Showing posts with label லலிதா சஹஸ்ர நாம பாஷ்யம். Show all posts
Showing posts with label லலிதா சஹஸ்ர நாம பாஷ்யம். Show all posts

Wednesday, March 11, 2009

ஸ்ரீ பாஸ்கர ராயர்.... பகுதி-2


முந்தைய பகுதி இங்கே!

பாஸ்கர ராயர் காலத்தில் கர்னாடகத்தில் பாலகீ என்ற ஊரின் சிற்றரசனாக இருந்தவர் சந்த்ரஸேன ஜாதவ் என்பவர். இவர் பாஸ்கர ராயரிடத்து மிகுந்த மரியாதையும், பக்தியும் கொண்டிருந்தார். தமக்கு மழலைச் செல்வம் இல்லை என்று வருந்திய அவர், ஒரு சமயம் ராயரிடத்தில் தனது மனக் குறையினைக் கூறி வருந்துகிறார். ராயரும் தமது பூஜையை முடித்த பின்னர் சிற்றரசனுக்குப் அன்னையின் பிரசாதத்தை அளித்து, அவனுக்கு புத்திரன் பிறப்பான் என்று அனுக்கிரஹம் செய்து அனுப்புகிறார். சில காலத்தில் அவனது மனைவியும் கருவுற்று இருக்கையில் பாஸ்கர ராயரது சிஷ்யர்களில் ஒருவரான நாராயண தேவர் என்னும் உபாசகர் பாலகீக்கு வருகிறார். அவரை வரவேற்று, உபசரித்த அரசன், அவரிடத்து தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று கேட்கிறான். நாராயண தேவர் பெண் குழந்தை பிறக்கும் என்று கூற, அரசன் ராயர் மகன் பிறப்பான் என்று கூறினாரே என்று புலம்புகிறான்.
அரசனது புலம்பலைக் கேட்ட ராயரது சிஷ்யரான நாராயண தேவர் அரசன் தனது குருவின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தையும், அதனை தன்னிடமே சோதனை செய்ததையும் கண்டு கோபம் கொள்கிறார். அதன் காரணமான அரசனை சபித்து அவனுக்கு ஆணும் இல்லாது, பெண்ணுமில்லாது நபும்ஸகனாக குழந்தை பிறக்கும் என்று சபித்து விடுகிறார். அச்சாபத்திற்கு ஏற்ப அவனுக்குப் பிறக்கும் குழந்தையும் நபும்ஸகத் தன்மையுடனேயே பிறக்கிறது.

பல வருடங்களுக்குப் பின்னர் அவ்வரசன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பாஸ்கர ராயரை தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறான். அப்போது அவன் நடந்ததைக் கூறி வருந்தி தன்னை மன்னிக்கும்படியும் தனது குமாரனுக்கு நபும்ஸகத்தன்மை விலக அருளுமாறும் வேண்டுகிறான். ராயர் அக்குழந்தைக்கு புருஷத்தன்மை வருவதற்காக பிரார்த்தனை செய்யத் தலைப்படுகிறார். ஒரு மண்டலம் இதற்காக கிருஷ்ணா நதிக்கரையில் முளிமடு என்ற்ற ஊரில் ஆஸ்ரமம் அமைத்து "த்ருசார்க்யப்ரதானம்" என்னும் விரதத்தை ஆரம்பிக்கிறார். இந்த விரதமானது சூர்யனை நோக்கிச் செய்யப்படுவது. தினமும் நதிக்கரைக்கு வந்து அனுஷ்டானங்களை முடித்துப் பின்னர் ஆஸ்ரமத்திற்குச் செல்வதால் பாஸ்கர ராயருக்கு கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டது கண்டு சிஷ்யர்கள் வருந்துகின்றனர். அவர்கள் தமது குருவிடம் நதிக்கு அருகிலேயே ஆஸ்ரமத்தை அமைத்துக் கொண்டு விடலாம் என்று யோஜனை கூறுகின்றனர். அதற்கு குருவோ, நதியை ஆஸ்ரமத்திற்கு பக்கத்தில் கொண்டுவந்திவிடலாம் என்று கூறி, சூரியனை நோக்கி தியானிக்க, ஸூர்யனும் அவர் முன் தோன்றுகிறான். பாஸ்கர ராயர் ஸுர்யனிடத்து தமது விரதத்தைக் கூறி, அவ்விரதம் பங்கம் ஏதுமின்றி முடிவதற்கு ஏதுவாக நதியை ஆஸ்ரமத்திற்கு அருகில் பிரவாஹிக்க வேண்டுகிறார்.

