Thursday, April 30, 2009

ஸ்ரீஆசார்ய ஜெயந்தி - ஸ்ரீசங்கரரின் குருவந்தனமும், ஸ்ரீசங்கரருக்கு குருவந்தனமும்.

ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.

ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் சாஸ்திரங்களுக்கும், புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நமஸ்கரிக்கிறேன்.


நேற்று ஸ்ரீசங்கர ஜெயந்தி, சற்றே எழுதி வைத்திருந்தாலும், நேரமின்மையால் இந்த இடுகையைப் பூர்த்தி செய்து இட முடியவில்லை. அதனாலென்ன, குருவருளை எல்லா நாளும் தானே நாம் வேண்டுகிறோம். அதிலும் இன்று குருவாரம் பதிவிட்டுவிடலாம் என்று செய்கிறேன்.




இந்த விசேஷ நாளில் மாதவீய சங்கர விஜயத்தில் இருந்து ஒரு சில நிகழ்ச்சிகள் மூலமாக பகவத் பாதாளுக்கு குருவின் மேல் இருந்த பக்தியையும், அவர் மேல் அவரது பரதம சிஷ்யர்களுக்கு இருந்த பக்தியும் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்.

ஸ்ரீசங்கரர் தமது பரமகுருவைப் போற்றுதல்:


நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச வியாஸம் சுகம் கெளடபாதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம் ஸ்ரீசங்கராசார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் தம் தோடகம் வார்த்திககாரம் அந்யாந் அஸ்மத்குரூந் ஸந்ததம் ஆனதோஸ்மி.


அதாவது, ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து பிதா-புத்ரர் என்ற ரீதியில் வந்த பரம்பரை, சுகாசாரியாருக்குப் பின்னர் ஸந்யாஸ பரம்பரையாக மாறியிருக்கிறது. இதனாலேயே கெளட பாதரிலிருந்து ஆரம்பிக்கும் குரு பரம்பரையை 'மாணவ ஸம்ப்ரதாயம்' என்று கூறுவர். இந்த மாணவ ஸம்ப்ரதாயத்தில் முதல் ஆசார்யார்கெளடபாதர். இவர் ஸ்ரீசங்கரரின் பரம குரு.

ஸ்ரீசங்கரர் தமது ஆசேது-ஸ்ரீநகர திக்விஜயத்தை முடித்துக் கொண்டு கங்கைக் கரையில் ப்ரம்ஹ நிஷ்டையில் இருக்கையில், திடீரென நிஷ்டை கலைகிறது. கண் விழித்தஅவ்ர் முன் ஒரு மஹா-புருஷர் நின்றுகொண்டிருக்கக் கண்டார். பார்த்தவுடன் தெரிந்துவிட்டது அது கெளட பாதர் என்று. உடனே எழுந்து கெளடபாதர் பாதம் பணிந்ததை பின்வருமாறு சொல்லியிருக்கிறார்கள்.

பாணெள புல்ல ச்வேத பங்கேருஹ ஸ்ரீமைத்ரீ
பாத்ரீ பூதபாஸா கடேன
ஆராத் ராஜத் கைரவாநந்த ஸந்த்யாராக
ரக்தாம்போத லீலாம் ததாநம்
பாணெள சோணாம்போஜ புத்யா ஸமந்தாத்
ப்ராம்யத் ப்ருங்கீ மண்டலீ துல்ய குல்யாம்
அங்குல்ய க்ராஸங்கி ருத்ராக்ஷமாலாம்
அங்குஷ்டாக்ரேண அஸக்ருத் ப்ரமாயந்தம்


'கெளடபாதர் சிவந்த மேனி கொண்டவர். அவர் தமது இடக்கையில் கவிழ்த்த வெண்தாமரை மொட்டுப் போன்று தோன்றும் கமண்டலத்தையும், வலக்கையில் கருவண்டுகள் போன்ற ருத்ராக்ஷத்தால் ஆன ஜப மாலையையும் வைத்திருக்கிறார். வலக்கை கட்டவிரலால் ருத்ராக்ஷத்தை உருட்டிக் கொண்டிருப்பது கருவண்டுகள் அவரது கர-கமலத்தை சூழ்ந்து கொண்டிருப்பது போல தோன்றுகிறது' என்று கூறித் துதித்து வணங்கினாராம்.


