Wednesday, January 30, 2008

வேத வியாசர்..




மனிதன் மன நிறைவுடன் வாழ வழிகாட்டுவது வேதங்கள். உலகில் உள்ள கலைகள் எல்லாம் வேதத்தில் அடக்கம். அப்படி சிறப்பான வேதத்தை காத்து நமக்களித்தவர் வேத வியாசர். தெய்வத்தை நம்பி தெய்வ பலத்தால் வாழ்க்கை கடைத்தேற வழி காண்பித்தவர் வியாசர். மஹா பாரதத்தை நமக்கு அளித்தவர்.

தக்ஷிணா மூர்த்தியை ஆதி குரு என்கிறோம். வியாசரோ விஷ்ணு அம்சம், இதுதான் "வியாசாய விஷ்ணு ரூபாய: வியாச ரூபாய விஷ்ணவே". இவரை இந்து மதத்தின் எல்லா பிரிவுகளும் ஆதி குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்தான் நமக்கு வேதங்களை பிரித்து தந்தவர். இவர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு சங்கரர், ராமானுஜர், மாத்வர், ஆகியோர் மிக அழகாக பாஷ்யம் பண்ணி தங்களது மத கோட்பாடுகளை நிறுவிச் சென்றுள்ளனர்.


குரு என்று சொல்லும் போது நாம் தக்ஷிணா மூர்த்தியிலிருந்து ஆரம்பிப்பது கிடையாது. ஸ்ரீமன் நாராயணனை முதலாக கொண்டே எல்லா குரு பரம்பரையும் ஆரம்பிப்பதை காணலாம். அப்படி வருகையில் இரண்டாவதாக வருவதே வியாசர். இன்றும் இந்தியாவில் இருக்கும் எல்லா சன்யாசிகளும் தமது சாதுர் மாஸ்ய விரத சங்கல்பத்தில் வியாசரை முன்னிறுத்தி அவரிலிருந்து தமது குரு வரையில் இருப்பவர்களை பூஜிப்பத்தை பார்த்திருக்கலாம். இப்படியாக பெயர் பெற்ற குரு வியாசரை மனதில் நினைத்து இந்த பதிவினை தொடங்குகிறோம்.


பி.கு: இந்த வலைப்பூ எந்த ஒரு குறிப்பிட்ட ஆச்சார்ய பரம்பரையை மட்டும் சார்ந்ததாக இருக்காது. இந்துமததின் எல்லா குருமார்கள் பற்றியும், அவர்களது உபதேச கருத்துக்களையும் சொல்வதாக இந்த வலைப்பூவை கொண்டு செல்ல உத்தேசம். குருவருள் துணை செய்யட்டும்.

Tuesday, January 29, 2008

க்ஷிப்ர ப்ரஸாதிநி, சதுரங்க பலேஸ்வரி


க்ஷிப்ரம் என்றால் சீக்கிரம் விரைவு என்று பொருள். திருஞான சம்பந்தர் அழைத்தவுடன் வந்து ஞானப்பால் தந்த அன்னையை "விரைவாக வந்து அருள்புரிபவள்" என்பதைத்தான் க்ஷிப்ர ப்ரஸாதிநீ என்கிறது சஹஸ்ர நாமம். இராமனிடம் சரணாகதி அடைய வந்த விபீஷணன், 'நிவேதயதமாம் க்ஷிப்ரம்' என்கிறானாம். இதற்கு 'என் சரணாகதியினை உடனடியாக தெரிவியுங்கள்' என்பது பொருள்.

காளிதாஸன் மிகப் பெரிய கவிஞன் மட்டுமல்ல சிறந்த சாக்தனும் கூட. அந்த காளிதாசனை ஓரே இரவில் திடிரென கவிஞனாக்கியவள் அன்னை. காளிதாசனும், ஞான சம்பந்தரும் மட்டுமா?, அபிராமி பட்டர் 100 பாடல்களை பாடி முடிக்கும் முன் அம்மாவாசை இரவில் பூர்ண நிலவினை காட்டிய அருளியவள் அல்லவா?.



