Monday, October 29, 2007

சதுர்பாஹு சமன்விதா


அனனை லலிதாவின் நாமங்களில் "சதுர்பாஹு சமன்விதா" என்பது ஒரு நாமம். இங்கிருந்துதான் அன்னையின் ரூப லாவண்யத்தை சொல்ல ஆரம்பிக்கிறது சஹஸ்ரநாமம். அதாவது நான்கு கரங்களை கொண்டவள் என்பதுதான் சதுர்பாஹு சமன்விதா.
சரி அந்த 4 கரங்களில் இருப்பவை என்ன?. அது எதைக்குறிக்கிறது? அன்னையின் கையில் இருக்கும் நான்கு ஆயுதங்களை சொல்லும்போது பின்வருமாறு கூறுகிறது சஹஸ்ர நாமம்.

ராக-ஸ்வருப பாஷாட்யா
குரோதாகாராங்குச உஜ்வலா
மனோரூபேக்ஷு கோதண்டா
பஞ்சதன்மாத்ர ஸாயகா.

அதாவது பாசம், அங்குசம், கரும்புவில் மற்றும் 5 மலர்களால் ஆன பாணங்கள் இவை அன்னையின் நான்கு கைகளில் இருக்கும் ஆயுதங்கள்.

இக்ஷு கோதண்டா என்பது கரும்புவில் அது வெறும் கரும்பினால் ஆன வில் அல்ல. அது நமது மனத்தை குறிக்கிறது. அதனால்தான் மனோரூபேக்ஷு கோதண்டா. மனம் தான் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வளைந்து கொடுக்கிறது. மனம் தான் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்வதால்தான் மாயையில் வீழ்ந்துவிடும் சாத்தியங்கள் உருவாகின்றது. அறிவியல் மூளை சிந்திக்கிறது என்று சொல்கிறதே தவிர அதனை சிந்திக்கத் தூண்டும் மனம் எங்கு இருக்கிறது என்று சொல்முடியவில்லை. எனவேதான் வளந்து கொடுக்கும் மனத்தை கரும்புவில்லாக கொண்டிருக்கிறாள் அன்னை. ஏன் கரும்பு?, ஏன் மூங்கில் இல்லை?, மனம் என்றும் இனியதை நினைக்கிறது, தனக்கு பிடித்ததையே செயல்படுத்தவிழைகிறது, அதனாலேயே கரும்பு வில் / இக்ஷு கோதண்டம். நமது மனத்தை வளைத்து அதனை தன் போக்கில் விடாமல் சரியாக பயன்படுத்தவேண்டும் என்பதால் தனது கையில் ஒர் ஆயுதமாக கொண்டு இருக்கிறாள்.

எப்படி வெறும் இக்ஷு கோதண்டா இல்லையோ அதேபோல "பஞ்சபாணா" இல்லை. "பஞ்சதன்மாத்ர" நமது ஐந்து தன்மாத்திரைகளைத்தான் மலர் பாணங்களாக கொண்டிருக்கிறாள் அன்னை. அதென்ன "பஞ்ச தன்மாத்திரைகள்"?. கண், காது, மூக்கு, நாக்கு, மேனி ஆகிய ஐம்புலன்கள்தான் பஞ்சதன்மாத்திரைகள். இந்த ஐந்தின் உணர்வுகள்தான் மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு ஞானேந்திரியம் தூண்டப்படுகிறது. இதில் மூளை இடும் கட்டளைகள் முலமே கர்மேந்திரங்கள் நடை பெறுகிறது. மேனி என்று சொல்வதில் கை, கால், மற்றும் விசர்ஜன உறுப்புகள் உள்ளடக்கம். அன்னை வெறுமனே நமது கண், காது போன்றவற்றை கொண்டுள்ளாள் என்ற அர்த்தமல்ல இது. இந்த உறுப்புகள் தரும் தகவல்கள் எல்லாம் அன்னையிடமிருந்து உருவாகிறது. அவை மனதால் செயல்படுத்தப்படுகிறது. அதனால்தான் மனம் வில்லாகவும் இந்த புலன்கள் அம்புகளாகவும் உள்ளது. இவற்றையெல்லாம் இயக்குபவளாக அன்னை இருக்கிறாள்.

சரி, மற்ற இரு-கைகளில் என்ன வைத்திருக்கிறாள்?, பாசம், அங்குசம். அருள் நிறைந்த அன்னை ஏன் இந்த ஆயுதங்களை வைத்திருக்கிறாள்?. யாரைக் கட்டிவைத்து அங்குசத்தால் அடிக்கப் போகிறாள்?.

