Saturday, September 29, 2007

திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -3
















பாடல் - 7

வெந்த நீறு மெய்பூசிய வேதியன்

சிந்தைநின்ற வருள் நல்கிய செல்வத்தன்

கந்தமெளவல் கமழும் கருகாவூர் எம்

எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே.

நிலையாமைத் தத்துவத்தை உணர்த்தும் திருநீற்றினை தன் திருமேனியில் பூசியுள்ள வேதங்களின் இருப்பிடமானவனும், பக்தர்களின் மனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் திருவருட்செல்வனும், முல்லை மணம் கமழும் கருகாவூரில் விளங்குபவனுமாகிய எம் தந்தையாகிய இறைவனின் திருமேனி நிறம் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் நிறம் போன்ற செம்பவழ நிறமாகும்.
நிலையாமையை உணர்த்தும் திருநீற்றை பல்வேறு சமயத்தாரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். திருமாலடியார்களும் திருநீற்றின் சிறப்பினைப் போற்றியுள்ளனர். "கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரியகோலத்தடங்கண்ணன்" என்று திருவாழ்மொழியிலும் இருப்பதாக அறிகிறேன்.

கந்தம் - சந்தனம்/வாசனை ; மெளவல் - முல்லை ;

பாடல் - 8

பண்ணினேர் மொழியாளையொர் பாகனார்
மண்ணு கோலம்முடையம் மலரானொடும்
கண்ணனேட வரியார் கருகாவூர் எம்
அண்ணல்வண்ணம் அழலும் அழல்வண்ணமே.

இன்னிசை பாடுதல் போல இனிய மொழி பேசும் உமையவளை தனது திருமேனியில், வாம பாகத்தில் கொண்டு விளங்குபவரும், தாமரையில் அமர்ந்து படைப்புத் தொழிலியற்றும் ப்ரம்மாவும், திருமாலும் தேடிக் காண்பதற்கரிய மூர்த்தியாய் நின்றவரும், கருகாவூரில் கோயில் கொண்டுள்ளதலைமையுடைய எம் அண்ணலாகிய சிவபிரானின் நிறம் சுடர்விட்டுக் கனன்று எரியும் தழலின் நிறம் போன்ற செந்நிறமாகும்.

மலரான் - பிரம்மன்; மண்ணுக்கோலம் - படைப்புத்தொழில்; வாம பாகத்தில் அன்னை உமையாளைக் கொண்ட திருக்கோலந்தான் அர்த்தநாரிசுவரர். அடி-முடி காண சென்ற பிரும்மா, திருமால் முயன்றதையும் இங்கு குறிப்பிடுகிறார்.
பாடல் - 9

போர்த்தமெய்யினர் போதுழல் வார்கள் சொல்
தீர்த்தமென்று தெளிவீர் தெளியேன்மின்
கார்த்தண்முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆர்த்தர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.


தெளிவு பெற்றவர்களே, பாயினை உடம்பில் போர்த்தியும், இருளில் விளக்கின்றித் திரிபவர்களும் சொல்வதை உண்மையென்று நம்பாதீர்கள். கார் காலத்தில் பூக்கும் குளிர்ச்சியும், மணமும் உடையதான முல்லை வனமாம் கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் எனக்கு ஆப்தமானவராகிய கடவுளின்திருமேனி நிறம் கனன்று எரியும் செந்தீயின் நிறமாகும்.
தீர்த்தம் - உண்மை; கார் - கார் காலம்; தண் - குளிர்ச்சி ;

பெளத்த, சமண சமயத்தவர்களைத்தாம் பாயினை போர்த்தியவர்கள் என்றும் இருளில் விளக்கின்றி இருப்பவர் என்றும் கூறுவதாக சொல்கிறார்கள். சம்பந்தர் காலத்தில் இந்த இரு சமயங்கள் தமிழகத்தில் வேரூன்றியதால் இப்படி சொல்லியிருக்கலாமென தோன்றுகிறது.

பாடல் - 10

கலவமஞ்ஞை யுலவும் கருகாவூர்
நிலவுபாடல் உடல்யான்றன் நீள்கழல்
குலவுஞான சம்பந்த்தன் செந்தமிழ்
சொலவலாரவர் தொல்வினை தீருமே.