பாஸ்கர ராயர் பற்றி சாக்தர்களுக்கு தெரியாமல் இருக்காது. லலிதா சஹஸ்கர நாமத்துக்கு பாஷ்யம் அருளியவர்களில் ஒருவர். இவரது ஏழ்மையினை போக்கியதும் திடிரென ஒரு பகல் பொழுதில் தான். இவர் பூஜித்த மஹா மேருவை இன்றும் பாஸ்கர ராயபுரத்தில் அவரது பூர்விக இல்லத்தில் காணலாம்.



ஒரு நாள், கையிலாயத்தில் அன்னையும், அப்பனும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தார்களாம். அதில் அம்பிகை ஜெயித்து விடுகிறாள். ஆனால் நடுவராக இருந்த திருமாலோ ஈசன் வெற்றி பெற்றதாக அறிவித்து அன்னையிடம் வாங்கி கட்டிக்கொள்கிறாராம். அப்போது அன்னை திருமாலை பாம்பாக பிறக்க சபித்து விடுகிறாளாம். இந்த சாபம் தீர நாராயணன் திருவாலங்காட்டில் பாம்பாக ஜெனித்து தவமியற்றி விமோசனம் அடைந்தது புராணம். இந்த புராணத்திலிருந்து அன்னைக்கு ஒரு நாமம் தோன்றியது. அந்த நாமமே 'சதுரங்க பலேஸ்வரி என்பது.

Monday, January 28, 2008

ராஜ மாதங்கி


தச மஹா வித்யையில் ஒன்பதாவது ஸ்வருபமாக வருபவள் ராஜ மாதங்கி. இந்த அன்னையே ராஜ ஸ்யாமளா என்றும் அழைக்கப்படுகிறாள். சாக்தர்களில் சிறந்தவரான மஹாகவி காளிதாஸர் எழுதிய "ச்யமளா தண்டகம்" இவளைக் குறித்து எழுதியதே. அதில் காளிதாஸர்,

மாதா மரகதச்யாமா மாதங்கி மதுசாலினி

சூர்யாத்கடாஷம் கல்யாணி கதம்பவனவாஸினி

ஜய மாதங்கதனயே ஜய நீலோத்பலத்யுகே

ஜய ஸங்கீதரஸிகே ஜய லீலா சுகப்ரியே


என்றும்,


மாணிக்க வீணா முபலாலயந்தீம்

மாதலஸாம் மஞ்ஜுள வாக்விலாஸாம்

மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்

மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி


என்றும் போற்றுகிறார். இவளை உபாசித்தால் வித்தை, தனம் ஆகிய இரண்டையும் அள்ளித்தருவாள் என்பது காளிதாஸரின் வாக்கு.


மதங்கர் என்னும் ரிஷிக்குப் பிறந்த அருந்தவச் செல்வியே இராஜ மாதங்கி. திருவெண்காட்டில் (ச்வேதாரண்யம்) ஆடிமாதம் வெள்ளிக் கிழமையன்று ரிஷி அவர்கள் அங்கிருந்த மதங்க தீர்த்தத்தில் குழந்தையாக கண்டெடுத்த்தாராம். இவளுக்கு ஏழு வயதிருக்கும் போதே மதங்க மஹரிஷி பெண்ணுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டாராம். இதற்காக மதங்கேஸ்வரரை தியானிக்க, ஈஸ்வரரும் சித்திரை மாத சுக்ல பக்ஷத்தில் சப்தமியன்று திருமணம் செய்து கொண்டதாக திருவெண்காடு தல வரலாறு கூறுகிறது.


இவள் அன்னை லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லில் இருந்து தோன்றிய மந்த்ரிணி என்பதாகவும் சொல்லப்படுகிறது. மதுரை மீனாக்ஷியே மந்த்ரிணி ரூபம் என்பதால் மீனாஷியே மாதங்கி ஸ்வருபம் என்றும், தச மஹா வித்தையில் வருபவள் மீனாக்ஷியே என்பர். மீனாக்ஷி பஞ்சரத்னத்தில் ஆதிசங்கரர், "வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரஸிகா" என்று கூறுகிறார். சங்கீத மும்மூர்த்திகளில் ச்யாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துஸ்வாமி திக்ஷதரவர்கள் ஆகிய இருவரும் இவளை கானமூர்த்தி / சங்கீத ரஸிகே என்றெல்லாம் கூறிப்பாடியிருக்கிறார்கள். இவற்றில் ச்யாமா சாஸ்திரிகள் நவரத்ன மாலா என்று 9 பாடல்களை இந்த அன்னை மீது பாடி அதற்கு அங்கீகாரமாக யாளிமுக தம்புரா பரிசாக பெற்றதாக கூறுவர்.

