Sunday, September 28, 2008

நவராத்திரி-கொலு பார்க்கலாம் வாங்க -- *நவராத்திரிச் சிறப்பு இடுகை -1*


"சரத்காலே மஹாபூஜா க்ரிய தே யா ச வர்ஷி'கீ, தஸ்யாம் மமைதத் மஹாத்ம்யம் ச்ருத்வா பக்தி சமன்வித: ஸர்வ பாதா விநிர்முக்தோ தன-தான்ய ஸுதான்வித:" என்பது தேவி மஹாத்மியத்தில் அம்பாள் சொல்வது. அதாவது, சரத்க்காலத்தில் எனக்கு மஹா பூஜை செய்து, மஹாத்மியத்தைப் படிப்பது மிகுந்த பலனைத் தருவேன் என்பது பொருள். சரத்க்காலத்தில் வரும் நவராத்திரி தான் சரத் நவராத்திரி என்று பெயர்.

தேவி-மஹாத்மியம் என்பது பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்கண்டேய புராணத்தில் வரும் 700 ஸ்லோகங்கள். இந்த 700 ஸ்லோகங்களே மந்திரங்களாக, தேவி சப்தசதீ என்று சொல்லப்படுகிறது. இந்த நவராத்திரியில் இதனை பாராயணம் செய்வதாலும், பாராயணம் செய்வதை கேட்பதாலும் அன்னையின் அருளுக்கு பாத்திரமாவது உறுதி. இந்த மஹாத்மியம் எல்லோரும் பாராயணம் செய்ய அனுமதியில்லை. நவாக்ஷரி போன்ற மந்திர உபதேசங்களைப் பெற்றவர்களே செய்ய தக்கவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. நமக்கு அதிகாரம் இல்லையெனில், அதனை பாராயணம் செய்யத்தக்கவர்களைக் கொண்டு பாராயணம் செய்ய வைத்து கேட்கலாம். இது நவராத்திரியில் ஒன்பது நாட்கள், தினம் ஒருமுறை பாராயணம் செய்தால் நவ-சண்டீ பாராயணம் என்றும் நூறு முறை பாராயணம் செய்தால் சத-சண்டீ என்றும் கூறுவர். நவராத்திரி சமயத்தில், இல்லத்தில் கட-ஸ்தாபனம் செய்து காலை-மாலை இருவேளைகளும் சஹஸ்ரநாமா, த்ரிசதீ போன்றவற்றை பாராயணமாகவோ இல்லை அர்ச்சனையாகவோ செய்து வழிபடுவது, கொலு வைத்து பூஜிப்பது, ஸுவாஸிநி, கன்யா பூஜை போன்றவை மிகுந்த விசேஷம்.


வியாசரால் எழுதப்பட்ட புராணங்கள் 18. இவற்றுக்கு உப-புராணங்களாக 18 எழுதியுள்ளார். இந்த உப புராணங்களில் ஒன்று தேவி பாகவதம். வியாசர் தனது புத்திரரான சுகரைத் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்திய போது, திருமணத்தை மறுத்த சுகருக்கு இந்த புராணத்தைக் கூறி தேவியை வழிபடப் பணிக்கும் சமயத்தில் அங்கிருந்து கேட்ட சூத முனிவர் இந்த புராணத்தை சனகாதியருக்கு உபதேசித்தார். அதி-விசேஷமான இந்த புராணத்தை நவராத்ரி ஒன்பது தினங்களில் பாராயணம் செய்வதுண்டு.


இந்த நவராத்திரிக்கு எழுதும் பதிவுகள் பெரும்பாலும் இதனை அடிப்படையாக கொள்ள இருக்கிறேன். நவராத்ரியில் கருணாமூர்த்தியான அம்பாளை முதல் மூன்று நாட்கள் துர்காவாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜா முறைகள் பற்றி பல புத்தகங்களில் பலவாறு எழுதப்பட்டிருக்கிறது. அவரவர் இல்லத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கமே ப்ராதான்யமாக கொண்டு செய்தல் நலம்.


இந்த 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம். கொலுவானது 9 படிகளாக வைப்பதே வழக்கம். ஆனால் காலப் போக்கில் அவரவர் இடம்/பொருள் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் இருந்தால் போதும் என்று மாற்றிக் கொண்டுவிட்டனர். இப்படிகளில் பொம்மைகளை வைக்க முறையும் இருக்கிறது. மேலிருந்து வருகையில் முதல் படியில் மரப்பாச்சி, கலசம், இறை உருவங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். இன்று மரப்பாச்சி பொம்மைகளுக்கு மவுசு இல்லை. ஆனால் அவை கதிரம் என்று கூறப்படும் கருங்காலி மரத்தால் ஆனது. இம்மரம் அக்னி ஸ்வரூபமாக கருதப்படுகிறது. இது இருக்கும் இடத்தை தீய சக்திகள் அணுகாது என்பர்.


ஒன்பது படிகள் என்பது நவ-ராத்ரிகளையும், உடலில் இருக்கு நவ துவாரங்களையும், ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நவ கோணங்களையும், நவ கண்டங்களையும் குறிப்பது என்று சொல்வதுண்டு. இந்த ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. அம்பாளை வழிபடுபவர்கள் நற்கதி அடைதலை சோபான பதவி என்பர். இந்த சோபான பதவி அடைய 9 படிகளைக் கடக்கவேண்டும் என்ற தத்துவமும் உண்டு. அந்த 9 படிகளாவது, விவேகம், சலிப்பு/நிர்வேதம், விரக்தி/தாபம். பீதி, நல்வழி, எண்ணங்களில் உயர்வு, ரூப வழிபாடு, க்ஷேத்ர வழிபாடு, பகவத் அனுபவம் ஆகியவை.


