Thursday, July 21, 2011

காமாக்ஷி...கடாக்ஷி - 1 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)

காமாக்ஷி பற்றி எழுத வேண்டும் என்று பலநாட்களாக நினைத்திருந்தேன், இன்றைய தினம் ஆடி முதல் நாள், வெள்ளிக் கிழமையும் கூட. அன்னையின் அருள் வேண்டி இந்தச் சிறுதொடரை எழுத ஆரம்பிக்கிறேன். வரும் ஆடி வெள்ளிகளில் தொடராக 2-3 பதிவுகள் எழுத இருக்கிறேன்.


காமாக்ஷி பற்றி சொல்லப்பட்ட புராணங்கள் பின்வருமாறு.




1. மார்க்கண்டேய புராணத்தில் 'தேவீ மகாத்மீயத்தை அடுத்ததாக வரும் "ஸ்ரீ காமாக்ஷி விலாஸம்".


2.பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக உள்ள லலிதோபாக்யானம் மற்றும் த்ரிபுரா ரஹஸ்யம் என்னும் க்ரந்தம்.


3. ஸ்காந்த புராணத்தில் ஸநத்குமார ஸம்ஹிதையிலுள்ள 'காஞ்சீ மஹாத்மீயம்' குறிப்பாக அதில் வரும் 'தக்ஷ காண்டத்தில்'.


4. சில செவிவழிக் கதைகள்.




டிஸ்கி:

******************************************

சாதாரணமாக புராணங்கள்/சரிதங்களைப் படிக்கும் போது ஆங்காங்கே தெய்வங்களிடை உயர்வு-தாழ்வு தொனிக்கலாம், அது ஒரு குறிப்பிட்ட மூர்த்தியிடம் பக்தியை வலுப்படுத்துவதற்கான உத்தேசமேயன்றி, பிற தெய்வங்களை மட்டந்தட்டுவதல்ல என்பது நாம் அறிந்ததே. இந்தத் தொடருக்கும் அது பொருந்தும் என்றுணர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மனிதர்களைப் போலவே, மனிதர்களுக்கு ஆதர்சமாய் லீலை புரிவதற்கு என்றே பராசக்தி பல கடவுளராகி இப்படியெல்லாம் செய்துள்ளார் என்பதை மனதிலிருத்தி மேற்கொண்டு படிக்க வேண்டுகிறேன்.

******************************************


தேவியின் பல வடிவங்களுள், நாற்கரம் கொண்டு, அவற்றில் கரும்புவில், மலரம்பு, பாச-அங்குசம் தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பவளேகாமாக்ஷி மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ராஜராஜெஸ்வரி. பஞ்ச தசாக்ஷரி, ஷோடசீ ஆகிய மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம். ஆக மொத்தமாக மந்த்ரங்களில் சிறந்த ஸ்ரீவித்யாவால் காட்டப்பட்ட ஸ்ரீ மாதாவின் ரூபம் காமாக்ஷீ.


இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?.


பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்கார ஒலியின் அலைகளான இருபத்து-நான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள்.



ஆம்! அந்த இருபத்து-நான்கு சப்தங்களை, இருபத்து-நான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள் என்றே காமாக்ஷி விலாஸத்தில் சொல்லப்படுகிறது.



அதென்ன 24 சப்தங்கள்?. 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது, ஏன் 24 சப்த ஸ்தம்பங்களாலான மண்டபம்?.


காயத்ரீ மஹாமந்திரம் இருபத்தி-நான்கு அக்ஷரம் கொண்டது, அந்த மந்த்ரத்தின் மஹிமையை நமக்கு விளக்கும் விதமாக காயத்ரி மண்டபத்தில் வசிக்கிறாள் ஸ்ரீமாதா. காஞ்சி காமாக்ஷி கோவிலில் அன்னையின் வாசஸ்தலம் காயத்ரி மண்டபம் என்றே கூறப்படுகிறது.

சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.


'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல,


'அ' என்பது சிவனின் பெயர். அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக. பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம்.



வேதத்தில் 'ம' என்ற சப்தம் நாராயணனைக் குறிப்பதாம். இதனாலேயே 'மா' என்ற சப்தம் மஹாலக்ஷ்மியைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள்.



ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).


பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப் பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், ஸ்ரீ லலிதாவின் சேனை நாயகி (அ) தண்டினி எனப்படுபவள் வாராஹி ரூபம். அதே போல மந்த்ரிணியாக இருப்பது ராஜ மாதங்கீ. அதனால் தான் அகிலாண்டேஸ்வரியை தண்டினியாகவும், ராஜமாதங்கீ ரூபத்தில் கிளியுடன் இருப்பதாலும், மீனாக்ஷி கையில் கிளியைக் கொண்டதாலும் அவளை மந்திரிணியாக ஆதி சங்கர பகவத்பாதர் சொல்கிறார்.



