Sunday, September 18, 2011

மஹாளய பக்ஷம் : "ராமோ விக்ரஹவான் தர்ம:" பகுதி-3


முன்னர் "ராமோ விக்ரஹவான் தர்ம" என்கிற தலைப்பில் இரண்டு இடுகைகள் இட்டேன். இதன் தொடர்பாக சில குறிப்புக்கள் எடுத்தாலும், அப்போது இத்தொடரை தொடரவில்லை. இந்த இடுகை அதன் தொடர்ச்சி. முந்தைய பகுதிகளுக்கான உரல் கீழே!

பகுதி -1
பகுதி -2

ராமபிரானது பித்ரு வாக்ய பரிபாலனம் நாமெல்லாம் அறிந்ததே!. தந்தை சொல்லுக்கு மறுபேச்சில்லை என்று கானகம் சென்றார். சித்ரகூடத்தில் பர்ணசாலை அமைத்து இருந்த காலத்தில் பரதன் புடைசூழ வந்து மீண்டும் நாடாள அழைக்கையில் தந்தையின் மறைவினைச் கேள்விப்படுகிறார் ஸ்ரீராமர்.


தனது பிரிவால் தந்தை உயிர் நீத்ததை அறிந்து பல்வாறு புலம்பியழுகிறார், பின்னர் தசரதருக்கு மகனாக தான் செய்ய வேண்டிய கர்மாக்களை முறையாகச் செய்தார் என்கிறார் வால்மிகி மகரிஷி. அயோத்யா காண்டத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.

ஆநயேங்குதி பிண்யாகம் சீரமாஹர சோத்தரம்
ஜலக்ரியார்த்தம் ததாஸ்ய கமிஷ்யாமி மஹாத்மந:

இந்த வாக்யம் ஸீதையைப் பார்த்து ராமர் சொல்வதாக அமைந்திருக்கிறது. ஸீதே! உனது மாமனார் இறந்துவிட்டார். அவருக்கு நான் தர்ப்பண்ம், பிண்டதானம் போன்றவை செய்யவேண்டும், அதற்கு தேவையான பிண்டங்களை தயார் செய்ய இங்குதீ மரத்தில் உள்ள பழங்களை பிண்டமாக உருட்டிக் கொண்டு வா! என்று கூறுகிறார்.

தந்தையின் மறைவால் மிகுந்த வருத்தமடைந்தாலும், மகனாக, மறைந்த தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமகிரியைகளை செய்யத் தொடங்குகிறார். இவ்வாறு செய்ய ஆற்றங்கரைக்குச் செல்கையில் முதலில் ஸீதையும், பின்னர் லக்ஷ்மணனும் செல்ல, கடைசியாக ராமர் சென்றாராம். வனவாசம் செல்வதைச் செல்லுகையில், முதலில் ராமனும், பின்னர் ஸீதையும், கடைசியாக லக்ஷ்மணனும் வருவதாகச் சொன்ன வால்மிகி, குறிப்பாக இந்த இடத்தில் மாற்றிச் சொல்கிறார், இதன் காரணமென்ன?. ஸம்ஸ்காரத்திற்குச் செல்லும் போது சிறியவர்கள் முதலிலும், பின்னர் பெரியவர்கள் என்பதாக மூத்தவர் கடைசியில் செல்ல வேண்டும் என்ற தர்ம சாஸ்த்ர விதியை ராமர் கடைப்பிடித்ததை குறிப்பாகச் சொல்லியிருக்கிறார்.

இதற்கடுத்த ஸ்லோகத்தில் (அயோத்யா காண்டம்,102) இராமர் இன்றுவரையில் பிண்டப்பிரதானத்திற்குச் சொல்லப்படும் மந்திரத்தைச் சொல்லி தனது தந்தைக்கு பிண்டதானம் செய்ததாக, மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் வால்மிகி மஹரிஷி. இவ்வாறு சொல்லிய பின்னர், இந்த பிண்டதானத்திற்கு உபயோகம் செய்த பொருட்கள் என்ன என்பதையும் சொல்லியிருக்கிறார். அதில், இலந்தைப் பழத்துடன் கூடிய ஐங்குதீ பழங்களால் ஆன பிண்டத்தை தர்பத்தில் வைத்து மந்திரம் சொன்னதாகச் சொல்லுகிறார். என்று இக்கர்மாவைச் செய்யும் பலருக்கும், அதென்ன பழத்தாலான பிண்டம்?, நாமெல்லாம் அன்னத்தாலான பிண்டமல்லவா வைத்துச் செய்கிறோம்? என்று தோன்றலாம்.

கர்மா செய்பவர் என்ன உணவினை உண்ணுகிறாரோ, அதனாலேயே பிண்டம் செய்ய வேண்டும் என்பது தர்ம சாஸ்த்ர விதி, அதனால்தான் தனது உணவான ஐங்குதீ, மற்றும் இலந்தைப் பழத்தாலான பிண்டத்தைச் செய்து அக்கர்மாவைச் செய்ததாகச் சொல்லுகிறார் வால்மிகி.

இங்கு இன்னொரு விஷயம் கவனிக்கத்தக்கது. தசரதரது மறைவினையொட்டி பரதன் மற்றும் சத்ருக்னன் தமது தந்தையின் ப்ரேத மற்றும் பித்ரு கார்யங்களைச் செய்தாலும், ராமபிரானும் தனது தந்தையின் மறைவு கேட்டவுடன் கர்மாவைச் செய்யத் தலைப்படுகிறார். அதான் தனது தம்பிகள் செய்துவிட்டார்களே, நான் ஏன் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. சாஸ்த்ரவிதிப்படி தான் செய்யவேண்டியதைச் செய்யத் தயாராகிறார். அதனால்தான் ராமரை தர்ம தேவதையின் உருவமாகச் சொல்லுகிறார்கள். இதே போல பின்னர் ஆரண்ய காண்டத்தில் ஒருமுறை ப்ரத்யாப்திக சிராத்தம் செய்ய வேண்டிய நாளில் ராம-லக்ஷ்மணர்கள் தமது குடில்களிலிருந்து சென்றவர்கள் அபரான்ன காலத்தில் குடிலுக்கு திரும்பாததால் சீதா தேவியே பிண்டகளை இட்டதாகவும், அதை தசரதர் ஏறதாகவும், பின்னர் அசரீரியாக ஸ்ரீராமருக்குத் தெரிவித்ததாகவும் சொல்லியிருக்கிறார் வால்மிகீ.