நவராத்ரி பூஜை 9 நாட்கள் என்றாலும் இதை செய்பவர்கள் மேற்ச் சொன்னபடி கலசத்தில் அம்மனை ஆவிர்பஹித்தல், கொலு வைத்தல் ஆகியவற்றை அமாவாசையன்றே ஆரம்பிப்பது வழக்கம். அது போல அமாவாசையாகிய இன்று, இந்த இடுகையுடன் மதுரையம்பதியில் நவராத்ரி ஆரம்பிக்கிறது. முப்பெருந்தேவியர் அருள்வேண்டி, இன்று முதல் தினம் ஒரு இடுகை இந்திய நேரப்படி மாலையில் இங்கே இடப்படும்.

பராம்பிகை திருவடிகளே சரணம்.

Wednesday, September 24, 2008

நாத ரூபா, நீல சிகுரா



ஸவ்ய-அபஸவ்ய மார்க்கஸ்தா என்று சஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு ஒரு நாமம். இதன் பொருளைப் பார்க்கலாம். ஸவ்யம் -வலது; அபஸவ்யம் - இடது. மார்கஸ்தா - எந்த மார்க்கத்திலும் வழிபடப்படுபவள். தன்னை வழிபடுபவர்களது வலது-இடது புறங்களில் இருந்து வழி நடத்துபவள் என்று பொருள் கொள்ளலாம். வேதவழியில் செய்யும் வழிப்பாட்டிற்கு ஸவ்யம் என்று சொல்வது வழக்கம். அஸவ்யம் என்பது தாந்திரிக வழிபாடு. ஆக, இந்த இரு முறைகளில் வழிபட்டாலும் அன்னையை அடையலாம் என்றும் பொருள் கொள்ளலாம். இன்னும் சொன்னால் பண்டிதர்கள் செய்யும் வழிபாடு ஸவ்யம், என்னைப் போல பாமரர்கள் செய்யும் வழிபாடு அஸவ்யம். ஆக எப்படி வழிபட்டாலும் அருளுபவள் அம்பிகை. இங்கு வழிபாடுதான் முக்கியமாக கொள்ள வேண்டியது. எந்த முறையில் வழிபாடு என்பது முக்கியமல்ல. பாஸ்கர ராயர் என்று ஒரு மஹான், மராட்டிய தேசத்தவர், ஆனால் காவிரிக்கரையில் வாழ்ந்தவர். [இப்போதும் பாஸ்கர ராய புரம் என்ற ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கிறது] பெரிய சக்தி தாசர். அவர் சஹஸ்ர நாமாவுக்கு பாஷ்யம் எழுதுகையில் அம்பிகையே கிளியாக வந்து அவர் தோளில் அமர்ந்து கேட்டு, சரி பார்த்ததாகச் சொல்வர். இவர் செய்த வழிபாடு ஸவ்ய-மார்க்கம் ஆனால் காளிதாசன் அம்பிகையை வழிபட்ட முறையோ அபஸவ்ய மார்க்கத்தில் என்பார்கள். ஆக, எவ்வழியில் சென்றாலும் அன்னையின் அருளுண்டு.

லலிதா சஹஸ்ர நாமங்களை சற்றே உற்று கவனித்தவர்களுக்கு பின்வரும் செய்தி தெரிந்திருக்கும். சஹஸ்ர நாமம் ஆரம்பிக்கையில் அன்னையின் தோற்றம், பதவி, பண்டாசுர வதம், குண்டலினி சக்தி பற்றிச் சொல்லி, பிறகு தேவியின் நிர்குண வர்ணனை வரும். ஆனால், இந்த நிர்குண வர்ணனை வருகிற போதே ஒரு நாமம், நீல சிகுரா என்று. அப்படின்னா என்ன?. கருமையான கூந்தலை உடையவள் என்று அர்த்தம். அன்னையின் முன்பு சஹஸ்ரநாமத்தை அரங்கேற்றும் சமயத்தில் வசிநீ-வாக் தேவதைகள் நிர்குணத்தை போற்றுகையில் அம்பிகையை பார்த்த போது அவளது கருங்கூந்தலில் தமது மனதைப் பறிகொடுத்து சகுணத்தைப் போற்றும்படியாக நீல-சிகுரா என்றனராம்.

திருக்கோலக்கா என்று ஒரு ஊர், தஞ்சாவூர் ஜில்லாவில் (இன்று பல மாவட்டங்கள் பிரிந்ததால் சரியாக தெரியவில்லை)இருக்கிறது. அங்கு அன்னைக்கு "ஓசை கொடுத்த நாயகி" என்று பெயர். அதென்ன இப்படி ஒரு பெயர்?, இங்குதான் திருஞான சம்பந்தருக்கு அம்பாள் தாள-வாத்யம் கொடுத்தாளாம். (கையில் வைத்துக் கொண்டு பாட்டிற்கு தாளம் போடுவது, ஜால்ரா தானா, இல்லை சிப்ளா கட்டையா என்று தெரியல்ல, ஆனா படங்களில் ஜால்ரா தான் அவர் கையில் இருக்கிறது). இந்தக் கதையால் வந்த நாமம் தான் அங்குள்ள அம்பிக்கைக்கு அப்பெயர் வரக் காரணம். இதற்கு இணையான ஒரு நாமம் "நாத ஸ்வரூபா" என்பது. அன்னை நாதமாக, லயத்துடன் கூடிய ஸப்தமாக இருக்கிறாளாம். குண்டலினி யோகம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு சக்ரத்திலும் ஒவ்வொரு வித நாதம் எழுமாம். அன்னைக்கே குண்டலினீ என்று பெயர் என்பது அறிந்ததே!. பாரதியும் "நாத வடிவானவளே!, நல்லுயிரே கண்ணம்மா" என்று கூறியிருக்கிறார்.

ஆனந்தலஹரியின் கடைசி சில ஸ்லோகங்களில் மஹா-பைரவ, பைரவி ஐக்கியத்தைப் பார்த்தோம். சிவ-சக்தி ஐக்கிய ஸ்வரூபிணி என்பது சஹஸ்ர நாமத்தில் ஒரு நாமம். அதாவது சிவன், சக்தி ஆகியோர் இணைந்த கோலத்தில் இருப்பவள். சக்தியில்லையேல் சிவமில்லை என்பார்களே, அதுதான். அந்த சக்தி-சிவத்துடன் கூடிய ஐக்கிய ஸ்வரூபம். இந்த இணைந்த கோலத்தை திருவெம்பாவையில் மாணிக்க வாசகர் பொய்கை வடிவில் கண்டதாக கூறுகிறார். பராசக்தியிடத்து தோன்றியதுதான் எல்லா சக்திகளும். அது எப்படி என்று நவராத்ரி பதிவில் காண்போம்.

