Sunday, October 30, 2011

ஸ்கந்த சஷ்டி - 2011....

ஸ்ரீ சங்கர பகவத் பாதர் 72 விதமான மதங்களை கண்டித்து ஷண்மதங்களை ஸ்தாபித்து இந்து சமயத்தை புனருத்தாரணம் செய்தார் என்பதை நாமறிவோம். ஷண்முகனைப் பற்றிச் சொல்லுகையில் "முக்திதான ஈச ஸூனோ" என்ற வாக்யத்தைச் சொல்லுகிறார் சங்கரர். அதாவது ஜீவனானது பிறப்பு-இறப்பினைக் கடந்து முக்தியை அளிக்கவல்ல தெய்வமாக ஷண்முகனைக் கூறுகிறார்.


சாதாரண மனிதர்களுக்கு நான்கு வகையான நிலைகள் உண்டு, அவை: பால்யம், கெளமாரம், யெளவனம், வார்த்திகேயம் என்பதாகும். இவற்றில் முதல் மூன்று மட்டுமே தேவர்களுக்கு உண்டாம், அதாவது அவர்களுக்கு மூப்பு என்பதே கிடையாது. நமது ஷண்முகனோ என்றும் பதினாராக இருப்பவன், ஆகவே அவனது வழிபாட்டு முறைக்கு கெளமாரம் என்று கூறுகிறார்கள் என்று தோன்றுகிறது. ப்ரம்மம் என்பது காலத்திற்கு அப்பாற்பட்ட மாறுபாடற்ற உண்மை, அதை குமரனாகக் கொள்ளூம் சமயத்தை கெளமாரம் என்றால் சரிதானே?.


சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லை

ஸுப்ரமண்யனுக்கு மிஞ்சின தெய்வமில்லை


என்பது பல காலமாக சாதாரணர் முதல் கற்றுணர்ந்த பெரியோர்வரை பலரும் கூறும் சொலவடை.இதையே ஸனத்குமார ஸம்ஹிதையில், கலியுகத்தில் ஸுப்ரமண்ய பூஜை ப்ரதானமாகவும், அவனே ப்ரம்மம் என்றும் கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஸுப்ரமண்யன் ப்ரணவஸ்வரூபியாக இருப்பதால் ப்ரணவத்தை முதலாகக் கொண்ட எல்லா மந்த்ரங்களும் குமரனை வழிபடுவதாகச் சொல்லும் வழக்கம் இருக்கிறது. மந்திர சாஸ்திரத்தில், பிரணவமற்ற மந்திரங்கள் ஏதுமில்லை. எந்த பீஜாக்ஷரங்கள் இணைந்த மந்திரமானாலும் முதலில் ப்ரணவம் சேர்த்தே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. "சுக்ல வர்ணா ஷடாநனா" என்னும் லலிதா சஹஸ்ர நாமம் இந்த இடத்தில் நினைவில் வருகிறது.


ஷண்மதாசார்யரான பகவத்பாதர், ஏன் பஞ்சாயதன பூஜை என்று செய்திருக்கிறார்கள்?. அதிலேன் ஸுப்ரமண்யத்தை சேர்க்கவில்லை என்று சிந்திக்கையில் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. ஷண்முகனது இன்னொரு பெயர் குஹன் அல்லவா?. இதயமாகிற குகையில் எப்போதும் விற்றிருக்கும் அவனுக்கு பஞ்சாயதனத்தில் இடம் கொடாது, அந்த பஞ்சாயதன பூஜை தொடங்கும் முன்னரே, அவனைப் பூஜிக்க 'ஆத்ம பூஜை' என்ற ஒன்றை முதலில் செய்யச் சொல்லியிருக்கிறார் என்று தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், பஞ்சாயதனம் மட்டுமன்றி எல்லா வித பூஜைகளின் போதும், கணபதி பூஜையும், ஆத்ம பூஜையும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே குஹனாக ஒவ்வொரு ஜீவனுள்ளும் மறைந்திருக்கும் ஸுப்ரமண்யனுக்கு பஞ்சாயதன பூஜையில் மட்டுமல்லாது எல்லா பூஜைகளின் ஆரம்பத்திலும் வரும் ஆத்ம பூஜையில் அவனை வழிபட்டச் சொல்லியிருக்கிறார் என்று தோன்றுகிறது.


