Showing posts with label தை வெள்ளி. Show all posts
Showing posts with label தை வெள்ளி. Show all posts

Friday, February 6, 2009

பாலா திரிபுர சுந்தரி - வாலைக் குமரி

பாலை என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டில் முதற்படி என்பர். ஸ்ரீ வித்யையில் "பாலா" மந்திரத்துடன் பெரும்பாலோர் நின்றுவிடுவது வழக்கம். இதனால் தானோ என்னவோ இம்மந்திரத்திற்கு "லகு ஸ்ரீ வித்யா" என்றே பெயர் இருக்கிறது. அன்னையை இந்த ரூபத்தில் ஆராதிக்க என்றே தனியாக கட்கமலா மற்றும் ஆவரண பூஜைகள் எல்லாம் இருக்கிறது. குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை பாலையாக பூஜிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.


அம்பிகையின் 9 வயது ரூபமே பாலா திரிபுர சுந்தரி என்பர். ஆனால் லலிதோபாக்யானத்தில் பாலா என்னும் சக்தி அன்னையின் ப்ரியத்தை பரிபூரணமாகப் பெற்ற தனி சக்தியாகவே கூறுவர். பாலாம்பிகையின் அனுக்ரஹம் கிடைத்தால், பராம்பிகை அனுக்ரஹம் சுலபமாகுமாம்.

ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், 'நித்ய யெளவனா' என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன் அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின் தென் மூலையில் காணலாம் என்றாராம். அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம் என்று கூறிக் கேட்டிருக்கிறேன். லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள "தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா" என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள், நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள் என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது. பாலாவிற்கு இன்னும் சில கோவில்களில் தனி சன்னதி உண்டு, அவை திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருக்கடையூர், சென்னை கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகிறது.

சித்தர்கள் சிலரும் இந்த அன்னையை பலவாறாகப் பாடியுள்ளனர். திருமூலர் தனது திருமந்திரத்தில்,

சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை (1199)
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்


ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை (1073)
நீங்காத பச்சை நிறம் உடையவள்
ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தானே

என்பதாக கூறியிருக்கிறார். கருவூரார் கூறுகையில்,

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு

என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார். இவர் போன்றே கொங்கண சித்தர் பாடியது வாலைக்கும்மி என்னும் பாடல் தொகுப்பு. அதிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.


முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை
அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே (54)
காலனை காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த
மானுடன் கோட்டை பிடித்தவளாம் (57)


இடுகையின் ஆரம்பத்தில் சொல்லியது போல, ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் பொருளாவது; சிவந்த நிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத் திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும்.



அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும், மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலது முறையே அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும். குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர். அம்பிகைக்கு சிறப்பான நாளான இந்த 4ஆம் தைவெள்ளியில் அவளைப் போற்றி வணங்கிடுவோம்.

Friday, January 23, 2009

கண்ணுடை நாயகி - நாட்டரசங்கோட்டை

அன்னை கொலுவிருக்கும் பல கோவில்களுக்குச் சென்றாலும், சில கோவில்களில் சொல்லப்படும் அன்னையின் திருவிளையாடல்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து, நம்மை அக்கோவிலுடன் நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்தும். இரண்டாவது தை வெள்ளியாகிய இன்று நாம் பார்க்க இருப்பது நாட்டரசங்கோட்டை கண்ணுடையாள். கடந்த மாதம் கொப்புடையம்மன் கோவில் சென்ற போது நாட்டரசங்கோட்டைக்கும் சென்றேன். இந்த ஊர் பல விதங்களில் சிறப்புற்றது என்று கேள்விப்பட்டேன். அவற்றின் தொகுப்பே இந்த இடுகை.



-----------------------------------------------------------------
பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல் தூக்கிச்

செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி

அம்பொற் பணிபூண்டு அறுகோண வீதியிலே

கம்பத்தின் மேலிருந்து என் கண்ணம்மா கண்குளிரிப் பாரேனோ

----- அழுகுணிச் சித்தர்

சிவகங்கையில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், பட்ட மங்கலத்திலிருந்து சுமார் 25 கீ.மியிலும் இருக்கிறது இந்த ஊர். கண்ணுடை நாயகி என்பது அன்னையின் பெயர். நாம் குழந்தைகளை கண்ணே, மணியே என்று கொஞ்சுவது போல கண்ணாத்தா என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்கள் இப்பகுதி மக்கள். சீர் மிகு நகரத்தார் தெய்வமாக, மிகுந்த வரப்பிரசாதியாக எழுந்தருளியிருக்கிறாள் அன்னை பராசக்தி. சரி கோவிலுள் நுழைவோமா?.

ஆலயத்தின் பிரதான வாயிலுக்கு நேர் எதிரில் அருமையான குளம். குளத்தைச் சுற்றிலும் படிகள், மற்றும் கம்பியாலாகிய தடுப்பு வேலி. பக்தர்கள் நீர் நிலையினை தவறாக பயன்படுத்தாதிருக்க அறிவிப்புப் பலகை. குளத்தின் மேற்குக் கரையில் கற் சிற்ப்பங்கள் நிறைந்த பெரிய மஹா மண்டபம். கண் பார்வை பாதிப்புக்கு உள்ளானவர்கள் 48 நாட்கள் இம் மண்டபத்தில் தங்கி, தினமும் அன்னையை வணங்கி பார்வைக் கோளாறுகள் நீங்கிச் செல்வார்களாம். இந்த மண்டபத்தில் மத்தியில் கிழக்கு நோக்கியவாறு வேலைப்பாடுகள் நிறைந்த அருமையான ராஜ கோபுரம். இதைக்கடந்து உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தின் முடிவில் பெரிய துவார பாலகிகள் காவலுக்கிடையில் கருவறைக்கான நிலை வாசல்.

