
மனிதர்கள் அம்பிகையை பக்தியுடன் வழிபட்டால், அவளுக்கு வழிபடுபவர்களிடத்து ப்ரியம் ஏற்படுமாம், இதைச் சொல்வதே "பக்திப்ரியா" என்னும் நாமம். பக்தி என்பது முக்கியம், இதை இருவகையாகச் சொல்கிறார்கள். ஒன்று ஸாமான்ய பக்தி, அதாவது கெளண பக்தி என்பர், இன்னொன்று சித்தத்தில் என்றும் இறையைப் பற்றி இருப்பது. அதாவது அழிஞ்சில் மரத்து விதை எப்படி மரத்துடனேயே ஒட்டிக்கொள்ளுமோ அது போலவும், பதிவிரதைகள் தனது பதியுடன் இருப்பதையும், நதியானது ஸமுத்ரத்தையும் அடைவதையும் போல மனமானது பரமாத்மாவுடன் இணைவதையே பக்தி என்று பகவத் பாத சங்கரர் சிவானந்த லஹரியில் கூறியிருக்கிறார். இவ்வகையான பக்தியையே பக்தி ஸுத்ரமும் சொல்லியிருக்கீறது. ஸாமான்ய பக்தி என்பது ஸேவாரூபமானது. இதுவே ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம் போன்ற எட்டு விதமாக பாகவதத்தில் சொல்லப்படுவது.
இப்படி பக்தியுடன் உபாசித்தால் என்ன ஆகிறதாம்?, அம்பிகையே ப்ரத்யக்ஷம் ஆகிவிடுகிறாளாம். அதாவது பக்தி மார்க்கத்தால் அடையத்தக்கவள் என்பதே பொருள். ச்ருதியில் கூட, பரமாத்மாவை நேரடியாகப் பார்க்க இயலாவிடினும், பக்தி மூலமாக பரமாத்மாவின் ஸ்வரூபத்தை பார்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறதாகச் சொல்லுவார் எனது குரு. பக்தி மார்க்கத்தில் போனால் அவ்வழியில் அடையக்கூடிய அம்பிகையை 'பக்தி கம்யா' என்கிறார்கள்.
பக்தி என்பதற்கு 'லக்ஷணம்' என்று ஒரு பொருள் சொல்கிறார்கள். இதைக் கொண்டால், நேரடியாகப் பார்க்க முடியாவிடினும், அவளது ஸ்வரூபத்தை லக்ஷணங்களின் மூலமாக உணரலாம் என்கிறார்கள். லலிதா த்ரிசதியில் 'லக்ஷண கம்யா' என்று ஒரு நாமம், பரப்ரம்ஹமான அம்பிகையின் உண்மையான ரூபத்தைச் சொல்ல இயலாவிடினும், அதன் லக்ஷணங்களைச் சொல்வதாக இங்கு பொருள்.
கம்யா என்கிற பதத்திற்கு ப்ரத்யக்ஷமாதல், அடையப்படுகிறவள், அறியப்படுகிறவள் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. பக்தியால் ப்ரத்யக்ஷமாகும் அம்பிகையை, பக்தியால் அடையப்படுபவளை பக்திகம்யா என்று கூறுவது சரிதானே?. இப்படி, பக்தியின் மூலம் ப்ரத்யக்ஷமாகும் அம்பிகை , பக்திக்குக் கட்டுப்பட்ட்வள், அல்லது பக்திக்கு வசமாகுபவள் என்பதைச் சொல்லுவதுதான் "பக்திவச்யா" என்னும் நாமம். பக்தி செய்வது என்பதற்கு நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உதாரணம் கண்ணப்ப நாயனார். ஆசாரக் குறைவுகள் இருந்தாலும், கண்ணப்பர் தனது பக்தியில் நிறைவாக இருந்தமையால் அவருக்கு ஈசனது அனுக்ரஹம் கிடைத்தது. பக்தி என்றால் அது கண்ணப்பரது பக்தி போல இருப்பின், அம்பிகை நம்மிடத்தும் வசமாகிடுவாள் என்பதே இந்த நாமம் சொல்வது.
இப்படி நம்மிடத்து வசமாகும் அம்பிகை மங்கள ரூபமானவள் என்பதே 'பத்ர மூர்த்தி' என்னும் நாமம் சொல்லுவது. இவள், தனது பக்தர்களுக்கு மங்களத்தை அருள்வதால் 'பத்ரப்ரியா'. அதாவது மங்களங்களில் ப்ரியமுள்ளவளாக இருப்பதால், தன்னைத் துதிக்கும் ஜனங்களுக்கு மங்களங்களை அருள்கிறாள். இப்படி தனது பக்தர்களுக்கு சகல விதமான ஸெளபாக்யங்களும் அருளுகிறாள் என்பதாலேயே, அவள் "பக்த ஸெள்பாக்ய தாயினீ".