இவற்றின் மூலமாக பித்ரு கர்மா என்பது எத்துணை முக்கியம் என்று தெரிகிறது. தற்போது மஹாளய பக்ஷம் நடக்கிறது. இக்கர்மாவிற்கு அதிகாரம் உள்ளவர்கள் பக்ஷிய மஹாளயமாக 16 நாட்களோ அல்லது 15 தினங்களில் ஒருநாள் பார்ணவ சிராத்தமாகவே அல்லது ஹிரண்யமாகச் செய்து உணவிடுதலோ செய்யவோம். இவ்வாறு ஏதும் செய்ய இயலாத சூழ்நிலை இருக்குமானால் தனது தாய்/தந்தையினருக்கான திதியன்று மட்டுமாவது தில தர்பண ரூபமாக சிராத்தம் செய்யத் தலைப்படுவோம். இந்த 15 தினங்களில் செய்யப்படும் சிராத்தங்களானது நமது பித்ருக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியதெனச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பதினைந்து தினங்களில் ஒவ்வொரு நாளன்று செய்யப்படும் தர்பணங்களுக்கும், ஒவ்வொரு விசேஷ பலன்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பதினைந்து தினங்களில் மட்டுமே நமது பித்ரு வர்க்க, மாத்ரு வர்க்க பித்ருக்களைத் தவிர மற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள், குரு போன்றவர்களுக்குத் தர்பணம் செய்யும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வோம்.

Saturday, August 13, 2011

காயத்ரி மந்த்ர ஜபம் - சிறப்பும், செய்முறைகளும்




காயத்ரி ஜபத்தின் சிறப்பையும், அதனைச் செய்யும் விதிகள் சிலவும் இப்பதிவில் பார்க்கலாம். இங்கு சொல்லப்பட்ட சில செய்திகள் எனது குரு மற்றும் வடுவூர் வேதவல்லி கனபாடிகள் சொல்லியதின் சாரம்.

தினமும் காயத்ரி ஜபம் செய்வதால் என்ன பலன் என்பதற்கு வேதத்திலேயே சொல்லப்பட்டிருப்பதை முதலில் காண்போம்.

முன்னொரு காலத்தில் ராக்ஷஸர்கள் கடுமையாகத் தவம் செய்த சமயத்தில் ப்ரஜாபதி ப்ரத்யக்ஷமாகி ராக்ஷஸர்களுக்கு வரமளிக்க முன்வருகிறார். அப்போது ராக்ஷஸர்கள் தங்களுக்கு சூர்யனை எதிர்க்கும் சக்தி வேண்டும் என்று வரம் கேட்கின்றனர். ப்ரஜாபதியும் அவ்வரத்தைக் கொடுத்துவிடுகிறார். இவ்வரத்தின் காரணமாக நித்ய சஞ்சாரம் செய்யும் சூர்யனது சஞ்சாரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. உதயத்தின் போதும், அஸ்தமனத்திலும் அஸுரர்கள் சூர்யனை எதிர்க்கத் தொடங்குகின்றனர். இவ்வாறு சூர்யனுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க தேவர்கள் ஒர் உபாயத்தைச் செய்கின்றனர், அதுவே சந்த்யா வந்தனம். இதில் செய்யப்படும் ஜபமானது சூர்யனுக்கு, ராக்ஷசர்களை எதிர்க்கும் பலத்தைக் கொடுப்பதுடன், சந்த்யாவந்தனத்தில் அவனுக்குக் கொடுக்கப்படும் அர்க்யமானது வஜ்ராயுதமாகி ராக்ஷஸர்களை அழிப்பதாகவும் சொல்லுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு சந்த்யா காலத்திலும் சூர்யனை எதிர்க்கும் ராக்ஷஸர்கள் இந்த ஜபத்தால் மந்தேஹாருணம் என்னும் தீவிற்கு தள்ளப்படுகிறார்கள். ராக்ஷஸர்கள் அத்தீவிலிருந்து வெளியேறி சூர்யனை எதிர்க்க இயலாவாறு மீண்டும் மீண்டும் செய்யப்படும் காயத்ரி ஜபத்தின் காரணமாக சூர்யனுடைய சஞ்சாரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாது இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு சூர்யனுக்கே ரக்ஷையான காயத்ரியை அதிக அளவில் ஜபம் செய்பவர்களுக்கு எவ்வித பலன்கள் கிடைக்கும் என்பதை அளவிடவும் முடியுமோ?


காயத்ரி மந்த்ரமானது வேதங்களின் ஸாராம்சம் என்றால் மிகையாகா. காயத்ரியின் முதல் பாகமான ப்ரணவம் மூன்று எழுத்துக்களால் ஆனது. அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்றும் மூன்று வேதங்களிலிருந்து எடுத்து ஒன்றாக்கியது. இதே போல காயத்ரியின் இரண்டாம் பாகமான வ்யாஹ்ருதிகள் மூன்றும், மூன்று வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டதாம். இதே போல, மந்த்ரத்தின் முதல் பாதமான 'தத்ஸவிதுர் வரேண்யம்' என்பது ரிக் வேதத்திலிருந்தும், 'பர்க்கோ தேவஸ்ய தீமஹி' என்பது யஜுர்வேதத்தில் இருந்தும், தியோயோந: ப்ரஜோதயாத்' என்பது ஸாம வேதத்திலிருந்தும் எடுத்து ஒரே மந்த்ரமாக அருளப்பட்டிருக்கிறது. ஆகவே ஒருவன் செய்யும் காயத்ரி ஜபமானது மூன்று வேதத்தையும் அத்யயனம் செய்த பலன் தருவதாக மனு கூறுகிறார்.

