ஆண்டாள் திருவடிகளே சரணம்.
எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே!
பல மாதங்களுக்குப் பிறகு நண்பன் சேஷசாயி 2-3 நாட்கள் முன்னர் தொலைபேசியில் பேசினான். அப்போது, அவன் மூலம் அறிந்த சில செய்திகளே இந்த இடுகை.
திருப்பாவை முதல் பத்து பாடல்களில் ஆண்டாள், ஆழ்வார்களைத் துயில் எழுப்பியிருக்கிறாள் என்பதாக ஒரு தாத்பர்யம் இருக்கிறதாம். அதாவது திருத் தொண்டர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் துயிலெழுப்பி, அதன் பின்னர் நப்பின்னையான தாயாரை முதற்க் கொண்டு பெருமாளை சரணடைகிறாளாம் கோதை. எந்தப் பாடல்களில் எந்த ஆழ்வாரைக் குறிப்பிட்டிருக்கிறாள் என்பதைப் பார்க்கலாம்.
“புள்ளும் சிலம்பின காண்” என்னும் பாசுரத்தில், ‘பிள்ளையே எழுந்திராய்’ என்று கூறியிருப்பது பொய்கை ஆழ்வாரைக் குறிப்பதாகச் சொல்லுகிறார்கள். பொய்கையார் பிள்ளைப் பிராயத்திலேயே இறையனுபவம் பெற்றிருந்தவராம்.
“கீசு கீசு என்றெங்கும்” என்ற பாசுரத்தில், ‘பேய்ப் பெண்ணே’ என்று வருவது பேயாழ்வாரைக் குறிக்கிறது என்றும், “கீழ்வானம் வெள்ளென்று” என்கிற பாசுரத்தில், ‘கோதுகுலமுடைய பாவாய்’ என்பது பூத்த்தாழ்வாரைக் குறிப்பது என்றும் சொல்லுவார்களாம். பூதத்தாழ்வார், திருமல்லையில் சயனித்திருக்கும் பெருமாளைப் பாடும் போதெல்லாம் மிகுந்த குதுகலம் அடைவாராம். ஆகவே அந்தக் குறியீட்டின் மூலமாக பூத்த்தாழ்வாரைக் குறிப்பிட்டுச் சொல்லுவதாகத் தெரிகிறது.
“தூமணி மாடத்து” என்கிற பாசுரத்தில், ‘மாமன் மகளே’ என்றது திருமழிசை ஆழ்வாரைக் குறிப்பதாம். ப்ருகு முனிவரின் புத்ரியாக அவதரித்தவள் பார்கவி என்றழைக்கப்படும் ஸ்ரீ தேவியான மஹாலக்ஷ்மி. ப்ருகு முனிவரின் புத்ரர் பார்க்கவர். இந்த பார்கவரின் புத்ரராம் திருமழிசையாழ்வார். ஆகவே ஆண்டாள் 'மாமன் மகளே' குறிப்பிடுவது திருமழிசைபிரானை என்கிறார்கள்.
“நோற்று சுவர்க்கம் புகுகின்ற” என்னும் பாசுரத்தில், ஆற்ற அனந்தனுடையார்” என்பது ஆற்றுக் கொண்ட குலசேகராழ்வாரைக் குறிப்பதாம். இவருக்கு ராமனிடத்தான ஈடுபாடு அசாத்யம். ராமாயண காவியத்தைப் கேட்கும் போது தன்னை மறந்து ராமனுக்கு உதவக் கிளம்பிடும் அளவு ஆற்றங் கொண்டவர் என்பதால் இவரைக் குறிப்பிடுகிறது என்கிறார்கள்.
“கற்றுக்கறவை” என்னும் பாசுரத்தில், ‘குற்றமொன்றில்லாத கோவலர்: என்பதாகச் சொல்லுவது பெரியாழ்வாரை. அதாவது ஆசாரம், நியம-நிஷ்டையில் வழுவாதவரான பெரியாழ்வாரே இங்கு குற்றமில்லாத கோவலர் என்று கூறுகிறார்கள்.
