Monday, April 6, 2009

புதுமண்டபம்-ஆனந்த சாகர ஸ்தவம் (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு - 4)

மதுரையை திருமலை நாயக்கர் ஆண்ட காலத்தில் நிறைய திருப்பணிகளும், ஆபரணங்களும் அன்னைக்குச் சமர்பித்திருக்கிறார். அப்போது கட்டப்பட்டதுதான் புதுமண்டபம். இங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாட்டினை உடையவை. சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையும் தமது துணைவியார் சிலைகளையும் வடிக்க நிவந்தமளித்து அவற்றையும் கோவில்களில் நிறுவது வழக்கம். [நாயக்கர் தம் மனைவிகளுடன் இருப்பது போன்ற சிலையை திருப்பறங்குன்றம் போன்ற மேலும் சில திருத்தலங்களிலும் காணலாம்.] அது போல புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க உத்தரவிடுகிறார் அரசர். [இன்றும் இச்சிலைகளை புதுமண்டபத்தில் காணலாம்].

அரச உத்தரவுக் கேற்ப, தலைமை சிற்பி தானே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் இடது முழங்காலுக்கு மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது. அரசரது கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என்று மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். அப்போது அங்கே மேற்பார்வையிட வந்த அரசனது பிரதம மந்திரி நீலகண்ட தீக்ஷதர் [இவரே அப்பய்ய தீக்ஷதரது தம்பி மகன், மேலதிக தகவல்கள் இங்கே!], சிற்பியின் கவலையை அறிந்து கொண்டு சற்று உள்ளார்ந்து இருந்துவிட்டு, பின்னர் அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார்.



அரசர் சிலைகளைப் பார்வையிட வருகையில் அரசியின் சிலை பற்றி நீலகண்ட தீக்ஷதர் சொன்ன கருத்து அரசரிடம் சொல்லப்படுகிறது. பிரதம மந்திரிக்கு அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு அழைத்துவர உத்தரவிடுகிறார்.

சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, பூஜையில் இறைவனுக்கு காண்பிக்கப்பட்ட கர்பூர ஹாரத்தியின் உதவியால் தன் கண்களை தாமே அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களிடம், அரசர் தர இருந்த தண்டனையை தாமே விதித்துக் கொண்டுவிட்டது பற்றி அரசருக்குத் தெரிவித்துவிடச் சொல்லுகிறார்.


தர்பாருக்குத் திரும்பிய சேவகர்கள் நீலகண்டரது செயலையும், செய்தியையும் அரசரிடம் கூறுகின்றனர். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக அரசனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட அரசர், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறார். தனது தவறை நினைத்து வருந்திய அரசர், நீலகண்டரைத் கண்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டு, அவரது கண் பார்வை திரும்ப என்ன செய்வதென்று வினவுகிறார். அப்போது தீஷதர் அன்னை மீனாக்ஷியை வணங்கிப் பாடியதுதான் ஆனந்த ஸாகர ஸ்தவம். இந்த ஸ்லோகங்களைப் பாடி முடித்ததும் நீலகண்டரது கண்பார்வை திரும்பியதாகச் சொல்லப்படுகிறது.

ஆனந்த சாகர ஸ்தவம் என்னும் நூலானது 108 ஸ்லோகங்களைக் கொண்டது. முழுவதும் அன்னை மீனாக்ஷியின் பாதாரவிந்தங்களைப் பணிவதாக அமைந்த ஸ்லோகங்கள் என்றாலும் இவை சிறந்த அத்வைதக் கருத்துக்களை உள்ளடக்கியதாக, ஜீவன் முக்தி நிலையை நெருங்கும் ஓர் ஆத்மாவின் வேண்டுதலாகவே தோன்றுகிறது. இதிலிருந்து சில அபூர்வமான ஸ்லோகங்களைப் பார்க்கலாமா?



த்வய்யார்பிதம் ப்ரதமமப்பய யஜ்வநைவ
ஸ்வாத்மார்ப்பணம் விதததா ஸ்வகுலம் ஸமஸ்தம்
காத்வம் மஹேசி குலதாஸ முபேக்ஷிதும் மாம்
கோ வாநுபாஸி துமஹம் குலதேவதாம் த்வாம்.

அம்மா, மீனாக்ஷி!, முதலில் தன்னை அர்பணம் செய்து கொண்ட எனது பெரியப்பாவால் [அப்பய்ய தீக்ஷதர்] என் வம்சம் முழுவதும் உன்னிடத்தில் அர்பணம் செய்யப்பட்டிருக்கிறது. உனது பரம்பரை அடிமையான என்னை நீ எப்படி ஒதுக்க/தள்ள முடியும்?. பரம்பரை தெய்வமான இன்னை உபாசிக்காமல் இருக்க நான் யார்?