ராஜ மாதங்கியின் அங்க தேவதையான லகுஸ்யாமளா பற்றி கேனோபனிஷதத்தில் குறிப்பு இருக்கிறது. இவளது அங்க தேவதைகளாக 6 தேவதைகள் (ஹசந்தி ச்யாமளா, சுக ச்யாமளா, சாரிகா ச்யாமளா, வீணா ச்யாமளா, வேணு ச்யாமளா, லகுச்யாமளா) கூறப்பட்டுள்ளது. இந்த தேவதைகள் பல கலைகளுக்கு அதிபதி என்பதால் ராஜமாதங்கியை உபாசித்தால் கலைகள் யாவும் தந்திடுவாள் என்கிறார்கள். இப்பெரும் சக்தியினை பற்றி ஸ்ரீசாக்த ப்ரமோதத்தம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம் போன்ற நூல்களில் சிறப்பாக சொல்லப்பட்டு இச்சக்திக்கான மூலமந்த்ரங்களும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இவளை பற்றி சாக்த ப்ரமோதத்தில் கூறுகையில் "காசித் காயனதேவதா விஜயதே வீணாவதி" என்பதாக, உலகிற்கே உரித்தான கான தேவதையாக கூறப்பட்டுள்ளது.


Tuesday, January 22, 2008

அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை



"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,
பசியினால் இளைத்தே வீடு தோறும் இருந்தும்
பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்"


என்று வாழ்ந்த வள்ளலார் ஸித்தி அடைந்த தினம் தைப்பூசம். இவர் தமது வாழ்க்கையின் பெரும் பகுதி சமரஸ சமய ஸன்மார்க்கத்திற்காக (மத நல்லிணக்கம்) பெரும் தொண்டாற்றி அதற்க்காக வடலூரில் சத்ய ஞான சபை என்னும் இயக்கத்தை தோற்றுவித்தார். இவர் எழுதிய எட்டாயிரம் பாடல்களே 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது.இவரது மந்திரமே அருட் பெரும் ஜோதி- தனிப் பெரும் கருணை என்பதாகும். இறைவனை ஜோதி வடிவில் வழிபடவும், தியானம் செய்யவும் தூண்டினார்.


1823-ல் சிதம்பரம் அருகில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார் (அ) வள்ளலார். இவரது தாய், தந்தையர் பெயர் கிருஷ்ணம்மா, ராமையா என்பதாகும். இவர் 30-101-1874 அன்று தாம் நிறுவிய சித்தி வளாகத்தில் சித்தியடைந்ததாகவும், மற்ற ஞானிகள் போல் அல்லாது பூத உடலை பூவுலகில் விடாது, அந்தர்யாமி ஆனதாக சொல்லப்படுகிறது. அவர் தம் கையால் ஏற்றிய விளக்கு இன்றும் வடலூரில் பிரகாசிக்கிறது. இவர் அங்கு நிறுவிய தர்மசாலையில் இன்றும் அன்ன தானம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
நாளை தைப்பூசம். வடலூர் சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் மிக பிரசித்தி. நாமும் இந்த மஹானின் அருளாசியினை வேண்டுவோம்.

Saturday, January 19, 2008

என்ன எழுதுவது? எதை எழுதுவது?

