

அட ! இன்னுமா இந்த சம்வாதம் நடந்துன்டிருக்கு
பேஷ் பேஷ் !!

எதற்கும் இந்தப் பாட்டைக் கேட்டுட்டு தொடருங்கள்.
" வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி, ஊனும் உருகுதடி. "

http://www.musicindiaonline.com/p/x/2UO2X4Xolt.As1NMvHdW/

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

குமரன் (Kumaran) said...

//அவ்வாறு தோற்றதால் தான் செய்த எல்லா மத நூல்களையும் எரித்துக்கொண்டிருக்கையில் //

அப்படின்னா இது சம்பந்தர் காலத்துக்கு முன்னாடி இருந்தே இருந்திருக்கா? ஹூம். இப்படி எல்லா பக்கங்களிலும் எத்தனை நல்ல நூற்கள் அழிந்து போனதோ?

குமரன் (Kumaran) said...

அமரகோசத்தினை பல வடமொழி நூற்களும் குறிப்பிட்டு படித்திருக்கிறேன் இரவிசங்கர். அது பிரபலமான நிகண்டு தான்.

குமரன் (Kumaran) said...

//
//யாரும் புறந்தள்ளினமாதிரி தெரியல்ல.. :)//

--வேர்ச்சொல் ஆராய்ச்சியும் அவ்வளவாக உதவாது--

--இந்தப் பெயர்களுக்குப் பொருள் சொல்ல வடசொற்களின் பொருள்களைத் தான் சொல்லவேண்டும். தமிழில் இவற்றிற்குத் தனித்த பொருள் இல்லை--

இதுக்கு எல்லாம் என்ன பொருள் மெளலி அண்ணா? :-))//

இரவிசங்கர். இப்படி ஆங்காங்கே சில வார்த்தைகளை எடுத்துக் கொண்டு out of contextல் உங்களுக்கு ஏற்ற மாதிரி பொருள் கொண்டு விவாதிக்கிறீர்கள் என்று நம் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். அது நினைவிற்கு வருகிறது. :-)

குமரன் (Kumaran) said...

அமரகோசத்துல இலக்குமியைப் பற்றி சொல்லும் போது 'ஸ்ரீ: ஹரிப்ரியா' என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தொடர் ஸ்ரீ என்ற பெயர் திருமகளுக்கு விதப்பாக இருப்பதை குறிக்கிறது என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது? மரியாதையின் நிமித்தம் ஸ்ரீ என்று சொல்வோமே அது போல இங்கே சொல்லியிருக்கிறார்கள். அப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். - இப்படி யாராவது சொன்னால் எப்படி இருக்குமோ அது போல் இருக்கிறது 'சூர: ஸ்வாமி' என்ற இரு பெயர்களை ஒரே பெயராகக் கொண்டு சூரனுக்குச் சுவாமி என்று பொருள் சொல்வது. :-)

***

நான் நேற்றே எழுதி வைத்த பின்னூட்டங்கள் இவை. இன்று தான் இட முடிந்தது. இப்போது பார்த்தால் இரவியும் இலக்குமியைப் பற்றி சொல்லியிருக்கும் அமரகோச வரியைக் குறிப்பிட்டிருக்கிறார். வரிசையாகப் படித்து வரும் போது அதற்கும் ஏதேனும் சொல்ல இருந்தால் சொல்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சுந்தர கனபாடிகள் ஐயாவுக்கும் வணக்கம்! சுப்ரமண்ய கத்யம் மிக அருமையாகக் கொடுத்தமைக்கு நன்றி!

//வல்லிமான ஹரிவேஷ, மல்லிமால பாரிகேச//

இதுக்குக் கொஞ்சம் பொருள் சொல்லுங்க மெளலி அண்ணா! அப்படியே ஸ்கந்த புராணத்தில் வள்ளி என்று வரும் சுலோகத்தைக் கொடுத்தால் அடியோங்கள் தன்யராவோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'சூர: ஸ்வாமி' என்ற இரு பெயர்களை ஒரே பெயராகக் கொண்டு சூரனுக்குச் சுவாமி என்று பொருள் சொல்வது. :-)//

சரி, இரு பெயர்களை ஒரே பெயராகக் கொள்ளவில்லை! தனியாகவே இருக்கட்டும்!

