Showing posts with label வைகாசி விசாகம். Show all posts
Showing posts with label வைகாசி விசாகம். Show all posts

Friday, June 5, 2009

வைகாசி விசாகம்.



வைகாசி மாதத்தை சிறப்பானதாக்க பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையானது விசாகன் என்று அழைக்கப்படும் முருகப் பெருமான் அவதாரம். இன்று விசாக திருநக்ஷத்திரம். இன்னொன்று பரமாசார்யார் என்று நாம் வணங்கும் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகளது அவதரித்த மாதம் . முருகனுக்கு உகந்ததாகச் சொல்வது விசாகம் மற்றும் கார்த்திகை. விசாக நக்ஷத்திரத்தன்று ஈசனின் நெற்றிக்கண் நெருப்பில் பிறந்தவன். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன். அருணகிரியார் திருச்செந்தூர் முருகனைப் பாடும் போது,

உம்பர்கள் ஸ்வாமி நமோநம! எம்பெருமானே
நமோநம! உன்புகழேபாடி, நான் இனி
அன்புடன் ஆசார பூஜை செய்து உய்ந்திட
வீணாள்படாது அருள்புரிவாயே!
இன்சொல் விசாகா கிருபாகர செந்திலில்
வாழ்வாகிய அடியேன் தனை ஈடேற வாழ்வருள் பெருமாளே!

என்பதாகக் கூறுகிறார். முருகனுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் பலவிதங்களில் தொடர்புண்டு. ஷஷ்டி, ஷண்முகன், கார்த்திகைப் பெண்கள், மந்திரத்தில் 6 அக்ஷரங்கள் என்பதாக பலவும் நமக்குத் தெரிந்ததே!.. இந்த தொடர்பில் உருவான ஒரு ஸ்லோகத்தை இன்று சொல்லி ஷண்முகனைப் இகபரமருள வேண்டுவோம். இந்த ஸ்லோகத்தின் பெயரே ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம் என்பதாகும்.



ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரெளஞ்ச சைல விமர்தனம்
தேவஸேனாபதில் தேவம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

ஆறு முகங்களுடன் கூடியவரும், பார்வதியின் புதல்வரும், மலையாக உருவெடுத்த க்ரெளஞ்சன் என்னும் அசுரனை வதம் செய்தவரும், தேவசேனையின் கணவரும், தேவர்களுக்கெல்லாம்தேவரும், பரமேஸ்வரரின் குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கிறேன்.



தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸன ஸம்ஸ்திதம்
சக்திபாணிஞ்ச தேவேசம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

தாரகாஸுரன வதம் செய்தவரும், மயில் மீது அமர்ந்திருப்பவரும், ஞானவேலைக் கையில் தரித்திருப்பவரும், பரமேஸ்வரரின் குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கிறேன்.


விஸ்வேஸ்வர ப்ரியம் தேவம் விஸ்வேஸ்வர தநூபவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

சகல உலகிற்கும் ஈஸ்வரரான சிவனின் அன்பிற்குரிவரும், தேவரும், வள்ளி-தேவசேனையிடத்து ஆசை கொண்டவரும், மனதைக் கவர்கின்றவரும், பரமேஸ்வரனின் குமாரருமாகிய ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.



குமாரம் முநிசார்தூல மாநஸ ஆனந்த கோசரம்
வள்ளீ காந்தம் ஜகத் யோநிம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

குமாரக் கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்தவடிவமாய்த் தோன்றுகின்றவரும், வள்ளிமணாளரும், உலகங்கள் தோன்றக் காரணமானவரும், ஈசனது புத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கிறேன்.


ப்ரளய ஸ்திதி கர்தாரம் ஆதிகர்தார மீஸ்வரம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

யுகங்களின் முடிவில் உலகனைத்தையும் ஒடுக்குபவரும், உலகனைத்தையும் காத்து அருள்பவரும், முதலில் உலகத்தைப் படைத்தவரும், அனைவருக்கும் தலைவரும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவரும், ஆனந்தத்தால்மதம் கொண்டவரும், பரமேஸ்வரரின் குமாரராகிய ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கின்றேன்.


விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாக இருப்பவரும், க்ருத்திகா தேவிகளின் புதல்வரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.


ஸ்கந்த ஷ்ட்க மிதம் ஸ்தோத்ரம் ய:படேத் ச்ருணூயாந் நர:
வாஞ்சிதான் லபதே ஸத்ய: அந்தே ஸ்கந்தபுரம் வ்ரஜேத்.

