Tuesday, August 24, 2010

காயத்ரி ஜபம் : "ராமோ விக்ரஹவான் தர்ம:" - பகுதி -2


முன்னர் இங்கே ராமோ விக்ரஹவான் தர்ம" என்கிற தலைப்பில் ஒரு இடுகை இட்டேன். இதன் தொடர்பாக சில குறிப்புக்கள் எடுத்தாலும், அப்போது இத்தொடரை தொடரவில்லை. இன்று காயத்ரி ஜபத்தை முன்னிட்டு தொடர்கிறேன். இன்னொரு பகுதியும் இருக்கிறது. அதனை அடுத்த மாதத்தில் இட முயற்சிக்கிறேன்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ராமாவதாரத்திற்கு என்றும் சிறப்பு அதிகம் என்று சொல்வார்கள். மற்ற எல்லா அவதாரங்களிலும் இல்லாத சிறப்பாக இறைவன் மனிதனாகத் தோன்றி, இறைத்தன்மை ஏதும் காண்பிக்காமல் மனிதனாகவே வாழ்ந்து, நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து கண்பித்த அவதாரம். இந்த இடுகையில் ராமாவதாரத்தில் நித்யகர்மாவிற்கு, ஸந்த்யா உபாஸனைக்கு ராமபிரான் கொடுத்த முக்கியத்துவத்தை பார்க்கலாம்.

பால காண்டத்தில் விச்வாமித்ர மஹரிஷியின் யாகத்தைக் காக்க பயணம் செய்கிறார்கள். சரயூ நதியைக் கடந்தாயிற்று. இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் பிரயாணத்தைத் தொடர முடிவு செய்து ஓய்வு எடுக்கிறார்கள். காலை எழுந்தவுடன் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லுகையில், "ஸ்நாத்வா க்ருதோதகெள வீரெள ஜேபது: பரமம் ஜபம்" [பால காண்டம் ஸர்கம் 23] என்கிறார் வால்மிகி. அதாவது, குளித்து, அர்க்யம் அளித்து உயர்ந்த காயத்ரி ஜபத்தைச் செய்தார்களாம். காயத்ரி மந்திரத்தின் ரிஷியான விச்வாமித்ரர் அருகில் இருக்கையில் ராம-லக்ஷ்மணர்கள் காயத்ரியை ஜபித்தார்களாம். இவ்வாறு விச்வாமித்ரருடன் செல்கையில் வழியில் சந்தித்த பல தவசீலர்களும் சந்தியாவந்தனம் செய்தார்கள் என்பதை "யதார்ஹம் அஜபன் ஸந்த்யாம் ருஷயஸ்தே ஸமாஹிதா" என்று கூறுகிறார் வால்மிகி.

சித்ரகூடம் வந்து, விச்வாமித்ரர் யாகத்தை நடத்துகையில், இரவு முழுவதும் கண்விழித்து யாகத்திற்கு பங்கம் இல்லாது காப்பாற்றினாலும், விடியலில் "ப்ரபாதகாலே சோத்தாய பூர்வாம் ஸந்த்யா முபாஸ்ய ச" என்று கூறுவதன் மூலம், விடியலில் ராம லக்ஷ்மணர்கள் சந்தியாவந்தனம் செய்ததை பால காண்டம், 29ம் ஸர்க்கத்தில் கூறுகிறார். இவ்வாறு சூர்யனைக் காணாமல், கோணாமல், கண்டு கொண்டிருக்கும் நேரங்களில் விடாது ஸந்த்யாவந்தனம் செய்த ராமரை யாகம் முடிந்தவுடன் வானளாவப் புகழந்ததாக மட்டும் வால்மிகி சொல்லவில்லை. ராமரைப் புகழ்ந்த அந்த சந்த்யா காலத்தில் அவருடன் சேர்ந்து சந்த்யாவந்தனம் செய்தார் என்பதை, "ஸ ஹி ராமம் பிரசஸ்யைவம் தாப்யம் ஸந்த்யாம் உபாகமத்" என்று பால காண்டம், ஸர்க்கம் 30ல் சொல்லுகிறார்.