மனிதனுடைய குணத்தை அவனுடைய கண்களிலிருந்தே அறியலாம் என்பார்கள். திருடனின் கண்களில் இருக்கும் தடுமாற்றம் அவனைக் காட்டிக் கொடுத்துவிடும். காதலுடைய கண்களில் எத்தனையோ விதம், கெஞ்சும் கண்கள், கொஞ்சும் கண்கள்,மிஞ்சும் கண்கள் என்பதாக பலவற்றையும் கவிஞர்கள் சொல்லக் காண்கிறோம். கடைக்கண்ணால் பார்க்கும் பார்வையை தயாளத்தின் உருவமாகவும், அன்பின் தோற்றமாக அருள் நிறைந்த தேஜசுடனும் சொல்வது வழக்கம். காதலியின் கடைக்கண் பார்வைக்கு காதலனும், பரமேஸ்வரியின் கடைக்கண் பார்வைக்காக பக்தனும் காத்திருப்பதாகச் சொல்வர்.



"தனந்தரும், கல்விதரும்" என்று ஆரம்பித்து அன்னையின் கடைக்கண் பார்வையில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று ஒரு பட்டியலே தந்திருக்கிறார் அபிராமி பட்டர். இதையே ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் தமது பாடலில் "சாரதா ரமா நயநே' என்று கூறுகிறார். சிவப்பிரகாச ஸ்வாமிகள், "நின் திருமுக பங்கயத்தில் கண்ணாயினர் உனக்கு அவ்வலைமாதும், கலைமகளும் பெண்ணார் அமுதனையாய்" என்கிறார். "ஸசாமர ரமா வாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா" என்கிற லலிதையின் நாமா என்ன சொல்கிறதென்றால், வாணியும், ரமாவும் (லக்ஷ்மி), அன்னைக்கு இருபுறங்களிலும் சாமர சேவை செய்வதாக வருகிறது. ஆக காமாக்ஷி ரூபத்தில் கண்களாக கலைமகளும், அலைமகளும் இருப்பதாகவும் கொள்ளலாம்.


சிவ சிவ பச்யத்திஸமம் காமாக்ஷி கடாக்ஷீதா: புருஷா:

விபிநம் பவநம் அமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவது பிம்போஷ்டம்



அதாவது காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு விபிநம், பவநம் ஆகிய இரண்டும் ஒன்றாகவே தெரியுமாம். விபிநம் என்றால் காடு, பவநம் என்றால் மாளிகை. காமாக்ஷியின் அருள் பெற்றவர் ஞானியாகிவிடுவர், ஆகவே அவர்களுக்குமித்ரம்-அமித்ரம், சிநேகிதன்-சத்ரு, போன்ற வேறுபாடுகளோ அல்லது யுவதியின் ஒஷ்டம் (சிவந்த உதடுகள்) மற்றும் லோஷ்டம் (ஓட்டு சில்லு) போன்றவற்றில் எந்த வேறுபாடுகள், காமனைகள் இல்லை என்று பரமாசார்யார் கூறுகிறார்.


தெய்வத்தை ஸ்திரீ ரூபமாக வணங்குவது என்பது நமது வேதத்தில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கறதாகச் சொல்கிறார்கள். ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில், அன்னையின் தரிசனத்தை வேண்டும் போது, "அம்பிகே!, தங்களை நான் சேவிக்க திவ்ய ரூபத்துடன் தரிசிக்க அருள வேண்டும். வாயில் தாம்பூலமும், கண்களீல் மையும், நெற்றியில் காஷ்மீர குங்குமமும், கழுத்தில் முத்து ஹாரமும், இடுப்பில் பட்டாடையும், தங்க ஒட்டியாணமும் அணிந்த பர்வத ராஜ குமாரியாக தரிசனம் அருள வேண்டும்" என்கிறார். இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட ரூபத்தில், கைகளில் பாச-அங்குசமும், கரும்புவில்-மலரம்புகளுமாய் காக்ஷி தருகிறாள் அம்பிகை.


Tuesday, August 24, 2010

காயத்ரி ஜபம் : "ராமோ விக்ரஹவான் தர்ம:" - பகுதி -2


முன்னர் இங்கே ராமோ விக்ரஹவான் தர்ம" என்கிற தலைப்பில் ஒரு இடுகை இட்டேன். இதன் தொடர்பாக சில குறிப்புக்கள் எடுத்தாலும், அப்போது இத்தொடரை தொடரவில்லை. இன்று காயத்ரி ஜபத்தை முன்னிட்டு தொடர்கிறேன். இன்னொரு பகுதியும் இருக்கிறது. அதனை அடுத்த மாதத்தில் இட முயற்சிக்கிறேன்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ராமாவதாரத்திற்கு என்றும் சிறப்பு அதிகம் என்று சொல்வார்கள். மற்ற எல்லா அவதாரங்களிலும் இல்லாத சிறப்பாக இறைவன் மனிதனாகத் தோன்றி, இறைத்தன்மை ஏதும் காண்பிக்காமல் மனிதனாகவே வாழ்ந்து, நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து கண்பித்த அவதாரம். இந்த இடுகையில் ராமாவதாரத்தில் நித்யகர்மாவிற்கு, ஸந்த்யா உபாஸனைக்கு ராமபிரான் கொடுத்த முக்கியத்துவத்தை பார்க்கலாம்.