“களைத்திளங் கற்றெருமை” என்பதில், ‘நற்செல்வன் நங்காய்” என்பது தொண்டரடிப் பொடியாரைக் குறிப்பதாகவும், “எல்லேஇளங்கிளியே” எனும் பாசுரத்தில், ‘கிளியே’ என்பது திருமங்கையாரைக் குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறதாம். திருமங்கையார் கிளியைத் தனது பாடல்களில் அடிக்கடிச் சொல்லியிருக்கிறதால் இவ்வாறாகச் சொல்லப்படுகிறதாம்.
“புள்ளின்வாய் கீண்டானை: என்ற பாசுரத்தில், ‘போதரிக் கண்ணினாய்’ என்றது திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறதாம். “அமலாதிபிரான்” என்று தொடங்கும் பாசுரம் முதலாக பல பாசுரங்களில் பெருமாளின் கண்ணழகை மிகவும் வர்ணித்தவராம் திருப்பாணாழ்வார். ஆகவே இந்த்ப் பாடல் அவரைக் குறிப்பதாகச் சொல்லுகிறார்கள் போல.
“உங்கள் புழக்கடை” என்னும் பாசுரத்தில், ‘நங்காய்’ என்பது நம்மாழ்வாரைக் குறிப்பதாம். நம்மாழ்வாரது தாயார் பெயர் நங்காய் என்பதால் இந்தக் குறியீடு அவரையே குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.
....................................................................................2011 மார்கழிப் பதிவுகள் தொடரும்
![]() |
காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் உற்சவத்தின் பகுதி |
ஸுப்ரமண்ய புஜங்கம் என்று செந்திலாதிபன் மேல் முப்பது மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறார் ஆதி சங்கரர். அதிலிருந்து 6 ஸ்லோகங்களையும், திரு.அ வெ.ரா கிருஷ்ணசாமி ரெட்டியாரது தமிழாக்கத்தையும் பார்க்கலாமா?
சாதாரணமாக இல்லங்களிலும், கோவில்களிலும் ஸ்ரீ சக்ரங்கள் வைத்துப் பூஜை செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவ்வாறு படம், கடம், சக்ரம், சிலை போன்றவற்றில் இறைசக்தியை இருத்தி வழிபடும் முறை பாஹ்யம் என்பார்கள். அதாவது வெளிப்படையாக ஸ்ரீசக்ரத்தை வைத்துப் பூஜிப்பது என்பது பாஹ்யாகாசம் என்றும், ஹ்ருதயத்தில் மானசீகமாக ஸ்ரீசக்ரத்தை உபாசிப்பதை தகராஹாசம் என்றும் கூறுகிறார்கள். மானசீகமான ஸ்ரீசக்ரத்தை வியத் (வியத்=ஆகாசம்) சக்ரம் என்கிறார்கள். இவ்வாறு மனசீகமாக செய்யப்படும் பூஜைக்கு "ஸமயம்" என்று சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு மானசீகமாக அம்பிகையை வழிபடுவதாலேயே அவளுக்கு "ஸமயாந்தஸ்தா" என்று ஒரு நாமம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருக்கிறது. வசிஷ்ட்டர், சனகர், சனந்தனர், சனத்குமாரர், சுகர் போன்ற மஹரிஷிகள் அம்பிகையை இவ்வாறு வழிபட்டதாகத் தெரிகிறது. இவ்விதமான பூஜாமுறையை ஸமய பஞ்சகம் என்கிறார்கள். இவ்வாறு, ஆறாதாரம் முதலான பாவனையான பூஜையில் சந்தோஷமடைபவள் என்பதைக் குறிக்கும் நாமமே "சமயாசார தத்பரா" என்பது.