ஸுர்யன் குழந்தைக்கு நபும்ஸகத் தன்மை நீங்க நேரடியாக வரத்தைக் கேளாமல், ஏன் இயற்கையை மீறி இவ்வாறு நதியின் பிரவாஹத்தை மாற்றக் கோருகிறீர்கள்?. இவ்வாறான கோரிக்கை சரியல்லவே என்று வினவுகிறான். தமது பிரார்த்தனையை நடத்திக் கொடுக்காது கேள்விகள் கேட்ட ஸுர்யன் மீதே கோபம் கொண்டு ஸுர்யனிடம், 'குழ்ந்தைக்கு ஆண்மைக் குறைவு தீர்வது உன்னை வணங்குவதாலும், த்ருச பாஸ்கர வழிபாட்டாலும் நடக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் உன்னால் நதியின் பாதையை மாற்ற இயலாவிட்டால் பரவாயில்லை' என்று கூறிவிடுகிறார். ஸுர்யனும் ராயரது கோரிக்கையினை செயல்படுத்தும் விதமாக நதியின் பாதையை மாற்றிக் கொடுக்கிறார். ராயர் தமது விரதத்தை பக்குவமாக நடத்தி அக்குழந்தையை பும்ஸுவனாக/ஆண்மையுள்ளவனாக மாற்றுகிறார். முளிமடு என்னும் அவ்விடத்தில் இன்றும் கிருஷ்ணா நதி முன்பு சென்ற பாதை மற்றும் தற்போதைய பாதை என்று இரண்டு வழிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ராயர் பிற்காலத்தில் "த்ருச பாஸ்கரம்" என்னும் நூலை எழுதி, அதில் ஸுர்யனை வழிபடும் முறையினைக் கூறியிருக்கிறார்.

இவர் ஒரு சமயம் கடனால் தவித்து வந்தாராம். அப்போது அன்னையை நோக்கி, 'அபர்ணா' என்றால் பிறரது கடன்களைப் போக்குபவள் என்றும் பொருள், ஆனால் உன்னையே வணங்கும் எனது கடனை போக்க வழி காண்பிக்காது இருக்கிறாயே?' என்று வருந்தியிருக்கிறார். அன்று லலிதாம்பிகையே ராயரது மனைவி உருவில் கடன் கொடுத்தவர் வீட்டிற்குச் சென்று ராயரது கடனை அடைத்தாளாம்.

பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசரது வேண்டுகோளுக்கு இணங்க திருவிடைமருதூர் மஹாதானத் தெருவில் வசித்து வந்துள்ளார். இவர் மாலை வேளையில் தமது இல்லத்தின் முன் இருக்கும் திண்ணையில் சாய்ந்து காலை தூண்களில் தூக்கி வைத்தவாறு சாய்ந்து அமர்ந்திருப்பாராம். அவ்வேளையில் தினம் தெருவில் ஒரு சன்யாசி மஹாலிங்க தரிசனத்திற்கு கோவிலுக்குச் செல்வது வழக்கம். தெருவில் இருக்கும் எல்லோரும் அந்த சன்யாசிக்கு மரியாதை செய்து வணங்குவர். ஆனால் ராயர் கவனியாது இருப்பது கண்டு விரோதம் ஏற்படுகிறது.

ஒருமுறை பலர் முன்னிலையில் பாஸ்கர ராயரது செயலை கண்டித்திருக்கிறார். அப்போது ராயர், தாம் மற்றவர்கள் போல சன்யாசிக்கு மரியாதை செய்வதற்காக தமது சிரம் தாழ்த்தி வணங்கியிருந்தால் சன்யாசியது தலை வெடித்துச் சிதறியிருக்கும் ஆகவே தாம் வணங்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதனை நம்பாத சன்யாசிக்கு தான் சொல்வதை நிருபிக்கும் விதமாக சன்யாசியின் கமண்டலம் மற்றும் தண்டத்தை ஓர் இடத்தில் வைக்கச் செய்து அதற்கு தலை தாழ்த்தி வணக்கம் செய்கிறார் பாஸ்கர ராயர். தண்டமும், கமண்டலமும் வெடித்துச் சிதறிவிடுகிறது. இதனைக் கண்ட சன்யாசி மற்றும் பொது மக்கள் ராயரது சிறப்பினை உணர்கின்றனர். இவ்வாறு நடக்க காரணம், ராயர் மஹா ஷோடசி என்னும் மந்திர ஜபமே என்று பிற்காலத்தில் தமது சிஷ்யர்களிடத்து சொல்லியிருக்கிறார். மஹா ஷோடசி நியாஸம் செய்பவர்கள் தாமே அர்த்தநாரிச்வர வடிவாகிவிடுவர் என்பது சாக்த சித்தாந்தம்.

