Monday, December 21, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 2 (கோதாஸ்துதி)


முந்தைய பதிவு இங்கே!

அஸ்மாத்ருசா மபக்ருதெள சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸெள் முகுந்த:!
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மெளளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுரை: ச கிராம் நிகும்பை:!!

தேவி!, சாஸ்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்களைச் செய்வதையே நெடுங்காலமாக கொண்டிருக்கிறோம், இருப்பினும் உனது நாயகனான பெருமாள் எங்களுக்கு அருள்புரிகிறான். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளுவதன் காரணத்தை கவனித்ததில், அதற்கான காரணம் நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிர்ருப்பதே என்று தெரிகிறது. சூடிக்கொடுத்த மாலை மட்டுமின்றி வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழால் பிரபந்தமும் பாடித்துத் துதிக்கிறாய். உனது இந்த பாடல்களாலும், மலர் மாலையாலும் உன்குழந்தைகளாகிய எங்களை தண்டிக்காது அருள்புரிகிறார் பெருமாள்.


சோணாஸ்தரோபி குசயோரபி துங்கபத்ரா
வாசாம் ப்ரவாஹ நிவஹோபி ஸரஸ்வதீ த்வம்!
அப்ராக்ருதைரபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்
கோதபி தேவி கமிதுர் நநு நர்மதாஸி!!

இதுவும் பல நதிகளின் பெயர்களைக் கொண்ட ஸ்லோகமாக இருக்கிறது, சிலேடையாகச் சொல்லியிருக்கிறார் தேசிகர்.

கோதே!, உனது அதரங்கள் செந்நிறமாகவும் (கங்கை), உயர்ந்த கொங்கைகள் உயர்ந்த மிடுக்குடனும் (துங்கபத்ரா), வாக்கில்/சொற்கள் சரஸ்வதியாகவும், உலக பந்தமற்ற பக்தியில் ரஜோ குணமற்றவளாகவும் (விரஜா நதி), நம்பெருமாளுக்கு இயற்கையாகவே உனது சொற்களால் பெருமாளுக்கு பரிஹாசமூட்டுபவளாக (நர்மதை) இருக்கிறாயல்லவா?.

வல்மீகத: ச்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபெளம:!
கோதே கிமத்புதமிதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்த நிபா: ப்ரபந்தா:!!


அம்மா கோதை, பூமியில் உள்ள மண்புற்று பூமாதேவியின் செவி/காது என்று வேதம் சொல்கிறது. நீ பூமிதேவியின் அம்சமாக இருப்பதால் புற்று உனக்கும் காதாகிறது. புற்றாகிய உனது காதில் தோன்றிய வால்மிகி மஹரிஷி அற்புதமான ராமாயணத்தை பாடி கவிச்சக்ரவர்த்தியானார். உனது காதில் தோன்றிய வால்மிகி முதன்மையும், தலைமையும் பெற்றார் என்றால், உனது தாமரையொத்த முகத்தில் தோன்றிய பிரபந்தங்கள் எங்களுக்கு அமிர்தமாக இனிப்பது என்ன ஆச்சர்யம்?.


போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த:!
உச்சாவசைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை:
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா:!!

கோதை, நீ பெண்ணானதால் ஆண்மகனான பெருமாளை பல்வேறு வகைகள் அனுபவித்து மகிழ்வதற்கு உனக்கு உரிமையும், கடமையும், முறையும் இருக்கிறது. ஆனால் உன் தந்தையான பெரியாழ்வார் போன்ற பெரியவர்கள் தாங்களும் நீ பெற்ற அந்த அனுபவங்களைப் பெறவேண்டும் என்றால் இயலுமா?. ஆகவேதான் அவர்கள் தங்களுக்கு இறைவனிடம் இருக்கும் பக்தியையே காதலாக்கி, காதலின் பல்வேறு நிலைகளான பிரிந்து வருதல், கூடுதல், தூதுவிடல் போன்றவற்றை அனுபவித்து அதனை பாடினர். ஆனால் உனது பெருமாளிடத்தான் இயற்கையான காதலின் மூலமாக எழுந்த அனுபவங்களை எங்களால் சொல்ல இயலுமோ?.

9 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

படம் தந்துதவிய ராகவ் அவர்களுக்கு நன்றி. :)

Kavinaya said...

இனிமையா இருக்கு. படமும் ரொம்ப அழகு.

எனக்கும் பெண்ணாக இருப்பதே பிடிக்குது :)

நன்றி மௌலி, ராகவ்.

Radha said...

//தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளுவதன் காரணத்தை கவனித்ததில், அதற்கான காரணம் நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிர்ருப்பதே என்று தெரிகிறது.//
:)
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே !!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கா....

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராதா....

குமரன் (Kumaran) said...

சூடிக் கொடுத்த மாலையால் மாலவனைக் கட்டிப் போடுவதும், மதுரமான பாடல்களால் அவனை மயங்கச் செய்வதும், தன் வார்த்தைகளால் முகுந்தனைப் பரிகாசம் செய்வதும் கோதைப் பிராட்டியே உன்னாலே தான் இயலும்!

**

பூமிபிராட்டியாரே தான் கோதைப் பிராட்டி. அதனை அழகாக 'வசுதா' என்றே சொல்கிறார் தேசிகன். பிராட்டியின் திருத்தகப்பனார் ஆன பெரியாழ்வார் தான் கோதையின் குரு. அதனையும் அழகாக 'குரவஸ் த்வதீயா:' என்று சொல்கிறார் வேங்கடநாதன்.

Raghav said...

அடுத்த வாரம் எங்க கோதையைப் பார்க்கச் செல்லும் போது, நீங்க எழுதிட்டு வர்றதப் பத்தி சொல்றேன்.. சரியாண்ணா..

ஜெயநகர் ஆண்டாள் சன்னதியில் திருப்பாவையுடன் கோதா ஸ்துதி பாராயணமும் நடக்கிறது... கேட்கவே அருமையாக உள்ளது.. உங்களால் அர்த்தமும் தெரிந்து மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்....பாடலுக்கான கருத்து உங்கள் எழுத்தில் இன்னும் தெளிவாகிறது....நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ், நீங்க மட்டுந்தான் போவீங்களா?, நானும் போவேன் ஸ்ரீவில்லிப்புத்தூர்...:)


முடிந்தால் இருவரும் சேர்ந்தே போவோம்.., ஏதோ உங்க ரெகமண்டேஷன்ல எனக்கு கொஞ்சம் அதிகமா புளியோதரை/பொங்கல் கிடைக்குமல்லவா?...[நாச்சியார் சன்னதி பொங்கல் இல்லாட்டாலும் பரவாயில்லை, தேசிகர் சன்னதி பொங்கல் கிடைக்குமல்லவா :)]