Saturday, September 26, 2009

தேவி பாகவதம்-புவனேஸ்வரி தரிசனம்-பகுதி-3- *நவராத்திரி சிறப்பு இடுகை - 9*

விஷ்ணு, பிரம்ம-ருத்ரர்களைப் பார்த்துச் சொல்கிறார். இவள்தான் நமக்கெல்லாம் காரணமாயிருப்பவள். எங்கும் நிறைந்தவளாகவும், வேதங்களுக்கு உற்பத்திஸ்தானமாகவும், சகல ஜகத் காரணங்களுக்கும் காரணியாக விளங்கும் ஈஸ்வரி. ஜகத் பிரளயத்தில் இவள் சமஸ்தானமான பிரபஞ்சத்தை சம்ஹரித்து தன்னிடத்து ஒடுக்கிக் கொண்டு விளையாடுகிறாள். இப்போது நாம் தரிசிக்கும் தேவி சர்வ பிஜாக்ஷர ஸ்வரூபிணி, அவள் பக்கத்தில் சர்வாபரண பூஷிதைகளாக இருக்கும் சக்திகள் அனைவரும் அவளது அம்சம். பூர்வ-ஜென்மத்தில் நமது நற்-கர்மங்களினால் அவளைத் தரிசிக்கும் உயர்வினைப் பெற்றோம் என்று கூறுகிறார். மூவரும் அவளருகில் சென்று நமஸ்கரிக்க எண்ணம் கொண்டு விமானத்திலிருந்து இறங்கிச் செல்ல ஆயத்தமாகையில் முற்றிலும் பெண்கள் இருக்கும் இடத்திற்கு ஆண்களாகிய தாம் எப்படிச் செல்வதென்ற எண்ணம் தோன்ற, அப்போது தேவி தன் பார்வையாலேயே அவர்கள் மூவரையும் ஸ்திரீ ரூபமுடையவர்களாக மாற்றினாள். பின்னர் எந்த சங்கோஜமும் இன்றி அவர்கள் தேவியின் சன்னிதானத்தை அடைந்து அவளை நமஸ்கரிக்கின்றனர்.


நமஸ்கரிக்கயில் அவளது திருவடியை நோக்கிய சமயத்தில் கண்ணாடி போன்ற அவளுடைய நகத்தின் மத்தியில் கோடி பிரம்மாண்டங்களையும், அதனதன் திரிமூர்த்திகளையும், திக்-பாலகர்களையும், சப்தசராசர்ங்களையும், சகல கந்தர்வர்கள், கின்னரர்கள், அஸ்வினி தேவதைகள், வசுக்கள், சித்தர்கள், பிதுர் தேவதைகளையும், ஆதி சேஷன் போன்ற மஹா நாகங்களையும் கண்டனர். சிருஷ்டிக்கு உட்பட்ட எல்லாவற்றையும் பார்த்தார்கள். இவற்றைக் கண்டு ஆச்சர்யமுற்று தேவியே எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள் என்று அறிந்து ஆனந்தமடைந்தனர். அக்கோலமே புவனேஸ்வரி கோலம். மும்மூர்த்திகளும் தனித்தனியாக அவளை பலவாறு துதித்து வணங்குகின்றனர்.