பால காண்டத்தில் விச்வாமித்ர மஹரிஷியின் யாகத்தைக் காக்க பயணம் செய்கிறார்கள். சரயூ நதியைக் கடந்தாயிற்று. இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் பிரயாணத்தைத் தொடர முடிவு செய்து ஓய்வு எடுக்கிறார்கள். காலை எழுந்தவுடன் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லுகையில், "ஸ்நாத்வா க்ருதோதகெள வீரெள ஜேபது: பரமம் ஜபம்" [பால காண்டம் ஸர்கம் 23] என்கிறார் வால்மிகி. அதாவது, குளித்து, அர்க்யம் அளித்து உயர்ந்த காயத்ரி ஜபத்தைச் செய்தார்களாம். காயத்ரி மந்திரத்தின் ரிஷியான விச்வாமித்ரர் அருகில் இருக்கையில் ராம-லக்ஷ்மணர்கள் காயத்ரியை ஜபித்தார்களாம். இவ்வாறு விச்வாமித்ரருடன் செல்கையில் வழியில் சந்தித்த பல தவசீலர்களும் சந்தியாவந்தனம் செய்தார்கள் என்பதை "யதார்ஹம் அஜபன் ஸந்த்யாம் ருஷயஸ்தே ஸமாஹிதா" என்று கூறுகிறார் வால்மிகி.

சித்ரகூடம் வந்து, விச்வாமித்ரர் யாகத்தை நடத்துகையில், இரவு முழுவதும் கண்விழித்து யாகத்திற்கு பங்கம் இல்லாது காப்பாற்றினாலும், விடியலில் "ப்ரபாதகாலே சோத்தாய பூர்வாம் ஸந்த்யா முபாஸ்ய ச" என்று கூறுவதன் மூலம், விடியலில் ராம லக்ஷ்மணர்கள் சந்தியாவந்தனம் செய்ததை பால காண்டம், 29ம் ஸர்க்கத்தில் கூறுகிறார். இவ்வாறு சூர்யனைக் காணாமல், கோணாமல், கண்டு கொண்டிருக்கும் நேரங்களில் விடாது ஸந்த்யாவந்தனம் செய்த ராமரை யாகம் முடிந்தவுடன் வானளாவப் புகழந்ததாக மட்டும் வால்மிகி சொல்லவில்லை. ராமரைப் புகழ்ந்த அந்த சந்த்யா காலத்தில் அவருடன் சேர்ந்து சந்த்யாவந்தனம் செய்தார் என்பதை, "ஸ ஹி ராமம் பிரசஸ்யைவம் தாப்யம் ஸந்த்யாம் உபாகமத்" என்று பால காண்டம், ஸர்க்கம் 30ல் சொல்லுகிறார்.

பாலகாண்டத்தில் யாகத்தைக் காப்பாற்றும் இடத்தில் மட்டும்தான் சந்த்யாவந்தனத்தை, காயத்ரி ஜபத்தைச் சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால், யாகம் முடிந்து, ஜனகபுரியை நோக்கிச் சொல்லும் போதும், "க்ருத்வா பூர்வாஹ்நிகம் க்ரியாம்" என்று ராமர் சொல்லுவதாக வருகிறது. இதன் பொருள் என்னவென்றால், காலை வேளையில் செய்ய வேண்டிய கர்மாக்களை எல்லாம் முடித்து நாங்கள் தயாராகிவிட்டோம் என்கிறார்.

அயோத்யா காண்டத்தில் ராமரை துயிலெழுப்பியதைச் சொல்லுகையில், துயிலெழுந்த ராமர் தனது ப்ராத ஸந்த்யையை முடித்த பின்னர் மக்களைக் கண்டதாகச் சொல்லும்படி, "பூர்வாம் ஸந்த்யாமுபாஸீனோ ஜ்ஜாப யதமானஸ:" என்று ஸர்க்கம் 6ல் சொல்லுகிறார். இதேபோல ராமன் காட்டுக்குச் செல்லுகையில், ஸாயங்கால சந்த்யாவந்தனம் செய்ததையும் சொல்லியிருக்கிறார் வால்மிகி. இதே போல பரதன் காட்டில் ராமரைக் காணும் போதும் அதிகாலையில் சந்த்யாவந்தனத்தை முடித்த பின்னரே ராமனைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்.

பின்னர் காட்டு வழி செல்லுகையில் அகஸ்தியர் ஆஸ்ரமத்தை நெருங்குகையில், "ராமஸ்ய அஸ்தம் கத: ஸந்த்யா காலோப்யவர்த்த, உபாஸ்ய பச்சிமாம் ஸந்த்யாம் ஸஹப்ராத்ய யதாவிதி" என்கிறார் ஆரண்ய காண்டத்தில். அதாவது அகஸ்தியரது இல்லத்தை நெருங்கிவிட்டதால் ஏதோ 10 காயத்ரி ஜபத்தைப் பண்ணி, தனது கர்மாவை முடிக்கவில்லையாம். 'யதாவிதி' என்பதாக, அதாவது விதிக்கப்பட்ட விதத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தார் என்று கூறுகிறார்.

இதே ஆரண்ய காண்டத்தில், இன்னொரு இடத்தில், கிழக்கில் உதயமாகும் சூர்யனை வணங்கி, கோதாவரி தீர்த்தக் கரையில் முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும் வழிபாடு [ப்ரம்ஹ யக்ஞம்] செய்ததாகச் சொல்லியிருக்கிறார்.