வேத வியாஸர் காயத்ரி ஜபத்தின் சிறப்பைச் சொல்லுகையில், இந்த ஜபத்தை பத்து முறை ஜெபிப்பதால் மூன்று நாட்கள் செய்த பாபங்கள் போவதாகவும், நூறு முறை ஜபம் செய்வதால் செய்பவனது பாப கூட்டமே விலகிவிடுவதாகவும், ஆயிரம் முறை ஜபம் செய்வதால் உபபாதகம் எனப்படும், கோவதம், காலாகாலத்தில் உபநயனம் செய்யாதது, சம்பளம் கொடுத்து வேதம் கற்றல், அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம் செய்யாததால் ஏற்படும் பாபங்கள், செய்நன்றி மறத்தல் போன்ற பாபங்கள் நீங்குவதாகவும் கூறுகிறார். மேலும், கோடி ஆவர்த்தி ஜபம் செய்பவனுக்கு தேவர்- கந்தர்வர்களாகும் வாய்ப்பும் உண்டென்று கூறுகிறார்.

காயத்ரி மந்த்ரத்தின் ரிஷியான விச்வாமித்ரர் இம்மந்த்ர ஜபத்தின் பலனைக் கூறுகையில், ஸப்தவ்யாஹ்ருதிகளுடன் கூடிய ப்ரணவ ஸஹித காயத்ரியை உச்சாரணம் செய்பவனுக்கு ஒரு போதும் பயம் என்பதே இருக்காது என்கிறார். மேலும் சொல்கையில், இந்த மந்த்ரத்துக்கு ஸமமானது நான்கு வேதங்களிலும் ஏதும் இல்லை என்றே கூறுகிறார். ஒருவன் வேத அத்யயனம் செய்ய முடியாவிடினும், தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்ய இயலாவிடினும், காயத்ரி ஜபத்தை விடாது செய்வானாகில், அவனுக்கு
எவ்வித இடையூறும் இல்லாது நிர்பயமாக வாழ்வான் என்கிறார். எத்தனை முறை ஜபம் செய்ய வேண்டும் என்பதையும் விச்வாமித்ரர் சொல்லியிருக்கிறார். அதாவது, உயர்ந்த பக்ஷமாக ஆயிரத்து எட்டு முறையும், மத்யமமாக நூற்றெட்டு முறையும், அதம பக்ஷமாக பத்து முறையும்செய்ய வேண்டும் என்கிறார். இதையே பரத்வாஜர் சொல்லுகையில் அதமமாக இருபத்து எட்டு முறை ஜபம் செய்ய வேண்டும் என்கிறார். இந்த அதம பக்ஷம் என்பது ஆசொளச காலம் மட்டுமே!. மற்ற நேரங்களில் மத்யமமாகவாவது செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.


காயத்ரி மந்த்ரம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. அவை, ஏகப்ரணவ ஸஹித காயத்ரி, ப்ரணவ ஸம்புடித காயத்ரி, ஷடோங்கார காயத்ரி என்பதாம். இவற்றில் பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன் ஆகியோருக்கு ஏகப்ரணவ காயத்ரியும், ஸம்புட காயத்ரி வானப்ரஸ்தர்களுக்கும், யதி ஸ்ரேஷ்டர்களுக்கு ஷடோங்கார காயத்ரியும் சொல்லப்பட்டிருக்கிறது. இம்மூன்றுக்குமான வித்யாசங்கள் இங்கே தேவையில்லை, அவை குருமூலமாக அறியவேண்டியது. ஜபம் செய்யும் வேளைக்கு ஏற்றவாறு காயத்ரி தேவி பெயராலும், உருவத்தாலும் வேறுபடுவதாகச் சொல்லியிருக்கிறார் யஜ்ஞவல்க்யர். ப்ராத காலத்தில் காயத்ரியாகவும், மாத்யான காலத்தில் ஸாவித்ரியாகவும், ஸாயங்காலத்தில் சரஸ்வதியாகவும் த்யானிக்க வேண்டும். இந்த மூன்று ரூபங்களும் ப்ரம்ஹ, ருத்ர, விஷ்ணு ரூபமானதாகச் சொல்லி அவ்வாறே த்யானிக்க வேண்டும் என்கிறார்.

மேலும் யஜ்ஞவல்க்யர் இது பற்றிச் சொல்லுகையில், கிருஹத்தில் ஜபம் செய்கையில் என்ன பலனோ அதை விட இருமடங்கான பலன் நதி போன்ற தீர்த்தகரையில் செய்கையில் கிடைப்பதாகவும், மாட்டுக் கொட்டிலில் செய்கையில் பத்து மடங்காகவும், அக்னி சாலையில் செய்கையில் நூறு மடங்காகவும், ஆலயங்களில், ஸ்ரீ விஷ்ணு ஸந்நிதியில் கோடிக்கணக்கான மடங்கும் அதிகரிக்கும் என்கிறார். ஜபம் செய்யும் முறை பற்றி வியாசர் குறிப்பிடுகையில், மந்த்ரத்தை பாதம், பாதமாக பிரித்து ஜபிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாது ஜபம் செய்கிறவனுக்கு ரெளரவம் அன்னும் கொடிய நரகத்தை அடைய வேண்டியதிருக்கும் என்கிறார். மூன்று பாதங்களாகப் பிரித்து ஜபம் செய்பவனுக்கு ப்ரம்ம ஹத்தி முதலான அனைத்துப் பாப கூட்டங்களும் நீங்குவதாகச் சொல்லியிருக்கிறார். இவ்வாறு பாதங்கள் பிரிப்பதைக் கொண்டு, இந்த மந்திரம் அஷ்டாக்ஷர காயத்ரி, சதுர்விம்சத்யாக்ஷர காயத்ரி என்று இருவகை சொல்லப்படுகிறது, இவையும் குருவின் மூலமாக அறியவேண்டியதே!.