நவாக்ஷர ரூபமான தேவியை இவ்வாறு வணங்கிய மும்மூர்த்திகளைப் கடைக்கண்ணால் பார்த்து புன்னகைச் செய்தவளாய் பின்வருமாறு சொல்கிறாள். ஹே, தேவர்களே நானே பராசக்தி, எனக்கும் பரமசிவத்துக்கும் எந்த பேதமும் இல்லை. சர்வசம்ஹார காலத்தில் எல்லாம் என்னிடம் ஒடுங்கும். உத்பவ காலத்தில் புத்தி, சம்பத்து, தைரியம், கீர்த்தி, நினைவாற்றல், சிரத்தை, தீர்க்காலோசனை, தயை, நாணம், பசி, தாகம். பொறுமை, தேஜஸ், சாந்தி, இச்சை, நித்திரை, சோம்பல், நரை, திரை, மூப்பு, ஞானம், அஞ்ஞானம், ஆசை, அபேக்ஷை, பலம். பலவினம். உதிரம், சருமம், நேத்ரம், வாக்கு, பொய், மெய், நாடிகள் என்று புத்தியால் கற்பிக்க்கப்படும் பேத ரூபங்களாக எல்லாமும் நானாகவே இருந்து, அதனதன் செயல்களையும், பலனையும் செய்பவளாக இருக்கிறேன். உலகில் பலஹீனமாயிருப்பவனை அசக்தன் என்று கூறுவது அதனால்தான். என்னிடத்திருந்து பிரிந்திருந்தால் உங்களால் ஏதும் செய்ய இயலாது. இவ்வாறாக கூறி செளந்தர்யவதியாகவும், வெண்மையான ஆடை உடுத்தியவளாகவும் ரஜோ குணத்தை கொண்டவளாகவும் உள்ள மஹாசரஸ்வதி என்னும் சக்தியை தன்னிலிருந்து பிரித்து பிரம்மனுக்கு அளித்து, இச்சக்தியை உன் மனைவியாகக் கொண்டு அவளை உன் மனையாளாக மட்டும் நடத்தாது என் அம்சம் என்று நினைத்து இவளுடன் சத்ய லோகத்தில் சிருஷ்டியை தொடங்க பணிக்கிறாள்.

இவ்வாறே உத்தமமான மஹாலக்ஷ்மியை அழைத்து விஷ்ணுவிடம் சேர்பித்து, என்னுடைய நிமித்தமாக கொடுக்கப்பட்ட இவளை மனைவியாகக் கொண்டு லக்ஷ்மி நாராயணனாக வைகுந்தத்தில் வசிக்கப் பணிக்கிறாள். பின்னர் பிரும்மனைப் பார்த்து, ஹே பிர்ம்மனே, மஹா-விஷ்ணு உன்னால் வணங்கப்படுபவனாக இருக்கட்டும். இவன் சத்வகுண சம்பன்னன் ஆகவே உன்னிலும் மேம்பட்டவன். உலகில் சத்ரு பயமும், அசுர பயமும் ஏற்பட்டும் காலங்களில் இவன் பல ரூபங்களெடுத்து உலகின் கஷ்டங்களை போக்குவான் என்றாள். பின்னர் ருத்திரரைப் பார்த்து மனோகரையாகவும், மஹாகாளியாகவும் விளங்கும் கெளரியை ஏற்றுக் கொண்டு தமோ-குணத்தை பிரதானமாகக் கொள்ளச் செய்து கைலாசத்தில் வாழப் பணிக்கிறாள்.


பின்னர் அவர்களைப் பார்த்து நீங்கள் மூவரும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் முத்தொழிலுக்கு கர்த்தாக்களாக விளங்கி அதனையே ப்ராதான்யமாகக் கொள்ள வேண்டும் மகா சம்ஸ்கார காலத்தில் அண்ட சராசரங்களும் அழியும் காலத்தில் நீங்களும் என்னில் ஐக்கியமடைவீர்கள் நான் ஒடுங்கத் தக்கவள் அல்ல, குணங்களோடு கூடிய காலத்தில் சகுணையாகவும். குணங்கள் விலகிய காலத்தில் நிர்குணையாகவும் விளங்குகிறேன். தத்துவங்களுக்கு எல்லாம் மகத்தான சிவ ஸ்வரூபம் நானே. ஆதியில் நான் அகங்கார தத்துவத்தை உருவாக்கி அதிலிருந்து சத்வம் போன்ற முக்குணங்களையும், மகதத்துவமாகிய புத்தியையும் உருவாக்கினேன். பஞ்ச பூதங்களையும் அவற்றிலிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்களிலிருந்து ஐந்தும், மகத்தும் சேர்ந்த பதினொன்றே பரமசிவம் என்னும் ஆதி புருஷர். அவர்க் நிர்குணமாக எங்கும் வியாபித்தவர்காக இருப்பார். இப்போது நீங்கள் உங்கள் இடங்களுக்குச் செல்லலாம். எப்போது என்னை தியானிக்கிறீர்களோ அப்போது நான் உங்கள் முன்பு பிரசன்னமாவேன் என்று கூறுகிறாள். அக்கணமே அவர்களுக்கான சக்திகளைத் தவிர அந்த தீவே மறைந்துவிடுகிறது. இவர்கள் தங்கள் லோகங்களை அடைந்திடுகின்றனர்.


