Saturday, November 12, 2011

ஆகார நியமம் - பகுதி -1

சில மாதங்கள் முன்னர் குழுவில் உணவருந்துதல் பற்றிய கேள்வி வந்தது. அன்றிலிருந்து இந்த இடுகையை இட நினைத்தாலும், நேரமின்மையால் தள்ளிக் கொண்டே வந்தேன். இன்று இதைப் பற்றி நண்பர் ஒருவர் நேரில் பார்க்கும் போது கேள்வி எழுப்பினார். அதன் விளைவே இந்த இடுகை. "ப்ராணே சரீரம் ப்ரதிஷ்டிதம். சரீரே ப்ராண: ப்ரதிஷ்டித:" என்கிறது தைத்ரீயம். நாம் உண்ணும் உணவுக்கும் ப்ராணனுக்கும் தொடர்பு இருக்கிறது. உண்ணும் முறை பற்றிச் சொல்லுகையில் தர்ம சாஸ்த்ரத்தில் பின்வருமாறு சொல்லியிருக்கிறார்கள்.

த்வெளபாகம் பூரயேதன்னம்
தோயெனைகம் ப்ரபூரயேத்
மாருதஸ்ய ப்ரசாரார்த்தம்
சதுர்த்தம் அவசேஷயேத்

அதாவது உணவு உண்ணும் போது அரை வயிற்றுக்கு உண்ணும், கால் வயிற்றுக்கு நீரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.மிச்சமிருக்கும் கால்வயிறு வாயுவிற்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு உண்பதையே ப்ராணாக்னி ஹோத்ரம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எவ்வாறான உணவினை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும், எது உணவாக எடுத்துக் கொள்ளத் தக்கது, எதை உணவாகக் கொள்ளக் கூடாது என்பதை ஆயுர் வேதம் நிர்ணயம் செய்து கொடுத்திருக்கிறது. இதே போல எதை எப்படி உண்ண வேண்டும என்ற முறையையும் ல்லியிருக்கிறார்கள் ஆன்றோர். எந்த உணவை எப்படிச் சமைக்க வேண்டும், அவ்வாறாக முறையாகச் செய்த அன்னத்தையும், அன்ன சுத்தி, பரிசேஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்து உண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

உணவு சமைப்பவரது மனநிலைக்கு ஏற்ப சமைக்கப்பட்ட உணவின் தன்மை மாறும் என்று கூறியிருக்கிறார்கள். சமைப்பவர் எப்படி இருக்கவேண்டும், என்றும் நியமங்கள் வரையறுத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நமது இல்லங்களில் செயற்படுத்திடுவோமானால் நமது சிந்தனையும், இறையனுபவமும் இன்னும் எளிதாகும் என்பதனாலேயே இவ்வளவு சிரத்தையாக எல்லாவற்றையும் நமக்குத் தந்திருக்கின்றனர் பெரியோர்.


முன்னொரு காலத்தில் அஜகரன் என்பவன் சாத்வீகமான உணவுவகைகளை மட்டுமே உண்டு அதன் மூலமாக தனது சரீரத்தை ரக்ஷித்து பின்னாளில் இறையருள் பெற்றான் என்கிறது கதை. அஜகரன் என்றால் மலைப் பாம்பு என்று பொருள். மலைப்பாம்பானது உணவினைத் தேடிச்செல்லாது, அதனருகில் வருவனவற்றை மட்டுமே உண்டு வாழுமாம். அதுபோல விவேகமுள்ளவர்கள் தங்களது உணவில் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் பெரியோர்.



சரி இதெல்லாம் ஸம்ஸ்கிருதத்தில் யாரோ யாருக்கோ எழுதியது, நமக்கேன் என்று விட வேண்டியதில்லை. வேதாந்த தேசிகர் எல்லோருக்கும் எளிதாக தெள்ளு தமிழில் ஆகார நியமம் என்று 20 பாடல்களாகச் சொல்லியிருக்கிறார். இப்பாடல்களில் முதல் 9 பாடல்கள் உணவில் விலக்க வேண்டியதும், சேர்த்துக் கொள்ளத்தக்கதும் பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார். இப்பாடல்களை பலருக்கும் உபயோகமாகும் என்ற எண்ணத்தில் இங்கு 3-4 இடுகைகளாக இடுகிறேன். பாடல்களது பொருள் விளங்கினாலும், சரியாகப் பதம் பிரிக்கத்  தெரியாத காரணத்தால் அப்படியே தட்டச்சியிருக்கிறேன். தேசிகப் பிரபந்தம் என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு இதை எழுதியிருக்கிறேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். 

