ஒரு சமயம் காசி நகரில் சூக்ஷுமமாக உலா வந்தார்களாம் அம்பிகையும், ஈசனும். பலதரப்பட்ட பக்தர்களும் கங்கையில் ஸ்நானம் செய்து, இறைவழிபாடு செய்வதைக் காண்கின்றனர். அப்போது அம்பிகை ஈசனைப் பார்த்து, "கங்கையில் நீராடினா தமது பாபங்கள் அகன்றுவிடும் என்ற நம்பிக்கையில் இவர்கள் நீராடுகிறார்கள், அப்படி எல்லோருடைய பாபங்களும் அகன்றிடுமா?" என்று கேட்கிறாள். தொடர்ந்து, "இப்படி பாபங்களைப் போக்கிக் கொள்ள முடியுமெனில், மக்கள் பலவித பாபங்களைச் செய்துவிட்டு இங்கு வந்து ஸ்நானம் செய்து தங்களைத் தூய்மையாக்கிக் கொள்வார்களே?, அது சரியா என்றும் கேட்கிறாள்.
மலைமகளது கேள்விகளுக்கு பதிலாக ஈசன் ஒரு திருவிளையாடலைச் செய்ய உத்தேசிக்கிறார். அதாவது பராசக்தியும், பரசிவமும் வயதான தம்பதிக் கோலம் ஏற்று மக்கள் நடுவில் செல்வது என்றும், அப்போது திடீரென அம்பிகை தனது கணவர் நீரில் மூழ்கிவிட்டதாகக் கூறி உதவி கேட்பது என்றும் முடிவாகிறது. அவ்வாறு ஈசன் நீரினுள் (நீரினுள் மட்டுமா இருக்கிறான் அவன்?), இருக்கும் சமயத்தில் காப்பாற்ற வருபவர்களது நம்பிக்கையை அம்பிகை சோதிக்கும் விதமாக கேள்வி எழுப்ப முடிவு செய்கிறாள். [அடக்கடவுளே!, அங்க அவரு நீருக்குள்ள மூச்சை அடைக்கிட்டு இருப்பாராம்,இங்க இந்தம்மா இண்டர்வியூ பண்ணுவாங்களாம்!, என்ன கொடுமைடா சாமி!]
ஆயிற்று, கங்கைக் கரையில் அம்பிகை பெருங்குரலெடுத்து உதவி கேட்கிறாள் தனது கணவனை காப்பாற்ற. பலரும் வருகின்றனர், அப்போது மூதாட்டி ரூபத்தில் இருந்த அம்பிகை, உதவ வந்தவர்களிடத்து ஒரு கோரிக்கை வைக்கிறாள். அதாவது, காப்பாற்ற முன்வந்தவர்களில் யார் பாபமே செய்யாதவர்களோ, அவர்களே தனது பதியைத் தொட்டுக் கரை சேர்க்க முடியும் என்றும், தனது பதி சகல பாபங்களையும் களைந்த புண்ணிய சீலர் என்றும் கூறுகிறாள். உதவ வந்தவர்கள் திகைத்துப் போகின்றனர். எல்லோரும் தாம் செய்த பாப கார்யங்களை நினைத்து தயங்குகின்றனர். அப்போது ஒருவன் மட்டும் சற்றும் தயங்காது நீரில் குதித்து முதியவர் கோலத்தில் இருக்கும் பரமசிவத்தை அணைத்துக் கரை சேர்க்கிறான்.
கிழக் கோலம் கொண்ட மங்கையர்கரசிக்கு ஆச்சர்யத்துடன், கங்கையிலிருந்து ஈசனைக் கரை சேர்த்தவனிடத்தில் "பாபங்கள் ஏதும் செய்யாத ஒருவரே எம்-பதியைத் தொட்டுக் கரைசேர்க்க வேண்டும் என்றேன், பலரும் தயங்கிய நேரத்தில், நீ காப்பாற்றினாய், நீ பாபமே செய்யாதவனா?" என்று கேட்கிறாள். அப்போது, காப்பாற்றிய அந்த பக்தன், 'ஆம், நான் பாபம் ஏதுமில்லாத நிலையிலேயே உங்கள் கணவரைக் காப்பாற்றினேன், ஏப்படியென்றால் கங்கையில் மூழ்கியவுடன் எனது பாபமூட்டைகள் எல்லாம் கழிந்துவிட்டது, பிறகே நான் உங்களது கணவரைப் பிடித்துக் கரை சேர்த்தேன்' என்கிறான்.
அந்த பக்தனுக்கு கங்கை நதியின் மீதும், கங்கையில் நீராடினால் பாபங்கள் விலகும் என்று சொன்ன பெரியோர்கள் மீதும் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை மெச்சி அவனுக்குக் காக்ஷி கொடுத்துவிட்டுச் சென்றனர்.
நம: பார்வதி பதே!
ஹர-ஹர மஹா தேவா!
நம்பிக்கைக் குழுவின் ஆண்டுவிழாச் சிறப்பாக இங்கு இதைப் பதிவு செய்வது மட்டுமே நான், இதைச் செய்தவரைத் தெரியவில்லை.