இந்த தரிசனத்தை பற்றி பிரம்மா நாரதரிடம் கூறி, அன்னையின் அந்த ரூபமே புவனேஸ்வரி ரூபம் என்று கூறியிருக்கிறார். இவ்வாறாக ஆரம்பிக்கும் தேவி பாகவதம், அம்பிகையின் பல திருவிளையாடல்களையும் சொல்கிறது. ஆனால் இந்த நவராத்திரிச் சிறப்பு இடுகைகளில் இத்துடன் தேவி பாகவதம் முடிவுபெறும். பின்னர் வேறொரு சமயத்தில் மற்றதைப் பார்க்கலாம்.



ஸ்ரீ புவனேஸ்வரி மாதா கீ ஜெ!!!

16 comments:

Kavinaya said...

ஸ்ரீ புவனேஸ்வரி தரிசனம் அருமை. மிக்க நன்றி மௌலி.

//இந்த நவராத்திரிச் சிறப்பு இடுகைகளில் இத்துடன் தேவி பாகவதம் முடிவுபெறும்.//

:(((

Kavinaya said...

//எங்கும் நிறைந்தவளாகவும், வேதங்களுக்கு உற்பத்திஸ்தானமாகவும், சகல ஜகத் காரணங்களுக்கும் காரணியாக விளங்கும் ஈஸ்வரி. ஜகத் பிரளயத்தில் இவள் சமஸ்தானமான பிரபஞ்சத்தை சம்ஹரித்து தன்னிடத்து ஒடுக்கிக் கொண்டு விளையாடுகிறாள்.//

எப்படி இப்படில்லாம் எழுதறீங்க! அருமை!

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றிங்க கவிக்கா. நீங்க விடாம தினம் வந்து படிப்பதற்கும் நன்றிகள் பல.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முற்றிலும் பெண்கள் இருக்கும் இடத்திற்கு ஆண்களாகிய தாம் எப்படிச் செல்வதென்ற எண்ணம் தோன்ற, அப்போது தேவி தன் பார்வையாலேயே அவர்கள் மூவரையும் ஸ்திரீ ரூபமுடையவர்களாக மாற்றினாள்//

அந்த பெண் ரூபங்களுக்குக் குறிப்பிட்ட பெயர் எதுவும் உண்டா அண்ணா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஹே பிர்ம்மனே, மஹா-விஷ்ணு உன்னால் வணங்கப்படுபவனாக இருக்கட்டும். இவன் சத்வகுண சம்பன்னன் ஆகவே உன்னிலும் மேம்பட்டவன்//

பிரம்மா ரஜோ குணமா?

ருத்ரன் தமோ குணம் என்றால் அது அவர் குணம் அவரே கொண்டதா இல்லை தேவி அந்தக் குணத்தை அவருக்கு விதிக்கிறாளா?

மும்மூர்த்திகளின் குணம் இவை என்றால், இவர் தம் பத்தினித் தெய்வங்களும் அதே குணம் கொண்டவர்கள் தானா?

குமரன் (Kumaran) said...

அன்னை புவனேஸ்வரியின் திருவடிகளை வணங்குகிறேன்.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்.