காயத்ரி மட்டுமல்லாது, மற்ற எந்த மந்த்ரமானாலும் ஜபம் செய்யும் விதம் பற்றிச் சொல்லுகையில், மூன்றுவிதமாகச் சொல்லுகிறார்கள். வாசிகம், உபாம்சு, மானஸம் என்பவை அந்த மூன்று விதங்கள். இவற்றில் வாசிகம் என்பது மந்த்ரத்தை வாய்விட்டு, பிறருக்குக் கேட்குமளவில் சொல்வது, சப்தமில்லாது, உதடுகளை அசைத்தவாறு சொல்வது உபாம்சு, உரக்கச் சொல்லாமல், உதடுகளும் அசையாது, மனதளவில் மந்த்ரத்தைச் சொல்லுவது மானஸம். இவற்றில் மானஸம் உத்தமம், உபாம்சு மத்யமம், வாசிகம் அதமம்.

வியாஸர் ஜப அனுஷ்ட்டானத்தினை விவரிக்கையில் காலையில் ஜபம் செய்கையில் இரு கைகளையும் மூக்கிற்கு நேராகவும், மாத்யான காலத்தில் ஹ்ருதயத்திற்கு நேராகவும், ஸாயங்காலத்தில் தொப்புளுக்கு நேராகவும் கைகள் இரண்டையும் வைத்துக் கொண்டு சோம்பலின்றி ஜபம் செய்ய வேண்டும் என்கிறார்.ஆசாரம், மெளனம், நிலையான மனநிலை ஆகியவற்றுடன் மந்த்ரார்த்ததை நினைத்தவாறு ஜபம் செய்ய வேண்டும். ஜபம் செய்கையில் கனைத்தல், கொட்டாவி விடுதல், தூக்கம், சோம்பல், பசி, ஆகியவை கூடாது.



ஜபத்தின் மத்தியில் ஆசார்யரோ, அல்லது வேறு பாகவதோத்தமர்களோ வந்தால் ஜபத்தை நிறுத்தி அவர்களுக்கு பதிலளித்தல் அவசியம், அவர்களை வழியனுப்பிய பின்னர் ஜபத்தைத் தொடர வேண்டும்.

மேற்கூறியவை தவிர சில-பல நியமங்கள் குரு முகமாகச் சொல்லப்பட்டிருக்கலாம், அவற்றை முதலாகவும், மேலே சொன்னவற்றையும் கவனத்துடன் மேற்கொண்டு காயத்ரி ஜபத்தைச் செய்வோம்.

அனுதினமும் சந்த்யாவந்தனம், காயத்ரி ஜபம் செய்பவர்களுக்கும், குறிப்பாக திவாண்ணா மற்றும் அவருடன் இணைந்து ஒவ்வொரு வருஷமும் லக்ஷ ஆவர்த்திக்கும் மேலாக காயத்ரி ஜபம் செய்யும் பெரியோர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

Friday, August 5, 2011

ரஹோயாக-க்ரமாராத்யா, ரஹஸ்தர்பண தர்பிதா, ஸாக்ஷிவர்ஜிதா


நவாவரண பூஜை மற்றும் இவற்றையொட்டிய மந்திர ஜபங்கள் போன்றவை மோக்ஷ சாம்ராஜ்யத்தை அருளுவன. இந்த மார்க்கமானது மிக ரஹஸ்யமாகச் செய்யப்படுவது. இந்த மார்க்கத்திலேயே பல விதங்கள் இருக்கிறது., இவை அவரவர் குலாசாரம், உபதேசிக்கும் குருவின் மார்க்கம் போன்றவற்றையொட்டி வருவது. உதாரணமாக காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி சன்னதியில் செய்கிற பூஜைமுறைகளும், மற்ற கோவில் மற்றும் இல்லங்களில் செய்கிற ஸ்ரீசக்ர பூஜை முறைகளுக்கும் வேறுபாடு உண்டு. இதே போன்று, ஸன்யாசிகள் மற்றும் க்ருஹஸ்தர்களது ஸ்ரீ சக்ர பூஜை முறைகளில் வேறுபாடு உண்டு. இந்த பூஜை முறைகளை என் போன்ற சாதாரணர்கள் பார்க்கும் போது எவ்வித வித்யாசங்களும் தெரியாது. இவ்வாறு வித்யாசங்களை அறிய முடியாத வகையில் அம்பிகையை ரஹஸ்யமாக ஆராதிப்பதால் ரஹோயாகக்ரமாராத்யா என்கிறார்கள் வசின் தேவதைகள். இந்த நாமத்தை, ரஹோயாக + க்ரமாராத்யா என்று பிரிக்க வேண்டும். ரஹோயாகம் என்றால் ரஹஸ்யமாகச் செய்யப்படும் யாகம் என்றும் க்ரமாராத்யா என்றால் குறிப்பிட்ட க்ரமத்தைக் கொண்டு ஆராதிப்பவள் என்றும் பொருள். ரஹஸ்யமான யாகக் க்ரமத்தால் வழிபடப்படுபவள் என்பது பொருள்.