Thursday, September 18, 2008

நீலகண்ட தீக்ஷதர்....

அப்பைய தீக்ஷிதர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது தம்பியின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர். இவர் மதுரையில் நாயக்க அரசுகள் இருந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். அப்பைய தீக்ஷதர் 72 வயது வரை வாழ்ந்தவர், அப்போது நீலகண்ட தீக்ஷிதரது வயது 8. அப்பைய தீக்ஷதருக்கு குழந்தை நீலகண்டன் மிது அலாதி ப்ரியம்.அப்போதெல்லாம் ஸம்ஸ்கிருதம் சிறுவயதிலிருந்தே கற்று தரப்பட்டு, அதிலேயே பேசுவது வழக்கமாயிருந்த காலம்.

தீக்ஷதர் தனது கடைசிக் காலத்தில் குழந்தையிடம் விளையாட்டாக "ஆபதி கிம்கரணீயம்" என்று கேட்டாரம். அதற்கு பதிலாக நீலகண்ட குழந்தை, "ஸ்மரணாயாம் சரண யுகளம் அம்பாயா" என்று சொன்னதாம். "ஆபதி கிம்கரணீயம்" என்றால் "ஆபத்து வந்தால் என்ன செய்ய வெண்டும் " என்று அர்த்தம். இதற்கு குழந்தை சொன்ன பதிலின் பொருள் என்னவென்றால், 'பரதேவதையின் பாதாரவிந்தத்தை நினைக்க வேண்டும்' என்பது. இத்துடன் நின்றதா இந்த சம்பாஷணை என்றால் இல்லை. அடுத்ததாக அப்பையர் "தத் ஸ்மரணம் கிம் குருதே" என்று கேட்கிறார், அதாவது 'அப்படி நினைத்தால் என்ன பலன்'. அதற்கு குழந்தை 'ப்ரும்மாதீன பி இங்கரீ குருதே' அதாவது பராம்பிகையின் பாதாரவிந்தத்தை ஸ்மரணித்தவனுக்கு ப்ரும்மாதி தேவர்கள் சேவகர்கள் ஆகிறார்கள்' என்று பொருள். இவ்வாறாக சிறு குழந்தைப் பருவத்திலேயே அம்பிகையருளால் வாக்விலாஸத்தைப் பெற்றவர் நீலகண்ட தீக்ஷதர்.

இவர் ஆனந்த ஸாகரஸ்தவம் என்று மீனாக்ஷியம்மன் மேல் ஒர் ஸ்லோகம் பண்ணியிருக்கார். அதிலே, "த்வத் பாதபக்தி ரஹிதோம் மம மாஸ்து வம்ச: த்வத் சேவயா விரஹிதம் மம மாஸ்து சாயு" என்று சொல்கிறார். இதன் பொருள்,அம்பிகே!, அடுத்ததாக எனக்கு எந்த பிறவி வேண்டுமானாலும் வரலாம், எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம், அது என் கையில் இல்லை.ஆனால் ஒரேயொரு வேண்டுகோள் என்று சொல்லி, 'உன்பாதார விந்தத்தில் பக்தியில்லாத வம்சத்தில் எனக்கு அடுத்த பிறவி வேண்டாம்' என்கிறார். இவர் சாக்தர், ஆயினும் பராசக்தியை மட்டுமில்லாது எல்லா தெய்வங்ளையும் போற்றி ஸ்லோகங்கள் செய்திருக்கிறார். ஒரு இடத்தில் அம்பாளை தாயாராக விளித்து, உனக்கும் எனக்கும் தாய்-குழந்தை என்ற சம்பந்தம் இருக்கிறது. நான் என்ன தவறு செய்தாலும், அசட்டுத்தனமாக, அ-விவேகமாக உன்னை நினைக்காதிருந்தாலும் நீ என் காதைப் பிடித்து இழுத்து உன்பக்கதிருத்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் சொல்கிறார்.


மதுரையை நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்தில், மந்திரியாக பணியாற்றிய சமயத்தில் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டதுதான் புதுமண்டபம். இங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாட்டினை உடையவை. சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையிம் தமது துணைவியார் சிலைகளையும் தாம் நிவந்தமளித்து சிறப்புச் செய்யும் கோவில்களில் நிறுவது வழக்கம். அது போல புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க உத்தரவிடுகிறார் அரசர். [இன்றும் இச்சிலைகளை அங்கே காணலாம்]. தலைமை சிற்பியே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் முழங்காலுக்கு மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது. மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். மேற்பார்வை பார்க்க வந்த நீலகண்ட தீக்ஷதர், இதை அறிந்து சிலையினை பார்த்த பின், சிற்பியிடம் அரசிக்கு அங்கு மச்சம் இருப்பது உண்மைதான், எனவே அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார். அரசர் சிலையை பார்வையிட வருகையில் இச்செய்தி சொல்லப்பட்டு அரசியின் சிலையாக பின்னப்பட்ட அச்சிலையே இருக்கலாமா என்று கேட்க, அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் நீலகண்டர் மீது மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவரான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு வரவழைக்கிறார்.

சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் அவர் நித்ய-பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, அவன் தரும் தண்டனைக்கு சமமாக தாமே தமது பூஜையில் இருக்கும் சுடரொளியால் தமது கண்களை அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களுடன் அரசவை வருகிறார். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக அரசனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட அரசன், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறான். அப்போது தீஷதர் அன்னை சன்னதிக்குச் சென்று பாடியதுதான் ஆனந்த ஸாகர ஸ்தவம். பாடி முடித்தபின் அன்னை மீனாக்ஷியருளால் தமது பார்வை கிடைக்கப் பெற்றார் தீக்ஷதர்.


