Tuesday, April 7, 2009

சாக்தத்திலும், புராணத்திலும், மீனாக்ஷி (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு - 5)


வேத வியாசர் வேதங்களை முறைப்படுத்தியவர், 18 புராணங்களையும் எழுதி நமக்கருளியவர் என்று நாமறிவோம், ஆனால் இவர் மதுரை பற்றியும், மீனாக்ஷி பற்றியும் எழுதியிருக்கார் என்று தெரியுமா?. இவர் செய்த ஸ்கந்த புராணத்தில் ஹாலாஸ்ய மகாத்மியம் என்று ஒரு பகுதி, அதில் அன்னை மீனாக்ஷியை பின்வருமாறு போற்றுகிறார்.

வந்தே ஹாலாஸ்ய நகரீம் வந்தே ஹேமாப்ஜினீமயீ
வந்தே ஸுமின நடனாம் வந்தே சுந்தர நாயிகாம்.


மந்த்ர சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதன்படியாகப் பார்த்தால் அன்னை மீனாம்பிகையே மந்திரிணி, சியாமளா, மாதங்கி என்றெல்லாம் கூறப்படுபவள், அதனால்தான் மதுரை மந்திரிணி பீடம், மாதங்கி பீடம் என்றெல்லாம் கூறப்படுகிறது. அன்னை ஆதிபராசக்தியின் கைகளில் இருக்கும் ஒவ்வொரு ஆயுதங்களும் ஒரு சக்தி ஸ்வரூபம் என்கிறது சாக்த சித்தாந்தம். இவ்வாறாக ஒவ்வொரு ஆயுதத்திற்கான சக்திகளைச் சொல்கையில் அன்னை பராசக்தியின் கையில் இருக்கும் கரும்பு வில்லே "சியாமளா" என்று கூறுகிறது சக்தி மஹிம்ன ஸ்துதி. ருத்ர யாமளத்தில் இவளைப் பற்றி 16 நாமங்கள் சொல்லப்படுகிறது. இந்த நாமங்களைப் பார்த்தாலே அவை மீனாக்ஷிக்கும் இருப்பது புலனாகிறது. அவையாவன:
சங்கீத-யோகினி, வீணாவதி, சியாமா, வைணிகீ,
சியாமளா, முத்ரிணி, மந்திர-நாயிகா, பிரியகப்ரியா,
மந்திரிணி , நீபப்ரியா, சசிவேசானி, கதம்பேசீ,
ப்ரதானேசீ, கதம்பவன-வாஸினி, சுகப்பிரியா, ஸ்தாமதா



இந்த நாமங்களை முத்துஸ்வாமி தீக்ஷதர் தமது க்ருதிகளில் மிக அருமையாகக் கையாண்டிருக்கிறார். இவர் முக்தியடையும் நேரத்தில் பாடிய பாடல் "மீனாக்ஷி மேமுதம்" என்னும் கமகக்ரியா என்னும் ராகத்தில் உள்ள பாடல் இன்றும் இவரது ஆராதனையில் பாடப்படுகிறது. இதே போல "மாமவ
மீனாக்ஷி" என்னும் வராளி ராகத்தில் அமைந்த க்ருதி, மற்றும் "மாதங்கீ" என்று ஆரம்பிக்கும் ராம-மனோகரியில் அமைந்த க்ருதிகள் மதுரையில் தரிசனம் செய்கையில் திக்ஷிதர் செய்ததாகச் சொல்வர்.

இதேபோல, அகஸ்தியர் மீனாக்ஷியைப் பணிந்து "யோக மீனாக்ஷி ஸ்தோத்ரம்" என்ற பெயரில் ஸ்லோகம் ஒன்று செய்திருக்கிறார். மிக அபூர்வமான மந்திரப் பிரயோகங்கள் நிறைந்த 16 ஸ்லோங்கள் கொண்டது இது. அந்த ஸ்லோகத்திலும் இந்த நாமங்கள் பற்றிய குறிப்புக்களை உணர்ந்து கொள்ள முடிகிறது. பின்னர் ஒருமுறை இந்த ஸ்தோத்ரத்தை தனி இடுகையாக எழுதுகிறேன்.

ஆதிசங்கரர் மீனாட்சி தேவியை துதித்து மீனாட்சி பஞ்சரத்தினமும், மீனாட்சி அஷ்டகமும் அருளியிருக்கிறார்கள். பல சங்கர மடங்களாலும், ஆதினங்களாலும் சிறப்பிக்கப்பட்ட தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் தனது கண்பார்வை பாதிக்கப்பட்ட சமயத்தில், அன்னை மீனாட்சியின் மேல் 15 ஸ்லோகங்கள் செய்து தனது கண்பார்வை பெற்றதாக வரலாறு. இன்றும் அந்த ஸ்லோகங்கள் பலரது கண் பார்வைக் கோளாறுகளுக்கு பிரார்த்தனை மந்திரமாக இருக்கிறது.

