Friday, July 31, 2009

காமாக்ஷி...கடாக்ஷி - 3 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)



பதிவு -1 இங்கே!

பதிவு -2 இங்கே!

அன்னை காஞ்சியில் பிரதிஷ்ட்டை ஆன பிறகு அந்த பிரதேசத்தை ஆள்வதற்கு ஓர் அரசனை தேர்ந்தெடுக்க பிரம்மாவிடம் வேண்டுகின்றனர். பிரம்மா தனது திருஷ்டியால் வானிலிருந்து ஒருவனை வரவழைத்து அவனுக்கு ஆகாச பூபதி என்று பெயரிட்டு, அப்பகுதியை ஆளவும், அன்னைக்கு பூஜைகள் நடத்தவும் அவனுக்கு உத்தரவிடுகிறார். வருஷங்கள் கடக்கிறது. ஆகாச பூபதி அன்னையை வழிபட மறந்து கேளிக்கைகளில் ஈடுபடத் துவங்குகிறான்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதாக மக்களும் அன்னைக்கு பூஜை, மற்றும் உத்ஸவங்களை நடத்த தவறினர். தேசத்தில் வறுமை தலைவிரிக்க ஆரம்பிக்கிறது. மன்னனை மிகப் பெரிய வறுமை ஒன்றும் வாட்டியது. ஆம்!, ஆகாச பூபதிக்கு மழலைச் செல்வம் இல்லை. தீமை காட்டி விலக்கிடும் தெய்வமல்லவா அன்னை?. தனக்கு மக்கட் செல்வம் இல்லாததும், நாட்டில் நிலவும் பஞ்சமும் ஆகாச பூபதிக்கு பராசக்தியை நினைவுபடுத்துகிறது. அன்னை காமாக்ஷிக்கு நித்ய மஹோத்ஸவங்களைச் செய்து, அரசனும் அவன் மனைவியும் குழந்தை வேண்டி அனுதினமும் அன்னையை ஆராதிக்கின்றனர். இதன் விளைவாக அரசியின் கருவறையிலும் உயிர் வளர ஆரம்பிக்கிறது.

தன்னையே தனது சேய்களுக்குத் தரும் காமாக்ஷி, தனக்கும் மேலான ஒன்றை அரசனுக்குத் தர முடிவெடுக்கிறாள். தன்னையே தருவதையும் விட தனது புத்ரனைத் தருவது எந்தத் தாயாலும் முடியாது, ஆனால் லோகமாதா தனது ஸீமந்த புத்ரனை, செல்வ/செல்ல கணபதியை அரச தம்பதிக்கு மகனாக அளிக்க முன்வருகிறாள். அதிலும் ஒரு திருவிளையாடலாக கணபதியை, கஜமுகனாக அன்றி, சாமானிய நரமுகத்துடனான மானிடக் குழந்தையாகவே பிறக்குமாறு செய்து, அக்குழந்தை விக்னேஸ்வரன் என்பதை மறைக்கிறாள். இவ்வாறாக சைவ பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் பிருத்வீ க்ஷேத்ரமாகவும், சாக்த பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் ஆகாச தலமுமான காஞ்சியில் விக்ன விநாயகன் அரச குடும்பத்தில் அவதரிக்கிறான். நாடு முழுவதும் கொண்டாட்டம், அரசனது குழந்தைக்குப் பெயரிடும் நாளும் நெருங்குகிறது. இனியும் கணேசனது ப்ரபாவத்தை மறைக்கலாகாது என்று எண்ணுகிறாள் பராசக்தி. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அரசன் மக்களுக்கு வாரி வழங்குகிறான். அரண்மனையில் மக்களுக்கு அறுசுவை உண்டி வழங்கப்படுகிறது. முதலில் ஆடவர் உண்டு பின்னரே பெண்கள் உணவருந்துவது என்பது பொது வழக்காக இருந்தாலும், இங்கே அரசன், இவ்விழாவில் "தவதேவி பேதா: ஸத்ரிய: ஸமஸ்தா ஸகலா ஜகத்ஸு" என்னும் சண்டி மந்திரத்தின்படி பெண்களை எல்லாம் முதலில் அமர்த்தி சுவாசினி பூஜை செய்து உணவிடுகிறான். சஹஸ்ர நாமத்தில் "ஸுவாஸிந்யார்ச்சன ப்ரீதா" என்று சொல்வதால் ஸுமங்கலிகளையே காக்கும் தேவியாகக் கருதி அவர்களைக் காக்க வைக்காது முதலில் விசேஷமாக உணவளிக்கிறான்.