ஸ்கந்தனின் ஆறு ஸ்லோகங்களான இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறார்களோ, அவர்கள் ஸ்ரீஷண்முகனின் அருளால் விரும்பும் பொருளை உடனே அடைவார். ஸுகமான இவ்வுலக வாழ்க்கையின் முடிவில் ஸ்ரீஸ்கந்த லோகத்தில் முருகனுடன்சேர்ந்து வாசம் செய்வார்கள்.

மயில் விருத்தம், வேல் விருத்தம் ஆகியவற்ற்றை பற்றி படித்திருக்கலாம். இது போல ஆதிசங்கரரும் சுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் கையில் இருக்கும் சக்தி வேலாயுதத்தைத் துதித்திருக்கிறார். அதைப் பார்க்கலாமா?.



சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸந்நிதஸ்வ

சக்தி வேலே!, ஜகத்திற்குத் தாயும், ஸுகத்தைக் கொடுப்பவளும், நமஸ்கரித்தவர்களுடைய மனோ வியாதியைப் போக்குபவளுமான உன்னைப் பஜிக்கிறேன். ஸ்ரீ குஹனின் கையில் அலங்காரமான சக்தியே !, தங்களுக்குப் பல நமஸ்காரங்களைச் செய்கிறேன். என் ஹ்ருதயத்தில் இருக்க வேண்டும்.

ஞான வேல் முருகனுக்கு அரோஹரா!

சக்திவேல் முருகனுக்கு அரோஹரா!

சுப்ரம்மண்யோஹம்! சுப்ரம்மண்யோஹம்! சுப்ரம்மண்யோஹம்!

Sunday, May 18, 2008

முருகன் தமிழ் கடவுள் மட்டுந்தானா?....



சமிபத்தில் யார் தமிழ் கடவுள் என்று மிகுந்த பரபரப்பான பதிவு ஒன்றை நம் கே.ஆர்.எஸ் எழுதினார். இந்த பதிவினை முடிக்கையில் கந்தன், கார்த்திகேயன் என்றெல்லாம் அழைக்கப்படும் முருகன் மட்டும் தமிழ் கடவுள் அல்ல, மால், ஹரி என்றெல்லாம் சொல்லும் மஹாவிஷ்ணுவும் தமிழ் கடவுளே என்பதற்கு ஏகப்பட்ட தமிழ் இலக்கிய சான்றெல்லாம் தந்து முடித்தார். சாதாரணமாகவே சில தீவிர முருகனடிமைகள், முருகனை ஏதோ வட மொழிக்கு பிடிக்காத தெய்வம் மாதிரி சித்தரித்தும், உச்சரித்தும் மகிழ்வார்கள். வடமொழி முருகனை போற்றவில்லையா?, இவர்கள் சொல்வது போல பார்பன தீவிரவாதத்தால் தான் தெய்வானை என்ற தெய்வமே உருவானதா?. வடக்கில் குமரன், கந்தன் வனங்கப்படுவதில்லையா?.தமிழகத்தில் மட்டும், அதுவும் தமிழ் மட்டுந்தான் முருகனை தெய்வமென போற்றியுள்ளதா?. இதற்க்கெல்லாம் சில குறிப்புக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்வாமி என்பதே சம்ஸ்க்ருதத்தில் சுப்ரமணியரைத்தான் குறிக்கிறது. அமரகோசம் என்று ஒரு நிகண்டு/அகராதி வடமொழியில், அதில் "சுப்ரமணியர்" என்ற பதத்திற்கு "தேவசேனாபதி; சூர; ஸ்வாமி; கஜமுகானுஜ" என்பதாக பொருள் சொல்லப்பட்டிருக்கு. மற்ற தெய்வங்களை சொல்லும் போது இந்த 'ஸ்வாமி' என்ற் ப்ரயோகம் இல்லை. ஆக "ஸ்வாமி" என்பது முருகனை மட்டுமே குறிப்பிடுகிறது.