கெளமாரத்தைப் பின்பற்றும் பலரும் தமது பூஜையில் ஸுப்ரமண்யனது வேலுக்கே பலவித உபசாரங்களும் செய்வதைப் பார்த்திருக்கிறோம். ஆறுபடைகளில் முதலான திருப்பரங்குன்றத்தில் அபிஷேக ஆராதனைகள் எல்லாம் வேலுக்கே. ஸுப்ரமண்யனுக்கு இணையானது அவன் கையில் இருக்கும் வேல் என்றால் மிகையல்ல. 'கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய் மனமே' என்று அருணகிரிநாதர் சொல்வதிலிருந்து பார்த்தால் முருகனது கழலடிகளைப் பணிவதற்கு முன்னராக அவனது கையிலிருக்கும் வேலைப் பணியவேண்டும் என்பது தெரிகிறது. வேலைப் பணிவதே என் வேலை என்று சொல்லுவதன் பொருள் புரிகிறதன்றோ?. இந்த வேல் சக்தியின் அம்சம் என்பார்கள். இன்றும் ஷண்முக ஸ்தலங்களில், அவர் தன் அன்னையிடம் வேல் வாங்கும் படலம் விழாவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம். இதையே புஜங்கத்தில் சங்கரரும் எறும்பு முதல் ப்ரும்மாவரையிலான அனைத்துயிரையும் ஈன்ற அன்னை பராசக்தியே முருகனின் கைவேலாக இருப்பதாகச் சொல்லுகிறார். இந்த வேலுக்காக என்றே ஆதிசங்கரர் ஒரு ஸ்லோகம் செய்திருக்கிறார். அது,



சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்

ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்ந

மோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே

பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸந்நிதத்ஸ்வ

[சக்தியான வேலே, ஜகத்திற்குத் தாயும், ஸுகத்தைக் கொடுப்பவளும், நமஸ்கரித்தவர்களுடைய மனோ வியாதியைப் போக்குபவளுமான உன்னை வணங்குகிறேன். ஸ்ரீ குஹனின் கைக்கு அலங்காரமான சக்தியே!, தங்களுக்கு பல நமஸ்காரங்கள். என்றும் என் ஹ்ருதயத்தில் இருக்க வேண்டும்]


ஸுப்ரமண்ய புஜங்கம் என்று செந்திலாதிபன் மேல் முப்பது மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறார் ஆதி சங்கரர். அதிலிருந்து 6 ஸ்லோகங்களையும், திரு.அ வெ.ரா கிருஷ்ணசாமி ரெட்டியாரது தமிழாக்கத்தையும் பார்க்கலாமா?


ஸதா பாலரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ

மஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா

விதீந்த்ரா திம்ருக்யா கணேசாபிதாமே

விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி:


என்றும் இளமை எழிலன் எனினும்
இடர்மா மலைக்கே இடராவான்

துன்றும் கரிமா முகத்தோன் எனினும்

சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்

நன்றே நாடி இந்திரன் பிரமன்

நாடித் தேடும் கணேசனெனும்

ஒன்றே எனக்கு சுபம் திருவும்

உதவும் மங்கள மூர்த்தமதே.

****

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே

முகாந்நிஸ்ஸரந்தே கிராஸ்சாபி சித்ரம்


சொல்லுமறியேன் சுதி அறியேன்

சொற்கள் சுமக்கும் பொருளறியேன்

சொல்லைச் சொல்லும் விதி யறியேன்

எல்லை யிலாதோர் ஞான வொளி

இதயத் தமர்ந்து அறுமுகமாய்

சொல்லை வெள்ள மெனப் பெருகும்

தோற்றம் கண்டேன் சுடர் கண்டேன்.

****

மயூராதிரூடம் மஹாவக்ய கூடம்

மனோஹாரிதேஹம் மஹச்சித்த கேஹம்

மஹீதேவதேவம் மஹாதேவ பாவம்

மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்


மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் பொதிந்து

மனத்தைக் கவரும் உடலான்

பயில்வோர்கள் உள்ளக் குகைக்கோவில் தங்கி

பார்ப்பவர் தெய்வ மானான்

உயிராகும் மறையின் பொருளாகி நின்று

உலகைப் புரக்கும் பெருமான்

கயிலாய மேவும் அரனாரின் செல்வக்

கந்தன் பதம் பணிகுவாம்.


