Thursday, June 26, 2008

ஸ்ரீ மாத்வர்



கி.பி 1238ஆம் ஆண்டு, விளம்பி என்ற பெயருடைய வருடத்தில் 32 லக்ஷணங்களும் கூடிய ஒர் ஆண்-குழந்தை வேதவதி-மத்யகேஹ பட்டர் என்னும் தம்பதியினருக்குப் பிறந்தது. இக்குழந்தைக்கு வாசுதேவன் என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை சிரிப்பும், விளையாட்டுமாய் வளர்ந்து வந்தான். ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனை திரும்பக் கேட்டு வந்தான் ஒருவன். அந்த சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன்காரனோ கடனை திருப்பி கொடுத்தாலேயொழிய இங்கிருந்து போகமாட்டேன் என்று தொல்லை செய்கிறான். அப்போது 6 வயதே ஆன குழந்தை வாசுதேவன் வேகமாக சமயலறைக்குச் சென்று அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை தனது சிறுகையில் அள்ளிக் கொண்டுவந்து உனக்கு பணம்தானே வேண்டும் இதோ வாங்கிக் கொள் என்று கடன்காரன் கையில் அளிக்கிறான். புளியங்க்கொட்டைகள் எல்லாம் தங்க காசுகளாக மின்னியதாம். 7 வயதில் குழந்தைக்கு உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பினர். குருகுலத்தில் பாடம் பயிலும் சமயத்தில் ஒரு நாள் ஓர் மலைப்பாம்பு வழியில் படுத்திருக்க, வாசுதேவன் தனது காலால் அழுந்தச் செய்தே அந்த பாம்பை கொன்றான்.

இவ்வாறாக ஒருசில அதிசயமான செய்கைகள செய்த வாசுதேவனது கைரேகைகளை பார்த்த ஒரு பெரியவர் திகைப்படைகிறார். பின்னர் அன்னை வேதவதியிடம் "அம்மா உங்கள் திருக்குமரன் ஓர் அவதார புருஷன். முன்பு வாயுகுமாரனாக ராமயண காலத்திலும், பாண்டவர்களில் பீமனாகவும் இருந்தவர் இவர். இப்பிறவியில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் ஒளிவிசுவார்" என்றார். வாசுதேவனுக்கும் தனது 15ஆம் வயதிலேயே சன்யாசியாகும் எண்ணம் வந்தது. ஆனால் பெற்றோர் பாசம் அவரைக் கட்டுப்படுத்த, ஒருநாள் தன் பெற்றோரிடம், "நான் ஒரே மகனாக இருப்பதால் தானே என்னை சன்யாசம் கொள்ள தடுக்கிறீர்கள்?, உங்களுக்கு இன்னொரு மகன் பிறப்பான் அதன் பின் நான் சன்யாசம் ஏற்கிறேன் என்று கூறுகிறார். அது போலவே வேதவதி-மத்யகேஹ பட்டருக்கு இன்னொரு ஆண் மகவு பிறக்கிறது. அப்போது வாசுதேவன் வயது 16. காஷாயம் தரித்து, இல்லத்தை துறந்து உடுப்பி வந்து அச்சுதப்பிரக்ஞர் என்னும் மகானை குருவாக ஏற்கிறார். அனந்தேஸ்வரர் கோவிலில் சன்யாச தீக்ஷை அளித்து பூரணபிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் என்ற தீக்ஷா நாமம் பெறுகிறார்.

தனது 23ஆம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் இருந்திருக்கிறார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கனவிலேயே உடுப்பி கிருஷ்ணன் விக்ரஹம் தான் இருக்கும் இடம் பற்றிக் கூறி, அதனை மீட்கச் செய்து உடுப்பியில் கோவில் கட்டி எழுந்தருளுகிறார். இன்றும் இவர் ஸ்தாபித்த அஷ்ட மடங்களைச் சார்ந்த சன்யாசிகளே இங்கு பூஜை செய்கின்றனர்.


இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். 'மத்வர்' என்று, அதாவது 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று அழைக்கத் தொடங்கினர் சிஷ்யர்கள். இவர் அளித்த ப்ரம்ம ஞான தத்துவமே த்வைதம் எனப்படுகிறது. இவரது கூற்றுப்படி பரமாத்மாவும்-ஜீவாத்மாவும் என்றும் ஐக்கியமாகாது. இவரது தத்துவங்களை பின்பற்றியவர்களை மாத்வர் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் மாத்வர்களுக்கு ஹரியும் வாயுவும் ப்ராதான்யம், ஏனென்றால் மாத்வர் ஹரிபக்தியில் சிறந்தவர், அதே சமயத்தில் அவரே வாயுகுமாரன் என்பதால்.


மாத்வர் மற்ற சன்யாசிகள் போல ப்ருந்தாவனப் பிரவேசம் செய்யவில்லை. 1317ஆம் வருஷம் மாக சுக்லபக்ஷ நவமியில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு பாடம் நடத்தும் போது திடீரென அவர் மீது புஷ்பங்களால் விருஷ்டி நடந்து அவரை மூடி ஒரு பூங்குன்று உருவாகிறது. இதை அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள், கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள். பிறகு புஷ்பங்களை விலக்கிப் பார்த்தால் மத்வரை காணவில்லை. இவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக நம்பிக்கை. மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளையாடிய இடம் நீராடிய குளம், மலைப்பாம்பு இறந்த இடம் எல்லாம் பாஜகம் என்ற கிராமத்தில் கர்னாடகத்தின் தென் பகுதியில் இருக்கிறது.

1 comment:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இடப்பட்ட இடுகை, அங்கு வந்த பின்னூட்டங்கள் கீழே!.

42 comments:
கீதா சாம்பசிவம் said...
//உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் முழுக்க முழுக்க சாளிகிராமத்தால் ஆனவர்.பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆணையின் பெயரில் விஸ்வகர்மா என்னும் தேவதச்சன் இதைச் செய்து முடிக்கிறான்.
துவாபரயுக முடிவில் தேவகிக்குத் தான் தன் குழந்தையான ஸ்ரீகிருஷ்ணரின் பால லீலைகளைப் பார்க்க முடியவில்லை என்று வருத்தப் படுகிறாள். தன்னைப் பெற்ற தாயின் வருத்தம் தீரக் கிருஷ்ணர் தன் தாயான தேவகிக்கு மீண்டும் பாலலீலைகளை நிகழ்த்திக்காட்டுகிறார். அதை மறைந்திருந்து பார்க்கும் ருக்மிணி அந்த பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், வெண்ணை திருடி உண்ணும் பாலகன், யசோதையிடம் திருவாய் திறந்து உலகம் காட்டிய கண்ணனின் பாலலீலைகளில் மெய்ம்மறந்து அந்த பாலரூபம் தனக்கு தினமும் தான் பூஜை செய்து வழிபட ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கண்ணனிடமே கண்ணனைத் தருமாறு கேட்கிறாள். கண்ணனும் இசைந்து விஸ்வகர்மாவிடம் சொல்லிச் செய்து தரச் சொன்ன அந்த பாலகிருஷ்ணன் ஒரு கையில் மத்தோடும், மறு கையில் கயிறோடும் இருக்கிறான். ருக்மிணி பூஜை செய்து வந்த அந்த விக்ரஹம், அர்ஜுனன் கையில் கிடைக்க அவன் அதை ருக்மிணியின் தோட்டத்தில் மறைத்து வைக்கிறான். காலப்போக்கில் அந்த விக்ரஹம் கோபிச்சந்தனத்தால் மூடப் படுகிறது. துவாரகாவிலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு சிறிய கப்பலில் அந்த விக்ரஹம் கோபிச்சந்தனத்தால் மூடப்பட்ட நிலையில் ஏற்றப்பட்டு மேற்குக்கடற்கரைப் பகுதிக்கு வியாபாரத்திற்கு வருகிறது. உடுப்பிக்கு அருகில் "வடபண்டேஸ்வர்" என்னும் கடற்கரைப் பட்டினத்திற்கு அருகில் வரும்போது புயற்காற்று அடிக்கிறது. பகவான் ஸ்ரீமத்வருக்கு ஞானதிருஷ்டியில் கப்பலும் அதற்குள் கோபிச்சந்தனத்தால் மூடப்பட்ட கிருஷ்ணரும் தெரிகிறார்கள். உடனே அவர் கடற்கரை நோக்கி போய்த் தன் மேல்வஸ்திரத்தை வீசிக் காற்றை நிறுத்துகிறார். கப்பல் தலைவன் அவரின் புனிதம் உணர்ந்து தன் கப்பலையே அவருக்குக் காணிக்கையாக்குகிறான். ஆனால் மத்வரோ அந்த கோபிச்சந்தனத்தோடு திருப்தி அடைகிறார்//