பாசம் என்றால் கயறு. எமன் கையில் பாசம் இருக்கிறது என்று சொல்லாது பாசக் கயறு இருக்கிறது என்று கயற்றினை அழுத்தமாக இருதரம் உறைக்கிறோம். பாசம் என்றால் கட்டுவது, உலகியல் பந்தாத்தால் ந்ம்மை கட்டுகிறாள் அன்னை. அந்த பந்ததை எப்படி விலக்குவது?, அதற்குத்தான் அங்குசம் அந்த அங்குசம் எப்படிப்பட்டதாம்?, ஜ்வலிஜ்வலிக்கும் அங்குசமாம். எப்போதும் பளபளப்பான ஆயுதம் என்பது நன்கு தீட்டப்பட்டதாகத்தான் இருக்கும். எனவே உஜ்வலமான அங்குசம். சரி, குரோதம் எப்படி வந்தது?, எந்த பந்தமும் குரோதம் உருவாவதால் அழிந்துவிடும். எனவே நம் அன்னை மாயயையால் வரும் பந்தத்தை குரோதத்தால் அழித்து நம்மை வழிப்படுத்த அங்குசத்தை கொண்டிருக்கிறாளாம்.

ஆக இந்தப் பதிவில் அன்னையின் 5 நாமங்களைப் பார்த்துவிட்டோம். அன்னை ஏன் அபய-வர முத்திரைகளை காட்டவில்லை என்பதை ஆதிசங்கரர் செளந்தர்யலஹரி 4ஆவது ஸ்லோகத்திலேயே சொல்லிவிட்டார்.

Sunday, October 28, 2007

ஸ்ரீ மஹாராக்ஞி




முந்தைய பதிவில் ஸ்ரீ மாதா என்கிற நாமம் அன்னையின் ஸ்ருஷ்டிச் செயலையும், கருணையையும் எப்படி எடுத்துக் காண்பிக்கிறதென்று பார்த்தோம். அடுத்த நாமமான ஸ்ரீ மஹாராக்ஞி என்பது சகல பிரபஞ்சத்திற்கும் ராணியாக இருந்து பரிபாலனம் செய்பவள் என்பதைக் குறிக்கிறது.

ராஜராஜன் என்ற பதம் ஈஸ்வரனைக் குறிக்கும். அந்த பரமேஸ்வரனுக்கே ஈஸ்வரி என்பது ராஜராஜேஸ்வரி என்ற நாமம். ஈஸ்வரன் பஞ்சகிருத்யங்களை சக்தியின் உதவியாலேயே செய்கிறான். அன்னைக்கே இன்னுமோரு பெயர் "பஞ்சகிருத்திய பராயணா" என்றும் உள்ளது. அது என்ன பஞ்சகிருத்தியம்?, அப்படியென்றால் என்றால் என்ன?.


பஞ்சகிருத்தியம் என்பது ஐந்து தொழில்கள். பஞ்சகிருத்திய பராயணா என்றால் ஐந்தொழிலைச் செய்பவள் என்றே அர்த்தம். இந்த ஐந்து தொழில்களையே சற்று எளிமைப்படுத்தி, படைத்தல், காத்தல், அழித்தல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்) ஆகிய முத்தொழில்கள் என்று சொல்கிறோம்.


உலகில் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டிக்க வேண்டும், ஸ்ருஷ்டித்தவற்றை காக்க (ஸ்திதி) வேண்டும். தகுந்த காலத்தில் அவற்றை நீக்கவும் வேண்டும். சம்ஹாரம் என்பதை அழித்தல் என்பதாக சொல்வது தவறு என்றே தோன்றுகிறது. இன்றைய அறிவியலும் எந்த சக்தியும் அழிவதில்லை, இன்னோன்றாக மாறுகிறதென்றே சொல்கிறதல்லவா? இதனையே கம்பர் தனது பாயிரத்தில் "தாமுளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும்" என்று கூறுகிறார்.


ஆக, இந்த மூன்று செயல்களும் நடைபெற வேண்டுமானால் இன்னும் இரு செயல்கள் வேண்டியிருக்கிறது, அதுவே திரோபாவம் (அ) திரோதானம் என்று கூறப்படும் மாயை (அ) மறைத்தல். ஐந்தாவது செயல் அனுக்ரஹம். ஆக இந்த ஐந்து தொழிகளையும் அன்னையின் சக்தியாலேயே செய்கிறானாம் ஈஸ்வரன். லலிதையின் ஆயிரம் நாமங்களில் முதல் மூன்று மட்டுமே முத்தொழிலை குறிப்பிடுவது, மற்ற எல்லா நாமங்களும் திரோதானத்தையும், அனுக்ரஹத்தையுமே சொல்லக் கூடியதாக இருக்கிறது.