ஈச்வரனது அவதாரம் என்று போற்றப்படுமளவுக்கு தபஸ் ஸித்தி பெற்றவர் ஸ்ரீசங்கரர். அவரது குருவான கோவிந்த பகவத்பாதருக்கு குரு கெளட பாதர். இருவரும் ஞானத்தில் பரிபூரணமானவர்கள். இருப்பினும், குரு-சிஷ்ய பாவத்தில், கெளட பாதர் சங்கரரிடம், 'காமம் போன்ற விரோதிகளைக் களைந்தீர்களா?, சாதனா சந்துஷ்டியை உணர்ந்தீர்களா?, அஷ்டாங்க யோக சித்தி பெற்றீர்களா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார். அதற்கு சங்கரர், மிக விநயமாக, குரு-சிஷ்ய உரையாடல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, 'வியாஸமுனியின் புதல்வரான சுகாசாரியரிடம் உபதேசம் பெற்ற உங்களது பாத தரிசனம் எனக்குக் கிடைத்ததே பெரிய பாக்யம். உங்களை ஒரு முறை தரிசித்தாலேயே ஊமை பேசவும், மூடன் அறிவாளியாகவும், பாபி தனது பாபங்கள் கழுவப்பெற்று தூயவனாகவும் ஆகிடுவர். அகவே எனக்கு இன்று உங்கள் தரிசனத்தின் மூலம் நீங்கள் கேட்ட எல்லாவற்றையும் சிறிது காலத்தில் அடைந்திடுவேன் என்பது திண்ணம்' என்று கூறி மீண்டும் வணங்குகிறார்.

இந்த பதிலைக் கேட்ட கெளடபாதர் மிகவும் மகிழ்ந்து, 'உன்னுடைய உயர்ந்த குணமானது உனது பேச்சு மற்றும் விநயத்தின் மூலம் தெரிகிறது. உயர்ந்த பாஷ்யங்களைச் செய்தும், நான் எழுதிய மாண்டூக்யஉபநிஷத பாஷ்யத்தை எளிமைப்படுத்தியதற்கும் உன்னை ஆசிர்வதிக்கிறேன், ஏதேனும் வரம் வேண்டுமானால் கேள் என்று கூறுகிறார். இதற்கு நமது ஸ்ரீசரணர் பின்வருமாறு பிரார்த்திக்கிறார்.

ஸ ப்ராஹபர்யாய சுகரிஷிம் ஈக்ஷ்ய பவந்தம்
அத்ராக்ஷம் அதிஷ்ய புருஷம்
வர:பர: கோ அஸ்தி ததாஅபி சிந்தன,
சித்தத்வகம் மே அஸ்து குரோ நிரந்தரம்

இதன் பொருள், 'கலியுகம் மட்டுமல்லாது மற்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்த பாக்யத்தை இன்று உங்கள் தரிசனத்தால் பெற்றேன். இதை விடச் சிறந்ததாக நான் அடையவேண்டியது ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் வேண்டுவது ஒன்று உண்டு, என் சித்தம் எப்போதும் பிரம்ஹத்திலேயே நிலைத்திருக்க அனுக்ரஹிக்க வேண்டும். கெளட பாதரும் 'அப்படியே ஆகட்டும்' என்று அருள்கிறார்.