ஷண்முகனது அவதாரம் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுப்ரமண்ய அவதாரம் என்று சொல்லும் போது, சாந்தோக்ய உபநிஷத் ப்ரம்மாவின் மானச புத்திரான ஸனத்குமாரர் தான் ஸ்கந்தனாக/கந்தனாக அவதரித்தார் என்று சொல்லுகிறது. முருகனின் 'ஞானபண்டிதன்' என்னும் பெயரும் இதை உறுதி செய்வதுபோல் இருக்கிறது. இருள் கடந்த ஓளி ஞானாக்னி என்றெல்லாம் சாந்தோக்யம் கூறுவதாக தெரிகிறது. சுப்ரமண்யர் பற்றி வேதத்தில் இல்லை என்று சொல்லி வருபவர்களுக்காக பரமாச்சார்யார் சில வேத விற்பனர்களை ஆராய வைத்து சொல்லியிருக்கிறார். சிவ புராணத்தில் த்ரிபுர ரஹஸ்யத்தில் ஸனத் குமாரர் சிவ குமரனாக பிறப்பது பற்றிய முழுத்தகவலும் (சரவணப் பொய்கை, கார்த்திகை பெண்கள், ஷண்முக ரூபம் எல்லாம்) இருக்கிறது. இதில் அன்னை பராசக்தியே சரவணப் பொய்கையாக வந்து ஆறு குழந்தைகளைத் தாங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் ஒருவிதத்தில் சரிதானே!, வாயுவாலும் அக்னியாலும், கங்கையாலும் தாங்கமுடியாத ஈசனின் தேஜஸை அம்பிகையால் மட்டுந்தானே தாங்க இயலும். கங்கையால் தாங்கப்பட்டதால் தான் அவன் காங்கேயன். அக்னிச் சுடரில் பிறந்தவர், என்பதையே 'அக்னி பூ' என்று சொல்கிறது அமர கோசம். அதுவும் எப்படி "ஸேநானி; அக்னி: பூ குஹ:" என்று சொல்கிறது. இன்றும் நாம் முருகனை தேவசேனாபதி என்றும் குகன் என்றும் சொல்கிறோம். அக்னிக்கு அதிதேவதையாக ஸ்கந்தனே சொல்லப்பட்டிருக்கிறது.


ரிக்வேத பஞ்ச சூத்திரத்தில் மஹேஸ்வரனை பற்றிச் சொல்லும் போது, "குமாரனை வணங்குகிற பிதா" என்பதாக சொல்லியிருப்பதாக தெரிகிறது, இன்று நாம் சொல்லும் தகப்பன் சாமி எனப்படும் ஸ்வாமிநாதன் தானே இது?. போதாயன மஹரிஷி (இவர் வேதகாலத்து ரிஷி, கர்மாக்களை பிரித்து, அதற்கு மந்த்ர-தந்த்ரங்களை வகுத்தவர்களில் ஒருவர்) தான் எழுதிய தர்ம சூத்ரத்தில் தேவ தர்பணங்களில் ஸ்கந்தனும் அவனது பரிவாரங்களும் இடம் பெறுவதாக தெரிகிறது. பாணினியின் வியாகரணத்திலும், பதஞ்சலி யோக சூத்திரத்திலும் ஸ்கந்தன், விசாகன் என்ற பெயர்களில் முருகனைப் பற்றி விஸ்தாரமாக கூறப்பட்டிருக்கிறதாம்.


கந்தனுக்கு கார்த்திகேயன் என்னும் பெயர் இருப்பது நமக்கு தெரியும், அதன் காரணமும் அறிவோம். கார்த்திகேயன் என்னும் பெயர் வடதேசத்தில் பலகாலமாக வழக்கத்தில் இருக்கிறது. நாம் இங்கு பார்வதி-பரமேஸ்வர குமாரர் என்றால் கணேசனையும் சொல்வோம், முருகனனையும் சொல்வோம். ஆனால் வட தேசத்தில் கார்த்திகேயன் மட்டுமே குமாரனாக கருதப்படுகிறார். வால்மிகி ராமாயணத்தில் வசிஷ்டர் ராம-லக்ஷ்மணர்களுக்கு ஸ்கந்தனது கதையை விரிவாகக் கூறி வேறெங்கும் இல்லாத சிறப்பாக இந்த இடத்தில் ஸ்கந்தனது கதையை கேட்பதால் எற்படும் நன்மைகளுக்கு மட்டும் பலஸ்ருதி சொல்லி அதில், பின்வருமாறு சொல்கிறார், அப்பா, காகுத்ஸா, இந்த லோகத்தில் ஒரு மனுஷன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும், தீர்க்காயுள், புத்ர, பெளத்ராதிகள், எல்லாம் கிடைத்து முடிவில் ஸ்கந்த லோகத்தில் அவருடன் நித்ய வாசமும் செய்யலாம்". இதன் தாக்கத்தாலேயே காளிதாசனும் குமார ஸம்பவம் என்று பெயர் வைத்தார் போல. வட இந்தியாவில் கார்த்திகேயன் பிரம்மச்சாரி. ஆதி சங்கரர் காலத்தில் மீமாம்ஸ கொள்கையில் தீவிரமாக காசியில் வாழ்ந்த குமரில பட்டர் கந்தனின் மறு அவதாரமாகவே போற்றப்படுகிறார். பழங்கால வட இந்தியாவின் கோடிகளில் வாழ்ந்த அரசர்களின் பெயர் "குமார குப்தன்" என்றெல்லாம இருந்திருக்கிறது. குமரனை வெற்றியின் அடையாளமாக வணங்கி அவனது பெயரை தமது சிறப்புப் பெயர்களாக கொண்டுள்ளனர் என்றும், பழங்காலத்தில் ஷண்முகன் மயில் வாகனத்தில் இருப்பது போன்ற நாணயங்கள் (குஷாணர் காலத்தில்) கிடைத்திருப்பதும் தெரிகிறது.