போர்க்காலத்தில் ராமர் ஸந்த்யாவந்தனம் செய்யாது விட்டிருக்கலாம் என்று நினைக்கக் கூடும், அப்படி நினைத்தால் அது தவறு. ஹனுமன் ஸீதாதேவியைக் கண்டு, சூடாமணியைக் கொண்டு வந்த நேரத்தில், தான் எப்போது ஸீதையக் காண்போமோ என்று தவித்த நேரத்திலும் ராமர் தனது ஸந்த்யாவந்தனம் போன்றவற்றைக் காலம் தவறாது செய்ததாக யுத்த காண்டத்தில் சொல்லுகிறார் வால்மிகி.

இப்படி தனது சிறுவயது முதலாக, ச்ரம-திசையிலும் (மனையாள் இல்லாத வாழ்விலும், போர் முனையிலும்) கூட வழுவாது ஸந்த்யாவந்தனம் செய்த காரணத்திலேயே, "ராமனைப் போல் வாழ வேண்டும்" என்று சொன்னார்கள் நம் பெரியவர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. "ராமோ விக்ரஹவான் தர்ம" என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பது புரிகிறதல்லவா?.

நாமும், ஸந்த்யாவந்தனத்தை விடாது, விதிப்படி செய்வோம். நாளை ஒரு நாளாவது ஸஹஸ்ர ஆவர்த்தி காயத்ரி ஜபத்தினைச் செய்வோம்.

Thursday, August 5, 2010

க்ஷராக்ஷராத்மிகா, க்ஷோபிணீ , ஸூக்ஷ்மரூபிணீ



அம்பிகை நிறை குறைகளற்றவள் என்பதை க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா என்ற நாமத்தின் மூலமாகப் பார்த்தோம். இதைப் போலவே இன்னொரு நாமம், "க்ஷயவினிர்முக்தா". க்ஷயம் என்றால் க்ருஹம்/இல்லம் என்று ஒரு பொருள் இருக்கிறது. அதாவது க்ருஹஸ்த ஆச்ரமத்தில் இருக்கும் உபாசகர்களுக்கும் அன்னை முக்தியை அளிப்பவள் என்பது இதன் பொருள். முமுக்ஷுக்கள் இல்லறத்தை விட்டு விலகியிருந்து முக்தியை அடைகிறார்களென்றால், இல்லறத்தில் இருப்பவ்ர்களுக்கும் அம்பிகை முக்தியை அருள்கிறாள் என்று அவளது உபாசனா மார்க்கத்துப் பலனைச் சொல்கிறது இந்த நாமம். பாஸ்கரர் தமது சிவஸ்துதியிலும், துர்வாசர் செய்த தேவி மஹிம்ந-ஸ்தவத்திலும் இவ்வாறான செய்தியைச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

சர்வலோகங்களிலும் இருக்கும் அழியக்கூடிய மற்றும் அழிவில்லாத பொருட்கள் எல்லாவற்றின் ஸ்வரூபமாகவும் அம்பிகை இருக்கிறாள் என்பதே "க்ஷராக்ஷராத்மிகா". அழிவுக்கு உட்படும் எல்லாவற்றையும் க்ஷரம் என்றும் பரப்ரம்ஹத்தை அக்ஷரம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இப்படி க்ஷரம், அக்ஷரம் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆத்மிகாவாக இருப்பவள் அம்பிகை. இது போன்ற நாமம் ஒன்று ஸ்ரீலலிதா த்ரிசதியிலும் இருக்கிறது. அந்த நாமம், "ஏகானேகாக்ஷராக்ருதி:" என்பது. எண்ணிக்கையற்ற அக்ஷரங்களை ஸ்வரூபமாக உடையவள் என்று சொல்லலாம். இதே பொருள் விஷ்ணு புராணம் மற்றும், கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

இப்படி அழிவுள்ள, அழிவற்ற சகலமுமாக இருக்கும் அம்பிகையே ஜகத் சிருஷ்டி நடக்க வேண்டிய காலத்தில் பரப்ராம்ஹமான ஈச்வரனுடைய மனதில் க்ஷோபத்தை (ஒரு வித உணர்ச்சியை) உருவாக்குகிறாளாம். இவ்வாறு க்ஷோபத்தை உருவாக்குவதால் அவளுக்கு "க்ஷோபிணீ" என்ற நாமத்தால் வணங்குகிறார்கள் வாக்தேவிகள். ப்ரக்ருதி ரூபமான அம்பாள் சிருஷ்டி செய்ய வேண்டிய நேரத்தில் ஒருவித உணர்வை ப்ரம்ஹத்திற்கு உருவாக்கி சிருஷ்டி நடக்கச் செய்கிறாள் என்பது இங்கு சொல்லப்படுகிறது. ப்ரம்ஹம் நிச்சலனமானது, சக்தியில்லையேல் சிவமும் சவமே போன்ற வாக்கியங்கள் இங்கு நினைவிலிருத்திக் கொள்ளவேண்டியவை.

வராஹ புராணத்தில் வரும் ஒரு செய்தியையும் இங்கு சொல்லப்படுகிறது. அம்பிகை வைஷ்ணவியாக தபஸ் செய்த காலத்தில் அவளுக்கு ஒருவித கலக்கம் உண்டானதாம். அந்த கலக்கத்தின் காரணமாக கோடிக் கணக்கில் அழகிய யுவதிகள் உருவானார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, அம்பிகையின் சலனம்/கலக்கம் என்பது சிருஷ்டிக்குக் காரணம் என்பதாகத் தெரிகிறது.