ஸ்வாமி என்று ஒற்றைச் சொல்லாக அமர கோசம் காட்டுவதால் மட்டும் ஸ்வாமி என்ற சொல் ஸ்கந்தனுக்கே உரிய சொல் என்பதை எப்படி நிறுவ முடியும்?
அதான் கேட்டேன்! அதே அமர கோச லாஜிக் படி பார்த்தால் லோகமாதா என்ற அமரகோசம் காட்டும் சொல் இலக்குமிக்கு மட்டுமே உரிய சொல்லா?
இதுக்கு நேரடியான பதில் சொல்லுங்க!


//மரியாதையின் நிமித்தம் ஸ்ரீ என்று சொல்வோமே அது போல இங்கே சொல்லியிருக்கிறார்கள்//

ஸ்ரீ என்பது மரியாதையின் நிமித்தம் பயன்படுத்தும் சொல்லாக இருந்தாலும், பல சமய நூல்களும் ஒருமனதாக ஸ்ரீ என்பது இலக்குமியைக் குறிப்பதாகக் காட்டுகின்றன!

அனைத்து தெய்வங்களையும் "ஸ்ரீ" என்று விளித்துத் தான் எழுதுகிறோம்!
ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ஐயப்பன் என்று சொல்லும் போது மரியாதை நிமித்தம்.

ஆனால் ஸ்ரீயப் பதி என்று வரும் போது ஸ்ரீ ஆனவள் திருமகளே என்று ஆகி விடுகிறது! வேறு மாதிரி பொருள் கொண்டால் ஸ்ரீயப் பதி என்பதற்குப் பொருள் விபரீதமாகப் போய்விடும்! பிற சமய நூல்களும் ஸ்ரீ ஆனவள் இலக்குமியே என்று கையாளுகின்றன!

ஆனால் ஸ்வாமி அப்படி இல்லையே! அமர கோசம் தவிர வேறெந்த நூலும் சுவாமி என்பது ஸ்கந்தன் மட்டுமே என்று குறிக்கவில்லை! அமர கோசம் கூட அப்படிக் குறிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன்! அமர கோசம் அஷ்டோத்திரம் போல் ஸ்வாமி, லோகமாதா என்றெல்லாம் ஒரு லிஸ்ட் போடுகிறது! அவ்வளவே!

@மெளலி அண்ணா
/இன்னைக்கு நாம தரவு, உசாத்துணைன்னெல்லாம் சொல்றமாதிரி அன்றே தவம் தபஸிலிருந்து வந்திருக்க கூடாதா?...//

அன்றே தபஸ் தவத்தில் இருந்து போய் இருக்கக் கூடாதா? :-))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கனபாடிகளே....எந்த ஊர்ல இருந்து வரீங்க?..இங்கெல்லாம் கத்யம் சொன்னா போதாது..வடமொழி, தமிழ், தெலுங்குன்னு போட்டு தாக்குவாங்க...அதுக்கு பதில் சொல்லணும். நானே எழுதறத விடலாமுன்னு இருக்கேன்..எனக்கு ஒரு நண்பர் அப்படித்தான் சாட்-ல அட்வைஸ் பண்றாரு. நீங்க ஏன் இதுல வந்து மாட்டிக்கிறீங்க...

பாருங்க நீங்க சொன்ன ஸ்லோகத்துக்கு நான் பொருள் சொல்லணுமாம், இப்படியெல்லாம் மிரட்டல்கள் வரும்.
இதுக்கு பதிலா ஏதாவது ஸூக்தம் இன்னும் 2 முறை பாராயணம் செய்துட்டுப் போகலாம். :)

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆனால் ஸ்வாமி அப்படி இல்லையே! அமர கோசம் தவிர வேறெந்த நூலும் சுவாமி என்பது ஸ்கந்தன் மட்டுமே என்று குறிக்கவில்லை! அமர கோசம் கூட அப்படிக் குறிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன்! அமர கோசம் அஷ்டோத்திரம் போல் ஸ்வாமி, லோகமாதா என்றெல்லாம் ஒரு லிஸ்ட் போடுகிறது! அவ்வளவே!//

கே.ஆர்.எஸ், நீங்க வேணுமுன்னு வாதம் பண்றமாதிரி இருக்கு..வேற ஒண்ணூம் சொல்ல தோணல்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

//அன்றே தபஸ் தவத்தில் இருந்து போய் இருக்கக் கூடாதா? :-))//

வந்திருக்கலாம். காலத்தால் எது முந்தையதோ அதிலிருந்து இன்னொன்றுக்கு போயிருக்கலாம்.
எனக்கு இரண்டு மொழிகளில் எதையும் உயர்த்தவோ இல்லை தாழ்த்தவோ தேவை ஏதுமில்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

//அட ! இன்னுமா இந்த சம்வாதம் நடந்துன்டிருக்கு
பேஷ் பேஷ் !!//

சூப்பர் பாட்டு சூரி சார்.