பந்தியில் பெண்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே மழை 'சோ' என்று பொழிய ஆரம்பிக்கிறது. போஜன கூடத்தின் முற்றத்தில் மழைத்துளிகள் சல-சலவென விழுகின்றன. ஆஹா! பொன் மழையல்லவா பொழிகிறது. மழை நீருடன் பொன் துகள்களும் வர்ஷிப்பதை ஆச்சர்யத்துடன் காண்கின்றனர் மக்கள். ஒரு முஹுர்த்தகாலம் இவ்வாறாக ஸ்வர்ண மணிகள் கொண்ட மழை பொழிந்த பின்னர் அங்கே இருந்த தவஸ்ரேஷ்டர்களுக்கு வானில் மற்றொரு காக்ஷி தெரிகிறது. அன்னை காமாக்ஷியின் எழிலான தரிசனம் தருகிறாள். வறுமையில் வாடின நாட்டைக் குபேர ஸாம்ராஜ்யமாக ஆக்கிவிட்டாள். இது அவள் அனுக்ரஹமே என்று உணர்ந்த எல்லோரும் ஆச்சர்யத்துடன் போஜன சாலைக்குள் வருகின்றனர். போஜன சாலையிலேயே ஒரு மஞ்சத்தில் அரசனது மகவும் படுக்க வைக்கப்பட்டிருந்தது. அரசன் மிக்க மகிழ்ச்சியுடன் பந்தி விசாரணை செய்கிறான், அப்போது பிறந்த குழந்தை அரசனை நோக்கி நகர்ந்து சென்று அவனை நோக்குகிறது. பிறந்து பன்னிரு நாட்களே ஆன குழந்தை தவழ்வதே ஆச்சர்யம் என்றிருக்கையில் அக்குழந்தை தனது தந்தையிடம் பேசவும் ஆரம்பிக்கிறது. 'பொன் மழை பெய்த காரணம் சொல்கிறேன் கேளுங்கள் அப்பா, இன்று நீங்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த விருந்தில் பயற்றம் பொங்கலும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொங்கலுக்காக எடுத்து வைக்கப்பட்ட பயற்றில் ஒரு பொன் மணி கலந்திருந்தது. என்னைப் பெற்ற அன்னை பயறு நன்றாக இருக்கிறதா என்று பார்க்கும் போது அவளது நெளி-மோதரத்தில் இருந்த ஒரு தங்க முத்து இப்பயற்றுடன் கலந்து, அது பொங்கலாயிற்று. அந்த பொன்னாலான பயறு செய்த பாக்யம் அது அன்னை காமாக்ஷியின் திருவயிற்றில் சேர்ந்தது. அதன் பலனே இந்த பொன்மழை" என்று கூறி நிறுத்தியது அக்குழந்தை.

குழந்தை சொல்வதைக் கேட்ட ஆகாச பூபதி, பொங்கலில் கலந்த பொன்மணி எப்படி பராசக்தியின் வயிற்றை அடைந்தது என்று குழந்தையிடம் கேள்வி கேட்க, 'இது கூட புரியவில்லையா?, சகல உலகிற்கும் தாயான தேவி அந்தப் பந்தியில் தானே ஒரு சுமங்கலிக் கோலத்தில் அதோ அந்த பந்தி வரிசையில் உணவருந்திக் கொண்டிருக்கிறாள். வாருங்கள் காண்பிக்கிறேன்' என்று கூறி தந்தையை அழைத்துச் செல்கிறது. குழந்தை காட்டிய இடத்தில் யாரும் இருக்கவில்லை, ஆனால் அங்கே அந்த சுமங்கலிகள் பந்தியில் ஒருவர் உணவருந்தியதற்கான தடையமாக இலையும், அதில் பறிமாறிய உணவு உண்ணப்பட்டதாகவும் தெரிகிறது. பறிமாறப்பட்ட பயற்றம் பொங்கலில் விரல்-சுவடுகளும் தெரிகிறது. அதைக் கண்டதும் அரசன் ஆனந்தக் கண்ணீர் விடுகிறான். மஹா-மாயா தனக்கு தரிசனம் தராது அந்தர்யாமியாகி-விட்டாளே என்ற வருத்தம் ஒருபுரம், இன்னொரு பக்கம், தான் அளித்த விருந்தில் அன்னையே பங்கேற்றாளே என்ற பரவசம். சிறு குழந்தையோ, அந்த இலையில் இருந்த, அந்த மீதமான பொங்கலை அள்ளி அருந்துகிறது. தான் மட்டுமல்லாது அங்கிருந்த எல்லோருக்கும் தேவீயின் ப்ரசாதம் என்று வாரி-வாரி வழங்குகிறது. அப்-பிரசாதமும், அள்ள-அள்ளக் குறையாது அக்ஷயமாக வளர்ந்தது.