முந்தைய பதிவில் நாம் ஆறாதாரங்களில் அம்பிகையின் லீலாவினோதங்களை அறிந்தோம். மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியே ஒரு சக்தி ரூபம்தான் என்றும் நாமறிவோம். இந்த குண்டலினி சக்திக்கு குலஸ்திரீ என்று ஒரு பெயர். குலம் என்றால் குடும்பம் என்ற பொருள் நாமறிவோம். இதைத் தவிர குலம் என்று ஸுஷும்னா மார்க்கத்தினையும் சொல்லியிருக்கிறார்கள். யோகிகள் குலத்தைக் காப்பாற்று என்று வேண்டியிருப்பதெல்லாம் தங்களது குண்டலினி யோக முயற்சியைக் காத்து வெற்றியடையச் செய்யப் பிரார்த்தித்தலே. இந்த குலம் என்ற பதத்தினைக் கொண்டு ஸ்ரீ லலிதாம்பிகைக்கு பல நாமங்கள் சஹஸ்ரநாமத்தில் இருக்கிறது. அவற்றைப் பார்க்கலாமா?.
குலாம்ருத ரசிகாயை (90) - சஹஸாரத்தினை குண்டலினி சக்தி எட்டும்போது ஏற்படும் அம்ருத தாரையில் ரசனையுடையவள் என்று பொருள்.
குலசங்கேத பாலின்யை (91) - குல சம்பந்தமான ரகசியங்களைக் காப்பவள். அதாவது வேதம், பூஜை, மந்திரம், சக்ரம் போன்றவற்றில் இருக்கும் ரகஸியங்களைக் காப்பவள். அம்பிகையின் உபாசனா முறைகள் குரு-சிஷ்ய சம்பிரதாயத்தையொட்டி வருவது. இவ்வாறான உபாசனா முறையை ரகஸியமாகக் காப்பவள் அம்பிகை.
குலாங்கனாயை (92) - குலஸ்த்ரீ போன்றவள். சரீரத்திற்கு குலம் என்று ஒரு பொருள், அதன்படி குலஸ்திரீயாக சரீரத்திற்குள் இருப்பதாகப் பொருள்.
குலாந்தஸ்தாயை (93) - இந்த நாமத்தில் குலம் என்பது நகரம், வீடு, தேகம், வம்சம் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் வசிப்பவள் குலாந்தஸ்தா.
கெளலின்யை (94) - குல என்றால் சக்தி; அகுல என்றா சிவன். கெளலின்யை என்பது சிவ-சக்தி சேர்ந்த ரூபம்.
குலயோகின்யை (95) - குலத்துடன் சம்மந்தமுடையவளாக, குலத்தை இயக்குபவளாக இருப்பவள் குலயோகின்யா
அகுலாயை (96) - குலத்துக்கு மேலாக இருப்பவள். சரீரத்தில் குண்டலினியின் இருப்பிடமான மூலாதாரத்திலும், மேலே சஹஸ்ராரத்திலும் பத்மங்கள் இருக்கின்றன. இதில் அடிப்பாகத்தில்/மூலாதாரத்தில் இருக்கும் பத்மத்தை அகுலம் என்றும், மேல் பாகத்தில் இருப்பதை குலம் என்று சொல்கிறது ஸ்வச்சந்த சங்கிரகம் என்னும் நூல்.
நமக்கெல்லம் ஆறு ஆதாரங்கள் பற்றித் தெரியும். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவையே அந்த ஆதாரங்கள். இந்த ஆதாரங்களில் அம்பிகையை எப்படி வழிபட வேண்டும் என்பதை பெரியோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இந்த ஆறு சக்ரங்கள் ஒவ்வொன்றிலும் தேவி தன் நாயகனுடன் இணைந்து எவ்வாறு செயல்படுகிறாள் என்பதை ஆதிசங்கரர் நமக்கு செளந்தர்யலஹரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். சாதகன் இந்த சக்ரங்களின் ஒவ்வொரு நிலையை அடையும் போதும் அவனால் இவற்றை உணர முடியும் என்கிறார்கள் பெரியோர். முந்தைய பதிவில் நாம் பார்த்த அக்னி கூடம்ம், சூர்ய கூடம், சோம கூடம் என்பதெல்லாம் இந்த ஆறாதாரங்களே.
மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் அக்னி கண்டமாகவும், மணிபூரகம், அனாகதம் ஆகியவை சேர்ந்தது சூர்ய கண்டமாகவும், விசுக்தி மற்றும் ஆஜ்ஞை சேர்ந்தது சோம/சந்த்ர கண்டம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி கண்டத்திற்கும் சூர்ய கண்டத்திற்கும் இடையில் வருவது பிரம்ம கிரந்தி என்றும், சூர்ய கண்டத்திற்கும், சோம கண்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி விஷ்ணுக்ரந்தி என்றும், சோம கண்டத்திற்கு மேற்பட்ட சஹஸ்ராரம்-த்வாதசாந்தம் என்பதற்கு இடைப்பட்டது ருத்ரக்ரந்தி என்றும் கூறப்படுகிறது. இங்கே கண்டம், கூடம், மண்டலம் என்பதெல்லாம் அந்தந்தச் சக்ரங்களைக் குறிக்கும் வேறு பெயர்களாகக் கொள்ள வேண்டுகிறேன். கிரந்தி என்பது நாடிக்களின் முடிச்சையும், அந்த நாடிகளில் ஏற்படும் ஜென்ம வாசனையால் ஏற்படும் சிக்கல்கள் எனக் கொள்ளலாம்.
பிரம்மக்ரந்தியை கடப்பதன் மூலம் சிருஷ்டி வாசனையும், விஷ்ணுக்ரந்தியைக் கடப்பதன் மூலமாக ஸ்திதி வாசனையினையும், ருத்ரக்ரந்தியைக் கடப்பதன் மூலமாக் சம்ஹார வாசனையும் விலகுவதாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இந்த மூன்று கண்டங்களிலும் அம்பிகை இருப்பதையே லலிதா சஹஸ்ர நாமத்தில் "வஹ்னிமண்டல வாஸினி, பானு மண்டல மத்யஸ்த்தா, சந்திர மண்டல மத்யகா" என்னும் மூன்று நாமங்கள் குறிப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறார் எனது குரு. இதையே வேறொரு இடத்தில் வாக்தேவிகள், சிரஸில் சந்திரனைப் போன்ற வெண்மையாக அம்பிகை இருக்கிறாள் என்பதை, "சிர: ஸ்திதா சந்த்ர நிபா" என்றும், புருவ மத்தியில் "பாலஸ்தேந்த்ர தநு: பிரபா" என்பதாக வானவில்லை ஒத்த நிறங்களுடன் இருப்பதாகவும், ஹ்ருதயத்தில் வசிக்கையில் சூர்யன் போன்ற பிரகாசிப்பதை"ஹிருதயஸ்தா ரவிப்பிராக்யா" என்றும் கூறுகிறார்கள்.
மூலாதாரத்தில் தனுஸ், புஷ்பபாணம், அபய, வரத ஹஸ்தத்துடன் செம்பருத்தி மலர் போன்ற செந்நிறத்தினளாக, தேவியை த்யானம் செய்ய வேண்டும் என்கிறது ருத்ர யாமளம். இதே போல ஸ்வாதிஷ்ட்டானத்தில் நிலைத்த மின்னல் போன்ற வடிவில் இருப்பதாகவும், அவள் பிரம்மக்ராந்தியைப் பிளந்து செல்லுகையில் அக்னி போன்ற காந்தியுடன் இருப்பதாகவும், அவளே அனாகதத்தை தாண்டி விஷ்ணுக்ரந்தியைக் கடக்கையில் சூரியனது ஒளியை விஞ்சுவதாகவும், ஆக்ஞையைக் கடக்கையில் மின்னல் கொடி போன்று விளங்குவதாகவும் த்யானிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
மூலாதாரத்தில் பஞ்சதசியாகவும், ஹ்ருதயத்தில் சியாமா/தருணியாகவும், ஆக்ஞாவில் வாராகியாகவும், ஸஹஸ்ராரத்தில் மஹா ஷோடசியாகவும், த்வாதசாந்தப் பெருவெளியில் பரா என்னும் முதிர்ந்த சுவாசினியாகவும் த்யானிக்கப்பட வேண்டும் கூறப்பட்டுள்ளது. ஆகவே நாமும் அவளை த்யானிப்போம், அவளை உணரத் தலைப்படுவோம்.