கலவம் - கலாபம் - மஞ்ஞை - மயில்; நிலவு பாடல் - நான்மறை; குலவு - வணங்கி போற்றும்; தொல்வினை - முற்பிறப்பின் பாவம்

தோகை விரித்தாடும் மயில் உலவுகின்ற கருகாவூரில் எழுந்தருளியிருப்பவனும், என்றைக்கும் விளங்குகின்ற அருள்மிக்க பாடல்களார் அர்ச்சிக்கப்படுபவனுமான இறைவனின் திருவடிகளை போற்றி துதிக்கும் ஞானசம்பந்தன் செந்தமிழை சொல்லும் வல்லமை பெற்றவர்களுடைய பாவங்கள் முற்றிலும் தீர்ந்துவிடும்.
மொத்தமாக 11 பாடல்களைக் கொண்ட இந்த திருகருகாவூர் பதிகத்தில், ஒரு பாடல் (8ஆம் எண்ணில் இருக்க வேண்டியது) கிடைக்காததால் இது 10 பாடல்களாக முடிவுருகிறது. இதில் கடைசிப் பாடலில் தனது பெயரையும், பாடலால் உண்டாகும் பலனையும் கூறி முடிக்கிறார் ஞானசம்பந்தர்.

Tuesday, September 25, 2007

திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -2

பாடல் - 4

பொடிமெய்பூசி மலர்கொய்து புணர்ந்துடன்
செடியரல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள்முல்லை கமழும் கருகாவூரெம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே.

மெய்யில்/உடம்பில் திருநீறு பூசிக்கொண்டு, நன் மலர்களைக் கொண்டு தன்னை வழிபாடு செய்வாருடைய உள்ளத்திலுள்ள துன்பங்களை நீக்கிஅருள் நெஞ்சமுடையவராகச் செய்யும் பெருங்குணமுடையவரும், மணம் பரப்பும் முல்லை மலர்கள் எங்கும் திகழும் கருகாவூரில் எழுந்தருளி இருக்கும் எங்கள் அடிகளாகிய இறைவனின் நிறம், கனன்று எரியும் அனலின் செக்கர் நிறமாகும்.

செடியர் - துன்பமுடையவர்; கடி - மணம்; இறைவன் யோக நிலையில் இங்கு குடிகொண்டுள்ளதால் அடிகள் என்று அழைக்கப்படுகிறார்.

பாடல் - 5

மையலின்றி மலர்கொய்து வணங்கிடச்
செய்ய உள்ளம் நல்கிய செல்வத்தர்
கைதண் முல்லை கமழும் கருகாவூரெம்
ஐயர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.

அறியாமை அகன்று அழகிய மலர்களைக் கொய்து தன்னை வணங்குபவர்கட்கு ஞானம் பொருந்திய நீதிசேர்ந்த உள்ளைத்தை அளித்த அருட்செல்வராகியவரும், தாழையின் மீதும் படர்ந்த முல்லை மலர்கள் மணம் பரப்பும் கருகாவூரின் கண் விளங்குபவருமாகிய எம் தலைவரான இறைவனின் திருமேனியின் நிறம் கனன்று விளங்கும் அனலின் நிறம் போன்ற சிவந்த நிறமாகும்.

மையல் - அறியாமை; செய்ய உள்ளம் - நீதிநிறைந்த உள்ளம்; கைதை - தாழை; இறைவன் உண்டு என்ற ஞானநிலையே மையல் இல்லாத நிலையாகும். பந்த-பாச உணர்விலிருந்து விலகிய நிலையினையும் குறிக்கும்.

பாடல் - 6

மாசிறொண்டர் மலர்கொண்டு வணங்கிட
ஆசையார வருணல்கிய செல்வத்தர்
காய்சினந்த விடையார் கருகாவூரெம்
ஈசர்வண்ணம் எரியும் எரிவண்ணமே.

ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று குற்றங்களையும் நீக்கிய தொண்டர்கள், அழகிய மலர்கள் கொண்டு அர்ச்சித்து வணங்க, அவர்களுடையவிருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றி திருவருள் பாலிப்பவரும், மிகுந்த சினத்துடன் விளங்கும் ரிஷபத்தை வாகனமுமாக கொண்ட எம் கருவூர் பெருமானாகிய ஈசரின் திருமேனியின் நிறம் எரிகின்ற தழலைப் போன்ற செம்பவள நிறமாகும்.