இதைத்தான் " ஈசாதி தேவதாயை" என்றும் "ஈச சக்தி" என்றும் லலிதா த்ரிசதி சொல்கிறது. இதைத்தான் "நசே தேவம் தேவோ ந கலு குசல: " என்று ஆதிசங்கரர் தனது செளந்தர்ய லஹரி முதல் ஸ்லோகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Friday, October 26, 2007

ஸ்ரீ மாதா



லலிதா சஹஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகம் ஆரம்பிப்பதே "சிந்துராருண விக்ரஹாம் த்ரிநயனாம்" என்று ஆரம்பிக்கிறது. அதாவது அன்னையை சிந்துர வர்ணத்தினள் என்று குறிப்பிடுகிறது. சிந்துர விக்ரஹாம் என்று இல்லாது சிந்தூராருண அதாவது சிந்தூர அருண விக்ரஹாம். அதாவது "உதிக்கின்ற செங்கதிர்" என்பதைத்தான் சிந்தூராருண விக்ரஹாம் என்று குறிப்பிடுகிறார்கள் இங்கே.

அன்னையைப் பலவிதங்களில் நமக்கு தெரியும், இவற்றையெல்லலம் மூர்த்தங்கள் என்போம். காமாக்ஷி, மீனாக்ஷி, தாக்ஷாயினி, அன்னபூர்ணேஸ்வரி என்பதாக பல மூர்த்தங்கள்/ரூபங்கள். இந்த ரூபங்கள் எல்லாமே பராசக்தி என்றாலும் இந்த மூர்த்தங்களுக்கென்று ஆயுதங்கள், நிறம் எல்லாம் தனியாக இருக்கிறது. மீனாக்ஷி என்றால் அவள் மரகத நிறத்தவள் என்றும் அன்ன பூரணி ஸ்வர்ண நிறத்தவள் என்றும், காமாக்ஷி சிவந்த நிறமென்றும் கூறப்படுகிறது.

அன்னை, தக்ஷனின் மகளாக தாக்ஷாயினி என்று சொல்லப்படும் போது அவள் உமாதேவி என்ற விதத்தில் கரிய நிறத்தவளாக அறியப்படுகிறாள். லலிதா, காமாக்ஷி, ராஜராஜேஸ்வரி போன்ற ரூபங்கள் சிவந்த ரூபமாக அறியப்படுகிறது. இதற்கான காரணத்தை பகவத்பாதர் "ஜகத் த்ராதும் கருணா: கசித் அருணா:" என்கிறார். அதாவது உலகைக் காக்க வந்தவள், அந்த செயலைச் செய்ய கருணையுடன் அருண ஸ்வருபமாக தன்னை காணச் செய்தாள் என்கிறார்.

கலர் ஆப் ஜெனிஸிஸ் என்பதன்படி பார்த்தோமானாலும் பல இடங்களில் தோற்றம் என்பதன் நிறமாக கொள்வது சிவப்பு நிறத்தைத்தான். சூரியன் உதிக்கும் நேரத்தில் சிவப்பாக இருப்பான். அந்த நேரத்தில் அந்த கிரணங்கள் பட்டு பூமியும் ஒருவிதமான இளஞ்சிவப்பினை தரும். இதையே பாலா திருபுர சுந்தரியின் தியான ஸ்லோகத்தில் "அருண கிரண ஜாலை:" என்பதாகச் சொல்கிறார்கள். அதாவது அருணனின் கிரணங்கள் போன்ற நிறத்தவள் என்பதாக. மஹா விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா, இருக்கும் அந்த கமலத்தின் நிறமும் இளஞ்சிவப்பே. (வெள்ளைத்தாமரை சரஸ்வதிக்காக, ஞானத்தின் நிறமாக)பிரம்மனின் வேலை படைப்புத்தொழில் என நாமறிவோம்.

ஆக, படைப்பு என்ற தொழிலுக்கான நிறம் சிவப்பு, அதிலும் இளஞ்சிவப்பு என்பதாகக் கொண்ட காரணத்தால்தான் இவ்வாறாக சிந்தூராருண விக்ரஹாம் என்று கூறினார்கள். எனவேதான் அன்னை சிருஷ்டிக்கான வடிவில் வரும் சமயத்தில் கருமை நிறத்தில் வராமல் (கருமை என்பது அறியாமை மற்றும் தாமசத்திற்கான நிறம்) பூலோகத்தில் ஒவ்வொரு ஜிவனுக்கும் தாய் என்பவள் போல உலகிற்கெலாம் தாயாக இருந்து படைத்துக் காப்பதால் இளஞ்சிவப்பு நிறத்தில் படைத்துக் காக்க வருகிறாள். இவ்வாறாக சர்வ உலகங்களுக்கும் தாயாக இருப்பதை குறிப்பதாகவே சஹஸ்ரநாமத்தில் முதல் நாமமாக 'ஸ்ரீ மாதா' என்று ஆரம்பிக்கிறது.