அங்கீகுரு த்வம் அவதீரய வா வயம் து
தாஸாஸ்தவேதி வசஸைவ ஜயேம லோகான்
ஏதாவதைவ ஸுகரோ நநு விச்வமாத:
உத்தண்ட தண்டதர கிங்கர மெளளிபங்க:

நீ ஏற்றுக் கொண்டாலும் சரி, அல்லது கைவிட்டாலும் சரி, நாங்கள் உன் ஊழியர்கள் என்று சொல்லிக் கொண்டே உலகங்களை ஜெயித்துவிடுவோம். யம கிங்கரர்கள் எங்களிடம் நெருங்கி மிரட்ட இயலாது.

ஸ்வயாத் கோமலம் யதி மநோ மம விச்வமாத:
தத்பாதயோ: ம்ருதுளயோ: தவ பாதுகாஸ்து
ஸ்யாத் கர்கசம் யதி கரக்ரஹணே புராரே:
அச்மாஹி ரோபண விதெள பவதூபயோக:

என் மனதை உன் பாதாரவிந்தங்களில் சமர்பிக்கிறேன். அது மிருதுவானால் உனது பாதுகையாகக் கொள். அவ்வாறின்றி கடினமாக இருக்குமானால் உனது விவாக சமயத்தில் உபயோகிக்கும் அம்மியாக வைத்துக் கொள். எப்படியாகிலும் உன் சரண ஸ்பரிசம் அதற்கு/மனதுக்கு வேண்டும்

த்வத் ஸந்நிதான ரஹிதோ மம மாஸ்து தேச:
த்வத் தத்வ போத ரஹிதா மம மாஸ்து வித்யா
த்வத் பாதபக்தி ரஹிதோ மம மாஸ்து வம்ச:
த்வச் சிந்தயா விரஹிதம் மம மாஸ்து சாயு:

உன் கோவில் இல்லாத ஊரில் நான் குடியிருக்க வேண்டாம். உன்னைப் பற்றி உபதேசிக்காத வித்யை எனக்கு வேண்டாம். உன் சரணங்களில் பக்தி இல்லாத வம்சம் எனக்கு வேண்டாம். உன் நினைவில்லாத வாழ்நாளை நான் விரும்பவில்லை.

இவ்வாறான சிறப்புக்களை உள்ளடக்கிய புதுமண்டபத்தில் இருக்கும் சிற்பங்கள் இவ்விடுகையில் தொடுத்துள்ளேன். எல்லா படங்களும் கூகிளார் உபயம். இவற்றை வலையேற்றியவர்களுக்கு நன்றி.

15 comments:

Anonymous said...

//நீ ஏற்றுக் கொண்டாலும் சரி, அல்லது கைவிட்டாலும் சரி, நாங்கள் உன் ஊழியர்கள் என்று சொல்லிக் கொண்டே உலகங்களை ஜெயித்துவிடுவோம். யம கிங்கரர்கள் எங்களிடம் நெருங்கி மிரட்ட இயலாது.//

மீனாக்க்ஷி பாதமே நமக்குத் துனண!

தம்பி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மனதை உன் பாதாரவிந்தங்களில் சமர்பிக்கிறேன்.

அது மிருதுவானால் உனது பாதுகையாகக் கொள்.

கடினமாக இருக்குமானால் உனது விவாக சமயத்தில் உபயோகிக்கும் அம்மியாக வைத்துக் கொள்.

எப்படியாகிலும் உன் சரண ஸ்பரிசம் மனதுக்கு வேண்டும்//

புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!

//உன்னைப் பற்றி உபதேசிக்காத வித்யை எனக்கு வேண்டாம்.
உன் சரணங்களில் பக்தி இல்லாத வம்சம் எனக்கு வேண்டாம்//

அப்படியே ஆகுக! அப்படியே ஆகுக!
அப்படியே அருள்க! அப்படியே அருள்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//[நாயக்கர் தம் மனைவிகளுடன் இருப்பது போன்ற சிலையை திருப்பதி, திருப்பறங்குன்றம் போன்ற மேலும் சில திருத்தலங்களிலும் காணலாம்.]//

திருப்பதியில் அவ்வாறு இருப்பது கிருஷ்ண தேவ ராயர் அவரது மனைவிமார்கள்! நாயக்கர் அல்ல!
நாயக்கர்கள் விஜயநகர பூர்வீகமாய் இருந்து பிற்பாடு வந்தவர்கள்!