இவ்வளவும் செய்யும் இக்குழந்தை உண்மையில் யார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. அங்கிருந்த அருந்-தவத்தோருக்கு புரிந்தது விஷயம். கணபதிராயனே ராஜகுமாரனாகப் பிறந்திருக்கும் உண்மை புரிந்தது. சரி, ராஜகுமாரனை ஏன் முருகனாகச் சொல்லவில்லை?. முருகனுக்கு உகந்தது தினை, அவன் அண்ணனுக்கு உகந்தது பயறு. கணநாதனுக்கு உரிய சக்ரத்தில், மூலாதாரத்திற்கு உரிய இடத்தில் வசிக்கும் பாரசக்தியின் பரிவார-சக்தியின் பெயரே 'முத்கெளதனாஸக்த சித்தா'. முத்க ஓதன = பயற்றம் சோறு, முத்கம் = பயறு. அழகாலும், குழந்தை உள்ளத்தாலும், முக்தி அருள்வதாலும் அவன் முக்தன். துதிக்கை இல்லாமல் கையாலேயே அம்பிகையின் பிரசாதத்தை தனது வாயில் அடைத்துக் கொண்டு, பிறருக்கும் அள்ளி-அள்ளித்தரும் குழவியைக் கண்ட அங்கிருந்த அனுபூதிமான்கள் குழந்தையை நோக்கி 'அம்மாவை நீ இனம் கண்டு, அவளை எங்களுக்கும் உணர்த்திவிட்டாய், துதிக்கை இன்றித் தோன்றினாலும் நீ துண்டீரனே! என்று கூறித் தொழுதனர். துண்டம் என்றால் துதிக்கை; துதிக்கையை உடையவன் துண்டீரன். அரசன் குழந்தைக்குத் 'துண்டீரன்' என்றே பெயரிட்டு வாழ்த்தொலி எழுப்ப, மக்களும் ஜய கோஷம் செய்கின்றனர். அப்போது குழந்தை மீண்டும் வாய்திறந்து 'அன்னை நம் கண்களுக்குப் புலப்படவில்லையே என்ற விசனம் வேண்டாம். அவள் போஜனத்தின் போது பாதியில் சென்றது தனது உச்சிஷ்ட்டம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற அவளது க்ருபை, மேலும் தரிசனம் தராமைக்குக் காரணம் என்மீது இருக்கும் வாத்சல்யமே. அவளது தரிசனத்திற்குப் பிறகு என்னை விநாயகன் என்று நீங்கள் அறிந்தால் அது, தேவாம்ருதம் அருந்திய மக்களுக்கு தேனின் சுவை எப்படி மிகுந்த களிப்பை ஏற்படுத்தாதோ அது போன்ற உணர்வைத் தரும். என்னால் விளையும் ஆனந்தம் குறைவாக தெரியக்கூடாது என்ற கருத்தில் என்னை பெருமைப்படுத்தவே அவள் காக்ஷி தரவில்லை' என்று கூறி முடிக்கிறார்.

மஹாகாயரான துண்டீரர் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார். உரிய நேரத்தில் அரசன் ஆகாச பூபதி துண்டீரருக்கு மாலதி என்ற மங்கை நல்லாளை திருமணம் செய்வித்துப் அரச பட்டாபிஷேகமும் செய்வித்த பின்னர் தவம் செய்ய வனம் புகுகிறார். துண்டீரரது பட்டாபிஷேகம் அரசவையில் நடக்கவில்லை, அன்னை காமாக்ஷி கோவிலில் அவள் முன்னால் நடந்ததாம். பூத கணங்களையே ஆளும் ஐயன் நரர்களையும் சேர்த்து அரசாண்டார். நாடெங்கும் லெளகீக, மற்றும் ஆன்மிகச் செல்வமும் தழைத்தோங்கியது. ஆண்டுகள் கடந்தன, போதுமெனக் கருதிய துண்டீரர் தவ-வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்கிறார். ஆனால் தன் தந்தையைப் போல் கானகம் செல்லாது கனகம் பொழிந்த காமாக்ஷி ஆலயத்தையே தனது ஆன்மா லயிக்கும் இடமாக கொண்டார். மூல காமாக்ஷிக்கு எதிராக அமர்ந்து தாம் தியானம் செய்தால் பக்தர்களுக்கு பாதகமாகும் என்று உத்ஸவ காமாக்ஷி எதிரே ஓரமாக நின்றபடியே தவம் செய்து சாய்ஜ்யம் அடைந்தார். துண்டீர கணபதி ஆண்ட பிரதேசம் துண்டீர நாடு என்று வழங்கலாயிற்று.

