Monday, May 17, 2010

சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு -1 : ஆதிசங்கர பகவத்பாதர் வைஷ்ணவரா?, சைவரா?,சாக்தரா?...

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர


நாளை சங்கர ஜெயந்தி. இதையொட்டி இன்று, நாளை, நாளைய மறுநாள் என மூன்று இடுகைகள் இட இருக்கிறேன். முதல் இடுகை கீழே!

சங்கரர் என்னும் பதத்தை சம்பு: + கரர் என்று பிரித்துச் சொல்லுவார்கள். சம்பு என்பது ஈசனைக் குறிப்பது, "சம்பு:" என்றால் மங்களம் என்றே பொருள, "கரர்" என்றால் கார்யம் செய்பவர். ஆக, சங்கரர் என்றால் மங்களத்தைச் செய்பவர். சர்வ லோகங்களுக்கும் மங்களத்தை அருளுபவன் சங்கரன். நமக்கெல்லாம் ஆசார்யராக, பரம பூஜ்யராக இருந்து வேத வேதாங்கங்களையும், பக்தியையும் புனரோத்தாரணம் செய்த பகவத் பாதருக்கு சங்கரர் என்ற பெயர் மிகச் சரிதான். ஏன் ஆதி சங்கரர் என்று சொல்கிறோம்?, அவர் காட்டிய வழியில் வந்து கொண்டிருக்கும் பல ஆசார்யர்களுக்கும் 'சங்கர' என்ற பதமே பெயரில் இருப்பதால், இந்த பரம்பரையின் முதலாவதானவர் என்று குறிக்க ஆதி சங்கரர் என்று குறிப்பிடுவதாகிறது. பகவத்பாத சங்கரரை ஈசனின் திரு அவதாரமாகவே சொல்கிறோம். அதை நமக்கு அவ்வப்போது நினைவுபடுத்தி, அதன் மூலமாக குருவும், தெய்வமும் ஒன்றே என்பதாகவும் கொள்ளலாம்.


ஆதிசங்கரரைப் பற்றிச் சொல்லுகையில், "அந்த: சாக்தோ, பஹி: சைவ:, வ்யாவஹாரே து வைஷ்ணவ:" என்பது வழக்கம். அதாவது, உள்ளுக்குள் சக்தியான அம்பிகை, வெளியுருவத்தில் சிவச் சின்னங்கள் அணிந்த சைவர், செயல்பாட்டில் மஹாவிஷ்ணு என்பது பொருள். ஈஸ்வரனுடைய க்ரியா சக்தியே அம்பிகைதான். இங்கே ஈச்வரனே அவதாரம் செய்திருக்கிறார் என்றாலும், அவதாரக் கோலமோ, சன்யாச கோலம். ஆகவே இந்த அவதாரத்தில் வெளியில் செய்யும் கார்யங்களை அம்பிகையின் புருஷ ரூபமான நாராயணனை முன்னிருத்தி நாராயணபரமாக எல்லாச் செயல்களையும் செய்திருக்கிறார். இதனால்தான் இன்றும், ஸ்ரீமடங்களின் பீடாதிபதிகள் எல்லாம் அனுக்ரஹ பாஷணத்தின் போது நாராயண ஸ்ம்ருதி செய்வதே வழக்கம். இவ்வாறு புறத்தே நாராயணனைச் சொல்லிய அவதாரமாக இருந்தாலும், தனது அவதாரத்தில் அவர் காட்டிய கருணை, அம்பிகையின் கருணைக்கு ஈடானது. மனதுள் அம்பிகையைக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட கருணை, ஆகவே தமது உள்மனத்தில் அம்பிகையைக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறது இந்த ஸ்லோகம். பாரத தேசம் முழுவதும் யாத்ரை செய்து பல சாக்தக் கோவில்களிலும் உக்ரமான தெய்வங்களை சாந்த ஸ்வரூபமாக்கி, மக்களை ஆகர்ஷித்து அருளும் தெய்வங்களாகச் செய்தும், பாதாதி கேச, கேசாதி பாத ஸ்தோத்ரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் என இவர் ஸ்தோத்ரம் பண்ணாத தெய்வமில்லை. எழுபத்தியிரண்டு மதங்களால், இறை நம்பிக்கையில் பல்வேறு த்வேஷங்களுடன் இந்து மதம் சிதறுண்டு இருந்த நேரத்தில், ஷண்மத ஸ்தாபனம் பண்ணி பக்தர்களையும், இறைவனையும் இணைத்தவர் நமது பகவத்பாதர்.



