Showing posts with label கணேசன். Show all posts
Showing posts with label கணேசன். Show all posts

Tuesday, September 22, 2009

தேவீ-மஹாத்மியம் (அறிமுகம்-2) - *நவராத்திரி சிறப்பு இடுகை - 5*



தேவி-மஹாத்மியத்தை முதலில் படிக்கையில் நமக்கு தோன்றுகிறது என்றால், என்னதிது? அம்பிகையை எதிர்க்கும் அளவுக்கு இந்த மஹிஷன், சும்ப-நிசும்பர்கள் பராக்கிரமம் நிறைந்தவர்களா? என்று. அவர்களுடைய சேனாபதிகளின் பலத்தை பார்தாலே தெரியும். முன்பே கூறியது போல ரக்தபீஜன் எனும் சேனாபதி மிகப்பெரிய பராக்கிரமசாலி, மாத்ருகா தேவிகளையே சேனாபதிகளாக உடைய தேவியின் படைக்கு மிகப்பெரும் சவாலாக ரக்தபீஜன் அமைந்தான். வைஷ்ணவி-தேவியும், கெளரியும் சரமாரியாக வாளால் வெட்டியும், சூலத்தால் குத்தியும் அவனை மாய்க்க முயன்றும் முடியவில்லை காரணம், ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தமும் அவனுடலில் இருந்து சிந்தும் போது இன்னொரு ரக்தபீஜனாக எழுந்தனர். கோடிக்கணக்கில் உருப்பெற்றவர்களை கண்டு தேவியின் படையானது திகைத்து நின்றது. சும்ப நிசும்பர்களோ தேவியே திணறும் அளவுக்கு ஆக்ரோஷமாக போர் புரிந்தனர். மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு பராசக்தியிடமிருந்து அன்னை காளிகாதேவி தோன்றி அவனது ரத்த்தை முழுவதும் பானம் பண்ணிதாலேயே அவனை வேரோடு மாய்க்க முடிந்தது. இவளது வாஹனமான சிம்மமோ உறக்க கர்ஜனை செய்து கொண்டும் பிடரி மயிற்றைச் சிலிர்த்துக் கொண்டும் சத்ருக்களின் உடலில் உயிரைத் தேடுவது போல் காணப்பட்டது. இவ்வாறாக 14 படைத்-தலைவர்களையும் நாரஸிம்ஹி, நாராயணி, சிவதூதி, ஐந்தரி போன்ற சக்திகளாக தோன்றி வெவ்வேறு பாணங்களால், வெவ்வேறு நிலைகளில் வீழ்த்தினாள் அன்னை.


யுத்த பூமியெங்கும் ரத்த ஆறும், உடல்களாலான சகதியுமாக காக்ஷியளித்தது. அம்பிகை மிகப்பெரும் பராக்கிரமசாலிகளான சண்ட முண்டர்களையும் வதம் செய்த பின்னர் அந்த கோபம் கண்களில் கொப்பளிக்க "ஸோபி கோபான் மகாவீர்ய குரஸுண்ண மகீதல: ச்ருங்காப்யாம் பர்வதானுச்சாம்- ச்சிஷேப ச நனாத ச" என்பதாக (மகாவீர்யம் உடையவனும்,பூமியை பிளப்பவனும், கொம்புகளால் உயர்ந்த மலைகளை தூக்கி எறிபவனாகவும்) கோபத்துடன் கர்ஜித்தவாறு வறண்ட பாலைவனத்தின் நடுவே இமய மலையென மகிஷன் வந்து நின்றான். எதிரிகளை உதிரிகளாக்கி புழுதியில் புரட்டியெடுக்கும் எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தான். அவன் படைகளோ பக்தியில்லாத மனத்தில் சூழ்ந்து நிற்கும் இருள் போல் பூமியெங்கும் வியாபித்து இருந்தனர். மாத்ருகா தேவியரின் படையோ வானத்து நட்சத்திர கோட்டம் போல் எண்ணில் அடங்காமல் இருந்தனர், அதன் நடுவே கோடி சூரிய பிரகாசத்துடன் சிம்மவாகினியாய் காலில் தண்டையும், இடுப்பில் யானைத்தோலும், பரசு, பாசாங்குசம், டமருகம், திரிசூலம், சாபம், பாணம், புசுண்டி, சங்கு, சக்கரம், கதை,வில், அக்னிசட்டி என எல்லா ஆயுதங்களையும் தாங்கி கழுத்தில் கபால மாலையும் அணிந்து வெற்றி தேவதையாக காட்சியளித்தாள் சண்டிகை. சண்டிகை லலிதா த்ரிபுரசுந்தரியின் சதுரங்க சேனையின் ப்ரதான தேவதை.


எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் படைத்தவள். இவளே அபராஜிதா (தோல்வியே இல்லாதவள்) என்றும் அழைக்கப்படுபவள். தேஜோவதியின் சிம்மவாகனமானது தனது கர்ஜனையால் நூற்றுக்கணக்கில் அசுர சேனையை கொன்று குவித்தது. அம்பிகையின் ஆர்ப்பரிக்கும் தாக்குதலில் இந்திரியங்கள் இயக்கம் மறந்து அரக்கர்களின் ஈரக்குலை நடுங்க உயிருக்கு பயந்து ஊதப்பட்ட பஞ்சாய் எரிமலையில் விழுந்த புழுவாய் ஏற்றத்தில் இரங்கும் யானையாய் ஜம்புலங்களும் ஒடுக்கம் பெற்று சிங்கத்தை எதிர்த்த ஓநாய்களாக அரக்கர் படையும் அதன் தலைவனும் ஒழிந்து போனார்கள்.


இவ்வாறாக மஹிஷனை ஸம்ஹரித்த தேவியை போற்றி தேவர்கள் துதிக்கிறார்கள், அதிலிருந்து சிலவற்றை கீழே பார்க்கலாம்.

யஸ்யா: ப்ரபாவ-மதுலம் பகவானனந்தோ ப்ரம்மா ஹரச்ச ந ஹி வக்து-மலம்
பலஞ்ச ஸா சண்டிகாகில-ஜகத்பரிபாலனாய நாசாய சாசுப-பயஸ்ய மதிம் கரோது


எவளுடைய அளப்பதற்கரிய பெருமையையும், பலத்தையும் ப்ரம்மா-விஷ்ணு-சிவனாலும் வர்ணிக்க இயலாதோ அந்த சண்டிகை அசுபத்தினால் எற்படும் பயத்தைப் போக்கி அகில உலகையும் பரிபாலிக்க திருவுள்ளம் கொள்ள வேண்டும்.

ஹேது: ஸமஸ்த-ஜகதாம் த்ரிகுணாபி தோஷைர்ந ஜ்ஞாயஸே ஹரிஹராதிபி-ரப்யபரா
ஸ்ர்வாச்ரயாகில-மிதம் ஜகதம்சபூத-மல்யாக்ருதா ஹி பரமா பரக்ருதி ஸ்த்வமாத்யா

உலகனைத்துக்கும் காரணம் நீ; முக்குண வடிவங்கள் உடையவளானாலும் குணத்வேஷம் இல்லாதவள் நீ; ஹரி-ஹரன் போன்ற தேவர்களுக்கும் எட்டாதவள் நீ;எல்லோருக்கும் புகலிடம் நீ;உலகெலாம் தோன்றியது உன்னுடைய அம்சத்தால்; முதன்மையானதும், மாறாததும், உயர்ந்ததுமான மூலப் பிரகிருதி நீ.

மேதாஸி தேவி விதிதாகில சாஸ்த்ர ஸாரா துர்காஸி துர்க பவஸாகர நெளரஸங்கா
ஸ்ரீ: கைடபாரி க்ருதயைக க்ருதாதிவாஸா கெளரீ த்வமேவ சசிமெளலி க்ருத ப்ரதிஷ்டா

ஸகல சாஸ்திரங்களையும் உண்ர்ந்த புத்தி ரூபம் நீ, விஷ்ணுவின் இதயத்தில் வாசம் செய்யும் நீ, சந்திர சேகரனோடு உறையும் கெளரியாகவும் இருக்கிறாய்.

இவ்வாறாக, சப்தஸதியில் உள்ள ஸ்துதிகள் அளவிடாத பலனை தரவல்லது. 5 - வது அத்தியாயத்தில் "யாதேவி ஸர்வ பூதேஷு"- எனத்தொடங்கும் பகுதியால் செய்யப்படும் நமஸ்காரங்கள் பிறப்பில்லா நிலையை தரும் என்று சொல்லப்படுகிறது.

"பலிப்ப்ரதான பூஜாயா மக்னி கார்யே மகோத்ஸவே சர்வம் மமைதஸ்சரித முச்சார்யம்ச்ராவ்யமேவச" - என்பதாக தேவியே சொல்கிறாள். (பலிப்ப்ரதானத்திலும், அக்னிகார்யத்திலும், மகாஉற்சவங்களிலும் இந்த என் சரிதம் வாசிக்கப்பட வேண்டும்) இதனால் தான் எந்த கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் சண்டி பாராயணம் செய்யப்படுகிறது. இந்த பாராயணத்தின் பலனாக அம்பிகை நம் மனதில் உள்ள காம,க்ரோத,மத,லோப,மாச்சர்யங்களை ஒழித்து எல்லா செல்வங்களையும் அருளட்டும்.

யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸ்ம்ஸ்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:



------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: மேலே சொல்லியது மஹிஷ வதம் மட்டுமே, இது போலவே இன்னும் பல அசுரர்களை அன்னை மாய்த்ததும், அப்போது தேவர்கள் அன்னையை துதித்ததும் மஹாத்மியத்தில் இருக்கிறது. அதனை பிறகு ஒரு சமயம் கணேசன் நமக்காக எழுத வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.