துர்கா - லக்ஷ்மி - சரஸ்வதி ஸஹித ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தர்யை நம:
ராமபிரானது பித்ரு வாக்ய பரிபாலனம் நாமெல்லாம் அறிந்ததே!. தந்தை சொல்லுக்கு மறுபேச்சில்லை என்று கானகம் சென்றார். சித்ரகூடத்தில் பர்ணசாலை அமைத்து இருந்த காலத்தில் பரதன் புடைசூழ வந்து மீண்டும் நாடாள அழைக்கையில் தந்தையின் மறைவினைச் கேள்விப்படுகிறார் ஸ்ரீராமர்.
தனது பிரிவால் தந்தை உயிர் நீத்ததை அறிந்து பல்வாறு புலம்பியழுகிறார், பின்னர் தசரதருக்கு மகனாக தான் செய்ய வேண்டிய கர்மாக்களை முறையாகச் செய்தார் என்கிறார் வால்மிகி மகரிஷி. அயோத்யா காண்டத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.
ஆநயேங்குதி பிண்யாகம் சீரமாஹர சோத்தரம்
ஜலக்ரியார்த்தம் ததாஸ்ய கமிஷ்யாமி மஹாத்மந:
இந்த வாக்யம் ஸீதையைப் பார்த்து ராமர் சொல்வதாக அமைந்திருக்கிறது. ஸீதே! உனது மாமனார் இறந்துவிட்டார். அவருக்கு நான் தர்ப்பண்ம், பிண்டதானம் போன்றவை செய்யவேண்டும், அதற்கு தேவையான பிண்டங்களை தயார் செய்ய இங்குதீ மரத்தில் உள்ள பழங்களை பிண்டமாக உருட்டிக் கொண்டு வா! என்று கூறுகிறார்.
தந்தையின் மறைவால் மிகுந்த வருத்தமடைந்தாலும், மகனாக, மறைந்த தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமகிரியைகளை செய்யத் தொடங்குகிறார். இவ்வாறு செய்ய ஆற்றங்கரைக்குச் செல்கையில் முதலில் ஸீதையும், பின்னர் லக்ஷ்மணனும் செல்ல, கடைசியாக ராமர் சென்றாராம். வனவாசம் செல்வதைச் செல்லுகையில், முதலில் ராமனும், பின்னர் ஸீதையும், கடைசியாக லக்ஷ்மணனும் வருவதாகச் சொன்ன வால்மிகி, குறிப்பாக இந்த இடத்தில் மாற்றிச் சொல்கிறார், இதன் காரணமென்ன?. ஸம்ஸ்காரத்திற்குச் செல்லும் போது சிறியவர்கள் முதலிலும், பின்னர் பெரியவர்கள் என்பதாக மூத்தவர் கடைசியில் செல்ல வேண்டும் என்ற தர்ம சாஸ்த்ர விதியை ராமர் கடைப்பிடித்ததை குறிப்பாகச் சொல்லியிருக்கிறார்.
இதற்கடுத்த ஸ்லோகத்தில் (அயோத்யா காண்டம்,102) இராமர் இன்றுவரையில் பிண்டப்பிரதானத்திற்குச் சொல்லப்படும் மந்திரத்தைச் சொல்லி தனது தந்தைக்கு பிண்டதானம் செய்ததாக, மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் வால்மிகி மஹரிஷி. இவ்வாறு சொல்லிய பின்னர், இந்த பிண்டதானத்திற்கு உபயோகம் செய்த பொருட்கள் என்ன என்பதையும் சொல்லியிருக்கிறார். அதில், இலந்தைப் பழத்துடன் கூடிய ஐங்குதீ பழங்களால் ஆன பிண்டத்தை தர்பத்தில் வைத்து மந்திரம் சொன்னதாகச் சொல்லுகிறார். என்று இக்கர்மாவைச் செய்யும் பலருக்கும், அதென்ன பழத்தாலான பிண்டம்?, நாமெல்லாம் அன்னத்தாலான பிண்டமல்லவா வைத்துச் செய்கிறோம்? என்று தோன்றலாம்.