வாயிலல்லா வாயினால் வந்த சோறும்
 வரகுமுத லாகாதென் றுரைத்த சோறும்
வாயினின்றும் விழுமவைதாம் பட்ட சோறும்
 வாய்க்கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்
தீயவர்கண் படுஞ்சோறுந் தீதற் சோறுஞ்
 சீரையுரை தும்மலிவை பட்ட சோறு
நாய்முதலா நவைபார்க்குந் தீண்டுஞ் சோறு
 நாடூய்தல் லாச்சோறு நண்ணாச் சோறே.

நேர்வழியில்லல்லாது புழக்கடை முதலான வழிகளால் கொண்டுவந்த உணவும், வரகு முதலான தான்யங்களால் ஆக்கியது, வாயில் போட்டுக் கொண்டது போக மீந்து கையில் இருப்பது, கொடியவர்கள் கண்களில் பட்டது, தீய்ந்து போனது, வஸ்த்ரம், எச்சில், தும்மல் போன்றவை பட்டது, நாய் முதலியவற்றால் பார்க்கப்பட்டது அல்லது அவை முகர்ந்தது, தொட்டது மற்றும் ஏகாதசி போன்ற வ்ரத தினத்தில் சமைத்த உணவுகளை உண்ணக்கூடாது என்கிறது இப்பாடல்.


மனிசர்பசு முதலனோர் மோந்த் சோறு
 மனிசர்தமி லாகாதார் தீண்டுஞ் சோறு
மினிமையுட னாதரமில் லாதார் சோறு
 மீப்புழுநூன் மயிருகிர்க ளிருக்குஞ் சோறு
முனிவரெனுந் துவறவறத்தோ ரீந்த சோறு
 முனிவர்தங்கள் பாத்திரத்திற் பட்ட சோறு
மனிசரெலி குக்குடங்கள் காகம் பூனை
 வாய்க்கொண்ட கறிசோறு மருவாச் சோறே.
மனிதர், பசு ஆகியோர் முகர்ந்தது, தொடத் தகாதவர் (ரோகிகள், அசுத்தமானவர்கள்) ஸ்பரிசித்தவை, ஆதுரத்துடன் இனிமையாகப் பேசாதவர்கள் அளித்தது, புழுக்கள், மயிர், நகம் போன்றவை இருப்பது ஆகிய உணவு வகைகளை உண்ணக்கூடாது. ஸந்யாஸி அளித்தது, ஸந்யாஸியின் பாத்திரத்தில் இட்டது போன்றவற்றை உண்ணக் கூடாது. இதில் ஸந்யாஸி அளித்த உணவு என்பது தற்கால மடங்களில் உணவளிப்பதல்ல. மற்றும் ஸந்யாஸிகள் தரும் பிரசாதமான பழங்கள் போன்றவை அல்ல. மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியவை வாயினால் தீண்டிய உணவுகளையும் உண்ணக் கூடாது.


        .............................................தேசிகர் தொடர்வார்

13 comments:

Ashwin Ji said...

நமஸ்தே மௌலிஜீ.
தமிழில் இந்த நியமங்கள் உள்ளன என்பதை இங்கே வந்து படித்த பிறகே அறிந்தேன். அருமையான தமிழில் சிந்தைக்கு நல்விருந்தாக அமையும் என்று நம்புகிறேன். மேலே தொடருங்கள். நான் உங்களைத் தொடருகிறேன். நன்றி.

அஷ்வின்ஜி.

Lalitha Mittal said...