வெளியில் அதிகம் தெரியாதவாறு இருப்பினும் இவரது சாக்த குரு பரம்பரை இன்னும் தொடர்கிறது. தமது அமைச்சுப்பதவியை துறந்து, இறுதிக் காலத்தில் திருநெல்வேலி அருகில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார் என்று சொல்கின்றனர்.

Tuesday, September 2, 2008

விநாயகர் - சில செய்திகள்...

நான் இந்த வலைப்பூவில் பதிவுகள் போட ஆரம்பித்த போது விநாயகரை பற்றி 3 இடுகைகள் இட்டேன். பிறகு கணேச ருணஹர ஸ்தோத்திரப் பொருளை போன வருட விநாயக சதுர்த்தியன்று பதிந்தேன். இந்த வருட பிள்ளையார் சதுர்த்தி சிறப்பாக ஒரு இடுகை இட தோன்றியது. அதன் விளைவே இந்த இடுகை. இது விநாயகர் சம்பந்தமான சில செய்திகள் தொகுப்பாக இருக்கும்.

கணபதி, விநாயகர், என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ஏன் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்? பொதுவாக கிராமங்களிலும், சிற்றூர்களிலும் ஊரின் பெரிய குடும்பத்து/செல்வாக்கான குடும்பத்து தலைவரை, ஐயா, எஜமான் என்று குறிப்பிடுவதும், அவரது குடும்பத்து பிள்ளையை பெரியவீட்டுப் பிள்ளை, சின்ன எஜமான் என்றெல்லாம் குறிப்பிடுவது வழக்கம். [இன்றும் கிராமத்துக் கதையைக் கொண்ட சினிமாக்களில் இந்த முறைகளைப் பார்க்க முடிகிறது] இந்த முறையிலேயே அகில-உலகங்களுக்கும் தாய்-தந்தையான பார்வதி-பரமேஸ்வரனின் புத்திரனான கணபதியும் 'பிள்ளை' என்று அழைக்கப்பட்டு, அந்த பிள்ளைக்கு மரியாதை தரும் விதமாக ('அவர்' என்பது போல) 'யார்' சேர்த்து 'பிள்ளையார்' என்று வழங்கப்படுகிறார் என்று பரமாச்சார்யார் சொன்னதாக படித்த நினைவு. வேறு ஏதேனும் காரணங்களும் இருக்கலாம். தெரிந்தவர் பகிர்ந்தால் நலம்.

பிள்ளையாரை எல்லோருக்கும் பிடிக்கும். பார்த்த மாத்திரத்தில் மனதில் ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவும். இதற்கு காரணம் அவருடைய யானை முகம். சாதாரணமாகவே நமக்கு யானை, கடல், சந்திரன் போன்றவற்றை எத்துணை முறை பார்த்தாலும் அலுப்பே தோன்றாது. பிள்ளையார் நன்கு வளர்ந்த குழந்தை, அதுவும் பரமாச்சார்யார் சொன்னது போல, பெரிய வீட்டுப் பிள்ளைக்கு ஊரிலிருக்கும் எல்லோரும் சக்தியான உண்பண்டங்களை கொடுத்து இன்புற, அவரும் அவற்றை எல்லாம் செரித்து கொழு-கொழுவென பெருத்த சரீரத்துடன், மந்தகாச புன்னகை வீசிக் கொண்டிருப்பது நமக்கும் மகிழ்ச்சியை தருகிறது என்றால் அது சரிதானே?

இந்த திருமேனியானது தியானிப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தக் கூடியது, தத்வார்த்தமானது. யானை முகமானது விநாயகர் பிரணவ ஸ்வரூபி என்பதை குறிப்பது. ஐங்கரங்கள் பஞ்சகிருத்தியங்களின் உள்ளடக்கத்தையும், மூன்று கண்கள் [இன்று நாம் வாங்கும் விநாயகர் சிலைகளில் மூன்றாம் கண்ணை பார்க்க இயலாது] சோம, சூர்ய, அக்னியையும், விசாலமான இரு காதுகள் ஆன்மாக்களை வினை என்னும் வெப்பத்தால் தாக்காது காக்கவும், உண்மையின் விளக்கமாகவும், அண்ட-சராசரங்களின் அடக்கமாகவும் பெரு-வயிறும் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. காணாபத்திய முறையில் உபாசிக்கும் அடியவர்கள் கணநாயகனின் உருவில் எல்லா தெய்வங்களையும் வணங்கிடுவதாகச் சொல்லப்படும். அது எப்படியென்றால்,

"அவ்யாக்ருத ப்ரும்மணோ கணேசஸ்ய சரீரே,
நாபிர்-பிரும்மா, முகம் விஷ்ணு; நேத்ரம் ருத்ர:
வாமபார்ச்வம் சக்தி; தக்ஷிணம் சூர்ய: ஆத்மா ஸ்மிதா மய:


அதாவது, கணபதியின் நாபி பிரும்மாவாகவும், முகம் விஷ்ணுவாகவும், கண்கள் ருத்திரனாகவும், இடதுபாகம் சக்தியாகவும், வலது பாகம் சூர்யனாகவும் இருப்பதாக மேலே இருக்கும் ஸ்துதி கூறுகிறது. இது காணாபத்தியத்திய வழிபாட்டில் வரும் ஒரு முக்கிய தியான ஸ்லோகம். எல்லா தெய்வங்களும் கணபதியை ஏதோ ஒரு சமயத்தில், ஏதேனும் ஒரு காரணத்திற்காக வணங்கியதாக புராணங்களில் படித்திருக்கலாம். உதாரணத்திற்கு லலிதையின் பண்டாசுர வதத்தில் ஒருநாள் அன்னையின் சக்தி சேனை தோல்வியை சந்திக்கும் நிலை, அம்பாள் அந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்று ஆராய்ந்ததில், பண்டாசுரனது சைன்யத்தில் இருந்த விசுக்ரன் என்பவன் யுத்தகளத்தில் அமைத்த விக்ன யந்தரம் என்று அறிந்து, கணபதியை தொழுது அதை தகர்த்ததாக தெரிகிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில், "மஹா-கணேச நிர்ப்பின்ன விக்னயந்திர பிரஹர்ஷிதா" என்பது இதைக் குறிக்கும் நாமாவளி. இதே போல் திரிபுர சம்ஹாரத்தின் முன்பாக பரமசிவன் விநாயகரைத் தொழுததாக கணேச புராணத்தில் இருக்கிறது.