கர்மா செய்பவர் என்ன உணவினை உண்ணுகிறாரோ, அதனாலேயே பிண்டம் செய்ய வேண்டும் என்பது தர்ம சாஸ்த்ர விதி, அதனால்தான் தனது உணவான ஐங்குதீ, மற்றும் இலந்தைப் பழத்தாலான பிண்டத்தைச் செய்து அக்கர்மாவைச் செய்ததாகச் சொல்லுகிறார் வால்மிகி.
இங்கு இன்னொரு விஷயம் கவனிக்கத்தக்கது. தசரதரது மறைவினையொட்டி பரதன் மற்றும் சத்ருக்னன் தமது தந்தையின் ப்ரேத மற்றும் பித்ரு கார்யங்களைச் செய்தாலும், ராமபிரானும் தனது தந்தையின் மறைவு கேட்டவுடன் கர்மாவைச் செய்யத் தலைப்படுகிறார். அதான் தனது தம்பிகள் செய்துவிட்டார்களே, நான் ஏன் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. சாஸ்த்ரவிதிப்படி தான் செய்யவேண்டியதைச் செய்யத் தயாராகிறார். அதனால்தான் ராமரை தர்ம தேவதையின் உருவமாகச் சொல்லுகிறார்கள். இதே போல பின்னர் ஆரண்ய காண்டத்தில் ஒருமுறை ப்ரத்யாப்திக சிராத்தம் செய்ய வேண்டிய நாளில் ராம-லக்ஷ்மணர்கள் தமது குடில்களிலிருந்து சென்றவர்கள் அபரான்ன காலத்தில் குடிலுக்கு திரும்பாததால் சீதா தேவியே பிண்டகளை இட்டதாகவும், அதை தசரதர் ஏறதாகவும், பின்னர் அசரீரியாக ஸ்ரீராமருக்குத் தெரிவித்ததாகவும் சொல்லியிருக்கிறார் வால்மிகீ.
இவற்றின் மூலமாக பித்ரு கர்மா என்பது எத்துணை முக்கியம் என்று தெரிகிறது. தற்போது மஹாளய பக்ஷம் நடக்கிறது. இக்கர்மாவிற்கு அதிகாரம் உள்ளவர்கள் பக்ஷிய மஹாளயமாக 16 நாட்களோ அல்லது 15 தினங்களில் ஒருநாள் பார்ணவ சிராத்தமாகவே அல்லது ஹிரண்யமாகச் செய்து உணவிடுதலோ செய்யவோம். இவ்வாறு ஏதும் செய்ய இயலாத சூழ்நிலை இருக்குமானால் தனது தாய்/தந்தையினருக்கான திதியன்று மட்டுமாவது தில தர்பண ரூபமாக சிராத்தம் செய்யத் தலைப்படுவோம். இந்த 15 தினங்களில் செய்யப்படும் சிராத்தங்களானது நமது பித்ருக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியதெனச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பதினைந்து தினங்களில் ஒவ்வொரு நாளன்று செய்யப்படும் தர்பணங்களுக்கும், ஒவ்வொரு விசேஷ பலன்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பதினைந்து தினங்களில் மட்டுமே நமது பித்ரு வர்க்க, மாத்ரு வர்க்க பித்ருக்களைத் தவிர மற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள், குரு போன்றவர்களுக்குத் தர்பணம் செய்யும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வோம்.
"ரிஷி" என்ற சொல்லுக்கு 'பார்ப்பவர்' என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.
அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.
ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.
'அபிவாதயே' என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம், அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.
ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.
கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.
திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் 'இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.
இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;
1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது - திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.
2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது
3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.
4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.
5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.
எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;
1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்
2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.
3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.
4. தம்பதிகளில் பெண்க்ளுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.
5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்.