வைணவத்திலும் பிரம்ம விஷ்ணு ருத்ரர்களுக்கு இதே குணங்கள் தானே சொல்லப்படுகின்றன. நீங்கள் படித்திருப்பீர்களே.

Radha said...

தெரிந்து கொண்டே கேள்வி கேட்பவர்களுக்கு பொறுமையாக பதில் சொல்வது எப்படி என்று குமரனிடம் கற்றுக் கொள்ள வேண்டும். :)
மௌலி அண்ணா,
தேசிகர் பற்றி எழுத ஆசை கொண்டுள்ளீர்கள் என்று கண்ணன் பாட்டு பதிவில் படித்து தெரிந்து கொண்டேன்.
(அங்கு பின்னூட்டம் இட்டு உள்ளேன்.) ஒரு வாழ்நாளுக்கு பதிவு இடும் வகையில், ஆறே ஸ்லோகங்கள் கொண்ட "வைராக்கிய பஞ்சகம்" முதல் ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்ட பாதுகா ஸஹஸ்ரம் வரை தேசிகரது படைப்புகள் நிறைய உள்ளன. வாழ்த்துக்கள் ! :)
~
ராதா

Radha said...

புவனேஸ்வரிக்கு நமஸ்காரம் !

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி ராதா. ஆமாம், தேசிகர் பற்றி தேடிப் படித்தும், பலர் மூலம் கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். ஆனால் எழுதக் கொஞ்சம் தயக்கம் அதிகமாகவே இருக்கிறது.

Geetha Sambasivam said...

அருமையான தரிசனம், கொடுத்தமைக்கு நன்றி. போன நவராத்திரியில் படிக்க, எழுத முடியாமல் போச்சு, இந்த நவராத்திரியில் தாமதமாகவாவது படிச்சுட்டேன். அரியர்ஸ் க்ளியர். மார்க் போட்டுடுங்க. டிஸ்டிங்க்ஷன் வேணும்! :))))))))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா....லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவீங்க போல :)

டிஸ்டிங்க்ஷன் அளவுக்கு மார்க் வாங்கினாலும், அரியர்ஸ், அரியர்ஸ் தான் :)

vijayaragavan said...

As usual a belated reply from me :)
உணர்ச்சி வசப்பட வைக்கும் விஷயம்.
இப்போ சொல்லுவதை பதிவு பண்ணும் உரிமை
உங்களுக்கே (obviously).

அம்பாள் - அடைவது - உணர்வது - இதற்கு
பெரும் தடை காமம். அவள் தாம் அதற்கும்
காரணம் என்றாலும் அவள் பிள்ளையான
கணபதி இருந்தால் - அடைந்தால்- முதல்
GATE பாஸ்.
மேலே செல்ல செல்ல இன்னும் அது பிரச்சனை
தரலாம்.
இப்போ அவளாண்ட ஒரு விண்ணப்பம் வைக்கலாம்
"பேசாம என்னை ஒரு பொண்ணா மாத்திடேன்!?"
"எனக்கு பெண்மை குணம் வருவதால் ஒன்னும்
பிரச்சனை இல்ல (ஐந்கார குறுக்கம் :) ) "
"உன் கிட்டே இருப்பதை விட ஒரு சந்தோஷம்
உலகத்திலே இல்லை, அதை எப்படி விவரிப்பேன்!
சரஸ்வதி உன் ஒரு அம்சம் தானே! முழுவதும் நீ
இல்லையே! அப்புறம் எப்படி அவளாலே உன்னை
நான் விவரிப்பேன்? ஒரு பெண்ணாக இருக்கிறதாலே
நான் உன்னுடன் உறைந்தால் எனக்கு அதுவே போதும்"