********************************************************************
ஸ்ரீசங்கரரை அவரது ப்ரதம சிஷ்யர் போற்றுதல்:

ஸ்ரீசங்கரர் தமது சிஷ்யர்களில் ஸுரேஸ்வரர் என்பவரை அழைத்து தாம் அருளிய ப்ரம்ஹ சூத்ர பாஷ்யத்திற்கு ஒரு விளக்க நூல் எழுதப் பணிக்கிறார். இந்த ஸுரேஸ்வரர் முந்தைய ஆச்ரமத்தில் விசுவரூபராக இருந்தவர். உபய பாரதி என்ற பெயரில் சரஸ்வதி தேவியின் முன்னிலையில் சங்கரருடன் வாதப் போரில் தோல்வியடைந்து ஸன்யாசம் பெற்றவர். ஸ்ரீசங்கரர் தமது ஸ்ரீபாஷ்யத்திற்கு வார்த்திகம் எழுத இவரையே நியமித்ததாகச் சொல்வர். இவரே தக்ஷிணாம்நாய சிருங்ககிரி மடத்தின் முதல் ஆசார்யார்.

இவர் தமது பூர்வாச்ரமத்தில் பூர்வ மீமாம்ஸையை மட்டுமே முழுவதுமாக ஆச்ரயித்தவர், இதன் காரணமாகவே ஸ்ரீசங்கரர் இவரிடத்தில் கர்ம காண்டத்திலிருந்து அத்வைத சாதனைக்குத் தேவையான வாதங்களை, வேத்ப் பிரமாணங்களை தொகுத்து எழுதப்பணிக்கிறார். 'நைஷ்கர்ம ஸித்தி' என்னும் பெயரில் இந்த நூலை எழுதுகிறார் ஸ்ரீஸுரேஸ்வரர். நூல் எழுதி முடிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீசங்கரரிடம் அனுக்ரஹம் பெற நூலை அவரிடம் சமர்பிக்கிறார். படித்த பகவத் பாதர், தமது பாஷ்யங்களையும், பிரகரண கிரந்தங்களையும் நன்றாக உபயோகம் செய்து ஆத்மஞானத்தை, மோக்ஷத்தை அடைவதற்கு 'எது சரியான வழி' என்பதை விரிவாக ஆராய்ச்சி செய்து முடிவாக 'ஞானமே வழி' என்பதாக முடித்திருப்பதைப் பார்த்து சந்தோஷித்தாராம்.

இந்த நூலில் பகவத்பாதரை ஸ்ரீஸூரேஸ்வரர் பின்வருமாறு வந்தனம் செய்கிறார்.

ஸ்ரீமத் சங்கரபாதபத்ம யுகளம் ஸம்ஸேவ்ய லப்த்வா உசிவாந்
ஞானம் பாரஹம்ஸ்யம் ஏதத் அமலம் ஸ்வாந்த அந்தகாராபனுத்
மா பூத் அத்ர விரோதினீ மதி: அத: ஸ்த்பி: பரீக்ஷ்யம் புதை:
ஸர்வத்ர ஏவ விசுத்தயே மதம் இதம் ஸந்த: பரம் காரணம்.

"ஸ்ரீமத் சங்கர பகவத் பாதரின் பாதயுகளத்தை நன்கு சேவித்து இந்த நிர்மலமான அத்வைத ஞானத்தை அடைந்தேன். இது பரமஹம்ஸ ஸந்யாசிகளாலேயே அடையத்தக்கது. உள்ளத்தில் இருக்கும் அக்ஞானம் என்னும் காரிருளைப்போக்க வல்லது. முமுக்ஷுக்களாகவும், பரிசுத்தமான மதியை உடையவர்களாகவும் இருக்கும் பண்டிதர்கள் இந்த நூலைப் படித்து இதன் குணதோஷங்களைச் சொல்லட்டும். இது க்யாதியை அடைவதற்காக எழுதப்பட்டதல்ல. யாருக்கும் இதனால் என்னிடம் விரோத-பாவம் ஏற்பட வேண்டாம்" என்று கூறுகிறார்.

இரண்டாவது ஸ்லோகத்தில் பின்வருமாறு குருவந்தனம் செய்கிறார்.