தேசிகரின் அவதாரதினத்தன்று
[இந்த ஆண்டு அக்டோ-ஏழு] அந்த உத்தமரைப்பற்றி பதிவு எந்த வலையிலும் இல்லையே என்ற வருத்தமும் இந்த ஜெனரேஷன் அவரை மறந்து விட்டதோ என்று ஐயமும் ஏற்பட்டது;

இந்தப்பதிவைப்படித்ததும் மனம் அமைதி அடைந்தது.நன்றி!

அவர் சொல்வதைக்கடைபிடிப்பது சில விஷயங்களில் கடினம்தான் என்றாலும் எவ்வளவு பயனுள்ளது என்று புரிகிறது;

சந்நியாசி பற்றிக்கூறியுள்ளது தெளிவாகவில்லை.?

மதுரையம்பதி said...

அஷ்வின் ஜி, வருகைக்கு நன்றிகள். உங்களது ஆகார நியமம் இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது..:)

மதுரையம்பதி said...

வாங்க லலிதா மேடம். வேதாந்த தேசிகரை மறக்க முடியுமா?. அத்வைதக் கோட்பாடுகளை கடைபிடிக்கும் மடங்கள் கூட அவரது படைப்புக்களைப் பாடமாக தங்களது பாடசாலைகளில் கொண்டிருக்கின்றன.

மதுரையம்பதி said...

ஸன்யாஸியிடமிருந்து உணவினை வாங்கி உண்ணுவது தவறு...அதாவது ஸன்யாஸிகள் அடுத்த நேரத்திற்கு என்று உணவைனை சேமிப்பது, மற்றும் தனது ஒருவேளை தேவைக்கு மேலாக யாசிப்பதும் கிடையாது. ஆகவே அவர்களிடத்து உணவை வாங்கி உண்ணக் கூடாது.

gvsivam said...

நமஸ்தே,
அருமையான அவஸ்யமான தகவல்கள்.மேலும் தொடரட்டும்.
நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்லாரைக் காண்பதுவும் அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே

மதுரையம்பதி said...

என்ன திராச சார், ஏதோ பின்னூட்டத்தை மாற்றிக் கொடுத்துட்டீங்க போல :-)

மதுரையம்பதி said...

வாங்க குருக்களே....உங்களது முதல் வருகைக்கு நன்றி...அவ்வப்போது வந்து ஏதாகிலும் தவறுகள் இருப்பின் திருத்துங்கள்.

தேவரீர் எந்த ஊரில், கோவிலில் திருவாராதனம் செய்கிறீர்கள் என்பதைச் சொன்னால் அப்பக்கம் வரும் போது சந்திக்கலாம்.

Jayashree said...

ஒரு குருவோட உச்சிஷ்டம் ?? அது சன்யாஸியோட உணவு தானே? அது ரொம்ப விசேஷமாக சொல்லப்படறதே சில சத் சரித்திரங்களில்!ஒருவேள context ஐ பொருத்ததோ?

மதுரையம்பதி said...

ஜெயஸ்ரீ மா,

நீங்கள் சொன்னது சரிதான்...காண்டெக்ஸ்ட் வேற....

Ashwin Ji said...

மௌலிஜி. என்னை நிறையவே கவுரப்படுத்திவிட்டீர்கள். நம்மை விட மிகப் பெரியோர்க்கு முன்னர் நான் ஒன்றுமே இல்லை. நன்றி.
பணிவான வணக்கங்களுடன்.

அஷ்வின்ஜி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி,
படித்துக் கொள்கிறேன்
தேசிகப் பிரபந்தம் வைஷ்ணவர் வீடு தோறும் இருக்கும் நூல்.
பெரியர்கள் ,எங்களுக்கு முன்னோர் இந்த ஆகார நியமத்தைச் சிறிதும் பிறழாமல் பின்பற்றினார்கள்.
உங்கள் பதிவில் நியமங்களைப் படித்ததும் முன்னோரின் அடக்கமும் பவ்யமும் நேர்மையும் அவர்கள் உண்ணுமாகாரத்திலிருந்தே வந்தது என்பதை நினைவு படுத்துகிறது. அன்பு மௌலி சீரார் தூப்புல் தேசிகர் திருவடிகளுக்கு நமஸ்காரங்கள்.