ஏது சம்வாதமா?...ஹிஹி...அப்படி உங்களுக்கு தெரியுதா?...எனக்கு வேற வாதமாத்தான் தெரியுது. ஆனாலும் நீங்க பெரியவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :)

Anonymous said...

இதோ பாருங்கள் ! இன்னொரு ஸம்ஸ்க்ருத ஸ்தோத்திரத்தில் வள்ளி.


ஸ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம்.

யோகீஸ்ச்வரஓ மஹாசேன : கார்த்திகேயோ அக்னி நந்தன :
ஸ்கந்த குமார: ஸேனானி ஸுப்ரமணியாய மங்களம்.

காங்கேயஸ் தாமர சூடஞ்ச: ஸ்வாமி ஸங்கர ஸம்பவ :
ப்ரஹ்மசாரீ ஸீகித்வஜ : ஸுப்ரமண்யாய மங்களம்.

தாரகாரிருமா புத்ர: க்ரெளஞ்சாரிஸ்ச ஷடானன :
ஸனத்குமாரோ பகவான் ஸுப்ரமண்யாய மங்களம்.

ஸ்ப்தப்ரஹ்ம சமுத்ரஸ்ச ஸித்த ஸாரஸ்வதோ குஹ ;
போக மோக்ஷ பலப்ரத : ஸுப்ரமண்யாய மங்களம்.

ஸர்வாகம ப்ரணேதாச பூர்வஜ முக்தி மார்க க்ருத‌
ஸரஜன்மா கணாதீச ஸுப்ரமண்யாய மங்களம்.

ஷஷ்டீசாம் சித்த புருஷாம் வாஞ்சிதார்த்த ப்ரதர்ஸன:
ஸக்தி ஹஸ்தாய குரவே ஸுப்ரமண்யாய மங்களம்.
================================================
யோகானுக்ரஹ வல்லீச கஜனாயகி ஸ்ரீபதிம்.
பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபாய ஸுப்ரமண்யாய மங்களம்.
****************************************************************************
ஸம்யம ஹ்ருதயாஸீனம் ஸஹஜானந்த போகதாம்.
ஜ்யோதிஷாம் ஜ்யோதிரூபாய ஸுப்ரமண்யாய மங்களம்.

க்ஞான வைராக்ய ஸம்பன்னாம் யோகானந்த கரம் வராம்.
ஸாஸ்வதைஸ்வர்ய ஸம்பூர்ணாம் ஸுப்ரமண்யாய மங்களம்.

ஞான பண்டித காருண்ய பரதஸ்ரீ ஸங்கராங்கம்ச‌
ஸ்ரீ சரணாத்மிகாத் பூதிம் ப்ரதாஸ்ய ஸமர்பயாம்.

ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ரூபஸ்ய மங்கள ஸித்தி நவகம்.
ய: படேட் ஸததம் பக்த்யா ஸர்வ லக்ஷ்மி ப்ரஸன்னதம்.

அடுத்ததாக:
தவம் என்ற சொல் தொல்காப்பியத்திற் காணப்படுகிறது.
தபஸ் என்ற சொல் தத்பவமாக வழிவந்து தவஸ் என்று ஆகிப்பின் தவம் என்று தமிழில் வரும்போது
சிதைந்திருக்கிறது என்பதை ஒரு விவாதத்துக்கு வேண்டுமானால் சொல்லலாம். இருப்பினும்
தொல்காப்பிய காலத்தில் தவம் என்ற சொல்லுக்கு உடைய பரிமாணம் தபஸ் என்னும் ஸம்ஸ்க்ருத‌
சொல்லைவிட அகன்றுள்ளது. இது போன்று ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் ஏறத்தாழ ஒரு பொருள்
போலத் தோற்றமளிக்கும் பல உண்டு.

அமர கோசத்தில் வல்லி எனும் சொல் (வள்ளியைக்குறிப்பது ) இருப்பதாகத்தான் தெரிகிறது.
சீக்கிரம் பிடித்து கோர்ட்டில் ஆஜர் செய்து விடுகிறேன்.