கிருஷ்ணர் உடுப்பிக்கு வந்த வரலாறு சுருக்கமாய்!!!!!!

June 26, 2008 2:39 AM
கீதா சாம்பசிவம் said...
//அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்திருக்கிறார்.//

இப்போ எல்லாரும் போகும் பத்ரிநாத்தும், மத்வர் போனதும் வேறே வேறேனு எதிலோ படிச்ச நினைவு, தேடறேன், கிடைக்கலை!!!!!அது பத்தி ஏதும் தெரியுமா????

June 26, 2008 2:46 AM
மதுரையம்பதி said...
வாங்க கீதாம்மா...உடுப்பி கிருஷ்ணர் வரலாற்றுக்கு நன்றி....மிக அழகான விக்ரஹம்...அதிலும் மாத்வ யதிகள் பூஜிக்கும் முறையும் அலங்காரங்களும் மிக அருமையா இருக்கும்.

//இப்போ எல்லாரும் போகும் பத்ரிநாத்தும், மத்வர் போனதும் வேறே வேறேனு எதிலோ படிச்ச நினைவு, தேடறேன், கிடைக்கலை!!!!!அது பத்தி ஏதும் தெரியுமா????//

தெரியாதே!....

June 26, 2008 6:31 AM
திவா said...
//மத்வர்' என்று, அதாவது 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று அழைக்கத் தொடங்கினர் சிஷ்யர்கள்//
அவர் காலத்தில் மத்வரை வாதத்தில் யாராலும் வெல்ல முடியவில்லை. அவ்வளவு சாஸ்திர, வேத ஞானம் இருந்தது அவரிடம்.

கீதா அக்கா, துக்ளக்ல இப்பதான் இதெல்லாம் வந்து முடிஞ்சது. என்ன இருந்தாலும் சின்ன வயசுதானே, மறந்து போயிருக்கும்!

June 26, 2008 6:48 AM
கீதா சாம்பசிவம் said...
//மிக அழகான விக்ரஹம்...அதிலும் மாத்வ யதிகள் பூஜிக்கும் முறையும் அலங்காரங்களும் மிக அருமையா இருக்கும்.//

நேரிலே பார்த்திருக்கேன், பூஜை செய்யும்போது!!!!

//இப்போ எல்லாரும் போகும் பத்ரிநாத்தும், மத்வர் போனதும் வேறே வேறேனு எதிலோ படிச்ச நினைவு, தேடறேன், கிடைக்கலை!!!!!அது பத்தி ஏதும் தெரியுமா????//

//தெரியாதே!....//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்., தேடறேன், நானே, இல்லைனா யார்கிட்டேயாவது கேட்கணும், சமயத்தில் ஒரு புத்தகம் தேடினால் கிடைக்காது, வேண்டாதபோது கிடைக்கும். ம்ம்ம்ம்ம்., பார்க்கலாம்!!!!!

June 26, 2008 6:50 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மாத்வரைப் பற்றிய அழகிய பதிவு!

//இவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக நம்பிக்கை//

அவரே இன்னும் பாடம் கேட்டால், நாம் எல்லாம்?
கற்றுக் கொள்ள, கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்! மாத்வர் நன்றாகவே உணர்த்துகிறார்!

கீதாம்மா சொன்ன உடுப்பி கண்ணன் கதையும் சூப்பரு! இனி வரப் போகுது பாருங்க ஒரு பதிவு! அங்கிட்டும் வந்து இந்தக் கதையைச் சொல்லுங்க, ஆமாம்! :-)

உடுப்பி கிருஷ்ணனை, சாளரம் வழியாகத் தான் தரிசிக்க முடியுமாமே? நவகோள்களும் இருக்கும் ஜன்னலாமே அது!
விளக்கம் ப்ளீஸ்!