****
யதா ஸந்நிதானம் கதாமானவா மே

பாவம் போதிபாரம் கதாஸ்தே ததைவ

இதி வ்யஞ்ஜயன்ஸிந்து தீரேய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்


என்றன் சந்நிதி யடையும் மனிதர்

எப்போ தெனினும் மப்போதே

இந்தப் பிறவியின் சாகரக் கரையை

எய்திக் களித்தோ ராகின்றார்

மந்தரு மறிய மறையை விளக்கிச்

செந்தில் சாகரக் கரையதனில்

கந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்

தூயன் பாதம் துதிக்கின்றேன்.


****
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா:

ததைவாபத: ஸந்நிதெள ஸேவதாம் மே

இதீவோர்மிபங்க்தீர் ந்ருணம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்


கடலில் தோன்றும் அலையும் அழிந்து

காட்சி மறைவது போல்

திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார்

தீமை யழிந்து படும்

படமாய் மனதில் பதியச் செய்ய

பரவைக் கரையில் குகன்

இடமே யமர்ந்தான் இதயமலர் மேல்

ஏற்றித் தியானம் செய்கின்றேன்.


****
கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா:

ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா:

இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூட:

ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து


என்றன் இருக்கை யறிந்தே யெவரும்

இம்மலை ஏறி வரின்

எந்தைக் கயிலை மலை மீதேறும்

இனிய பலன் கொள்வார்

கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்

கந்தமான கிரிமேல்

சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்

திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.


****
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!

சக்தி வேல் முருகனுக்கு அரோஹரா!
ஞான வேல் முருகனுக்கு அரோஹரா!

Monday, October 17, 2011

ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகள்....



இரு வருஷங்கள் முன்னர் ஒரு பிரதோஷகாலத்தில், நண்பர் ஒருவரிடத்தில் நான் கேட்டிருந்த ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது வரலாறு புத்தகவடிவில் கிடைத்தது. இந்த புஸ்தகம் முழுவதுமே திகட்டாத விருந்து என்றால் மிகையல்ல. புஸ்தகம் முழுவதிலும் ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது திருஷ்ட, ஸுக்ஷ்ம விசேஷங்களை ஆசார்ய பக்தியில் சிறந்த ஸ்ரீ ஆர்.கிருஷ்ணஸ்வாமி என்பவர் எழுதியிருக்கிறார். இவ்வாசிரியர் பிற்காலத்தில் சிருங்கேரி ஆசார்யர்களிடம் ஸன்யாசம் பெற்று ஸ்ரீ ஞானாநந்த பாரதீ என்ற தீக்ஷா நாமத்துடன் விளங்கியவர் என்று தெரிகிறது.


இந்த இடுகை ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய ஸ்ரீ குருகிருபா விலாஸம் என்னும் நூலில் இருந்து படித்த ஒரு விஷயமே இங்கு நமது சிந்தனைக்காக. புஸ்தகத்தைப் படிக்கத் தந்த நண்பருக்கும், இந்த புஸ்தக வெளியீட்டாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு சமயம், ஸ்ரீ சந்திர சேகர பாரதீ அவர்களின் தரிசனத்திற்கு வந்த பக்தர், தமது லோகாயதமான கர்மாக்கள் எல்லாம் முடிந்துவிட்டதாகவும், நிறைய நேரம் இருப்பதாகவும் அதை நல்ல வழியில் செலுத்த, தமக்குத் தோன்றும் பல வழிகளைக் கூறி போது ஜனங்களுக்கிடையே அவற்றைச் செயல்படுத்த பெரியவாளது ஆசிகள் வேண்டும் என்று விஞ்ஞாபிக்கிறார். ஆசாரியார் பல வித கேள்விகள் கேட்ட பின்னர், 'உங்களுக்கோ குடும்ப விஷயமான கவலையில்லை என்று தெரிகிறது. நமது சமயத்தில் தீவிரமான சிரத்தையும், அவகாசமும் இருக்கிறது என்றும் தெரிகிறது. இந்த காலத்தை உபயோகித்துக் கொண்டு நீங்கள் மேன்மேலும் பலவித கர்மானுஷ்ட்டானங்களைச் செய்து கொண்டு, இன்னும் உங்களை மேம்படுத்திக் கொள்ளலாமே?. அதில் அக்கறை செலுத்தாமல் ஊரார் விஷயமாகப் பிரவிருத்தி செய்வதில் என்ன அர்த்தம்?'. என்று கூறுகிறார். மேலும், ஜன சமுதாயம் என்பது தனித் தனி ஜனங்களின் சேர்க்கையே. அவை ஒவ்வொரு மனுஷனும் தமது ஸ்வதர்மத்தை அனுஷ்டித்துத் தனக்கு இருக்கிற அக்ஞானத்தைப் போக்கடிக்க பிரயத்தனப்பட்டானேயானால் அதுவே சமுதாயத்தின் உன்னத கதிக்கு காரணமாகும். இதை விட்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யத் தலைப்பட்டால் அவை பிரயோஜனம் இன்றி வீண் வியவஹாரங்களையும், மனஸ்தாபத்தையுமே ஏற்படுத்தும். நம்மை உத்தாரணம் செய்து கொள்வதற்கே எத்தனையோ ஜன்மங்கள் தேவையாக இருக்கிறது, இதில் மற்றவர்களை உத்தாரணம் செய்ய நினைப்பது கொஞ்சமேனும் நியாயமும் இல்லை, ஸாத்தியமும் இல்லை.