மாசு - முக்குற்றம் ; ஆசையார அருள் நல்கிய - நெஞ்சத்து ஆசையெல்லாம் பூர்த்தி செய்கின்ற; விடை - ரிடபம்/தரும தேவதை ; ஈசன் - எல்லோருக்கும் ஆதாரமான தன்மையைக் குறிக்கும்.

Saturday, September 22, 2007

திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -1






சில தினங்கள் முன் திருஞான சம்பந்தர் திருகருகாவூரில் பாடிய தேவாரப்பாடல்களை (10) படிக்க கிடைத்தது. அவற்றைசில பதிவுகளாக இங்கே தருகிறேன். நான் எனக்குப் புரிந்த வரையில் பொருளையும், தொடர்புடைய புராணத்தையும் எழுதியிருக்கிறேன்.
ஏதேனும் தவறிருப்பின் தமிழறிஞர்கள் திருத்த வேண்டுகிறேன்.






பாடல் - 1


முத்திலங்கு முறுவல் லுமையுஞ்சவே
மத்தயானை மறுகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூரெம்
அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே


தன்னுடைய முத்துப்போன்ற பற்கள் ஒளி வீசுமாறு புன்முறுவல் பூத்து அருகில் வீற்றிருக்கும் உமாதேவியார், அச்சம் அடையும்படி மதங்கொண்டு வந்த யானையை நிலைகுலையும்படி வீழ்த்தி, அதன் தோலை உரித்து அந்த கனத்த தோலைப் போர்வையாக போர்த்திக் கொண்ட கருகாவூர் கடவுளாம் எந்தையின் திருமேனி நிறம்சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பு போன்ற சிவந்த நிறமாகும்.


கயாசூரன் என்பவன் நான்முகனிடம் வரம் பெற்று, எல்லாத் தேவர்களையும் வென்றபின் காசியை அடைந்தான். முனிவர்களும், பக்தர்களும் அவன் வரவுகண்டு அஞ்சி மணிகர்ணிகை கட்டத்தில் எழுந்தருளியிருக்கும் விச்வேச்வரரை வணங்கி நின்றனர். அவர்களைக் கொல்வதற்கு முற்பட்ட கயாசூரனை தனது கோடி சூரியப்பிரகாசத்துடன் பேருருத்தாங்கி நின்று தம் திருவடியால் உதைத்து வீழ்த்தினார். யானையுருக் கொண்ட கயாசூரனைத் தன் திருக்கரங்களின் நகங்களால் கீறி அவன் தோலை உரித்தார். அப்போது ஈசனின் திருமேனிப் பிரகாசத்தைக் கண்ட உயிரினங்கள் கண்பார்வையிழந்தன. எனவே பெருமான் அவர்களது கண்ணொளி மங்கியதைப் போக்க உரித்த தோலை தன்மேல் போர்வையாக அணிந்தார் என்கிறது புராணம்.




இவ்வாறாக முதல் வரி ஈசன் அடியவர்க்கு அருளும் கருணையையும், இரண்டாம், மூன்றாம் வரிகளில் அவன் பகைவர்களை அழிப்பதையும் சுட்டுகிறது.
கத்தை- தடித்த தோல்அத்தர் - அத்து + அவர்; அத்து என்றால் வழி; அத்தர் = வழிக்கோலுபவர். உயிர்கள் தோன்ற வழிக்கோலுபவர் என்பது பொருள்.

பாடல் - 2


விமு தவல்ல சடையான், வினையுள் குவார்க
கமுத நீழல் அகலாதோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.


மனதால் நினைத்தவரும், கண்ணால் காண்பவரும் விம்மும்படியான திருச்சடையுடைய பெருமானுக்கு திருத்தொண்டு இயற்ற எண்ணினாலே அவனுடைய திருவடி நிழலில் அமர்ந்திருக்கும் பெரும் புண்ணியம் உண்டாகும். அப்பெருமையுடைய திருவடிகளையுடைய, மணம் கமழுகின்ற அழகியமுல்லை மலர் நிறைந்த கருகாவூர் அமுதரின் திருமேனியின் நிறம், சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பினது சிவந்த நிறமாகும்.