விநாயகர் பிரம்மச்சாரி என்பது எல்லோரும் அறிந்தாலும், சில ஆலயங்களில் அவர் ஒரு மனைவியுடனோ அல்லது இரண்டு மனைவியருடனோ காக்ஷி அளிப்பதைப் பார்த்திருக்கலாம். அப்படியானால் அவர் எப்படி பிரம்மச்சாரி என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சித்தி-புத்தி விநாயகர் என்ற பெயரில் இரு தேவிகளாக இருப்பது இச்சா சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும், விநாயகரோ பிரம்ம ஸ்வரூபம். ஆக இச்சையும், கிரியையும் வைத்து ஞானத்தால் சிருஷ்டி பரிபாலனம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சம் ஒடுங்கும் போது இந்த இரு சக்திகளையும் தன்னுள்ளேயே லயப்படுத்திக் கொண்டு ஞானமயமாகிறார்.

உலகில் முதலில் எழுத்துருவை ஏற்படுத்தியவர் விநாயகர்.
மஹாபாரத்தை தனது தந்தம் கொண்டு எழுதியவர். அதனால்தான் இன்றும் பெரியோர் எழுத ஆரம்பிக்கும் முன் பிள்ளையார் சுழியினை போடுகிறார்கள். தற்போதைய குழந்தைகளுக்கு இவை சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். மஹாபாரத்தை எழுத தனது ஒரு தந்தத்தை இழந்ததால் ஏக தந்தர் என்ற பெயர் பெற்றார்.


முடிந்தால் இன்னும் சிலவற்றை நாளை பதிவிடுகிறேன்...

எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

Tuesday, August 19, 2008

திருநெல்வேலி...நவ கைலாசங்கள்... - 1

மதுரைக்கு தெற்கே உள்ள திருத்தலங்கள் என்றாலே நமக்கு நினைவில் வருவது ஸ்ரீ வில்லிப்புத்தூர், ஆழ்வார் திருநகரி, நெல்லையப்பர், தென்காசி, சித்ரசபை எனப்படும் குற்றாலம், கன்யாகுமாரி, ஸ்தானு-மாலையன் வீற்றிருக்கும் சுசீந்திரம், வர்க்கலை ஜகன்னாதன் போன்ற தலங்களே. இவை தவிர நவ திருப்பதி என்று 9 தலங்களைச் சிறப்பாகச் சொல்லுவர். அது போலவே நவ கைலாசம் என்று ஒன்பது சிவஸ்தலங்கங்கள் இருப்பது பலருக்கும் தெரியாது. அதனை பற்றி சுருக்கமாக ஒரு தொடர் எழுத எண்ணம். இவற்றுக்கான மூலமாக நான் கொள்ள இருப்பது அன்புச் சகோதரர்கள் அம்பி-தம்பி வழங்கிய தாமிரவருணி மஹாத்மீயமும் எனது இல்லத்துக்கு அருகில் இருக்கும் ஓர் மூதாட்டியின் வாயிலாக அறிந்ததும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருச்சிற்றம்பலத்தை தரிசித்தால் முக்தி, மதுரை வீதிகளில் நடந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. இதுபோலவே தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ஸ்நானம் செய்தாலோ, அதன் நீரைப் பருகினாலோ எல்லா பாபங்களும் அகலும் என்கிறது தாம்பரணி மஹாத்மீயம். சரி, நவகைலாயம் பற்றி எழுத என்று ஆரம்பித்து இந்த நதி மஹாத்மீயம் எதற்கு என்றால், நவகைலாய க்ஷேத்திரங்கள் பலவற்றிற்கும் தாம்ரவர்ணிக்கும் இருக்கும் தொடர்புதான். இந்நதியின் கரையில் இருக்கும் கோவில்களில் இந்த நவகைலாச தலங்களும் வந்துவிடுகிறது. அது மட்டுமன்றி, மற்ற தலங்களையும் பற்றி அங்காங்கே தொட்டுச் செல்ல எண்ணம். நமது திருநெல்வேலிச் சீமையின் மைந்தர்கள் பலர் இங்கே வருகிறார்கள், அவர்களும் பின்னூட்டத்தில் தமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

சரி நவகைலாசங்கள் என்பது எந்தெந்த ஸ்தலங்கள் என பார்க்கலாம். பாபநாசம் / பாப விநாசம் சேரன்மாதேவி கோடகநல்லூர் குன்னத்தூர் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேந்த மங்கலம் - சேர்ந்த பூ மங்கலம்.


சரி, எப்படி இந்த ஊர்களை மட்டும் நவகைலாசங்கள் என்று கூறுகிறார்கள் இது ஏதும் ஏட்டிக்குப் போட்டியாக வந்த ஸ்தலங்களா? என்பதைமுதலில் பார்த்துவிடலாம்.



