10 நாட்கள் முன்பு இல்லத்திற்கு அருகில் இருக்கும் ராகி-குட்டா கோவிலில் ஒரு பிரசங்கத்தைக் கேட்க நேர்ந்தது. அங்கே ராமசந்த்ர பட் என்பவர் விதுர நீதி பற்றி ரொம்பவும் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். கன்னடத்தில்தான் பேசினார் என்றாலும் அவரது பிரசங்கம் நன்றாகப் புரிந்தது. அந்த பிரசங்கம் முடிந்தபின்னர் அவருடன் சிறிது நேரம் பேசினேன். அந்தப் பிரசங்கமும், அவருடன் தனியாக பேசியதுமே இந்த இடுகை.
மஹாபாரதத்தின் இறுதிப் பகுதியில் 3 உபதேசங்கள் நடைபெறுகின்றது. ஒன்று நாம் மிகவும் அறிந்த(?) கீதோபதேசம், இன்னொன்று பீஷ்மர் தருமருக்கு அம்புப் படுக்கையில் இருந்தவாறு உபதேசித்த அறிவுரைகள் மற்றும் சஹஸ்ரநாமம். மூன்றாவதாக வருவது விதுரர் திருதராஷ்டிரருக்குக் கூறிய ஆலோசனைகள், இதுவே விதுர நீதி என்று போற்றப்படுகிறது. பாரதத்தைக் கதையாகச் சொல்லுகையில் சுவாரஸ்யக் குறைவு ஏற்படாதிருக்க இந்த மூன்று உபதேசங்கள் விரிவாகச் சொல்லப்படுவதில்லை, அதிலும் குறிப்பாக விதுரரது உபதேசங்கள் 2-3 வரிகளிலேயே அடங்கிவிடுகிறது. ஆனால் மஹா-பாரதத்தில் இந்தப் பகுதி 605 ஸ்லோகங்களாக, 1200க்கும் மேற்பட்ட வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.
குருஷேத்திரப் போரை தடுக்க முயலும் திருதராஷ்டிரர் முதலில் சஞ்சயனைத் தூது அனுப்பி பாண்டவர்களிடத்துப் பேசி போரைத் தவிர்க்க முயல்கிறார். சஞ்சயன் பாண்டவர்களிடத்துப் பேசியதும், அப்போது தருமர் அளித்த பதிலும் நாம் அறிந்ததே. இந்த உரையாடல் முடிந்து இரவு நேரத்தில் ஹஸ்தினாபுரம் திரும்பிய சஞ்சயன், தான் தருமரை சந்தித்துவிட்டு திரும்பி விட்டதாகவும், மறுதினம் அரசவையில் தூதுச் செய்திக்கான தருமரது பதிலைக் கூறுவதாகவும் திருதராஷ்டிரருக்குச் செய்தி அனுப்புகிறான். சஞ்சயன் என்ன பதிலைக் கொண்டு வந்திருப்பானோ என்ற கவலையில் இரவு நித்திரை வராது தவிக்கிறார் திருதராஷ்டிரர். நித்திரையில்லா அந்த இரவை பேசிக் கழிக்க முடிவு செய்து, பேசத்துணையாக விதுரரை அழைத்துவரச் செய்கிறார். இந்த நேரத்தில் திருதராஷ்டிரருக்கும் விதுரருக்கும் ஏற்பட்ட சம்பாஷணையே விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது.
விதுரர் வந்து அரசரை/திருதராஷ்டிரரை வணங்குகிறார். அச்சமயத்தில், திருதராஷ்டிரர் விதுரரிடம், "இனியவனே, நம்மில் நீதான் சாஸ்திரங்களையும், புனித நூல்களையும் நன்கு படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறாய். சஞ்சயன் நாளை அரசவையில் சொல்லக்கூடிய செய்தி என்னவாக இருக்கும்என்பதை நினைத்து எனக்கு உறக்கம் வரவில்லை. உடல் முழுதும் தகிப்பாகவும், உதறலாகவும் இருக்கிறது. அவன் என்ன செய்தி கொண்டுவந்துள்ளானோ?, தருமபுத்திரனின் விருப்பம் என்னவாக இருக்கும் என்பதும் உன்னால் மட்டுமே ஊகித்துச் சொல்ல முடியும் என்று தோன்றியதால் உன்னை இங்கு அழைத்தேன். உனது எண்ணங்களைச் சொல்வாயாக" என்று கூறுகிறார்.
இந்த இடத்தில் திருதராஷ்டிரருக்குப் பதிலாக விதுரர் கூறுவதாக இருப்பதுதான் விதுர நீதி என்று போற்றப்படுகிறது. இந்தப் பகுதி கேள்வி-பதிலாக இருந்தாலும், பெரும்பாலும் விதுரர் தமது பதிலில் அரசன் செய்ய வேண்டிய கடமைகளையும், அறநெறி வழுவாத அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாகஎடுத்தியம்புகிறார். அரசர் பாண்டவர்களையும் தன் மக்களாகவே கருத வேண்டும் என்றும், பாண்டவர்களுக்கு அரசுரிமை அளிக்க வேண்டும் என்பதை தர்ம-சாஸ்திரம் மற்றும் வேதகால ரிஷிகளது கதைகளையும் உதாரணமாகக் காட்டி விளக்குகிறார். இந்த சம்பாஷணையை விதுரர் பின்வருமாறு ஆரம்பிக்கிறார்.
பலகீனர்கள், வாழ்க்கைக்கான சாதனங்கள் அற்றவர்கள், சொத்தை இழந்தவர்கள், காதலிப்பவர்கள், திருடர்கள் இவர்களுக்கே இரவில் உறக்கம் வராது என்று கூறி, நீங்கள் மேற் சொன்ன எதிலும் அடங்காதவராயிற்றே!, மற்றவர்கள் சொத்தை அபகரிக்கும் பேராசை அற்றவராயிற்றே,பிறகு ஏன் கலங்குகிறீர்கள் என்று கூறி, ஞானி என்பவர் யார்?, அறிஞர் என்பவர் யார்?, அவர்களது செயல்பாடு எப்படி இருக்க வேண்டும், அறிவிலியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், பொறுமையின் மாண்பு என்று பல விஷயங்களைப் பட்டியலிட்டு பதிலுரைக்கிறாராம்.
சில-பல வருஷங்கள் முன்பு வரை கர்நாடகாவில் பள்ளிகளில் விதுர நீதி பாடமாக இருந்ததாம். விதுர நீதி தனியாக தமிழில் புத்தகங்கள் ஏதும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை, ஸ்ரீ ராமசந்த்ர பட் அவர்கள் கன்னட புஸ்தகம் வைத்திருந்தார், கன்னடம் எழுத-படிக்கத் தெரியாததால் இரவல் வாங்க இயலவில்லை :-). தமிழில் ஏதும் புத்தகம் இருந்து, இதைப் படிப்பவர்கள் யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள்.