விஷ்ணோ: பாதாநுகாம் யாம் நிகிலபவநுதம்
சங்கரோ அவாப யோகாத்
ஸர்வக்ஞம் ப்ரஹ்மஸம்ஸ்தம் முனிகண ஸஹிதம்
ஸம்யக் அப்யர்ச்ய பக்தயா
வித்யாம் கங்காம் இவ அஹம் ப்ரவரகுண நிதே:
ப்ராப்ய வேதாந்த தீப்தாம்
காருண்யாத்தாம் அவோசம் ஜனிம்ருதி
நிவஹ த்வஸ்தயே துக்கிதேப்ய:

வியாசராக வந்த மஹாவிஷ்ணுவிடமிருந்து பெருகிய அத்வைத ஞானமாகிய கங்கையை எம் குருநாதரான ஸ்ரீசங்கரர் தமது யோக பலத்தால் தன்னிடம் பெற்று வைத்துக் கொண்டார். அவர் ப்ரஹ்ம நிஷ்டர். சர்வஞர். சிஷ்யர்களும், முனிகணர்களும்எப்போதும் அவரைச் சூழ்ந்து இருப்பர். நான் பகீரதனைப் போல இருந்து, அவரை பரம-பக்தியுடன் பூஜித்து ஞான கங்கையை அடைந்தேன். அந்த ஞான-கங்கையின் ப்ரவாஹத்தை இந்த கிரந்தத்தின் மூலமாக ஸம்ஸாரமாகிய இருட்டில் உழலும் ஜீவர்களை முமுக்ஷுக்களாக ஆக்கி கடைத்தேற்றட்டும்' என்று பிரார்த்திக்கிறார்.

இவ்வாறாக நாமும் ஸ்ரீ பகவத்பாதரை போற்றி வணங்கிடுவோம், அவரருளால் அஞ்யானத்திலிருந்து விடுபட வேண்டுவோம்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!

27 comments:

Anonymous said...

//இவ்வாறாக நாமும் ஸ்ரீ பகவத்பாதரை போற்றி வணங்கிடுவோம்//

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!

தம்பி

Anonymous said...

"நமாமி சங்கராசார்யம் சர்வ லோகைக பூஜிதம் பஜே ஸ்ரீபாரதிதீர்தம் ஸ்ரீசாரதாபீடசத்குரும்"

நேற்று தான் ச்ருங்கேரி ஆச்சார்யாளுடைய வர்தந்தியும்(சித்திரை ம்ருகஷீரிஷம்).

தம்பி

திவாண்ணா said...

நல்ல பதிவு! நன்னி மௌலி!
நேற்று ஆசார்யாள் படத்தோட வேத கோஷத்தோட ஊர்வலம் போனோம்!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும், முதல் பின்னூட்டக் கருத்துக்கும் நன்றி கணேசரே! :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா..

நேற்று காலை பூஜையின் போதே நினைத்துக் கொண்டேன்.

இங்கும் பகலில் ஊர்வலம் வந்தார் ஸ்ரீசரணர். எனக்குத்தான் பார்க்கக் கொடுப்பினை இல்லை, ஆபீஸ் போயிட்டேன்.

Geetha Sambasivam said...

நேத்து மத்தியானம் தான் இந்த நிகழ்வுகளைப் பற்றிப் படிச்சுட்டு இருந்தேன். என்னமோ எழுதணும்னு தோணலை. நீங்க எழுதிட்டீங்க. குருவருள் துணை நிற்கும். இங்கே ஒண்ணும் அப்படி எல்லாம் தெரியலை. சங்கர ஜயந்தினு. பல கோயில்களிலும் ஆசாரியருக்குச் சிலையே கிடையாது. :((((((((((( மூகாம்பிகை கோயிலில் அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு ஒரு சங்கர ஜயந்தி போது போயிருந்தோம். அதை நினைத்துக் கொண்டேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா....

