Saturday, December 6, 2008

திருநெல்வேலி - சேரன்மாதேவி [நவ-கைலாசங்கள் -3]



நவகைலாசங்களில் பாபநாசத்திற்கு அடுத்ததாக வருவது வானாளாவிய அதிகாரம் கொண்ட சேரன்மா தேவி. நவ-கைலாசங்களில் இரண்டாவது ஊர் இது. நவக்கிரஹங்களில் சந்திரனுக்கான ஊர். இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான ஊர், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு நான் 20 வருடங்கள் முன்பு சென்றிருக்கிறேன்.


கிழக்கு நோக்கிய வாசலுடன், அழகிய சிறு ராஜ கோபுரம் கொண்ட அழகான கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருநாமம் அம்மநாத ஸ்வாமி, அன்னையின் பெயர் ஆவுடைநாயகி. இறைவன் ஸ்வயம்பு மூர்த்தி என்று கூறினார்கள். கோவில் நந்தி, கொடிமரம் என்று ஆகமத்தில் சொல்லியிருக்கும் எல்லா சிறப்புக்களும் உடையதாக இருக்கிறது. கோவிலின் தல விருக்ஷம் ஆல மரம். தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையாருடன் இருக்கிறார். சூரிய-சந்திரர்கள் இறைவனை நோக்கியவாறு காட்சி தருகின்றனர். மதுரைக் கோவிலிலும் இந்தச் சிறப்பினைக் காணலாம். அதாவது சூரிய-சந்திரர்கள் இறைவனைப் பூஜிப்பதாக அமைந்த சன்னதிகள்.


கோவிலின் மேற்கே காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வடமேற்கில் வள்ளி-தெய்வயானையுடன் சுப்ரமண்யர், சண்டீசர், கஜலக்ஷ்மி என்று தென்-பாண்டி நாட்டின் சிவ ஆலயத் தோற்றம் மிக நேர்த்தியாக இருக்கிறது. நித்தியத்துவம் வேண்டிய ரோமச முனிவருக்கு இந்த இடத்தில் தரிசனம் தந்ததாக கோவில் குருக்கள் கூறினார். கோவில் பற்றி தல புராணம் ஒன்று சொல்லப்பட்டது. அதைப் பார்க்கலாமா?.

வானம் பார்த்தபடி இருந்த சிவனுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர் இரண்டு சகோதரிகள். கோவில் கட்டுவதற்கான பொருளை தமது தொழிலான நெற்குத்தும் தொழிலில் பணம் சேர்த்து செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டனர். காலம் கடக்கிறது, மூலஸ்தானம் கட்ட வேண்டி அளவு கூட அவர்களிடத்தில் பொருள் சேரவில்லை. மிகுந்த கவலை அடைந்த சகோதரிகள் ஈசனை வழிபட்டு தமது மனக்குறையை கூறுகின்றனர். ஈஸ்வரன் உடனடியாக மானிட வடிவில் சகோதரிகளது இல்லத்துக்கு வந்து உணவளிக்க வேண்டுகிறார். பெண்கள் பெருமானை அமரவைத்து உணவிட்டனர். நன்றாக உண்டு, பெண்களை வாழ்த்தி, அவர்களது மனதில் நினைத்திருப்பது நிறைவேறும் என்றும் கூறிச் செல்கிறார். அன்றிலிருந்து அவர்களது செல்வ செழிப்பு அடைந்து கோவிலைக் கட்டினர் என்று தல புராணம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சான்றாக அங்குள்ள் தூண் ஒன்றில் இரு சகோதரிகள் நெல் குத்துவது போல அமைந்த சிற்பம் இருக்கிறது.


ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய சோழ அரசர்கள், மற்றும் கோச்சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் ஆகியோர் இக்கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஊரே சேரன்மாதேவி மங்கலம் என்று முற்காலத்தில் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். இங்கே ஐப்பசியில் திருக்கல்யாணமும், மஹா-சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம் போன்ற நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதாம். தாமிரபரணி ஆற்றின் இந்த ஊர் படித்துறையினை வியாச தீர்த்தம் என்றும் கூறுகின்றனர். மார்கழி மாதம் மூன்று நாட்கள் இங்கே எல்லாம் நதிகளும் சங்கமிக்கும் என்று தாமிரபரணி மஹாத்மீயத்தில் கூறப்பட்டுள்ளது. அப்போது அம்ம்நாதர் தீர்த்தவாரிக்கு வருவார் என்று கூறுகின்றனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி !!!
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!

17 comments:

குமரன் (Kumaran) said...

மதுரைக்கோவிலிலும் சூரிய சந்திரர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள் என்று படித்தவுடன் கல்லூரிக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்துவிட்டது. வழக்கம் போல் நண்பர்களுடன் கோவிலுக்குப் போய் சுவாமி சன்னிதியில் சுற்றி வந்து கொண்டிருந்தோம். சந்திரன் சன்னிதிக்கு வந்தவுடன் ஒரு நண்பன் 'ஏன் இங்கே சூரியன் பிரகாரத்தில் தொடக்கத்திலும் சந்திரன் பிரகார முடிவிலும் இருக்காங்க குமரன்?'ன்னு கேட்டான். புராணத்துல இருந்து ஏதாவது சொல்லுவேன்னு நினைச்சானாம். அப்புறம் சொன்னான். 'எனக்குத் தெரியலை'ன்னு நான் சொல்லவும் 'காலையில இருந்து ராத்திரி வரைக்கும் எந்நேரமும் சுவாமியைக் கும்புட்டுக்கிட்டே இருக்கணும்ன்னு சொல்லத் தான் இப்படி வச்சாங்களோ'ன்னான். :-)

குமரன் (Kumaran) said...