ரோமச முனிவர் அப்படின்னு ஒருத்தர். மஹா தபஸ்வி, அகஸ்தியரின் சிஷ்யர். அகஸ்தியரும்-லோபா முத்திரையும் ஹிமவான் மகள் திருமணத்தின் போது வடகோடு உயர்ந்த சமயத்தில் தெற்கே வந்து சமன் செய்த காலத்தில் ரோமச முனிவர் அகஸ்தியரை வணங்கி அவரிடம் உபதேசம் பெறுகிறார். ரோமசரும் தபஸ் பலகாலம் செய்கிறார். ஆனாலும் ஈசனது தரிசனம் கிட்டவில்லை. அப்போது தனது குரு அகஸ்தியரிடமே முறையிட்டு ஈசனின் தரிசனத்துக்கும், முக்திக்குமான வழியை கேட்கிறார். அகஸ்திய முனிவர் சற்றே சிந்தனை வயப்பட்டு பின்னர் ரோமசரிடம், தாமிரபரணி உற்பத்தியாகும் இடத்திற்கு சென்று ஈசனை வழிபட்டு நவகிரஹங்களையும் வழிபடச் சொல்கிறார். அவ்வாறு சொல்லி பின்னர் ஆற்றில் 9 மலர்களை இட்டு, அவை முறையே கரை ஒதுங்கும் இடங்களில் ஈசனது லிங்கங்களை நிறுவி நவகிரஹ வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இவ்வாறாக அகஸ்தியரால் நீரில் விடப்பட்ட ஒன்பது மலர்கள் கரை ஒதுங்கிய இடங்களே மேலே சொல்லப்பட்ட 9 சிவ-க்ஷேத்திரங்கள். இவ்விடங்களில் எல்லாம் உமாபதியை வணங்கி தரிசனம் பெற்று முக்தியடைந்தாராம் ரோமசர். மேலே கூறப்பட்டஇந்த க்ஷேத்திரங்கள் முறையே,சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது மற்றும் சுக்கிரன் ஆகியவை. இவற்றை பார்க்கையில் தஞ்சையை ஒட்டிய நவக்கிரஹ க்ஷேத்திரங்கள் நம் மனதில் நிழலாடுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட சிவ ஸ்தலங்களை மேலக்கைலாயங்கள் (முதல் மூன்று), நடுக்கைலாயங்கள் (4,5,6) மற்றும் கீழக்கைலாயங்கள் என்று கூறுகிறார்கள்.


அடுத்து, தாம்ரபரணி நதியின் கதையை பார்க்கலாமா?, இல்லை பாபநாசத்தில் ஆரம்பித்து நவக்கிரஹ க்ஷேத்திரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாமா என்பதை பின்னூட்டிச் சொல்லுங்கள், அதன்படி செய்யலாம்.

Thursday, August 14, 2008

ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை..

கலியுகத்தில் 400 வருடங்களுக்கும் மேலாக ஜீவசமாதியில் இருந்து தன்னை அண்டியவர்களுக்கு சகலமும் தந்தருளும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை இன்று. அவர் அருளுக்கு இறைஞ்சுவோம். இந்தப் பதிவில் நாம் அறிந்திராத ஒரு மிருத்திகை பிருந்தாவனத்தைப் பற்றி அறிவோம்.
---------------------------------------------------------------------------------------------
கரூர்-மதுரை சாலையில் நன்செய் புகளூர் என்று ஒரு ஊர். பழைமையான காவரிக் கரை கிராமம். நெல்-கரும்பு-வாழை என செழிக்கும் பூமி. 250-300 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஸ்மார்த்தர்களும், மாத்வர்கள் வசிக்கும் ஆற்றை ஒட்டிய அழகிய அக்ரஹாரத்தில் இருக்கிறது ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம் சுமார் 100 வருடங்களுக்கும் முன்னால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. இங்குள்ள மாத்வ குடுமத்தைச் சார்ந்த பெரியவர்கள் 100 வருடங்களுக்கு முன்னால் நடந்தே மந்திராலயம் அடைந்து, மிருத்திகை கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட இடம். அக்ரஹாரத்தில் ஸ்மார்த்த இல்லங்களின் முடிவாக குரு ராகவேந்திரர் கோவில், வெளியே இருந்து பார்க்கும் போது பழையகால ஓடு வேயப்பட்ட ஒரு இல்லம் போன்ற தோற்றம். உள்ளே நுழைந்து இடதுபுறமாக பிரதக்ஷிணமாகச் சென்றால் முதலில் வருவது அனுமன் ஸன்னதி. அனுமனுக்கு வலது புரத்தில், காவிரியை நோக்கியவாறு சுமார் 3 அடி உயரத்தில் காவிரியை நோக்கிய ஒரு அர்த்த மண்டபம் போன்ற ஒரு நீண்ட அமைப்பின் முடிவில் லக்ஷ்மி-நாராயணர் சன்னிதி. அருகில் சிறிய, பிருந்தாவனத்தில் மூல பிருந்தாவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மிருத்திகையில் குருராயர் பிரதிஷ்ட்டை, எதிரில் அனுமார் உற்சவ மூர்த்தியாகவும் அருள் பாலிக்கிறார். கோவிலின் உள்ளேயே அழகிய பழங்காலத்து கிணறு. இந்த வளாகம் தாண்டியவுடன், காவிரி நோக்கிச் செல்ல ஒரு சிறு சந்து. அதில் சென்று ஆற்றில் குளித்துவிட்டு நீர் கொண்டுவந்து பெருமாள், அனுமான் மற்றும் குருராயருக்கு பூஜை.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னால் அலுவலகத்தில் பலவித குழப்பங்களில் தத்தளித்த நேரம், மதுரை சென்று உபாகர்மா பண்ணியாச்சு. மறுநாள் காயத்ரி ஜபம் பண்ணிட்டு பெங்களூர் செல்லவேண்டும். மதுரை-பெங்களூர் மார்க்கத்தில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் இல்லை, பல பேருந்துகள் மாறி-மாறி பெங்களூரை அடைய வேண்டும் என்பதே மனதில் ஒருவிதமான அயற்சியை கொடுத்தது. ஏதோ ஒரு நினைவில் கரூரில் இருக்கும் நண்பனுக்கு போன் செய்து, கரூர்-பெங்களூர் ஏதேனும் தனியார் பேருந்து கிடைக்குமா என்று கேட்கும் போது அவன் குரு ராயர் ஆராதனை பற்றிச் சொல்லி பெங்களூர் செல்லும் வழியில் கரூர் வந்து அங்கே அவனது இல்லத்து கோவிலான குருராயர் பிருந்தாவனத்தில் ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு பின்னர் இருவருமாக பெங்களூர் செல்லலாம் என்று கூறினான்.