சரி, ஞான குருவான தக்ஷிணா மூர்த்தியே மனித ரூபத்தில் சங்கரராக அவதாரம் செய்துவிட்டார். சரி, மனித ரூபம் என்று எடுத்துக் கொண்ட பிறகு வாழ்ந்து காட்டுவது தானே முறை. ஆகவே நற்காரியங்களை பெரியவர்கள் செய்து காட்டினால்தானே சிறியவர்கள் செய்வார்க்ள் என்பதை புரிய வைக்க குருவின் மூலம் ஞானம் பெறுவதுதே முறை என்று தனக்காகவே நர்மதா நதி தீரத்தில் காத்திருக்கும் கோவிந்த பகவத் பாதரை அணுகுகிறார் நமது ஆதி-பரமாசார்யார். கோவிந்த பகவத் பாதர் யார் என்று பார்த்தால் அவரே பதஞ்சலி. பூர்வீகத்தில் சிதம்பரத்தில், திரைக்குப் பின்னால் வியாக்ரண பாடம் நடத்தி, அந்த நிகழ்வில் குரு வாக்யம் மீறப்பட்டதால், அங்கு பாடம் நடத்திய குருவான பதஞ்சலியே வேறு பிறவியெடுத்து சந்திர சர்மாவாக வந்தவர். பதஞ்சலி யார்?, என்றால் அவர் ஆதிசேஷனின் அவதாரம். ஆக, இந்த சனாதனத்தையும், அத்வைதத்தையும் நமது ஆசார்யாளிடம் அளிக்க பல ரூபங்களில் ஆதிசேஷனே வந்திருக்கிறான்.

கோவிந்த பகவத் பாதரும், நமது ஆசார்யாளுக்காகவே காத்திருக்கிறார். ஏனப்படிக் காத்திருக்க வேண்டும்?, வேறு சிஷ்யர்கள் யாருக்காவது உபதேசத்தைப் பண்ணியிருக்கலாமே?. பத்ரிகாச்ரமத்தில் வியாசரின் தரிசனம் கிட்டிய போது, வியாசர் கூறியபடி நமது ஆசார்யாளின் வருகைக்காகக் காத்திருக்கிறார். சரி, கோவிந்த பகவத் பாதரை சந்தித்தாயிற்று, ஆனால் கோவிந்த பகவத் பாதருக்கோ வந்திருப்பவர்தான் வியாச பகவான் கூறிய சங்கரர் தானா? என்ற கேள்வி எழுகிறது. யார் நீ? என்று தனது குகையிலிருந்து வெளியில் வராமலே கேள்வியெழுப்புகிறார். அப்போது நமது ஆசார்யாள் பத்து ஸ்லோகங்களால் தன்னை தெரிவிக்கிறார். இந்த பத்து ஸ்லோகங்களும் "தசச்லோகி" என்று அழைக்கப்படுகிறது.