இவர் மீமாம்ஸா, வேதாந்தம், மந்த்ரசாஸ்த்ரம் முதலிய பல்வேறு துறைகளிலுமாக நாற்பதுக்கும் மேலான நூல்களை எழுதியிருக்கிறார். பல திருக் கோவில்களை நிர்மாணித்தும், புனருத்தாரணம் செய்தும் இருப்பதாக தெரிகிறது. இவர் எழுதிய லலிதா சஹஸ்ரநாம பாஷ்யத்திற்கு 'செளபாக்ய பாஸ்கரம்' என்றே பெயர். பாஸ்கராநந்தர் என்னும் இம்மஹான் தனது 95ஆம் வயதில் ஸ்ரீபுரம் அடைந்தார் என்று கூறப்படுகிறது,


அத்ருஷ்டோ நாஸ்தி பூ மண்டலாம் சோ,
யஸ்யா: தாஸோ வித்யதே ந க்ஷிதீச:
யஸ்ய அஸாத்யா நாஸ்தி வித்யா கிமன்யைர்
யஸ்ய ஆகார: ஸா பராசக்திரேவ

[இந்த பூ மண்டலத்தில் அவரால் பார்க்கப்படாத இடமே இல்லை, அவருக்கு சிஷ்யனாகாத அரசனே இல்லை, அவரால் அறியப்படாத வித்யை இல்லை, அவரே பராசக்தி வடிவானவர்]
என்பதாக பாஸ்கர ராயரது பதம் பணிவோம். அவரருளால் திருவருள் பெறுவோம்.

Thursday, March 5, 2009

ஸ்ரீ பாஸ்கர ராயர்....பகுதி-1

ஆதிசங்கரர் பல முறை லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ர நாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும், சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். 2-3 முறை இவ்வாறு நடக்க, ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில், சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு 2-3 முறை விஷ்ணு சஹஸ்ர நாமச் சுவடிகளை அன்னையே தந்ததாக அறிந்த சங்கரரும், அது அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம். செளந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம், என்று பலவிதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை. அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை, அனுஷ்ட்டான சாதகத்தை, பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்?. இவ்வாறு லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணியவர்தான் பாஸ்கர ராயர். தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.

இவர் பிறந்தது மாகாராஷ்டிரத்தில், பாகா என்னும் நகரத்தில். இவரது பிறப்பு கி.பி 1690 என்று தெரிகிறது. தந்தை பெயர் கம்பீர ராயர், தாயார் கோனாம்பா. கம்பீர ராயர் விஜயநகர அரசவையில் பெளராணிகராக இருந்தவர், மகாபாரதப் பிரவசனம் செய்து அதன் மூலமாக பாரதீ என்னும் பட்டப் பெயரை பரம்பரை உரிமையுடன் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

கம்பீர ராயர் தமது மகனான பாஸ்கர ராயருக்கு காசியில் உபநயனமும், அத்யயனமும் செய்து வைத்திருக்கிறார். அக்காலத்திலேயே வாக்தேவி மந்திர தீக்ஷையும் நடந்து அம்மந்திரத்தை ஜபித்து வந்திருக்கிறார். சிறிது காலத்திலேயே வேத அத்யயனம் முடித்து ஊர் திரும்புகையில் குஜராத்தில் ப்ரகாசாநந்த நாதர் என்பவரை கண்டு அவரிடம் ஸ்ரீ வித்யை உபதேசமும், பூர்ணாபிஷேகமும் செய்து கொள்கிறார். பூர்ணாபிஷேக நாமம் ஸ்ரீ சிதானந்த பாதரேணு என்பதாகும். பின்னர் ஸ்ரீ கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்த்திரத்தையும் படிக்கிறார். அதர்வண வேதம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக தானே அதனை அத்யயனம் செய்து அதனை பலருக்கும் கற்பித்து அவ்வேதத்தை உத்தாரணம் செய்கிறார்

இவரது மனைவி பெயர் ஆனந்தி என்பதாகும். அவருக்கும் மந்திர உபதேசம் செய்வித்து பத்மாவதம்மாள் என்று தீக்ஷா நாமம் வழங்கியிருக்கிறார். பிறகு ஒரு சமயம் வல்லப ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஒரு வித்வானை வாதில் வென்று அவரது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த மனைவி பெயர் பார்வதி என்பதாம். இரு மனைவிகளுடன் காசியாத்திரை கிளம்பிச் செல்லும் வழியில் ஒர் மாத்வ மஹானையும் வாதில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. காசியில் ஸோம யாகம் செய்திருக்கிறார். அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் சமயாசாரத்தின் படியாக உபாசனை செய்து வந்தாலும், அவரை வாமாசாரத்தைச் சார்ந்தவர் என்று திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர், தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார்.

பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அப்போது அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து, அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக, சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும், மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் "சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா" (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர், வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து, அந்தந்த யோகினிகளுக்கான பெயர், மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது தமது தலைவரான குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று வினவ, அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்லர். நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து, அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார். தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து, பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் நில்லாது பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றதாகச் சொல்லப்பட்டுகிறது.