மூகாசார்யாள், 'துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி' என்று மூக பஞ்சசதியில் கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தை மனதில் வைத்தே தியாகராஜ ஸ்வாமிகள், "விநாயகு நிவலெநு ப்ரோவவே - அநாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி" (விநாயகனைப் போல என்னையும் கருதிக் காப்பாயாக ஸ்ரீ காமாக்ஷி) என்று பாடியிருக்கிறார். நாமும் இந்த நன்னாளில் அவளருளை வேண்டிடுவோம்.

இன்று வரலக்ஷ்மி விரதம்!. 'ராவே மா இண்டிகி' அப்படின்னு வரலக்ஷ்மியை/காமாக்ஷியை அழைத்து வணங்கிடுவோம். வர-லக்ஷ்மி எல்லோருடைய இல்லங்களுக்கும் வந்து பொன் மழை மட்டுமல்லாது, கல்வி, ஞானம் மற்றும் அன்பு எங்கும்-எப்போதும் செழிக்க வரமளிக்கட்டும்.


ஜெய ஜெய காமாக்ஷி!!!
ஜெய ஜெய காமாக்ஷி!!!

25 comments:

Kavinaya said...

நீங்க எழுதினதில் என்னுடைய மிகப் பிடித்த பதிவுகளில் இதுவும் ஒன்று மௌலி!

//'அன்னை நம் கண்களுக்குப் புலப்படவில்லையே என்ற விசனம் வேண்டாம். அவள் போஜனத்தின் போது பாதியில் சென்றது தனது உச்சிஷ்ட்டம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற அவளது க்ருபை, மேலும் தரிசனம் தராமைக்குக் காரணம் என்மீது இருக்கும் வாத்சல்யமே. அவளது தரிசனத்திற்குப் பிறகு என்னை விநாயகன் என்று நீங்கள் அறிந்தால் அது, தேவாம்ருதம் அருந்திய மக்களுக்கு தேனின் சுவை எப்படி மிகுந்த களிப்பை ஏற்படுத்தாதோ அது போன்ற உணர்வைத் தரும். என்னால் விளையும் ஆனந்தம் குறைவாக தெரியக்கூடாது என்ற கருத்தில் என்னை பெருமைப்படுத்தவே அவள் காக்ஷி தரவில்லை' என்று கூறி முடிக்கிறார்.//

ஆஹா, அன்னையின் கருணையே கருணை.

உங்களுக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள். எழிலான பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Geetha Sambasivam said...

துண்டீர நாடு தான் பின்னர் தொண்டை நாடு என அழைக்கப்பட்டது என்றும் சொல்வதுண்டு. நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் மௌளீ

அருமையான இடுகை - அன்னை காமாட்சியின் புகழ் பரப்பும் இடுகை
- என்னப்பன் விநாயகன் துண்டீரனாக நல்லாட்சி புரிந்து - அன்னையின் ஆலயத்திலேயே தவம் செய்தது - படிக்கும் போதே ஒவ்வொரு காட்சியும் கண்ணுக்கு முன்னெ வருகிறது.

பெண்களுக்கு முதல் பந்தி - பயத்தம்பயறு - பிள்ளையாருகுகுப் படைப்பது - பொன்துகள்பயறு மழை - சிறு மழலை நடந்து சென்று தந்தையிடம் பேசுவது - தேவாம்ருதம் சாப்பிட்ட மக்கள் தேனின் சுவையினை பொருட்படுத்த மாட்டார்கள் - அது போல அன்னை காமாட்சியின் தரிசனம் கண்டவர்களுக்கு - விநாயகப் பெருமானின் தரிசனம் ஒரு பொருட்டாகாது.

அடடா என்ன அருமையான வர்ணனைகளுடன் கூடிய இடுகை

நல்வாழ்த்துகள் மௌளி

ஆடி வெள்ளியன்று அன்னை காஞ்சி காமாட்சியினைப் பற்றி இடுகை இட்டதற்கு நன்றி

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா. நன்றி.

