
அத்ரி மஹரிஷிக்கும் அனுஸுயா தேவிக்கும் மூம்மூர்த்திகளும் மகவாகப் பிறந்ததை நாம் அறிவோம். பிரம்மன் சந்திரனாகவும், மஹாவிஷ்ணு தத்தராகவும், ஈசன் துர்வாஸராகவும் பிறந்தனர். மூவரும் பராசக்தியை வழிபடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். மிகுந்த உரிமை எடுத்துக் கொள்ளுபவர்களை என்ன தலையில் ஏறி உட்காருகிறாய் என்பது போல, சந்திரன் பிறைவடிவில் அன்னை காமாக்ஷியின் திருமுடியை அலங்கரிக்கும் அணியாகி அவளை சந்திர மெளலிச்வரி ஆக்கினான். முதலில் பிரம்மனாக கோவில் எழுப்பி, பின்னர் பரம சாக்தனாக எப்போதும் அன்னையுடனேயே இருக்கும் ஆசையில் சந்திரனாக அமர்ந்துவிடுகிறான். தேவி தன்மேல் இருக்கை தந்த சந்திரனை, ஜீவர்கள் குண்டலினி சாதனையின் முடிவில் தமது சிரத்தில் (சஹஸ்ரகமலத்தில்) அனுபவிக்கின்றனர். இந்த உள் அனுபவத்தை/குண்டலினி மார்க்கத்தை, தந்த்ர-மந்த்ர-யந்த்ர யோக சாஸ்த்ரத்தின் மூலமாக தத்தரும், துர்வாஸரும் நமக்கு அளிக்கச் செய்தனர். தீக்ஷை பெற்று கோவில்களில் உலக நன்மைக்காக பூஜை செய்வதான முறைகள் ஆகமம். இவ்வாறான ஆகமங்களில் ஒன்றான 'ஸெளபாக்ய சிந்தாமணி' என்னும் சாக்த ஆகமத்தை அளித்தவர் துர்வாஸர். இன்றைக்கும் காமாக்ஷி கோவிலில் இந்த முறையிலேயே பூஜைகள் நடைபெறுகின்றன.
முக்கண்ணியான அம்பிகையின் துதி நூல்களில் 'லலிதா ஸ்தவ ரத்னம், செளந்தர்ய லஹரி மற்றும் மூக பஞ்சசதீயும்' மூன்று கண்கள் போன்றது என்பர். இதில் லலிதா ஸ்தவ ரத்னம் என்பது துர்வாஸரால் அளிக்கப்பட்டது. சம்ஸ்க்ருத விருத்த முறைகளில் ஒன்றின் பெயர் 'ஆர்யா' என்பது. அந்த குறிப்பிட்ட விருத்த முறையில் லலிதா ஸ்தவ ரத்னத்தை செய்திருப்பதால் இந்த நூலுக்கு 'ஆர்யா த்விசதி' என்று ஒரு பெயர் உண்டு. இருநூறு ஸ்லோகங்களால் ஆனதால் த்விசதி. சுமேரு மத்ய நிவாசினியான அம்பிகையின் ஸ்ரீசக்ர வெளிச் சுற்றிலிருந்து ஆவரணம், ஆவரணமாக வர்ணிப்பதால் 'ஸ்ரீ சக்ர வர்ணனம்' என்றும் இந்த நூலுக்கு ஒரு பெயருண்டு. இந்த நூல் ஸ்ரீ சக்ர அனுஷ்டானத்திற்கு பெரிதும் உதவக்கூடியது என்பர். காமாக்ஷியின் பூஜாக்ரமத்திற்கு மூல புருஷரான துர்வாஸரது ஸ்தவ ரத்னத்தில் இருந்து சில ஸ்லோகங்களை மட்டும் பார்த்து ஆடிமாத கடைசி வெள்ளியில் அன்னையின் அருளைப் பெறுவோம்.
வந்தே கஜேந்த்ர வதநம் வாமாங்கரூட-வல்லபாச்லிஷ்டம்
குங்கும-பராக-சோணம் குவலியிநீ-ராஜ-கோரகாபீடம்
மஹாகணபதியை வணங்கும் முதல் ஸ்லோகம் இது. தன் இடது தொடையில் அமர்ந்துள்ள வல்லபையால் தழுவப்பட்டவரும், குங்குமம் போன்று சிவந்த நிறத்தவரும், குவளைப் பூ மலர்வதற்குத் தேவையான சந்திரனை சிரசில் சூடியிருப்பவருமான சிறந்த யானை முகத்தவனை வணங்குகிறேன்.
