
நான் இந்த வலைப்பூவில் பதிவுகள் போட ஆரம்பித்த போது விநாயகரை பற்றி 3 இடுகைகள் இட்டேன். பிறகு
கணேச ருணஹர ஸ்தோத்திரப் பொருளை போன வருட விநாயக சதுர்த்தியன்று பதிந்தேன். இந்த வருட பிள்ளையார் சதுர்த்தி சிறப்பாக ஒரு இடுகை இட தோன்றியது. அதன் விளைவே இந்த இடுகை. இது விநாயகர் சம்பந்தமான சில செய்திகள் தொகுப்பாக இருக்கும்.
கணபதி, விநாயகர், என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ஏன் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்? பொதுவாக கிராமங்களிலும், சிற்றூர்களிலும் ஊரின் பெரிய குடும்பத்து/செல்வாக்கான குடும்பத்து தலைவரை, ஐயா, எஜமான் என்று குறிப்பிடுவதும், அவரது குடும்பத்து பிள்ளையை பெரியவீட்டுப் பிள்ளை, சின்ன எஜமான் என்றெல்லாம் குறிப்பிடுவது வழக்கம். [இன்றும் கிராமத்துக் கதையைக் கொண்ட சினிமாக்களில் இந்த முறைகளைப் பார்க்க முடிகிறது] இந்த முறையிலேயே அகில-உலகங்களுக்கும் தாய்-தந்தையான பார்வதி-பரமேஸ்வரனின் புத்திரனான கணபதியும் 'பிள்ளை' என்று அழைக்கப்பட்டு, அந்த பிள்ளைக்கு மரியாதை தரும் விதமாக ('அவர்' என்பது போல) 'யார்' சேர்த்து 'பிள்ளையார்' என்று வழங்கப்படுகிறார் என்று பரமாச்சார்யார் சொன்னதாக படித்த நினைவு. வேறு ஏதேனும் காரணங்களும் இருக்கலாம். தெரிந்தவர் பகிர்ந்தால் நலம்.
பிள்ளையாரை எல்லோருக்கும் பிடிக்கும். பார்த்த மாத்திரத்தில் மனதில் ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவும். இதற்கு காரணம் அவருடைய யானை முகம். சாதாரணமாகவே நமக்கு யானை, கடல், சந்திரன் போன்றவற்றை எத்துணை முறை பார்த்தாலும் அலுப்பே தோன்றாது. பிள்ளையார் நன்கு வளர்ந்த குழந்தை, அதுவும் பரமாச்சார்யார் சொன்னது போல, பெரிய வீட்டுப் பிள்ளைக்கு ஊரிலிருக்கும் எல்லோரும் சக்தியான உண்பண்டங்களை கொடுத்து இன்புற, அவரும் அவற்றை எல்லாம் செரித்து கொழு-கொழுவென பெருத்த சரீரத்துடன், மந்தகாச புன்னகை வீசிக் கொண்டிருப்பது நமக்கும் மகிழ்ச்சியை தருகிறது என்றால் அது சரிதானே?
இந்த திருமேனியானது தியானிப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தக் கூடியது, தத்வார்த்தமானது. யானை முகமானது விநாயகர் பிரணவ ஸ்வரூபி என்பதை குறிப்பது. ஐங்கரங்கள் பஞ்சகிருத்தியங்களின் உள்ளடக்கத்தையும், மூன்று கண்கள் [இன்று நாம் வாங்கும் விநாயகர் சிலைகளில் மூன்றாம் கண்ணை பார்க்க இயலாது] சோம, சூர்ய, அக்னியையும், விசாலமான இரு காதுகள் ஆன்மாக்களை வினை என்னும் வெப்பத்தால் தாக்காது காக்கவும், உண்மையின் விளக்கமாகவும், அண்ட-சராசரங்களின் அடக்கமாகவும் பெரு-வயிறும் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. காணாபத்திய முறையில் உபாசிக்கும் அடியவர்கள் கணநாயகனின் உருவில் எல்லா தெய்வங்களையும் வணங்கிடுவதாகச் சொல்லப்படும். அது எப்படியென்றால்,
"அவ்யாக்ருத ப்ரும்மணோ கணேசஸ்ய சரீரே,
நாபிர்-பிரும்மா, முகம் விஷ்ணு; நேத்ரம் ருத்ர:
வாமபார்ச்வம் சக்தி; தக்ஷிணம் சூர்ய: ஆத்மா ஸ்மிதா மய:
அதாவது, கணபதியின் நாபி பிரும்மாவாகவும், முகம் விஷ்ணுவாகவும், கண்கள் ருத்திரனாகவும், இடதுபாகம் சக்தியாகவும், வலது பாகம் சூர்யனாகவும் இருப்பதாக மேலே இருக்கும் ஸ்துதி கூறுகிறது. இது காணாபத்தியத்திய வழிபாட்டில் வரும் ஒரு முக்கிய தியான ஸ்லோகம். எல்லா தெய்வங்களும் கணபதியை ஏதோ ஒரு சமயத்தில், ஏதேனும் ஒரு காரணத்திற்காக வணங்கியதாக புராணங்களில் படித்திருக்கலாம். உதாரணத்திற்கு லலிதையின் பண்டாசுர வதத்தில் ஒருநாள் அன்னையின் சக்தி சேனை தோல்வியை சந்திக்கும் நிலை, அம்பாள் அந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்று ஆராய்ந்ததில், பண்டாசுரனது சைன்யத்தில் இருந்த விசுக்ரன் என்பவன் யுத்தகளத்தில் அமைத்த விக்ன யந்தரம் என்று அறிந்து, கணபதியை தொழுது அதை தகர்த்ததாக தெரிகிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில், "மஹா-கணேச நிர்ப்பின்ன விக்னயந்திர பிரஹர்ஷிதா" என்பது இதைக் குறிக்கும் நாமாவளி. இதே போல் திரிபுர சம்ஹாரத்தின் முன்பாக பரமசிவன் விநாயகரைத் தொழுததாக கணேச புராணத்தில் இருக்கிறது.
விநாயகர் பிரம்மச்சாரி என்பது எல்லோரும் அறிந்தாலும், சில ஆலயங்களில் அவர் ஒரு மனைவியுடனோ அல்லது இரண்டு மனைவியருடனோ காக்ஷி அளிப்பதைப் பார்த்திருக்கலாம். அப்படியானால் அவர் எப்படி பிரம்மச்சாரி என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சித்தி-புத்தி விநாயகர் என்ற பெயரில் இரு தேவிகளாக இருப்பது இச்சா சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும், விநாயகரோ பிரம்ம ஸ்வரூபம். ஆக இச்சையும், கிரியையும் வைத்து ஞானத்தால் சிருஷ்டி பரிபாலனம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சம் ஒடுங்கும் போது இந்த இரு சக்திகளையும் தன்னுள்ளேயே லயப்படுத்திக் கொண்டு ஞானமயமாகிறார்.
உலகில் முதலில் எழுத்துருவை ஏற்படுத்தியவர் விநாயகர்.
மஹாபாரத்தை தனது தந்தம் கொண்டு எழுதியவர். அதனால்தான் இன்றும் பெரியோர் எழுத ஆரம்பிக்கும் முன் பிள்ளையார் சுழியினை போடுகிறார்கள். தற்போதைய குழந்தைகளுக்கு இவை சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். மஹாபாரத்தை எழுத தனது ஒரு தந்தத்தை இழந்ததால் ஏக தந்தர் என்ற பெயர் பெற்றார்.
முடிந்தால் இன்னும் சிலவற்றை நாளை பதிவிடுகிறேன்...