சகலமுமான அம்பிகையை "ஸூக்ஷ்ம-ரூபிணீ" என்கிறார்கள். அதாவது ப்ரக்ருதியில் இருக்கும் எல்லாவற்றிலும் ஸூக்ஷ்ம ரூபத்தில், எளிதில் அறியமுடியாதவகையில் இருப்பவள் என்பது நேரடிப் பொருள். ஸுக்ஷ்மம் என்று ஒருவிதமான ஹோமத்தைச் சொல்வதாகத் தெரிகிறது. அவ்வகை ஹோமத்தின் ரூபமாக இருப்பவள் அம்பிகை என்றும் கூறுகிறார்கள். இதைத் தவிர, அம்பிகையின் ஸ்தூல, ஸூக்ஷ்ம, பர ரூபங்களில் இந்த நாமம் ஸூக்ஷ்ம ரூபத்தைச் சொல்வதாகவும் சொல்லலாம்.

Tuesday, August 3, 2010

க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா, க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா



க்ஷேத்ரம் என்பது இறைவன் இருக்கும் ஊருக்கு, கிராமத்திற்குப் பெயர் என்பதை நாம் அறிவோம். காசி-க்ஷேத்ரம், காஞ்சி-க்ஷேத்ரம் என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கிறோம். தக்ஷப் ப்ரஜாபதியின் யாகத்தை அழித்த பிறகு அன்னையின் சரீரத்தை தனது தோளில் தாங்கி அலைந்ததாகவும், அப்போது பரமசிவனது துக்கத்தை மாற்ற யாருக்கும் ஏதும் தோன்றாது இருக்கையில், ஸதீ தேவியின் சரீரம் இருக்கும் வரையில் பரசிவனது துக்கதை மாற்ற இயலாது என்று உணர்ந்த மஹா-விஷ்ணு,தனது சக்ராயுதத்தால் ஸதீதேவியின் சரீரத்தை துண்டாக்குகிறார். அப்படி துண்டுகளான சரீர பாகங்கள் வீழ்ந்த இடம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு க்ஷேத்ரமாக, அம்பிகையின் பீடங்களாக ஆனது என்பர் பெரியோர். இந்த் க்ஷேத்ரங்களில் ஸ்வரூபமாக இருப்பவள் அம்பிகை என்பதே "க்ஷேத்ர ஸ்வரூபா".

க்ஷேத்ரம் என்பதற்கு ப்ரதிவீ போன்ற முப்பத்தாறு தத்வங்கள் அடங்கிய உடலையும் பொருள் சொல்லலாம். உடலில் இருக்கும் ஜீவனை க்ஷேத்ரக்ஞன் என்றும் புருஷன் என்றும் சொல்வது. இப்படி சகல் ஜீவராசிகளிலும் இருக்கும் பரமாத்மா ஸ்வரூபமே அம்பிகை என்றும் சொல்லலாம் என்கிறார்கள் பெரியோர். இப்படி க்ஷேத்ரக்ஞனாக இருக்கும் பரமாத்மாவின் பத்னீ என்பதால் அம்பிகையை "க்ஷேத்ரேசீ " என்று அடுத்த நாமத்தில் சொல்லிவிடுகிறார்கள். இப்படி க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் ஆகிய இருவரையும் காப்பவள் என்பதால் "க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினீ".

இப்படி க்ஷேத்ரக்ஞனான பரமாத்மாவின் பத்னி எப்படிப்பட்டவளென்றால், அவள், குறை-நிறை ஏதுமில்லாது இருக்கிறாள் என்கிறார்கள் "க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா" என்னும் நாமத்தில். "க்ஷயம்" என்றால் குறை, "வ்ருத்தி" என்றால் அதிகம். இந்த பாவங்கள் ஏதுமில்லாதவள் அம்பிகை என்பது சிறப்புத்தானே?.

இப்படி நிறை-குறைகளற்ற அம்பிகையை காக்கும் க்ஷேத்ர பாலனால் வணங்கப்படுபவள் என்பதே "க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா". யாகம் செய்யும் இடத்திற்கும் க்ஷேத்ரம் என்று பெயர். யாகங்களைக் காக்கும் இறைவனை க்ஷேத்ரபாலன் என்பார்கள். அப்படியான க்ஷேத்ரபாலனால் வணங்கப்படுபவள் அம்பிகை என்கிறார்கள். தாருகனை அழித்த தேவி, தனது கோபம் தணியாது இருக்கையில், ஈசன் சிறு பாலகனாக வந்து அவளது ஸ்தனங்கள் மூலமாக பானம் செய்து அவளது கோபத்தைத் தணித்தானாம். இப்படி அம்பிகைகயின் கோபத்தை அடக்கிய ஈசனுக்கு, க்ஷேத்ரபாலன் என்று பெயர். அன்னையினிடத்து தணியாத பக்தியுடையவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையெல்லாம் தகர்ப்பதால் இந்த க்ஷேத்ரபாலகன் விசேஷம். அப்படியான க்ஷேத்ர பாலனே வணங்கும் தேவி என்பது சிறப்பு.