அதென்ன வானளாவிய அதிகாரம் கொண்ட சேரன்மாதேவி? புரியலையே?

புருனோ Bruno said...

//அதென்ன வானளாவிய அதிகாரம் கொண்ட சேரன்மாதேவி? புரியலையே?//

முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் திரு.பி.எச்.பாண்டியனின் தொகுதி இது

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன். ஆமாம், மதுரை தவிர இன்னும் சில கோவில்களில் இது போல ஈசன் சன்னதியின் இரு புறங்களிலும் சூர்ய-சந்திரர்களது சன்னதி இருக்கிறது. உங்க நண்பர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான் :)

சேரன்மாதேவியில் இருந்து வந்த ஒரு அரசியல்வாதி தமக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டார். இந்த ஊரை பற்றிய பேச்சு வருகையில் அவரை நினைக்காது இருக்க முடியாது. :-)

குமரன் (Kumaran) said...

ஓ. இப்ப புரிஞ்சது. நன்றி மௌலி & வைத்தியர்.

மெளலி (மதுரையம்பதி) said...

முதல் வருகைக்கு நன்றி டாக்டர் புருனோ. :-)

திவாண்ணா said...

வ்யாஸ தீர்த்தம்தான் கோவிலின் தீர்த்தமா மௌலி? வேறு உண்டா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அம்மநாதர்//

பெயர்க்காரணம் ஏதேனும் உண்டா அண்ணா?

//ஈசன் சன்னதியின் இரு புறங்களிலும் சூர்ய-சந்திரர்களது சன்னதி இருக்கிறது//

நவக்கிரக அமைப்பு படி இப்படி அமையலாமா?
சூரியனும் சந்திரனும் ஒரே கோட்டில் சேர்ந்து வருவது தானே அமாவாசை என்று முன்னர் கண்ணன் விளையாடியது போல் ஆகி விடாதா? :)

//என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!//
=
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி?

Kavinaya said...

//'காலையில இருந்து ராத்திரி வரைக்கும் எந்நேரமும் சுவாமியைக் கும்புட்டுக்கிட்டே இருக்கணும்ன்னு//

ஆமாம், அப்புறம் மறுபடி இராத்திரில இருந்து காலைல வரைக்கும்... :)

//இந்த கோவிலுக்கு நான் 20 வருடங்கள் முன்பு சென்றிருக்கிறேன்.//

நல்லா நினைவு வச்சிருக்கீங்களே :)

அம்மநாத சுவாமி என்ற பெயர் எனக்கு பிடிச்சிருக்கு :) நதியோரம் கோவில்களுடன் அமைந்த ஊர்களில் குடியிருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் போலும். தகவல்களுக்கு நன்றி மௌலி.

ambi said...

நதிக்கு ஒரு கரை சேரன் மகாதேவி. இன்னொரு கரையில் திருபுடை மருதூர். அங்கயும் தீர்த்த வாரி உண்டு.

எந்த மாசம்?னு எங்க அப்பாகிட்ட கேட்டு சொல்றேன். :)


//தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையாருடன் இருக்கிறார்.//


காரைகால் அம்மையார்னா புனிதவதின்னு அழைக்கப்பாட்டங்களே அவங்க தானே? :))

ambi said...

இப்போ மனோஜ் குமார் பாண்டியன் தொகுதியாக்கும் இது. (பி.ஹெச். பாண்டியனின் புதல்வர்)

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரின் சொந்த ஊரும் இது தான்.

யாரு அந்த நீதிபதி? சொல்லுங்க பாப்போம். :))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ்,

தவற்றை திருத்தினதுக்கு நன்றி, பதிவிலும் திருத்திடறேன். அம்மநாதர் பெயர்க்காரணம் சொன்னாங்க மறந்துடுச்சு. :(

இந்த கோவில்களில் நவக்கிரஹம் தனி சன்னதியாக இருக்கிறது. அதைத் தவிர ஈசனுக்கு வணக்கம் தெரிவிப்பது போல அமைந்த தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மெளலி (மதுரையம்பதி) said...

வ்யாச தீர்த்தம் பற்றி தம்பியார் வந்து கமெண்டுவதாகச் சொல்லியிருக்கார் திவாண்ணா. ஆகவே அவர் வரவுக்குக் காத்திருப்போம்... :)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கா. என் நினைவாற்றலை போய் பாராட்டுறீங்களே...ரொம்பவே மறதி ஜாஸ்தி எனக்கு.... :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அம்பி-சார்.

திருப்புடை மருதூர் போன மாதிரி நினைவில்லையே....யாரந்த நீதிபதி, அதை நீங்களே சொல்லிடுங்க...:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//காரைகால் அம்மையார்னா புனிதவதின்னு அழைக்கப்பாட்டங்களே அவங்க தானே? :))//

அழைக்கப் பாட்டங்களே = அழைக்கப் பட்டாங்களே??

புனிதவதி-ன்னு பேரைக் கேட்டவுடன் கிடுகிடு-ன்னு ஆயிடிச்சி போல அம்பிக்கு! கால் மாறி ஆடுறாரே! :)

Anonymous said...

//வ்யாச தீர்த்தம் பற்றி தம்பியார் வந்து கமெண்டுவதாகச் சொல்லியிருக்கார் திவாண்ணா. ஆகவே அவர் வரவுக்குக் காத்திருப்போம்... :)//

இந்த நதியின் எல்லா கரைகளிலும் சிறப்பு வாய்ந்த எல்லா ரிஷிகளும் வந்து நீராடியதாக/நீராடுவதாக நம்பப்படுகிறது. குறிப்பிட்ட ரிஷி சங்கல்ப ஸ்னானம் செய்த படிதுறை அவருடைய பெயரால் போற்றப்படுகிறது.

தம்பி