கருவறையில் சற்றே தலை சாய்து, கருணை பொங்கும் கண்களுடன் கண்ணுடை நாயகி காக்ஷி அளிக்கிறாள். சிலம்பணிந்த கால்களில் வலக்காலை சற்றே தூக்கியவாறும், இடக்காலின் அடியில் அரக்கனை அழுத்தியவாறும் எட்டு கரங்களுடன் ஜ்வாலை நிறைந்த கீரிடத்தில் சந்திர-சூரியர்களை அணிந்தவாறு அமர்ந்திருக்கிறாள். அன்னையின் கைகளில் கீழ் நோக்கிய சூலம், அக்னி, உடுக்கை, கேடயம், குறுவாள், மணி, கிளி, கபாலம் என்று வலது-இடது கரங்களில் முறையே வைத்திருக்கிறாள்.

தரிசனம் முடிந்து பிராகாரத்தை வலம் வருகையில் கருவறையை ஒட்டி, மேலே அடைப்புடன் கூடிய ஒரு பிராகாரமும், அதன் வெளிச்சுற்றாக திறந்த வெளி பிராகாரமும், அதன்பின் கோவில் மதிலும் இருக்கிறது. பிராகாரத்தில், வடக்குப் பகுதியில் அன்னையின் அபிஷேக நீர் வரும் இடத்தில் ஒரு தொட்டியினைக் காண முடிகிறது. பக்தர்கள் இத்தொட்டி அருகில் அமைதியாக பிரார்த்திப்பதைக் காணலாம். இதனைப் பற்றி இப்பதிவின் இறுதியில் பார்க்கலாம். வடமேற்கு மூலையில் கணபதி கோவில் கொண்டிருக்கிறார். வடகிழக்கில் பைரவர் மற்றும் கருப்பண்ணசாமி குடி கொண்டிருக்கின்றனர்.

இப்பகுதியில் ஒரு காலத்தில் யாதவர்கள் மிகுந்து வசித்து வந்துள்ளனர். அவர்கள் தங்கள் பசுக்களிடத்திருந்து பாலைக் கறந்து விடியலில் பக்கத்து ஊருக்குக் கொண்டு செல்கையில் ஒரு இடத்தில் தினமும் கல் தடுக்கி பால் கொட்டுவதை உணர்ந்தனராம். அவ்விடத்தில் இருக்கும் கல்தான் தமது பாலை வீணாக்குகிறது என்று, கல்லை அப்புறப்படுத்தும் விதமாக கடப்பாரை கொண்டு கல்லை நகர்த்தும் போது இரத்தம் பீரிட்டு கிளம்ப, மக்கள் பெரும் அதிர்வுக்கு உள்ளாகி, ஊர் பெரியவர்களை அழைத்து வந்து காண்பித்துள்ளனர். அவர்களில் அம்பலகாரர் அக்கல்லை முழுவதுமாக வெளியில் எடுக்க, அன்னையின் உருவம் தெரிந்துள்ளது. விக்ரஹத்தை அவ்விடத்தை விட்டு நகர்த்த இயலாததால் அங்கேயே வைத்துப் பூஜிக்கத் தொடங்கியுள்ளனர். விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்த பகுதியின் மிராசுதாரர் அன்னையைச் சுற்றி கருவரை எழுப்பினாராம்.காலில் இடறி அதன் மூலமாக தமது இருப்பிடத்தை கண்ணுற வைத்த காரணத்தால் கண்ணுடைநாயகி என்று பெயர் வந்ததாக கோவில் பட்டர்கள் கூறுகின்றனர். பிற்காலத்தில் சேதுபதி மன்னர்களும், சிவகங்கை மன்னர்களும், நகரத்தாரும் ஆலயத்தை பல விதங்களில் விரிவுபடுத்தி நிவந்தங்களை அளித்துள்ளனர். இன்றும் இக்கோவில் சிவகங்கை சமஸ்தானத்தின் பராமரிப்பில் சிறப்பாக இருக்கிறது.

இக்கோவிலில் ஆடி முளைப்பாரியும், தை மாதத்தில் தைலக்காப்பும், ஐப்பசியில் கோலாட்ட உற்சவமும், வைகாசியில் பிரம்மோற்சவமும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறதாம். பக்தர்கள் காரைக்குடி, மதுரை போன்ற இடங்களில் இருந்தெல்லாம் வந்து கண் பார்வை சம்பந்த நோய்கள் தீர அன்னையை வணங்கிச் செல்கின்றனர்.


அழுகுணிச்சித்தர் வாழ்ந்து ஜீவ சமாதியான அன்னையின் அபிஷேக நீர் வெளியேறும் தீர்த்தத் தொட்டியின் கீழே இவரது சமாதி இருக்கிறது. இவ்விடத்தில் செய்யப்படும் நியாயமான வேண்டுதல்கள் பலிப்பதாகவும், இங்கே தியானம் செய்தால் மிகுந்த மன நிறைவு கிட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஊரின் அருகிலேயே பாட்டரசன் என்று இவ்வட்டாரத்தாரால் அன்புடன் போற்றப்படும் கம்பரது சமாதி அமைந்திருக்கிறது. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பரது சமாதியில் இருந்து மண் எடுத்து நாக்கில் தடவுவதன் மூலம் தமது குழந்தைகள் கவித்துவம் பெறுவர் என்று நம்புகின்றனர். கண்ணுடை நாயகிக்கு பூஜைகள் செய்வது கம்பரது பரம்பரையில் வந்தவர்களாம்.

கற்பகமே, கண்ணுடை நாயகி தாயே சகல புவனங்களையும் காத்தருள்வாய் என்று இந்த தை வெள்ளிக் கிழமையில் அவளைப் பிரார்த்திப்போம்.