இறைவன் மனிதப் பிறவி என்று எடுத்தாலும் சில நேரங்களில் தனது ஸ்வய ரூபத்தை பூடகமாக வெளிக்காண்பிப்பது உண்டு. அதைப் போன்றே நமது ஆசார்ய ரூபத்தில் வந்த ஈசவரனும், "தானே சிவம் வந்திருக்கிறேன்" எனும்படியாக முடியுமாறு பத்து ஸ்லோகங்களில் சொல்கிறார். அஹம் பிரம்மாஸ்மி, சிவோஹம் என்று சொல்வது போல, இந்த பத்து ஸ்லோகங்கள் ஒவ்வொன்றின் முடிவிலும், நானே சிவம் என்று முடிக்கிறார் சங்கரர். இந்த குறிப்பை உணர்ந்த கோவிந்த பகவத்பாதர் நமது ஆசார்யாரை சிஷ்யராக ஏற்கிறார். இதே முறையில் தான் பிற்காலத்தில் நமது ஆசார்யர், ஹஸ்தாமலகரைப் பார்த்து 'நீ யார்' என்று கேட்ட சமயத்தில், பத்து ஸ்லோகங்களைச் சொல்லி தன்னை பிரம்ம ஞானி என்று அறிமுகம் செய்து கொள்கிறார். இந்த பத்து ஸ்லோகங்களுமே ஹஸ்தாமலகீயம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. சாதாரணமாக குருவின் படைப்புக்களுக்கு சிஷ்யர்கள் வார்த்திகம்/விளக்க நூல் எழுதுவார்கள். ஹஸ்தாமலகீயத்திற்கு ஆதிசங்கரரே வார்த்திகம் செய்ததாகச் சொல்லுகிறார்கள். அந்த 10 ஸ்லோகங்களத்தனையும் அத்வைத தத்துவங்களால் நிரம்பப் பெற்றது என்பதால் அதற்கு விளக்கம் பரம-தயாளுவான நமது ஆசார்யாரே எழுதினார் என்பது பொருத்தம் தானே?.

ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.

[ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் சாஸ்திரங்களுக்கும், புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நமஸ்கரிக்கிறேன்.]



ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

9 comments:

SANKARAN said...

Very nice sir,In this time I can say that,Chidambaram Temple is the Best example for the Stotram antha saktha:bhaki shaiva vivyaharika vaishnav" like wise the temple is main lord is shiva,antharmuka deity is shivagami ambal or lalitha maha tripurasundari para pattarika.chindrambara raghsyam is srichakram & siva chakram (siva-sakthi ikyam) Unity,it symbosis the saiva-vaishnava-saktha.the govindaraja perumal.and the pancha bootha stala it is the akashya like brahmam (virat purasha)we seen front side siva-sakthi arthanari and the back side the maha vishnu visvaroopa dharsan. thats adi sankarar said antha saktha:bagi saiva:vyavaharika vaishnavha: i can't write in tamil.in tamil can i write more explaination about this article.

Thanks & Regards
N.sankaran

மதுரையம்பதி said...

சங்கரன் சார், இந்த இடுகைக்கு முதலாவதாக நீங்கள் வந்தமை மிகப் பொருத்தம்... :-)

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார். தனி மடலில் ஈகலப்பை, தமிழிஷ் பற்றி எழுதியிருக்கேன்...அதை வைத்து நீங்களும் தமிழில் எழுதலாமே?. :-)

karthic said...

மிக அருமை.

மதுரையம்பதி said...

வாங்க கார்த்திக்..முதல் வருகைக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

விதிதாகில சாஸ்த்ர சுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!

குறை நீக்கும் சாத்திரக் குணக்கடலே
உயர்வளிக்கும் உபநிடதக் கதியே
கதியென்றேன் கமலத் திருவடிகள்
சரணடைந்தேன் சங்கர குரு சரணம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கலக்கல் பதிவு! கலக்கல் தலைப்பு! :)
மெளலி அண்ணா கலக்கிங்ஸ்! :)

//அம்பிகையின் புருஷ ரூபமான நாராயணனை/

அரி அல்லால் தேவி இல்லை என்பது அப்பர் சுவாமிகள் தேவாரம்!

//இங்கே ஈச்வரனே அவதாரம் செய்திருக்கிறார் என்றாலும், அவதாரக் கோலமோ, சன்யாச கோலம். ஆகவே இந்த அவதாரத்தில் வெளியில் செய்யும் கார்யங்களை அம்பிகையின் புருஷ ரூபமான நாராயணனை முன்னிருத்தி நாராயணபரமாக எல்லாச் செயல்களையும் செய்திருக்கிறார்//

நாராயண ஸ்மிருதி என்று ஒப்பம் இடுவதற்கான விளக்கம் அருமை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அம்பிகையின் புருஷ ரூபம் நாராயணன் என்றால்...
சலனமற்ற சிவம், சக்தியாகும் போது, அந்தச் சக்தி நாராயணம் என்றல்லவா ஆகி விடும்? இதற்கான மேல் விளக்கங்கள் கொஞ்சம் தாருங்கள் அண்ணா!