யோக மார்க்கத்தில் குண்டலி சக்தியை சஹஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று அங்கே பரமசிவத்துடன் சேர்த்து உபாசனை செய்வது என்பது ஏகாந்தமாக , ரஹஸ்யமாகச் செய்யப்படும் ஆராதனை. இதையே செளந்தர்ய லஹரியில் ஆசார்யார், 'ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே' என்று கூறுகிறார்.

ரஹஸ்யமான முறையில் ஜப, யோக முறைகள் செய்தாலும், அவற்றின் புரச்சரணமாக தர்பணம் செய்யவேண்டும். இந்த தர்பணமும் ஆராதனையே!. தர்பணம் என்ற சொல் நமக்குத் தெரிந்ததே. த்ருப்தி தரும் கர்மாவே தர்பணம். அம்பிகைக்குத் த்ருப்தி தரும் ரஹஸ்ய தர்பணத்தால் வழிபட்டு அவளை த்ருப்தி செய்தல் என்பதே ரஹஸ்தர்பண தர்பிதா. மந்த்ரத்தின் பொருளை அறிந்து சாதகம் செய்வதே அம்பிகையை த்ருப்தி செய்யும். இவ்வாறு பொருளை அறிந்து செய்யும் பிரயோகத்தையும் ரஹஸ்தர்பணம் என்கிறார்கள் பெரியோர். சில நேரங்களில் குலாசார முறையில் முதலில் மந்த்ர ஜபம் போன்றவை முதலில் நடந்தாலும், பின்னர் ரஹஸ்யமாக மந்த்த்ரங்களின் பொருள் கூறப்படுகிறது. இவ்வாறு பொருள் அறிந்த பின்னர் செய்யப்படுவது அம்பிகைக்கு மிகுந்த த்ருப்தியைத் தருவது, இதுவே 'ரஹஸ்தர்பண தர்பிதா'. மேற்கூறியவாறு, ரஹோகக் க்ரமத்திலும், ரஹஸ்யதர்பணங்களிலும் வழிபாடு செய்ப்யும் போது அம்பிகை உடனே அனுக்ரஹம் செய்கிறாளாம், ஆகவே அவளை 'ஸத்ய: ப்ரஸதினி' என்கிறார்கள்.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஆரம்பமே 'விச்வம் விஷ்ணும் வஷட்காரோ' என்று ஆரம்பிக்கிறது. ஸகல உலகங்களிலும் நடக்கும் செயல்களுக்கும் அம்பிகை சாக்ஷியாக இருக்கிறாள் என்பதால் அவளை 'விச்வஸாக்ஷிணீ' என்கிறார்கள் வாக்தேவதைகள். விச்வம் என்ற பதத்திற்கு ஜகத், ஸகலம்/எல்லாமும் என்று பொருள் சொல்லலாம். இப்படி எல்லாச் செயல்களுக்கும் சாக்ஷியாக இருப்பவளுக்கு எந்த சாக்ஷியும் கிடையாது. அவரவர் அனுபவத்தால் மட்டுமே அறியப்படுபவள் இவள். ஆகவே இவளை 'ஸாக்ஷிவர்ஜிதா', அதாவது தனக்கு சாக்ஷி ஏதும் இல்லாதவள் என்ற பதத்தில் கூறப்படுகிறாள்.

Monday, August 1, 2011

ஸ்ரீவத்ஸம் -1 [ப்ருகு / பார்கவர்]


கோத்ரம் ப்ரவரம் ஓர் அறிமுகம் என்னும் பதிவின் தொடர்ச்சியாக இந்த இடுகையில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தின் மூல ரிஷிகள் பற்றி ஒவ்வொருவராகப் பார்க்கலாம். முதலில் பார்கவர் எனப்படும் ப்ருகு.

'மஹரிஷீணாம் ப்ருகுரஹம்' [மஹரிஷிகளில் நான் ப்ருகுவாக இருக்கிறேன்] என்று பகவான் ஸ்ரீக்ருஷ்ணரால் பகவத் கீதையில் சொல்லப்பட்ட ப்ருகு [பார்கவர்] மஹரிஷிகள் ஸ்ரீவத்ஸ கோத்ரத்து ரிஷிகளில் முதலானவர்.இவரது பிறப்பு பற்றி வேதத்தில் இருவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. அவை:

1. இவர் பிரபஞ்ச ஸ்ருஷ்டியின் போது பிரம்மாவின் தோலில் இருந்து வந்தவர்
2. ஹோமத்தில் அக்னி ஜ்வாலையில் இருந்து தோன்றியவர். [ஹோமத்தின் போது ஜ்வாலை தணிந்த பின்னர் இருக்கும் நெருப்புத் தணல் அங்கீரஸ மஹரிஷி; தணல் சாந்தமான போது அத்ரி மஹரிஷி]

அக்னியிலிருந்து பிறந்ததால் இவர் அக்னிக்குச் சகோதரன் என்றும் கூறப்பட்டிருக்கிறார். வேத காலத்தில் அக்னி நீரினுள் ஒளிந்திருந்த்தாகவும், மஹரிஷி ப்ருகு அக்னியை நீரின் வெளியே கொண்டுவந்ததாகவும் சொல்லியிருக்கிதாகத் தெரிகிறது.

ப்ருகுவிற்கு பல மனைவிகள், அவற்றில் ஒருவரான க்யாதி என்னும் ரிஷி பத்னிக்கு மகளாகப் பிறந்த காரணத்தால் மஹாலக்ஷ்மிக்கு 'பார்கவி' அதாவது பார்கவரின் புத்ரி என்ற பெயர் என்று சொல்லுகிறார்கள். ஸ்ரீய: பதி என்று மஹாவிஷ்ணுவைக் குறிப்பிடுவது இந்த பார்கவியானவள் மார்பினில் இருப்பதாலேயே. ப்ருகுவின் மகளாகப் பிறந்து பரந்தாமனை மணாளனாக அடைந்த்த காரணத்தால் அந்த லோக நாயகனுக்கே மாமனாராகிறார் ப்ருகு.