எனக்கும் ஒரு மாறுதல் தேவையான நேரம். காயத்ரி ஜபத்தை காவிரிக் கரையில் பண்ணலாம் என்று அப்போதே கிளம்பினேன். ஊரினுள் நுழைந்த உடன், எனக்கு ஏதோ மிகப் பழகிய இடம் போன்ற உணர்வு. அன்பான வரவேற்பும் அவர்கள் இல்லத்து பிள்ளையை கண்ட பூரிப்புடனும் ஆண்-பெண் எல்லோரும் மகிழ்வுடன் வரவேற்றனர். அந்த இடத்துடன் ஒர் பூர்வஜன்ம உறவு போன்ற உணர்வு. இரவு அங்கு சென்ற சமயத்தில் ஒரு வீட்டின் முன்னே சிறுவர்கள் பாடிக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க, பெரியவர்கள் சிறுவர்களது கலை நிகழ்ச்சிகளை ரசித்துச் சிரித்துப் பேசியவாறு இருந்தனர். காலை நிகழ்ச்சிகள் பற்றிப் பேசி பின்னர் பயணக்களைப்புத் தீர நல்ல ஓய்வுக்கு வழி செய்து தந்தனர். காலையில் முதலில் குளித்து அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பின்னர் 9 மணியளவில் அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களுடன் கோவில் சென்று அங்கிருந்து காவிரியில் (நீர் வரத்து இருந்த நேரம்) மீண்டும் நீராடி ராயர் பூஜைக்கு நீர் எடுத்துக் கொண்டு வந்து கோவிலுள் நுழைந்தோம். அந்தோ என்ன ஒரு உணர்வு. இன்றும் எனக்கு உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் விதமான ஒர் உணர்வு. மனதில் இருந்த குழப்பங்கள், கவலைகள் எல்லாம் ஞாயிறைக் கண்ட பனிபோல் விலகிய ஒர் உணர்வு. நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கி சூக்தாதிகள் சொல்லி அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரக் கண்டேன். நண்பனது தந்தை அந்த வருட கட்டளை. அவர் என்னை வைத்து என் குடும்பத்தார் பெயரில் அர்ச்சனைகள் செய்வித்து மந்திராக்ஷதை வழங்கினர்.

திரு-வளாகத்தின் ஒரு பகுதியில் சமையல் நடந்து வந்தது. இன்றைய திருமணங்கள் போன்ற பெரிய விழாக்களில் கூட செய்யப்படாத அபூர்வமான பதார்த்தங்கள் எல்லாம் செய்யப்பட்டு, 11 பண்டிதர்கள், வேத விற்ப்பனர்களை சன்னதி முன் அமர்த்தி ராயர் குரு பரம்பரையினராக வரித்து அவர்களுக்கு உணவிட்டு ஜல பாத்திரம், அர்க்கியம் போன்றவை அளிக்கப்பட்டன. அவர்கள் உண்டு எழுந்தபின் அந்த இலைகளில் அங்கிருக்கும் மாத்வ குடும்பத்தவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களுமாக 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கப்பிரதக்ஷணம். பின்னர் குளித்து வந்த எல்லோருக்கும் (60-70 உள்ளூர் குடும்பங்கள்) உள்ளீட்ட 300-400 பேருக்கு அறுசுவை உணவு. மீண்டும் பெங்களூர் செல்ல வேண்டும் என்ற போது மனதில் எந்த கவலைகளும், வேலை பளூவும் தோன்றவில்லை. தெளிந்த நீரோடை போன்ற மனது என்பதை அப்போது உணர்ந்தேன். வந்து ஒரு வாரத்தில் அமெரிக்க பயணம். அதுவரை மற்ற தேசங்களில் எல்லாம் கோபால் பல்பொடி விற்ற நான் அமெரிக்காவிலும் விற்க்கத் துவங்கினேன்.

மதுரை, பெங்களூர் என்று பல இடங்களில் ஆராதனையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தாலும் குரு ராயரின் சான்னித்தியத்தை மந்திராலயத்திற்கு அடுத்தபடியாக இந்த பூகளூரில் தவிர வேறு எங்கும் உணரவில்லை என்பது உண்மை. இவ்வாறாக 3 நாட்கள் ஆராதனை நடைபெறுகிறது. அந்த மஹான் நித்ய வாசம் செய்யும் மந்திராலயத்தில், மட்டுமல்லாது எல்லா மிருத்திகா பிருந்தாவனங்களிலும் சிறப்பான ஆராதனைகள் நடைபெறும். குரு-ராயர் எல்லோருக்கும் அருளட்டும்.

Sunday, August 10, 2008

அபிராமியும், லலிதையும்

எழுதுவதை நிறுத்தலாம் என்று தோன்றி இருவாரங்கள்தான் ஆகிறது. அதற்கு ஏகப்பட்ட பில்டப் வேறு செய்து, பின்னர் இன்று அதையெல்லாம் விட்டு மீண்டும் எழுத உட்கார்ந்துவிட்டேன். என் எண்ணத்தை குறிப்பாக சில நண்பர்களுக்கு மட்டும் தனிமடலில் சொன்னாலும், அவர்கள் எல்லோரும் போனிலும், தனிமடலிலும் எனக்கு பலவித அறிவுரைகள் அளித்து எழுத தூண்டியதென்னமோ உண்மை. ஆனாலும் இந்த விஷயத்தை தலையாய பணியாக கொண்டு என்னை 'இம்சித்து' எழுதச் செய்தது என்று ஒருவரை கை-காண்பிக்க வேண்டுமென்றால் அது கே.ஆர்.எஸ் தான். இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு வாழ்த்துக்களைக் கூறி, அவருக்கு பிறந்தநாள் பரிசாக இந்த பதிவினை இட முடிவு செய்தேன்.