கடந்த 100-150 வருடங்களுக்கு முன்னர் சிருங்கேரி ஆசார்ய பரம்பரை குரு ஒருவர் க்ஷேத்திராடனம் வருகையில் மதுரையில் முகாமிடுகிறார். அப்போது அவர் மீனாக்ஷி தரிசனம் செய்து, கர்பகிரஹத்தி தமது கைகளால் பூஜிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். தரிசனம் செய்வது சரியென்றும் ஆனால் யதிகள் கர்பகிரகத்துள் சென்று பூஜை செய்வது மதுரைக் கோவிலில் வழக்கமன்று என்று கூறி அனுமதி மறுக்கின்றனர். அப்போது அந்த ஆசார்யார் தமது தபோ பலத்தால் அன்னையை ஓர் கலசத்தில் ஆவிர்பகிக்கச் செய்து பூஜா முறைகளை வழுவறச் செய்கிறார். இதன் காரணமாக கோவில் சோபையிழந்து, துர்-சகுனங்கள் ஏற்படுகிறது. பட்டர்கள் கனவில் வந்த மீனாக்ஷியம்மன் ஸ்ரீ ஸ்வாமிகளை கர்பகிரஹத்தில் அனுமதிக்காததால் தாமே அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டதாகவும், ஸ்ரீ ஸ்வாமிகளிடத்து மன்னிப்புக்கோரிட வேண்டும் என்று கூறுகிறாள். அதன்படியே பட்டர்கள் செய்ய, ஸ்ரீ ஸ்வாமிகள் கோவிலுக்கு வந்து தமது கலசத்தில் ஆவிர்பகித்திருந்த அன்னையை கர்பகிரகத்தில் உள்ள சிலா ரூபத்திற்கு எழுந்தருளச் செய்கிறார். இதன் பிறகே இக்கோவிலில் ஸ்ரீ ஆசார்யர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகச் செவிவழிச் செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன்.

குழந்தையானந்த ஸ்வாமிகள் ஒரு அவதூதர். இவர் சிறுவயதில் தாய்-தந்தையரை இழந்து அம்மன் சன்னதியில் வளர்ந்ததாகவும், அம்மனே அவரை வளர்த்ததாகவும் சொல்வார்கள். சிறுவயதில் இவர் கோவிலிலேயே தங்கியிருப்பாராம். கோவில் பிரசாதங்களை உண்டு வளர்ந்தார் என்றும், கோவிலைப் பூட்டும் போதும் இவர் அம்மன் சன்னதி அருகில் பூக்கட்டும் மண்டபத்திலேயே (மடப்பள்ளி அருகில்) இருப்பாராம். இவரது ஜீவ சமாதி இன்றும் காளவாசல் அருகில் இருக்கிறது. இவரது ஜீவ சமாதியின் மேல் மேரு பிரதிஷ்ட்டை ஆகியிருக்கிறது. இங்கு நடக்கும் ஆவரண பூஜைகள் மிக அருமை, மிகுந்த சான்னித்யம் உள்ள இடம்.

தாய்-தந்தை இழந்த ராகவேந்திர ஸ்வாமிகள் தனது இளமைக்காலத்தில் தனது சகோதரியுடன் மதுரையில் வசித்துள்ளார். அப்போது அவர் தமது சகோதரியுடன் காலை-மாலை இருவேளைகளும் அன்னையை தரிசிக்க வருவாராம். இவர் வசித்த அந்த வீடு இன்றும் தளவாய் அக்ரகாரத்தில் இருக்கிறது. ஸ்ரீ ராகவேந்திரர் பூஜித்த சாளக்கிராமங்களும், அவர் பயன்படுத்திய பூஜா பாத்திரங்களும் இன்றும் இவ்வில்லத்தில் காணலாம்.

ரமணர் தமது இளமைக் காலத்தில் மதுரையில் இருந்திருக்கிறார், அப்போது அன்னை மீனாக்ஷியை தரிசித்துள்ளார். இன்றும் தெற்கு கோபுரவாசலில் இருந்து நேராகச் செல்லும் தெருவில் அவர் வசித்த இல்லம் ரமண மந்திரமாக இருக்கிறது. அங்கே தியானம் போன்றவை செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ரமணர் திருவண்ணாமலை செல்லுவதற்கான உத்தரவு மதுரையில், இந்த இல்லத்தில் இருக்கும் போதே கிடைத்ததாகச் சொல்வர்.

காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி என்று சொல்வது போல, மதுரை வீதிகளில் நடந்தாலேயே முக்தி என்பர். மதுரையின் அமைப்பே பாலா திரிபுரசுந்தரியின் சக்ர ரூபம் என்பதாகச் சொல்வர். அப்படியுள்ள சக்ர ரூப நகரின் மத்தியில் வாசம் செய்து நம்மையெல்லாம் கடாஷிக்கும் அன்னை சுமீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பாதம் பணிவோம்.