சிலைகள் இல்லைதான், அதனால்தான் படங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறோம்.

ஊர்களில் சிருங்கேரி, காஞ்சி மட பிராஞ்ச்களில் இருக்கிறது தனியாக சிலா மூர்த்திகள்..

Geetha Sambasivam said...

அது தெரியும், ஆனால் கோயில்களில் தனி சந்நிதி இருக்கலாமே என என் அபிப்பிராயம்

மெளலி (மதுரையம்பதி) said...

உங்க....உங்க அபிப்பிராயம் புரிகிறது கீதாம்மா...:)

ஷைலஜா said...

மௌலி ! முதலில்குருவின் பொற்பாதங்களுக்கு என் நமஸ்காரங்கள். சந்தனமும் மல்லிகையும் மணக்கும் என்பதுபோலத்தான் இருக்கிறது மௌலியின் பதிவுகள் சிறப்பாயிருக்கும் என்று சொல்வதும்.
ஆமாம் பகவத்பாதாள் பற்றிய இந்தப்பதிவும் மிக அருமை.

குருவின் பாதத்தைக்கும்பிட்டு வணங்கினால்
தருமம் தழைக்கும் அமைதி நிலைக்கும்
குருவைக்கண்டு குறுமொழிகேட்டால்
பெருகும் ஞானம் விலகும் கர்வம்!

ஆசார்யர்திருவடிகளே சரணம்.

அரங்கப்ரியா.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திருவரங்கப் பிரியா அவர்களே... :-)

ஏதேது இம்புட்டு தூரம்?... :-)

நன்றிக்கா.

S.Muruganandam said...

//ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! //

நேற்று மேற்கு மம்பலம்சங்கர மடத்தில் குரு பாத தரிசனம் கண்டேன்.

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
வாங்க திருவரங்கப் பிரியா அவர்களே... :-)

ஏதேது இம்புட்டு தூரம்?... :-)

நன்றிக்கா.

April 30
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>...

காவிரியை வைகை வம்புக்கு இழுக்குதா ஏதேது இம்புட்டு தூரமாமே,ம்ம்:):):)

ஞாபகம் வருதே... said...

சங்கரர் திருப்பதி யில் தன ஆகர்ஷண இயந்திரம் ஒன்றையும்,ஸ்ரீரங்கத்தில் ஜன ஆகர்ஷண இயந்திரத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளார்.பத்மபாதர் சங்கரரின் சூத்திர பாஷ்யத்திற்கு எழுதிய உரை ஸ்ரீரங்கத்தில் இருந்த அவரது உறவினரால் பாதுகாக்கப்படாமல் தீக்கு இறையானதும் அந்த உரையின் முதல் அய்ந்து பாகங்களை சங்கரர் தன் ஞாபக சக்தியால் கூறினார் அது தான் "பஞ்சபாதிகா"

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சங்கரர் செய்த குருவணக்கம்,
சங்கரருக்குச் செய்த குருவணக்கம்
- இரண்டுமே அருமை!

//இதற்கு நமது ஸ்ரீசரணர் பின்வருமாறு பிரார்த்திக்கிறார்//

மெளலி அண்ணா,
சங்கரருக்கு ஸ்ரீசரணர் என்று இன்னொரு பெயர் இருக்கா? அறியத் தாருங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கீதாம்மா
சங்கரருக்கு சிற்சில ஆலயங்களில் திருமேனிகள் உள்ளனவே!

திருமலை ஸ்வாமி புஷ்கரிணியில் சங்கரர் சிலா மூர்த்தத்தை இன்றும் காணலாம்!
பத்ரிநாத்-இல் உண்டு! கன்னியாகுமரி, ஸ்ரீசைலத்திலும் உண்டு!