அடுத்ததாக, காமேஸ்வரியை தனது இடது தொடையில் அமர்த்தியிருக்கும் காமேஸ்வரனை எப்படி த்யானிக்கிறார் என்று பார்க்கலாம்.
பாசாங்குசே க்ஷுசாப ப்ரஸவ சர-ஸ்புரித கோமள கராப்ஜம்
காச்மீர பங்கிலாங்கம் காமேசம் மநஸி குர்மஹே ஸததம்
[பாசம், அங்குசம், கரும்புவில், மலரம்புகள் போன்றவற்றை மென்மையான கர கமலங்களில் ஏந்தி, குங்குமச் சாந்து போன்ற மேனியுடைய காமேஸ்வரனை வணங்குகிறேன்.] இதில் காமேஸ்வரனுக்கும், காமேஸ்வரிக்கும் எந்த வித்யாசமும் இல்லை என்பதான கருத்தில் அதே ஆயுதங்களை காமேஸ்வரனும் வைத்திருப்பதாகச் சொல்கிறார்.
அங்குரித மந்தஹாஸாம், அருணாதா காந்தி-விஜித பிம்பாபாம்
கஸ்தூரீ மகரீயுத கபோல ஸங்க்ராந்த கநக தாடங்காம்
முளைவிடும் புன்னகையுடையவளும், கொவ்வைப் பழத்தை வெல்லும் செவ்வொளி உதட்டினளும், கஸ்தூரிக் குழம்பு பூசப்பட்ட கன்னத்தில் பிரதிபலிக்கும் தங்கத் தாடங்கங்களை உடையவள் என்று கூறுகிறார். பின்னர் அன்னையை நமஸ்கரிக்கும் போது,
நதஜன ஸுலபாய நமோ, நாலீகஸ நாபி லோசநாய நம:
நந்தித கிரிசாய நமோ, மஹஸே நவ நீப பாடலாய நம:
என்று அம்பிகையை பெண்பாலில் சொல்லாது ஒளி என்பதாகத் துதிக்கிறார். வணங்கும் அடியவருக்கு எளிதில் கிட்டும் ஒளிக்கு நமஸ்காரம்; தாமரைக் கண்படைத்த (ஒளிக்கு) நமஸ்காரம்; பரமேஸ்வரனை மகிழ்விக்கும் (ஒளிக்கு) நமஸ்காரம்; புத்தம்-புது கடம்ப மலர்போல் சிவந்த (ஒளிக்கு) நமஸ்காரம் என்று பொருள். எல்லாமும் ஒளியாக, அன்னையைக் கண்ட துர்வாஸர், பின்வருமாறு வணங்குகிறார்.
பவநமயி பாவகமயி க்ஷோணிமயி ககநமயி க்ருபீடமயி
ரவிமயி சசிமயி திங்மயி ஸமயமயி ப்ராணமயி சிவே பாஹி
[வாயுவானவள், தீயானவள், மண்ணானவள், விண்ணானவள், நீர்மயமானவள், கதிரவனானவள், மதியானவள், திக்குகள் ஆனவள், கால-தத்வமானவள், உயிரானவள் ஆகிய மங்கள ரூபிணியே காப்பாற்று]. நாமும் இவ்வாறே அன்னையை வணங்கிடுவோம்.
முதலில் பரமேஸ்வரனால் ஏற்படுத்தப்பட்ட காமகோடி பீடம், பின்னர் துர்வாஸராலும், சங்கர பகவத்பாதராலும் புனரோத்தாரணம் செய்யப்பட்டதாகச் சொல்வர். 'நகரேக்ஷு காஞ்சி' என்று புகழப்படும் காஞ்சியில் நித்யவாசம் செய்யும் அம்பிகை எல்லோருக்கும் நல்லருள் நல்க பிரார்த்தனை செய்திடுவோம்.
ஜெய ஜெய காமாக்ஷி!
ஜெய ஜெய காமாக்ஷி!