சுந்தர கனபாடிகள்.

Kavinaya said...

இந்த லிங்க் எனக்கு வேலை செய்யலங்க.... :(

http://www.musicindiaonline.com/p/x/2UO2X4Xolt.As1NMvHdW/

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதுக்கு பதிலா ஏதாவது ஸூக்தம் இன்னும் 2 முறை பாராயணம் செய்துட்டுப் போகலாம். :)//

நிச்சயமா செய்துட்டுப் போகலாம்!
தெரிந்து தெளிதல், கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு இருக்கு!
அறிந்ததும், அறியாததும், அறியத் தருவதும், அறிந்து கொள்வதும் எல்லாம் ஒரு குணானுபவம், சுகானுபவம்.

மாட்டிக் கொள்ளாதீங்க என்று சங்கடப்படும் அளவுக்கு இங்கே சம்மட்டி அடி வாதம் ஏதும் நடக்கவில்லை!
மாறாக வடமொழி-தமிழுக்கு இடையேயான ஒற்றுமைகளைத் தான் அறிந்து கொள்ள முயன்றோம்! வள்ளியைப் பற்றி வரும் சுலோகங்களை அதனால் தான் கேட்டேன்! கனபாடிகள் ஐயாவுக்கு அடியேன் நன்றி.

இங்கு ஜல்லி அடித்துக் கொண்டிருந்தோம் என்று நீங்கள் கருதினால், மிரட்டினேன் என்று நினைத்தால் எந்தெந்தப் பின்னூட்டங்கள் என்று தனி மடலில் சொல்லுங்கள். Delete செய்து விடுகிறேன்!

//கே.ஆர்.எஸ், நீங்க வேணுமுன்னு வாதம் பண்றமாதிரி இருக்கு..வேற ஒண்ணூம் சொல்ல தோணல்லை.
//

உங்களுக்கு எப்போது அப்படி ஒரு எண்ணம் வந்ததோ, அப்போதே அடியேன் நிறுத்திக் கொள்கிறேன்! இனி இந்த இடுகைக்கு வரமாட்டேன்!

மெளலி (மதுரையம்பதி) said...

//இங்கு ஜல்லி அடித்துக் கொண்டிருந்தோம் என்று நீங்கள் கருதினால், மிரட்டினேன் என்று நினைத்தால் எந்தெந்தப் பின்னூட்டங்கள் என்று தனி மடலில் சொல்லுங்கள். Delete செய்து விடுகிறேன்!//

மிரட்டினீர் என்பது விளையாட்டாகச் சொன்னது....

//கே.ஆர்.எஸ், நீங்க வேணுமுன்னு வாதம் பண்றமாதிரி இருக்கு..வேற ஒண்ணூம் சொல்ல தோணல்லை.
//

//உங்களுக்கு எப்போது அப்படி ஒரு எண்ணம் வந்ததோ, அப்போதே அடியேன் நிறுத்திக் கொள்கிறேன்! இனி இந்த இடுகைக்கு வரமாட்டேன்!//

ஸ்வாமி வாதம் எனக்கு அப்படித்தான் தோன்றியது....நான் நினைத்தது தவறாக இருக்கலாம். மற்றபடி நீங்க வருவதும், வராது போவதும், பின்னூட்டுவதும் உங்க இஷ்டம்.நான் உங்க மனம் வருந்தும்படி சொன்னதுக்கு தண்டனிகிறேன். அடியாரை வருந்தவைத்த பாபம் என்னைச் சேரட்டும். :(

sury siva said...

கவி நயா மேடம் ! வணக்கம்.

" வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி..உனும் உருகுதடி."
சுதா ரகுனாதன் பாடும் இந்தப் பாடல்
அதே லிங்கில் மிகத் தெளிவாகக் கேட்கிறதே !

http://www.musicindiaonline.com/p/x/2UO2X4Xolt.As1NMvHdW/?done_detect

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா
எதுக்கு இம்புட்டு ரென்சன்! இத்தினி தனி மடல்கள்!
தெண்டனா? அடக் கடவுளே!
நீங்க பெரியவங்க! அடியேன் பொடியேன்!

வீம்பு வாதம் என்று உங்களுக்குத் தோன்றி விட்டதால், இது பற்றி மேலதிகமாய் பேசுவதை நிறுத்திக் கொள்ளவே, நான் இனி இந்த இடுகைக்கு வரமாட்டேன்-ன்னு சொன்னேன்!