பாலகாண்டத்தில் யாகத்தைக் காப்பாற்றும் இடத்தில் மட்டும்தான் சந்த்யாவந்தனத்தை, காயத்ரி ஜபத்தைச் சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால், யாகம் முடிந்து, ஜனகபுரியை நோக்கிச் சொல்லும் போதும், "க்ருத்வா பூர்வாஹ்நிகம் க்ரியாம்" என்று ராமர் சொல்லுவதாக வருகிறது. இதன் பொருள் என்னவென்றால், காலை வேளையில் செய்ய வேண்டிய கர்மாக்களை எல்லாம் முடித்து நாங்கள் தயாராகிவிட்டோம் என்கிறார்.

அயோத்யா காண்டத்தில் ராமரை துயிலெழுப்பியதைச் சொல்லுகையில், துயிலெழுந்த ராமர் தனது ப்ராத ஸந்த்யையை முடித்த பின்னர் மக்களைக் கண்டதாகச் சொல்லும்படி, "பூர்வாம் ஸந்த்யாமுபாஸீனோ ஜ்ஜாப யதமானஸ:" என்று ஸர்க்கம் 6ல் சொல்லுகிறார். இதேபோல ராமன் காட்டுக்குச் செல்லுகையில், ஸாயங்கால சந்த்யாவந்தனம் செய்ததையும் சொல்லியிருக்கிறார் வால்மிகி. இதே போல பரதன் காட்டில் ராமரைக் காணும் போதும் அதிகாலையில் சந்த்யாவந்தனத்தை முடித்த பின்னரே ராமனைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்.

பின்னர் காட்டு வழி செல்லுகையில் அகஸ்தியர் ஆஸ்ரமத்தை நெருங்குகையில், "ராமஸ்ய அஸ்தம் கத: ஸந்த்யா காலோப்யவர்த்த, உபாஸ்ய பச்சிமாம் ஸந்த்யாம் ஸஹப்ராத்ய யதாவிதி" என்கிறார் ஆரண்ய காண்டத்தில். அதாவது அகஸ்தியரது இல்லத்தை நெருங்கிவிட்டதால் ஏதோ 10 காயத்ரி ஜபத்தைப் பண்ணி, தனது கர்மாவை முடிக்கவில்லையாம். 'யதாவிதி' என்பதாக, அதாவது விதிக்கப்பட்ட விதத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தார் என்று கூறுகிறார்.

இதே ஆரண்ய காண்டத்தில், இன்னொரு இடத்தில், கிழக்கில் உதயமாகும் சூர்யனை வணங்கி, கோதாவரி தீர்த்தக் கரையில் முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும் வழிபாடு [ப்ரம்ஹ யக்ஞம்] செய்ததாகச் சொல்லியிருக்கிறார்.

போர்க்காலத்தில் ராமர் ஸந்த்யாவந்தனம் செய்யாது விட்டிருக்கலாம் என்று நினைக்கக் கூடும், அப்படி நினைத்தால் அது தவறு. ஹனுமன் ஸீதாதேவியைக் கண்டு, சூடாமணியைக் கொண்டு வந்த நேரத்தில், தான் எப்போது ஸீதையக் காண்போமோ என்று தவித்த நேரத்திலும் ராமர் தனது ஸந்த்யாவந்தனம் போன்றவற்றைக் காலம் தவறாது செய்ததாக யுத்த காண்டத்தில் சொல்லுகிறார் வால்மிகி.

இப்படி தனது சிறுவயது முதலாக, ச்ரம-திசையிலும் (மனையாள் இல்லாத வாழ்விலும், போர் முனையிலும்) கூட வழுவாது ஸந்த்யாவந்தனம் செய்த காரணத்திலேயே, "ராமனைப் போல் வாழ வேண்டும்" என்று சொன்னார்கள் நம் பெரியவர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. "ராமோ விக்ரஹவான் தர்ம" என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பது புரிகிறதல்லவா?.

நாமும், ஸந்த்யாவந்தனத்தை விடாது, விதிப்படி செய்வோம். நாளை ஒரு நாளாவது ஸஹஸ்ர ஆவர்த்தி காயத்ரி ஜபத்தினைச் செய்வோம்.

