
நவகைலாசங்களில் பாபநாசத்திற்கு அடுத்ததாக வருவது வானாளாவிய அதிகாரம் கொண்ட சேரன்மா தேவி. நவ-கைலாசங்களில் இரண்டாவது ஊர் இது. நவக்கிரஹங்களில் சந்திரனுக்கான ஊர். இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான ஊர், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு நான் 20 வருடங்கள் முன்பு சென்றிருக்கிறேன்.
கிழக்கு நோக்கிய வாசலுடன், அழகிய சிறு ராஜ கோபுரம் கொண்ட அழகான கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருநாமம் அம்மநாத ஸ்வாமி, அன்னையின் பெயர் ஆவுடைநாயகி. இறைவன் ஸ்வயம்பு மூர்த்தி என்று கூறினார்கள். கோவில் நந்தி, கொடிமரம் என்று ஆகமத்தில் சொல்லியிருக்கும் எல்லா சிறப்புக்களும் உடையதாக இருக்கிறது. கோவிலின் தல விருக்ஷம் ஆல மரம். தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையாருடன் இருக்கிறார். சூரிய-சந்திரர்கள் இறைவனை நோக்கியவாறு காட்சி தருகின்றனர். மதுரைக் கோவிலிலும் இந்தச் சிறப்பினைக் காணலாம். அதாவது சூரிய-சந்திரர்கள் இறைவனைப் பூஜிப்பதாக அமைந்த சன்னதிகள்.
கோவிலின் மேற்கே காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வடமேற்கில் வள்ளி-தெய்வயானையுடன் சுப்ரமண்யர், சண்டீசர், கஜலக்ஷ்மி என்று தென்-பாண்டி நாட்டின் சிவ ஆலயத் தோற்றம் மிக நேர்த்தியாக இருக்கிறது. நித்தியத்துவம் வேண்டிய ரோமச முனிவருக்கு இந்த இடத்தில் தரிசனம் தந்ததாக கோவில் குருக்கள் கூறினார். கோவில் பற்றி தல புராணம் ஒன்று சொல்லப்பட்டது. அதைப் பார்க்கலாமா?.
வானம் பார்த்தபடி இருந்த சிவனுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர் இரண்டு சகோதரிகள். கோவில் கட்டுவதற்கான பொருளை தமது தொழிலான நெற்குத்தும் தொழிலில் பணம் சேர்த்து செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டனர். காலம் கடக்கிறது, மூலஸ்தானம் கட்ட வேண்டி அளவு கூட அவர்களிடத்தில் பொருள் சேரவில்லை. மிகுந்த கவலை அடைந்த சகோதரிகள் ஈசனை வழிபட்டு தமது மனக்குறையை கூறுகின்றனர். ஈஸ்வரன் உடனடியாக மானிட வடிவில் சகோதரிகளது இல்லத்துக்கு வந்து உணவளிக்க வேண்டுகிறார். பெண்கள் பெருமானை அமரவைத்து உணவிட்டனர். நன்றாக உண்டு, பெண்களை வாழ்த்தி, அவர்களது மனதில் நினைத்திருப்பது நிறைவேறும் என்றும் கூறிச் செல்கிறார். அன்றிலிருந்து அவர்களது செல்வ செழிப்பு அடைந்து கோவிலைக் கட்டினர் என்று தல புராணம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சான்றாக அங்குள்ள் தூண் ஒன்றில் இரு சகோதரிகள் நெல் குத்துவது போல அமைந்த சிற்பம் இருக்கிறது.
ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய சோழ அரசர்கள், மற்றும் கோச்சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் ஆகியோர் இக்கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஊரே சேரன்மாதேவி மங்கலம் என்று முற்காலத்தில் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். இங்கே ஐப்பசியில் திருக்கல்யாணமும், மஹா-சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம் போன்ற நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதாம். தாமிரபரணி ஆற்றின் இந்த ஊர் படித்துறையினை வியாச தீர்த்தம் என்றும் கூறுகின்றனர். மார்கழி மாதம் மூன்று நாட்கள் இங்கே எல்லாம் நதிகளும் சங்கமிக்கும் என்று தாமிரபரணி மஹாத்மீயத்தில் கூறப்பட்டுள்ளது. அப்போது அம்ம்நாதர் தீர்த்தவாரிக்கு வருவார் என்று கூறுகின்றனர்.
தென்னாடுடைய சிவனே போற்றி !!!
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!