திருவிடைமருதூர் மத்யார்ஜூன க்ஷேத்திரத்தில் சங்கர பாதுகா பீட பூஜை உண்டு!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

எல்லா யதிஸ்ரேஷ்டர்களையும்/குருஸ்ரேஷ்டர்களையும் ஸ்ரீசரணர் என்று கூறுவதுண்டு. இது அடைமொழிதானே தவிர பெயரல்ல. ஸ்ரீ பரமாச்சார்யாரை இந்த அடைமொழியால் குறிப்பிட்டு சொல்வது வழக்கம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாருங்கள் ஞாபகம் வருதே. முதல் வருகைக்கு நன்றிகள் :)

ஆமாம் நீங்க சொன்னதெல்லாம் இப்போது ஞாபகம் வருது :-).

எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருக்கும் அளவுக்கு அனுக்ரஹம் செய்திருக்கிறார்.

குறிப்பிட்டு சில சம்பவங்களைச் சொன்னமைக்கு நன்றிகள் பல.

மெளலி (மதுரையம்பதி) said...

வாருங்கள் கைலாஷி ஐயா....பாத தரிசனம் கிடைத்ததா...கொடுத்து வைத்திருக்கிறீர்கள் ஐயா நீங்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஷைல்ஸக்கா...

//காவிரியை வைகை வம்புக்கு இழுக்குதா ஏதேது இம்புட்டு தூரமாமே,ம்ம்:):):)//

ஹிஹிஹி...வம்புக்கு இழுக்கல்ல, சங்கரர் உங்களை இங்கு இழுத்து வந்துட்டார் அப்படின்னு சொல்ல வந்தேன் :-)

குமரன் (Kumaran) said...

நல்லதொரு கட்டுரை மௌலி. முதலில் சொன்ன சுலோகத்தையும் ஆசார்ய வம்சத்தைப் பேசும் சுலோகத்தையும் முன்னர் அறிவேன். மற்றவை எல்லாம் இன்று படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி.

குமரன் (Kumaran) said...

வேகவேகமாக எழுதி இட்டதில் சில கவனக்குறைவுகள் ஏற்பட்டிருக்கும் போலிருக்கிறது.

'ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் = ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் சாஸ்திரங்களுக்கும், புராணங்களுக்கும்' என்று இருந்திருக்க வேண்டும்.

"இதனாலேயே ஆதிசங்கரரிலிருந்து ஆரம்பிக்கும் குரு பரம்பரையை 'மாணவ ஸம்ப்ரதாயம்' என்று கூறுவர்" என்றது "இதனாலேயே கௌடபாதரிலிருந்து ஆரம்பிக்கும் குரு பரம்பரையை 'மாணவ ஸம்ப்ரதாயம்' என்று கூறுவர்" என்று இருந்திருக்க வேண்டும்.

‘ஸ்ரீசங்கரரை அவரது ப்ரதம குரு போற்றுதல்:’ என்றது ‘ஸ்ரீசங்கரரை அவரது ப்ரதம சிஷ்யர் போற்றுதல்: ‘ என்று இருந்திருக்க வேண்டும்.

குமரன் (Kumaran) said...

கீதாம்மாவுடைய அபிப்ராயம் நல்ல அபிப்ராயம் தான். ஆனால் எல்லா கோவில்களும் அத்வைத சம்ப்ரதாயத்தைப் பின்பற்றவில்லையே. அத்வைத சம்பிரதாயத்தை ஒட்டிய காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் போன்ற இடங்களில் (கோவை உட்பட) சங்கர பகவத்பாதரின் திருவுருவச்சிலை இருக்கின்றதே. மற்ற இடங்களில் அந்த அந்த கோவில்களின் சம்பிரதாயப்படி அறுபத்திமூவர், ஆழ்வார்கள், சமயக் குரவர் நால்வர், சந்தானக் குரவர் நால்வர், விசிஷ்டாத்வைத ஆசாரியர்கள் என்று தான் திருவுருவச் சிலைகள் இருக்கும்; அங்கெல்லாம் அத்வைதாசாரியரின் திருவுருவச்சிலையை வைக்க வேண்டும் என்றால் முறையும் ஆகாது; அங்கிருப்பவர்கள் ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள். தேவையில்லாத சர்ச்சைகள் தான் வரும். Even though common person considers all of these as part of Hinduism, there is a proper jurisdiction for each one of these Acharyas. Should not try to change the status quo unnecessarily.