June 26, 2008 7:18 AM
ambi said...
//பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்திருக்கிறார்.//

//அவர் காலத்தில் மத்வரை வாதத்தில் யாராலும் வெல்ல முடியவில்லை. அவ்வளவு சாஸ்திர, வேத ஞானம் இருந்தது அவரிடம்.
//

போடுங்கப்பா போனை நம்ம 13ம் ஆழ்வாருக்கு. பிரம்மத்தை பத்தி நிறைய சந்தேகங்கள் இருக்காம். திவா/மெளலி அண்ணாவுக்கு கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கும்.

June 26, 2008 7:20 AM
ambi said...
உடுப்பி கோவிலில், மாத்வர் தான்னு நினைக்கிறேன், தோளில் ஒரு பாத்ரத்தில் கொள்ளு/ப்ரசாதம் வைத்திருக்க, விஷ்ணு,ஹயக்ரீவராய் அச்வ ரூபத்தில் வந்து ஏற்று கொள்வது போல ஒரு படம் பாத்தேன்.

அந்த கதை என்னனு கொஞ்சம்...?

June 26, 2008 7:22 AM
ambi said...
//உடுப்பி கிருஷ்ணனை, சாளரம் வழியாகத் தான் தரிசிக்க முடியுமாமே? //

ஆமா, அப்படி தான் நானும் தம்பியும் தரிசித்தோம்.

நவ கோள்கள் தெரியலை, மெளலி அண்ணா மேடைக்கு வரவும். :)

June 26, 2008 7:25 AM
கவிநயா said...
மாத்வர் பற்றிய அரிய பதிவுக்கு நன்றி, மௌலி.

//இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம்.//

அவர் சொன்னதை அழகா எடுத்துச் சொன்னீங்க. நினைவுல வச்சுக்கறேன்.

உடுப்பி கிருஷ்ணரின் கதையும் இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி, கீதாம்மா.

June 26, 2008 7:29 AM
கீதா சாம்பசிவம் said...
//கீதா அக்கா, துக்ளக்ல இப்பதான் இதெல்லாம் வந்து முடிஞ்சது. என்ன இருந்தாலும் சின்ன வயசுதானே, மறந்து போயிருக்கும்!//
உங்க துக்ளக்கிலே வரதுக்கு முந்தி இது பத்திப் பதிவே போட்டாச்சு, 2 வருஷம் ஆச்சு, பதிவு போட்டும்,

நவகோள்கள் எனும் துவாரங்கள் வழியாகத் தான் தரிசிக்க முடியும் உடுப்பி கிருஷ்ணனை, கிருஷ்ணருக்கு உயிர் சக்தி இருந்து கொண்டிருப்பதால், நேரே பார்ப்பதும், நம்மால் தாங்க முடியாதாம், சாமானிய மானிடர்கள் ஆன நம்மால் அந்தக் கள்ளக் கண்ணனின் திருட்டுப் பார்வையைப் பார்த்தாலாவது திருந்தலாம் என்ற எண்ணத்திலாவது நேரே பார்க்கச் சொல்லக் கூடாதோ??? ம்ஹும், நேரே பார்ப்பது அத்தனை உசிதம் இல்லை என்றே அங்கே நிர்மால்ய தரிசனம் செய்யும்போது விசாரித்தப்போ சொல்றாங்க. அவ்வளவு சக்தி வாய்ந்த கிருஷ்ணனின் கண்கள் மேற்குக் கடற்கரையை நோக்கியும் இருப்பதால், அந்தப் பக்கம் வாயில் கூட எப்போவும் மூடியே இருக்கு!!!!

June 26, 2008 11:22 AM
கீதா சாம்பசிவம் said...
//ப்ரசாதம் வைத்திருக்க, விஷ்ணு,ஹயக்ரீவராய் அச்வ ரூபத்தில் வந்து ஏற்று கொள்வது போல ஒரு படம் பாத்தேன்.