அம்பிகையின் புருஷ ரூபம் = நாராயணன் என்பதற்கான வேத ப்ரமாணங்கள் (தரவுகள்) உண்டா?

//பதஞ்சலி. பூர்வீகத்தில் சிதம்பரத்தில், திரைக்குப் பின்னால் வியாக்ரண பாடம் நடத்தி, அந்த நிகழ்வில் குரு வாக்யம் மீறப்பட்டதால், அங்கு பாடம் நடத்திய குருவான பதஞ்சலியே வேறு பிறவியெடுத்து சந்திர சர்மாவாக வந்தவர்//

குரு வாக்கியம் மீறப்பட்டதா? ஆகா! அந்தக் கதையும் சொல்லுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யார் நீ? என்று தனது குகையிலிருந்து வெளியில் வராமலே கேள்வியெழுப்புகிறார். அப்போது நமது ஆசார்யாள் பத்து ஸ்லோகங்களால் தன்னை தெரிவிக்கிறார். இந்த பத்து ஸ்லோகங்களும் "தசச்லோகி" என்று அழைக்கப்படுகிறது//

அந்த சுலோகங்களும், அதன் பொருளும் சொல்லும் யார் நீ(நான்) பதிவு இதோ!

மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்,
ந-ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,
ந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

மனம் புத்தி, ஆணவச் சித்தங்கள் இல்லை!
சினம் தங்கு செவி நாக்கு, கண்களும் இல்லை!
வானாகி மண்ணாகி, வளி ஒளியும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

Jayashree said...

"வைகாச பஞ்சமி சிவனின் திருவாதிரை நக்ஷத்திரத்தில்;
ராமசந்த்ர மூர்தியைப்போல் ஐந்து க்ரஹங்கள் உச்சமாக இருக்கும் அபூர்வமான காலத்தில் பிறந்தவர்.
அவரோட ஜயந்தி திருவாதிரை இல்லைனா புனர்வசு நக்ஷத்திரங்களில் வருவதை பார்க்கலாம்"

அவறோட பிறந்த மாசத்தால்:-
"வைசாகம்- கிளை இல்லாதது.
வைசாகத்திற்கு இன்னொரு பேர் - மாதவம்!!.
மாதவி- மல்லிகை
மாதவிப்பந்தல்- மல்லிகை பந்தல்
மாதவம் மாதவி ரெண்டுமே கிளை இல்லாதது!!

போகீந்த்ராபரணம் - மல்லிகையா இருந்தா போகி அதாவது போகத்துடன் இருப்பவர் அலங்காரமாக சூடிக்கொள்வது- அலங்காரப்ப்ரியன் அணிவதோ?
அதுவே போகி என்பதை பாம்பா அர்த்தம் பண்ணிக்கொண்டால் பாம்பை ஆபர்ணமாக கொண்ட சர்வேஸ்வரன்!!
ஸ்ரீ சிவா என்ற நாராயணியால் ஆலிங்கனம் செய்துகொள்ளப்படும் ஸ்ரீ சைல மல்லிகார்ஜுனன்!!என்று சங்கரரால் துதிக்கப்பட்ட பரமேஸ்வரன்!!
இத்தனைக்கும் மேலும் சம்பந்தம் சங்கரருக்கு சைவத்திலும் வைஷ்ணவத்திலும் :)) சொல்லி மாளாது.


சொன்னது யாரு? சாக்ஷாத் அந்த பரமாச்சாரியரே தான் தான்:))

ஆழ்க தீயெல்லாம் அரன் நாமமே, சூழ்க வையகமும்துயர் தீர்க்கவே!! அதனால அவர் சொன்ன மாதிரி ஹர ஹர என்ற நாமத்தையும் சேர்த்து ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கரனு சொல்லலாம்!!