கடந்த சில நாட்களாக மீண்டும் பதிவுகளை வாசித்தாலும், எழுத முனையவில்லை. எழுத நினைத்தவை நிறைய இருக்கிறது. ஆரம்பித்த செளந்தர்ய லஹரி அப்படியே நிற்கிறது. மார்கழிக்கான பதிவுகள் என நினைத்த சில அப்படியே விட்டுப் போயிற்று. புதிதாக தெரிந்து கொண்ட பித்ரு கர்மாவினைப் பற்றிக் கூட சில பதிவுகள் எழுதலாம். புல்லாகி-பூண்டாகி விமர்சனம் கூட எப்படியோ ஒரு மாதிரியாகத்தான் எழுத முடிந்தது. என்ன தவறுகள் இருக்கோ தெரியவில்லை. குமரன் மன்னிப்பாராக. பஞ்ச நதிகளைப் பற்றி எழுத என்று எடுத்த குறிப்புக்கள், மாதங்கீ என்னும் நாமம் பற்றிய குறிப்புக்கள், சில திருமுறை பாடல்களுக்க்கான கதைகளும், கோபால சுந்தரி பற்றியும் எழுத முன்பே நினைத்திருந்தேன்.


ஆனால் மனம் ஒருமித்து ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. அதற்கு சோகம் என்று பெயரிடவும் தெரியவில்லை. ஏதோ அடிமனதில் ஒரு நெருடல். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது என்னளவில் சரி தானோ?. படித்த அத்வைதம் பழக்கத்தில் இல்லாத குறையோ?. என்னமோ பார்க்கலாம்.

Tuesday, December 25, 2007

பரசுராம ஜெயந்தி....



மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் (தசாவதாரம் அப்படின்னு சொன்னா நம்ம மக்கள் கமலஹாசனை தேடக் கூடும்) ஆறாவது அவதாரம் பரசு ராமர் அவதாரம். இன்று அந்த பரசுராமரின் ஜெயந்தி. ஏனோ தெரியவில்லை, கிருஷ்ண ஜெயந்தி போல, ராம நவமி போல இது பிரசித்தமாக கொண்டாடப் படுவதில்லை. நரசிம்ம ஜெயந்தி கூட பல இடங்களில், குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் கொண்டாடுவதை அறிவேன்.


ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் ஐந்தாவது மகனாக பிறந்தவர் பரசுராமன். மிகுந்த பெருமைக்கு உரிய ஸ்ரீவத்ஸ கோத்திர வழக்கப்படி அவருக்கு உபநயனம் மற்றும் வேத அத்யயனம் போன்ற்வை செய்விக்கப்பட்டது. பிருகு முனிவரின் முந்தைய சாபத்தினால் இவரிடம் ஷாத்ர குணம் மேலோங்கி இருந்தது.(இந்த சாபம் இறைவனுக்கு ஏற்பட்டதல்ல, ஆனால் ஜமதக்னியின் தாயால், ஜமதக்னிக்கு அடுத்த தலைமுறைக்கு ஏற்பட்ட சாபம். அந்த தலைமுறையாக ஸ்ரீவிஷ்ணு அவதரிக்கிறார்) அரசர்களுக்கு உரிய எல்லா கலைகளையும் கற்றார். சிவ பெருமானை தினமும் உபாசித்து, தவம் மேற்கொண்டதால், ஈசன் இவரது பக்தியினை மெச்சி தன்கையில் உள்ள மழு என்னும் ஆயுதத்தின் அம்சமாக இன்னொரு மழுவினை தோற்றுவித்து பரசுராமருக்கு தந்தார்.


பதிவிரதைகளில் பரசுராமரின் தாய் ரேணுகாதேவிக்கு தனியிடம் உண்டு. ஆற்றில் குளித்துவிட்டு, அந்த ஆற்று மணலில் குடம் செய்து அதில் நீர் எடுத்து வருவாராம். இவ்வாறான தாய் மீது தந்தைக்கு கோபம் ஏற்பட்டு, தந்தையின் கட்டளையால் தாயைக் கொன்று 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற தர்மத்தை நிலைநாட்டினார். பின்னர் தந்தையின் வரத்தால் தாயை உயிர்பித்தார். தன் தாய் கொல்லப்பட காரணமான சித்ரரதன் என்னும் அரசனையும், அவனது குலத்தை தனது பரசு என்னும் மழூவால் கொன்றார்.