உங்க பதிவுக்கே வரமாட்டேன்னு சொல்லலையே! சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க! :-)

Anonymous said...

//, இல்லத்தில் வணங்குவது பஞ்சாயதம் என்னும் 5 தெய்வங்களை....://


அடுத்த இடுகையிலே பஞ்சாயதனத்தைப் பற்றி விவரமாக எழுதுங்களேன்.
நமது பாரம்பரியம்,தர்மம், சம்ப்ரதாயம், லொளகீகம், வைதீக வாழ்க்கை, நித்யபடி ஆசார அனுஷ்டானம்
எல்லாம் ஒன்று சேர்ந்து அமைந்தது இது என்று எல்லாரும் சொல்லுவார்கள்.

இதைப்பற்றி கொஞ்சம் எழுதிவைத்தா வரப்போற சமுதாயத்தின் ஆன்மீக வாழ்க்கைக்கு
வழிகாட்டியாக இருக்கும்.

சுந்தர கனபாடிகள்.
சென்னை.
i no id so anonymous

G.Ragavan said...

அடேங்கப்பா.... ஒன்னுமட்டும் புரியுது.... முருகனை வெச்சி எல்லாரும் கும்புடாம கும்மியடிக்கிறீங்க. :D முருகனோட தனிச்சிறப்ப்பான தமிழ்த் தொடர்பை அழிக்கனும்னு ஆண்டாண்டுகாலமா வேலை நடந்திருக்குன்னு மட்டும் புரியுது. நல்லாயிருங்க! வர்ரேன். டாட்டா! சும்மா ஆஜர் சொல்லீட்டுப் போக வந்தேன். ஏன்னா நீங்க சொல்ற விஷயங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது.

மெளலி (மதுரையம்பதி) said...

//அடுத்த இடுகையிலே பஞ்சாயதனத்தைப் பற்றி விவரமாக எழுதுங்களேன்.
இதைப்பற்றி கொஞ்சம் எழுதிவைத்தா வரப்போற சமுதாயத்தின் ஆன்மீக வாழ்க்கைக்கு
வழிகாட்டியாக இருக்கும்.

சுந்தர கனபாடிகள்.//

வாங்க கனபாடிகளே....பஞ்சாயதனம் பற்றி ப்ளாக்ல படித்த நினைவு இருக்கிறது....ஜீவா என்ன்னும் நண்பர் எழுதினார்ன்னு நினைக்கிறேன்... பிறகு சுட்டி அளிக்கிறேன்.

அப்பப்ப வந்துட்டு போங்க...:)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஜிரா....

என்பதிவுக்கு முதல் முறையா வந்திருக்கீங்க...நல்வரவு.

கும்பிட்டுட்டுத்தான் கும்மியட்டிக்கிறோம். :-)

தொடர்பெல்லாம் எல்லாக் காலத்திலும் இருக்குன்னுதான் காமிக்கறோம்...எதையும் அழித்து ஏற்படும் ஏற்றம் நெடுநாள் நிலைக்காது.. :)

தெரியாட்டா என்ன ஜிரா...இப்போ தெரிஞ்சுக்கங்க...நான் மட்டுமென்ன தெரிஞ்சுக்கிட்டா வந்தேன். :)

Kavinaya said...

அப்பாடா. எல்லாரும் பழம் விட்டாச்சா? இப்ப அடுத்ததுக்கு போலாம்பா. மௌலி சீக்கிரம் அடுத்த பதிவப் போடுங்க! முருகன் எல்லோரையும் காப்பாராக!

சக்திவேல் முருகனுக்கு அரோகரா!

ஷைலஜா said...

கவிநயா said...
அப்பாடா. எல்லாரும் பழம் விட்டாச்சா? >>>

>>எல்லாம் ஞானப்பழங்கள் கவிநயா!