மஹரிஷி ப்ருகுவின் இன்னொரு மனையாள் பெயர் 'புலோமா' என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு சமயம் இவளை கவர்வதற்க்காக ஒரு ராக்ஷஸன் முயல்கிறான். இதனை அறிந்த மஹரிஷி அக்னியை தனது மனயாளான புலோமாவுக்குக் காவல் வைத்துவிட்டு நதிக்கரையோரம் அனுஷ்டானத்திற்குச் செல்லுகிறார். அச்சமயத்தில் ராக்ஷஸன் புலோமையை கவர, அக்னி தடுக்கிறான். அந்த ராக்ஷஸனோ, தானே புலோமையின் கணவனாக இருந்திருக்க வேண்டும் என்றும், சிறுவயதில் புலோமையின் பெற்றோர் ராக்ஷஸனை காட்டியே வளர்த்தனர் என்றும், தனது மனையாளாக வேண்டிய புலோமையை ப்ருகு கவர்ந்திருக்கிறார் என்று கூறி அக்னியிடத்திருந்து புலோத்தமையை கவர்ந்து செல்கிறான். இவ்வாறு கவர்ந்து செல்கையில் பத்து மாத கர்பிணியான புலோத்தமை பரசவமாகி பிரசவத்தில் தேஜஸ் மிகுந்த குழந்தை பிறக்கிறது. அந்த குழ்ந்தையின் தேஜஸே அந்த அசுரனை எரித்து விடுகிறது. அனுஷ்ட்டானம் முடிந்து வந்த மஹரிஷி நடந்ததை அறிந்து அக்னியின் மேல் கோபம் கொள்ளூகிறார். தான் இட்ட பணியைச் சரிவரச் செய்யாத காரணத்தால் அக்னியை ஸர்வ பக்ஷகனாகச் சபித்துவிட்டார். இந்த சாபத்தின் காரணமாகவே அக்னி எல்லாவற்றையும் எரிக்க முற்படுகிறதாகச் சொல்லுகிறார்கள்.


ப்ருகு என்பதற்கும் காயத்ரி மந்த்ரத்தில் வரும் "பர்க:" என்பதற்கும் ஒப்புமை உண்டு. சூர்யன் தனது தேஜஸால் ப்ரகாசத்தை தருபவன், ப்ருகு ப்ரம்ம தேஜஸால் ப்ரகாசிப்பவர். இவரால் பல நூல்கள் எழுதப்பட்டிருப்பதாகவும், ஆயுர் வேதத்திலும் இவர் சிறந்தவர் என்று கூறப்படுகிறது. பொருட்களை நீரால் சுத்தி செய்கிறோம். அந்த நீரைச் சுத்தி செய்வது மந்திரத்தால் சுத்தி செய்கிறோம். இவ்வாறு நீரை சுத்தி செய்யும் மந்த்ர த்ருஷ்ட்டாக்களில் ப்ருகுவும் ஒருவர். ஸ்ரீவத்ஸத்தைப் போலவே, இன்னும் 6 கோத்ரக்காரர்களுக்கு இவர் ரிஷி, ஆக இந்த 7 கோத்ரக்காரர்களுக்குமாக 'பார்க்கவகணத்தினர்' என்று ஒரு பெயர் உண்டு. அடுத்த பதிவில் நாம் ச்யவனரைப் பார்க்கலாம்.

Friday, July 29, 2011

புண்யகீர்த்தி; முக்தா; லீலா விக்ரஹ தாரிணீ; பக்தநிதி



தேவீ பாகவதம், செளந்தர்ய லஹரி போன்றவை அம்பிகையின் கீர்த்தியைச் சொல்வதாக இருக்கும் முக்கிய நூல்கள். இவற்றில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகங்களும் நமது நியாயமான விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடியதாக இருக்கிறதாலேயே ஒவ்வொரு ஸ்லோகங்களுக்கும் உரிய பலன்களைத் தனியாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இந்த ஸ்லோகங்களில் என்ன இருக்கிறது என்று பார்த்தோமானால் அவை அம்பிகையின் கீர்த்தியைப் செல்லுவதே. இந்தக் கீர்த்திகளைப் பாராயணம் செய்வதால் நமக்கு புண்யத்தை, முக்தியை அருளுபவள் என்பதாகத் தெரிகிறது. இவ்வாறு புண்யத்தை அருளும் கீர்த்தியுடையவள் புண்ய கீர்த்தி.


இன்றும் நாம் சர்வாலங்காரங்களுடன் இருக்கும் பெண்களை மஹாலக்ஷ்மி போல் இருக்கிறாள் என்றும் அம்பாளே நேரில் வந்தது போல இருக்கிறது என்றும் கூறுவதைப் பார்க்கிறோம், சில பெண்களைப் பார்த்தவுடன் கை கூப்பி வணங்குகிறோம், முக்தா என்றொரு நாமம், முக்தா எனறால் செளந்தர்ய ஸ்வரூபமானவள் என்று பொருள், இதே முக்தா என்னும் நாமத்திற்கு மூடன் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. முன்பு க்ஷயவினிர்முக்தா என்றொரு நாமத்தைப் பார்த்தோம், இந்த நாமத்தின் அடுத்ததாக வருவதே முக்தா. தொடராக இந்த இரண்டையும் அடுத்தடுத்துச் சொல்லுகையில் '(க்ஷயவினிர்முக்தா-முக்தா' என்கையில்), இந்த நாமத்தை "அமுக்தா" என்பதாகப் பிரித்துச் சொல்லுவது ஒருமுறை. இவ்வாறு அம்பிகையை வணங்காதவர்களை அமுக்தர்களாக, மூடர்களாகச் சொல்லுகிறார்கள் சில பெரியவர்கள்.

