Showing posts with label கோவிந்த பாதர். Show all posts
Showing posts with label கோவிந்த பாதர். Show all posts

Monday, February 4, 2008

ஆச்சார்ய உபாசனை..



குருவைப் பணிந்து பணிவிடை செய்வது ஞானிகளின் லக்ஷணங்களில் ஒன்று. ஞானிகளின் குணங்களாக தற்பெருமையின்மை, பகட்டின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, தூய்மை, ஊக்கம், அடக்கமுடைமை இவற்றுடன் ஆச்சார்ய சேவையும் கூறப்பட்டுள்ளது.


குருவைப் பணிந்து பணிவிடை செய்வது "சாரீரத்துவம்" என்று கூறப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மா கீதையில், 'தேவர், மறையவர், ஆச்சார்யர், அறிவாளிகள் இவர்களை வழிபடுதலை 'உடல்வழித் தவம்' என்கிறார். ஸ்ரீ வைஷ்ணவத்தில் சாரீரத்துவம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறன்று கேள்விப்பட்டிருக்கிறேன்.



ஆதி சங்கரரும் "குரு சரணாம்புஜ நிர்பர பக்த" என்கிறார். அதாவது குருவைப் பற்றிக் கொள்' என்கிறார். மேலும் 'ஆச்சார்ய தேவோபவ' என்பதிலிருந்து, சங்கரரின் ஆச்சார்ய பக்தி தெரிகிறது. மேலும், எவன் ஒருவன் இறை வழிபாடும், குருவும் இல்லாது இருக்கிறானோ அவனுக்கு மனச் சாந்தி கிட்டாது என்கிறார்.




குருவை ஒரு மத்யஸ்தராகவும் கூறலாம். இறைவனைக் காணும் முன் அந்த திவ்ய தரிசனத்தின் முதல் பகுதியாக குருவைக் காண வேண்டும். பின்னர் அந்த குருவே ஈஸ்வர ரூபத்தை காண்பிப்பார். மனம் சாந்தி பெற குரு அனுக்கிரகம் அவசியம். புலனடக்கம், திருவருள், குருவருள் ஆகிய மூன்றும் இருந்தால் மனச் சாந்தி தானாக சித்திக்கும்.




சரி, சாந்தி, சாந்தி என்கிறேனே, யார்? / எது சாந்தி?. மனது சஞ்சலம் இல்லாமல் இருப்பதுதான் சாந்தி. சலனத்திற்கு எதிர்ப்பதமே சாந்தி. விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், "ஸந்யா ஸ்க்ருத சம: சாந்தோ, நிஷ்டா சாந்தி: பராயணம்" என்று வருகிறது. பகவானே சாந்த ஸ்வரூபி, அதனால் அவனுக்கு "சாந்தன்" என்ற பெயர் உண்டு. சாந்த நிலை என்பது இறைவனே!. அதனாலேயே பிரணவாகாரமாக ஓம்! சாந்தி என்று கூறப்படுகிறது. இந்த சாந்த நிலையினை நமக்கு உணர்த்த, அதனை நோக்கி வழிகாட்ட குரு அவசியம்.






ஆதி சங்கரர் தன் தாயிடம் சன்யாசத்திற்கு உத்தரவு வாங்கிய பின்னர் குருவினை தேடி செல்கையில், நர்மதா நதிக்கரையில் கோவிந்த பகவத்பாதரைச் சந்திக்கிறார். அப்போது கோவிந்த பகவத் பாதர், சங்கரரிடம், 'நீ யார்?' என்று குகையின் உள்ளிருந்தபடியே கேட்க, சங்கரர், நான் உடம்பல்ல, என்று ஆரம்பித்து 10 ஸ்லோகங்களில் அத்வைத சாரத்தைச் சொல்லி விடுகிறார். இந்த 10 ஸ்லோகங்களுக்கு நிர்வாண சதகம் என்று பெயர். அந்த 10 ஸ்லோகங்களை கேட்ட பின் கோவிந்த பாதரால் உள்ளே இருக்க முடியவில்லையாம். வெளியில் வந்து சங்கரரைப் பார்க்கிறார். உடனேயே அவருக்கு சங்கரரிடம் இருக்கும் உயர்ந்த சிஷ்ய குணங்கள் புலனாகிறதாம். பிறகே அவர் சங்கரருக்கு சன்யாசமும் அளித்து சிஷ்யராக ஏற்றாராம். சங்கரரே பரமேஸ்வர அவதாரம், ஆனால் அவரும் கூட குரு வேண்டுமென்று தேடினார் என்பதன் மூலம் குருவின் அவசியம் தெளிவாகிறது.




குருதான் பிரும்மா, விஷுணு, ஈச்வரன் மற்றும் அநாதியாய், பலவாய்,ஒன்றாய் பரம்பிரும்மாவாகவும் இருக்கிறார், அந்த குருவை வணங்குவோம்.