Showing posts with label Thambrabarani. Show all posts
Showing posts with label Thambrabarani. Show all posts

Saturday, November 22, 2008

திருநெல்வேலி - பாபநாசம் [நவ-கைலாசங்கள் -2]

நவ கைலாசங்கள் பற்றி ஆகஸ்ட் மாதத்தில் எழுத ஆரம்பித்தேன். ஒரு தொய்வுக்குப் பிறகு மீண்டும் இதனை எழுத தொடங்குகிறேன். இந்த தொடரினை முடிக்க, நவகிரஹங்களும் அருளட்டும். நவகைலாசங்களில் முதலாவதாக வரும் பாபநாசம் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.

நவக்கிரஹங்களில் முதலாவதான சூரியனின் சக்தி அளப்பரியது. சூரியனது இயக்கத்தாலன்றோ பயிர், உயிர் செழிக்கிறது?. சூரியன் இல்லாத ஒரு உலகம் கற்பனை கூடச் செய்ய முடியாதே?. இதே போல ஜோதிஷ சாஸ்திரத்தின்படி, மனித ஆயுளில் ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட காலம் ஆதிக்கம் பெற்று இருக்கும். அந்தந்த திசையில் என்ன பலன்கள், அவற்றின் தாக்கம் மனித வாழ்வில் எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் சுப்பையா வாத்தியார் விரிவாக அவரது வகுப்பறையில் பாடம் நடத்தி வருகிறார். சாதாரணமாக நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு போன்றவற்றிற்கு சூரியனை வழிபடச் சொல்லியிருக்கிறார்கள் ஆன்றோர். சூரியனின் அருள் வேண்டுபவர்கள் இன்றும் ஆதித்திய ஹ்ருதயம் போன்றவற்றை பாராயணம் செய்யக் காண்கிறோம். மேலும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்வதும், விரதமிருப்பதும் இன்றும் பல இல்லங்களில் நடக்கிறது. இவை எல்லாம் சூரிய வழிபாட்டின் ஒர் அங்கம் தான். சூரியனை வழிபடுவதன் மூலம் நவக்கிரஹங்களின் பாதிப்பு குறையும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

இந்த பதிவில் பார்த்தது போல அகஸ்தியர் தாமிரபரணியில் இட்ட முதல் பூ கரை ஒதுங்கிய இடம் பாபநாசம். பாப-விநாசம் என்றும் பாப-நாசம் என்றும் கூறுவதிலேயே இந்த இடத்தின் பெருமை நமக்கு புலனாகிறது. நாம் செய்த பாபங்களை எல்லாம் நாசம்/நசியச் செய்து, நம்மை நல்வழிப்படுத்துகிறார் இங்கிருக்கும் இறைவன். பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி சமவெளியை அடைவது இந்த பாப-விநாசத்தில்தான் என்றும் கூறக் கேட்டிருக்கிறேன்.

இந்த இடத்தில்தான் அகஸ்தியரும் தவமிருந்து அம்மை-அப்பனின் திருமணக் கோலத்தைக் கண்டதாகச் சொல்லப்படுகிறது, அவருக்கு சிறு கோவிலும் இருக்கிறது. சிவ தம்பதியினர் தமது தெய்வீகத் திருமணத்தை அகஸ்தியருக்கு காண்பித்த இடம் பாபநாசம் என்று கூறுகின்றனர். இங்கு சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்து சூரியனை வழிபட்டிருக்கிறார் ரோமசர். இந்த இடத்தில் விராட புருஷன் தவம் செய்து ஈசன் அருள் பெற்றான் என்றும் சொல்கிறார்கள். பொதிகையின் புகழைக் கேள்விப்பட்ட நாரதரும் இங்கு வந்து, முக்களா விருக்ஷத்தின் கீழ் இருந்த சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாக கூறப்படுகிறது. நாரதர் ஒரு சமயம் இந்திர லோகத்தில் இந்திரனிடம் மலைகளின் மகத்துவம் பற்றி பேசுகையில் மேரு போன்ற மலைகள் எவ்வாறு மகத்துவம் பெற்றன என்று இந்திரன் கேட்க அப்போது மலைகள் தவம் புரிந்து ஈசனிடம் அருள் பெற்றன என்றும் அவ்வாறு அருள் பெற்ற மலைகள் மேரு, பொதிகை, கைலாயம் என்று கூறினாராம். மேலும் தேவேந்திரனே தனது பிரம்மஹத்தி தோஷம் தீர பாபநாசத்தில் வழிபட்டதாகக் கூறுகிறார்கள்.