கர்த்தவீர்யார்ஜுனன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாட வருகையில் ஜமதக்னி முனிவரது ஆஸ்ரமத்திற்கு வருகிறான். அங்கு ஜமதக்னியும், ரேணுகாதேவியும் அவனை உபசரிக்கின்றனர். அவர்களிடத்து இருக்கும் காமதேனுவை அபகரிக்கிறான் அரசன். இதனை அறிந்த பரசுராமர், நேராக அரசனிடம் சென்று போரிட்டு கர்த்தவீர்யார்ஜுனனைக் கொன்று காமதேனுவை மீட்டுவருகிறார். கர்தவீர்யார்ஜினனின் மகன்கள் தந்தையை இழந்ததால் பழிக்குப் பழியாக ஜமதக்னியை கொன்றுவிடுகின்றனர். இதன் தொடர்பழியாகத்தான் பரசுராமர் 21 தலைமுறைக்கு க்ஷத்திரிய வம்சம் தலையெடுக்க விடாது அழித்து வந்தது புராணம்.


ஸ்ரீவிஷ்ணுவின் இந்த அவதாரம் 2 யுகங்கள் நிலைத்திருக்கிறது. இராமாவதாரத்தில் ராமச்சந்திர மூர்த்தியால் கர்வபங்கப் படுத்தப்பட்டபின், கிருஷ்ணாவதாரத்தில் கர்ணனுக்கு (அவன் க்ஷத்திரியன் என்று அறியாத வரையில்) வில்வித்தை கற்றுத் தருகிறார். இவர் தனது இறுதிக் காலத்தில் தனது பரசினை தூக்கி எறிந்த இடம்தான் இன்றைய கேரளா. இதனாலேயே கேரளப் பகுதிக்கு பரசுராம க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு. பரசுராமர் பல இடங்களில் கோவில்களைக் கட்டி பூஜித்து தான் செய்த கொலைகளால் தன்னை பிரம்மஹத்தி அண்டாமல் பார்த்துக் கொண்டாராம். அரசர்களை கொன்ற பாவம் தீர மகேந்திர மலையில் தவமிருந்து சிவனிடம் சீரஞ்சீவி வரம் பெற்றாராம்.

எனக்குத் தெரிந்து பரசுராம அவதாரத்திற்கு உண்டான கோவில் என்று ஏதும் தெரியவில்லை. படிப்பவர்கள் யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

Friday, December 21, 2007

மார்கழி நீராட்டு....



பொழுது விடிவதற்கு முந்திய அதிகாலை நேரத்தை பிரும்ம முகூர்த்தம் என்றும் உஷத் காலம் என்றும் சொல்கிறோம். இந்த நேரத்தில் ஸ்நானம்/குளித்தல் என்பது ஆரோக்கியம் என்கிறது ஆயுர்வேதம். ஆயுர்வேதத்திற்கு பெயர் போன கேரளாவில் இன்றும் மக்கள் அதிகாலை நீராடுதலை கடைபிடிக்க காணலாம். விடியலில் நீராட்டுவது சித்தத்தை குளிர வைக்கும், சூடேறிய மூளைப் பகுதி குளிர்ச்சியடைந்தால், சிந்தனை மிக சுறுசுறுப்பாக நடைபெறும். நமது உடலில் ஒன்பது துவாரங்கள் இருக்கிறது. இவை இரவும், பகலும் மலத்தை ஏற்படுத்துகிறது. இரவு உறக்கத்திற்கு பின் உடலை, அதிலிருக்கும் இந்த துவாரங்களைச் சுத்தம் செய்து கொள்ளுதலே இந்த ப்ராத ஸ்நானம். இதனை செய்கையில் அகமர்ஷண சூக்தம் என்னும் பிரார்த்தனை செய்து கொள்ள கூறுகிறார்கள். அகமர்ஷண - என்றால் பாவத்தை ஒழிக்கும் என்று பொருள். இவ்வாறாக உடல் தூய்மை மட்டுமின்றி உள்ளத் தூய்மைக்கும் வழிகாட்டியுள்ளனர் நம் பெரியோர்.