"நாப்ருஷ்ட: கஸ்யசித் ப்ரூயாத்" என்பதாக 'கேட்காமல் இருக்கும்போது யாருக்கும் சொல்லாதே' என்று சொல்லப்பட்டிருக்கிறது. கேட்கிற விதமும் வெறும் குதுகலத்தினால் இல்லாமல் அத்யாத்மப் பசியாக இருந்தால் மட்டுமே சொல்லப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 'தத்வித்தி ப்ணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா:" என்பதாக நன்கு நமஸ்கரித்து சேவை செய்து, திரும்பத் திரும்ப கேட்டு அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தால் மட்டுமே உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று கீதையில் கூறப்பட்டுள்ளது.


ஆகவே பசிப்பவன் தானே உணவினை தேடிக்கண்டு பிடிப்பான் என்று கூறுகிறார். ஆகவே, நாமும் நல்ல குரு கிடைக்கவும், குரு கிடைத்துவிட்டால் அவரிடத்தில் முழுமையாக சரணாகதி செய்து உய்யத் தலைப்படுவோம்.


[ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது பீடாதிபத்யத்தின் ஆரம்ப காலத்திலேயே ஸ்ரீ பரமாசாரியார் காம கோடி மடத்தின் பீடாதிபத்யம் ஏற்றவர். ஸ்ரீ சந்திர சேகர பாரதி ஸ்வாமிகள் பீடாரோஹணம் 1912 முதல் 1954 வரையில். பரமாசாரியார் தனது பால்ய காலத்தில், சில விஷயங்களை சந்திர சேகர பாரதி ஸ்வாமிகளிடம் தமது சிஷ்யர்களை அனுப்பி தெளிவு செய்துகொண்டதாகச் சொல்வார்கள். இவர் துங்க பத்ராவில் ஜல சமாதியானவர். நரசிம்ஹ வனத்தில் துங்கா நதிக்கரையில் இவர் நீரில் அமிழ்ந்த இடத்தில் ஓர் மண்டபமும், அவரது பூத உடல் நரசிம்ஹ வனத்தில் அவரது குருவின் அதிஷ்ட்டானத்தருகிலேயே வைத்து பிருந்தாவனம் கட்டப்பட்டு இருக்கிறது]

Tuesday, October 4, 2011

2011 நவராத்ரி : கொலுப் படங்கள்.....

பெங்களூர் அல்லாத மற்ற இடங்களில் வசிக்கும் சில நண்பர்கள், சுண்டல்தான் இல்லை, கொலு படங்களையாவது காண்பிக்கக்கூடாதா என்று கேட்டதன் விளைவாக, இந்த வருஷத்தைய கொலுவிலிருந்து சில படங்கள் கிழே!.

[நேரமின்மையின் காரணமாகவும், சரியான ஸ்டில் காமரா இல்லாத காரணத்தாலும் செல் போனில் எடுத்த படங்கள்.....அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.]














கீழே இருக்கும் கோதண்ட ராமர் மற்றும் லக்ஷ்மியின் வயது 70+















மேலே இருக்கும் படத்தில் உள்ள கஜ லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி பொம்மைகளது வயது 85க்கும் மேலே.


கோலாட்டக் குச்சியின் வயது 52




பித்தளை சாமான்கள் வயது 110க்கும் மேலே!.