மெளலி (மதுரையம்பதி) said...

முதலில் வருகைக்கு நன்றி குமரன்.

ஆமாம், 2 நாட்கள் சிறிது சிறிதாக பல வேலைகளுக்கு நடுவில் எழுதினேன், அதிலும் அவசரம். தவறுகள் நேர்ந்து விட்டன. எல்லாத் தவறுகளையும் திருத்திவிட்டேன், சுட்டியமைக்கு நன்றி. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//எல்லா கோவில்களும் அத்வைத சம்ப்ரதாயத்தைப் பின்பற்றவில்லையே. //

கோவில்களில் அத்வைத சம்ப்ரதாயம் என்பது எப்படின்னு புரியல்லையே குமரன்? கோவில்கள் ஆகம வழிகளில் தானே செயல்படுகிறது?.

வைதீக முறைகள் மடங்களிலும், மடங்களின் பீட ஸ்தானங்களிலும் தான். நீங்கள் உதாரணம் காண்பித்த இரு கோவில்களும் அங்கு அவர் ஸ்தாபித்த மடங்களின்/ஆம்னாய பீடங்களின் மூல ஸ்தானங்கள், அதனால் மட்டுமே வைதீகமான பூஜை முறைகள்.


ஸ்ரீ ராமானுஜர் போலவே இவரும் மற்ற (ஆம்னாய பீடக் கோவில்கள் தவிர்த்த) பல கோவில்களில் ஆகம பூஜா முறைகளை சீர் செய்து, கோவிலுக்கு/அங்குள்ள மூல மூர்த்திக்குத் தகுந்த பூஜா முறைகளைக் காண்பித்துக் கொடுத்திருக்கிறார், அவை இன்றும் பின்பற்றப்படுகிறது.

பாரதம் முழுவதிலுமிருக்கும் கோவில்களில், எடுத்துக்காட்டாக திருச்செந்தூர், திருவானைக்கா, மாங்காடு, பூரி, பத்ரி என்று பல இறை முர்த்தங்களை அவர் ஸ்துதி செய்து, நமக்கு பல சிறந்த ஸ்துதிகளைக் கொடுத்திருக்கிறார்.

அவரது ஸ்துதிகளை, ஏற்படுத்திய சான்னித்தியதை எல்லாம் ஸ்வீகரிக்கும் நாம், ஒரு நன்றி பாராட்டும் விதமாகவாவது கோவில்களில் அவருக்கு ஒரு சன்னதி ஏற்படுத்தியிருக்கலாம் என்பதே கீதாம்மாவின் ஆதங்கம் என்று தோன்றுகிறது.

இருப்பினும் சர்ச்சையாகலாம் என்று நீங்கள் கடைசியாகக் கூறியதை முற்றிலும் ஏற்கிறேன். இன்று போய் வைஷ்ணவ ஸ்தலங்களில் சங்கரப் பிரதிஷ்டை செய்ய முடியாது, கூடாது, தேவையும் இல்லை.

எல்லாவறுக்கும் மேலாக, இத்தனை வருஷங்கள் ஆகியும், அவரது வழியைப் பின்பற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அவரது வேதாந்த-சித்தாந்தங்கள் பலவகையிலும் சீராகப் பரவிக்கொண்டுதான் இருக்கிறது.

ஆகவே ஆசார்யர்களது சிலா/மூர்த்த வழிபாடுகளை தற்போதிருக்கும் கோவில்களில் நிறுவ வேண்டியதில்லை.
புதிதாக எழுப்பப்படும் கோவில்களில் வேண்டுமானால் நிறுவிக் கொள்ளலாம். :)

குமரன் (Kumaran) said...