நீராடுதலில் தமிழ் மக்களுக்கு ஒரு விசேஷ விருப்பம் இருந்திருக்கிறது. நெடுங்காலமாக் நீராட்டத்தை தங்கள் இன்ப விளையாட்டுகளில் ஒன்றாக கருதி வந்திருக்கிறார்கள். புது நீராடல், காவிரி ஆடல், கடல் ஆடல் போன்றவை சங்க இலக்கியங்களில் இருப்பதன் மூலமாக அக்கால மக்கள் நீராட்டினை சிறப்பாக கொண்டாடியது தெரியவருகிறது. இக்காலத்தில் நமக்கு ஷெவர் தவிர ஏதும் தெரியாத நிலைக்கு வந்துவிட்டோம். நம்மில் பலருக்கு ஆறு/குளம் போன்றவற்றில் நீராட தெரிவதில்லை. நமக்கு அடுத்த தலைமுறைக்கு, கிணறு என்றாலே என்ன என்று தெரியாது என தொன்றுகிறது. பாவை நோன்பின் பகுதியாக நீராடலும் இருந்திருக்கிறது. இதனை திருவேம்பாவை எப்படிச் சொல்கிறது என்று பார்க்கலாம்.

குளத்தைக் கண்டதும் ஓசை எழும்படியாக தண்ணிரைக் கையால் அடித்துக் குடைந்து நீராட வேண்டும் என்ற ஆசை அப்பெண்களூக்கு ஏற்படுகிறது. மேலும் நீரில் குடைந்து நீராடும்போது இறைவனைக் குறித்து பாடுகிறார்கள். எந்த காரியம்/வேலை செய்தாலும் ஈசனை மனதில் கொண்டிருக்க வேண்டும் என்பதை இவ்வாறாக சொல்கிறார் மாணிக்க வாசகர். இவர்கள் புனல் பொங்க நீராடுகிறார்களாம்.


பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப கொங்கைகள்
பொங்க குடையும் புனல் பொங்க பங்கயப் பூம்புனல்
பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

இவர்கள் குதித்தபோது தண்ணீர் பொங்குகிறது. மேலும் ஒருத்தி " ஐயோ குளிருமே" என்கிறாள். இன்னொருத்தி 'எப்பெருமான் ஆடும் சிதம்பரத்தை நினைத்துக் கொண்டு நீரில் இறங்கிவிடு, குளிர் தெரியாது" என்கிறாள். "சீதப்புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி" சிற்றம்பலத்தில் ஆடும் பெருமானை வாயாரப் பாடி நீராடினால் குளிருமில்லை நடுக்கமும் இல்லை என்பது குறிப்பு.

தண்ணீரிலே ஒருவிதமாக அடிப்பதன் மூலமாக மிருதங்க சப்தம் போன்ற ஒலி எற்படச் செய்வார்களாம். இந்த அபூர்வகலை பற்றி மேலும் அறிய முய்ற்சிக்கிறேன். பாகவதத்தில் ராசலீலையில் இருப்பதாக தெரிகிறது. பார்க்க வேண்டும்.

இதே போல கோதையும் மார்கழி நீராட்டினை தனது பாவை நோன்பின் ஒரு பகுதியாக கொண்டு, "மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்" என்று மார்கழி நீராட்டுக்கு வேண்டுவனவாக சில பொருட்களை குறிப்பிடுகிறார்.

இந்த மார்கழி நீராட்டினை நினைவுபடுத்தும் விதமாக ஸ்ரீவில்லிப் புத்தூரில் கோதை நாச்சியாருக்கு தைலக் காப்பு உற்சவம் நடக்கிறது. இந்த விழாவினை " தண்டியல் சேவை" என்று கூறுகிறார்கள். திருமுக்குளத்தின் ஒருபகுதியில் நீராட்ட மண்டபம் என்றே ஒரு மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் எழுந்தருளும் ஆண்டாள் ஒரு காலை ஊன்றிக் கொண்டும், மற்றொரு காலை தொங்கவிட்டுக் கொண்டும் நிறைந்த தலை முடியினை விரித்துக் கொண்டு இருப்பதும், அந்த முடிக்கு அர்ச்சகர்கள் நறுமணம் கமழும் தலத்தை தேய்த்துவிடும் அழகே அழகு. இது முடிந்தபின் குளக்கரையில் திருமஞ்சனம் நடக்கும். இவ்வாறாக மார்கழியில் இருதினங்களில் இது நடக்குமென தெரிகிறது.