என் இல்லத்தில் வரலக்ஷ்மி விரதம் இருப்பவர்களுக்கு இந்த வாழ்த்தைச் சொல்லிடறேன். :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா..வருகைக்கு நன்றி.

//துண்டீர நாடு தான் பின்னர் தொண்டை நாடு என அழைக்கப்பட்டது என்றும் சொல்வதுண்டு//

தொண்டைக் கொடி என்று ஒரு விதக் கொடியால் சுற்றப்பட்டு கடலில் மிதந்து வந்தவன் (தொண்டைமான்) ஆண்ட நாடு தொண்டை நாடு என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன். கீழே இருக்கும் விநாயக புராணச் செய்யுளைப் பாருங்களேன்.

அண்டரும் புகழ்துண்டீரன் ஆண்டு துண்டீர நாடாய்அத்
தண்டகன் பின்னராண்டு தண்டக நாடாய்ப் பின்னர்த்
தொண்டைமான் ஆண்டுத் தொண்டை நாடெனத் துலங்கிற்றென்ப
பண்(டு) அயன் படைப்புத் தொட்டுப் பயிலுமித் தொல்லை நாடு.

ஆமாம், தொல்லை நாடுன்னு ஏன் சொல்றாங்க?...யாருக்குத் தொல்லை?, எது தொல்லை?....புதசெவி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சீனா சார். இந்தத் தொடருக்காக ரொம்பவே மெனக்கிட்டேன். உங்களுக்கும் பிடித்திருப்பதில் சந்தோஷமே! :)

VSK said...

மிகவும் உழைத்து, தகவல்களைச் சேகரித்து இப்பதிவை எழுதியிருக்கிறீர்கள் எனப் புரிகிறது! அற்புதமான பல தகவல்களை அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள் மௌலி சார்! படிக்கப் படிக்க ஆனந்தமாயிருந்தது. இந்நன்னாளில் இதைப் படிக்கும் பாக்கியம் தந்தமைக்கு தங்களுக்கும், அன்னைக்கும் என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Raghav said...

அன்னை காமாக்ஷி பற்றி நிறையத் தெரிஞ்சுகிட்டேன் அண்ணா.. இப்ப தான் 3 பகுதியும் படிச்சு முடிச்சேன். அருமையாக எழுதிருக்கீங்க.. ஒரே ஒரு முறை அன்னையை தரிசித்திருந்தாலும் இன்னமும் அந்த அருள்முகம் நினைவில் உள்ளது. உங்களோடு ஒருமுறை அழைத்துச் செல்லுங்களேன்.

அப்புடியே அங்க கோயிலுக்குள்ள ஒரு கள்வன் இருக்கானாமே அவர் அங்க எப்புடி வந்தார்னும் சொல்லுங்களேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

படிக்கும் போதே ஒவ்வொரு காட்சியும் கண்ணுக்கு முன்னெ வருகிறது


நன்றி மௌலி. இன்னும் ஒரு பதிவு இருக்கும். இருந்தாலும் விஷயங்களை அதுவும் காமாக்ஷியின் விவரங்களை அருமையாக அளிக்கிறீர்கள். ஆடிவெள்ளியில் தேடிப் பிடித்து படிக்கவேண்டிய கட்டுரை

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க டாக்டர். வி.எஸ்.கே. முதல் வரவுக்கு நன்றிகள் பல.

உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவ்வப்போது வந்து செல்லுங்கள். :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ். நான் அடுத்த முறை செல்லும்போது போகலாம். ஏகம்பனையும், வரதனையும் கண்டு வருவோம். :)

கள்வன் இல்லாத காமாக்ஷியா?. ஆணுருவில் கள்வன், பெண்ணுருவில் காமாக்ஷி என்றே சொல்வர்.

அது அடுத்த இரு பதிவுகளில் வரும்.
ஆனால் உங்களுக்கு அது பிடிக்குமான்னுதான் தெரியல்லை. :)
அதைப் படிக்கையில் இத்தொடரின் முதல் இடுகையில் சொன்ன டிஸ்கியை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாருங்கள் திராச சார். உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடித்திருக்கும் என்று தெரியும். :-)

வருகைக்கும் நன்றி சார்.

மெளலி (மதுரையம்பதி) said...