இங்கு இருக்கும் ஈசனுக்கு முக்காளா-லிங்கர், பரஞ்சோதி-லிங்கர், பழமறை நாயகர், வைராச லிங்கர் பாபவிநாசேஸ்வரர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகிறது. இந்த கோவில் பாண்டியர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு மீன் இலச்சினை பொறிக்கப்பட்ட கல் மண்டபங்களும், பாண்டியன் விக்கிரம சிங்கன் கல்வெட்டுக்களும் இருப்பதாக தெரிகிறது. சுமார் 80 அடி உயரமுடைய ராஜ கோபுரம், கர்பகிரஹத்தைச் சுற்றி மூன்று பிரகாரங்களும், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், திருமண மண்டபம் போன்றவற்றுடன் கூடிய ஆகம விதி வழுவாது கட்டப்பட்டிருக்கும் கோவில் என்று கூறுகின்றனர். இந்தக் கோவிலைக் கட்டிய பாண்டியன், விக்ரமசிங்கனது பெயரில் இந்த ஊர் விக்ரமசிங்க புரம் என்றும் அழைக்கப்பட்டதாம்.


பிற்கால பாண்டிய அரசர்களில் ஒருவர் சமணமதத்தை சார்ந்தவராக இருந்து சைவ பக்தர்களை மிகுந்த அல்லலுக்கு உள்ளாக்கினாராம். அப்போது சமணத்தை ஏற்காத, மிகுந்த சிவபக்தி உடைய குடும்பம் ஒன்று ஊரை விட்டு வெளியேறுகிறது. குடும்பத்தவர் பல இடங்களுக்குச் செல்லுகையில் குழந்தைகளான அண்ணன், தங்கை பிரிந்து விடுகின்றனர். பலகாலம் கழித்து காசியில் அவர்கள் சந்திக்கையில் கவரப்பட்டு தமது உறவுமுறை அறியாமல் அறியாமல் திருமணமும் முடித்துவிடுகின்றனராம். மணமான பிறகு தமது உறவின் முறையினை அறிந்து வருந்தி ஈசனிடம் முறையிட, அசிரீரியாக அவர்களுக்கு பாபவிமோசனம் சொல்லப்படுகிறது. அந்த அசிரீரியின் கூற்றுப்படி இருவரும் கரிய நிறத்தாலான ஆடை அணிந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்றும், எந்த தீர்த்தத்தில் நீராடுகையில் அவர்களது கரிய நிற ஆடை வெண்மை அடைகிறதோ அப்போது அவர்களது பாவம் விலகும் என்றும் அறிகின்றனர். இதன்படி எல்லா தீர்த்தங்களிலும் நீராடி வருகையில் பாபநாசத்தில் அவர்கள் கோவிலுக்கு எதிரில் உள்ள படித்துறையில் நீராடி எழுகையில் தமது ஆடைகள் வெண்மை அடைந்ததைக் கண்டு தமது பாபங்கள் நீங்கப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

இங்கு சித்திரைத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரிகிறது. ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பின்னர் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. கோவில் எதிரில் இருக்கும் படித்துறையில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் என்று கூறுகின்றனர் பெரியோர். சிவராத்திரியும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.


தாமிர பரணி மஹாத்மியத்தில் இந்த கோவிலுக்கு எதிரில் இருக்கும் படித்துறைக்கு பெயர் "இந்திர கீல தீர்த்தம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. சித்திரை மாதத்தில் இங்கு முறைப்படி நீராடுபவர்களுக்கு ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்குமாம். தென் தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கான சூரியனார் கோவிலாகத் திகழ்கிறது இந்த க்ஷேத்திரம் என்றால் மிகையில்லை.

இந்த ஊரின் சிறப்பாக எனக்கு கூறப்பட்டதை எழுதியிருக்கிறேன். படங்கள் கூகிளாண்டவரிடமிருந்து பெறப்பட்டவை, இணையத்தில் இவற்றை அளித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்தவர்கள் இன்னும் அதிக செய்திகளை அளித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

