
இந்த மூன்றாம்/இறுதிப் பதிவில் மந்த்ர ரூபமாக, 51 மாத்ருகா அக்ஷரங்களாக இருக்கும் அன்னை நமது உடலில் எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் என்றும் இன்றைய இந்தியாவில் எங்கு இந்த 51 சக்தி பீடங்கள் இருக்கின்றன என்றும் பார்க்கலாம்.
சம்ஸ்கிருதத்தில் மாத்ருகா அக்ஷரங்கள் 51. உலகில் இருக்கும் சகல மந்த்ரங்களுக்கும், வேத-வேதாந்த சாஸ்திரங்களுக்கும் தாய் போன்றவை இந்த 51 அக்ஷரங்கள். அதனால்தான் இவற்றிற்கு மாத்ருகா அக்ஷரங்கள் என்று பெயரே. இவை எந்த அக்ஷரங்கள் என்பதெல்லாம் சம்ஸ்கிருதம் படித்தால் தெரிந்து கொள்ளலாம். முன்னர் சொன்ன 51 பீடங்கள் இந்த 51 அக்ஷரங்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றியது என்றும், இதனாலேயே ஆதி பீஜாக்ஷர பீடங்கள் என்றும் வழங்கப்படுவதும் உண்டு.
அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு. இந்த 51 அக்ஷரங்களும் நம் உடலில் ஆறாதாரங்களில் (ஆறு ஆதாரங்கள்) இருக்கின்றன. இவை முறையே, மூலாதாரத்தில் 4, சுவாதிஷ்டானத்தில் 6, மணிபூரகத்தில் 10, அநாகதத்தில் 12, விசுக்தியில் 16, ஆக்ஞையில் 2, நெற்றிக் கண் பகுதியில் சூக்ஷ்மமாக 1, ஆக மொத்தம் 51 பீடங்கள்.
ஆதிசங்கரர் மந்த்ர சாஸ்திரங்களில் உள்ள விஷயங்களை தனது 'பிரபஞ்ச சாரம்' என்னும் நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அந்த நூலின் காப்பு செய்யுளில் பின்வருமாறு கூறியுள்ளார். "அகர முதலான உயிரெழுத்துக்களும், 'க' வர்க்கம், 'ச' வர்க்கம், 'ட' வர்க்கம், 'த' வர்க்கம்,'ப' வர்க்கம்,'ய' வர்க்கம் ஆகிய ஏழு எழுத்து வர்க்கங்களையும் தனது கை, வாய், பாதம், இடை, இதயம் ஆகிய அவயவங்களாக கொண்டு உலகனைத்துக்கும் ஈஸ்வரியாக உள்ள அம்பிகை நமக்கு மனத்தூய்மை அளிக்கட்டும்" என்கிறார். மஹாகவி காளிதாசனும் அம்பிகையை கூறும் போது 'அக்ஷர சுந்தரி' என்றே வர்ணித்திருக்கிறாராம். அருணகிரிநாதர் இந்த 51 அக்ஷர மகிமை உணர்ந்தே கந்தரனுபூதியை 51 பாடல்களாக எழுதியிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஜப-தபங்கள், வழிபாடுகள் ஆரம்பிக்கும்முன் சில நியாஸங்கள் உண்டு. அதில் முக்கியமானது மாத்ருகா நியாஸம், இது ஜபம் எடுத்துக் கொள்ளும் சமயம் குருவானவர் த்ரிபுர-ஸித்தாந்த தத்துவங்களை சுருக்கமாமச் சொல்லி, பின்னர் மாத்ருகா நியாஸம் செய்வித்தபின் மந்த்ரம் உபதேசிக்கப்படும்.