ஜனனம் என்று ஒன்று இருந்தால்தானே மரணம்?, அம்பிகையை அஜா, அதாவது ஜனனமற்றவள் என்று கூறுகிறது இன்னொரு நாமம். க்ஷயவினிர்முக்தா என்றால் மரணமில்லாதவள் என்றும் பொருள். அப்படியென்றால் பல சரீரங்களில் ஸதியாக, காளி,மாரி கெளமாரி போன்ற சப்தமாதர்களாக எல்லாம் தோன்றியிருக்கிறாளே என்றால், அது அவளது லீலைகள். மிகச் சுலபமாக பல லீலைகளைச் செய்வதற்கு ஏற்ப அவதாரங்கள் எடுக்கிறாள். இப்படி பல லீலா வினோதங்களுக்கு ஏற்ப அவதரிக்கிறாளே,அந்த மரணமில்லா மஹாசக்தி, அவளை லீலா விக்ரஹ தாரிணீ என்கிறார்கள் வசின் தேவதைகள். இந்த நாமத்தைப் பற்றி யோக வாசிஷ்ட்டத்தில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

உபாசகர்களுக்கு, பக்தர்களுக்கு இவளே சர்வ நிதியும், ஆகவேதான் இவளை பக்தநிதி என்கிறார்கள். இவள் பக்தர்களை மட்டுமல்லாது சகல ஜீவராசிகளுக்கும் வழிகாட்டியாக இருப்பதால் நியந்த்ரீ, அதாவது வழிகாட்டி. அகில உலகத்திற்கும் இவளே ஈச்வரி. நிகிலம் என்றால் பிரபஞ்சம் என்று பொருள். நிகிலேச்வரி என்பது பிரபஞ்சத்திற்கு ஈச்வரி என்பதாகச் சொல்வது.

Monday, July 25, 2011

கோத்ரம் & ப்ரவரம் - ஒர் அறிமுகம்......

சமீபத்தில் உபநயனம் செய்வித்த ஒரு சிறுவன் தனது பெற்றோரிடத்தில் ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் என்னிடம் கேட்கப்பட்டது. இது பலருக்கும் உபயோகம் ஆகும் என்று தோன்றியதால் அங்கு டைப் செய்ததை இங்கும் இடுகிறேன். முதலில் கேள்விக்கான பதில் பிறகு அறிமுகம்.


அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாதா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரவர் குல முதல்வர்கள் என்னும்படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.

அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.

சாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.

நம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.



"ரிஷி" என்ற சொல்லுக்கு 'பார்ப்பவர்' என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.


அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.

ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.

'அபிவாதயே' என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம், அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.



ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.

கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.

திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் 'இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.

இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;

1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது - திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.



2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது


3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.


4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.


5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.

எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;

1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்



2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.


3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.


4. தம்பதிகளில் பெண்க்ளுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.


5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்.

Thursday, July 21, 2011

காமாக்ஷி...கடாக்ஷி - 1 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)

காமாக்ஷி பற்றி எழுத வேண்டும் என்று பலநாட்களாக நினைத்திருந்தேன், இன்றைய தினம் ஆடி முதல் நாள், வெள்ளிக் கிழமையும் கூட. அன்னையின் அருள் வேண்டி இந்தச் சிறுதொடரை எழுத ஆரம்பிக்கிறேன். வரும் ஆடி வெள்ளிகளில் தொடராக 2-3 பதிவுகள் எழுத இருக்கிறேன்.


காமாக்ஷி பற்றி சொல்லப்பட்ட புராணங்கள் பின்வருமாறு.




1. மார்க்கண்டேய புராணத்தில் 'தேவீ மகாத்மீயத்தை அடுத்ததாக வரும் "ஸ்ரீ காமாக்ஷி விலாஸம்".


2.பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக உள்ள லலிதோபாக்யானம் மற்றும் த்ரிபுரா ரஹஸ்யம் என்னும் க்ரந்தம்.


3. ஸ்காந்த புராணத்தில் ஸநத்குமார ஸம்ஹிதையிலுள்ள 'காஞ்சீ மஹாத்மீயம்' குறிப்பாக அதில் வரும் 'தக்ஷ காண்டத்தில்'.


4. சில செவிவழிக் கதைகள்.




டிஸ்கி:

******************************************

சாதாரணமாக புராணங்கள்/சரிதங்களைப் படிக்கும் போது ஆங்காங்கே தெய்வங்களிடை உயர்வு-தாழ்வு தொனிக்கலாம், அது ஒரு குறிப்பிட்ட மூர்த்தியிடம் பக்தியை வலுப்படுத்துவதற்கான உத்தேசமேயன்றி, பிற தெய்வங்களை மட்டந்தட்டுவதல்ல என்பது நாம் அறிந்ததே. இந்தத் தொடருக்கும் அது பொருந்தும் என்றுணர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மனிதர்களைப் போலவே, மனிதர்களுக்கு ஆதர்சமாய் லீலை புரிவதற்கு என்றே பராசக்தி பல கடவுளராகி இப்படியெல்லாம் செய்துள்ளார் என்பதை மனதிலிருத்தி மேற்கொண்டு படிக்க வேண்டுகிறேன்.

******************************************


தேவியின் பல வடிவங்களுள், நாற்கரம் கொண்டு, அவற்றில் கரும்புவில், மலரம்பு, பாச-அங்குசம் தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பவளேகாமாக்ஷி மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ராஜராஜெஸ்வரி. பஞ்ச தசாக்ஷரி, ஷோடசீ ஆகிய மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம். ஆக மொத்தமாக மந்த்ரங்களில் சிறந்த ஸ்ரீவித்யாவால் காட்டப்பட்ட ஸ்ரீ மாதாவின் ரூபம் காமாக்ஷீ.


இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?.


பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்கார ஒலியின் அலைகளான இருபத்து-நான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள்.