Thursday, August 5, 2010

க்ஷராக்ஷராத்மிகா, க்ஷோபிணீ , ஸூக்ஷ்மரூபிணீ



அம்பிகை நிறை குறைகளற்றவள் என்பதை க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா என்ற நாமத்தின் மூலமாகப் பார்த்தோம். இதைப் போலவே இன்னொரு நாமம், "க்ஷயவினிர்முக்தா". க்ஷயம் என்றால் க்ருஹம்/இல்லம் என்று ஒரு பொருள் இருக்கிறது. அதாவது க்ருஹஸ்த ஆச்ரமத்தில் இருக்கும் உபாசகர்களுக்கும் அன்னை முக்தியை அளிப்பவள் என்பது இதன் பொருள். முமுக்ஷுக்கள் இல்லறத்தை விட்டு விலகியிருந்து முக்தியை அடைகிறார்களென்றால், இல்லறத்தில் இருப்பவ்ர்களுக்கும் அம்பிகை முக்தியை அருள்கிறாள் என்று அவளது உபாசனா மார்க்கத்துப் பலனைச் சொல்கிறது இந்த நாமம். பாஸ்கரர் தமது சிவஸ்துதியிலும், துர்வாசர் செய்த தேவி மஹிம்ந-ஸ்தவத்திலும் இவ்வாறான செய்தியைச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

சர்வலோகங்களிலும் இருக்கும் அழியக்கூடிய மற்றும் அழிவில்லாத பொருட்கள் எல்லாவற்றின் ஸ்வரூபமாகவும் அம்பிகை இருக்கிறாள் என்பதே "க்ஷராக்ஷராத்மிகா". அழிவுக்கு உட்படும் எல்லாவற்றையும் க்ஷரம் என்றும் பரப்ரம்ஹத்தை அக்ஷரம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இப்படி க்ஷரம், அக்ஷரம் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆத்மிகாவாக இருப்பவள் அம்பிகை. இது போன்ற நாமம் ஒன்று ஸ்ரீலலிதா த்ரிசதியிலும் இருக்கிறது. அந்த நாமம், "ஏகானேகாக்ஷராக்ருதி:" என்பது. எண்ணிக்கையற்ற அக்ஷரங்களை ஸ்வரூபமாக உடையவள் என்று சொல்லலாம். இதே பொருள் விஷ்ணு புராணம் மற்றும், கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

இப்படி அழிவுள்ள, அழிவற்ற சகலமுமாக இருக்கும் அம்பிகையே ஜகத் சிருஷ்டி நடக்க வேண்டிய காலத்தில் பரப்ராம்ஹமான ஈச்வரனுடைய மனதில் க்ஷோபத்தை (ஒரு வித உணர்ச்சியை) உருவாக்குகிறாளாம். இவ்வாறு க்ஷோபத்தை உருவாக்குவதால் அவளுக்கு "க்ஷோபிணீ" என்ற நாமத்தால் வணங்குகிறார்கள் வாக்தேவிகள். ப்ரக்ருதி ரூபமான அம்பாள் சிருஷ்டி செய்ய வேண்டிய நேரத்தில் ஒருவித உணர்வை ப்ரம்ஹத்திற்கு உருவாக்கி சிருஷ்டி நடக்கச் செய்கிறாள் என்பது இங்கு சொல்லப்படுகிறது. ப்ரம்ஹம் நிச்சலனமானது, சக்தியில்லையேல் சிவமும் சவமே போன்ற வாக்கியங்கள் இங்கு நினைவிலிருத்திக் கொள்ளவேண்டியவை.

வராஹ புராணத்தில் வரும் ஒரு செய்தியையும் இங்கு சொல்லப்படுகிறது. அம்பிகை வைஷ்ணவியாக தபஸ் செய்த காலத்தில் அவளுக்கு ஒருவித கலக்கம் உண்டானதாம். அந்த கலக்கத்தின் காரணமாக கோடிக் கணக்கில் அழகிய யுவதிகள் உருவானார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, அம்பிகையின் சலனம்/கலக்கம் என்பது சிருஷ்டிக்குக் காரணம் என்பதாகத் தெரிகிறது.

சகலமுமான அம்பிகையை "ஸூக்ஷ்ம-ரூபிணீ" என்கிறார்கள். அதாவது ப்ரக்ருதியில் இருக்கும் எல்லாவற்றிலும் ஸூக்ஷ்ம ரூபத்தில், எளிதில் அறியமுடியாதவகையில் இருப்பவள் என்பது நேரடிப் பொருள். ஸுக்ஷ்மம் என்று ஒருவிதமான ஹோமத்தைச் சொல்வதாகத் தெரிகிறது. அவ்வகை ஹோமத்தின் ரூபமாக இருப்பவள் அம்பிகை என்றும் கூறுகிறார்கள். இதைத் தவிர, அம்பிகையின் ஸ்தூல, ஸூக்ஷ்ம, பர ரூபங்களில் இந்த நாமம் ஸூக்ஷ்ம ரூபத்தைச் சொல்வதாகவும் சொல்லலாம்.