திருப்பதியில் கிருஷ்ண தேவ ராயர் சிலை மட்டுமல்லாது, தோடர்மால்-பிதா பீவி சிலைகளும் உண்டு!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி தம்பியாரே!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ்

Geetha Sambasivam said...

நாகம நாயக்கரின் வழி வந்தவர்கள் நாயக்கர்கள். இவர்கள் ராயரின் சாம்ராஜ்யத்தின் தளபதிகளாய் இருந்தவர்களே, நாகமநாயக்கரின் மகன் ஆன விஸ்வநாத நாயக்கரையே ( விஸ்வநாத நாயக்கர் உதவிக்கு அப்போக் கூடச் சென்றது தளவாய் அரியநாத முதலியார்) தகப்பனைச் சிறைப் பிடிக்க மன்னன் அனுப்புவான். கதை, சினிமா எல்லாம் வந்திருக்கு.

வழக்கம்போல் படிச்சுட்டுப் போயிடலாம்னு பார்த்தா, நாயக்கர் மக்கள் இழுத்துட்டாங்க! சரித்திரத்துக்குப் போயிட்டேன். :))))))))))))))))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா...

//இவர்கள் ராயரின் சாம்ராஜ்யத்தின் தளபதிகளாய் இருந்தவர்களே, நாகமநாயக்கரின் மகன் ஆன விஸ்வநாத நாயக்கரையே ( விஸ்வநாத நாயக்கர் உதவிக்கு அப்போக் கூடச் சென்றது தளவாய் அரியநாத முதலியார்) தகப்பனைச் சிறைப் பிடிக்க மன்னன் அனுப்புவான். கதை, சினிமா எல்லாம் வந்திருக்கு.//

இதெல்லாம் சரி, புதுமண்டபத்தின் வரலாறு நான் சொன்னது தானே?...இல்லை அது தவறு என்கிறீர்களா..புரியவில்லை. சற்றே விளக்கவேண்டும். :)

Geetha Sambasivam said...

புது மண்டபம் வரலாறைப் பத்தி எங்கே சொன்னேன்? நாயக்கர் வம்சாவளியைப் பத்தி இல்லை பேசினேன்? வரேன்.

Raghav said...

மீனாட்சி அம்மனையும், சொக்கரையும் தரிசித்து விட்டு மறக்காமல் செல்லுமிடல் புதுமண்டபம்.. ஒவ்வொரு முறையும் ஏதாவது எங்க ஊர் பெருமாளுக்காக வாங்க இங்க தான் வருவோம்..

Kavinaya said...

//என் மனதை உன் பாதாரவிந்தங்களில் சமர்பிக்கிறேன். அது மிருதுவானால் உனது பாதுகையாகக் கொள். அவ்வாறின்றி கடினமாக இருக்குமானால் உனது விவாக சமயத்தில் உபயோகிக்கும் அம்மியாக வைத்துக் கொள். எப்படியாகிலும் உன் சரண ஸ்பரிசம் அதற்கு/மனதுக்கு வேண்டும்//

//உன் கோவில் இல்லாத ஊரில் நான் குடியிருக்க வேண்டாம். உன்னைப் பற்றி உபதேசிக்காத வித்யை எனக்கு வேண்டாம். உன் சரணங்களில் பக்தி இல்லாத வம்சம் எனக்கு வேண்டாம். உன் நினைவில்லாத வாழ்நாளை நான் விரும்பவில்லை.//

ஆகா, நானும் அப்படியே அன்னையை வேண்டிக்கிறேன். மீனாட்சி அம்மா திருவடிகள் சரணம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கா.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ்.

//ஒவ்வொரு முறையும் ஏதாவது எங்க ஊர் பெருமாளுக்காக வாங்க இங்க தான் வருவோம்..//

ஆமாம், எனக்கும் புதுமண்டபத்தில் சுற்றி ஏதாவது அலங்காரத்திற்கு வாங்குவது பிடித்த காரியம்...:-)

மெளலி (மதுரையம்பதி) said...

//புது மண்டபம் வரலாறைப் பத்தி எங்கே சொன்னேன்? நாயக்கர் வம்சாவளியைப் பத்தி இல்லை பேசினேன்? வரேன்//

நன்றிங்க கீதாம்மாஆஆஆஆ

குமரன் (Kumaran) said...

ஆகா. அருமையான சுலோகங்கள். அறிமுகத்திற்கு நன்றி மௌலி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்...உங்களுக்குப் பிடிக்காது போனால்தான் அதிசயம் :-)