அந்த கதை என்னனு கொஞ்சம்...?//

இதுவும் உண்டு. கதை எல்லாம் இப்போ கிடையாது!!!!!!

June 26, 2008 11:23 AM
கீதா சாம்பசிவம் said...
http://aanmiga-payanam.blogspot.com/2006/08/11.html

http://aanmiga-payanam.blogspot.com/2006/08/5-4.html

http://aanmiga-payanam.blogspot.com/2006/08/4-3.html

@திவா,
இங்கே போய்ப் பாருங்க, கிட்டத் தட்ட 4,5 இருக்கும் உடுப்பி கிருஷ்ணர் பத்தி, நாளைக்கு open book test இதிலே எல்லாம் வைக்கப் போறேன். So be ready! :P

June 26, 2008 11:31 AM
கவிநயா said...
படிச்செட்டேன் கீதாம்மா. உடுப்பி கிருஷ்ணன் அருளால் பாஸாயிடுவேன் :) சுட்டிகளுக்கு நன்றி!

June 26, 2008 11:43 AM
மதுரையம்பதி said...
//உடுப்பி கோவிலில், மாத்வர் தான்னு நினைக்கிறேன், தோளில் ஒரு பாத்ரத்தில் கொள்ளு/ப்ரசாதம் வைத்திருக்க, விஷ்ணு,ஹயக்ரீவராய் அச்வ ரூபத்தில் வந்து ஏற்று கொள்வது போல ஒரு படம் பாத்தேன்.//

இது மாத்வர் கிடையாது, மாத்வர் வழி வந்த 8 மடங்களில் ஒரு மடத்தின் ஆச்சார்யரான வாதிராஜ தீர்த்தர் என்னும் மஹான்.

June 26, 2008 11:50 AM
geethasmbsvm6 said...
//மெட்டல் டிடெக்டரைக் கடந்து உள்ளே போகும் நான் போகும் போதே பிரஹாரம் சுற்றி ஸ்ரீகிருஷ்ணனின் சன்னிதியை அடைகிறோம். பகவான் மிகவும் சாந்நித்தியம் உள்ளவர் என்று சொல்லப்படுகிறார். ஜீவன் இன்னும் இருப்பதாகவும் நம்பப்படுமிறது. ஆதலால் கண்ணனை நாம் நேருக்கு நேர் பார்க்க முடியாது. கண்ணனின் தரிசனம் 9 ஓட்டைகளைக் கொண்ட ஒரு ஜன்னல் வழியாகத் தான் நடைபெறுகிறது. வெள்ளித் தகடால் மூடப்பட்ட அந்த ஜன்னல் நவகிரஹ ஜன்னல் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளித் தகட்டில் மஹாவிஷ்ணுவின் 24 உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பார்க்கும்போது கண்ணன் மாடு மேய்க்கும் கோலத்தில் இருந்தான். //

@அம்பி, இது உங்களுக்காகவும், கே ஆர் எஸ்ஸுக்காகவும், எல்லாம் வயசாயிடுச்சு இல்லை, தேடிப் போய்ப் படிக்க முடியாதுனு கொடுத்திருக்கேன்,

//இது மாத்வர் கிடையாது, மாத்வர் வழி வந்த 8 மடங்களில் ஒரு மடத்தின் ஆச்சார்யரான வாதிராஜ தீர்த்தர் என்னும் மஹான்.//

ஆமாம், மதுரையம்பதி சொல்வது போல் அது வாதிராஜர் தான், பிரசாதம் கொள்ளும் இல்லை, வேர்க்கடலை!!!! குதிரை உருவில் இறைவன் வந்து காட்சி கொடுத்ததாகச் சொல்லுவதுண்டு. அது தனிக்கதை!!!!

June 26, 2008 11:59 AM
திவா said...
//உங்க துக்ளக்கிலே வரதுக்கு முந்தி இது பத்திப் பதிவே போட்டாச்சு, 2 வருஷம் ஆச்சு, பதிவு போட்டும், //
நான் பிறக்கறதுக்கு முன்னாலேயே போட்டு இருக்கீங்க! எனக்கு எப்படி தெரியும்?
:-))
முன்ன உங்க பழங்கதையெல்லாம் புரட்டி பாத்தப்ப ஹச் ன்னு தும்மிட்டு அதெல்லாம் கிளறாதேன்னீங்க. இப்ப?
:-)))))))))))))))))

June 26, 2008 12:37 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@திவா சார்
//நான் பிறக்கறதுக்கு முன்னாலேயே போட்டு இருக்கீங்க! எனக்கு எப்படி தெரியும்? :-))//

இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தார் - ஜெர்ரியம்மா!