இவ்வளவு தீர்க்கமாக சிந்தித்து இந்த சஹஸ்ர நாமத்தை எழுதியவர் யார் என தெரியுமா?....வசினி எனப்படும் வாக் தேவதைகள் தான் அன்னை லலிதாவின் ஆணைப்படி சஹஸ்ரநாமத்தை எழுதியவர்கள். இந்த வசினி தேவதைகள் அன்னையுடன் நித்ய வாசம் செய்பவர்கள். இதனை அகத்தியர் மூலமாக நமக்கு அளித்தவர் ஹயக்ரீவர்.

Thursday, October 25, 2007

கடை விரித்தேன் கொள்வாரில்லை....

ஏதோ சொல்வார்களே "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று, அந்த கதைதான் நினனவுக்கு வருகிறது. அதிலும் என்னுடைய கடை ரொம்ப ஸ்பெஷலாக, யார் கண்ணிலும் படாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆமாம், தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றில் இணைக்கவில்லை.


ஏனெனில் நான் எழுத நினைப்பது ஆன்மிகம் மட்டுமே, அதிலும் சாக்தம் அதிகமாக. எனவே என் பதிவுகள் ஆன்மிக நண்பர்களுக்கு மத்தியில் மட்டும் புழங்கினால் போதும் என்றே தோன்றுகிறது. திரட்டிகளில் இணைப்பதால் கிடைக்கும் அர்ச்சனைகள் வேண்டாம் என்று தோன்றுவதாலும் இணைக்கவில்லை. எனது இந்த நிலை சரிதானா என்பதிலும் எனக்கு சிறிது சந்தேகம் இருக்கிறது, இன்னும் சிறிது காலம் செல்லட்டும் தெளிவு பிறக்கிறதா பார்க்கலாம்.


பிளாகர்ஸ்-யூனியன் போன்ற குழுக்களில் இணையலாம் என்று தோன்றுகிறது. அதன் அட்மினிஸ்ட்ரேட்ட்ர்கள் சொன்னபடி மெயில் அனுப்பினேன், ஆனால் அப்போது நான் பதிவுகள் எழுதவில்லை. இப்போது ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அம்பியும், டிஸைப்பிளும் அருள் புரியவேண்டும். மேலும் வேறு ஏதேனும் குழுக்கள் இருக்கின்றனவா?. இருப்பின் அறிவிக்கவும்.



பிளாக் டெம்லேடையும் மாற்ற உத்தேசம் இருக்கிறது, ஆனால் நேரமில்லை. எது பெஸ்ட் டெம்லேட் என்பது பற்றி பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இதுபற்றி யாரேனும் ஏதேனும் சஜெஸ்ட் பண்ணினால் தன்யனாவேன்.

செளந்தர்ய லஹரி எழுத ஆரம்பித்துள்ளேன், 5 பதிவுகள் ஆயிற்று. எழுதும் போதுதான் புரிந்தது, அன்னையின் ஆயிரம் நாமங்களை இல்லாவிடினும் சில பல முக்கிய நாமங்களையும் எழுதுவது தேவையென்று. எதற்காக இது என்றால், அன்னையின் அழகை வர்ணிக்கும் ஸ்லோகங்கள் எடுத்தாளும் நாமங்கள் பலவற்றை சஹஸ்ர நாமத்தில் காணக் கிடைக்கிறது.

எனவே இந்தப் பதிவில் அன்னையின் ஆயிரம் நாமங்கள் என்ற தொடராக சில நாமங்களை எனது புரிதலின்படி எழுத உள்ளேன். ஆஸ்திக மஹா ஜனங்கள் படித்து எனது புரிதலில் உள்ள சரி-தவற்றினை திருத்த வேண்டுகிறேன்.

Wednesday, October 17, 2007

ஸ்ரீ மூகபஞ்ச சதீ அருளிய மூக சங்கரர்....

காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி, மற்றும் 5 புலவர்கள் சேர்ந்து "நவரத்தினங்கள்" என்னும் புகழுடன் போஜராஜன் அரண்மனையில் போற்றப்பட்டனர். ஒரு சமயம் இருப்பவர்களில் யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி வருகையில், அன்னை பராசக்தியானவள் தண்டியையும், பவபூதியும் சிறந்த புலவர்கள் என்று கூறுகிறாள். இதனைக் கேட்ட காளிதாஸர் கோபத்துடன் அவசரமாக 'அப்படியென்றால் நான் யாரடி?' என்று அம்பாளிடமே ஏகவசனத்தில் கேட்கிறார். அன்னையும் நிதானமாக 'நீயே நான் தான்' என்றவாறு தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை உணர்த்துகிறாள். ஆனாலும் காளிதாஸர் அவசரப்பட்டு அன்னையை அவதூறாக பேசியதற்கு தண்டனையாக மறுபிறவியில் ஊமையாக பிறக்கும்படி சபிக்கிறாள். காளிதாஸர் மனம் வருந்தி மன்னிக்கும்படி வேண்ட, தேவியும் மனமிரங்கி காளிதாஸர் ஊமையாக பிறந்தாலும் மீண்டும் பேசும்திறனும், கவிபாடும் திறனும் அருளுவதாக வாக்களிக்கிறாள் அந்த வாகிஸ்வரி.


சக்திபீடங்களில் முதன்மையான ஸ்ரீகாஞ்சீ க்ஷேத்திரத்தில் ஓர் அந்தண குடும்பத்தில் ஊமையாக பிறந்தார் காளிதாஸர். மூகர் என்ற பெயருடன் பால்யத்திலிருந்தே ஸ்ரீகாமாக்ஷி சன்னதியில் எப்போதும் அமர்ந்திருப்பார். பக்கத்திலேயே ஒருஸ்ரீவித்யா உபாஸகரும் வாக்ஸித்தியை வேண்டி வழிபட்டு வந்தார். ஓரு நாள் அந்த உபாஸகரைக் கடாஷிக்கும் பொருட்டுஅன்னை அவர் முன் பாலையாக தோன்றுகிறாள். அம்பிகையின் ஸெளந்தர்யத்தைக் கண்ட மூகர், தான் முன் ஜென்மாவில்செய்த சியாமளா தண்டகம் போன்ற கவிதைகளின் நினைவால் உந்தப்பட்டு, தேவியைப் பாட வாய் திறந்து 'பே,பே' என்றுசப்தமிடுகிறார். ஊமைச் சிறுவனின் உளறல் சப்தம் கேட்டு கண்விழித்த உபாஸகர், ஊமையின் அலறலுக்கு இந்த சிறுமியே காரணமென்று அவளை அந்த இடத்தைவிட்டு அகலுமாறு கத்துகிறார்.

"சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்வலா" என்பதான சுத்த வித்தையே போன்ற பல்வரிசைகளில் ஊறி வந்ததாம்பூல ரஸத்தை தேவி மூகரின் வாயில் சேர்த்துவிடுகிறாள். உடனடியாக மூகருக்கும் வந்தது யார் என்பது முதலாக தனதுபூர்வ ஜென்ம தொடர்புகளெல்லாம் புரிகிறது. மேலும் அவர் பேசும் சக்தி மட்டுமல்லாது பாடல்களும் புனையக் கூடிய கவிதாவிலாஸம் சித்தியாகிறது. இவர் ஸ்ரீகாமாக்ஷி மீது பாடிய 500 ஸ்லோகங்களே மூக பஞ்சசதி என்று போற்றப்படுகிறது. இந்த ஸ்லோகங்களானது ஸ்ரீவித்யா மந்திரமே மாற்று உருக்கொண்டதாக சொல்லும்படியான விசேஷ அமைப்புடன் விளங்குகிறது. இந்த மூகரே பிற்காலத்தில் (கி.பி 398) காஞ்சி காமகோடி பீடத்தின் 20ஆவது ஆச்சாரியராக பட்டமேற்று 39 ஆண்டுகள் கழித்து கி.பி 437 ஆம் வருடம் ஸித்தி அடைந்தார்.

அன்னை காஞ்சி ஸ்ரீகாமாக்ஷியை கிருத யுகத்தில் 2000 ஸ்லோகங்களால் துர்வாச முனிவரும், திரேதாயுகத்தில் 1500 ஸ்லோகங்களால் பரசுராமரும், த்வாபர யுகத்தில் 1000 ஸ்லோகங்களால் தெளம்ய மகரிஷியும், கலியுகத்தில் மூக சங்கரர்500 ஸ்லோகங்களாலும் போற்றியுள்ளனர்.