
எல்லா ஒளியும் இறைவனிடமிருந்தே தோன்றுகிறது என்பதை நிதர்சனமாக காட்டும் விழா கார்த்திகை தீபத் திருவிழா. கார்த்திகை முப்பது நாட்களும் விளக்குகள் ஏற்றி வீட்டின் நிலை/தலை வாசல் அருகே வைப்பது வழக்கம். கார்த்திகை மாதப் பெளர்ணமியன்று கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவது என்பது வழக்கம். விளக்கு ஏற்றும் போதும், சொக்கப்பனை கொளுத்தும் போதும் சொல்லப்படும் மந்திரம், உலகில் அனைவருக்கும் நன்மை ஏற்பட வேண்டும், மங்களம் எங்கும் பரவ வேண்டும் என்பதாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்த சொக்கப்பனையில் எல்லோரும் சிறிதளவு குங்கிலியத்தை சேர்ப்பதன் மூலம் தமது பாபங்களை நீக்கிக் கொள்ளலாம் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.

நாடி நாராயணன் நான்முகன் என்றிவர்
தேடித் திரிந்தும் காணவல்லதோ
மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத்
தாடிய பாதம் என் நெஞ்சுள் இருக்கவே
ஜோதி ஸ்வரூபனின் திருவடியைத் தேடி மஹாவிஷ்ணு கீழ் நோக்கிச் சென்றார், பிரம்மன் மேல் நோக்கிச் சென்றார். சிவபெருமான் ஜோதி ரூபமாக நின்றதை நினைவூட்டுவதே கார்த்திகைப் பெருவிழா.
ஜோதி ஸ்வரூபனின் திருவடியைத் தேடி மஹாவிஷ்ணு கீழ் நோக்கிச் சென்றார், பிரம்மன் மேல் நோக்கிச் சென்றார். சிவபெருமான் ஜோதி ரூபமாக நின்றதை நினைவூட்டுவதே கார்த்திகைப் பெருவிழா.
திருவண்ணாமலை மற்றும் பல சிவஸ்தலங்களில் கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணியன்று அந்தி சாயும் நேரத்தில் ஒரு பெரிய அகல்-விளக்கினை ஏற்றி சிவபெருமானை அதில் ஆவாஹனம் செய்து அந்த தீபத்தை சுவாமி சன்னதியில் வைத்து பூஜிக்கின்றனர். மறுநாள் சொக்கப்பனையில் இருக்கும் பனைமரத்தின் அடித்துண்டில் அந்த தீபத்தை வைக்கின்றனர். இறைவன் ஜோதி ஸ்வரூபன் என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்யப்படுகிறது. இந்த சொக்கப்பனை ஆந்திரத்தில் "ஜ்வாலா தோரண விழா" என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அந்த பிரதேசத்தில் கூறப்படும் புராணம் வேறு மாதிரியானது.
தமிழகத்தில் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு மலையே சிவஸ்வரூபம். திருவண்ணாமலையை நினைத்தாலேயே முக்தி என்பர். ஜோதி-ஸ்வரூபனின் அடி-முடி தேடிய சம்பவம் நடந்தது இங்கே என்று சொல்லப்படுகிறது. மலைமீது தீபத்திருநாளான இன்று ஒரு பெரிய செப்பு அண்டாவில், 24 முழம் உள்ள துணியில் கற்பூரத்தூளைக் கொண்டு திரியாக்கி நெய்யிட்டு தீபமேற்றுகிறார்கள். இக்கோவிலில் தீப தரிசன மண்டபம் என்றே ஒரு மண்டபம் இருக்கிறது. கார்த்திகையன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகி, இந்த மண்டபத்தில் எழுந்தருளியதும் மலைமீது தீபம் ஏற்றப்படுகிறது.

அண்ணாமலையானுக்கு அரோஹரா..
******************************************************************************
தீபத்தில் இறைவன்
ஜோதிர் மயமான இறைவன் அண்டத்தில் மட்டுமில்லாது பிண்டத்திலும் சுடரொளியாகப் பிரகாசிக்கிறார் என்கிறது வேத வாக்கியம். "தஸ்ய மத்யே வஹ்னிசிகா அநியோர்த்வா" என்பதாக கட்டைவிரல் அளவில் தீப ஜோதியாக பிரம்மம் இதயத்தில் விளங்குகிறது என்பது பொருள். சாக்தத்திலும் தீபத்தில் அன்னையை ஆவாஹித்து வழிபடுவது சிலரது மரபு. இவ்வாறு அம்பிகையை தீபத்தில் பூஜிக்கும் போது சாக்ஷி தீபம் என்று அருகில் இன்னொரு தீபமும் இருக்க வேண்டும் என்பர்.
விளக் கொளியாகிய மின் கொடியாளை
விளக் கொளியாக விளங்கிடு நீயே!
விளங்கிடு மெய் நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளக்கினர் தானே
என்று திருமந்திரத்தில் ஞான விளக்கினைப்பற்றி திருமூலரும்,
"அருள் விளக்கே அருட்சுடரே அருட்ஜோதி சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே"
என்று ராமலிங்க ஸ்வாமிகளும் தமது 'அருட் பெருஞ்ஜோதியில் கூறியிருக்கிறார். இவர் வடலூரில் ஒளி விளக்கிற்கே ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தவர். இன்றும் தை-பூசத்தன்று ஜோதி தரிசனம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. வள்ளலார் ஏற்றிய தீபமும், அன்னதானத்திற்க்காக ஏற்றிய அடுப்பும் அணையாது காப்பாற்றப்படுகிறது.
திருநாவுக்கரசர் பஞ்சாக்ஷர மந்திரமே ஒளி மயமானது என்பதை பின்வரும் பாடலில் கூறியிருக்கிறார்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதியுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயமே
சிவபெருமான் ஜோதியாக விளங்கியது போல மஹாவிஷ்ணுவும் ஜோதி ஸ்வரூபனாக இருந்திருக்கிறார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இதனை உணர்த்தும் கோவில் காஞ்சீபுரத்தில் இருக்கிறது. பெருமாள் திருநாமமே தீபப்பிரகாசர் என்பது. தீந்தமிழில் விளக்கொளிப் பெருமாள் என்று கூறப்படுகிறார். இந்த தலத்திற்கு திருத்தண்கா, தூப்புல் என்று பெயர். பிரம்மா யாகம் செய்கையில் அவர் மனையாள் சரஸ்வதியே அதைத் தடுக்க முயல்கிறாள். அப்போது பெருமாள் ஜோதியாக விளங்கியதாக இத்தலபுராணம் சொல்கிறது. இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார்,
மின்னுருவாய் முன்னுருவில் வேத
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
என்று கூறியதாக நண்பன் சேஷசாயி சொல்லக் கேட்டிருக்கிறேன். நண்பன் இந்த பாசுரம் தவிர பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் பாசுரங்களையும் சுட்டிக் காட்டினான். அவை கீழே!
வையகம் தகழியாக வார் கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காகச் செய்ய
சுடரொளியின் அடிக்கே சூட்டினேன்
சொல்மாலை இடரொளி நீங்கவே
அன்பே தகழியாக ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.
இவ்வாறாக எல்லா தெய்வங்களும் வாசம் செய்யும் தீபத்தை வணங்குவோம். மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.