மாத்ருகா நியாஸம் என்பது 51 அக்ஷரங்களையும் தனது உடலின் பல பாகங்களிலும் ஆவிர்பவித்துக் கொள்வது. இதன் காரணமாக அட்சர ரூபமாக
உள்ள அம்பிகையின் வடிவமாகவே வழிபடுபவரும் ஆகிவிடுகிறார். மாத்ருகா நியாஸம் இரு விதமாக செய்ய சொல்கிறது. பஹிர்-மாத்ருகா, அதாவது வெளியில் நம் அங்கங்களைத் தொட்டும், அந்தர் மாத்ருகா என்பதில் உடலுக்குள் இருக்கும் ஆதார சக்ரங்களை மனதால் நினைத்து அதன் இதழ்களிலும் நியாஸம் செய்வது.
மாத்ருகா நியாஸத்தின் தியான ஸ்லோகம் அன்னையை பின்வருமாறு வர்ணிக்கிறது. ஐம்பது அக்ஷரங்களையும் முகமாகவும், கைகால்களாகவும், வயிறு, மார்பு போன்ற பாகங்களாகவும் கொண்டு விளங்குபவளும், சந்திரன் போலும் மல்லிகை போலும் வெண்மை நிறம் கொண்டவளும், அக்ஷ-மாலை, அமிருத-கலசம், புஸ்தகம், வரமுத்திரை ஆகியவற்றை கரங்களில் கொண்டவளும், முக்கண்ணுடையவளும், நிர்மல வடிவும், தாமரையில் வீற்றிருப்பவளுமான பாரதீ தேவியை நமஸ்கரிக்கிறேன்.
இவ்வாறாக சக்தி பீடங்கள் என்பவை இன்றைய பாரதம்-நேபாளம் முழுவதிலும் மட்டுமல்ல, நமது உடலிலும் அன்னை வசிக்கிறாள். அவளை நம்முள்ளேயே காண முற்படவேண்டும். சக்தி பீட கோவில்களிலாகட்டும் அல்லது நமக்குள்ளே இருக்கும் தேவியாகட்டும், அவளருளன்றி உணர முடியாது. அவளை உணரவும் அவளையே இறைஞ்சுவோம்.
பின்குறிப்பு-1: இந்த சிறு தொடரை ஆரம்பித்தவுடன் , சில நண்பர்கள் ஒவ்வொரு சக்தி பீடங்கள் பற்றியும் எழுதுவேன் என்று நினத்தனர். நான் இந்த மூன்று இடுகைகளைத் தொடராக எழுத எனக்கு நேர்ந்த ஒரு அனுபவமே காரணம். எனது அனுபவத்தை பற்றி விஸ்தரிக்க வேண்டாமென நினைக்கிறேன். மாத்ருகா தேவி தான் எனக்கு இந்த பதிவினை எழுத ஊக்கம் அளித்தவள். எழுத நினைத்தவுடனேயே இப்படித்தான் ஆரம்பிப்பது, இப்படித்தான் முடிப்பதென்று முடிவாகிவிட்டது. இந்த மூன்று பதிவுகளில் மிக குறைந்த நேரத்தில் எழுதியதும், மனத்தில் ஒருவிதமான முழுமையும், த்ருப்தியும் தந்தது இந்த கடைசி இடுகையே. வாக்தேவியை மீண்டும் ஒருமுறை வணங்குகிறேன்.
------------------------------------------------------------------------------------
பல புத்தகங்கள் இந்த பீடங்கள் பற்றி பலவாறு கூறியிருக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் சில பீடங்களுக்கான இடங்களை மாற்றியும் சொல்லி இருக்கிறது. சோம வேத சர்மா என்னும் சிரோன்மணி இந்த பீடங்களுக்கு எல்லாம் விஜயம் செய்து எழுதி, அது விகடன் பிரசுரத்தில் தனிப் புத்தகமாகவும் வந்திருக்கிறது. மேற்கொண்டு பீடங்கள் பற்றியும், அவை இருக்கும் க்ஷேத்திரங்கள் பற்றியும் அறிய விரும்புபவர்கள் அந்த புத்தகத்தை படிக்க வேண்டுகிறேன். இருப்பினும் இது பற்றி பீட நிர்ண்யம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அதனை ஆதாரமாக கொண்டு கிழே இடங்களை பட்டியல் இட்டிருக்கிறேன் இவற்றுக்கும் சோம-வேத-சர்மா அவர்கள் புத்தகத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்.