".."தூங்கிக்கண்டார் சிவ லோகமும் தன்னுள்ளே
தூங்கிக்கண்டார் சிவ யோகமும் தன்னுள்ளே
தூங்கிக்கண்டார் சிவ போகமும் தன்னுள்ளே
தூங்கிக்கண்டார் நிலை அறிவதேவாறே?"
அப்படின்னு திருமூலர் சொல்லுறார், அவர்
சொல்லுறது சிவனை , சிவனும் நீயும் வேறல்ல
என்று நீயே சொல்லுற ..."
"அச்சிந்தைவா பரம் தியானம் " அப்படின்னு ஆச்சாரியாள்
சொல்லுறா. அந்த சிந்தனை இல்லாத இடமும் உன் வாசஸ் தலமே "
..............
இதெல்லாம் நான் எங்கேயோ படித்ததல்ல ....
ஒரு உணர்ச்சி தாம்.
நான் உணர்ந்தது ஒரு nano literil nano -vil oru pangai vida kuraivu...
இதற்கே இப்படி என்றால் முழுவதும் அவள் கருணை
காட்டிவிட்டால்...

Geetha Sambasivam said...

//ஒரு உணர்ச்சி தாம்.
நான் உணர்ந்தது ஒரு nano literil nano -vil oru pangai vida kuraivu...
இதற்கே இப்படி என்றால் முழுவதும் அவள் கருணை
காட்டிவிட்டால்...//

தேவி உபாசகர்????? அருமையாய்ச் சொல்லி இருக்கீங்க!



//அவள் தாம் அதற்கும்
காரணம் என்றாலும் அவள் பிள்ளையான
கணபதி இருந்தால் - அடைந்தால்- முதல்
GATE பாஸ்.//

இது தான் முதல்லே தாண்டணும். இந்த ஜன்மாவில் நடக்கிறதா??? புரியலை! என்றாலும் நன்கு உணர்ந்து கொடுத்திருக்கும் பகிர்வுக்கு நன்றி.

vijayaragavan said...

எப்படியோ அவள் ஸ்கூலில்
சேர்த்துக்கொண்டாள். பிள்ளைக்கு
படிப்பில் ஆர்வம் இருக்கு ஆனால்
படிப்பு தாம் ஏறமாட்டேன்கிறது.
கை பிடித்து தூகிவிட சில கருணா மூர்த்திகள் உள்ளனர். இக்குழந்தை அவர்கள் கை உதறி விளையாட்டாக ஓடுகிறது ...அவர்களும் வேறு புலப்பின்றி மீண்டும் வருகிறார்கள்...

கணபதி உபதேசம் ஆகி 1.5 வருடம் ஆகி விட்டது இன்னும் சித்திக்க வில்லை ):)
சில முறை அம்பாள் பூஜா மூலம்
சில communication கிடைததும் உண்டு... எனக்கே ஆச்சரியம் ஏனென்றால் இதிலெல்லாம் நம்பிகை அற்றவனாக இருந்ததுண்டு...
"அவளுக்கு ஏன் இந்த வேலைகளோ? :) "

குரு இல்லை என்றால் இது அத்துனையும் மிகக்கடினம்

Geetha Sambasivam said...

//எனக்கே ஆச்சரியம் ஏனென்றால் இதிலெல்லாம் நம்பிகை அற்றவனாக இருந்ததுண்டு...
"அவளுக்கு ஏன் இந்த வேலைகளோ? :) "//

நிச்சயமாய் எனக்கு ஆச்சரியமாய் இல்லை. இப்படி நம்பிக்கை அற்ற பலரையும் உறவினராய், நண்பராய்ப் பார்த்துவருகிறேன். ஆரம்பத்திலே இருந்து இறை நம்பிக்கை உள்ள என் போன்றவர்களை விட, நீங்களே அனுபவத்திலும், தவத்திலும், ஞானத்தையும், யோகத்தையும் பெறுவதிலும் தன் முனைப்போடு இருக்கின்றீர்கள். வாழ்த்துகளும், பாராட்டுகளும். கணபதிராயன் அவனிரு காலைப் பிடியுங்கள். குணமுயர்ந்து விடுதலை கூடி மகிழ சித்திப்பான். மிக்க நன்றி. பகிர்தலுக்கு.