Friday, July 30, 2010

சிரஸ்த்திதா, ஹ்ருதயஸ்த்தா, ரவிப்ரக்யா


பரப்ரம்ஹத்தை சிவசக்தி ஐக்ய ஸ்வரூபமாகச் சொல்வது வழக்கம். அதாவது அம்பிகை வேறு, பரமசிவன் வேறு அல்ல, இருவரும் ஒன்றே என்றே சொல்லுகிறது சாக்தம். இந்தப் பொருளைச் சொல்வதே "காமகோடிகா", அதாவது பரசிவனுடன் இணைந்தவள் என்பது பொருள். இவளைச் சூழ்ந்திருக்கும் பல கோடிக்கணக்கிலான லக்ஷ்மிதேவிகளால் சேவிக்கப்படுகிறாள் என்று சொல்லுவது "கடாக்ஷ கிங்கரீபூத கமலாகோடி ஸேவிதா" என்னும் அடுத்த நாமம்.

(கிம் கரோதி) என்ன செய்ய வேண்டும் என்று எஜமானனுடைய கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஸேவகனுக்கு கிங்கரன் என்று பெயர். அம்பிகையின் கடாக்ஷத்தால் அனுக்ரஹம் பெற்ற பக்தனை, கோடிக்கணக்கான ஸ்ரீதேவிகள் ஸேவிக்கக் காத்திருக்கிறார்கள் என்றும் பொருள் சொல்லுவதுண்டு. இந்த கோடிக்கணக்கான தேவிகள் அம்பிகையை வணங்கி, அவளது அருளாணைக்குக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

இப்படி சேவிக்கப்படும் அம்பிகை எங்கு, எப்படி இருக்கிறாளாம்?, அம்பிகையைச் சிரஸில் இருப்பவளாக "சிரஸ்த்திதா" என்று சொல்லுகிறார்கள் வாக்தேவிகள். தந்திர மார்க்கத்தில் குருவை சிரஸில் வைத்து த்யானிப்பது வழக்கம். சிரஸ்த்திதா என்பதன் மூலமாக அங்கே அவளே குருவாக இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள். அங்கு அவள் சந்திரனைப் போன்ற காந்தி/ஒளியுடன் இருக்கிறாளாம், இப்படிச் சொல்லுவது "சந்த்ர நிபா" என்னும் நாமம். அதாவது சஹஸ்ராரத்தில் அம்ருதத்தை வர்ஷிக்கும் சந்திரனது காந்தியாக அம்பிகையைச் சொல்லப்படுகிறது.

'ப்ரோவோர் மத்யே சஹஸ்ராக்ஷி' என்று சொல்வதை, அதாவது புருவ மத்தியில் சஹஸ்ர கலைகளுடன் இருப்பவள் என்னும் வாக்யத்தை நினைவுபடுத்தும் விதமாக நெற்றியில் இருப்பவள் என்னும் பொருளில் "பாலஸ்த்தா" என்கிறார்கள் அடுத்த நாமத்தில். இந்த இடத்தில் அம்பிகை எப்படி இருக்கிறாளென்பதாக அடுத்த நாமத்தில், "இந்த்ர-தனுஷ் ப்ரபா" என்கிறார்கள். அதாவது இந்திரனது தனுஷ் போன்று வளைந்த ப்ரபைகளுடன் இருக்கிறாளாம். அதாவது அவள் அர்த்த சந்திர ரூபத்தில் இருக்கிறாள் என்கிறார்கள்.

இறைவனை நாம் மனத்திலிருத்தி தியானம் செய்ய வேண்டும் என்பது பெரியோர் வாக்கு. அவ்வாறு த்யானம் செய்யப்படுபவள் என்பதே "ஹ்ருதயஸ்த்தா". உபநிஷதங்களை, ப்ரமேஸ்வர ஹ்ருதயம் என்பார்கள். அந்த பரமேஸ்வரனுடன் இரண்டறக் கலந்தவளாயிற்றே அம்பிகை, ஆகவே உபநிஷதங்களில் அந்தர்யாமியாக இருப்பவளை, ஹ்ருதயத்திலிருப்பவள் என்னும் நாமம் சொல்வதாகவும் கொள்ளலாம். ஹ்ருதயத்தில் ஸுர்யமண்டலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கு அம்பிகை இருப்பதை "ரவிப்ரக்யா" என்று கூறுகிறார்கள் அடுத்த நாமத்திலேயே!. இதன் பொருள், ஸுர்யனது ஒளி பொருந்தியவள் என்பதாகச் சொல்லப்படுகிறது.

மூலாதாரத்தில் அக்னியும், ஹ்ருதயத்தில் ஸுர்யனும், ப்ரம்ஹரந்திரம் என்னும் நெற்றியில் சந்திரனும் இருப்பதாக தந்திர சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இந்த மூன்றையும் ஸ்ரீவித்யையின் மூன்று கண்டங்களாகச் சொல்லி, அவற்றின் நடுவில் தீபமாக ஜ்வலிப்பவள் என்று சொல்வதே "த்ரிகோணாந்தர தீபிகா" என்னும் நாமம். இதையே இன்னொரு விதத்தில், மூலாதாரத்தில் இருக்கும் அக்னியின் சக்ரமான த்ரிகோணத்தின் நடுவில் இருப்பவள் என்றும் சொல்லுகிறார்கள்.