//முன்ன உங்க பழங்கதையெல்லாம் புரட்டி பாத்தப்ப ஹச் ன்னு தும்மிட்டு//

உங்கள யாரு Hutch-ன்னு தும்மச் சொன்னது?
Tata Indicom-ன்னு தும்முங்க! அதான் கீதாம்மாவுக்குப் பிடிக்கும்! :-)

June 26, 2008 1:08 PM
மதுரையம்பதி said...
கீதாம்மா, நல்லா கதாகாலஷேபம் பண்றீங்க...சூப்பர் :-)

நவகிரஹ சன்னல் எல்லாம் சரி.அதுக்கு எதிரில் இன்னொரு சன்னல் வெளிப்புற மதில்ல இருக்கே..? அதைப் பற்றிய கதையும் சொல்லியிருக்கீங்களா?...
எம்பெருமானார் கனகதாசர் கதை?...

June 26, 2008 1:51 PM
மதுரையம்பதி said...
//முன்ன உங்க பழங்கதையெல்லாம் புரட்டி பாத்தப்ப ஹச் ன்னு தும்மிட்டு அதெல்லாம் கிளறாதேன்னீங்க. இப்ப?//

நல்லா கேளுங்க, நல்லா கேளுங்க திவாண்ணா.... :))

June 26, 2008 1:52 PM
மதுரையம்பதி said...
வாய்யா அம்பி....நீங்க கேட்ட கேள்விக்கு நமது வியாக்யான குரு, ஸ்ரீலஸ்ரீ கீதாம்மையார் விளக்கம் அளித்துவிட்டார்...போதுமுன்னு நினைக்கிறேன்...வேற ஏதாவது கேள்விகள் இருப்பின் கேளுமேன்?

June 26, 2008 1:55 PM
மதுரையம்பதி said...
//உடுப்பி கிருஷ்ணனை, சாளரம் வழியாகத் தான் தரிசிக்க முடியுமாமே?//

என்ன கேள்வியிது கே.ஆர்.எஸ்...நீங்க இன்னும் உடுப்பி கிருஷ்ணனை தரிசிக்கலையா?....அடுத்த முறை இந்திய பிரயாணத்தில் 2-3 நாள் பெங்களூரில் இருக்குமாறு வாரும்...நான் தரிசனம் பண்ணி வைக்கிறேன். உமக்கு காண்பிக்கவேண்டியது நிறைய இருக்கு. :)

June 26, 2008 2:00 PM
Raghavan said...
ஆச்சார்ய ஹ்ருதயத்தின் ஒவ்வொரு பதிவும் என்னை பண்படுத்துகிறது. ஒரு மாணவனாக என்னை எல்லோரும்
ஏற்று அருளுங்கள். ஒவ்வொன்றும் புதிய விஷயங்கள். நிறைய தெரிந்து கொள்கிறேன். ஆனாலும் சில
விஷயங்களில் என் மனம் பண்பட மறுக்கிறது. என்னை வளர்த்து அருளின, ஸ்ரீவரதராஜ பெருமாளை தவிர வேறொன்றும் அறியாதவன். தங்களின் பதிவுகள் மூலமே தெளிவுறுகிறேன்.

ரவி அண்ணா, கீதாம்மா, குமரன் - உங்களை எனக்கு காட்டி அருளியது ஸ்ரீவரதராஜன் என்றே நினைக்கிறேன். என்னால் படித்து வியக்க முடிகிறதே தவிர வேறு எதுவும் தெரியவில்லை. எனக்கு தோன்றுவது
ஒன்றே ஒன்று தான், தங்களின் அனைத்து பதிவுகளையும் தொகுத்து தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்க்கும்
கொடுத்து அதை விட இந்த அடியேன் எல்லா நேரங்களிலும் படித்து படித்து என்னை பக்குவப்படுத்தி கொள்ள முடியும். அனுமதியை வெகுமதியாக கேட்கிறேன்.