கோவில்களில் பெரும்பாலும் ஆகம முறை வழிபாடுகள் தான் என்றாலும் அத்வைதத்திற்கு இல்லாத ஒரு வசதி விசிஷ்டாத்வைதத்திற்கும் த்வைதத்திற்கும் அமைந்துவிட்டது. வைணவ ஆகம வழியில் இருக்கும் கோவில்களில் விசிஷ்டாத்வைதம், த்வைதம் அமைந்துவிடுவதால் அந்த ஆசார்யர்களை அக்கோவில்களில் காண முடிகிறது. ஆனால் சைவ ஆகம முறையில் இருக்கும் கோவில்களில் ஆசார்யர்கள் என்றால் சமயக் குரவர்களையும் சந்தானக் குரவர்களையும் தான் பார்க்க முடிகிறது. அதையொட்டித் தான் சொல்ல வந்தேன்.

குமரன் (Kumaran) said...

கீதாம்மா சொன்னதை ஒட்டியே ஆசார்யரும் தெய்வத்தின் குரலில் சொல்லியிருக்காரு பாருங்க. :-)

***

ராமாநுஜருக்கு முன்னும் பின்னும் வந்த ஸம்ப்ரதாய முக்யஸ்தர்களான நாதமுனிகள், ஆளவந்தார், மணக்கால் நம்பி, திருகச்சி நம்பி, கூரத்தாழ்வார், பட்டர், நஞ்சீயர் முதலான பலருக்கு விக்ரஹங்கள், பூஜையெல்லாம் அநேக ஆலயங்களில் பார்க்கிறோம்.

இந்த அளவுக்கு சிவாலயங்களில் நாயன்மார்கள், மாணிக்கவாசகர், சைவமதக் கோட்பாடுகளையும் புஸ்தகங்களையும் தந்த ஸ்ரீகண்டாசார்யார், மெய்கண்டசிவம், உமாபதி சிவாசார்யார் முதலியவர்களுக்குச் சிற்ப்புக் கொடுக்கவில்லைதான்!

(சங்கர) ஆசார்யாளையும் அவருக்கு முன்னும் பின்னும் வந்த அத்வைத ஸம்பிரதாயப் பெரியவர்களையும் எடுத்துக் கொண்டாலோ ஆலய விக்ரஹம், வழிபாடு இவற்றில் ஸைஃபர் என்றே சொல்ல வேண்டும். ஆசார்யாளுக்கு மட்டும் அபூர்வமாகச் சில கோயில்களில் பிம்பமிருக்கிறது. காஞ்சீபுரத்திலும் சுற்றுபுறங்களிலும் மாத்திரம் இது கொஞ்சம் நிறையவே இருக்கிறது. மாங்காடு, திருவொற்றியூர் இப்படிச் சில ஸ்தலங்களிலும் ஆசார்ய பிம்பங்கள் இருக்கின்றன. ஆனாலும் மொத்தத்தில், நான் அடிக்கடி சொல்வது போல, கோயில் விக்ரஹங்களின் 'ஸென்ஸஸ்'பார்த்து ஒரு ஸித்தாந்தத்தின் 'இன்ஃப்ளுயென்'ஸை கணிப்பது என்றால், இந்தியா தேசத்திலே அத்வைதம் என்று ஒரு வைதிக மதம் இல்லவேயில்லை என்றுதான் முடிவாகும்!

இதற்குக் காரணம் அத்வைதிகள் சைவம், வைஷ்ணவம் இரண்டையும் சேராத, ஆனால் இரண்டையும் ஒரு அளவுவரை ஒப்புக் கொள்கிற ஸ்மார்த்தர்களாக இருப்பதுதான்.

நான் சொல்லவந்த விஷயம் ராமாநுஜ ஸம்ப்ரதாயத்தில் மதாசார்யர்களிடத்தில் விசேஷ பக்தி காட்டுகிறார்கள் என்பது.