சிரஸ், நெற்றி, குண்டலினீ என்று யோக முத்ரைகளை நினைவுபடுத்தும் விதமாக இருக்கும் நாமங்களில் சிலவற்றை இன்று பார்க்கலாம். அம்பிகையை தந்திர சாஸ்திர விதிகளின் மூலமாக வழிபடுவது சாக்தர்கள் வழக்கம். இன்று கூறப்படும் நாமங்கள், அவற்றின் பொருள் எல்லாம் மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறேன். தகுந்த குருவிடத்து கற்கவேண்டியவை இவை. இவை தந்திர ராஜம் என்னும் நூலில் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லுவார் எனது குரு.

Tuesday, July 27, 2010

பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீ , ஸுதா தாராபி வர்ஷிணீ



ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், ஸதாசிவன் ஆகிய ஐவரை பஞ்ச ப்ரம்ஹா என்பார்கள். இந்த ஐவரும் தங்களுடைய சக்திகளுடன் இல்லாவிடில், செய்வதற்கு ஏதுமின்றி பிரேதம் போன்றிருப்பதாக லலிதோபாக்யானம் கூறுகிறது. இந்த ஐவரில், முதல் நால்வர் கால்களாகவும், ஸதாசிவன் பலகையாகவும் கொண்ட மஞ்சத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாளாம். இப்படி, சக்திகள் இல்லாத பஞ்சப்ரம்ஹாக்களினாலான மஞ்சத்தில் வீற்றிருக்கும் அவளை, "பஞ்சப்ரேதாஸனாஸீனா" என்கிறார்கள் வாக்தேவதைகள். பஞ்சப்ரம்ஹங்களினாலான மஞ்சம் என்பதால் பஞ்சப்ரம்ஹாசனம் என்றும் அதில் அமர்ந்திருக்கும் அம்பிகையை "பஞ்ச ப்ரம்ஹாஸந ஸ்திதா" என்றும் கூறுகிறார்கள். மஞ்சத்தின் பலகையாகச் சொல்லப்படும் ஸதாசிவன், தத்வங்களுக்கு எல்லாம் மஹத்தான தத்துவமாக இருக்கிறானாம்.

இந்த பஞ்ச ப்ரம்ஹாக்களை பஞ்ச ப்ரம்ஹங்கள் என்றும் கூறுவதுண்டு. பரப்ரம்ஹத்தின் மாயா வினோதத்தால் பரப்ரம்ஹத்தின் ஐந்து தோற்றங்கள் போல இவர்கள் தோன்றுவதால் இவர்களை இப்படிக் கூறுகிறார்கள். இந்தக் கருத்தைக் கூறுவதே "பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீ" என்னும் நாமம். இந்த நாமத்திற்கு பெரியோர்கள் பல விதத்தில் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் பார்த்திடலாமா?

பரசிவனுடைய பஞ்ச முகங்களாகிய ஈசானன், தத்புருஷன், வாம தேவ, அகோர, ஸத்யோஜாதன் ஆகிய ஐவரையும் பஞ்சப்ரம்ஹாக்கள் என்று கூறி, அவர்களது தோற்றத்தில் இருப்பதும் அம்பிகையே என்பர். இதே போல ஸ்பர்சம், சப்தம், ரூபம், ரஸம், கந்தம் ஆகியவற்றை ப்ரம்ஹ ஸ்வரூபமாகச் சொல்வதுண்டு. இவற்றிலிருந்தே பஞ்சபூதங்களான ப்ருத்வீ, அப்பு, வாயு, தேஜஸ் போன்றவைகள் தோன்றுவதாகவும், இந்த ரூபங்கள் எல்லாம் அம்பிகையின் ரூபங்களே என்று கூறுகிறார்கள்.

இப்படி பஞ்சப்ரம்ஹாஸனத்தில் இருப்பவளான அம்பிகையை இன்னொரு இடத்தில் கணக்கற்ற தளங்களை உடைய பத்மத்தின் மேல் எழுந்தருளியவளாகச் சொல்வதுதான் "ஸஹஸ்ராராம்புஜாரூடா" என்னும் நாமம். எண்ணிக்கையில் அடங்காத அளவு இதழ்களை/தளங்களை உடைய தாமரை என்பது சஹஸ்ராரத்தைக் குறிப்பது. அங்கு இருக்கிறாள் என்று கூறி, அந்த பத்மத்தின் நடுவில் இருக்கும் சந்த்ர மண்டலத்தில் இருந்து அம்ருதத்தை சகல நாடிகளிலும் பெருகச் செய்கிறாளாம், இதைக் குறிப்பதே "ஸுதா தாராபி வர்ஷிணீ". இந்த நாமத்தை "ஸுதா தாராபிவர்ஷிணீ என்றும் கூறலாம் என்கிறார்கள் பெரியோர்.

Friday, July 23, 2010

ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்த்தா, ஸ்ரீமன் நகர நாயிகா


அம்பிகையின் வாசஸ்தலத்தை ஸுமேரு அதாவது என்பது மேருமலை என்பர். அந்த மேரு பர்வதத்தின் நடுவில்/உச்சியில் மங்களமாக இருப்பவள் என்பதே "ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்த்தா". இந்த மேரு மலை எங்கே, எப்படி இருக்கிறது, யாரெல்லாம் இம்மலையில் இருக்கிறார்கள் என்பதை, துர்வாசர் தனது லலிதா ஸ்தவ ரத்னம் என்ற க்ரந்தத்தில் சொல்லியிருக்கிறார், அதைக் கொஞ்சம் பார்க்கலாம். மேரு மலையானது கைலாஸத்திற்கும் அப்பால் இருப்பதாகவும், இது முழுவதும் ஸ்வர்ண மயமானது என்று கூறுகிறார். இம்மலைக்கு நான்கு உச்சிகள் இருப்பதாகபும் இதன் மூன்று உச்சிகளில் ப்ரம்ஹ, விஷ்ணு ருத்ரர்கள் வாசம் செய்வதாகவும், நான்காவது உச்சியில் நானூறு யோஜனை உயரத்தில் இருக்கும் நகரத்தில் அம்பிகை இருப்பதாகச் சொல்கிறார்.