ஆதிசங்கரரது சுப்ரமண்ய புஜங்கமும், அவர் ஸ்தாபித்த ஷண்மதங்களில் கெளமாரமும் ஆதிசங்கரரின் முருக வழிபாட்டிற்கு கட்டியம் கூறுகிறது. அதிலும் அவர் புஜங்கத்தில் 'ந ஜானே ந ஜானே' என்பதாக இன்னொரு தெய்வம் இல்லை, இல்லை என்று இருதரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

________________________________________________________
இன்று (19-05-2008) வைகாசி விசாகம். இவ்வாறாக வேத காலத்திலிருந்தே வணங்கப்பட்ட கந்தக்கடவுள் ஈசனின் தேஜஸிலிருந்து உருவான தினமே வைகாசி விசாகம். 400-450 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய நாட்டில் ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஊரில் சண்முக சிகாமணிக்கும் சிவகாமசுந்தரி என்பவருக்கும் ஒரு ஆண் மகவு பிறந்தது. ஐந்து வயதாகியும் அந்த குழந்தைக்கு பேச்சு வராதது கண்டு பெற்றவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். யாரோ ஒரு யதி அவர்களிடம் திருச்செந்தூர் சென்று ஒரு மண்டல காலம் ஸமுத்ரத்தில் நீராடி செந்திலாதிபனை வணங்கி விரதமிருக்கச் சொன்னார்கள். அவ்வாறு இருந்தும் குழந்தைக்கு பேச வராதது கண்டு வருந்தி, மறுநாள் உஷத் காலத்தில் மகனுடன் கடலில் இறங்கி உயிர்விட முடிவு செய்துவிடுகின்றனர். அன்றிரவு அர்ச்சகர் வடிவில் வந்த குமரன் குழந்தையை தட்டி எழுப்பி அவரது நாவில் ஷடாக்ஷர மந்த்ரத்தை எழுதி, குழந்தாய் சீக்கிரமாக விஸ்வரூப தரிசனம் காண வருமாறு பணித்துவிட்டு செல்கிறார். குழந்தையும் உடனே பெற்றோரை 'அம்மா-அப்பா' என்று அழைத்து எழுப்புகிறது. அவர்களுக்கு தங்கள் அன்பு மகன் பேசுவது கண்டு மிகுந்த வியப்பும், மகிழ்ச்சியும். நடந்ததை குழந்தை தெளிவாகச் சொன்னது. மூவரும் செந்திலாண்டவன் சன்னதிக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் கண்டு விரதம் முடித்து ஊர் திரும்பினர். இந்த குழந்தைதான் பின்னாளில்,

...ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே ......

...சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே ......

என்றெல்லாம் பாடிய குமர குருபரர். இவரது இன்னொரு படைப்பு மீனாக்ஷி பிள்ளைத்தமிழ்.
__________________________________________________________
த்(3)ருஸி ஸ்கந்த மூர்த்தி: ஸ்ருதெள் ஸ்கந்த கீர்த்தி:
முகே(2) மே பவித்ரம் ஸதா தச் சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்(4)ருத்யம்
கு(3)ஹே ஸந்து லீநா: மமாஸேஷ பா(4)வா:


என்னுடைய கண்கள் ஸ்கந்த மூர்த்தியே உங்களையே பார்க்கட்டும், .என் காதுகள் உங்கள் புகழையே கேட்கட்டும். என் நாக்குகள் எப்போதும் உங்கள் புனிதப் புகழ் பாடட்டும். என் கைகள் தங்களுக்கான நற்காரியங்களை செய்யட்டும்! என்னுடல் தங்களுக்கான சேவையில் ஈடுபடட்டும். இது போல என் எண்ணங்களும் எப்போதும் தங்களிடமே உரைந்து போகட்டும்.






வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!


சக்திவேல் முருகனுக்கு அரோகரா!!!