அடியேன்
இராகவன்

June 26, 2008 2:07 PM
துளசி கோபால் said...
பதிவு மட்டுமில்லை பின்னூட்டங்களும் அதிலும் கீதாவின்
கதை சொல்லும் நேர்த்தி.

வெகுவாக ரசிச்சேன்.

இன்னிக்குத்தான் ஆஞ்சநேயர் ஏன் பரம பதத்துக்குப்போகாம இங்கேயே சிரஞ்சீவியா இருக்காருன்னு படிச்சுட்டு இங்கே வந்தால் வாயுகுமாரரைப் பற்றிய பதிவு.

நானும் இன்னும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்க்கலை.

காலம் எப்போ வருமோன்னு இருக்கேன்.

அவனாப் பார்த்துக்கூப்பிடணும்.

வெயிட்டிங்.

June 26, 2008 11:00 PM
மதுரையம்பதி said...
//நானும் இன்னும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்க்கலை.

காலம் எப்போ வருமோன்னு இருக்கேன்.

அவனாப் பார்த்துக்கூப்பிடணும்.//

வாங்க ரீச்சர்...இந்த பதிவுக்கு உங்களது முதல்வரவு....நன்றி.. அடுத்தமுறை நீங்க இந்தியா வரும்போது கண்டிப்பா உங்களுக்கு அப்பாயின்மெண்ட் உண்டாம்..:-)

June 27, 2008 12:09 AM
geethasmbsvm6 said...
//படிச்செட்டேன் கீதாம்மா. உடுப்பி கிருஷ்ணன் அருளால் பாஸாயிடுவேன் :) சுட்டிகளுக்கு நன்றி!//

கவிநயா மட்டும் டிஸ்டிங்ஷனோடு பாஸ் செய்தார் என அறிவிக்கப் படுகின்றது.

மத்தவங்க, அனைவருக்கும் 0 மார்க்குக்குக் கீழே போட முடியுமானு யோசிக்கப் படுகின்றது!! :P :P

June 27, 2008 12:14 AM
geethasmbsvm6 said...
வாங்க துளசி, முதல்வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி,.

மத்தவங்களைத் தனித்தனியாக் கவனிச்சுக்கறேன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர் :P

June 27, 2008 12:15 AM
geethasmbsvm6 said...
//முன்ன உங்க பழங்கதையெல்லாம் புரட்டி பாத்தப்ப ஹச் ன்னு தும்மிட்டு அதெல்லாம் கிளறாதேன்னீங்க. இப்ப?
:-)))))))))))))))))//

யானை!!!!!!!!

June 27, 2008 12:15 AM
ambi said...
//பிரசாதம் கொள்ளும் இல்லை, வேர்க்கடலை!!!! //

ஏதேது விட்டா யதி ராஜருக்கே வேர்கடலை நான் தான் சப்ளை பண்ணேன்னு சொல்லுவீங்க போலிருக்கே. :p

June 27, 2008 1:08 AM
மதுரையம்பதி said...
வாங்க ராகவன்....

//என் மனம் பண்பட மறுக்கிறது. என்னை வளர்த்து அருளின, ஸ்ரீவரதராஜ பெருமாளை தவிர வேறொன்றும் அறியாதவன். //

ஆஹா, வரதராஜ பெருமாளை முழுதா அறிந்தால் போதுமே... :)

June 27, 2008 2:02 AM
கீதா சாம்பசிவம் said...
//ஏதேது விட்டா யதி ராஜருக்கே வேர்கடலை நான் தான் சப்ளை பண்ணேன்னு சொல்லுவீங்க போலிருக்கே. :p//

ambi,இது பத்தி முழுசும் ஒரு நாள் எழுதும்போது பாருங்க, கொள்ளா?? வேர்க்கடலையான்னு! :P

June 27, 2008 3:42 AM
ambi said...
//இது பத்தி முழுசும் ஒரு நாள் எழுதும்போது பாருங்க, //