Tuesday, August 19, 2008

திருநெல்வேலி...நவ கைலாசங்கள்... - 1

மதுரைக்கு தெற்கே உள்ள திருத்தலங்கள் என்றாலே நமக்கு நினைவில் வருவது ஸ்ரீ வில்லிப்புத்தூர், ஆழ்வார் திருநகரி, நெல்லையப்பர், தென்காசி, சித்ரசபை எனப்படும் குற்றாலம், கன்யாகுமாரி, ஸ்தானு-மாலையன் வீற்றிருக்கும் சுசீந்திரம், வர்க்கலை ஜகன்னாதன் போன்ற தலங்களே. இவை தவிர நவ திருப்பதி என்று 9 தலங்களைச் சிறப்பாகச் சொல்லுவர். அது போலவே நவ கைலாசம் என்று ஒன்பது சிவஸ்தலங்கங்கள் இருப்பது பலருக்கும் தெரியாது. அதனை பற்றி சுருக்கமாக ஒரு தொடர் எழுத எண்ணம். இவற்றுக்கான மூலமாக நான் கொள்ள இருப்பது அன்புச் சகோதரர்கள் அம்பி-தம்பி வழங்கிய தாமிரவருணி மஹாத்மீயமும் எனது இல்லத்துக்கு அருகில் இருக்கும் ஓர் மூதாட்டியின் வாயிலாக அறிந்ததும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருச்சிற்றம்பலத்தை தரிசித்தால் முக்தி, மதுரை வீதிகளில் நடந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. இதுபோலவே தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ஸ்நானம் செய்தாலோ, அதன் நீரைப் பருகினாலோ எல்லா பாபங்களும் அகலும் என்கிறது தாம்பரணி மஹாத்மீயம். சரி, நவகைலாயம் பற்றி எழுத என்று ஆரம்பித்து இந்த நதி மஹாத்மீயம் எதற்கு என்றால், நவகைலாய க்ஷேத்திரங்கள் பலவற்றிற்கும் தாம்ரவர்ணிக்கும் இருக்கும் தொடர்புதான். இந்நதியின் கரையில் இருக்கும் கோவில்களில் இந்த நவகைலாச தலங்களும் வந்துவிடுகிறது. அது மட்டுமன்றி, மற்ற தலங்களையும் பற்றி அங்காங்கே தொட்டுச் செல்ல எண்ணம். நமது திருநெல்வேலிச் சீமையின் மைந்தர்கள் பலர் இங்கே வருகிறார்கள், அவர்களும் பின்னூட்டத்தில் தமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

சரி நவகைலாசங்கள் என்பது எந்தெந்த ஸ்தலங்கள் என பார்க்கலாம். பாபநாசம் / பாப விநாசம் சேரன்மாதேவி கோடகநல்லூர் குன்னத்தூர் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேந்த மங்கலம் - சேர்ந்த பூ மங்கலம்.


சரி, எப்படி இந்த ஊர்களை மட்டும் நவகைலாசங்கள் என்று கூறுகிறார்கள் இது ஏதும் ஏட்டிக்குப் போட்டியாக வந்த ஸ்தலங்களா? என்பதைமுதலில் பார்த்துவிடலாம்.



ரோமச முனிவர் அப்படின்னு ஒருத்தர். மஹா தபஸ்வி, அகஸ்தியரின் சிஷ்யர். அகஸ்தியரும்-லோபா முத்திரையும் ஹிமவான் மகள் திருமணத்தின் போது வடகோடு உயர்ந்த சமயத்தில் தெற்கே வந்து சமன் செய்த காலத்தில் ரோமச முனிவர் அகஸ்தியரை வணங்கி அவரிடம் உபதேசம் பெறுகிறார். ரோமசரும் தபஸ் பலகாலம் செய்கிறார். ஆனாலும் ஈசனது தரிசனம் கிட்டவில்லை. அப்போது தனது குரு அகஸ்தியரிடமே முறையிட்டு ஈசனின் தரிசனத்துக்கும், முக்திக்குமான வழியை கேட்கிறார். அகஸ்திய முனிவர் சற்றே சிந்தனை வயப்பட்டு பின்னர் ரோமசரிடம், தாமிரபரணி உற்பத்தியாகும் இடத்திற்கு சென்று ஈசனை வழிபட்டு நவகிரஹங்களையும் வழிபடச் சொல்கிறார். அவ்வாறு சொல்லி பின்னர் ஆற்றில் 9 மலர்களை இட்டு, அவை முறையே கரை ஒதுங்கும் இடங்களில் ஈசனது லிங்கங்களை நிறுவி நவகிரஹ வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இவ்வாறாக அகஸ்தியரால் நீரில் விடப்பட்ட ஒன்பது மலர்கள் கரை ஒதுங்கிய இடங்களே மேலே சொல்லப்பட்ட 9 சிவ-க்ஷேத்திரங்கள். இவ்விடங்களில் எல்லாம் உமாபதியை வணங்கி தரிசனம் பெற்று முக்தியடைந்தாராம் ரோமசர். மேலே கூறப்பட்டஇந்த க்ஷேத்திரங்கள் முறையே,சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது மற்றும் சுக்கிரன் ஆகியவை. இவற்றை பார்க்கையில் தஞ்சையை ஒட்டிய நவக்கிரஹ க்ஷேத்திரங்கள் நம் மனதில் நிழலாடுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட சிவ ஸ்தலங்களை மேலக்கைலாயங்கள் (முதல் மூன்று), நடுக்கைலாயங்கள் (4,5,6) மற்றும் கீழக்கைலாயங்கள் என்று கூறுகிறார்கள்.


அடுத்து, தாம்ரபரணி நதியின் கதையை பார்க்கலாமா?, இல்லை பாபநாசத்தில் ஆரம்பித்து நவக்கிரஹ க்ஷேத்திரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாமா என்பதை பின்னூட்டிச் சொல்லுங்கள், அதன்படி செய்யலாம்.