அம்பிகை வசிக்கும் நகரத்தின் பெயரே ஸ்ரீமன் நகரம், இதைச் சொல்லும்போது 'ஸ்ரீமன் நகர நாயிகா' என்கிறார்கள் வாக் தேவதைகள், அதாவது லக்ஷ்மீகரமான நகரத்தின் நாயகி என்று பொருள் சொல்லலாம். ஸ்ரீவித்யா நகரம் என்பதையே இப்படிச் சொல்லுவதாகச் சொல்கிறார்கள் பெரியோர். இந்த நகரமானது இரண்டு இடங்களில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1. லலிதா ஸ்தா ரத்னில் சொன்னது போல, ஸுமேரு மலையில்; 2. எல்லா பிரம்மாண்டங்களுக்கும் வெளியில், ஸுதா சமுத்ரத்தின் மத்தியில் இருக்கும் மணித்விபத்தில் இருப்பதாக ருத்ரயாமளம் எனும் நூலில் சொல்லபடுகிறது. ஸ்ரீமன் நகரம் என்பதே ஸ்ரீசக்ரந்தான் என்பது தீக்ஷதரது உரையில் சொல்லப்பட்டிருக்கீறது.

ஸ்ரீமன் நகரத்தில் இருக்கும் நாயகி, ஸ்ரீசக்ர நாயகியின் இல்லத்திற்கு சிந்தாமணி-க்ருஹம் என்று பெயர். மஹா-பாரதத்தில் சிந்தாமணியின் சிறப்பினை நாம் அறிவோம். சிந்தாமணி ரத்னத்திற்கு ஆகர்ஷண சக்தியும், கேட்டதைக் கொடுக்கும் சக்தியும் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. அது போன்ற சிந்தாமணி ரத்னங்களால் நிர்மாணிக்கப்பட்ட இல்லமாம் அது. ஆகவே அவள் "சிந்தாமணி க்ருஹஸ்த்தா". அதாவது சிந்தாமணிகளால் நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் வசிப்பவள் என்று பொருள். மந்திரார்த்தமாகப் பொருள் சொல்லுகையில், அம்பிகையின் மந்திரங்களே சிந்தாமணிகள் என்றும் அவற்றில் வாசம் செய்பவள் என்றும் பொருள் கூறுவார்கள் சாக்த நெறியாளர்கள்.


சிந்தாமணி க்ருஹத்தில் இருக்கும், பெரிய தாமரைப் புஷ்பங்கள் நிறைந்த காட்டில் அம்பிகை இருக்கிறாள் என்கிறார்கள் "மஹா பத்மாடவீ ஸம்ஸ்த்தா" என்னும் அடுத்த நாமத்தில். க்ருஹத்தில் ஏது குளம், தாமரைக் காடு?. சாதகம் செய்பவர்களது ஸஹஸ்ராரம் என்னும் இடமான புருவ மத்தியில் இருக்கிறாள் என்பதே பொருள். சாதனையாளர்களது சஹஸ்ராரத்தில் என்பதையே தாமரைகள் நிறைந்த காடு என்கிறார்கள். ருத்ரயாமளத்தில் இந்த பத்மாடவீ யானது, ஸுதா சமுத்ரத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.இதனை அடுத்த நாமத்தின் மூலம் இன்னும் தெளிவாக அறியலாம்.

யோக சாஸ்திரத்தில் ஸஹஸ்ராரத்தை அடையும் குண்டலினீயானது அம்ருத தாரையில் நனையும் என்றும், அதுவே சிவ-சக்தி ஐக்ய பாவத்தை உணர்த்துவது என்று கூறுவார்கள். ஸஹஸ்ராரம் என்பது ஆயிரம் இதழ்கள் கொண்ட பத்மம், அங்கு சந்த்ர கலை அம்ருதமாக வர்ஷிக்கும் இடத்தில் அம்பிகை இருக்கிறாள் என்பதை, "ஸுதா ஸாகர மத்யஸ்தா" என்கிறார்கள். இந்த சஹஸ்ரதள பத்மத்தில் வசிப்பவள் என்பதை "ஸஹஸ்ரதள பத்மஸ்த்தா" என்னும் நாமமும் சொல்லுகிறது.

"யோவைதாம் ப்ரும்ஹணோ வேத அம்ருதேனோவ்ருதாம் புரிம்" என்று ச்ருதி வாக்கியமும், "பிந்துஸ்தானம் ஸுதாஸிந்து:" என்று ருத்ரயாமளமும் கூறுவது இந்த ஸுதா ஸாகரத்தையே. இதையே செளந்தர்ய லஹரியில், "ஸுதா ஸிந்தோர் மத்யே ஸுரவிடபிவாடீ பரிவ்ருதே" என்னும் ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார் ஆசார்யாள்.