------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் 9 இடங்களை சக்தி பீடங்களாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த பீடங்கள் எல்லாம் நாம் அறிந்த மிகப் பழக்கமான தலங்கள் தான். அவை, காஞ்சி காமாஷி, மதுரை மீனாஷி, திருவாரூர் கமலாம்பிகா, கூத்தனூர் சரஸ்வதி, திருக்கடவூர் அபிராமி, கன்யாக்குமாரி குமரி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, சங்கரன் கோவில் கோமதி, குற்றாலம் பராசக்தி.
கேரளத்தில் 3 இடங்கள்: சோட்டாணிக்கரை-பகவதி, ஒலவக்கோடு-ஹேமாம்பிகா. கராங்கனூர்-பகவதி.
கர்னாடகத்தில் 2 இடங்கள்: மைசூர் சாமுண்டி, கொல்லூர் மூகாம்பிகா.
ஆந்திரத்தில் 2 : ஸ்ரீ சைலம் ப்ரமராம்பிகா, காளஹஸ்தி ஞானப் பூங்கோதை
ஒரிசாவில் 2 : ஜாஜ்பூர்-ஸ்தம்பேஸ்வரி, புவனேஸ்வர்-கீர்த்திமதி
மஹாராஷ்டிரத்தில் 5: கோலாப்பூர்-மஹாலக்ஷ்மி, மஹுர்-ரேணுகாதேவி, துளஜாபூர்-பவானி, பஞ்சவடி-ப்ரமரீதேவி, சப்தஸ்ருங்கா-ஜகதாம்பா
குஜராத்தில் 5 இடங்களாவன: அரசூர்/அபூ-அம்பாஜி, துவாரகா-பத்ரகாளி, கனவால்-பாலா, பாவகட்-காளி, சோமநாத்-சந்திரபாகா
மத்ய பிரதேசத்தில் 1 : உஜ்ஜைனி-மங்கள சண்டிகை
அஸாமில் 1 : காமாக்யா-திரிபுர பைரவி
பீகாரில் 3 : தேவகர்-துர்கா, பாடான் - வஜ்ரேஸ்வரி, ஸஹர்ஷா-உக்ரகதாரா
மேற்கு வங்கத்தில் 2 : கல்கத்தா-காளி, மூர்ஷிதாபாத்-காளிகாம்பா
நேபாளத்தில் 2 : குஹ்யேஸ்வரி, ஜனகபூரி-உமா
உத்திரப் பிரதேசத்தில் 9 இடங்கள் இருக்கின்றன, அவை; காசி-விசாலாக்ஷி, ப்ரயாகை-லலிதா, மீர்ஜாபூர் (விந்த்யாசலம்)-விந்த்யாவாசினி/கெளசிகி,
பிருந்தாவனம்-காத்யாயனி, மதுரா-மாதவி, அயோத்யை-அன்னபூரணா, ஹரித்வார்-கங்கை, கேதார்நாத்-மார்க்கதாயினி, பத்ரிநாத்-ஊர்வசி
பஞ்சாப்-ஹரியானாவில் 2 இடங்கள்: குருஷேத்திரம்-விமலா, காங்ரா-வஜ்ரேஸ்வரி
ராஜஸ்தானத்தில் 2 இடங்கள்: புஷ்கரா-காயத்ரி, அம்பர்-விச்வகாமா
காஷ்மீரில் 3 இடங்களாவன: சார்தி-சாரதா, துலாமுலா-க்ஷீரபவானி, வைஷ்ணவி-வைஷ்ணவிதேவி
------------------------------------------------------------------------------------