//இப்ப அடுத்ததுக்கு போலாம்பா. மௌலி சீக்கிரம் அடுத்த பதிவப் போடுங்க! முருகன் எல்லோரையும் காப்பாராக!//


சக்திவேல் முருகனுக்கு அரோகரா>>>//


>>>ஆமா அடுத்த பதிவு போடுங்க மதுரை!(யம்பதி)! தலைப்பு திருப்புகழில் ராமாயணம்? பத்துத்தலைதத்தக்கணைதொடு ஒற்றைகிரி மத்தைப்பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியில் ...(திருமால் தன் சக்ராயுதத்தால் அர்ஜுனனுக்காக ஆதவனையே மறைத்து சிந்து தேசத்து ராஜாவான ஜயத்ரதனை சிரமறுத்த கதை)
என்று நிறைய வரிகள் இருக்காமே?இஸ்லாமிய படை எடுப்பினாலும் மதமாற்றத்துக்கான முயற்சியாலும் இந்து சமயமே அழியும் அபாயம் இருந்தபோது முருகன் அடியெடுத்துக்கொடுத்து அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருப்புகழ் சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும்படி அமைந்தது என்று கேள்விப்பட்டிருக்கேன். இதை விவரமாய் அளிக்கவும் நன்றி.

sury siva said...

kavinaya said:
" அப்பாடா. எல்லாரும் பழம் விட்டாச்சா? "
அசரீரி மாதிரி அல்லவா பாடல் எதிரொலிக்கிறது.
பழம் நீயப்பா ஞானப்பழம் நீ யப்பா ..தமிழ் ஞானப்பழம் நீ அப்பா..
கே.பி.சுந்தராம்பாள் பாட்டைக் கேட்டு மகிழவும்.
http://www.musicindiaonline.com/p/x/yVIgd20NPt.As1NMvHdW/

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
No.148

மெளலி (மதுரையம்பதி) said...

150 போட்ட சூரி சாருக்கு ஜே!!!
நல்ல பாடலை தந்தமைக்கு நன்றி..

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆமா அடுத்த பதிவு போடுங்க மதுரை!(யம்பதி)! தலைப்பு திருப்புகழில் ராமாயணம்? பத்துத்தலைதத்தக்கணைதொடு ஒற்றைகிரி மத்தைப்பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியில் ...(//

வாங்க ஸ்ரீரங்கம் (வேண்டாமுன்னு பார்த்தா விடமாட்டேங்கறீங்க)..

திருப்புகழ்-ல ராமாயணத்தைத்தான் கதை-கதையாம் காரணமாமுன்னு கீதாசாம்பசிவம் எழுதறாங்களே?...:)

மெளலி (மதுரையம்பதி) said...

//எல்லாரும் பழம் விட்டாச்சா? இப்ப அடுத்ததுக்கு போலாம்பா. மௌலி சீக்கிரம் அடுத்த பதிவப் போடுங்க! முருகன் எல்லோரையும் காப்பாராக//

அவருதான் காய்விடல்லியாமே?!!!

அடுத்த பதிவு

"ஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் - 2".

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
//ஆமா அடுத்த பதிவு போடுங்க மதுரை!(யம்பதி)! தலைப்பு திருப்புகழில் ராமாயணம்? பத்துத்தலைதத்தக்கணைதொடு ஒற்றைகிரி மத்தைப்பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியில் ...(//

வாங்க ஸ்ரீரங்கம் (வேண்டாமுன்னு பார்த்தா விடமாட்டேங்கறீங்க).. >>


>>>ஏன் திருவரங்க(ப்ரியா)ன்னு அழைக்கவேண்டியதுதானே?:):) என்னவோ போங்க பின்னூட்டம் எக்கச்சக்கமாகி ரெகார்டை ப்ர்ர்ர்ர்ர்ர்ரெக்க்க்கு பண்றீங்க போல்ருக்கு?:)

//திருப்புகழ்-ல ராமாயணத்தைத்தான் கதை-கதையாம் காரணமாமுன்னு கீதாசாம்பசிவம் எழுதறாங்களே?...:)//

>>>ஓ அப்போ சரி....நன்றி
ஷைலஜா

May 31, 2008 6:06 AM

குமரன் (Kumaran) said...

இம்புட்டு அவசரப்பட்டா எப்படி? நான் இன்னும் பேசி முடிக்கலையே? :-(

Kavinaya said...

//இம்புட்டு அவசரப்பட்டா எப்படி? நான் இன்னும் பேசி முடிக்கலையே? :-(//

ஆஹா. முருகன் பதிவுல குமரன் பேசாமயா? பேசுங்க பேசுங்க குமரா! கொஞ்சம் இருங்க, பதிவை மறுபடி படிச்சுட்டு வரேன். மறந்தே போச்! :)

மெளலி (மதுரையம்பதி) said...

//இம்புட்டு அவசரப்பட்டா எப்படி? நான் இன்னும் பேசி முடிக்கலையே? :-(//

நீங்க வாங்க குமரன்....நான் என்ன பின்னூட்டப் பெட்டியை மூடவா போறேன்?....