இந்த இடுகை பலவிதங்களில் முக்கியமாக தோன்றியது. முதலில் இது கே.ஆர்.எஸுக்கு பரிசான இடுகை, இரண்டாவதாக, இது இந்த வலைப்பூவின் 50ஆம் பதிவு. [பலர் 500-600 பதிவுகளுக்கும் மேல் சென்றிருக்க இதென்ன சிறுபிள்ளைதனமோ தெரியல்ல :-)]. கூடலார் எழுதும் அபிராமி அந்தாதி நிறைவு விழாவிற்கு மதுரையம்பதியில் முன்னோட்டம் விடாவிட்டால் எப்படி?. ஆகவே அந்த விதத்திலும் இந்த இடுகை முக்கியம்.

-----------------------------------------------------------------------------------------------
அபிராமி அந்தாதி பாடல்கள் பலவற்றை படிக்கையில் எனக்கு லலிதையின் சஹஸ்ர நாமங்கள் ஆங்காங்கே நினைவில் வந்தது. இன்னும் பலமுறை தொடர்ந்து படிக்க வேண்டும் என்றாலும், ஆங்காங்கே சில பாடல்களுக்கான நாமங்களை மட்டும் இங்கே காணலாம்.

முதலில் "உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமே" என்கிறார் பட்டர்பிரான். அதாவது ஞானவடிவான அம்பிகை பக்தர்களுக்கு சாரம்/ஞானம் அளித்தவள். ஞானிகளை விசாரதர்கள் என்பது வழக்கம். விஷாரதர் என்றால் உணர்ந்தவர் என்ற பொருளும் உண்டு. லலிதையின் சஹஸ்ர நாமத்தை அளித்த வசினி தேவதைகளை விஷாரதா என்பர். சிருங்கேரியில் அன்னை சாஷாரதையாக இருக்கிறாள். ஆக, சஹஸ்ரநாமத்தில் இருக்கும் சாரதா பட்டர் வாக்கில் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாக வருகிறாள்.

அடுத்ததாக சிந்தூர மேனியள்/வணத்தினள்' என்று அம்பிகையை பாடியிருக்கிறார் பட்டர். இதே 'நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் பிரும்மாண்ட மண்டலா' என்று வருகிறது சஹஸ்ர நாமத்தில். அதாவது, அன்னை தனது அருண வர்ணத்தில் உலகை மூழ்கடிக்கச் செய்பவள் என்று அர்த்தம். அருண வர்ணம் என்பது உதிக்கும் சூரியனின் சிந்தூர நிறம்.

பராசக்தியின் பக்தர்களில் முக்கியமானவர் மன்மதன். அன்னையை வணங்கும் பக்தர்களை குறிப்பிடும்படியாக 'மஹேச-மாதவ-விதாத்ரு-மன்மத-ஸ்கந்த-நந்தி-இந்திர-மனு-சந்திர-குபேர-அகஸ்திய-க்ரோத-பட்டாரக வித்யாத்மிகாயை' என்பதாக ஒரு நாமம் உண்டு. இதில் த்ரிமூர்த்திகளுக்கு அடுத்தபடியாக மன்மதனுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மன்மதனுக்கு பிறகுதான் ஸ்கந்தன் இந்திரன், குபேரன் எல்லாம். இதையே பட்டர் ''காமன் முதல் சாதித்த புண்ணியர்' என்று கூறுகிறார்.

"சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்பட்டு" என்பது அந்தாதி கூறும் அன்னையின் உடை. அதாவது சிறிய இடையினில் கட்டப்பட்ட பட்டு என்கிறார். இதை சஹஸ்ரநாமத்தில், 'அருணாருண கெளஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ' என்ற நாமம் கூறுகிறது. அருணகிரணம் போன்ற சிவப்புப் பட்டு வஸ்தரத்தை இடையில் அணிந்தவள் என்பது பொருள்.

'பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளி' என்கிறார் பட்டர் இங்கே. அதாவது அம்பிகையின் குரலினிமையில் தோன்றியதுதான் பண் என்பது பொருள். வாக்தேவதைகள் அன்னையின் குரலினிமையை 'நிஜஸல்லாப மாதுர்ய விநிர்பர்த்ஸித கச்சபி' என்று கூறுகிறார்கள். கலைமகள் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. அந்த வீணையின் நாதத்தை பழிக்கும் மதுரமான குரலுடையவள் அம்பிகை என்கின்றனர்.

'பவாரண்ய குடாரிகா' என்பது அம்பிகையின் நாமம். பவம் என்னும் சம்சார காட்டில் இருந்து நம்மை வெட்டி தன்னகத்தே சேர்ப்பவள் என்று பொருள். சம்சாரத்தில் எப்படி நாம் உழல்கிறோம்?. ஒவ்வொரு ஜன்மத்திலும் தாயின் வயிற்றில் பிறப்பதால் தானே சம்சார பந்தம்?. இதையே பட்டர் 'தாயர் இன்றி மங்குவர் வழுவாப் பிறவியை' என்கிறார் இங்கே.

'சர்வமங்களா' என்பது அன்னையின் இன்னொரு நாமம், மங்கலப் பொருள்கள் எல்லாமாக இருப்பவள் அம்பிகை என்பதே இதன் பொருள். இதையே பட்டர் 'மங்கலை, பூரணாசல மங்கலை' என்று இங்கே கூறியிருக்கிறார்.
------------------------------------------------------------------------------------------------
இப்படியாக இன்னும் எழுதலாம், மணி அதிகாலை 3.00 ஆகிறது, காலை எழுந்து 'அனுஷ்டானங்கள்' இருப்பதால் இந்த இடுகையினை இத்துடன் முடிக்கிறேன். மேலே உள்ள எட்டு நாமங்களுக்கான பாடல்களை குமரன் பதிவில் உள்ள இடுகைகளுக்கான லிங்க் தர வேண்டும். அதனை பின்னர் செய்கிறேன்.

பிறந்தநாள் கொண்டாடும் கே.ஆர்.எஸுக்கும், அம்பிகையின் அலங்கார மாலையாகிய அந்தாதியை சிறப்பாக அளித்த குமரனுக்கும் அன்னை பராசக்தி, அபிராமி சகல செளபாக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அருள வேண்டுகிறேன்.