அனைத்து உயிர்களையும் தனதருளால் காப்பதால் அமுதர் என்கிறார். மேலும், விரிசடை என்பது ஞானத்தைக் குறிப்பது. கங்கையை தலையில் கொண்டு பிரவாகத்தை ஒரே சீராக நமக்கருளுவதால் விம்மும்படியான சடையான் என்கிறார்.வினை உள்குவார் - திருத்தொண்டையே மனதில் இருத்தி இருப்பவர், ஈசன் திருவடியெனும் பெருஞ்செல்வத்தை அடைவார்.

பாடல் - 3


பழகவல்ல சிறுத்தொண்டர் பாவின்னிசைக்
குழகரென்று குழையா வழையாவரும்
கழல்கொள்பாட லுடையார் கருவூரெம்
அழகர்வண்ணம் அழலும் அழல்வண்ணமே.


இடைவிடாது வழிபட்ட சிறுதொண்டர் இன்னிசைப்பாட்டின் தன்மையாக இருப்பவன் என்று உள்ளம் உருகப் பாடி அழைக்க, அவர் முன் தோன்றி காட்சியளித்தவரும், பாமலர் சூடிய திருவடிகளையுடையவருமான கருகாவூரில் விளங்கும் எனது அழகிய பெருமானின் திருமேனியின்நிறம், கனன்று எரியும் நெருப்பினது சிவந்த நிறம் போன்றது.


முதலடியில், நல்ல இசைப்பாணர் ஒருவர் இன்னிசையால் மனமுருகிப்பாடி, திருக்கருக்காவூர்ப் பெருமானை அழைத்தபோது பெருமான் அவருக்குக் காட்சியளித்ததை குறிக்கின்றது. அழகென்பது அகம்-புறம் எல்லாம் இனிமையாக இருத்தல், இறைவடிவே அழகின் வடிவம். கழல்கொள் இடல் பாடல் உடையார் - பக்தர்கள் மலர் கொண்டும், பாமாலை கொண்டும் செய்யும் அர்ச்சனையாவையும் ஈசன் திருவடிக்கே.

Friday, September 14, 2007

வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

















எல்லோருக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

கீழே உள்ளது கணேச ருணஹர ஸ்துதி. யார் இயற்றியது என்பது தெரியவில்லை. சிறிய வயதில் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்.

ஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன்.


ஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பல ஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (1)


பிரும்மாவால் உலக ஸ்ருஷ்டிக்கு முன்னால் கார்யசித்திக்காக நன்கு பூஜிக்கப்பட்டபார்வதீ குமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துக் கடன்களையும் போக்கஅனுக்ரஹிக்கட்டும்.


த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் சம்புனா ஸம்யகர்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (2)


திரிபுர சம்ஹாரத்திற்குப் போகும் முன்பு பரமேஸ்வரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


ஹிரண்ய கசிப்வாதீநாம் வதார்த்தே விஷ்ணுநா அர்ச்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (3)


ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்களை வதிக்கும் முன்பு மஹாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


மஹிஷஸ்ய வதே தேவ்யா கணநாத: ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (4)


மகிஷாசுரனை ஸம்ஹரிக்கும் முன் பார்வதீ தேவியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (5)

தாரகாஸீரனை வதைக்கும் முன், ஸ்ரீ சுப்ரமண்யரால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ய ஸ்வஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (6)

சூரிய தேவனால் தனது கார்ய ஸித்திகாக நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


சசிநா காந்தி விருத்யர்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (7)


தனது அழகு நன்கு வளர்வதற்காக சந்திரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


பாலநாய ச தபஸாம் விஸ்வாமித்ரேண பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (8)


தனது தபஸ்ஸைக் காப்பாற்றிக்கொள்ள விஸ்வாமித்த்ர மஹர்ஷியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன்கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


இதம் த்வ்ருணஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாசனம்ஏகவாரம் படேந் நித்யம் வர்ஷ மேகம் ஸமாஹித:தாரித்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேர ஸமதாம் வ்ரஜேத்.