Tuesday, August 3, 2010

க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா, க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா



க்ஷேத்ரம் என்பது இறைவன் இருக்கும் ஊருக்கு, கிராமத்திற்குப் பெயர் என்பதை நாம் அறிவோம். காசி-க்ஷேத்ரம், காஞ்சி-க்ஷேத்ரம் என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கிறோம். தக்ஷப் ப்ரஜாபதியின் யாகத்தை அழித்த பிறகு அன்னையின் சரீரத்தை தனது தோளில் தாங்கி அலைந்ததாகவும், அப்போது பரமசிவனது துக்கத்தை மாற்ற யாருக்கும் ஏதும் தோன்றாது இருக்கையில், ஸதீ தேவியின் சரீரம் இருக்கும் வரையில் பரசிவனது துக்கதை மாற்ற இயலாது என்று உணர்ந்த மஹா-விஷ்ணு,தனது சக்ராயுதத்தால் ஸதீதேவியின் சரீரத்தை துண்டாக்குகிறார். அப்படி துண்டுகளான சரீர பாகங்கள் வீழ்ந்த இடம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு க்ஷேத்ரமாக, அம்பிகையின் பீடங்களாக ஆனது என்பர் பெரியோர். இந்த் க்ஷேத்ரங்களில் ஸ்வரூபமாக இருப்பவள் அம்பிகை என்பதே "க்ஷேத்ர ஸ்வரூபா".

க்ஷேத்ரம் என்பதற்கு ப்ரதிவீ போன்ற முப்பத்தாறு தத்வங்கள் அடங்கிய உடலையும் பொருள் சொல்லலாம். உடலில் இருக்கும் ஜீவனை க்ஷேத்ரக்ஞன் என்றும் புருஷன் என்றும் சொல்வது. இப்படி சகல் ஜீவராசிகளிலும் இருக்கும் பரமாத்மா ஸ்வரூபமே அம்பிகை என்றும் சொல்லலாம் என்கிறார்கள் பெரியோர். இப்படி க்ஷேத்ரக்ஞனாக இருக்கும் பரமாத்மாவின் பத்னீ என்பதால் அம்பிகையை "க்ஷேத்ரேசீ " என்று அடுத்த நாமத்தில் சொல்லிவிடுகிறார்கள். இப்படி க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் ஆகிய இருவரையும் காப்பவள் என்பதால் "க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினீ".

இப்படி க்ஷேத்ரக்ஞனான பரமாத்மாவின் பத்னி எப்படிப்பட்டவளென்றால், அவள், குறை-நிறை ஏதுமில்லாது இருக்கிறாள் என்கிறார்கள் "க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா" என்னும் நாமத்தில். "க்ஷயம்" என்றால் குறை, "வ்ருத்தி" என்றால் அதிகம். இந்த பாவங்கள் ஏதுமில்லாதவள் அம்பிகை என்பது சிறப்புத்தானே?.

இப்படி நிறை-குறைகளற்ற அம்பிகையை காக்கும் க்ஷேத்ர பாலனால் வணங்கப்படுபவள் என்பதே "க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா". யாகம் செய்யும் இடத்திற்கும் க்ஷேத்ரம் என்று பெயர். யாகங்களைக் காக்கும் இறைவனை க்ஷேத்ரபாலன் என்பார்கள். அப்படியான க்ஷேத்ரபாலனால் வணங்கப்படுபவள் அம்பிகை என்கிறார்கள். தாருகனை அழித்த தேவி, தனது கோபம் தணியாது இருக்கையில், ஈசன் சிறு பாலகனாக வந்து அவளது ஸ்தனங்கள் மூலமாக பானம் செய்து அவளது கோபத்தைத் தணித்தானாம். இப்படி அம்பிகைகயின் கோபத்தை அடக்கிய ஈசனுக்கு, க்ஷேத்ரபாலன் என்று பெயர். அன்னையினிடத்து தணியாத பக்தியுடையவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையெல்லாம் தகர்ப்பதால் இந்த க்ஷேத்ரபாலகன் விசேஷம். அப்படியான க்ஷேத்ர பாலனே வணங்கும் தேவி என்பது சிறப்பு.