:-)

அடுத்த போஸ்ட் போடாமவே காத்திருக்கணுமா..சொல்லுங்க செஞ்சுடுவோம் :-)..

passerby said...

Whether Murugan is a god indigenous to Tamis or he is an aryan import, is not the question at all, according to me.

What matters to me is the fact that Tamils, as an ethnic race, is distinct, having a distinct culture and a distinct language that comes from anicent times.

So, it is a legitimate aspiration that they must have their own gods and goddesses to feel proud of and relate to.

Whatever theism may be or not, it forms part and parcel, some may even say, the bedrock of a culture. In other words, a religion for a people is their culture first and foremost; only thereafter, it is all about spirituality and God.

It is unfair or narrow-mindedness on the part of all those here who counter the pride of Tamils with the arguments that Murugan is an aryan import, and not at all a original god to Tamils It is a gratuitious insult to a people and their ancient culture.

Please allow Tamils to say that they did have their own gods and goddesses, as Ravishankar wrote, which may have been transformed into a mixture (that too, you dont allow it! a pity) of Aryan and Dravidian imagination.

Forget about politicians. Have your own views unprejudiced and unprepossessed.

திவாண்ணா said...

இந்த அடிதடி எல்லாம் பாக்காம எங்க போயிருந்தேன் இவ்வளவு நாள்ன்னு தெரியலை. :-))

பல பிரச்சினைகள் சில புரிதல் தவறுகளால்தான் ஏற்படுகின்றன.

வேதத்தில் சொல்லப்பட்ட தேவதைகள் வேறு புராணங்களில் சொல்லப்பட்ட தேவதைகள் வேறு. இரண்டுக்கும் முடிச்சு போட்டா குழப்பம்தான் மிஞ்சும்.

அது அது அந்த அந்த மட்டத்திலேயே வைத்து பாக்கணும்.
பிரச்சினை என்னன்னா ஒரே பேர்ல புராணத்திலேயும் வேதத்திலேயும் தேவதை பெயர்வரும்.

தெய்வங்களை நம்பினால் அவர்களை வழிபட்டூ பயன் அடையலாம். இந்த மாதிரி விவாதங்கள்ல பயன் தெரியலை. பக்தியால வர வேண்டிய குணங்களை இதெல்லாம் அனாவசியமா கெடுக்கும் போல இருக்கு!

தொன்மத்தை பாக்கணும்னு கேஆர்எஸ் சொல்கிறார்.
5 நிலங்களா பிரிச்சு அதுல ஒண்ணுக்கு மாயவன் தேவதை அதனால அவர்தமிழ்தெய்வம்ன்னு சொன்னா மத்த 4 நிலங்கள் சமாசாரம்என்ன? அப்ப இந்திரனும்தான் தமிழ் தெய்வம்!

தெய்வம் ஒண்ணு; என்ன பேர்வேணா வச்சு கூப்பிடுங்க! அவ்ளோதான்.

Anonymous said...

//தெய்வம் ஒண்ணு; என்ன பேர்வேணா வச்சு கூப்பிடுங்க! அவ்ளோதான்.//
valai ulakathile aanmeekathai pathi
therinju ezhutharatha ninaichindu
irukkara ellarum therinjukkavendiyathu, purinchikkavendiyathu, ellame ithuthan.
ithai vida theliva solrathukku onnume kidayathu.

hi hi

தனேஷ் இரத்தினசாமி said...

தமிழில்... சிவப்பு--> செம்மை--> சேயோன்--> சிவன். ரைட்டு!

வடமொழியில் சிவன் --> மங்கலன். ஓ.கே...

இங்கே நினைத்துப் பார்க்க ஒரு செய்தி - செவ்வாய் = மங்கலன்.
செவ்வாய்க்கிழமை=மங்கல்வார்.

சிவப்பு=மங்கலம்.
சிவப்பு நிற குங்குமம் மங்கலப் பொருட்களில் முதன்மையானது அல்லவா!!!

செவ்வாய் சிவனின் வியர்வைத் துளி பூமியில் விழ பூமாதேவி பெற்றெடுத்தாளாம் என்பது புராணம்.

சிவப்பு - செம்மை - சிவம் - மங்கலம்.

சிவனின் ஆறவது முகமான அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமாய் வெளிப்பட்டது என்பர் பெரியோர்.