ஆம்! அந்த இருபத்து-நான்கு சப்தங்களை, இருபத்து-நான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள் என்றே காமாக்ஷி விலாஸத்தில் சொல்லப்படுகிறது.



அதென்ன 24 சப்தங்கள்?. 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது, ஏன் 24 சப்த ஸ்தம்பங்களாலான மண்டபம்?.


காயத்ரீ மஹாமந்திரம் இருபத்தி-நான்கு அக்ஷரம் கொண்டது, அந்த மந்த்ரத்தின் மஹிமையை நமக்கு விளக்கும் விதமாக காயத்ரி மண்டபத்தில் வசிக்கிறாள் ஸ்ரீமாதா. காஞ்சி காமாக்ஷி கோவிலில் அன்னையின் வாசஸ்தலம் காயத்ரி மண்டபம் என்றே கூறப்படுகிறது.

சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.


'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல,


'அ' என்பது சிவனின் பெயர். அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக. பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம்.



வேதத்தில் 'ம' என்ற சப்தம் நாராயணனைக் குறிப்பதாம். இதனாலேயே 'மா' என்ற சப்தம் மஹாலக்ஷ்மியைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள்.



ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).


பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப் பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், ஸ்ரீ லலிதாவின் சேனை நாயகி (அ) தண்டினி எனப்படுபவள் வாராஹி ரூபம். அதே போல மந்த்ரிணியாக இருப்பது ராஜ மாதங்கீ. அதனால் தான் அகிலாண்டேஸ்வரியை தண்டினியாகவும், ராஜமாதங்கீ ரூபத்தில் கிளியுடன் இருப்பதாலும், மீனாக்ஷி கையில் கிளியைக் கொண்டதாலும் அவளை மந்திரிணியாக ஆதி சங்கர பகவத்பாதர் சொல்கிறார்.



மனிதனுடைய குணத்தை அவனுடைய கண்களிலிருந்தே அறியலாம் என்பார்கள். திருடனின் கண்களில் இருக்கும் தடுமாற்றம் அவனைக் காட்டிக் கொடுத்துவிடும். காதலுடைய கண்களில் எத்தனையோ விதம், கெஞ்சும் கண்கள், கொஞ்சும் கண்கள்,மிஞ்சும் கண்கள் என்பதாக பலவற்றையும் கவிஞர்கள் சொல்லக் காண்கிறோம். கடைக்கண்ணால் பார்க்கும் பார்வையை தயாளத்தின் உருவமாகவும், அன்பின் தோற்றமாக அருள் நிறைந்த தேஜசுடனும் சொல்வது வழக்கம். காதலியின் கடைக்கண் பார்வைக்கு காதலனும், பரமேஸ்வரியின் கடைக்கண் பார்வைக்காக பக்தனும் காத்திருப்பதாகச் சொல்வர்.



"தனந்தரும், கல்விதரும்" என்று ஆரம்பித்து அன்னையின் கடைக்கண் பார்வையில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று ஒரு பட்டியலே தந்திருக்கிறார் அபிராமி பட்டர். இதையே ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் தமது பாடலில் "சாரதா ரமா நயநே' என்று கூறுகிறார். சிவப்பிரகாச ஸ்வாமிகள், "நின் திருமுக பங்கயத்தில் கண்ணாயினர் உனக்கு அவ்வலைமாதும், கலைமகளும் பெண்ணார் அமுதனையாய்" என்கிறார். "ஸசாமர ரமா வாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா" என்கிற லலிதையின் நாமா என்ன சொல்கிறதென்றால், வாணியும், ரமாவும் (லக்ஷ்மி), அன்னைக்கு இருபுறங்களிலும் சாமர சேவை செய்வதாக வருகிறது. ஆக காமாக்ஷி ரூபத்தில் கண்களாக கலைமகளும், அலைமகளும் இருப்பதாகவும் கொள்ளலாம்.


சிவ சிவ பச்யத்திஸமம் காமாக்ஷி கடாக்ஷீதா: புருஷா:

விபிநம் பவநம் அமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவது பிம்போஷ்டம்



அதாவது காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு விபிநம், பவநம் ஆகிய இரண்டும் ஒன்றாகவே தெரியுமாம். விபிநம் என்றால் காடு, பவநம் என்றால் மாளிகை. காமாக்ஷியின் அருள் பெற்றவர் ஞானியாகிவிடுவர், ஆகவே அவர்களுக்குமித்ரம்-அமித்ரம், சிநேகிதன்-சத்ரு, போன்ற வேறுபாடுகளோ அல்லது யுவதியின் ஒஷ்டம் (சிவந்த உதடுகள்) மற்றும் லோஷ்டம் (ஓட்டு சில்லு) போன்றவற்றில் எந்த வேறுபாடுகள், காமனைகள் இல்லை என்று பரமாசார்யார் கூறுகிறார்.


தெய்வத்தை ஸ்திரீ ரூபமாக வணங்குவது என்பது நமது வேதத்தில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கறதாகச் சொல்கிறார்கள். ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில், அன்னையின் தரிசனத்தை வேண்டும் போது, "அம்பிகே!, தங்களை நான் சேவிக்க திவ்ய ரூபத்துடன் தரிசிக்க அருள வேண்டும். வாயில் தாம்பூலமும், கண்களீல் மையும், நெற்றியில் காஷ்மீர குங்குமமும், கழுத்தில் முத்து ஹாரமும், இடுப்பில் பட்டாடையும், தங்க ஒட்டியாணமும் அணிந்த பர்வத ராஜ குமாரியாக தரிசனம் அருள வேண்டும்" என்கிறார். இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட ரூபத்தில், கைகளில் பாச-அங்குசமும், கரும்புவில்-மலரம்புகளுமாய் காக்ஷி தருகிறாள் அம்பிகை.