9 comments:

Geetha Sambasivam said...

ரமணரை விட்டுட்டீங்க. :)))) அடுத்த பதிவிலே வருமோ??

Geetha Sambasivam said...

எங்கே போனாலும் இப்போ மதுரை தான்! :D

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா...

ரமணர் இருக்காரே?, கடைசிக்கு முந்தின பாராவில்?. இதுக்குத்தான் முழுசா படிச்சுட்டு பின்னூட்டணுமுன்னு சொல்றது.. :-)

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, அ.வ.சி. கமெண்ட் கொடுத்ததுமே கவனிச்சேன், ஆனால் திருப்பி எப்படி கமெண்டை வாங்கறதுனு புரியலை! :))))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

காதம்பரீ பிரியாயை கதம்ப
காநநாயை நமஸ்தே நமஸ்தே 11
மாதுர்ய வாக்ப்ரத நிபுணயை
மதுகைடப பஞ்ஜநாயை11

ஸதாசார ப்ரவர்தகாயை
ஸந்நுத குருகுஹ வைபவாயை
விதி தோஷித ஸோமஸுந்தரேஸ்வர
ஸம்மோஹநகர்யை ஷ்ரீ

மதுவில் பிரியம் கொண்டவளுக்கு, கதம்பவனத்தில் இருக்கும் மீனாக்ஷிக்கு,நமஸ்காரம் நமஸ்காரம்.
இனிமையான வாக்கை அருளுவதில் திறமைசாலிக்கு, மதுகைடபர்களை வதைத்தவளுக்கு,மீனாக்ஷி தேவிக்கு நமஸ்காரம். நற்பண்புகளைத் தூண்டி விடுபவளுக்கு,குருகுஹன் துதிக்கும் பெருமையுள்ளவளுக்கு,ப்ரம்மனால் மகிழ்விக்கபட்ட சோமசுந்தரேஸ்வரரை உடனடியாக மோஹம் கொள்ளச் செய்யும் ச்ரீ மீனாக்ஷிக்கு நமஸ்காரம் மீண்டும் நமஸ்காரம்

மொத்த மதுரை மீனாக்ஷி தகவல்களையும் சாரமாக பிழிந்து கொடுத்து விட்டீர்கள். நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

காதம்பரீ பிரியாயை கதம்ப
காநநாயை நமஸ்தே நமஸ்தே 11
மாதுர்ய வாக்ப்ரத நிபுணயை
மதுகைடப பஞ்ஜநாயை11

ஸதாசார ப்ரவர்தகாயை
ஸந்நுத குருகுஹ வைபவாயை
விதி தோஷித ஸோமஸுந்தரேஸ்வர
ஸம்மோஹநகர்யை ஷ்ரீ

மதுவில் பிரியம் கொண்டவளுக்கு, கதம்பவனத்தில் இருக்கும் மீனாக்ஷிக்கு,நமஸ்காரம் நமஸ்காரம்.
இனிமையான வாக்கை அருளுவதில் திறமைசாலிக்கு, மதுகைடபர்களை வதைத்தவளுக்கு,மீனாக்ஷி தேவிக்கு நமஸ்காரம். நற்பண்புகளைத் தூண்டி விடுபவளுக்கு,குருகுஹன் துதிக்கும் பெருமையுள்ளவளுக்கு,ப்ரம்மனால் மகிழ்விக்கபட்ட சோமசுந்தரேஸ்வரரை உடனடியாக மோஹம் கொள்ளச் செய்யும் ச்ரீ மீனாக்ஷிக்கு நமஸ்காரம் மீண்டும் நமஸ்காரம்

மொத்த மதுரை மீனாக்ஷி தகவல்களையும் சாரமாக பிழிந்து கொடுத்து விட்டீர்கள். நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாருங்கள் திராச....

அருமையான பின்னூட்டம், மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

//மொத்த மதுரை மீனாக்ஷி தகவல்களையும் சாரமாக பிழிந்து கொடுத்து விட்டீர்கள். நன்றி.//

வழிமொழிகிறேன். நன்றி மௌலி. நம்ம ஊரைப் பத்தி தெரியாததே இவ்வளவு இருக்கான்னு நினைக்க வச்சுட்டீங்க நீங்களும் கீதாம்மாவும்.

dfds said...

hello bro...realllly ur article is superb. very informative.
//பின்னர் ஒருமுறை இந்த ஸ்தோத்ரத்தை("யோக மீனாக்ஷி ஸ்தோத்ரம்")தனி இடுகையாக எழுதுகிறேன். //
when u r going to write an article on "Yoga Meenakshi Stotaram"?