எங்க எழுத? இன்னும் ராமாயணமே முடிஞ்ச பாடில்லை. லவ குசா பிறந்து, வளந்து, படிச்சு பட்டம் வாங்கற வரைக்கும் எழுதுவீங்க போல. அதுகுள்ள என் பையன் பிளாக் தொறந்து கமண்ட் போட வந்துடுவான்னு நினைக்கிறேன். :))

நல்ல வேளை லவ குசாவுக்கு கல்யாணம் ஆன கதை ஒன்னும் எனக்கு தெரிஞ்சு இல்லை,

ஒரு வேளை உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா அதுவும் ராமாயனம் பார்ட்-2னு எழுதுவீங்களா? :p

June 27, 2008 5:54 AM
கீதா சாம்பசிவம் said...
//எங்க எழுத? இன்னும் ராமாயணமே முடிஞ்ச பாடில்லை. லவ குசா பிறந்து, வளந்து, படிச்சு பட்டம் வாங்கற வரைக்கும் எழுதுவீங்க போல//

ரைட்டுடுடுடுடுடுடுடு, எப்படிக் கண்டு பிடிச்சீங்க??? ம.ம. வா இருந்தாலும் இந்த விஷயத்தில் கண்டு பிடிச்சிட்டீங்க, ராமர் மறையற வரைக்கும் எழுதற திட்டம் தான்! அங்கே வந்து மொக்கை போடத் தானே?? அதெல்லாம் ஒண்ணும் நடக்காது!!
@மெளலி,
@திராச சார்,
@கே ஆர் எஸ்,
இந்த அம்பியை இங்கே வந்து மொக்கை போடக் கூடாதுனு அடக்குங்க, மூணு பேரும்! :P :P என்ன செய்யறீங்க மூணு பேரும்??????

June 27, 2008 11:58 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
Who is this "geethasmbsvm6?"
?????????
Arinthavar arivithaal aayiram dashdashdash!
Yaar ange?
Murasariviyungal!
:-)

June 27, 2008 6:48 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...
படித்தறிந்து கொண்டேன் மௌலி சார், பதிவுக்கு நன்றிகள்.

June 27, 2008 7:44 PM
கீதா சாம்பசிவம் said...
//Who is this "geethasmbsvm6?"
?????????
Arinthavar arivithaal aayiram dashdashdash!
Yaar ange?
Murasariviyungal!
:-)
//

தெரிஞ்சவங்க சொல்லுங்களேன், எனக்கும்!!!! :P :P

June 28, 2008 3:12 AM
கீதா சாம்பசிவம் said...
//Who is this "geethasmbsvm6?"
?????????
Arinthavar arivithaal aayiram dashdashdash!
Yaar ange?
Murasariviyungal!
:-)//

அடுத்த புதிரா? புனிதமா?வுக்கு இதைக் கூட வச்சுக்கலாமோ?? :P :P

June 28, 2008 3:13 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
@கீதா மேடம்.நான் அடுக்குகிறேன் அம்பியை. அம்பி நீ இங்கே வந்து மொக்கை போடக்கூடாது .யாரவது ஒருத்தர் போதும். கீதா மேடம் நீஙக எழுதுங்க.

June 28, 2008 11:49 AM
குமரன் (Kumaran) said...
ஹரி சர்வோத்தம: வாயு ஜீவோத்தம:

முக்ய ப்ராண தேவரின் அவதாரமான மத்வாசாரியரின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள் மௌலி. நன்றி.

July 2, 2008 9:08 AM
மதுரையம்பதி said...
//ஹரி சர்வோத்தம: வாயு ஜீவோத்தம:

முக்ய ப்ராண தேவரின் அவதாரமான மத்வாசாரியரின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள் மௌலி. நன்றி.//

அதே!, அதே! குமரன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கலக்கிட்டீங்க. :)

July 4, 2008 8:14 AM
Raghu said...
I like Madhvar bold spiritual thoghts.

July 9, 2008 6:48 AM
Raghu said...
I like Madhva saints like,Madhavcharya,Vadiraj & guru Raghavendra.These are the greatest pillars for "Dualistic" principle (Dwaita).I want to know more about Sri Vadiraj.Kindly share.

July 12, 2008 3:53 AM