//இன்னும் ஒரு பதிவு இருக்கும். இருந்தாலும் விஷயங்களை அதுவும் காமாக்ஷியின் விவரங்களை அருமையாக அளிக்கிறீர்கள்//

இன்னும் 2-3 பதிவுகளுக்கு எழுத முடியும். ஆடி முடிந்தாலென்ன, தொடர்ந்து எழுதி முடித்துவிடுகிறேன். :)

Raghav said...

//அது அடுத்த இரு பதிவுகளில் வரும்.
ஆனால் உங்களுக்கு அது பிடிக்குமான்னுதான் தெரியல்லை. :)//

ஹா ஹா.. அண்ணா.. நான் வீரவைணவன் கிடையாது.. கைவசம் ஒரு ஆழ்வார்க்கடியா(ன்)ள் இருக்காரு.. அவரை வேணும்னா முக்கியமா அடுத்தப் பதிவ வாசிக்கச் சொல்றேன்.. :) என்னால முடிஞ்ச நல்ல காரியம் :)

கிருஷ்ண மூர்த்தி S said...

ஆகஸ்ட் இரண்டாம் தேதியான இன்று உங்களுடைய பிறந்த நாள் என்று அறிகிறேன், திரு மௌலி. உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில், அடியவர்களுடைய பிறந்த நாளுக்கு தனி முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. தனது பிறந்த நாளன்று, ஜீவன் இறைவனுக்கு மிக அருகில் வருவதாக, இந்த ஒரு நாளில் விழிப்போடு இருந்தால், பல அல்லது நூறு வருடங்களில் அடையும் முன்னேற்றத்தை, எட்டி விட முடியும் என்று ஸ்ரீ அன்னை சொல்வார்.

சக்தி உபாசனை செய்கிற உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் ராஜ மாதங்கியாக மதுரையில் எழுத்தருளியிருக்கும் மீனாக்ஷி எல்லா நலன்களையும், ஆத்ம தரிசனத்தையும் தந்தருள வேண்டிப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீடூழி வாழ்க! நிறைந்த புகழோடு வாழ்க!

தி. ரா. ச.(T.R.C.) said...

Happy birth day a many more returns TRC

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கிருஷ்ண மூர்த்தி சார், சீனாஅ சார், மற்றும் திராச சார். பெரியவர்களான உங்களது ஆசிகள் என்றும் என்னை வழிநடத்தட்டும். உங்கள் மூவருக்கும் நன்றிகள் பல.

Radha said...

Belated birthday wishes !! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராதா சார். வாழ்த்துக்கு நன்றிகள்.

Siva said...

Excellent posting. Belated Birthday wishes.

Siva

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சிவா சார்.

S.Muruganandam said...

முதலில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மௌலி ஐயா.

அன்னையின் அருட்கருணையை அற்புதமாக அளித்திருக்கின்றீர்கள். தேவார்தமாக இனித்தது. இன்னும் பல அரிய தகவல்கள் தங்கள் பதிவின் மூலம் அனைவரையும் அடைய அன்னை காமாக்ஷி அருள பிரார்த்திக்கின்றேன்.

S.Muruganandam said...

//இவ்வாறாக சைவ பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் பிருத்வீ க்ஷேத்ரமாகவும், சாக்த பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் ஆகாச தலமுமான காஞ்சியில் விக்ன விநாயகன் அரச குடும்பத்தில் அவதரிக்கிறான்.//

ஒரு புதுத் தகவலைத் தந்திருக்கின்றீர்கள் மௌலி ஐயா. சாக்த பஞ்ச பூதத் தலங்கள் எவை எவை என்று முடிந்தால் கூறுங்களேன்.

Dr.V.K.Kanniappan said...

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

அண்டரும் புகழ்துண் டீரன் ஆண்டுதுண் டீர நாடாய்த்
தண்டகன் பின்ன ராண்டு தண்டக நாடாய்ப் பின்னர்த்
தொண்டைமான் ஆண்டுத் தொண்டை நாடெனத் துலங்கிற் றென்ப
பண்(டு)அயன் படைப்புத் தொட்டுப் பயிலுமித் தொண்டை நாடு.

தொண்டைமானையும், தொண்டை நாட்டையும் பெருமைப்படுத்தும் அருமையான அறுசீர் விருத்தம். தொல்லைநாடி என்று தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.

அன்புடன்,
வ.க.கன்னியப்பன்,
கண் மருத்துவப் பேராசிரியர், (பணி நிறைவு),
தமிழ் ஆர்வலர் மற்றும் கவிஞர்,
மதுரை 18

கைபேசி: 98430 70840
மின்னஞ்சல்: doctorvkk@yahoo.com