இந்த ஸ்தோத்திரம் கடுமையான ஏழ்மையைப் போக்க வல்லது.

Thursday, September 6, 2007

கனவுகளே,கனவுகளே காலமெல்லாம் வாரீரோ?...

மதிப்பிற்குறிய பதிவர் திருமதி வல்லி அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இந்த பதிவு.



கல்லூரி காலங்களில் நண்பர்கள் பலரும் கதை போல தங்களது கனவுகளை பகிர்ந்து கொள்வோம். ஆனால் இன்று ஏதும் நினைவில் இல்லை. ஒரு சிலவற்றைத் தவிர.

எனக்கு ஏதேனும் உடல் உபாதை உள்ள காலங்களில் எப்போதும் ஒரே கனவு ரிப்பீட்டாகிறது. அதாவது நான் ஒரு மலை உச்சியில் தனியாக இருப்பது போலவும், எப்படி இறங்குவது என்பதற்கு வழிகாட்ட யாரும் வருவார்களா என்று நான் எதிர்பார்ப்பதாகவும் இருப்பதுதான் அந்த கனவு. இதனை கண்ட உடன் முழிப்புத் தட்டி, உறக்கத்திலிருந்து எழுந்து விடுவேன். சமிப காலங்களில் சில பல வியாதிகள் வந்தாலும் இந்தக் கனவு ஏனோ மிஸ்ஸிங். :-)


2000-ல் நவராத்திர்யில் கண்ட கனவு ஒன்றில் எனது தந்தை நவராத்திரியில் மாலை பூஜை முடித்து வருகிறார், அவர் என்னை அழைத்து ஒரு அர்த்த மேருவினை என் கையில் கொடுத்து அதனை விளக்குவதாக. கனவைப் பற்றி தந்தையிடம் கூறினேன். அப்போது அவர் சிரித்துக் கொண்டே விஜயதசமியன்று விளக்குவதாக கூறினார். அதுவரை எனக்கு ஸ்ரீ சக்ர வழிபாட்டினை பற்றிய விஷயங்கள் அவ்வளவாக தெரியாது. இல்லத்திலும் ஸ்ரீசக்ரம் உண்டே தவிர மேரு கிடையாது. அந்த ஸ்ரீசக்ரத்திற்கான பூஜை தந்தை மட்டுமே செய்வார், மற்ற சிலா ரூபங்களுக்கு தாம் எனது சகோதரர்களோ இல்லை நானோ பூஜை செய்வோம். இந்தக் கனவே எனக்கு ஸ்ரீவித்யை என்கிற மகா பொக்கிஷத்தை பற்றி அறிய தந்தது.


இன்னொரு கனவு 2002-ல் கண்டது.....இதில் நான் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன் படிகளில் ஏறும் சமயத்தில் வழுக்கி விழுகிறேன். கால் முட்டியில் சிறு பிராக்சர் ஆகிறது. பெற்றோருக்குத் தெரிவிக்காது பெங்களுரிலேயே வயித்தியம் பார்த்துக் கொள்வதாக கனவு. சரியாக 3 மாதங்களில் இந்த கனவு நினைவாகியது. ஆம்!, நண்பன் ஒருவனது நிச்சயதாம்பூலத்திற்காக கருர் சென்று திரும்புகையில் சேலத்தில் டிரெயினைப் பிடிக்கச் செல்கையில் கீழே விழுந்தேன். கனவில் கண்ட அதே நிகழ்ச்சி.


மற்றபடி எனக்கு பெரிய எதிர்பார்ப்புக்கள்/கனவுகள் ஏதும் இதுவரை இருக்கவில்லை. எனது கர்மாவினை தர்மத்திற்கு விரோதமின்றிச் செய்தலே சிறப்பென்று வளர்க்கப்பட்டேன். இந்த வளர்ப்பினால் இன்றுவரை எந்த ஏமாற்றத்தையும் நான் காணவில்லை. கடந்த சில வருடங்களாக கனவுகளே வருவதில்லை. என்னமோ தெரியவில்லை, ஆழ்ந்த உறக்கமே இருப்பதில்லை என்று அர்த்தமா, இல்லை ரொம்பவே திக் ஸ்கின்னா மாறிவிட்டேனா?. ஒன்றும் புரியவில்லை.